அத்தியாயம் — 2
வீடே விழாக்கோலமாய் காட்சியளித்தது.. இன்று அதிகாலையில் மனைவி என்ற ஸ்தானத்தை அடைந்த திலகவதி.. புதுமஞ்சள் கயிற்றில் பொன்தாலி மிளிர.. நிறைந்த சந்தோசத்தோடும் சிறு மிரட்சியோடும் காணப்பட்டாள். திலகவதியை மணம்முடித்த பிராசாத்துக்கோ அவளைப் பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது. அம்மா ‡போட்டோவுல காட்டும்போது கொஞ்சம் பெரிய பொண்ணுமாதிரிதான இருந்தா.. இருபத்திஒரு வயசுன்னு நம்ம அம்மா சொன்னதை நம்பினதுதான் நான் செய்த பெரிய தப்பு.. என்று நினைத்து தவித்திருந்தான்.
பிரசாத் முப்பது நாள் விடுப்பில் வந்திருந்தான். அவன் இம்முறை வரும்போது திருமணம் செய்துகொண்டால்தான் உன்னை மறுபடியும் வேலைக்கு போகவிடுவேன் என்று அவனின் அம்மா கண்ணீரோடு அன்பு கட்டளையிடவும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டான்.
அதுவும்.. உனக்கு பிடிச்ச மாதிரியே பொண்ணு பார்த்திருக்கேன் பிரசாத்.. நான் பார்த்திருக்கிற பொண்ணு வசதி கிடையாது. சீதனமா எதுவுமே வேணாம்னு நீ சொன்னமாதிரியே சொல்லிட்டேன்.. திலகாவோட அப்பா.. அவளோட பதிமூனு வயசிலயே தவறிட்டாராம்.. கூடப்பிறந்த தம்பியோட சேர்த்து.. அவங்க அம்மா மட்டும்தான். அவங்க ஏழ்மையை பார்த்து ரொம்ப வயசானவனெல்லாம் இரண்டாந்தாரமா பொண்ணு கேக்கிறான்னு அவளோட அம்மா ரொம்ப அழுதாங்க.. உன் பொண்ணை நாளைக்கு கூட்டிட்டுவான்னு சொன்னேன்.. அவளை பார்த்ததும் எனக்கு பிடிச்சிருச்சி.. என்று அவனின் அம்மா சொன்னதை நினைத்துப்பார்த்திருந்தான்.
ஊருக்கு வந்த பிரசாத்திற்கு வருங்கால மனைவியை மனம் முடிக்கும்முன் ஒருமுறை நேரில் பார்க்கும் ஆவல் தோன்ற.. நவீனை அழைத்துக்கொண்டு திலகவதியின் வீட்டிற்க்கு சென்றான்.
இருவரில் யார் மாப்பிள்ளை என்றறியாத திலகவதி.. ‘உங்கள்ல நான் யாரை கல்யாணம் செய்துக்கப்போறேன்..?” என்று பிரசாத்திடமே வெள்ளந்தியாய் கேட்கவும்..
திலகவதியின் சந்தேகத்தை சகித்துக்கொண்டாலும்.. அவளின் சிறுபிள்ளைத்தனம் பிரசாத்திற்கு அதிர்ச்சியைக் கொடுக்க.. திலகவதிக்கு பதில் பேச முடியாமல்.. அவளின் அன்னையிடம்..
‘இப்போ எங்களோடவே வீட்டுக்கு வாங்க.. நான் கொஞ்சம் பேசனும்..” என்றவன்.. ஜெயாவையும் தன் ஸ்கார்பியோவில் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டிற்க்கு வந்தவன்.. ‘ரொம்ப சின்ன பொண்ணாயிருக்கா.. இந்த கல்யாணம் வேண்டாம்மா..” என்று பிரசாத் ஜெயாவின் முன்னிலையிலேயே மறுத்து சொல்லவும்..
பதறிய ஜெயா.. ‘தம்பி.. திலகவதி நீங்க நினைக்கிற அளவுக்கு சின்ன பிள்ளையில்ல.. அவளுக்கு பதினெட்டு வயசு.. என்ன..? வெளிஉலகம் தெரியல.. அதை தெரிஞ்சிக்கிற அளவுக்கு மத்த சொந்த பந்த பழக்கமும் இல்ல.. டி.வி கூட இப்போ ஆறுமாசமாத்தான் எங்க வீட்ல கவர்ன்மென்ட்ல கொடுத்த டி.வி. இருக்கு.. அவ படிச்ச பள்ளிகூடமும் பொண்ணுபிள்ளைங்க மட்டும் படிக்கிற பள்ளிகூடம்.. இப்போ வேலைசெய்து வந்த கம்பெனியும் ஒரு அம்மாவும் அவங்க மருமகளும்தான் நடத்துறாங்க.. அங்கையும் பொண்ணுங்க மட்டும்தான் வேலைசெய்தாங்க.. பணம் சம்பாதிக்கனும்ன்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு.. அதனாலயோ என்னவோ வேலைசெய்யிற இடத்திலகூட யாருகிட்டயும் அவ்வளவா பேசமாட்டாளாம்.. அவளோட வேலைசெய்யிற பொண்ணுங்க என்கிட்ட சொல்லி குறைபட்டிருக்காங்க.. இனிமே கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துக்குவா..” என்று நீண்ட விளக்கம் கொடுத்து மன்றாட..
‘வேணும்னா திலகவதிக்கு கொஞ்சநாள் கழிச்சி.. நாங்களே ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் செய்து வைச்சிடறோம்ங்க.. இப்போ இந்த கல்யாணம் வேண்டாம்..” என்று மீண்டும் பிரசாத் மறுக்க..
‘தம்பி… உங்களைதான் திலகவதி கல்யாணம் பண்ணிக்கப்போறான்னு ஊரெல்லாம் சொல்லியாச்சி.. இப்ப நீங்க என்பொண்ணை வேணாம்னு சொன்னா.. எங்க மானமே போய்டும்..” என்று திலகவதியின் அம்மா கண்ணீர் விடவும்தான் திலகவதியோடு இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டான் பிரசாத்.
வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் அதிசயமாய் பார்த்தபடியும்.. அவ்வப்போது ஹாலில் அமர்ந்திருக்கும் தன்னையும் ஓரக்கண்ணால் பார்த்தபடியிருந்த திலகவதியை.. ‘இங்க வா..” என்று கனிவாக கூப்பிட்டான் பிரசாத்.
வேகமாக எழுந்தவளுக்கு பட்டுப்புடவை தடுக்கிவிடவும்.. ‘ஹேய்.. பார்த்து..” என்று நொடிப்பொழுதில் எழுந்துவந்து கீழே விழாமல் தாங்கி.. ‘எதுக்கு இப்படி பயந்துக்கிற…? ப்ரீயா இரு…” என்றான்.
‘என்ன வேணும்..?” என்றாள்.
‘என்ன..?”என்று புரியாமல் பார்த்தான் பிரசாத்.
‘இல்ல.. கூப்பிட்டிங்களே.. டீ காபி.. எதாவது வேணுங்களா..?” என்று கடமையே கண்ணாய் கேட்டாள் திலகவதி.
‘என்னை இப்படி கவனிச்சிக்கனும்னு உனக்கு யார் சொல்லிகொடுத்தாங்க..?” என்று சிரித்தான் பிரசாத்.
‘எனக்கே தெரியுமே…” என்று புத்திசாலியாய் முகத்தை வைத்து சொன்னாள்.
‘பரவாயில்லையே.. உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்.. ஆனா நீ எல்லாமும் நல்லா தெரிஞ்சிவச்சிருக்கிற..” என்றான் அதிசயிப்பதுபோல்.
‘என்ன வேணும்..?” என்று மீண்டும் கேட்டாள் திலகவதி.
எதாவது வேணும்னு சொல்ற வரைக்கும் விடமாட்டா போலிருக்கே.. என நினைத்தவன்.. ‘சும்மா உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கத்தான் கூப்பிட்டேன்.. நீ எத்தனாவது படிச்சிருக்க..?” என்றான்.
‘பத்தாவது…” என்றாள்.
‘ஏன் பதினொன்னாவது படிக்கலை…?”
‘எங்கம்மா சம்பாரிக்கிற காசு வீட்டு செலவுக்கு பத்தலை.. படிக்க போனா சம்பாதிக்க முடியாது.. வேலைக்கு போனா பணம் கிடைக்கும்னு வேலைக்கு போயிட்டேன்..” என்றாள்.
‘மாசம் எவ்ளோ சம்பாரிப்ப..?”
‘அதெல்லாம் இரண்டாயிரத்துக்கும் மேல சம்பாரிப்பேன்..” என்றாள் பெருமையாக.
‘ம்ம்.. பரவாயில்லையே..‚” என தானும் பெருமையாக சொன்னவன்.. ‘நீ படிக்கிறியா..? உனக்கு மாசாமாசம் இரண்டாயிரம் ரூபாய் நான் தரேன்..” என்று ஆர்வமாய் கேட்டான் பிரசாத்.
‘எனக்குதான் கல்யாணம் ஆய்டுச்சே.. அப்புறம் எப்படி படிக்கிறது..?” என்று இதுகூட தெரியாதா என்ற பாவனையோடு கணவனை மடக்கி கேட்டு.. ‘அதோட எனக்கு படிப்பு நல்லா வராது.. நான் பத்தாவது பாஸ் பண்ணினதே பெரிய விசயம்..” என்று முகத்தை சுருக்கி சொல்லி.. ‘என் தம்பிதான் நல்லா படிப்பான்..” என்றாள் பெருமையாக.
யப்பா.. படிக்கிறியான்னு ஒத்த கேள்விதான கேட்டேன்.. அதுக்கு இத்தனை ரியாக்சனா..? என நினைத்தவன் திலகவதியை ஆராய்ச்சியோடு பார்க்க.. திலகவதிக்கு கல்யாணப்பெண்ணிற்குரிய ஆசை நாணம்.. இப்படி எதுவும் இருக்கவில்லை.. மாறாக நல்ல பெண்ணாக நடந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததை அவளின் முகத்தில் படித்தான் பிரசாத்.
‘டேய்.. பொண்டாட்டிகிட்ட நாலு வார்த்தை அன்பா பேசுவன்னு பார்த்தா.. என்னடா இன்டர்வியுவ் பண்ணிட்டிருக்க..? திலகா பயப்படுது பாரு..” என்று நவீன் கிண்டலாய் சொல்ல..
‘டேய் அண்ணா.. நான் அன்பா பேசினா அதை புரிஞ்சிக்கிற பக்குவம் இவளுக்கு இருக்கான்னு முதல்ல பாரு.. வந்துட்டான் எனக்கு சொல்றதுக்கு..” என்று திலகவதியைப் பார்த்து பிரசாத் பாவமாய் சொல்ல..
‘அன்பா பேசினா அந்த குழந்தைக்கு கூட புரியும்..” என்று நவீனின் குழந்தையை காட்டியவள்.. ‘நீங்க பேசுங்க எல்லாம் எனக்கு புரியும்..” என்று திலகவதி முகம்சுருக்கி அளவம் காட்டி சொல்ல..
சிரித்தவன்.. ‘பார்த்துக்கடா இவளோட பக்குவத்தை..” என்று நவீனிடம் பிரசாத் சொல்ல..
‘உண்மையாவே உன்பாடு திண்டாட்டம்தாண்டா..” என பாவமாக சொன்னான் நவீன். நவீனையும் பிரசாத்தையும் அதிசயமாய் பார்த்தவள்.. ‘தமிழ்லதான பேசுறாங்க..? அதெப்படி எனக்கு புரியாம போகும்…?” என சத்தமாகவே புலம்பி..
‘அண்ணனுக்கும் தம்பிக்கும்தான் கிறுக்கு பிடிச்சிருக்காட்டங்குது..” என்று முனக..
‘டேய் பிரசாத்.. உன்னோட என்னை கூட்டு சேர்க்காதடாப்பா.. உன் பொண்டாட்டி எனக்கு பைத்தியம் பட்டம் கட்டிடுவா..” என்று சிரிப்போடு நவீன் சொல்ல.. ‘ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்..” என்று பிரசாத்தும் சிரித்தான்.
‘பிரசாத்.. சூர்யா வந்திருக்கான்..” என்றார் ஆன்னபூரணி.
‘உள்ள வாடா..” என்றான் பிரசாத்.
உள்ளே வந்த சூர்யா.. நவீனிடம் நலம் விசாரித்து.. பிறகு நவீனின் மனைவியிடம் கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டு.. நவீனின் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டே..
‘பிரசாத்தும் வருசத்துக்கு ஒருமுறையோ இல்ல இரண்டு முறையோதான் வரான்.. சிலநேரம் அம்மாவும் அப்பாவும் ரொம்ப லோன்லியா பீல் பண்ணுவாங்க.. நீ பேசாம இந்த ஊருக்கே டிரான்ஸ்‡ர்க்கு ஏற்பாடு செய்யலாமில்ல நவீன்.. அப்பாம்மாக்கும் சந்தோசமா இருக்கும்.. குழந்தைகளும் தாத்தா பாட்டியோட.. சந்தோசமா இருப்பாங்க..” என சூர்யா யோசனை சொல்ல..
‘இப்போதான என்னை வீட்லயே சேர்த்திருக்காங்க.. இனிதான் அதைப்பத்தி யோசிக்கனும்..” என்றான் நவீன்.
‘ம்ம்.. யோசிச்சி நல்ல முடிவா எடு நவீன்.. முக்கியமான விசயம்.. நாளைக்கு பிரசாத்தோடவே நீயும் தங்கச்சியும்.. கண்டிப்பா நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வந்திடுங்க..” என்று சொன்னவன்..
‘பிரசாத்.. உங்க நாலு பேரையும் அம்மா நாளைக்கு வீட்டுக்கு வரசொன்னாங்க.. போன்லயே சொல்லிடலாம்னுதான் நான் சொன்னேன்.. விருந்துக்கு அழைக்கிறதை நேர்லதான் போய் சொல்லனும்னு அம்மா சொன்னதால வீட்டுக்கு வரவேண்டியதாய்டுச்சி..” என்றான் சங்கடத்துடன்.
‘டேய்.. உனக்கென்னடா ஆச்சி..? என் பொண்டாட்டிகிட்ட எதிர்பார்க்கிற வெக்கத்தை உன் முகத்தில காட்ற..? சும்மா உக்காருடா..” என்று சிரித்தான்.
‘திலகா.. வீட்டுக்கு யாராவது வந்தா முதல்ல தண்ணி கொண்டுவந்து கொடுக்கனும்..” என்று அன்னபூரணி சொல்லவும்.. வேகமாக போய்.. தண்ணீர் கொண்டுவந்து சூர்யாவிடம் நீட்டினாள் திலகவதி.
‘இவன் சூர்யா.. என் ‡பிரெண்டுதான்.. ஆனா கூடப்பிறந்தவன் மாதிரி..” என்று பிரசாத் திலகவதியிடம் சூர்யாவை அறிமுகம் செய்யவும்.. சூர்யா கைகுலுக்க திலகவதியிடம் கை நீட்ட.. அவள் தன் கையை கொடுக்கமாட்டேன் என்பதுபோல் தன் கைகளை பின்னால் கட்டிக்கொள்ள.. சின்னதாய் சிரித்த சூர்யா.. தன் கரங்களை கூப்பி ‘வணக்கம்..” என்றான்.
படாரென்று அவளும் தன் கரங்களை கூப்பி.. ’வணக்கம்..” என்று சொல்லி தன் மாமியாரிடம் போய் நின்றுகொண்டாள்.
‘என் ஆர்மி சல்யூட்டைவிட இது பயங்கரமா இருக்கு…” என்று சிரித்தான் பிரசாத்.
ஆனால் சூர்யாவிற்கு சிரிப்பு வரவில்லை.. ஒரு முக்கியமான ஆப்ரேசன் இருந்ததால்.. காலையில் கல்யாணத்தில் சூர்யாவின் கவனம் திலகவதியிடம் சரியாக திரும்பவில்லை.. இப்பொழுது அவளை நேரில் பார்த்ததும் சூர்யாவிற்கு பாவமாக இருக்கவும்..
‘என்ன பிரசாத்.. இவ்ளோ சின்ன பொண்ணா இருக்காங்க..?” என்றான் சிறு வருத்தத்தோடு.
‘நான் ஊர்ல இருக்கும்போது எங்கம்மா திலகாக்கு இருப்பதியொரு வயசுன்னு என்கிட்ட சொன்னதாலதான் நான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். இங்க வந்ததும்தான் தெரியுது இவளுக்கு பதினெட்டு வயசுதான்னு.. அப்பவும் இவளைப் பார்த்ததும் இந்த கல்யாணம் வேண்டாம்னுதாண்டா சொன்னேன்.. ஆனா அவளோட அம்மாதான் நாங்க ஊரெல்லாம் சொல்லிட்டோம்.. நீங்க கல்யாணம் பண்ணிக்கலைன்னா எங்களுக்கு அசிங்கமாய்டும்ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க.. அதனாலதான் பண்ண வேண்டியதாய்டுச்சி..” என்றான்.
‘நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதடா.. உன் பிரெண்டா இல்ல.. ஒரு டாக்டரா சொல்றேன்.. ரொம்ப இன்னசன்ட்டா இருக்காங்க.. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ..” என்று சொல்லி வேறெதுவும் பேசாமல் மேலும் ஏனோ அவ்விடத்தில் நிற்க பிடிக்காமல் கிளம்பிச்சென்றான் சூர்யா.
ஏற்கனவே விபரமில்லாமல் இருக்கிறாளே என்ற தயக்கத்தோடு இருந்த பிரசாத்திற்கு இப்பொழுது தன் நண்பன் சொன்ன வார்த்தைகள் மேலும் தயக்கத்தை கொடுக்கவும்.. நேராக தன் பெற்றோரிடம் சென்ற பிரசாத்.. அப்பா இந்த சாந்திமுகூர்த்தம் அப்பபடி இப்படின்னு எந்த ஏற்பாடும் பண்ணாதிங்க.. எனக்கு இன்னும் இருபது நாள்தான் லீவ் இருக்கு.. அதுக்கப்புறம் ஆறுமாசம் கழிச்சி நான் மறுபடி ஊருக்கு வரும்போது எல்லாம் பார்த்துக்கலாம்..” என்றான்.