பொதுவாக அடக்கம் செய்யும் இடங்களில் பெரும்பாலும் நம் பெண்கள் செல்வது கிடையாது.. அரசு மரியாதையோடு அடக்கம் செய்வதால் திலகவதியையும் அழைத்துச்சென்றனர். ராணுவவீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவர்கள் சாங்கியம் முடிந்ததும்.. குடும்பத்தினர் ஒவ்வொருவராக பிரசாத்தின் உடலை வணங்கிய பின் சகல மரியாதையுடன் பிரசாத்தின் உடலைப்போர்த்தியிருந்த தேசிய கொடியை ராணுவவீரர்கள் மடித்து திலகவதியிடம் மரியாதையுடன் ஒப்படைக்க.. கொடியின் பெருமையெல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை.. கணவனையே கண்ணீர்வழிய பார்த்திருந்தாள்.
அழுது ஓய்ந்திருந்த அன்னபூரணியிடம் மூர்த்தி.. ‘அன்னம்.. திலகா போட்டுருக்கிற தாலியையும்.. வளையலையும் கழட்டு..” என்றார் மனதை திடப்படுத்தி.
‘அதை சாங்கியப்பிரகாரம் நாள் பார்த்துதான் செய்யனும்.. அதோட நான் கழட்டக்கூடாது..” என்று கண்ணீர்விட..
‘சாங்கியமும் வேணாம்.. ஒரு மண்ணும் வேணாம்..” என்று விரக்த்தியாய் சொன்னவர்.. ‘இனி திலகா நமக்கு மருமகளில்ல.. மகள்.. இந்த இடத்திலயிருந்து நம்ம மகளாத்தான் அவளை கூட்டிட்டுப்போகனும்.. நீ கழட்டலன்னா பரவால்ல.. நானே பார்த்துக்கிறேன்..” என்றவர்..
திலகவதி கழுத்திலிருந்த புதுமைமாறா மஞ்சள் கயிற்றினை கழற்ற முற்ப்பட.. திலகவதி அதனை கெட்டியாய்ப் பிடிக்க.. மனதை கல்லாக்கி அவளின் விரல்களிலிருந்து விடுவித்து கழற்றியவர்.. பின்பு புதுமை மாறா கண்ணாடி வளையல்களையும் தானே கழற்றி.. பிரசாத்தின் நெஞ்சின்மீது வைத்து கண்ணீர் விட்டார் மூர்த்தி.
திலகவதிக்கான தாலி கழற்றுவது.. வளையல் கழற்றுவது போன்ற காரியங்கள் செய்யும்போது.. சொல்லொன்னா துயரத்தை அனுபவித்த சூர்யா.. இதுபோன்று செய்யவேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும்.. பிரசாத்தின் கடைசி ஆசை நிறைவேற வேண்டுமென்றால் அவனின் நினைவுச் சின்னங்கள் திலகவதியிடம் இருந்து மொத்தமாய் விலகவேண்டும் என்பதற்காகவே கனத்த மனத்துடன் அமைதி காத்திருந்தான்.
பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க.. பிரசாத்தின் உடலை குழிக்குள் படுக்கவைக்கவும்.. கத்திக்கதறியபடியே முதல் மண்ணை தன் கையால் போட்டார் மூர்த்தி. கணவன் வயிற்றின்மீது மண்விழவும்..
‘என்னால இதைப்பார்க்க முடியலப்பா..” என்று கத்தியபடி மூர்த்தியின்மேலேயே விழுந்தாள் திலகவதி. மருமகளை குழந்தையாய் தாங்கியவர் வீடுவரை தன் தோள்சாய்த்தவாறே அழைத்து வந்தார்.
கமலத்திடம் இருந்து போன் வரவும்.. நவீனிடம்.. ‘நவீன்.. சிஸ்டர்கிட்ட சொல்லி இவங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்க சொல்லுடா..” என்று குரல் கமறியவாறு சொன்னவன்.. தாளமுடியாத மனபாரத்தோடு வீட்டிற்கு சென்றான்.
சோர்ந்துபோய் வீட்டிற்கு வந்த சூர்யாவிடம்.. ’சூர்யா.. சாப்பிடுடா.. நீ சாப்பிட்டு ரெண்டு நாளாய்டுச்சி.. வெறும் காபியை மட்டும் குடிச்சிட்டிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்..? பிரசாத்தும் எனக்கு உன்னை மாதிரிதான்.. எனக்கு மட்டும் அந்த வருத்தம் இருக்காதா..?” என்று கமலம் அழுதார்.
‘அழாதிங்கம்மா.. கொஞ்சமா கஞ்சி கரைச்சி எடுத்துட்டு வாங்க..” என்றான்.
‘சாப்பாடே ரெடியாதான்ப்பா இருக்கு.. வா சாப்பிடலாம்..” என்றார்.
‘அம்மா எனக்கு கஞ்சிசாதம் இருந்தா கொடுங்க.. இல்லன்னா வேற எதுவும் வேணாம்..” என்றான் பிடிவாதமாய்.
‘பிடிச்சா பிடிச்ச பிடிதான்..” என்று கோபித்துகொண்டு கஞ்சியை எடுத்துவந்து கொடுத்தார். வாங்கி குடித்ததும்.. ‘அம்மா நான் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்..” என்று தனதறைக்கு வந்துவிட்டான்.
பெட்டில் சரிந்தவனுக்கு பிரசாத்தின் நினைவுகள் வலம்வர.. தானாய் பெருகியது கண்ணீர். சூர்யா சரிவர தூங்கி நான்கு நாள்கள் ஆகியிருக்கவும்.. பத்துநிமிடம் வரை அழுதுகொண்டிருந்தவன் பின் தன்னையறியாமல் உறங்கிப்போனான்.. உறங்கிய ஒரு மணிநேரத்திலேயே பிரசாத்தின் அம்மாவிடம் இருந்து போன் வரவும்..
ஆன் செய்து பேசியவன்.. பதறியடித்து மீண்டும் பிரசாத்தின் வீட்டிற்கு போனான். வீட்டிற்க்கு வரும்வரை தலைகுனிந்தே இருந்தவள்.. வீட்டினுள் வந்ததும் பிரசாத்தின் மாலை போட்ட படத்தை பார்க்கவும் மயங்கி கீழே விழுந்திருந்தாள். அன்னபூரணி சூர்யாவிற்கு கால்செய்து நிலையை சொல்ல.. அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்திருந்தனர்.
இரண்டுமணிநேரம் கழித்து கண்விழித்த திலகவதி.. முதலில் பார்த்தது சூர்யாவைத்தான். தான் எங்கிருக்கிறோம் என்று கண்களை சுழற்றினாள். மருத்துவமணை என்று புரிந்தது. பட்டென்று எழுந்து உக்கார்ந்து..
‘அம்மா.. எங்க..?” என்று சிறு குழந்தையாய்.. அருகில் இருந்த நர்சை பார்த்து கேட்டாள்.
‘எல்லாரும் ரொம்ப டையர்டா இருந்தாங்கன்னு நான்தான் வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.. நீங்க பயப்படாதிங்க.. நான்தான் பக்கத்தில இருக்னேல..?” என்று ஆதரவாய் சொன்னான் சூர்யா.
சூர்யாவின் இந்த கனிவான பேச்சு அருகிலிருந்த செவிலியருக்கு ஆச்சரியமில்லை என்றாலும்.. திலகவதி மயக்கம் தெளியும் வரை சூர்யா அவ்விடம் விட்டு நகராதிருந்ததுதான் அங்கிருந்தவர்களை மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அதுவும் கடந்த அரைமணிநேரத்திற்கு முன்வரை செவிலியர்களைக்கூட வெளியே அனுப்பிவிட்டு அவன் மட்டுமே திலகவதி பக்கத்தில் இருந்தான்.
அதோடு.. இன்று ஞாயிற்றுகிழமை.. எதாவது முக்கியமான எமர்ஜென்சி என்றால் தவிர.. மருத்துவமணைக்கு இன்று வரமாட்டான்.. ஞாயிற்று கிழமை என்றால் அவன் செலவிடுவது.. தனது அம்மாவுடனும்.. ஊனமுற்றோர் ஆஸ்ரம இல்லத்திலும்தான் என்பது மருத்துவமணையில் பணிபுரியும் அனைவருக்கும் தெரிந்த விசயமே ஆதலால்..
சூர்யா இன்று திலகவதியோடிருந்தது மட்டுமல்லாமல்.. அவள் மயக்கம் தெளியும் வரை.. அவனின் கண்களிலும் நிற்காமல் கண்ணீர் வந்துகொண்டிருந்ததை பார்த்த செவிலியருக்கு சூர்யாவின் நிலை புரிந்திருக்க.. அதன் தாக்கம்.. திலகவதியின் மேல் கனிவும் அன்பும் கூடியது.
‘எனக்கு ஒன்னுமில்ல.. நான் அம்மாகிட்ட போறேன்..” என்று அவள் சிறு பிள்ளைப்போல் கண்கலங்கவும்.. பார்சல் இட்லியை எடுத்து அவள் பக்கத்தில் பிரித்து வைத்தவன்.. ‘இட்லி சாப்பிடுங்க.. அப்புறம் போலாம்..” என்றான்.
‘எனக்கு வேணாம்..” என்று அருவியாய் கண்ணீரை கொட்டினாள்.
‘நீங்க சாப்பிடலைன்னா.. உங்களை இங்கிருந்து நான் அனுப்பமாட்டேன்..” என்று சற்றே மிரட்டும் தோரணையில் சொன்னான்.
‘என்னை அனுப்பறதுக்கு நீங்க யாரு..? நானே போவேன்..” என்று வீராப்பாய் சொல்லி எழுந்தவள் தள்ளாடவும்..
திலகவதியை சட்டென தாங்கிய நர்ஸ் பெண்மணி.. ‘சாப்பிடாம போனிங்கன்னா மறுபடி மயக்கம் வந்திடும்.. டாக்டர் சொல்லாம நீங்க இங்கயிருந்து வெளியே போக முடியாதுங்க மேடம்.. நீங்க சாப்பிட்டாத்தான் உங்களை சார் போகவிடுவார்.. சார் சொன்னாதான் வெளில விடுவாங்க.. சாப்பிடுங்க..” என்று கனிவாய் சொன்னார்.
சூர்யா நர்சை பார்க்கவும்.. ஒரு ட்ரேயோடு தண்ணீரும் கொண்டுவந்து..
‘ஹேண்ட் வாஸ் பண்ணிக்கோங்க..” என்றார் அந்த செவிலியர்.
புரியாமல் பார்த்தவளிடம்.. ‘கை கழுவிட்டு சாப்பிடுங்க..” என்றான் சூர்யா.
வேறு வழியில்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள் திலகவதி. முதல்ல இவங்ககிட்ட இங்லீஸ்ல பேசறதை குறைச்சிக்கனும்.. இல்லல்ல.. நிறுத்தனும்.. என்று நினைத்துக்கொண்டான் சூர்யா.
இரண்டு இட்லிகளை சாப்பிட்டவள்.. ‘போதும்..” என்று எழப்பார்க்கவும்.. ‘இதுல கைகழுவிக்கோங்க..” என்று ட்ரேயை நீட்டினாள் நர்ஸ்.
கை கழுவியதும்.. ‘அம்மாக்கு போன் பண்ணி வரசொல்லுங்க.. நான் வீட்டுக்கு போகனும்..” என்றாள்.
சூர்யாவிற்கு இன்னும் கொஞ்சநேரம் திலகவதியோடு இருக்கும் எண்ணம் வரவும்..
‘கொஞ்ச நேரம் நடந்து பார்த்திட்டு வரலாம்.. நீங்க மயக்கம் போடாம நல்லா நடந்திங்கன்னா.. நானே உங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் விட்டுடறேன்..” என்றான்.
எதுவும் சொல்லாமல் எழுந்து அந்த காரிடரில் நடக்கத் துவங்கினாள். திலகவதியோடு சேர்த்து தானும் நடைபயின்றான். சூர்யாவிற்கு புரியவில்லை.. திலகவதிமேல் நாம் கொண்டிருப்பது என்னமாதிரியான உணர்வென்று.. ஆனால் அருகிலிருந்த செவிலியர் இருவருக்கும் அது நன்றாக புரிந்தது.
ஏனென்றால் சூர்யா.. யாரிடமும் வரம்பிற்கு மீறி பேசமாட்டான்.. அதுவும்.. ப்ரியாவின் பிரிவிற்க்கு பிறகு பெண்களை இரண்டடி தள்ளியே நிறுத்துவான்.. ஆனால் இன்று சூர்யா திலகவதியிடம் காட்டுவது அன்பு மட்டுமல்ல.. அக்கறையோடு சேர்த்து.. அவளை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற தவிப்பும் கூடவே இருக்க.. அவனையும்.. திலகவதியையும் தவிர்த்து.. அங்கிருந்த மற்றவர்களுக்கு நன்றாகவே புரிந்தது சூர்யாவின் காதல்.
காரிடரில் அவளோடு நடந்து செல்லும்போது சூர்யாவிற்கு மனது லேசானதுபோல் ஒரு உணர்வு வந்தது. பிறகு தானே அவளை காரில் அழைத்துசென்று பிரசாத்தின் வீட்டில் விட்டான்.
திலகவதியை பார்த்ததும் அவளை கட்டிக்கொண்டு அக்கா.. அக்கா.. என்று அழுதவனை பார்த்ததும் அது அவளின் தம்பி என்று புரிந்துகொண்டான் சூர்யா. அவன் பக்கத்தில் போய்.. ‘அழாதப்பா..” என்று அவளிடம் இருந்து அவனை பிரித்து..
’நீ இப்படி அழுதா.. உங்கக்கா மறுபடியும் அழுவாங்க..” என்றவன்..
‘நீ என்ன படிக்கிற..?” என பேச்சை மாற்றினான்.
‘பதினொன்னாவது..” என்றவன்.. ‘எங்கக்காவை எங்க வீட்டுக்கு அனுப்பிடாதிங்க சார்.. அவங்க அங்க வந்தாங்கன்னா.. மறுபடியும் வயசானவங்களெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேப்பாங்க..” என்று பெண்பிள்ளைபோல் கண்ணீர் வடித்தான்.
‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. உங்கக்காவை யாரும் எங்கையும் அனுப்பமாட்டாங்க.. நீ கவலைப்படாத.. இப்போiதைக்கு உங்கக்காவை பத்தி நினைக்காம நீ நல்லா படி.. படிச்சி பெரிய ஆளானதும் நீ அவங்களை பார்த்துக்கோ.. அதுவரைக்கும் அவங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. உன் கவனம் படிப்பிலதான் இருக்கனும்.. புரியுதா..?” என்றான்.
சட்டென்று ‘நீங்க பார்த்துக்குவிங்களா சார்..?” என்றான்.
கண்டிப்பா பார்த்துக்குவேன் என்று மனதில் நினைத்தவன்.. ‘நான் மட்டுமில்ல இங்க எல்லாரும் சேர்ந்து அவங்களை பார்த்துக்குவோம்..” என்று உறுதியாய் சொல்லி.. ‘உன் பேரென்ன…?” என கனிவாய் கேட்டான் சூர்யா.
‘என் பேரு பாலாஜி சார்..” என்றான்.
திலகவதி மீதான தன் வேதனையை உள்ளுக்குள் மறைத்து.. ‘உங்கக்கா அழுதாங்கன்னா அவங்களை அழக்கூடாதுன்னு நீதான தைரியம் சொல்லனும்..? அதவிட்டுட்டு அவங்களோட சேர்த்து நீயும் அழுவியா..?” என கொஞ்சம் மிரட்டலாகக் கேட்டதும்.. தன் கண்களை துடைத்த பாலாஜி சற்று தெளிவோடு சூர்யாவைப் பார்க்கவும்.. ‘அழக்கூடாது.. புரியுதா..?”என்றான் தன்மையாக.
சரி என்பதாய் தலையசைத்தான் பாலாஜி.. பிறகு திலகவதியை ஒரு முறை பார்வையால் வருடிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் சூர்யா.
அடுத்த நாளிலிருந்து திலகவதியையும் தன் மாமனார் மாமியாரையும் சாப்பிட வைப்பதுதான் ரிங்குவிற்க்கு பெரும் போராட்டமாக இருந்தது. திலகவதியிடம் சென்று ‘இப்போ நீ சாப்டப்போறியா இல்லவா..? நீ சாப்ட்டாதான் நான் என் குழந்தைக்கு சாப்ட கொடுப்பேன்..” என்று தன் குழந்தைகள் பசிக்கு கேட்டாலும் கொடுக்காமல் ‘சித்திவ சாப்ட்டா உன்க்கும் சாப்பாடு..” என்று தன் குழந்தைகளையும் துணைக்கு சேர்த்துக்கொள்வாள்.
குழந்தைகள் பசிக்கு அழவும் மனம்தாளாமல் வேறு வழியின்றி சாப்பிடுவாள் திலகவதி. நவீனின் மனைவி காட்டிய பரிவில்.. குளிர்ந்து போனார்கள் மூர்த்தியும் அன்னபூரணியும்.. முன்பு நடந்த விரோதங்களை எல்லாம் மறந்தவளாய்.. தனது அத்தை மாமாவிடம்.. ‘நீங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிடறது..?” என்று உரிமையாய் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வாள்.. நவீன் சாப்பிட கேட்டாலும்
‘அவங்களையும் கூப்டு.. அப்போதான் உனக்கு தருவேன்..” என்று முறுக்கிக்கொள்வாள். இவ்வாறு முடிந்தவரை வீட்டினை சகஜநிலைக்கு திருப்ப தன்னாலான முயற்ச்சியை எடுத்தாள் ரிங்க்குமாரி. தன் மாமனார் மாமியாருக்கு அறுதலளித்து சாப்பிட வைப்பது.. வீட்டு வேலைகள்.. என அனைத்து வேலைகளையும் ரிங்க்குவே பார்த்து பார்த்து செய்தாள்.
திலகவதியை தனிமைப்படுத்தாமல்.. நிறைய பேசிக்கொண்டும்.. தன் குழந்தைகளை பார்த்துக்க சொல்வதும் என்று பார்த்துக்கொள்ள.. திலகவதிக்கு ரிங்க்கு பேசும் தமிழை புரிந்துகொள்வதே பெரும்பாடா இருக்க.. தன் வேதனை மறந்து ‘நீங்க என்ன சொல்றிங்க புரியல..” என்பது போன்று கொஞ்சம் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள். இப்படியாக திலகவதிக்கு உடன்பிறந்த சகோதரியாகவே மாறியிருந்தாள் ரிங்குகுமாரி.