அலையில் பூத்த மலர்..
அத்தியாயம்.. 11
‘அத்தை மாமால்லாம் எங்கண்ணி இன்னும் காணோம்..?” என சூர்யா கேட்க..
‘அவங்க வர ஐடியால இல்லன்னு நினைக்கிறேன் சூர்யா..” என்றவள் தன் கொழுந்தனை தனியே அழைத்து வந்து.. ‘என் சித்தப்பா பொண்ணை உனக்கு பேசலாம்னு இருந்தாங்கள்ல..? இப்போ நீ திடீர்ன்னு திலகாவை கல்யாணம் செய்ததுல அப்பாக்கு கொஞ்சம் மன வருத்தம்.. அப்பாவை மீறி அம்மா எதுவும் செய்யமாட்டாங்க.. காலைல கூட உங்கப்பா கூட்டிட்டு வரமாதிரி தெரியல கீர்த்தின்னு அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க..” என்று கீர்த்தியும் வருந்த..
‘ப்ச்.. இதென்னங்கண்ணி..? கல்யாணம்ங்கிறது என்னோட தனிப்பட்ட விசயம்..” என்று தளர்வாய் சொல்ல..
‘அதுக்காக நான் கூப்பிட்டும் உங்கப்பாம்மா வரலன்னா அப்புறம் எனக்கென்ன மரியாதை இருக்கு..?” என்றபடி ஆதவன் கோபமாய் வந்து நிற்க்க..
‘இதுல நீங்க கோபப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல.. என்னதான் ரிஜிஸ்தர் மேரேஜ்ன்னாலும் எங்கப்பாம்மாக்காவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கனுமில்ல..? அப்போ சொல்லாம விட்டுட்டு இப்போ பார்ட்டிக்கு கூப்பிட்டா உடனே அவங்க வந்திடனுமா..?” என்று கீர்த்தியும் கோபம் காட்ட..
‘ஏய்.. சூர்யா கல்யாணம் எந்த சூழ்நிலைல நடந்ததுன்னு அவங்களுக்குத்தான் தெரியாது.. உனக்குமா தெரியாது..? நீ எடுத்து சொல்லலாமில்ல..?” என்று ஆதவன் ஆதங்கப்பட..
‘ப்ச்.. நான் சொன்னேன் ஆது.. அந்த பொண்ணைவிட என் தம்பி பொண்ணு எந்த வகையில குறைஞ்சவன்னு எங்கப்பா சண்டைக்குத்தான் நிக்கிறாரு.. கொஞ்சம் கூட புரிஞ்சிக்கமாட்டறாரு.. நான் என்ன செய்ய..?” என்றாள் சலிப்பாக.
ஆதவன் ஏதோ சொல்லவரவும்.. ‘விடு ஆதவா.. அவங்க பண்றதுக்கு அண்ணிகிட்ட ஏன் கோபத்தை காட்ற..? மாமாவும் அத்தையும் உன்மேல எவ்ளோ மதிப்பு வச்சிருக்காங்கன்னு உனக்கு தெரியாதா..? கொஞ்ச நாளுக்கப்புறம் அவங்க கோபம் தணிஞ்சிடும்.. என்னால நீங்க சண்டை போட்டுக்காதிங்க..” என்று சூர்யா ஆதவனை அமைதிப்படுத்த..
‘எனக்கொன்னுமில்ல சூர்யா.. உன் மாமனாரும் மாமியாரும் நாளைக்கு வந்திடுவாங்கள்லன்னு அம்மா நேத்தே அத்தனை முறை கேட்டாங்க.. அம்மாக்காவது அவங்க மதிப்பு கொடுக்கனுமில்ல..?” என்று கோபமாக கேட்டு..
‘இப்படியே கடைசிவரை இருந்திடுவாங்களான்னு நானும் பார்க்கிறேன்..” என்றான் கோபமாக.
‘அப்பாம்மா இன்னைக்கு வரமாட்டங்கன்னு அத்தை மனசு சங்கடப்படாத மாதிரி பேசி அவங்களுக்கு புரிய வச்சிட்டேன்.. அத்தையும் என்னை தப்பா நினைக்கல.. நீங்கதான் இப்போ தையா தக்கான்னு குதிக்கிறிங்க..” என்று கீர்த்தி கண்கலங்க..
‘எதுக்கு இப்போ தேவையில்லாம அழற..” என்று கடுகடுக்க..
‘பின்ன என்ன..? அத்தைக்கு மரியாதை குறைவா நான் நடந்துப்பேனா..? இது என் குடும்பமில்லையா..? என் வீட்டு ‡பங்சனுக்கு என் அப்பாம்மா வராதது எனக்கு மட்டும் கஷ்டமா இருக்காதா..? அவங்க பண்றதுக்கு என்கிட்ட முகத்தை காட்றிங்க..?” என்று கோபமாக கேட்டு..
‘நான் கொஞ்சம் பிரஸ்சர் கொடுத்திருந்தா கண்டிப்பா அப்பா வந்திருப்பாரு.. ஆனா இங்க வந்து திலகாவை எதாவது இளப்பமா சொல்லிடுவாருன்னு பயந்துதான் அவங்க வராததே நல்லதுன்னு விட்டுட்டேன்..” என்று தளர்வோடு சொல்ல..
இந்த ஆங்கிள்ல நாம யோசிக்கலயே என யோசித்தவன்.. ‘சரி.. சரி.. விடு..” என்று மனைவியின் கண்களை துடைக்கவர..
‘ஒன்னும் வேணாம் போடா..” என்று என்றுமில்லாமல் இன்று சூர்யாவின் அருகாமையிலேயே தன்னை மறந்து கணவனிடம் கோபம் காட்டி கீர்த்தி அவ்விடம் விட்டு அகல…
‘இப்படி வேற கதை ஓடிட்டிருக்கா..?” என்று சூர்யா சிரிக்க..
‘எப்பவும் செல்லமாத்தான் சொல்லுவா.. இன்னைக்குத்தான் கோபமா செல்லிட்டுப் போறா..” என்று ஆதவன் அசடுவழிய..
‘ரொம்ப வழியுது.. போய் முகத்தை கழுவு..” என்று சிரிப்போடே சூர்யா ஆதவனை கிண்டல் செய்துகொண்டிருந்தான்.
ஹாலில் ஒரு மூலையில் திலகவதி நின்றிருக்க.. தனதறையில் இருந்து அப்பொழுதுதான் வெளியே வந்த கமலம் திலகாவைப் பார்வையிட..
இளஞ்சிவப்பு நிறத்தில்.. சின்ன சின்ன எம்பிராய்டரியோடு திலகவதியின் சுடிதார் சாதாரணமாக இருக்க.. நடுவே சிவப்பு கல்லோடு.. வெண்கற்க்கள் பதித்த கம்மல் காதோடு ஒட்டியிருக்க.. எப்பொழுதும் அவள் போட்டிருக்கும் மூக்குத்தி போட்டிருந்தாள். நான்கு நாள் முன்புதான் இவளுக்கு திருமணம் ஆனதென்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.. முகத்தில் அத்தனை சோகத்தோடும்.. யார் என்ன சொல்வார்களோ என்ற தவிப்போடும் தன் துப்பட்டாவை பிசைந்தபடி நின்றிருந்தாள்.
தனது வீல்சேரை தள்ளிக்கொண்டு திலகவதியிடம் வந்தவர்.. ‘கீர்த்தி..” என்றழைக்க.. தன்னருகே வந்த கீர்த்தியிடம்.. ‘பூ வாங்கலயா..? என்ன இரண்டுபேர் தலையிலும் பூவே இல்ல.. நாளுங்கிழமையுமா சுமங்கலிப் பொண்ணுங்க இப்படித்தான் இருப்பிங்களா..?” என கடிய..
‘திலகவதி பூ வேணாம்ங்கும்போது நான் மட்டும் எப்படி வச்சிக்கிறதுன்னுதான் வச்சிக்கிலங்கத்தை…” என்று கீர்த்தி திலகாவை போட்டுக்கொடுக்க..
திலகவதியை முறைப்போடு பார்த்த கமலம்.. ‘ஏன் பூ வேணாம்னு சொன்ன..? சுமங்கலிங்க பூ வேணாம்னு சொன்னா புருசனுக்கு ஆகாது.. என் மகன் நல்லயாயிருக்க வேணாமா..?” என அதட்டலோடு கேட்க..
திலகவதி கண்கலங்க.. ‘போய் பூ எடுத்திட்டு வா கீர்த்தி..” என்று கமலம் சொல்ல.. அளவான பூவை தன் கூந்தலில் சூடிக்கொண்ட கீர்த்தி.. மீதத்தை திலகவதியின் கூந்தலில் சூடிவிட.. திலகவதியின் கண்கள் கண்ணீரை வெளியனுப்ப..
இத்தனை நேரம் ஆதவனோடு பேசிக்கொண்டிருந்த சூர்யா வெளியே வர..
சூர்யாவைப் பார்த்த கீர்த்தி என்றுமில்லாமல் தடுமாற்றத்தோடு முகத்தை திருப்ப.. தன் அண்ணியின் அருகில் வந்தவன்.. ‘என் பொண்டாட்டிக்கும் அவ புருசன்கிட்ட இப்படி உரிமையா சண்டைபோட கத்துக்கொடுங்க..” என்று சிரிக்க..
‘ஆச தோச..” என முறுக்கியவள்.. ‘சின்ன புள்ளையை மிரட்டி கல்யாணம் செய்ததில்லாம.. அதுக்குள்ள உரிமை சண்டை கேக்குதா..? அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு சூர்யாதம்பி..” என்று சிரிப்போடே கெத்தாக சொல்ல..
‘எத்தனை நாளென்றாலும் அடியேன் காத்திருக்கிறேன்.. இருப்பினும் எனது காத்திருப்பு வருடங்களாக மாறாமல் இருக்க நீங்களும் ஒத்துழைப்பீர்களாக..” என்று பவ்யமாய் சொன்னவன்.. தலைநிறைய பூ வைத்திருக்கும் திலகவதியை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
கீர்த்தி தன் அத்தையால்தான் என கண்களால் சைகை செய்ய.. சந்தோசத்தோடு தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டவன்.. பின் மனைவியைப் பார்க்க.. திலகாவின் கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்ததும் பெருகிய சந்தோம் வடிந்திட.. தன்; அன்னையும் அண்ணியும் அருகே இருப்பதால் தன் கோபத்தை உள்ளடக்கி..
‘பார்ட்டிக்கு எல்லாம் ரெடியா அண்ணி..?” என இயல்பாய் கேட்க..
கீர்த்தி.. ‘ரெடி சூர்யா..” என்று சொல்லவும் வாசலில் மருத்துவமணை ஊழியர்கள் வந்திறங்க.. ‘அண்ணி அவங்களை பாருங்க.. நான் வந்திடறேன்..” என்று சொல்ல..
கீர்த்தி வெளியேறியதும்.. ‘எல்லாரும் வந்திட்டாங்க அழாத..” என்று பல்லைக்கடிக்க.. தன் கண்ணீர் மறைக்க திலகவதி தலைகுனிய.. அதற்குள் உள்ளே வந்தவர்களை ‘வாங்க.. வாங்க சிஸ்டர்..” என்று சூர்யா இன்முகமாக வரவேற்க்க..
இதற்க்கு மேல் கணவன் மனைவிக்கிடையே தாம் எதற்க்கு என நினைத்தவராய் உணவு பதார்த்தங்களை பார்வையிட சென்றார் கமலம்.
‘சார்.. அன்னைக்கு பார்த்தவங்களா இவங்க..? உங்களை கல்யாணம் பண்ணினதுக்கப்புறம் செம்ம அழகாய்ட்டாங்க..” என்று செவிலியர் சொல்ல..
‘அதெல்லாம் ஒன்னுமில்ல சிஸ்டர்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே இவங்க அழகுதான்.. முகம் மட்டும் இல்ல.. குணத்திலயும் ரொம்ப அழகானவங்க.. அதனாலதான் நான் இவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்று சொல்லி பெருமையாகவும்.. காதலாகவும் பார்த்தான் தன் மனைவியை.
‘சார்.. உங்களுக்கு இப்படியெல்லாம்கூட லுக்குவிட தெரியுமா..?” என்று கேளியும்.. கிண்டலும்.. சந்தோசமுமாய் செவிலியர்கள் கேட்க..
‘முன்னல்லாம் தெரியாது.. இப்போ தானா வருது..” என்றான் மீண்டும் காதல் பார்வையோடு.
ஏனோ தியா அழுதுகொண்டே இருக்க.. இத்தனை நேரம் வெளியே விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த ஆதவன்.. ‘சூர்யா பாப்பா ரொம்ப அழறா.. கொஞ்சம் என்னன்னு பாருடா..” என்று சூர்யாவிடம் வர..
குழந்தையை சூர்யா வாங்க.. தியா திலகவதியிடம் தாவ.. ‘உன்கிட்டதான் வரனுமாம்.. பொண்ணுமாவைப் பிடி..” என்று குழந்தையை கொடுக்க..
திலகவதியிடம் சென்ற தியா.. தன் அழுகையை நிறுத்தி அவளின் ஒருபக்க பூவை எடுத்து முன்னே விட்டு விளையாட.. குழந்தை அழுகையை நிறுத்தியதும் ஆதவன் அவ்விடம் விட்டு நகர.. திலகவதியின் கண்ணீர் அவளின் பூவினில் பட்டுத்தெறிக்க..
‘கொஞ்சம் முன்ன மெட்டி போட்டதும் நீ அழுததால உன் காலுக்கு முத்தம் கொடுத்தேன்.. இப்போ பூ வச்சிக்கிட்டதுக்கு அழுதினா.. இந்தப் பூ உன் உடல்ல எங்கெல்லாம் படுதோ.. அங்கெல்லாம் முத்தம் கொடுப்பேன்..” என்றான் அவளின் மார்பை தொட்டிருந்த மலர்சரத்தை பார்த்தவாறே.
திலகவதி அதிர்ச்சியில் விழிவிரிக்க.. ‘இத்தனை பேர் முன்னாடி நீ அழுத.. நீ விடற ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும்.. இன்னைக்கு நைட் பதில் கொடுக்காம உன்னை தூங்க விடமாட்டேன்..” என்றான் அழுத்தமாக.
திலகவதியின் கைகள் தன்போல் துப்பட்டா கொண்டு கண்களைத் துடைக்கப் பார்க்க.. அதை தடுத்த சூர்யா தன் கைக்குட்டையை நீட்ட.. பயத்தில் மறுப்பின்றி வாங்கிக்கொண்டாள்.
திலகவதியை ஏதே மிரட்டுகிறான் என்றறிந்த ஆதவன்.. ‘சூர்யா.. அத்தையும் பாலாவும் ஏன் இன்னும் வரல..?” என கேட்க..
மனைவியை விடுத்து ஆதவனிடம் வந்தவன்.. ‘இவளுக்கு மேல அவங்கம்மா இருக்காங்க ஆதவா.. நான் எத்தனை வற்புறுத்தியும்.. இங்க எல்லாரும் பெரிய பெரிய மனுசங்களா வருவாங்க.. எனக்கு சங்கடமா இருக்கும்.. நான் வரல.. பாலா வருவான்னு சொல்லிட்டாங்க..“ என்றான் வருத்தத்தோடு.
சூர்யா இந்தப்புறம் வந்ததும் செவிலியர்கள் திலகாவை சூழ்ந்துகொள்ள.. சிரிக்கவில்லை என்றாலும் சூர்யாவின் மிரட்டலுக்கு பயந்து.. அவர்களின் கேள்விக்கு முகம் சுழிக்காமல் தலையசைப்பை பதிலாய் கொடுத்தாள்.
பிறகு டாக்டர்கள் வரவும்.. இன்னும் அழுகிறாளா என மனைவியைப் பார்த்தவன்.. ஆசுவாசப்பட்டவனாய்..
‘வாங்க கேசவ்.. வாங்க மிருனாளினி.. வாங்க மோகன்..” என உற்ச்சாகமாய் வரவேற்க்க.. பின்னே வந்துகொண்டிருந்த எழுபத்திஆறு வயதான திருநாவுக்கரசு டாக்ட்டரைப் பார்த்தவன்..
‘ஆதவா..” என்று உற்ச்சாகத்தோடு அழைத்து.. ‘வாங்க சார்.. வாங்க வாங்க..” என்று அவரின் காலில் அடிபணிந்தவன்.. ‘ஐம் வெரி ப்ரௌவ்ட் டு ஹேவ் யு ஹியர் சார்..” என்றான் பவ்யமாகவும் பெருமையாகவும்.
‘சூர்யா.. உன் மரியாதையெல்லாம் எனக்கு தேவையில்லை.. என் பேத்தியைக் காட்டு..” என்று அந்த மூத்த டாக்டர் தமிழில் பேச.. சூர்யா ஆச்சர்யமாய் விழிவிரிக்க..
அறுபது வயதிற்கு மேல் இருக்கும் ஹாஸ்பிட்டல் டீன்.. ‘திலகவதிப்பத்தி சார்கிட்ட இப்போதான் சொல்லிட்டிருந்தேன் சூர்யா.. அதான் சார் தமிழ்ல பேசுறார்..” என்று சிரித்துக்கொண்டே சொல்ல..
‘திலகா இங்க வா..” என்றான் சிரிப்போடே.. திலகவதி தயக்கத்தோடும் தவிப்போடும் பார்க்க.. சூர்யா தன் அண்ணியைப் பார்க்க.. கீர்த்தி திலகாவின் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.
முதலில் தன் அன்னையை அறிமுகம் செய்தவன்.. பிறகு ஆதவன் கீர்த்தியை அறிமுகம் செய்து.. பின் திலகாவை அறிமுகம் செய்ய.. டாக்டர் கைகுலுக்க தன் கையை நீட்;ட.. திலகவதி தன்னிரு கரம் கூப்பி வணக்கம் வைக்க..
‘கைகொடு திலகா..” என்று சிரிப்போடே சூர்யா கடிய..
‘ஹே பரவால்ல மேன்..” என்ற டாக்டர் தானும் சிரிப்போடே வணக்கம் வைத்தார்.
சூர்யாவிடம்.. ‘பெரிய சர்ஜன்.. ஆனாலும் என் பேத்தி பக்கத்தில நிக்கிற தைரியம் இன்னும் வரல… இல்லையா சூர்யா..?” என திருநாவுக்கரசு டாக்டர் சிரிப்போடு கேட்க..
திலகவதியின் பக்கத்தில் சூர்யா வீராப்போடு நெருங்கி நிற்க்க.. திலகவதி நெளிய.. ‘ரொம்ப மிரட்டுறானா..?” என்றார் சூர்யாவை முறைத்தபடி.
திலகவதி அமைதியாய் நின்றிருக்க.. ‘உன்கிட்டதான் கேட்குறார்.. என்னைப் பத்தி என்ன சொல்லனுமோ சொல்லு..” என்றான் சிரிப்போடு.
இல்லை என்பதாய் திலகவதி தலையாட்ட.. கமலம் ஹோமிலிருந்து அனைவரும் வரவும்.. ‘வித் யுவர் பர்மிசன் சார்..” என்றவன்.. அவர்களை வரவேற்க்க நகர..
‘உக்காரும்மா.. “ என்று தான் அமர்ந்திருந்த சோபாவின் பக்கத்து இடத்தை காண்பிக்க.. திலகவதி தயங்க..
‘நீ எனக்கு பேத்தி போல.. உக்காரும்மா..” என்று மீண்டும் சொல்ல.. சிறு தயக்கத்தோடே திலகவதி அமர..
‘சூர்யா ரொம்ப நல்லவன்.. என்று ஆரம்பித்தவர் அவனின் சேவை மனப்பான்மை.. ஊனமுற்றோர்களை படிக்க வைப்பது.. முதியோர் இல்லம் நடத்துவது போன்ற விசயங்களை சொல்ல.. திலகவதி நம்மாத பார்வை பார்க்க..
‘அங்க வந்திருக்கிறவங்க யார் தெரியுமா..?” என திலகாவிடம் கேட்க.. கமலம் இல்ல நிர்வாகியோடு அங்கு பணிபுரிபவர்கள் என அனைவரும் கமலத்திடம் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்க..
‘நான் சொன்ன முதியோர் இல்லத்தையும் ஊனமுற்றோர் இல்லத்தையும் அவங்கதான் பார்த்துக்கிறாங்க.. சூர்யாவோட நானும் ஒருநாள் இல்லத்துக்கு போயிருந்தேன்.. அங்க போனதுக்கப்புறம்தான்.. சூர்யாமாதிரி எனக்கொரு மகன் இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்..” என்றார் பெருமையாக.
(உண்மையில் அந்த இடம் திருநாவுக்கரசு டாக்டரோடதுதான்.. முதலில் வாடகைக்குத்தான் கேட்டான் சூர்யா. ஒரு வருடம் பக்கம் வாடகையும் கொடுத்து வந்திருந்தான். பிறகு ஒருநாள் இல்லத்தை காண விருப்பம் தெரிவிக்கவும் திருநாவுக்கரசை அழைத்து வந்திருந்தான்.. சூர்யா இல்லம் நடத்தும் பாங்கையும் அதற்காக அவன் செலவிடும் தொகையும் கனித்துப் பார்த்தவர்.. அவனின் பாதி வருமானம் இதற்கே போய்விடும் எனப்புரிந்தவராய்.. வாடகை வேண்டாமென சொல்லிவிட்டார்.