அத்தியாயம் — 8
‘அம்மா நான் இங்க இருக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா என்னை எங்கையாவது அநாதை ஆஸ்ரமத்தில சேர்த்தி விட்ருங்க.. எனக்கு இன்னொரு கல்யாணம் வேணாம்..” என்று அன்னபூர்ணியிடம் திலகா கெஞ்சிகொண்டிருக்க..
மூர்த்தி.. ‘மிலிட்ரிக்காரனோட அப்பா.. மகன் செத்ததும் மருமகளை கொண்டுபோய் அநாதை ஆஸ்ரமத்தில சேர்த்திவிட்டுட்டான்னு எல்லாரும் என் மூஞ்சில துப்பறதுக்குத்தான் இப்படி சொல்லிட்டிருக்கியா திலகா..?” என்றார் கோபமாக.
‘அச்சோ அப்படியில்லப்பா.. எனக்கு கல்யாணம் மட்டும் வேணாம்.. நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்..” என்றாள் அழுதுகொண்டே.
‘பிரசாத்தோட அப்படி எத்தனை வருசம் சந்தோசமா வாழ்ந்திட்டேன்னு கல்யாணம் வேணாங்கிற..? இந்த சின்ன வயசில உன்னை இப்படியே வச்சிட்டிருந்தாலும்.. அவன் பொண்ணாயிருந்தா இப்படி விட்ருப்பானான்னு அப்பவும் எங்களை கேவலமாத்தான் நினைப்பாங்க.. உன் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கு.. ஒழுங்கா நாங்க சொல்றமாதிரி கேளு..” என்றார் மிரட்டலாக.
திலகவதியின் அம்மாவையும் சூர்யா பெண்கேட்டிருந்த விபரத்தை சொல்லி வரசொல்லியிருந்தார் மூர்த்தி. திலகவதியின் அம்மாவும்.. தன் மகளின் வாழ்க்கையும் தன்னைப்போலவே ஆகிவிட்டதென்று மிகுந்த வருத்தத்தில் இருந்ததால்… மூர்த்தியின் இந்த முடிவு சந்தோசத்தையே கொடுக்க..
‘திலகா.. ஆம்பிளை துணையில்லாம ஒரு பொண்ணு வாழ்றது எவ்வளவு கொடுமைன்னு அனுபவிச்சி உணர்ந்தவநான்.. நீ எவ்ளோதான் நல்லவளா இருந்தாலும் சும்மா யார்கிட்டையாவது பேசினா கூட.. அவங்களோட சுலபமா இணைவச்சி பேசிடும் இந்த ஊர்உலகம்.. எங்க காலத்திற்கு அப்புறம் உனக்கு ஒரு பாதுகாப்பு வேணும்மா.. தயவுசெய்து நாங்க சொல்றதை கேளு…
ஏற்கனவே மாப்பிள்ளை இறந்ததுக்கப்புறம்.. இரண்டாந்தாரமா உன்னை பொண்ணு கேட்டுட்டுதான் இருக்காங்க.. இரண்டாந்தாரம் பிரச்சணையில்ல.. ஆனா உன்னை பொண்ணுகேட்ட யாரும் நல்லவங்க இல்ல.. அதுக்காகத்தான் சொல்றேன்.. சூர்யா தம்பியை கல்யாணம் பண்ணிக்க கண்ணு.. உன்னை நல்லா பார்த்ததுப்பாங்க…” என்று திலகாவிற்கு மேல் அவளின் அம்மா திலகாவிடம் அழுதுகொண்டிருந்தார்.
வெம்பியவளாக உதட்டைப்பிதுக்கி.. ‘அப்போ நான் செத்து போறேன்..” என்றாள்.
‘நீ செத்தாலும்.. என்ன செஞ்சாங்களோ அந்த பிள்ளையை தற்கொலை செய்துக்கிச்சின்னு.. அதுக்கும் நாங்கதான் காரணம்னு ஊர்உலகம் பேசும்.. மத்தவங்க பேசுறது மட்டுமில்ல.. நாங்கதான் உன்னை கொலைசெய்துட்டோம்னு எங்களையும் ஜெயில்ல போட்ருவாங்க.. இதுதான் உன் ஆசைன்னா தாரளமா சாவு.. உன்னை பெத்த புள்ளையாட்டமா நினைச்ச எங்களுக்கு இதெல்லாம் ரொம்ப அவசியம்தான்..” என்றார் ஆத்திரமாக.
‘அச்சோ.. ஏம்ப்பா இப்படி பேசுறிங்க..?” என்று காதைப்பொத்திக்கொண்டு கதறியழுதாள் திலகவதி.
திலகவதியின் அழுகையில் கோபம் குறைந்தவர்… ‘நீதான் என்னை பேசவைக்கிற.. இந்த கல்யாணம் முடிவு பண்ணினது நான்..‚ என்பேச்சுக்கு மறுத்து பேசற அளவுக்கு நீ வளர்ந்திட்டியா..?” என்று ஆழ்ந்து பார்த்தார் திலகவதியை.
பேச வார்த்தையின்றி திலகவதி அழுதுகொண்டே இருக்கவும்.. கல்யாணம் வேணாம்னு தப்பான முடிவிற்கு வந்துவிட்டாள் என்ன செய்வதென்ற பயம் வரவும்..
‘இந்த கல்யாணம் வேணாம்னு நீ எதாவது செய்துகிட்டாலும் அது எங்களைத்தான் பாதிக்கும்.. நாங்க நிம்மதியா இருக்கனுமா வேணாமான்னு நீயே முடிவு செய்துக்கோ..” என்று அங்கிருந்து அகன்றார் மூர்த்தி.
மூர்த்தி சென்றதும் நேராக பிரசாத்தின் ஃ போட்டோவருகே சென்றவள்.. ‘உங்கம்மா ரொம்ப நல்லவங்க.. எனக்கு நல்லதுதான் பண்ணுவாங்க.. அவங்க பேச்சு கேட்டு நடந்துக்கனும்.. எப்பவும் சந்தோசமா இருக்கனும்ன்னு ஊருக்கு போகும்போது சொல்லிட்டு போனிங்க.. ஆனா நீங்க இல்லாததுனால இப்போ எல்லாருக்கும் நான் பாரமா போய்ட்டேன்.. நான் இங்க இருக்கிறது யாருக்கும் பிடிக்கல..” என்று திலகவதி அழவும்.. அன்னபூர்ணிக்கு பாவமாகத்தான் இருந்தது. ஆனால் அவளின் வருங்கால நல்வாழ்வை எண்ணி அமைதியாகத்தான் இருந்தார்.
அரைமணிநேரம் வரை ஆளுக்கொரு மூலையில் அமைதியாக அமர்ந்திருக்க.. டென்சனோடு வெளியே சென்றிருந்த மூர்த்தி வந்தார். வீட்டினில் அனைவரும் அமர்ந்திருப்பதை பார்த்தவர்.. ‘அன்னம் கொஞ்சம் தண்ணிகொடு..” என்றார் குரல் கமறியவராய்.
அன்னபூரணிக்கு முன் வேகமாக எழுந்தவள்.. கண்ணீரோடு தண்ணீர் கொண்டுவந்து மூர்த்தியிடம் நீட்டினாள் அமைதியாக. ‘உனக்குதான் கொண்டு வர சொன்னேன்.. முதல்ல முகத்தை கழுவிட்டு தண்ணிகுடி..” என்றார் கனிவாக.
மூர்த்தியின் கரிசனையில் நம்பிக்கை வரப்பெற்றவளாக.. ‘நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்ப்பா..” என்றவள் வேகமாக மூர்த்தி சொன்னவாறு செய்து.. ‘நீங்க என்னை எங்கையும் அனுப்பமாட்டிங்கன்னு எனக்கு தெரியும்பா..” என்றாள் முகம் மலர..
அந்த நேரம் ஆதவன் வரவும்.. ‘வா.. ஆதவா.. அம்மா என்ன சொன்னாங்க..?” என்று மூர்த்தி கேட்கவும்.. ‘சூர்யாவோட சந்தோசம்தான் முக்கியம்னு அம்மா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கப்பா..” என்றான் ஆதவன்.
அங்கிருந்த ஜெயாவை காண்பித்து.. ‘இவங்கதான் திலகவதியோட அம்மா..” என்றார் மூர்த்தி.
‘வணக்கம்மா..” என்றதும்.. ஜெயாவும் கையெடுத்து கும்பிட்டார்.
‘அம்மா.. எனக்கு இன்னும் ஒரு மாசம்தான் லீவ் இருக்கு.. அதுக்கப்புறம் நான் வெளிநாட்டுக்கு போய்டுவேன்.. அதனால சீக்கிரமே கல்யாணத்தை வச்சிக்கலாமான்னு பார்க்கிறேன்.. அப்பதான் கல்யாணம் முடிஞ்சி.. எங்களால திலகவதியோட கொஞ்சநாளாவது இருக்க முடியும்.. அதுவுமில்லாம நல்ல காரியத்தை எதுக்கு தள்ளிபோடனும்னு கீர்த்தியும் ரொம்ப அவசரப்படுத்துறா..” என்றான்.
‘தம்பி.. நான் ஒரு ஏலச்சீட்டு போட்டுட்டு இருக்கேன்.. இதுதான் கடைசி மாசம்.. எப்படின்னாலும் பணம் கையில வரதுக்கு ஒருமாசம் கிட்ட ஆய்டும்.. அந்த பணம் வந்ததுக்கப்புறம் கல்யாணம் வச்சிக்கலாம்..” என்று ஜெயா சொல்ல..
‘கல்யாணம் ரிஜிஸ்தர் ஆபீஸ்ல வச்சி ரொம்ப சிம்ப்பிளாத்தான் பண்ணனும்னு சூர்யா சொல்லிட்டான்.. அவன் விருப்பப்படிதான் கல்யாணம் பண்ணப்போறோம்.. கல்யாணத்துக்கு பணமே தேவையில்ல.. அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க.. நான் சொல்ற சர்டிஃ பிகேட்ஸ் மட்டும் கொடுங்க.. மத்தது நாங்க பார்த்துக்கிறோம்..” என்று கேட்கவும்.. ஜெயா சரி என்பதுபோல் தலையசைத்தார்.
அன்னப்பூரணி ஒரு முடிவிற்கு வந்தவராய்.. திலகவதியின் அம்மாவிடம்..
‘திலகவதியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்… அங்கயிருந்து கல்யாணம் பண்ணிகொடுங்க.. இங்கயிருந்து வேணாம்..” என்று சொல்லவும் திலகவதியின் மட்டுப்பட்ட அழுகை மேலும் அதிகமானது.
‘அழாதம்மா.. சூர்யா ரொம்ப நல்லவன்.. அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்..” என்றார் அன்னபூரணி.
‘நான் இங்கயே உங்களோட நல்லா சந்தோசமாத்தான்மா இருக்கேன்..” என்று மன்றாடவும்..
‘திலகவதி.. நீ உங்கம்மாவோட இப்பவே உங்க வீட்டுக்கு கிளம்பு..” என்று திடமாக சொன்னார் மூர்த்தி.
‘இது என்வீடு இல்லையாப்பா..?” என்று ஏமாற்றமாய் கேட்டாள் திலகவதி.
மனதை கல்லாக்கிக்கொண்டு.. ‘இல்லை..‚ இனி சூர்யாவோட வீடுதான் உன்வீடு.. இது எங்கவீடு..‚ நீ இப்பவே உங்க அம்மாவோட கிளம்பு..” என்று முகத்தை அவ்வளவு கடுமையாக வைத்துக்கொண்டு கட்டளையாய் சொன்னார் மூர்த்தி.
மூர்த்தியின் முகத்தை பார்த்த திலகவதிக்கு அதிர்ச்சியில் கண்ணீPர்கூட நின்றுவிட்டது. இப்படி என்றுமே திலகவதியிடம் அவர் நடந்து கொண்டதில்லை.. பயத்தில் அவளின் அம்மாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டவள்.. தன் உடமைகளைகூட எடுத்துக்கொள்ளாமல் வெறும் கையோடு நடைபிணமாய் அங்கிருந்து வெளியேற..
‘திலகா.. திரும்பவும் சொல்றேன்.. கல்யாணம் வேணாம்னு ஏது எதாவது தப்பான முடிவெடுத்திட்ட.. உன்னை அடக்கம் பண்றதுக்குள்ள.. என் பொணம் சுடுகாட்ல இருக்கும்..” என்று மிரட்டலோடு எச்சரிக்க..
மேலும் வெடித்தழுதாள் தன் அன்னையைக் கட்டிக்கொண்டு.. தன் மகளின் மீதான மூர்த்தியின் பாசத்தில் பிரமித்து போன ஜெயா.. இருகைகூப்பி வணங்கி சட்டென மூர்த்தியின் காலில் விழுந்தார் நன்றியோடு.
‘ப்ச்.. எழுந்திருமா..“ என்று ஜெயாவை சத்தமாக அதட்டியவர்.. ‘கல்யாணம் முடியற வரைக்கும் திலகாவை பத்திரமா பார்த்துக்கோம்மா..” என்றார் வெளிவராத குரலில். நன்றியோடு தலையசைத்து விடைபெற்றார் ஜெயா.
திலகவதி அங்கிருந்து செல்லும்வரை கல்லாய் சமைந்திருந்த மூர்த்தி.. அவள் சென்றதும் கண்ணீர் வடித்தார். அவருக்கு ஆறுதலாய் ஆதவன் மூர்த்தியின் கையைப்பிடிக்கவும்..
‘அந்த புள்ளைக்கு ஒன்னுமே தெரியாது ஆதவா.. இருக்கிறதை சாப்பிட்டுட்டு மாடுமாதிரி வேலை செய்ஞ்சிட்டே இருப்பா.. இதுவரைக்கும் அதுவேணும் இதுவேணும்னு எங்ககிட்ட ஒன்னுமே கேட்டதில்லை.. பாவம் இனிமேலாவது சந்தோசமா இருக்கட்டும்..‚” என்று குரல் கமற சொன்னார்.
‘சூர்யாவைப் பத்தி உங்களுக்கு தெரியாதாப்பா…? இனிமே சந்தோசமாத்தான் திலகா இருக்கும்..” என்று நம்பிக்கை அளித்துவிட்டு அங்கிருந்து மனநிறைவோடு கிளம்பினான் ஆதவன்.
வீட்டிற்கு சென்றதும்.. ‘ஏங்க.. பிரசாத்தோட அம்மாப்பா என்ன சொன்னாங்க..?” என்று ஆவலாய் கீர்த்தி கேட்கவும்.. அங்கு நடந்ததை சொன்னான் ஆதவன்.
‘திலகாவோட கிரிட்டிகல் பொசிசனை நினைச்சா கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனாலும் எல்லாம் நல்லதுக்குத்தான்.. கொஞ்சநாள்ல எல்லாம் சரியாய்டும்.. இதுல முக்கியமா அவங்கம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்களே அதுபோதும்..‚” என்று சந்தோசமாய் சொன்னாள் கீர்த்தி.
முகம் பிரகாசிக்க.. ‘பிரசாத்தோட அப்பாவை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஆதவா..” என்றான் சூர்யா.
‘ஆமா சூர்யா.. தன் மகன் இருந்த இடத்தில இன்னொருத்தனை வச்சிப்பார்க்கிற அவரோட மனசு யாருக்கும் வராது.. அவர் திலகவதியை தன் சொந்த பொண்ணாத்தான் பார்க்கிறாரு.. நாட்டுக்காக உயிரையே விடத்துணிஞ்சவனாச்சே.. பிரசாத்தோட அம்மாப்பா மட்டும் நல்லவங்களா இல்லாம போய்டுவாங்களா என்ன..?” என்று ஆதவனும் பெருமைப்பட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து.. ஆதவனும்.. கீர்த்தியும் தன் குழந்தைகளோடு.. திலகவதியின் வீட்டிற்கு வந்திருந்தனர். ‘திலகவதிக்கு பூ முடிக்கனும்.. இன்னும் கொஞ்சநேரத்தில சூர்யா வந்திடுவார்..” என்று கீர்த்தி சொல்லவும்..
‘இதெல்லாம் எனக்கு வேணாம்மா..” என்று மீண்டும் அழுதாள் திலகவதி.
அவளின் அழுகையை ஒரு பொருட்டாக யாரும் அங்கே நினைக்கவில்லை. சற்று நேரத்தில் சூர்யா வந்ததும்.. நின்ற இடத்திலேய அமைதியாக அமர்ந்துகொண்டாள். திலகவதியின் வீடு ஒரே ஒரு பெரிய அறை மட்டும்தான். அதிலேயே ஒரு சிறிய தடுப்பு சுவர்வைத்த சமையலறை இருக்கும். வெளியில் சிறிய பாத்ரூம்.. இதுதான் அவர்களின் வீடு.
சூர்யா வந்ததும் பெருகிய சந்தோசத்துடன் சூர்யாவிடம் போய் நின்றுகொண்டான் பாலாஜி.
ஒரு பழைய சாரியோடு.. அடர்ந்து நீண்டிருந்த கருங்கூந்தலை அப்படியே அள்ளிமுடிந்திருந்தாள். ‘இந்த சீலையை மாத்திக்கிட்டு தலையை சீவு திலகா..” என்று ஜெயா கெஞ்சிக்கொண்டிருந்தார். எவ்வித அசைவுமின்றி பிடிவாதமாக நின்ற இடத்தைவிட்டு நகராமல் நின்றிருந்தாள்.
சற்று நேரத்தில் ஐயர் வந்ததும்.. திலகவதியை ஒரு பாயில் உக்கார வைத்தார்கள். ஒரு சிறிய பூஜை செய்து.. ஐயர் பூவும் குங்குமமும் கொடுக்க.. திலகவதி அதை வாங்க மறுத்து முகத்தை திருப்ப.. அதை வாங்கிய கீர்த்தி தானே திலகவதியின் கொண்டையைச் சுற்றி பூச்சூடிவிட்டவள்.. நெற்றியில் குங்குமம் இட்டு.. நலங்கு சுற்றிக்கொண்டிருக்க..
பெருகிய கண்ணீரோடு அப்பொழுதுதான் நிமிர்ந்து அத்தனை வெறுப்போடு சூர்யாவை உறுத்துப்பார்த்தாள். பாவி.. நண்பனோட பொண்டாட்டிமேல ஆசைப்படுற உன்னைப்போய் நல்லவன்னு எல்லாரும் நம்புறாங்களே.. என நினைத்த திலகவதியின் முகம் அத்தனை இறுக்கமாக இருந்தது..