அவளின் பார்வையை உணர்ந்தவன்.. சாகறவரைக்கும் என்னை நீ புரிஞ்சிக்கலைன்னாலும் பரவாயில்ல.. என் வாழ்க்கை உன்னோடுதான்.. என்பதுபோல் தானும் பதில்பார்வை பார்த்தான். பிறகு ஆதவன் நலங்கு சுற்றினான்.
‘சூர்யா.. நீயும் போய் சுத்து..” என்று கீர்த்தி சொல்லவும்.. திலகவதியின் மனநிலை உணர்ந்து.. ‘வேணாம் அண்ணி.. திலகாவோட அம்மாவை சுத்த சொல்லுங்க.. போதும்..” என்றான்.
இப்படி நல்லவனாட்டம் நடிச்சி நடிச்சிதாண்டா நீ நினைச்சதை சாதிச்சிட்ட.. என்று மனதினுள் அத்தனை வசைபாடினாள் சூர்யாவை.
கீர்த்தி கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்சை பாலாஜியிடம் கொடுத்து..
‘எல்லாருக்கும் கொடு பாலா..” என்றாள். சொன்னதுபோலவே செய்தான் பாலா. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும்.. ‘தம்பி இட்லியும் சாம்பார் சட்னியும் செய்திருக்கேன்.. எல்லாரும் ஒரு வாய் சாப்பிட்டிங்கனா என் மனசு நிறைஞ்சிடும்..” என்று நம்வீட்டில் சாப்பிடுவார்களா மாட்டார்களா என்ற தயக்கத்தோடு ஜெயா சொல்ல..
‘எடுத்து வைங்கம்மா கண்டிப்பா சாப்பிடறோம்..” என்றான் ஆதவன்.
மேலும் இரண்டு பாயை விரித்தவர்.. சந்தோசத்தோடு அனைத்தும் எடுத்து வைத்து.. ‘திலகா வந்து பரிமாறு..” என்று சொல்ல.. சிறு அசைவில்லை திலகாவிடம்.
‘திலகாவை தொல்லை செய்ய வேணாம்.. நாமளே பார்த்துக்கலாம்..” என்று கீர்த்தியே அனைவருக்கும் பரிமாற.. யாரையும் நிமிர்ந்து பார்த்தாளில்லை..
சாப்பிட்டு முடித்த சூர்யா.. திலகாவிடம் சென்று.. ‘சமையல் அத்தை செய்தாங்களா..? கொஞ்சம் சுமார்தான்.. உன் அளவுக்கு அத்தைக்கு கைப்பக்குவம் இல்ல போல..” என்று வழக்கம்போல் திலகவதியை வெறுப்பேற்ற..
‘வாடா இந்த பக்கம்..” என்று சூர்யாவை அதட்டி தனியே அழைத்து வந்த ஆதவன்.. ‘திலகாவே உன்னை வில்லன் ரேன்ஜிக்கு பார்த்திட்டிருக்கு.. நீ இன்னும் கொஞ்சம் எரியறதுல எண்ணையை ஊத்துற..” என்றான்.
‘ஹ..ஹ.. நான் எண்ணை ஊத்தலன்னாலும் அவ எரிச்சலடங்குறதுக்கு வருச கணக்காகும்..” என்றான் சிரிப்போடு.
மேலும் ஒருமணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தவர்கள் பிறகு திலகவதியின் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.
சூர்யா குடும்பத்தினர் கிளம்பியதும்.. அக்கம் பக்கத்தினர் ‘இவளுக்கு வந்த வாழ்கையை பார்த்தியா…? இரண்டாந்தாரம்ன்னாலும் புளியங்கொம்பா எப்படி பிடிச்சிருக்கா.. ஊமைமாதிரி இருந்திட்டு டாக்டரையே மடக்கி போட்டுட்டா..” என்று சொல்லவும்.. திலகவதியின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது.
‘யாரோ என்னவோ சொல்லட்டும்.. நீ அழாதக்கா..” என்றான் பாலா.
‘செத்து போய்டலாம்போல இருக்கு பாலா..” என்று பாலாஜியை கட்டிக்கொண்டு அழவும்.. தன் அக்கா இதுபோல் முடிவெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன்..
‘நீ செத்துட்டின்னா நானும் செத்துடுவேன்க்கா.. அப்புறம் அம்மாதான் அநாதையா இருப்பாங்க..” என்று எச்சரிக்கையாகவும்.. உறுதியாகவும் சொல்லி தன் அக்காவின் கண்ணீரை துடைத்தவன்.. திருமணநாள் வரை பாலாஜி திலகவதியின் நிழலாய் இருந்தான்.
திலகவதியின் திருமணம் பற்றி மூர்த்தி நவீனிற்கு தெரிவிக்கவும்.. மிகுந்த சந்தோசமடைந்தான் நவீன். ‘அப்பா.. ஒரு முக்கியமான கேசிருக்கு.. பசங்களுக்கும் பரிட்ச்சை டைமா இருக்கு.. அதோட ரிங்க்குவுக்கும் தனியா வரதெரியாது.. இப்போ கல்யாணத்துக்கு என்னால வரமுடியாது.. நம்மஊருக்கே டிராஸ்ஃ பர்க்கு ஏற்பாடு செய்திருக்கேன்.. அநேகமா அடுத்தமாசம் கிடைச்சிடும்னு நினைக்கிறேன்.. டிரான்ஸ்ஃ பர் கிடைச்சதும் நாம எல்லாரும் ஒன்னா இருந்துக்கலாம்..” என்று நவீன் சொல்ல.. மிகுந்த சந்தோசமடைந்தார் மூர்த்தி.
அடுத்து வந்த ஒன்பதாம் நாளில் சூர்யாவிற்கும்.. திலகவதிக்கும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் திருமணம் முடிந்தது. சூர்யா திலகவதியின் கழுத்தில் பொண்தாலிக் கொடியை அணிவிக்க.. திலகவதிக்கு பிரசாத்தின் நினைவு வர மீண்டும் அழுதாள். திலகவதியின் அம்மா அவளின் கண்ணீரைத் துடைக்க வரவும்..
‘ம்ஹ_ம்…” என்று அவர்களை தடுத்தவன்.. தானே தனது பாக்கட்டிலிருந்து கர்ச்சீபை எடுத்து அவளின் கண்களை துடைக்க போகவும்.. அத்தனை வேகமாக முகம் திருப்பினாள்.
‘சரி.. இந்தா நீயே துடைச்சிக்கோ..” என்று கர்சீப்பை நீட்டினான் சூர்யா.
அமைதியாகவே நின்றிருந்தாள். மறைந்திருந்து அவர்களின் திருமணத்தை பார்த்த மூர்த்தி.. தன் தோளில் கிடந்த துண்டை திலகவதிக்கு அருகில் நீட்டவும் நிமிர்ந்து பார்த்தவள்.. ‘அப்பா…” என்று மூர்த்தியின் காலில் விழுந்து அழுதாள்.
‘அழாதம்மா எழுந்திரு.. எல்லாம் உன் நல்லதுக்குத்தான்..” என்று திலகவதியை தூக்கிவிட்டவர்.. அவளின் கண்களை தனது துண்டால் துடைத்துவிட்டு..
‘வா…” என்று சூர்யாவின் வீட்டிற்கு தானும் திலகவதியோடு சென்றார்.
கீர்த்தி ஆரத்தியெடுத்து உள்ளே அனுப்பினாள். ‘விளக்கேத்து திலகா..” என்று கீர்த்தி சொல்லவும்.. மீண்டும் அமைதியாகவே நின்றாள். பிறகு மூர்த்தி கால்மணிநேரம் வரை பேசி..
‘திலகவதி நல்ல பொண்ணாச்சே.. சாமிக்கு விளக்கேத்த இப்படி தயங்கலாமா..? வா..” என பரிவோடு அழைத்துச்சென்று விளக்கேற்ற வைத்தார்.
‘திலகாவை உள்ளே கூட்டிட்டுப்போ கீர்த்தி..” என்றவர்.. அவர்கள் சென்றதும். கமலாவைப் பார்த்த மூர்த்தி.. அவரின் முகத்தில் இந்த கல்யாணத்திற்கான அதிருப்தியை பார்த்து.. ‘பத்துநாள் கூட திலகவதியை பார்க்காம இருக்க முடியலை.. சின்னபொண்ணாட்டம் எங்களையே சுத்தி சுத்தி வருவா.. ரொம்ப நல்லபொண்ணு.. திலகாவை போகப்போக நீங்களே புரிஞ்சிப்பிங்க..” என்று கமலத்திடம் எடுத்துரைத்து..
‘நான் கிளம்பறேன்..” என்று சொல்ல..
‘இருங்கப்பா சாப்டுட்டு போவிங்க..” என்று சூர்யா சொல்ல..
சூர்யாவை கட்டியணைத்த மூர்த்தி.. ‘திலகாக்கு வாழ்க்கை கொடுத்து என் நெஞ்சில பாலை வார்த்திருக்க.. என் மனசெல்லாம் நிறைஞ்சி கிடக்கு.. என்னால இப்போ சாப்பிடமுடியாது..” என சந்தோசித்து..
‘திலகா உன்னைப் புரிஞ்சிக்காம உன்மேல ரொம்ப கோபத்தில இருக்கா.. சின்னபொண்ணுதான..? கொஞ்சம் அனுசரிச்சிப் போ சூர்யா..” என்று சொல்லி கிளம்பினார்.
சூர்யாவின் வீட்டை பிரம்மிப்பாய் பார்த்திருந்தான் பாலாஜி. அவனிடம் வந்த சூர்யா.. ‘என்ன சாப்பிடற பாலா…?” என்றான் சூர்யா.
‘நீங்க ரொம்ப பெரிய பணக்கார குடும்பமா மாமா…?” என்றான் பிரம்மிப்பாய்.
‘ஆமாம் பணக்கார குடும்பம்தான்.. ஆனா நாங்க பரம்பரை பணக்காரங்க கிடையாது. நானும் என் அண்ணனும் நல்லா படிச்சதனால வந்ததுதான் இந்த பணம்.. நீயும் நல்லா படிச்சி என்னையை விட பெரிய பணக்காரனா ஆகப்போற.. அதுசரி.. ப்ளஸ்டூ எக்சாம் எப்படி எழுதியிருக்க..?” என்று கேட்டு அவனிடம் நிறைய பேசி அவனை சகஜமாக்கினான்.
பிறகு திலகவதியின் அம்மா முகத்தை பார்த்தவன்.. அவர்களிடம்.. ‘எந்த அழைப்பும் வேண்டாம்.. எந்த சாங்கியமும் வேண்டாம்.. உங்க பொண்ணோட மனநிலை எனக்கு புரியாம இல்ல.. நீங்க கவலைப்படாதிங்க அவ சங்கடப்படறமாதிரி இங்க எதுவும் நடக்காது..” என்று அவர்களின் சங்கடத்தை போக்கினான். ஒரு மணிநேரம் சூர்யாவின் வீட்டில் இருந்தவர்கள்.. பிறகு கிளம்பினார்கள்.
மதியம் சாப்பிட திலகவதியை அழைக்க.. வேணாம் என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டாள். சூர்யாவின் ரூமில்தான் திலகவதி இருந்தாள். ஆனால் அது சூர்யாவின் அறையென்று அவளுக்கு தெரியாது.. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவும் இல்லை.. இரவு ஏழு மணியாகியும் அந்த ரூமைவிட்டு திலகவதி வெளிவரவும் இல்லை.
காலையில் இருந்து அலைச்சல் என்பதால் ஆதவன்.. ’கீர்த்தி எனக்கு தூக்கம் வருது.. எனக்கு டிஃ பன் கொடு நான் சாப்பிட்டு தூங்கறேன்..” என்று சொல்ல..
‘அண்ணி அம்மாவையும் கூப்பிடுங்க.. எல்லாருமே சாப்பிட்டு தூங்கலாம்.. எனக்கும் டையர்டாத்தான் இருக்கு..” என்றான் சூர்யா.
‘திலகா காலைலயிருந்து இன்னும் சாப்பிடல சூர்யா..” என்று கீர்த்தி சொல்லவும்.. ‘நான் அவளை ரூம்லயே சாப்பிட வச்சிக்கிறேன்.. நீங்க வாங்க நாம சாப்பிடலாம்..” என்று சூர்யா சொல்லவும் அனைவரும் சாப்பிட்டனர்.
நான்கு இட்லி.. ஒரு டம்ளர் பாலோடு சூர்யா ரூமினுள் வந்தான். இட்லியையும் பாலையும் டேபிளில் வைத்துவிட்டு கதவை தாழ்போடவும்தான்.. அந்த சத்ததத்தில் அதிர்வுடன் நிமிர்ந்து சூர்யாவை பார்த்தாள் திலகவதி.
‘நா..ன் .. நா.. வெளியே படுத்துக்கிறேன்..” என்று திணறினாள்.
‘பயப்படாத முதல்ல ரிலாக்சா இரு..” என்று கனிவாக சொன்னவன்.. ‘சாப்பிடு..” என்று டேபிளுக்கு அருகில் இருந்த சேரில் அவளை கைபிடித்து அமர வைத்தான்.
‘விடுங்க.. என்னை..” என்று ஆத்திரமாய் தன் உடலை உதறினாள்.
‘இந்த இட்லியை சாப்பிட்டு பாலை குடிச்சிட்டின்னா.. நான் உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. நீயும் நிம்மதியா தூங்கலாம்..” என்றான் கட்டளையாக.
‘சாப்பிடலன்னா.. என்ன பண்ணுவிங்க..?” என்று பயத்தில் தடுமாறினாள்.
‘சாப்பிடலன்னா.. நானே உனக்கு ஊட்டிவிடுவேன்..” என்று இட்லியை கையில் எடுக்கவும்.. ‘வேணாம் வேணாம்.. நானே சாப்பிடறேன்..” என்று சாப்பிட்டாள்.
சூர்யா பாலை கையில் எடுக்கவும்.. ‘எனக்கு வேணாம்.. வயிறு நிறைஞ்சிடுச்சி..” என்றாள் தலைகுனிந்தபடி.
‘பாதியாவது குடி..” என்று டம்ளரை நீட்டினான். திலகவதி வெறுப்போடு பார்க்கவும்.. அவளருகில் நெருங்கி.. ‘நீயா குடிக்கிறியா..? இல்ல..“ என இன்னும் கொஞ்சம் நெருங்கி நிற்க்கவும்.. பதறியவள் குடிக்கிறேன் என்பதுபோல தலையசைத்து டம்ளரை வாங்கி..
இயலாமையில் வந்த கண்ணீரோடு குடித்து கொண்டிருக்கும்போதே… அவளிடமிருந்து டம்ளரை பிடுங்கியவன்.. ஆழ்ந்த பார்வையோடும் கள்ளச்சிரிப்போடும் மீதிப்பாலை குடிக்கவும்.. பேரதிர்ச்சியோடும் தடுமாற்றத்தோடும் தலைகுனிந்தாள்.
தன்னை வில்லனைப்போல் பாவிக்கும் திலகவதியை பார்த்தவன்.. நானும் ரௌடிதான் போல என்ற நினைப்பு வர.. கொஞ்சம் சத்தமாக சிரித்து.. ‘தூங்கு..” என்றான் கரிசனையாக.
கீழே படுக்கப்போனாள். ‘மேல வந்து படு..” என்றான் கட்டளையாக.
அருகில் இருந்த சோபாவிற்கு போனாள். ‘இங்க கட்டில்ல வந்து படு..” என்றான்.
‘இல்ல.. வேணாம்…” என்று திணறினாள்.
‘இவ்ளோ பெரிய கட்டில் இருக்கு.. நீ அந்தபக்கம் படுத்துக்கோ.. நான் இந்தபக்கம் படுத்துக்கிறேன்.. நான் சொல்றமாதிரி நீ கேட்டின்னா.. நீ தூங்கறதுக்கு முன்னாடியே நான் தூங்கிடுவேன்.. இல்லன்னா நீ கட்டில்ல வந்து படுக்கிறவரைக்கும் உன்கூட எதாவது பேசிட்டேதான் இருப்பேன்.. அதுவும் இப்படி பக்கத்தில உக்கார்ந்துகிட்டு..” என்று அவள் பக்கத்தில் வந்தான்.
‘இல்ல.. நான் தூங்கறேன்..” என்று கட்டிலில் ஓரமாய் படுத்துக்கொண்டாள். லைட்டை அணைத்தவன்.. கட்டிலின் மறுபுறம் படுத்து அமைதியாய் கண்மூடினான்.. திலகவதியின் நெற்றியில் வெகு நாட்களுக்கு பிறகு இருந்த பொட்டும்.. தலையில் சூடியிருந்த மல்லிகையும்.. சூர்யாவிற்கு பெருத்த நிறைவை கொடுக்க.. சந்தோசத்தில் சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டான்.
நீ தூங்கிட்டா நல்லவன்னு மத்தவங்க மாதிரி நானும் நம்பிடுவேன்னு நினைக்கிறியா..? நீ எவ்ளோ கெட்டவன்னு எனக்கு மட்டும்தாண்டா தெரியும்.. உண்மை ஒரு நாளைக்கு வெளில வராம போகாது.. நண்பன் செத்ததும் அவன் பொண்டாட்டிமேல ஆசைப்பட்ட உனக்கு அந்த கடவுள் தகுந்த தண்டனைக் கொடுப்பார்.. என்று நினைத்து பெருகிய கண்ணீரோடு மனம் வெம்பியவளாய் வெகுநேரம் விழித்துக்கொண்டிருந்த திலகவதி.. நள்ளிரவைத் தாண்டித்தான் தூங்கினாள்.