அத்தியாயம் — 5
பிரசாத் இறந்து இன்றோடு மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. நவீனும் பிரசாத் இறந்து ஒருமாதம் வரை இங்கிருந்தவன்.. குழந்தைகளின் படிப்பிற்காகவும்.. தனது பணியில் விடுப்பின்மை காரணமாகவும் பெங்கருக்கு சென்றிருந்தான். குழந்தைகளுக்கு இந்த வருட பள்ளிப்படிப்பு முடிந்ததும்.. தானும் இங்கேயே வந்துவிடுவதாக.. தனது சித்தி சித்தப்பாவிற்கு தைரியமளித்து கிளம்பியிருந்தான்.
சூர்யா வாரம் ஒரு முறையாவது பிரசாத்தின் வீட்டிற்கு போகாமல் இருக்கமாட்டான். வீட்டிற்க்கு வந்ததும் திலகவதியைத்தான் பரிவோடும்.. சிலநேரம் உன் வாழ்க்கையை சரிசெய்யாமல் நான் விடமாட்டேன்.. என்பதுபோன்ற அக்கறையான பார்வையும்.. சிலநேரம் இத்தனை சின்ன வயசில இத்தனை துயரம் இந்த பொண்ணுக்கு தேவைதானா..? என்பது போன்ற வேதனையான பார்வையும் பார்ப்பான். ஆனால் சூர்யா பார்க்கும் பார்வை திலகவத்திக்கு முற்றிலும் தப்பாகவே தெரிந்தது. அதனாலேயே சூர்யா வருவது திலகவதிக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது..
தன் வருகை திலகவதிக்கு பிடிக்கவில்லை என்று சூர்யாவிற்கும் நன்றாகவே தெரியும்தான்.. அவளின் முகபாவனைகளை வைத்தே கனித்திருந்தான்.. ஆனாலும் பிரசாத் வீட்டிற்கு வருவதையும் சூர்யா நிறுத்தவில்லை.. திலகவதியை பார்ப்பதையும் நிறுத்தவில்லை. அது அவனுக்கு தப்பாகவும் தோணவில்லை. திலகவதியின் வாழ்வினை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற சிந்தனையும்.. தன் நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதும்தான் சூர்யாவின் முக்கிய சிந்தனையாக இருந்தது.
ஒருமுறை அன்னபூரணி நீ எவ்ளோ பெரிய டாக்டர்.. உன் வேலையெல்லாம் தள்ளிவச்சிட்டு நேரமிருக்கும் போதெல்லாம் எங்களை வந்து பார்த்திட்டு போற.. உனக்கெதுக்குப்பா சிரமம்..? என்று குற்ற உணர்வோடு கேட்கவும்..
‘நான் உங்களுக்கு மகன் இல்லையாம்மா..? பிரசாத் உயிரோட இருக்கும்போது அப்படித்தான சொல்விங்க..?” என்று கேட்டு அவர்களின் வாயை அடைத்தான்.
———————–
கமலம் வீல்சேரில் அங்குமிங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தார்.
‘அம்மா.. நீங்க எப்படித்தான் வாசலைப் பார்த்திருந்தாலும் ஆதவன் வரதுக்கு மதியம் ஆய்டும்..” என்று கமலத்தை உள்ளே அழைத்து வந்து.. ‘ரிலாக்சா இருங்கம்மா..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘சித்தா…” என்ற குரல் கேட்கவும்
‘பொண்ணும்மா..” என்று வெளியே ஓடிவந்தான் சூர்யா.
இரண்டு குழந்தைகளையும் இரு பக்கமும் அள்ளிக்கொண்டு.. ‘வாங்கண்ணி.. நல்லாயிருக்கிங்களா..?” என்று உள்ளே வந்தான்.
‘ம்ம்.. சூப்பரா இருக்கோம்.. சூர்யா..” என்றவள் ‘அத்தை.. “ என்று கமலத்தை அணைத்து ‘நல்லாயிருக்கிங்களாத்தை..?” என்றாள்.
‘நான் நல்லா இருக்கேன் கீர்த்தி.. ஆனா.. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி இருக்கு.. இங்க யாரும் என் பேச்சுக்கு மரியாதையே கொடுக்கிறதில்ல.. இரண்டு மாசத்துக்கு முன்னாடியே வரன்னு சொல்லிட்டு ஏன் வரலை..?” என்றார்.
‘உங்க புள்ளைதான்த்தை லீவ் இல்லன்னுட்டார்.. இப்பவும் இன்னும் மூனுமாசம் கழிச்சிபோனா.. ஒரு மாசத்துக்கு அங்கையே இருக்கிறமாதிரி போலாம்னார்.. நான்தான் இப்ப போயே ஆகனும்னு சொல்லிட்டேன்..” என்றாள்.
‘சரிம்மா.. போய் குளிச்சிட்டு வாங்க.. முதல்ல சாப்பிடலாம்.. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..” என்றார் கமலம்.
‘பாட்டி.. நான் குளிக்கமாட்டேன்.. “ என்றாள் ஆதவனின் மூத்த மகளான சோனா.
‘என் சோனுகுட்டி சொல்லிட்டா அதுல மாற்றமே இருக்ககூடாது.. நீங்க குளிக்கவேணாம் பொண்ணும்மா.. ஆனா சாப்பிட மட்டும் மாட்டேன் சொல்லகூடாது.. சித்தா ஊட்டிவிடறேன்.. வாங்க..” என்று சோனுவிற்கு ஊட்டி முடித்தவன்..
‘தியாகுட்டி.. வாங்க..” என்று சூர்யா சாப்பாடோடு கைநீட்டவும்… ‘ம்ம்..” என்ற சத்தத்தோடு முகத்தை சுருக்கிக்கொண்டு.. வேணாம் என்பதுபோல் மிகவேகமாக தலையாட்டினாள் அந்த நடை பயிலத்தெரியாத பதினொரு மாதக்குழந்தை.
‘சரி.. சரி.. வேணாம்.. தலையை ரொம்ப ஆட்டாதே.. கழுத்து வலிக்கும்..” என்று அவளை தூக்கி சமாதானம் செய்து.. ஆதவனிடம்.. ‘இந்த குட்டிமாக்கு சாப்பிட வைக்க என்னால முடியாது.. நீ அண்ணியையே வரசொல்லு..” என்றான்.
குளித்து வெளியே வந்த கீர்த்தி.. ‘அவ இப்ப சாப்பிடமாட்டா சூர்யா.. கார்ல வரும்போதே பசிக்கு அழுதா.. ஆப்பிள் கொடுத்தேன் முழுசும் சாப்பிட்டுட்டா..” என்றாள்.
‘வெரி குட்..” என்று தியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். ‘சூர்யா.. முதல்ல பிரசாத் வீட்டுக்கு போய்ட்டு வந்திடலாம் வா..” என்றான் ஆதவன்.
‘எல்லாரும் ரொம்ப டையர்டா இருப்பிங்க.. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு போய் பார்த்துக்கலாம் ஆதவா..” என்றான் சூர்யா.
‘இல்லயில்ல.. இன்னைக்கே போய் பார்த்திட்டு வரலாம்..” என்று கீர்த்தியும் சொன்னாள்.
‘சரி.. நீங்க இரண்டுபேரும் சாப்பிடுங்க.. அப்புறம் போலாம்..” என்று குழந்தைகளோடு விளையாட சென்றான் சூர்யா.
அடுத்த ஒருமணிநேரத்தில் கமலத்தை தவிர அனைவரும் பிரசாத்தின் வீட்டில் இருந்தனர். புது இடமாக இருக்கவும் தியா அழ ஆரம்பிக்கவும்.. ‘குட்டி பொண்ணும்மா.. சித்தாக்கிட்ட வாங்க..” என தன் மடியினில் அமர்த்திக்கொள்ள.. சூர்யாவின் மீசையை பிடித்து இழுத்தபடி விளையாடிக்கொண்டிருந்தாள் தியா. கீர்த்தியும்.. ஆதவனும் திலகவதியையே பார்த்திருந்தனர்.
ஒரு கொண்டையோடு.. சாரியை பின் கூட போடாமல் வயதான பெண்மணிபோல் சுற்றிக்கொண்டிருந்தாள். காதோடு ஒட்டியபடி ஒரு சிறிய தோடு.. சிறு புள்ளியாய் ஒரு மூக்குத்தி தவிர.. கழுத்தில் ஒரு செயினோ.. கையில் வளையலோ.. காலில் கொலுசு.. என்று இப்படி எதுவுமில்லாமல்.. ஒரு அழகான கற்சிலை முழுமைபெறாமல் இருப்பதுபோல் இருந்தாள் திலகவதி. எப்படியிருந்தாலும் அவள் முகம் மட்டும் பெற்றவர்களை தொலைத்துவிட்டு அவர்களுக்காக ஏங்கி தவிக்கும் குழந்தைபோல்தான் இருந்தது.
‘இவங்க சூர்யாவோட அண்ணன்.. ஆதவன். அண்ணி கீர்த்தி. அவங்க குழந்தைங்க.. சோனா.. தியா..” என்று அன்னபூரணி திலகவதியிடம் சொன்னார்.
யாராகவோ இருந்திட்டு போகட்டும் என்பதுபோல்.. சிறு தலையசைப்பை மட்டும் பதிலாய் கொடுத்தாள் திலகவதி.
சூர்யாவின் மடியை விட்டு இறங்க தியா முயற்ச்சி செய்யவும்.. ‘அண்ணி உங்ககிட்ட வருவா போல..” என்று சொல்லி தியாவை இறக்கிவிடவும் நாலுகால் பாய்ச்சலில் தவழ்ந்த குழந்தை.. திலகவதியின் பக்கத்தில் போய் திலகவதியின் சாரியை பிடித்து இழுத்தது.
சூர்யாவோடு சேர்த்து ஆதவனும்.. கீர்த்தியும் கூட ஆச்சர்யப்பட்டு போனார்கள். குழந்தை சாரியை பிடித்து இழுக்கவும்.. குனிந்து தூக்கவந்த திலகவதி மீண்டும் கையை சுருக்கிக்கொண்டு..
‘நான் பாப்பாவை தூக்கட்டுமா..?” என கீர்த்தியிடம் தயங்கியவாறே கேட்டாள்.
‘எதுக்கு பர்மிசன் கேக்கிற திலகா..? முதல்ல அவளை தூக்கு.. புதுசா யார்கிட்டயும் போகமாட்டா.. ஆனா உன்கிட்ட மட்டும் எப்படி வரான்னு தெரியலை.. தியாக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குபோல..” என்றாள் கீர்த்தி.
‘அப்படியா குட்டிம்மா..?” என்று ஆசையோடு தூக்கிகொண்டாள் திலகவதி. இன்றுதான் திலகவதியின் முகத்தில் சிறு இயல்பைப் பார்த்தான் சூர்யா. திலகவதி இயல்பாக இருந்ததற்கே சொல்லில் அடங்காத நிம்மதி பிறந்தது சூர்யாவினுள். சூர்யாவின் விசயத்தில் குழப்பமாய் இருந்த ஆதவன்.. இப்பொழுது அவனின் முகத்தில் இருந்த செய்தி கண்டு ஒரு முடிவிற்கு வந்தான். ஒரு மணிநேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தியா அழ ஆரம்பிக்கவும்.. ‘அக்கா.. பாப்பாக்கு பசிக்கும்போல.. கேரட்டும்.. ரசமும் இருக்கு.. கொஞ்சமா சாதம் ஊட்டிவிடட்டுமா..?” என்றாள் திலகவதி.
‘தியா என்னைத்தவிர வேற யார்கிட்டயும் சாப்பிடமாட்டா.. நீ ட்ரை பண்ணிபாரு.. அழுதானா என்கிட்ட கொடு.. நான் பார்த்துக்கிறேன்..” என்றாள் கீர்த்தி.
‘ம்ம்..” என்று உற்சாகமாய் சாதம் எடுத்து வந்தாள் திலகவதி. என்னவோ திலகவதியை தவிர வேறு யாரிடமும் சாப்பிடமாட்டேன் என்பதுபோல… ‘ஆ… ஆ..” என்று தன் குருவி வாயை திறந்து.. சமத்தாய் சாப்பிட்டாள் தியா.
குழந்தை ‘ஆ..” வென வாய்திறக்கும்போது திலகவதியின் வாயும் திறந்து.. திறந்து மூடுவதை சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.
திலகவதி மீதான சூர்யாவின் பார்வையில்.. சூர்யாவின் ஆர்வம் திலகவதியின் மேல்தான் எனப்புரிந்த ஆதவன்.. மேலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பிறகு.. ‘ஹாஸ்பிட்டலுக்கு டைம் ஆகுது ஆதவா.. கிளம்பலாமா..?” என்று சூர்யா கேட்கவும்… ‘சரிங்கம்மா.. நாங்க கிளம்பறோம்..” என்று சொல்லி கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்ததும்.. ‘நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடறேன் ஆதவா.. நீங்களும் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க..” என்று சூர்யா கிளம்பினான்.
மருத்துவமணையில் ரௌண்ட்ஸ் முடிந்து.. ஓ.பி. பார்க்க வரவும்.. ‘சூர்யா சார் என்னடி இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறாரு..?” என்ற செவிலியர்களின் கிசுகிசுபேச்சில் லேசாய் சிரித்தவன்.. ஆமாம்.. ரொம்ப நாளைக்கு அப்புறம்.. கொஞ்சம் சந்தோசமா இருக்கிற மாதிரிதான் இருக்கு.. நம்ம ஆதவனோட குட்டிங்க வந்ததாலா இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். மருத்துவமணையிலிருந்து வெகு நாட்களுக்கு பிறகு உற்சாகமாய் வீடு திரும்பினான் சூர்யா.
‘பொண்ணும்மா..” என்றபடியே வீட்டிற்குள் சூர்யா நுழைந்ததும்.. ‘சூர்யா.. எதுக்குடா என்கிட்ட மறைச்ச..?” என்று செல்லமாய் கோபித்தார் கமலம்.
‘நான் என்னமம்மா உங்ககிட்ட மறைச்சேன்..? நீங்க எதுபத்தி கேக்கிறிங்க..?” என்று புரியாதவனாய் கேட்டான் சூர்யா.
‘அவன்தான் சொல்லமாட்றான்.. நீயாச்சம் சொல்லுடா.. உன் மனசை ஜெயிச்ச அந்த பொண்ணு யாரு..? ஒரு குறையும் இல்லாம ரொம்ப அழகா இருப்பாளாமே..‚ என்கிட்ட மட்டும் ஏண்டா எதாவது குறையிருக்கிற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பொய் சொன்ன..?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் கமலம்.
‘அம்மா அப்படி யாரும் இல்லம்மா.. உங்ககிட்ட இப்படியெல்லாம் யார் சொன்னது..?” என்று அதிர்ந்தவனாய் கேட்டான்.
‘ஆதவன்தான் சொன்னான்.. ஆனா பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லமாட்டுக்கிறான்..” என்றார்.
கோபமாய் ஆதவனைப் பார்த்த சூர்யா.. ‘என்ன ஆதவா இதெல்லாம்..?” என்றான் கர்ஜனையாக.
‘டேய்.. கோபப்படாத.. அம்மா என்கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கசொல்லி புத்தி சொல்ல சொன்னாங்க.. அதுவும் எந்த குறையும் இல்லாத பொண்ணா இருக்கனும்னு சொன்னாங்க.. அதுக்குத்தான் நான் அம்மாகிட்ட சொன்னேன்.. நீங்க கவலைப்படாதிங்கமா.. சூர்யா எந்த குறையும் இல்லாத ஒரு அழகான பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறான்.. ஆனா.. அதுக்கு கொஞ்ச நாளாகும்.. இப்ப என்ன..? அவனுக்கு இருபத்தி ஏழு வயசுதான ஆகுது.. இருபத்தி எட்டுல கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவான்னு சொன்னேன்.. இதுல என்ன தப்பிருக்கு..?” என்று கூலாக கேட்டான் ஆதவன்.
‘எந்த குறையும் இல்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு நான் உன்கிட்ட சொன்னேனா..?” என்று கோபமாக கேட்டு.. ஆதவனை இழுத்துக்கொண்டு தனதறைக்கு போனான் சூர்யா.
சிரித்தபடியே உள்ளே வந்த ஆதவனைப் பார்த்ததும்.. சூர்யாவிற்கு மேலும் கடுப்பானது. ‘யாரை கேட்டு அம்மாகிட்ட இப்படி சொன்ன..? அந்த மாதிரி ஒரு மண்ணும் என் மனசுக்குள்ள இல்ல.. வீணா என்னை டென்சன் பண்ணாத ஆதவா.. மறுபடி ஏது இந்த மாதிரி அம்மாகிட்ட பேசிடாத.. அப்புறம் உனக்கும் எனக்கும் இடையில ஒரு பெரிய கேப் விழுந்திடும்.. சுருக்கமா சொல்லபோனா.. என் கல்யாண விசயத்தில தயவுசெய்து நீ தலையிடாத..” என்றான் கோபமாகவே.
‘சரி.. அம்மாகிட்ட இனிமே உன் கல்யாண விசயமா பேசல.. ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன்.. நான் சொன்ன மாதிரி பொண்ணைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப்போற.. ரொம்ப லேட் பண்ணாம உன்னை நீயே சீக்கிரமா அனலைஸ் பண்ணு.. இன்னும் உனக்கு எப்ப புரிஞ்சி..“ என்று இழுத்தவன்..
‘அப்புறம் அந்த பொண்ணுக்கு புரியவச்சி..“ என்று மீண்டும் இழுத்து..
‘கொஞ்சம் இல்ல.. ரொம்ப கிரிட்டிக்கல்தான்… தீயா வேலை செய்யனும் சூர்யா..” என்று மீண்டும் சிரித்தான் ஆதவன்.
‘சத்தியமா உனக்கு எதுவோ ஆய்டுச்சி.. எதுக்கும் ஈவ்னிங் என்னோட ஹாஸ்பிட்டலுக்கு வா.. சைக்யார்டிரிஸ்ட் மோகன்கிட்ட கன்சல்ட் பண்ணிடலாம்..”
‘சரி.. சரி.. கோபப்படாத.. நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லு..” என்றவன்..
‘ப்ரியா உன்னை வேணாம்னு சொன்னதுக்கப்புறம்.. அவளை மறக்க உனக்கு எவ்ளோ நாளானுச்சி..?” என்றான் ஆதவன்.
‘என்னை வேணாம்னு சொன்னவளை.. முதல்ல நான் எதுக்கு நினைக்கனும்..? அதுவுமில்லாம நான் அப்ப எம்.எஸ்.. பண்ணிட்டிருந்தேன்.. என் கான்சட்ரேசன் படிப்பிலதான் இருந்திச்சி..” என்றான் சூர்யா.
‘நீ அப்ப எம்.எஸ் பண்ணிட்டில்லன்னாலும் நீ அவளை நினைச்சி வருத்தப்பட்டிருக்கமாட்ட.. ஏன்னா.. நீ அவளை உண்மையா லவ் பண்ணல.. அதை தெரிஞ்சிகிட்டுதான் அவ உன்னை விட்டுட்டு போய்ட்டா.. மத்தபடி அவ அம்மாவை பார்த்துக்க மாட்டேன்னு சொன்னதெல்லாம் உன்னை விட்டு விலகறதுக்காக சொன்ன ரீசன்தான். அவ போனதுக்கப்புறமும் நீ எந்த விசயத்திலயும் தோத்தும்போகல.. அதுக்கான வருத்தமும் உன் முகத்தில நான் பார்க்கல..
ஆனா இப்ப கொஞ்ச நாளா நீ டெய்லியும் என்கூட வீடியோ கால் பேசும்போதெல்லாம் அடிக்கடி ஒருத்தரை பத்தி பேசற.. என்னதான் நீ சிரிச்சி பேசினாலும் உன் முகத்தில எப்பவுமே ஒரு சோகம் தெரியுது.. ஆனா.. இன்னைக்கு நீ கொஞ்சம் சந்தோசமா இருந்ததும்.. உன் மனசில என்ன இருக்குன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி..
காதல் ஒரு அழகான விசயம்.. உன்னோட அடிமனசில இருந்து இப்பதான் அது துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு.. சீக்கிரமே அது ஒரு அழகான மலரா மலரும்.. அந்த மலர் யாருன்னு நீயே கண்டுபிடி..” என்றான்.
‘உளறாத ஆதவா.. நான் எவ்ளோ டென்சன்ல இருக்கேன்னு யாருக்கும் புரியாது.. இதுல காதல் வேற துளிர்த்திருக்கு.. அது இதுன்னுகிட்டு..” என்று வெறுப்பாய் சொன்னான் சூர்யா.
‘அப்படி என்ன டென்சன் உனக்கு..?” என்றான் ஆதவன்.
‘இந்த வீடியோவை கொஞ்சம் பாரு..” என்று தன் மொபைலை கொடுத்தான் சூர்யா. அதில் பிரசாத் பேசியதை பார்த்தான். கண்கலங்கிய ஆதவன்.. சற்று நேரத்திலேயே மனதை திடமாக்கி.. க்வை கைல வச்சிக்கிட்டு டென்சனா அலையிறானே என நினைத்தவன்..
‘உன்கிட்ட பேசி ஒரு யூசும் இல்ல.. பேசாம நான் சொல்ற மாதிரி கேளு.. பிரசாத் வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு போகாத.. அப்படி உன்னால அங்க போகாம இருக்க முடியலைன்னா.. நீ எதை தேடி போறன்னு யோசிச்சி பாருடா..” என்றான் அக்கறையாக.
‘இதுல யோசிக்க என்ன இருக்கு..? பிரசாத்தோட அம்மாப்பாக்காகத்தாண்டா நான் அங்க போறேன்.. அவங்க எப்பவுமே என்னை ஒரு மகனாத்தான் பார்ப்பாங்க.. ஏன் அது உனக்கு தெரியாதா என்ன..? அவனோட இடத்தை என்னால நிரப்ப முடியலைன்னாலும்.. ஏதோ கொஞ்சமாவது ஆறுதலா இருக்கலாம்னு நினைக்கிறேன்.” என்றான்.
‘பிரசாத் உயிரோட இல்லைங்கிறது முடிஞ்சிபோன உண்மை. அது உனக்கும் நல்லாவே புரியும்.. பிரசாத்தோட அம்மாகூட.. இன்னைக்கு என்கிட்ட கொஞ்சம் இயல்யா பேசினாங்க.. ஆனா உன்னால யார்கிட்டயும் அப்படி இருக்கமுடியலை.. தினமும் என்கிட்ட பேசலைன்னாலும் சோனுகிட்ட பேசாம நீ இருந்ததே இல்ல.. ஆனா இப்ப கொஞ்சநாளா நீ சோனுகிட்ட கூட பேசலை.. அந்தளவுக்கு உன்னை யார் டிஸ்டர்ப் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சி.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரபாரு.. ரொம்ப டைம் எடுத்துக்காத.. என்னால உன்னை இப்படி பார்க்க முடியலை..” என்று வருத்தத்தோடு சொல்லி.. சூர்யாவின் அறைவிட்டு அகன்றான் ஆதவன்.
ஆதவன் போனதும்.. சூர்யா பலமாக யோசிக்க ஆரம்பித்தான். அவனது மனக்கண்ணில் வந்தது பிரசாத்தோ.. அல்லது அவனுடைய அம்மாவோ இல்லை.. மாறாக.. திலகவதி.. திலகவதி.. திலகவதி.. மட்டுமே..
அவளை எப்படியாவது வாழவைத்துவிட வேண்டும்.. பிரசாத்தின் கடைசி ஆசையை நிறைவேத்தியே ஆகவேண்டும்.. ஆனால் இப்பொழுதே அதைபற்றி பேசிவிடமுடியாதே…
பாவம் முதல் திருமணத்திலிருந்தே அவள் இன்னும் வெளிவரவில்லை.. அதற்குள் மறுமணமா…? இருந்தாலும் அவளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் எதாவது செய்துதானே ஆகவேண்டும்.. என்று பலவாறு யோசித்தவன்.. கிழவிமாதிரி எப்பப்பார்த்தாலும் எட்டு கெஜம் புடவை சுத்திக்கிறது.. இதுல மண்டையைவிட பெரிதாய் ஒரு கொண்டைவேறு… என்று அவளின் தோற்றத்தை நினைத்து எரிச்சலுற்றாலும் திலகவதியின் நினைவோடுதான் தூங்கினான்.