ஆனா.. இப்படியெல்லாம் நடக்கும்னு யாரு கண்டா..? யாராவது நல்ல இடமா கேட்டாங்கன்னா.. மறு கல்யாணம் பண்ணிவச்சிடலாமோன்னு கூட ஒரு சில நேரம் தோணுது.. ஒரு சின்ன கருப்பு பொட்டுகூட நெத்தியில வைக்கமாட்டுக்கிறா.. நாளெல்லாம் இவளை இப்படி பார்த்திட்டு இருக்க என்னால முடியலை..” என்று கண்கலங்கினார் அன்னபூரணி.
மறுகல்யாணம் என்ற வார்த்தை அன்னபூரணியிடமிருந்து வரவும்.. அந்த வார்த்தையையே உடும்பாய் பற்றிக்கொண்டவன்.. ‘ஏன்மா..? என்னைப் பார்த்தா நல்ல பையன் மாதிரி உங்களுக்கு தோணலையா..?” என்று அன்னபூர்ணியிடம் சூர்யா அதிரடியாய் சொல்லவும்..
‘சூர்யா… நீ என்ன சொல்ற..?” என்று அதிர்ச்சியாய் கேட்டார் கமலம்.
‘இப்ப கொஞ்சநாளா என் மனசில இருக்கிறதைதான்மா நான் சொல்றேன்.. குறையிருக்கிற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்.. ஆனா.. இப்ப எந்த குறையும் இல்லாத திலகவதியை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்…” என்றான் தெளிவாக.
அறுவருப்போடும் அதிர்வோடும் திலகவதி சூர்யாவை பார்த்தாள். ஆனால் சூர்யா திலகவதியயை பாராமல்.. தன் அம்மாவை கெஞ்சுதலாய் பார்த்திருந்தான். கமலத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. தன் மகன் எடுத்த முடிவு அதிர்ச்சிதானென்றாலும் சூர்யா எடுத்த முடிவிற்காக வேறுயாரையும் கோபிப்பது நியாம் இல்லை என புரிந்திருந்தார்.
ஊனமுள்ள பெண்ணை திருமணம் செய்யவே சம்மதிக்காத கமலம்.. இன்று ஒரு விதவையை திருமணம் செய்ய சம்மதித்திடுவாரா என்ன..? ஆனாலும் சூர்யாவை பொருத்தவரை.. ஒருமுடிவு எடுத்தால் எடுத்ததுதான்.. அதிலிருந்து அவன் மாறமாட்டான் என்பதும் கமலத்திற்கும் நன்றாக தெரியும்.. என்பதால் அமைதியாகத்தான் இருந்தார்.
அனைவரும் குழப்பத்தில் அமைதியாய் இருக்க.. ‘இதுக்குத்தான் நான் எங்கையும் வரலைன்னு சொன்னேன்.. ஏன்மா.. நான் உங்களுக்கு ரொம்ப பாரமா இருக்கேனா..?” என்று வெடித்து அழுதாள் திலகவதி.
அப்பொழுதுதான் திலகவதியைப் பார்த்து… ‘நீ அவங்களுக்கு பாரமா இருக்கேன்னு அவங்க சொன்னாங்களா..? அவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து.. அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தாலும் அவங்க இப்படித்தான் யோசிச்சிருப்பாங்க.. இப்ப எதுக்கு இப்படி அழற..?” என்று திலகவதியை மிக உரிமையாய் மிரட்டினான் சூர்யா.
‘அவங்க இல்லாததுனாலதான இப்படி ஆளாளுக்கு என்னை மிரட்டுறிங்க..? யார் சொன்னாலும் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்..” என்று திலகவதியும் சற்று குரலுயர்த்தி பேசினாள்.
‘முட்டாள்.. பிரசாத் உயிரோட இருந்திருந்தா.. இந்த கல்யாணப்பேச்சு எதுக்கு வருது..? ஒரு சின்னபொண்ணை கல்யாணம் செய்து ஒரேஒரு வாரத்திலயே அவளை விட்டுட்டு வந்திட்டோமேன்னு பிரசாத்தோட ஆன்மா கூட உன்னை நினைச்சிதான் தவிச்சிட்டிருக்கும்.. காலம்பூரா இதே கோலத்தோட நீ வாழ்ந்தினா அவனோட ஆத்மா சத்தியமா சாந்தியடையாது.. ஒரு பொண்ணோட வாழ்க்கை நம்மாளால சீரழஞ்சிடுச்சேன்னு தவிச்சிட்டுதானிருக்கும்..” என்று கத்தியவன்..
‘ஒழுங்கா என்னை கல்யாணம் செய்து பிரசாத்தோட ஆத்மாக்கு சாந்திகொடு..” என்று அடக்கும்குரலில் அழுத்தத்தோடு மிரட்டினான் சூர்யா.
சூர்யா இன்று பேச ஆரம்பித்துவிட்டான்.. எதுவானாலும் அவனே பேசி முடிவெடுக்கட்டும் என்று ஆதவனும் கீர்த்தியும்.. அமைதிகாத்தனர்.
‘என் மகன் இல்லாததுனாலதான நீயும் எங்க பேச்சை மதிக்கமாட்டுக்கிற..?” என்று சூர்யாவை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் மூர்த்தியும் திலகவதியிடம் கோபிப்பதுபோல் பேசி கண்கலங்கினார்.
மூர்த்தியின் பேச்சில் சந்தோசமடைந்த சூர்யா.. ‘நீங்க ஏன்மா ஒன்னுமே பேசமாட்றிங்க..?” என்று அன்னபூர்ணியிடம் கேட்கவும்..
‘முதல்ல உங்கம்மாவும்.. திலகவதியும்தான்ப்பா இதுக்கு சம்மதிக்கனும்..” என்று தடுமாற்றமாய் சொன்னார் அன்னபூர்ணி.
‘நான் ஒரு முடிவெடுத்தா அதிலிருந்து மாறமாட்டேன்னு எங்கம்மாக்கு தெரியும்.. எங்கம்மா என் சந்தோசத்தைதான் முக்கியமா நினைப்பாங்க..” என்று கமலத்தை பார்த்து அழுத்தமாக சொன்னவன்.. பிறகு அன்னபூர்ணியைப் பார்த்து..
’திலகவதிக்கென்ன தெரியும்..? அவ சின்னபொண்ணு.. நீங்க முதல்ல உங்க சம்மதத்தை சொல்லுங்க..” என்றான்.
அன்னபூர்ணியும்.. மூர்த்தியும் அமைதியாகவே இருக்கவும்.. ‘நான் உங்க மகன் இல்லையா..? நான் நல்ல பையன் இல்லையா..? திலகவதியை நான் கல்யாணம் பண்ணிக்ககூடாதா..?” என்று மீண்டும் மன்றாடி கேட்டான்.
‘எனக்கு நீ வேற.. பிரசாத் வேறன்னு இல்லப்பா.. உன் இடத்தில பிரசாத் இருந்திருந்தா இப்படி யோசிச்சிருப்பானான்னு கூட எனக்கு தெரியாது.. எங்களுக்கு சம்மதம்தான். ஆனா.. என் தங்கச்சி அமைதியாவே இருக்குதே..” என்று கமலத்தை பார்த்து மூர்த்தி சொல்லவும்..
‘அம்மா இன்னைக்கு இந்த பேச்சை ஆரம்பிச்சாச்சி.. இனிமே இதை தள்ளிபோடக்கூடாது.. எனக்கு கல்யாணம்னா அது திலகவதியோட மட்டும்தான் நடக்கனும்.. அதுக்கு திலகவதி சம்மதிக்கலைன்னாலும்.. உங்க மகனுக்கு பிடிச்ச பொண்ணை சம்மதிக்க வைக்கிறதும் உங்க பொறுப்புதான்.. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க..” என்று தன் அம்மாவிடம் உறுதியாய் சொல்லி.. தியாவை தூக்கிக்கொண்டு சற்று தூரத்தில் இருந்த ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டான் சூர்யா.
திலகவதியின் கஷ்டங்களை புரிந்திருந்தாலும்.. அவளுக்காக அனுதினமும் வருத்தப்பட்டாலும்.. திலகவதியின் வாழ்க்கை நம் காலத்திற்கு பிறகு என்னாகுமோ.. என்று பலமுறை யோசித்திருந்தாலும்.. இப்படி திடீர் மறுமணம்.. அதுவும் தனது மருமகளுக்கு.. என்று ஒரு பெண்ணாய் சட்டென்று ஒரு முடிவிற்கு அன்னபூர்ணியால் வரமுடியாமல் தடுமாறினார். ஆனால் மூர்த்தி கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று எண்ணி.. இந்த கல்யாணம் நடந்தே ஆகவேண்டும் என்று உறுதியாய் முடிவெடுத்தார்.
‘ஆதவா நீ என்னடா ஒன்னுமே சொல்லாம அமைதியா இருக்க..?”என்று ஆதவனிடம் மறைமுகமாய் உதவியை நாடினார் கமலம்.
ஆனால் கமலத்தின் நம்பிக்கை பொய்த்தது.. மாறாக ஆதவன் திலகவதியை பார்த்துக்கொண்டே.. ‘அம்மா… சூர்யா எந்த குறையும் இல்லாத ஒரு அழகான பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறோன்னு நான் போனமுறை வந்திருந்தபோதே சொன்னேன்ல..? நான் சொன்னது நிஜமாய்டுச்சி பார்த்திங்களா…? நம்ம சூர்யாவை நினைச்சி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா.. நம்ம குடும்பத்துக்கேத்த அருமையான பொண்ணைத்தான் செலக்ட் செய்திருக்கான்… நீங்க சீக்கிரம் ஒரு நல்லமுடிவெடுத்து.. நம்ம சூர்யாவை சந்தோசப்ப்டுத்துங்க..” என்று சொல்லி.. இதில் எனக்கும் சம்மதம்தான் என்று தன் அம்மாவிற்கு புரியவைத்தான் ஆதவன்.
‘என் மகன் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்..” என்று கமலம் வெறுப்பாக சொல்லவில்லையென்றாலும்.. சந்தோசமாகவும் சொல்லவில்லை.
‘ஏய்.. சூர்யா.. சக்சஸ்..” என்று கீர்த்தி தன் கட்டைவிரலை நீட்டி சொல்லவும்.. சந்தோசமாய் தியாவை தூக்கிக்கொண்டு எழுந்து வந்தான் சூர்யா.
கீர்த்தியின் சந்தோசக்குரலில் சூர்யாவின் அம்மா திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள் எனப்புரிந்த திலகவதிக்கு மீண்டும் அழுகைதான் வந்தது.. பொது இடமென்றும் பாராமல்.. ‘அம்மா.. எனக்கு ஒரு கல்யாணமே போதும்.. தயவு செய்து என்னை விட்ருங்க..” என்று அன்னபூர்ணியின் காலைபிடித்து கதறியழுதாள் திலகவதி.
அவளின் கதறலால்.. சூர்யாவின் பெருக்கெடுத்த சந்தோசம் அப்படியே வடிந்துவிட.. ‘நீ என்ன கிழவியா..? கல்யாணம் பண்ணிக்காம வேற என்ன பண்ணலாம்னு இருக்க..?” என்று திலகவதியிடம் கோபமாய் கேட்டான் சூர்யா.
‘கோபப்படாத சூர்யா..” என்று சூர்யாவை அமைதிப்படுத்திய கீர்த்தி..
‘திலகா சூர்யா ரொம்ப நல்லவங்க.. சூர்யாவுக்கேத்த நல்லபொண்ணு நீ மட்டும்தான். உன்னைதவிர வேறயாரையும் சூர்யா கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க.. இப்ப இருக்க சூழல்ல உனக்கு ஒன்னும் புரியாது.. அம்மா பேச்சு கேட்டு அவங்க சொல்றமாதிரி நடந்துக்கோ.. அம்மா உனக்கு நல்லதுதான் பண்ணுவாங்க..” என்று கீர்த்தி சொல்லவும்.. அவங்க ஊருக்கு போகும்போது இதையேத்தான சொன்னாங்க… என்று தன் கணவனை நினைத்து மேலும் அழுதாள் திலகவதி.
‘தித்தா… ம்ஹ_ம்…” என்று திலகவதியிடம் .. அழாதிங்க என்பதுபோல் வேகமாய் தலையாட்டினாள் தியா.
‘மீ… அவங்க ஏன் அழறாங்க..?” என்று சோனாவும் கீர்த்தியிம் கேட்டாள்.
‘பொண்ணும்மா.. வாங்க எதாவது சாப்பிட வாங்கிட்டு வரலாம்..” என்று சோனாவையும் தியாவையும் அழைத்துக்கொண்டு கேண்டீனுக்கு போனான் சூர்யா.
குழந்தைகளுக்கு சாக்லேட்.. ஐஸ்கிரீம்.. என வாங்கியவன்.. பெரியவர்களுக்கு பஜ்ஜி.. வடை.. போன்று நிறைய வாங்கிவந்தான். சூர்யா வாங்கிவந்த ஒன்றைகூட திலகவதி சாப்பிடவில்லை. யாரிடமும் எதுவும் பேசாமல் காரினுள் போய் உக்கார்ந்துகொண்டாள். சூர்யா கோபமாக திலகவதியை பின்தொடரவும்…
‘கொஞ்சம் பொறுமையா இரு சூர்யா.. ஒரே நாள்ல எல்லாம் சரிபண்ணிட முடியுமா..? பாவம் ரொம்ப அழறாப்ல…” என்று ஆதவன் தடுக்கவும் அமைதியானான்.
‘இங்க இருந்தா திலகா ஒன்னும் சாப்பிடமாட்டா.. வீட்டுக்கு போலாம் ஆதவா..” என்றான் சூர்யா.
‘சரி கிளம்பலாம்..” என்று ஆதவன் சொல்ல.. அனைவரும் கிளம்பினர்.
வீட்டிற்க்குள் சென்றதும்.. மிகுந்த வாட்டத்தோடு வீல்சேரில் அமர்ந்திருக்கும் தன் அன்னையிடம் வந்த சூர்யா.. கீழே அமர்ந்து தன் அன்னையின் மடிமீது கையூன்றி.. ‘அப்பா சாகும்போது நானும் ஆதவனுமாவது பத்தாவதும் பனிரெண்டாவதும் படிச்சிட்டிருந்தோம்.. அப்பா இறந்ததுக்கப்புறம் எங்க படிப்புக்காக நீங்க பட்ட கஷ்டத்தை எதுவும் நான் மறக்கலம்மா..” என்று கண்கலங்கியவன்..
‘ஆனாலும் அப்பா உயிரோட இருக்கும்வரை வசதி வாய்ப்பில்லைன்னாலும் நாம எவ்ளோ சந்தோசமா இருந்தோம்..? உங்களுக்கும் அப்பாக்கும் சண்டைவந்து நான் பார்த்ததேயில்ல.. அத்தனை வறுமைலயும் பணத்துக்காக எத்தனை கஷ்டம் அவர்பட்டாலும்.. உங்க மனசுகோணாம அன்பாலயே உங்களை எப்படி தாங்கினார்ன்னும் நான் மறக்கலம்மா..” என்று பெருமையோடு சொல்லி..
‘அப்பா இறந்தது நமக்கு ஈடுகட்ட முடியாத இழப்புதான்.. ஆனாலும் நீங்களாவது கொஞ்சகாலம் புருசனோட அன்பை அனுபவிச்சிருக்கிங்க.. ஆனா திலகவதி.. பாவம்மா அவ.. வாழ்க்கைன்னா என்னன்னு புரியறதுக்குள்ளயே வாழ்க்கையை இழந்து நிக்கிறா.. நம்ம கண்ணு முன்னால ஒரு சின்னபொண்ணு கஷ்டப்படறதை பார்த்திட்டிருந்தோம்னா.. அப்புறம் நாமெல்லாம் தாயாபுள்ளையா பழகி என்ன பிரியோஜனம்..?
பிரசாத்தோட அப்பாம்மா காலத்துக்கப்புறம் திலகவதியோட நிலையை யோசிச்சிப்பாருங்க.. யாரோ ஒருத்தியை கல்யாணம் செய்யறதுக்கு பதிலா என் மனசுக்கு பிடிச்ச திலகவதியை கல்யாணம் செய்தா.. என் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்.. என் சந்தோசம் உங்க சந்தோசமில்லையா..?” என்று கெஞ்சலாய் கேட்க..
மகனின் தலையை வருடிய கமலம்.. ‘நான் எத்தனை சொன்னாலும் உன்னால உன்னை மாத்திக்க முடியாது.. ஏன்னா உன் உடம்புல கொஞ்சமும் என்னோட ரத்தம் ஓடலபோல.. முழுக்க முழுக்க உங்கப்பா ரத்தம்தான் ஓடுது.. எத்தனை கஷ்டத்திலயும் யாராவது எதாவது உதவி கேட்டுட்டா.. பத்து ரூபாதான் கையில இருக்குதுன்னாலும் அதுல ஐஞ்சுரூபாவை கேட்டவங்களுக்கு கொடுத்து அவங்க முகத்தில வர சந்Nதாசத்தை பார்த்து பசியாறுவார்.. அவர் பிள்ளை நீ.. உன்னை மாத்த முடியாது..
எனக்கு இந்த கல்யாணத்தில சந்தோசம்னு சொல்லமாட்டேன்.. அதேநேரம் உன்னோட மனசையும் என்னால கஷ்டப்படுத்த முடியாது.. போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நம்புறேன்.. நீ ஆகவேண்டியதைப் பாரு..” என்றார் வாஞ்சையாக.
‘அம்மா..” என்று சந்தோசமாய் அன்னையின் முகம் பார்க்க.. மகனின் முதுகை ஆதரவாய் தட்டிக்கொடுதார் கமலம்.