அத்தியாயம் — 4
பிரசாத் ஊருக்குபோய் நான்கு நாட்கள் கழித்து சூர்யாவிற்கு அழைத்தான்.
‘பிரசாத் உன்னோட வெய்ஃப் நல்லாயிருக்காங்க.. நீ பேசினியா..?” என்றான்.
‘இல்லடா.. அவகிட்ட பேச எனக்கு நேரமில்ல.. என்கிட்ட இருக்கிறது இரண்டு நிமிசம்தான்.. நான் ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன்.. கண்டிப்பா அதை பாருடா.. மிஸ் பண்ணிடாத..” என்று கட்செய்துவிட்டான்.
அந்த வீடியோவில்.. ‘ஒருவேளை நான் திரும்பி வரலைன்னா.. திலகவதியை நீதாண்டா பார்த்துக்கனும்.. கொஞ்சநாள் கழிச்சி.. ஒரு நல்ல பையனா பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணிவைக்கிற பெரிய பொறுப்பை நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..” என்று கண்ணீரோடு.. கெஞ்சலான குரலோடும் சொல்லியிருந்தான்.
பதறிய சூர்யா.. ‘டேய்.. என்ன பேச்சிடா பேசற..? உனக்கு ஒன்னும் ஆகாது.. நீ ஜெயிக்கப்பிறந்தவன்டா..” என்று பிரசாத்திடம் பேசுவதுபோல் நினைத்து தானாக பேசினான் சூர்யா..
‘தீவிரவாதிங்களோட மோசமானவங்க யாருன்னா..? குழந்தைங்களை பாலியல் பலாத்காரம் பண்றவங்கன்னு நினைக்கிறவன் நான்.. அவனுங்களே மரணத்தை கெஞ்சிகேக்கிற அளவுக்கு அவனுங்களோட தண்டனை இருக்கனும்னு நினைக்கிற நானே… பொண்டாட்டியா இருந்தாலும் இப்படி பண்ணிட்டோமேன்னு எனக்கு ரொம்ப வருத்தமாய்டுச்சி..” என்று சற்று நேர அழுகைக்கு பிறகு..
‘என் உயிர் போறது பத்தி நான் கவலைப்படல.. ஆனா திலகவதி ரொம்ப சின்னப்பொண்ணுடா.. அவ அவ வாழனும்.. நான் இல்லன்னாலும் அவ சந்தோசமா வாழனும்.. தீர்க்க சுமங்கலியா வாழனும்.. பார்த்துக்கடா..” என்றதும் வீடியோ முடிந்திருந்தது. அதன் பிறகு பிரசாத்திற்கு எத்தனை முறை கால் செய்தும் சூர்யாவால் அவனிடம் பேசமுடியவில்லை.
வேலைக்கு சேர்ந்த இத்தனை நாட்களில் பிரசாத்திடம் இப்படியொரு போன் காலயோ.. குரலில் பதட்டத்தையோ கேட்டிராத சூர்யா.. என்னவாயிருக்கும் என்ற பதட்டத்தோடும்.. இப்பொழுதுதானே கல்யாணம் செய்தான்.. இவனுக்கு எதாவது ஒன்றென்றால் திலகவதியின் நிலையை யோசிக்க.. மனம் முழுதும் பயமே ஆட்கொள்ள கடவுளே எதுவும் நடந்திடக்கூடாதென்று அத்தனை தெய்வங்களையும் வேண்டினான்.
அதிகாலை மூன்றுமணிவரை பிரசாத்தின் நினைவோடே விழித்திருந்தவன்.. ஏழுமணியாகியும் நன்றாக தூங்கிக்கொண்டிருக்க.. எப்பொழுதும் இந்த நேரம் வரை மகன் தூங்கமாட்டானே என்று யோசித்த கமலம்.. ‘சூர்யா..” என்று கதவைத்தட்ட..
ஒரு சத்தத்திற்க்கே ‘அம்மா…” என்ற கத்தலோடு பதறி எழுந்தவன்.. அவசரமாய் வெளியே வந்து.. ‘என்னம்மா..?” என்றான் கலங்கிய கண்களோடும் மிகுந்த பதட்டத்தோடும்.
மகனைப் பார்த்து பதறிய கமலம்.. ‘ஒன்னுமில்ல சூர்யா..” என்று ஆசுவாசப்படுத்தி.. ‘உடம்பேது சரியில்லையா சூர்யா..? கண்ணெல்லாம் சிவந்திருக்கு..” என்று கமலம் பதற..
‘இல்லமா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீங்க போங்க.. நான் குளிச்சிட்டு வரேன்..” என்று கதவை சாத்தியவன்.. பத்து நிமிடத்தில் குளித்து வெளியே வரவும்..
‘டிபன் சாப்பிடு சூர்யா…” என்று கமலம் சொல்ல..
‘காபி மட்டும் கொடுங்கம்மா..” என்று கேட்டு காபிகுடித்தவன்.. அதன்பின் கமலம் என்ன கெஞ்சியும் சாப்பிட மறுத்து.. ‘கொஞ்சம் அவசர வேலைம்மா.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பவும்..
பிறகுதான் ஆசுவாசமானார் கமலம்.. ‘டிபன் எடுத்து வைக்கட்டுங்களாம்மா..?” என்று அவ்வீட்டின் சமையலர் முத்து கேட்க..
‘எடுத்து வை முத்து..” என்று சாப்பிட அமரவும்..
‘தம்பி சாப்பிடாமலே கிளம்பிட்டாருங்களா..?” என்று வருத்தத்தோடு கேட்கவும்..
‘அவனைப் பத்தி உனக்கு தெரியாதா முத்து.. இன்னைக்கு எதாவது முக்கியமான ஆபரேசன் இருக்கும்போல.. அதுவும் எதாவது குழந்தைக்கா இருக்கும்னு நினைக்கிறேன்.. வழக்கம்போல மனசை அலைக்கடிச்சிட்டிருந்திருப்பான் போல.. இந்தமாதிரி டைம்ல அவனுக்கு சாப்பாடு இறங்காது.. அவன் சாப்பிடலயேன்னு நானேது சாப்பிடாம இருந்திட்டனா.. என்னையும் கத்துவான்.. உன்மேலயும் கோபப்படுவான்..” என்று தன் மகனின் பெருமையை சொல்லியவாறு சாப்பிட ஆரம்பித்தார் கமலம்.
‘வா.. சூர்யா.. என்ன இந்த நேரத்தில..? ஹாஸ்பிட்டல் போகலயா..?” என்று மூர்த்தி கேட்க.. அன்னபூரணியும் அதையே கேட்டவாறு ‘உக்காரு சூர்யா.. டீ குடிக்கிறியா..?” என்று அன்போடு கேட்டு..
‘திலகா.. டீ போடும்மா..” என்று குரல் கொடுக்க..
‘வா.. அண்ணா..” என்ற ரிங்குகுமாரி சூர்யாவிற்கு தண்ணீர் கொடுத்து.. நவீனிடம் சூர்யா வந்திருப்பதை சொல்ல.. ஆச்சர்யத்தோடு வெளியே வந்த நவீன் சூர்யாவின் முகத்தை பார்க்க..
‘என்னாச்சி சூர்யா..? பிரசாத்துக்கு மாதிரியே கமலாம்மாவும் அழுதே கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாங்ளா..? என்னவோ கப்பல் கவுந்தவனாட்டமா வந்திருக்க..? அதுவும் காலங்காத்தால… இந்த நேரத்துக்கு ஹாஸ்பிட்டல்லதான இருப்ப..?” என்று சிரிப்போடே கேள்விகளை அடுக்க.. சூர்யாவின் முகம் கொஞ்சமும் இலகவில்லை.. நவீனின் கேள்விகளும் அவனை சென்றடையவில்லை.. மாறாக முகத்தில் அத்தனை வேதனை மண்டியிருந்தது.
அந்தநேரம் திலகவதி டீயோடு வரவும்.. ‘சூர்யாவுக்கு குடு திலகா..” என்று அன்னபூரணி சொல்ல.. திலகவதி சூர்யாவிடம் சென்று டீயை நீட்ட..
இடையைத்தாண்டி அடர்ந்து விரிந்திருந்த கூந்தலின் நுனியில் சிறு முடிச்சிட்டு.. முகத்தில் லேசான மஞ்சள்பூச்சோடும்.. வகிட்டில் இட்டிருந்த குங்குமத்தோடும் புத்தம் புதுமலராய்.. டீயோடு நின்றிருந்த திலகவதியிடம் டீயை வாங்க மறந்தவனாய் அவளையே பார்த்திருக்க..
திலகவதிக்கு சூர்யாவின் பார்வை பிடிக்காமல் போகவும்.. ‘டியை பிடிங்க..” என்று கடுப்போடு சொன்னதற்கு பிறகுதான் தன்னுணர்விற்கு வந்தவன்..
‘இல்ல எனக்கு டீ வேணாம்.. வீட்ல குடிச்சிட்டுதான் வந்தேன்..” என்று சொன்னவன் குரலும் கமறியிருக்க.. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க..
பதறிய அன்னபூரணி.. ‘என்னாச்சி சூர்யா..? அம்மாக்கேது உடம்பு சரியில்லையா..?” என்று கேட்க..
‘இல்லம்மா.. அம்மா நல்லாதான் இருக்காங்க..” என்று தன் கண்களை கைகுட்டையால் துடைத்தவனின் பார்வை மீண்டும் திலகாவையே தொட்டு மீண்டது.
சூர்யாவின் பார்வையில் இம்முறை சந்தேகமடைந்த நவீன்.. சூர்யாவை அழைத்துக்கொண்டு மாடிக்கு செல்ல.. திடுமென நவீனைக் கட்டிக்கொண்டு கதறியழுதான் சூர்யா.
‘என்னாச்சி சூர்யா..? என்னன்னு சொல்லுடா..?” என்று கெஞ்சலாய் கேட்க.. சூர்யாவிடம் பதிலில்லாமல் போக கோபமடைந்த நவீன்.. ‘இப்போ சொல்லபோறியா இல்லயா..?” என்று மிரட்ட.. தனது மொபைலில் இருந்த பிரசாத்தின் வீடியோவை சூர்யா காண்பிக்கவும்.. துடித்துப்போனான் நவீன்..
‘அழாத நவீன்.. கடவுளை வேண்டிக்குவோம்.. பிரசாத்துக்கு ஒன்னும் ஆகாது..” என்று சூர்யாவும் கண்ணீரோடே சொல்ல..
‘ஒன்னுமறியாத சின்னபொண்ணுடா திலகா..” என்று நவீன் கண்ணீர்வடிக்க..
‘யார்கிட்டயும் ஒன்னும் சொல்லவேணாம் நவீன்.. அந்த கடவுளை நம்புவோம்..” என்று தளர்வாய் சொன்ன சூர்யா.. ‘என்னோட பிரசாத் வெற்றி செய்தியோடவும்.. வீர பதக்கத்தோடவும் மீசையை முறுக்கிட்டு கம்பீரமா வந்து நிற்ப்பான் பாரு..” என்று கம்பீரமாக சொல்லி தன்னையும் தேற்றிக்கொண்டவன்.. நவீனையும் தேற்றினான்.
அன்று முழுதும் மருத்துவமணை செல்லாமல்.. தனது வீட்டிலேயே சூர்யா இருப்பது மூர்த்திக்கு சந்தேகத்தை உண்டாக்க.. அதோடு சூர்யாவின் முகமும் நவீனின் முகவும் வாட்டத்தோடு காணவும்..
‘யாரையாச்சம் லவ் பண்றியா சூர்யா..? தங்கச்சியேது அதுக்கு மறுப்பு சொல்லுதா..? நீ இப்படி ஹாஸ்பிட்டல் போகாம இருக்கமாட்டியே..?” என்று கேட்க..
‘ச்சே.. ச்சே.. அப்டியெல்லாம் ஒன்னுமில்லப்பா.. நவீனும் கொஞ்ச நாள்ல ஊருக்கு கிளம்பிடுவான்.. இன்னைக்கு ஒன்னும் அவசர கேசில்ல.. அதான் நவீனோடவும் குட்டிமாங்களோடவும் இருக்கலாம்னு வந்தேன்..” என்று சமாளிக்க..
இப்பொழுதும் மூர்த்தியின் சந்தேகம் போகவில்லை.. இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்தவாறே சென்றார். மாலை ஏழுமணிபோல்தான் தன் வீட்டிற்கு கிளம்பினான் சூர்யா..
அடுத்த நாளே பிரசாத்தின் இறப்புசெய்தி வீட்டிலுள்ளவர்களின் தலையில் இடியாய் இறங்கியது. பிரசாத்தின் இறப்புச்செய்தி சூர்யாவின் மொத்த பலத்தையும் குறைத்திருக்க.. பிரசாத்தின் வீட்டின் கேட்டருகே வீங்கிய கண்களோடு தளர்வாய் வந்து நின்றவனிடம் பாய்ந்தோடி கட்டிக்கொண்டு கத்திக்கதறினார் மூர்த்தி.
‘ஒரு வருசத்துக்கப்புறம் பத்து நாளைக்கு முன்னதான் வந்தான்.. கல்யாண வேலைல.. ஆசையா நாலு வார்த்த கூட பேசல.. இப்படி..” என்று தலைதலையாய் அடித்துக்கொண்டழுதார் மூர்த்தி..
‘இல்ல.. இல்ல.. என் பையனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது.. அவன் வருவான்.. வருவான்..” என்று தொலைக்காட்சி செய்தியினையும் நம்பமுடியாமல் அழுது கரைந்தார் அன்னபூரணி.
என்ன சொல்லி அழுவதென்றும் தெரியாமல்.. தனது திருமணம் ஒரு கனவா என்றும் புரியாமல்.. நிற்காமல் வந்துகொண்டிருக்கும் கண்ணீரை துடைத்தபடியும்.. மூக்கை உறுஞ்சியபடியும்.. ‘நிஜம்மாவே அவங்க செத்துட்டாங்களாம்மா..?” என்று சிறுமிபோல் அழுதுகொண்டிருக்கும் தன் மகளின் அறியாமையில் துடித்துப்போனார் ஜெயா.
பிரசாத்தின் இறப்பு செய்து வந்து ஒரு பகலும் இரவும் முடிந்தாகிவிட்டது.. இன்னும் உடல் வீடு வந்தபாடில்லை.. ஒருவருக்கும் பொட்டு தூக்கமில்லை.. மூர்த்தியும் அன்னபூரணியுமாவது டீ காபி.. என கொஞ்சம் அருந்தினர்.. திலகவதிக்கு ஒன்றும் தொண்டையில் இறங்கவில்லை..
‘கொஞ்சம் பழையதாவது குடி கண்ணு..” என்று ஜெயா மகளுக்கு திணித்து குடிக்க வைக்கவும் ஒருமுழுங்கு உள்ளே சென்றதும்.. அதுவும் வயிற்யை பிரட்டியவாறு வாந்திதாய் வெளிவந்தது..
‘எனக்கு வேண்டாம்மா.. என்னால குடிக்கமுடியலம்மா..” என்று அன்னையின் மடிசாய்ந்தழுதாள் திலகவதி. அடுத்த இரண்டுமணிநேரத்தில் பிரசாத்தின் உடல் வந்துவிடும் என்ற தகவலறிந்ததும்.. அத்தகவலை சொல்லி மூர்த்தியழவும்..
‘நிஜம்மாவே அவங்க செத்துட்டாங்களாப்பா..?” என்று கதறினாள் திலகவதி. இதோ ராணுவவீரர்கள் பிரசாத்தின் உடலை சகல மரியாதையுடன் தாங்கி வந்தனர். சூர்யாவால் பிரசாத்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தையேயில்லை.. அழுது.. அழுது ஓய்ந்து போனார்கள். கணவனின் உடல் வரும்வரை அழுது ஓய்ந்தவள்.. உடலைப்பார்த்தப்பின் அழக்கூட திராணியற்றவளாய் கல்லாய் சமைந்திருந்தாள்.
பிரசாத்தின் உடலைப் பார்த்து.. நவீன் கதறிய கதறலில்.. சற்று நேரம் அழுகை மட்டுப்பட்டிருந்தவர்கள் கூட மீண்டும் கத்த ஆரம்பித்தனர். அதையும் தாண்டி.. பிரசாத்தோடு தனது கணவரின் இணக்கம் அறிந்த நவீனின் மனைவியான ரிங்குகுமாரியும்.. தம் திருமணத்திற்க்கு பிறகு.. தன் கணவருக்கு ஆதரவளித்த ஒரே நபர் பிரசாத் மட்டும்தான்.. தன் குழந்தைகளுடன் ஆத்மார்த்தமாய் பிரசாத் அன்பு காட்டியது.. விளையாடியது.. என ஒவ்வொன்றாய் வலம்வர.. அவளும் அழுதழுது ஓய்ந்துபோனாள்.