அத்தியாயம்– 20
திலகவதி ஆர்வமாக சூர்யாவின் மொபைலையே பார்த்திருக்க..
‘காட்றேன்.. ஒரு காபி குடிச்சிட்டு காட்றேன்..” என்றான்.
‘இல்ல.. நான் காபி எடுத்திட்ட வரதுக்குள்ள நீங்க அதை எதாவது செய்திடுவிங்க..” என்று நம்பாதவளாய் சொல்ல…
‘சரி.. நான் போய் எடுத்திட்டு வரேன்..” என்று மொபைலை அவளிடமே கொடுத்து வெளியே வந்தவன்.. ஹாலில் அமர.. முத்து எட்டிப்பார்க்க..
‘இரண்டு காபி போடுங்க..” என்றவன் முகம் சோர்ந்திருக்க.. கொஞ்சம் முன்னதான சந்தோசமா உள்ள போனாங்க.. என்று யோசித்தவாறே முத்து பாலை அடுப்பில் வைக்க..
ஐந்து நிமிடம் வரை அறையில் காத்திருந்தவள்.. அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல் வெளியே எட்டிப்பார்க்க.. சோபாவில் தன் தலையை மேல்நோக்கி சாய்த்தவாறு கண்மூடி அமர்ந்திருந்த சூர்யாவிடம்..
காபியோடு வந்த முத்து.. ‘தம்பி..” என்று சன்னக்குரல் கொடுக்க..
கண்விழித்தவன் காபியை வாங்க.. இன்னொரு கப்பை தான் வாங்கலாம் என நினைத்து திலகா வெளியே வர.. கலங்கிச் சிவந்திருந்த அவளின் முகத்தை பார்த்து கலவரமடைந்தவர்.. பின் நெற்றியைப் பார்த்து.. ‘என்ன பாப்பா இது..? இப்படி வீங்கியிருக்கு..?” என கேட்க..
‘அது.. அது.. ஒன்னுமில்லன்ணா.. கீழ விழுந்துட்டேன்..” என்று காபியையும் வாங்காமல் அவசரமாய் தனதறைநோக்கி போக.. முத்துவின் முகம் சந்தேகத்தை காட்ட..
‘அம்மாகிட்ட எதுவும் சொல்லாதிங்க..” என்று முத்துவிடம் சொல்லி சூர்யா காபியோடு உள்ளே போனான்.
‘ம்ம்..” என்று ஒரு கப்பை திலகவதியிடம் நீட்ட.. வாங்கியவள் வீடியோவை பார்க்கும் ஆர்வத்தில் அத்தனை சூடாய் இருந்தும் இரண்டே நிமிடத்தில் குடித்து முடித்திருந்தாள்.
பிரசாத்துக்காக தன்னை அணைத்துக்கொண்ட திலகவதியின் அணைப்பும் பேச்சும் சூர்யாவிற்க்கு அத்தனை அறுவருப்பை தந்தது.. எனினும் தன் கோபத்தை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல என்று அமைதியானான்.
ஐந்து நிமிடம் வரை காபியை குடித்துக்கொண்டிருந்தவன்… ‘இன்னைக்கு பார்த்ததுக்கப்புறம் திரும்ப எப்பவும் இதைப்பத்தி பேசக்கூடாது.. நினைக்கவும் கூடாது..” என மிரட்டலாய் சொல்ல..
சிறு தாமதமுமின்றி.. ‘இல்லயில்ல பேசமாட்டேன்..” என்றாள்.
‘இங்க வா..” என்று அழைக்க.. வந்தவளை கட்டிலில் உக்கார சொல்லி தன் மொபைலை எடுத்தவன்.. வீடியோவை காட்ட..
கண்ணீரோடு பிரசாத் பேசிய காட்சி வர.. அதிர்ச்சியோடு கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தாள் அதனை. அந்த ஐந்து நிமிட வீடியோ சட்டென முடிந்திருக்க.. மீண்டும் அதையே பார்க்க முயல..
‘வேணாம்..” என்று அவளிடமிருந்து ‡போனை பிடுங்க.. அழுகையை அடக்க வழிதெரியாமல் அழுதுகொண்டே தளர்வாய் கட்டிலில் சரிந்தவளுக்கு பிரசாத்தின் முகம் முன்னே வர..
தம்மிடம் அன்னைக்கு நடந்துகிட்டதுக்கு இப்படி வருந்தியிருக்கிறாங்களே.. சாகப்போபோற நேரத்தில கூட நாம நல்லா இருக்கனும்னு நினைச்சிருக்காங்களே.. என நினைக்க பெருகியது கண்ணீர்.
அப்போ இந்த வீடியோவை பார்த்ததுக்கப்புறம்தான் மூர்த்தியப்பா வீட்ல நாம டீ கொடுக்கும்போது நம்மளை அப்படி பார்த்தானா..? இவன் நம்மளை தப்பா பார்;க்கிறான்னு நினைச்சிருந்தோமே.? அவங்க செத்துட்டா என்வாழ்க்கை என்னாகுறதுன்னு அக்கறைலதான் பார்த்திருந்தானா..? என்பது போன்று பல சிந்தனை மனதினில் ஓட.. கண்களும் கசிந்துகொண்டே இருக்க..
இருவரின் மனமும் கனத்திருக்க.. இரவு வரை மௌனமாகவே சென்றது நேரம். எட்டு மணியாகவும் கமலம் சாப்பிட வர.. முத்து டிபன் எடுத்து வைக்க..
‘சூர்யா..” என்றழைக்க.. ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு சூர்யா மட்டும் வெளியே வர.. ‘திலகாவை கூட்டிட்டு வா..” என்று சொல்ல..
‘ஐஞ்சி மணிக்குதானம்மா சாப்பிட்டேன்.. நான் கொஞ்சம் லேட்டா சாப்டுக்கிறேன்.. நீங்க சாப்பிடுங்க..” என்று சொல்ல..
மாலையில் மகன் சந்தோசமாக இருந்தானே.. இவர்களுக்குள் எதாவது சமரசமாகியிருக்குமா..? என யோசித்திருந்தவருக்கு மருமகளின் முகம் காணும் எண்ணம் வர.. ‘திலகாவை எனக்கு பரிமாற வரசொல்லு..” என்றார்.
‘எதேதோ பேசப்போய் பிரசாத்தைப் பத்தி பேசவேண்டியதாய்டுச்சி.. கொஞ்சம் அப்சட்டா இருக்கா..” என்று வருத்தமாய் சொல்ல..
‘அடிச்சிட்டிங்களா தம்பி..? நெத்தி வீங்கியிருந்திச்சி..” என்று முத்து கேட்டுவிட.. கமலம் பதட்டமாய் மகனைப் பார்க்க..
‘ச்ச..ச்ச.. இல்லம்மா..” என்று சூர்யா அவசரமாய் மறுக்க..
கமலம் தனது வீல்சேரை தள்ளிக்கொண்டு மகனின் அறை நோக்கிப்போக.. பின்னோடே சென்றான் சூர்யா. ‘திலகா..” என்றழைக்க..
சட்டென கட்டிலிலிருந்து எழுந்தவள்.. தன் முகம் மறைக்க தலைகுனிந்தாள்.
‘சூர்யா அடிச்சானா..?” என மிரட்டலாய் கேட்க..
‘இல்லங்கத்த..” என்று மறுத்தாள்.
‘உன் நெத்தியில எப்படி இப்படி அடிபட்டது..?” என்று கோபமாய் கேட்க..
‘அது.. அது..”என்று திணறியவள் சூர்யாவைப் பார்க்க..
‘சாரிம்மா.. கோபத்தில அவளை தள்ளிவிட்டேன்.. தடுமாறி சுவத்தில இடிச்சிக்கிட்டா..” என்று சொல்ல..
‘இப்படி தள்ளிவிடற அளவுக்கு அப்படி என்னடா கோபம் உனக்கு..? படாத இடத்தில பட்டிருந்தா என்ன ஆகறது…?” என்று சூர்யாவை மிரட்டி..
‘நீயும் பழசையே நினைச்சி நினைச்சி இவனோட சேர்த்து எல்லாருடைய நிம்மதியையும் கெடுக்கப்போறியா..?” என்று திலகவதியையும் திட்ட..
தலைகுனிந்தவள்.. இல்லை என்பதாய் தலையசைக்க.. ‘ஒரு மகன் சந்தோசமா குடும்பம் நடத்துறான்.. அந்த குடுப்பினை என் இன்னொரு மகனுக்கு எப்ப கிடைக்குமோ பெருமாளே..” என்று புலம்பியபடி கமலம் வெளியேற..
திலகவதி கண்ணீர் வடிக்க.. அவளை கண்டுகொள்ளாமல் தன் அம்மாவிடம் வந்தவன்.. ‘வந்து சாப்பிடுங்கம்மா..” என்று கெஞ்சலாக சொல்ல..
‘இப்போ சாப்பாடு மட்டும்தான குறைச்சல்..?” என்று கமலம் கடுகடுக்க..
‘ப்ம்ச்.. ம்மா…” என்று சலித்துக்கொண்டவன்.. ‘இன்னைக்கு பொருத்தவரை தப்பு என்மேலதான்.. வேண்ணா என்னை திட்டுங்க.. சாப்பாட்ல எதுக்கு கோபம் காட்றிங்க…?” என்று கனிவாக கேட்க..
கமலம் முகத்தை திருப்ப.. தன் அன்னையை டைனிங் டேபிளுக்கு தள்ளிக்கொண்டு வந்தவன்.. ‘மாத்திரை சாப்பிடனுமில்ல..? சாப்பிடுங்கம்மா..” என்று தானே பரிமாறினான்.
‘அவளை ரொம்ப பிடிச்சிதான கல்யாணம் செய்துகிட்ட..? அப்புறம் ஏண்டா இப்படி..?” என்று கமலம் வருந்த..
‘அம்மா.. நீங்க வருந்துற அளவுக்கு ஒன்னும் நடந்திடல.. இன்னும் கொஞ்சநாள்ல அவ சரியாய்டுவா..” என்று சூர்யா ஆறுதலளிக்க..
‘நீதான சாங்காலம் சாப்பிட்ட…? அவ மதியம் சாப்பிட்டதுதான..? வரச்சொல்லு அவளை..” என்று கறாராய் சொல்ல..
‘இப்போதான்மா ரெண்டுபேரும் காபி குடிச்சோம்.. லேட்டானாலும் சாப்பிடாம தூங்கமாட்டோம்.. நீங்க சாப்பிடுங்க..” என்று சூர்யா எடுத்துரைக்க..
கமலம் சாப்பிடவும்.. ‘முத்து நீங்க கிளம்புங்க..” என்றவன்.. தன் அன்னை சாப்பிட்டதும் அவரின் அறைக்கு அழைத்து சென்றவன்.. சற்றுநேரம் உரையாடி அவர்களின் மனநிலையை சகஜமாக்கி.. பின்னர் அவருக்கு மாத்திரை எடுத்து கொடுக்கவும்.. கமலம் வாங்கி குடித்ததும்..
‘எதைப்பத்தியும் யோசிக்காதிங்கம்மா.. இன்னும் இரண்டு நாள்ல சரியாகிடுவா..” என்றான் சிரித்த முகத்தோடு.
‘சரி.. நான் தூங்கறேன்.. அவளை சமாதனப்படுத்தி இரண்டு பேரும் சாப்பிட்டு படுங்க..” என்றார் கோபமில்லாமல்.
சம்மதமாய் தலையசைத்து வெளியே வந்தவன்.. ஷப்பா எப்படியோ அம்மாவை சமாளிச்சாச்சி.. என்ற நிம்மதியோடு தனதறைக்கு வந்தான். அங்கே கலக்கமும் வேதனையும் ஒருசேர கலந்திருந்த மனைவியின் முகத்தை பார்த்தவன்.. எதுவும் பேசாமல் தனது மொபைலில் பாடலை ஒலிக்கவிட்டு கட்டிலில் படுத்தான்.
தானாய் அணைத்தபோது தன்னை விடுவிக்க முயற்ச்சித்ததையும்.. எதுன்னாலும் செய்துக்கோங்க என்று சொன்னபோது சூர்யா தன்னை அதட்டியதையும் நினைத்த திலகவதி..
திருமணம் முடிந்த நாளாவது நாள் பிரசாத் தன்னிடம் நடந்துகொண்டதும் நினைவு வர.. நீ எப்படி இத்தனை நாளா என்னை எதுவும் செய்யாம இருக்க..? அப்போ இத்தனை நாளா நம்மை பயமுறுத்தத்தான் அப்படி நடந்துக்கிட்டானா..? மிரட்டியாவது தன்னை சரிசெய்யலாம் என்ற நினைப்பு மட்டும்தானா..?
கூடவே அன்று பிரசாத்தின் பிறந்த நாளன்று சூர்யா அழுததும் நினைவு வர.. அத்தனை பிடிக்குமா அவங்களை உனக்கு..? உன் நண்பனோட வாக்கை காப்பாத்த உன் சந்தோசத்தை விட்டுகொடுத்திட்டியா..? ஏன் இத்தனை நல்லவனா இருக்க..? அப்படி என்ன என்னிடம் உனக்கு..? என்று நினைத்தவள் மேலும் சற்று நேரம் அழுது முடித்து மெல்ல திரும்பிப் பார்த்தாள் சூர்யாவை.
தன் கோபத்தை அடக்கவேண்டி.. கண்மூடிய நிலையில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
பத்து மணியாகவும்.. எழுந்து முகம் கழுவி வந்தவள்.. ‘சாப்பிட வாங்க..” என்றாள். அவனிடம் பதிலில்லாமல் போகவே.. இன்னொரு முறை சொன்னாள். மீண்டும் சூர்யா அமைதியாக இருக்கவும்..
கணவனின் கையை லேசாய் தொட்டு.. ‘சாப்பிட வாங்க..” என்று சொன்னதுதான் தாமதம்..
படுத்திருந்த நிலையிலேயே.. ‘கையை எடு முதல்ல…” என்று சூர்யா அத்தனை கடினமாய் சொல்ல..
சட்டென கையை எடுத்தவளின் முகம் பயத்தோடு செய்த தவறென்ன என்று புரியாத தவிப்பும் சேர்ந்திருக்க.. ‘பிரசாத்துக்காக என்னை கட்டிப்பிடிப்பியா..?” என்று கர்ஜிக்க.. அவனின் கோபத்தில் ஒரு அடி பின்னே நகர்ந்தாள்.
எழுந்தமர்ந்தவன்.. ‘நீ அவனைப் பார்க்கனும்ங்கிறதுக்காக நான் உன்னை என்னவும் செய்துக்கனுமா..?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
‘என்னை மன்னிச்சிடுங்க.. நீங்க அப்படிபட்டவரில்லைன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்..“ என்று கண்ணீரோடு மன்றாட..
‘நான் எப்படிபட்டவனாவோ இருந்துட்டு போறேன்.. நீ அவனுக்காக உன்னை தருவியா எனக்கு..?” என்றான் குறையாத கோபத்தோடு.