சூர்யாவின் பார்வை உணர்ந்த பாலா.. ‘மாமா.. அக்காக்கு இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும்.. எனக்கு முட்டை சாதம் பிடிக்கும்.. அக்கா எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு போகும்போது சம்பளம் வாங்கியதும் இந்த சாக்லேட்டும்.. நிறைய முட்டையும் வாங்கி வரும்.. இவ்ளோ காசுபோட்டு இந்த ஒத்த சாக்லேட்டை திண்ணே ஆகனுமான்னு மத்துக்கட்டையை எடுத்துகிட்டு எங்கம்மா அடிக்கவரும்.. அம்மா கைக்கு சிக்கவே மாட்டோம்..
ரெண்டுபேரும் வீட்டைவிட்டு ஓடிடுவோம்.. இரண்டு தெருவுக்கு மேல எங்கம்மாவாலயும் எங்களை துரத்த முடியாது.. வயசுபுள்ள இப்படி தெருவுல ஓடாதடி.. இனி அடிக்கமாட்டேன் உள்ள வான்னு எங்கம்மா கெஞ்ச ஆரம்பிச்சிடும்.. நாங்க யாரு..? குலசாமி மேல சத்தியம் செய்.. அப்போதான் வருவோம்னு டீல் பேசுவோம்..
வேற வழியே இல்லாம எங்கம்மா ஐய்யனாரப்பன் மேல சத்தியம் செய்து அடிக்கமாட்டேன் வந்து தொலைங்கடா நாய்ங்களேன்று சொல்லும்.. அதுக்கப்புறம்தான் வீட்டுக்குள்ளயே வருவோம்..” என்று சிரிப்போடு சொல்ல.. சூர்யாவும் மெய்மறந்து சிரித்தான்.
‘எப்படியும் சாக்லேட்டுக்குன்னு அம்மா இவ்ளோ காசு குடுத்திருக்காது.. உனக்கேதுடா இவ்ளோ காசு..?” என்று திலகவதி பொறுப்பாய் விசாரிக்க..
‘பகுதிநேர வேலைக்கு போறேன்க்கா.. மாசம் ஐய்யாயிரம் சம்பளம் தராங்க.. அம்மா என்கிட்ட காசே வாங்கறதில்ல.. படிப்பு செலவு போக மிச்சமிருந்தா எனக்கு வேணும்ங்கிற துணிமணி எடுத்து போட்டுக்கோன்னுடுச்சி..” என்று சொல்ல..
‘நம்ம அம்மாவா அப்படி சொன்னுச்சி…? என்னால நம்பவே முடியல பாலா..” என்று ஆச்சர்யப்பட்டவள் தன்போல் வெங்காயம் எடுத்து உரிக்க ஆரம்பிக்க..
‘எனக்கும் மாமாக்கும் டீ இல்லையா..?” என பாலா கேட்க..
‘அவர் காபிதான் குடிப்பார்.. அதுவும் இந்த டைம்ல குடிக்கமாட்டார்.. உனக்கு முட்டை சாதம் செய்றேன்.. அது சாப்டுட்டு டீ குடிச்சிக்கலாம்..” என்று சமையல் செய்ய ஆரம்பிக்க..
தன் அக்காவின் கையைப் பிடித்தவன்.. ‘வேணாம்க்கா.. நானும் அம்மாவும் சாப்டுதான் வந்தோம்.. எனக்கு டீ யே போதும்..” என்று சொல்ல..
திலகவதி முறைக்க.. ‘அம்மா செய்த பச்சைப்பயிறு குழம்பு சும்மா பட்டைய கிளப்பிடுச்சி.. ‡புல்லா சாப்டுட்டேன்.. ஐய்யனார் சத்தியமா என்னால சாப்பிடமுடியாது..” என்று பாவமாய் முகம் சுழிக்க..
‘விடு பாலா.. இதுக்கெல்லாம் ஐய்யனாரை இழுப்பியா..?” என்று சிரித்தவன்..
‘பாலாக்கு டீ கொடுத்திட்டு எனக்கும் காபி எடுத்திட்டு வா..” என்று ஹாலுக்கு வந்தான்.
‘ரொம்ப நேரம் இங்கயே இருக்கோம்.. டீ எடுத்திட்டு வாக்கா.. நானும் ஹாலுக்கு போறேன்..” என்று பாலாவும் வெளியே வர..
‘ரகசியம்ல்லாம் பேசி முடிச்சாச்சா..?” என்று ஜெயா கேட்க..
‘ஒரு ரகசியமும் இல்லம்மா.. இவ்ளோ நாளா ஏன் என்னை பார்க்க வரல..? படிப்பு எப்படி போகுது..? காலேஜ்ல ஜாலியா இருக்கான்னுதான் கேட்டுச்சி..” என்று பாலா சொல்ல..
‘புத்தகம்ன்னாலே பாம்பை கண்டமாதிரி அலறுவா.. படிப்பைப் பத்தி உங்கக்கா கேட்டாளா..?” என்று ஜெயா கேட்க..
சூர்யா சிரிக்க.. பாலாவும் சிரிக்க.. ஒரு கையில் டீ யும் இன்னொரு கையில் காபியோடும் வந்தவள்.. பாலாவிடம் டீயை கொடுத்து.. சூர்யாவிடம் காபியை கொடுத்தவள்..
பாலாவிடம்.. ‘என்ன சிரிப்பு..? எங்க.. என்னைமாதிரி ஒரு ஜாக்கெட் தைச்சி காட்டு பார்ப்போம்.. பெரிய படிப்பு படிக்கிறானாம்..” என்று நொடிக்க..
‘நீ ஜாக்கெட்லாம் தைக்கிறியா..?” என்று பாலா ஆச்சர்யப்பட.
‘உங்கக்கா ஜாக்கெட் தைச்சி நாப்பதாயிரம் ரூபா சம்பாதிச்சிருக்கா பாலா..” என்று கமலம் சொல்;ல.. ‘ஆங்..” என பாலாவோடு சேர்த்து ஜெயாவும் ஆச்சர்யப்பட..
‘திலகா.. உன் தம்பி சம்பளம் வாங்கி உனக்கு சாக்லேட் வாங்கி வந்தானில்ல..? நீ சம்பாதிச்ச பணத்தில அவனுக்கு வாங்கிக்க காசு கொடு..” என்று சூர்யா சொல்ல.. திலகவதி கமலத்தையும் தன் அம்மாவையும் தயக்கத்தோடு பார்க்க..
‘ரெண்டு அம்மாவும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நம்ம ரூம்ல டேபிள் டிராயர்லதான் உன் பணத்தை வச்சிருக்கேன்.. போய் எடுத்திட்டு வா..” என்று சொல்ல..
இவள் போய் பர்சை எடுத்து வந்து சூர்யாவிடமே நீட்ட.. ‘நீயே கொடு.. ஒரு நல்ல மொபைல் வாங்கிக்கட்டும்.. படிப்புக்கு யூசாகும்..” என்று சொல்ல..
‘அச்சோ மாமா.. அவ்ளோ பணமெல்லாம் வேணாம்.. எங்க காலேஜ் ல மொபைல் அலவ்ட் கிடையாது..” என்று பாலா மறுக்க..
‘எனக்கு பணம் எண்ண வராது.. நீங்களே கொடுத்திடுங்க..” என்று திலகவதி சொல்ல.. பத்தாயிரம் ரூபாயை எண்ணி பர்சிலேயே வைத்தவன்.. மீதியை பாலாவிடம் கொடுக்க.. ‘ப்ளீஸ் வேணாம் மாமா..” என்று பாலா சங்கடப்பட..
‘உங்கக்கா சுயமா சம்பாதித்த பணம்.. சூர்யாதான் படிக்க யூசாகும்ன்னு சொல்றானே.. வாங்கிக்கோ பாலா..” என்று கமலம் சொல்லவும்.. வாங்கியவன் பணத்தை எண்ணிப்பார்க்க.. இவ்ளோ பணம் வேணாம் என்ற பாவனையை காண்பித்து.. பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி இருபதாயிரத்தை பிடிவாதமாய் தன் அக்காவிடமே திணித்தவன்..
தன் அக்காவின் காதினில் ‘சம்பாதிக்கிறது முக்கியமில்லக்கா… நாம சந்தோசமா இருக்கோமா..? நம்மளை சேர்ந்தவங்களை சந்தோசமா வச்சிக்கிறோமாங்கிறதுதான் முக்கியம்..” என்று அறிவுரை சொன்னவன்..
ஜெயாவிடம்.. ‘ம்மா படிக்கிற வேலையிருக்கு.. போலாம்..” என்றான். ஜெயாவும் பாலாவும் விடைபெற்று கிளம்பினார்.
இரவும் வரவே.. கமலத்திற்க்கு திலகவதி பரிமாறிக்கொண்டிருக்க.. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் திலகாவின் முகம்பார்த்து ‘எனக்கும் வை..” என்று இயல்பாய் சொல்லி சாப்பிட அமர்ந்தான்.
முத்து அவரின் மனைவியோடு மருத்துவமணையிலிருக்க இவள்தான் சமைத்திருந்தாள். புதினா சட்னியும் தேங்காய் சட்னியும் செய்து பனியாரம் செய்திருந்தாள்.
‘ஆயில் ஐட்டம் அம்மாக்கு ஒத்துக்காது.. அம்மாக்கு இட்லி செய்திருக்கலாமில்ல..?” என்று கேட்க..
‘நிறைய வெங்காயம் போட்டு செய்திருக்கேன்.. எண்ணையும் கொஞ்சமாதான் ஊத்தினேன்.. புதினா சட்னியும் உடம்புக்கு ரொம்ப நல்லது.. ஒன்னும் ஆகாது..” என்று சன்னக்குரலில் விளக்கம் கொடுக்க..
திலகவதியை மெச்சுதலாய் பார்த்தவனது மனம் லேசாய் உணர.. அவனின் முகமும் இலகுவாக.. ரசித்து சாப்பிட்டான் மனைவியின் சமையலை. திலகவதிக்கும் நிம்மதி பிறக்க இன்முகமாக பரிமாறினாள். பிறகு கமலம் படுக்கப்போக.. தன் அன்னைக்கு மாத்திரை எடுத்துகொடுத்து அவரோடு சூர்யா பேசிக்கொண்டிருந்தான்.
இவள் சாப்பிட்டு எல்லாம் எடுத்து வைத்து கமலம் அறையை எட்டிப்பார்க்க.. அம்மாவும் மகனும் ஏதோ தீவிரமாய் பேசிக்கொண்டிருப்பது புரிய.. வீட்டின் மெயின் டோரை பூட்டி தனதறைக்கு சென்றவளுக்கு.. பாலாவிடம் வீடியோ பத்தி சொன்னதுக்கு என்ன செய்யப்போறானோ என்ற பயமிருக்க.. செய்வதறியாது சரியாக இருந்த பெட்டின் உரையை மீண்டும் சரியாக போட்டுக்கொண்டிருந்தாள். பிறகு டி.வி. பார்த்தாள்.. அரைமணி நேரத்திற்க்கு மேலாகியும் சூர்யா வராமல் போகவே டி.வி.யை அணைத்து படுக்கலாம் என நினைக்கவும் சூர்யா வரவே.. கட்டிலில் அமர்ந்தாள்.
வீடியோவிற்க்காக திலகவதி பேசி பேச்சுகள் அதீத கோபத்தை கொடுத்திருந்தபோதும்.. சிறு பிள்ளையாய் பாலாவிடம் பேசியது அவளின் இயல்பான குணத்தை வெளிப்படுத்தியிருக்க மனைவி மீதான கோபம் குறைந்திருக்க..
ஒரு புத்தகத்தை எடுத்தவன் தானும் கட்டிலில் அமர்ந்து அதனை பார்த்துக்கொண்டிருக்க.. இவள் சூர்யாவின் முகத்தையே நொடிக்கொருமுறை பார்த்து பார்த்து திரும்ப..
‘அம்மாக்கு மாத்திரை குடுத்துட்டு வரதுக்குள்ள.. தூக்கம் வருதோ இல்லையோ படுத்து கண்மூடிடுவியே.. இன்னைக்கென்ன ஆச்சி…? இன்னும் உக்கார்ந்திருக்க…?” என்று புத்தகத்தை பார்த்தவாறே கேட்டான்.
‘சாரி..” என்றாள் முனுமுனுப்பாக.
‘எதுக்கு..?” என்றான் அவளின் கண்பார்த்து.
‘அது சின்ன வயசிலயிருந்து எதுன்னாலும் பாலாகிட்ட சொல்லிடுவேன்.. அதான் அந்த வீடியோ விசயத்தையும் தெரியாம சொல்லிட்டேன்..” என்று தவறு செய்த பாவனையோடு சொல்ல..
‘அதான் சொல்லிட்டியே.. இனிமே என்ன செய்யமுடியும்..? பேசாம தூங்கு..” என்று சிறு கடுப்போடு சொல்ல..
படுத்தவள்.. ‘ம் ஐடியா.. அதுக்கு பதிலா பாலா என்கிட்ட ஒன்னு சொன்னான்.. அதை உங்களுக்கு சொல்லிடவா..?” என்று ஆவலாய் கேட்க..
இவனுக்கு சிரிப்பு வர.. அதை காட்டிக்கொள்ளாமல்.. ‘எனக்கு அப்படி எதுவும் தெரிய வேணாம்..” என்று மீண்டும் புத்தகத்தை புரட்ட ஆரம்பிக்க..
‘இல்ல இல்ல.. சொல்லிடறேன்.. அப்போதான் எனக்கு தூக்கம் வரும்..” என்று எழுந்தமர.. சூர்யா இவளின் முகத்தை பார்க்க.. ‘அது.. வந்து..” என்று தயங்க..
சூர்யா மீண்டும் புத்தகத்தை பார்க்க.. ‘சம்பாதிக்கிறது முக்கியமில்ல.. சந்தோசமா வாழனும்.. நம்மளை சேர்ந்தவங்களையும் சந்தோசமா வச்சிக்கனும்னு சொன்னான்..” என்று கடகடவென ஒப்புவித்து வழக்கம்போல் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள.. சத்தமில்லாத புன்னகை புரிந்தவன்..
பரவால்லயே சின்ன பையன்னு பார்த்தா.. அக்காக்கு நல்லாதான் புத்தி சொல்லிட்டு போயிருக்கான்.. என்று பாலாவை மெச்சுதலாக நினைத்து.. ஒரு மணிநேரம் வரை படித்துக்கொண்டிருந்தவன்.. இலகுவான மனதோடு உறங்க முயன்றான்.