இரவு எத்தனை நேரம் ஆனாலும் சரி என்று பாலாவின் வரவிற்காக காத்திருந்தார் மரகதம். என்னவோ பல விசயங்களில் திடமாய் இருந்தவருக்கு இன்று லட்சுமி வந்து பேசி செல்லவும் மனம் சஞ்சலப்பட்டது.
என்ன ஏதென்று விசாரித்த கஜேந்திரனிடம் கூட மரகதம் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் அவருக்கும் தெரியாதே. அப்படியிருக்கையில் அவர் என்ன சொல்லவார்??
“சின்னவன் இன்னும் வரலை.. சாப்பாடு போடணும்…” என்று தன் கணவரிடமும், மாமியாரிடமும் சொல்லிவிட்டு வாசல் அருகே காத்திருக்க, கலங்கிய முகத்தோடு வாசலில் அதுவும் இந்த நேரத்தில் நிற்கும் அன்னையை கண்டவன், “என்னம்மா.. இங்க நிக்கிற..??” என்று கேட்க, அவன் முதுகில் ஒரு போடு போட்டவர்,
“கத்துன.. கொன்னுடுவேன்…” என்று மிரட்டியபடி உள்ளே வேறு ஒரு அறைக்கு இழுத்துச் செல்ல, பாலாவிற்கு என்னடா இது என்று தோன்றியது. உள்ளே சென்றதும் தான் தாமதம்,
“ம்மா என்னம்மா இது…” என,
“மெல்ல பேசித் தொலை…” என்றவர்,
“என்னடா ஆச்சு….??” என்றார் பதற்றமாக..
பாலாவிற்கு தான் விஷயம் எல்லாம் மரகதத்திற்கு தெரியும் என்று தெரியாதே. ஆகையால் பொதுவாக, “என்னம்மா..?? எதை பத்தி கேட்கிற…??” என்றான்.
“அடி வெளுத்து வாங்கிடுவேன் ராஸ்கல்.. என்னடா வீட்ல இருக்கவ தானே இவளுக்கு என்ன தெரிய போகுதுன்னு நினைச்சீங்களா அண்ணனும் தம்பியும்.. ஏன்டா இப்படி எங்களை போட்டு படுத்தி எடுக்குறீங்க.. எதுவா இருந்தாலும் நாங்களும் இருக்கோம்னு தெரியாவேணாமா?? ஒருவார்த்தை எங்க கிட்ட சொன்னா என்ன??” என்று கோவத்தில் ஆரம்பித்து கலக்கத்தில் முடிக்க, பாலாவிற்கே சங்கடமாய் போனது.
“ம்மா என்னம்மா..” என்று சமாதானமாய் அருகில் வர,
“அந்த துரைசாமி கூட என்னடா பஞ்சாயத்து.. அவனே வம்புக்கு அலையுற ஆளு.. இதெல்லாம் நமக்கு தேவையா…??” என்று மரகதம் சொல்ல, அடுத்த நொடி பாலாவின் முகம் அப்படியே மாறிவிட்டது.
மகனது முகத்தை வைத்து என்னவோ நடந்திருக்கிறது என்று கணித்துவிட்ட மரகதம், “என்ன பாலா என்னாச்சு.. டேய்…” என்று மகனின் தோளை தொட,
“அந்த நாய்… அவனுக்கு இன்னிக்கு எதோ நல்ல நேரம் இல்லாட்டி உயிரோட திரும்பி போயிருக்க மாட்டான் ம்மா.. என்ன பேச்சு பேசிட்டான் தெரியுமா…” என்று அப்போதும் கோவத்தில் முறுக்க,
“டேய் பாலா.. என்னடா?? எதுவும் பெரிய பிரச்சனையா???” என்று மரகதம் இன்னும் கலங்கினார்.
அவரது கலங்கிய கண்களை பார்த்த அவனுக்கோ மனம் இன்னும் சங்கடமாய் போனது. ஏற்கனவே ஈசன் கலங்கி போய்தான் வீட்டிற்கு போயிருக்கிறான். இதில் நடந்ததை சொல்லி அம்மாவையும் கவலைப்பட வைக்க அவன் விரும்பவில்லை.
“ம்ம்ச் ஒண்ணுமில்ல மா விடு…” என்று நகர பார்த்தவனை,
“இப்போ நீ சொல்ல போறியா இல்லையா??” என்ற மரகதத்தின் கணீர் குரல் நிறுத்த, அவனுக்கும் சொல்வதை தவிர வேறு வழியில்லை.
அவ்வளவு தான் அனைத்தையும் கேட்ட மரகதம் அப்படியே தலையில் கை வைத்து அங்கிருந்த இருக்கையில் சாய்ந்துவிட்டார். முகமெல்லாம் வேர்க்க, கண்கள் தன்னையும் அறியாது கண்ணீரை சொரிய, ஐயோ என்று வாய் சொன்னாலும் வார்த்தை வரவில்லை.
அதிர்ந்து போய் அமர்ந்திருந்த தன் அன்னையை கண்டவனுக்கு எப்படி இருந்ததோ, “ம்மா… இதுக்கு தான் நான் எதுவும் சொல்லலை..” என்று ஆதரவாய் தோள் பற்றினான் பாலா.
தன் இளைய மகனை நிமிர்ந்து பார்த்தவருக்கோ கண்களில் நீர் நிறைந்து பார்வையே மங்கலாய் ஆனது.
“டேய் சின்னவனே.. இதை.. இதை கேட்டு ஈசன் சும்மாவாடா இருந்தான்.. முதல்ல அவன் எப்படி இதை தாங்கினான்…?? அவனை சும்மா ஒருவார்த்தை சொன்னாலே அந்த குதி குதிப்பான்.. அவன் அடுத்தவங்க சொல்ற போலவாடா இதுவரைக்கும் நடந்திருக்கான் இல்லையே… இந்த பாழாப்போனா துரைசாமி வாயில இய்யத்தை காய்ச்சி ஊத்த…” என்று தன் மூத்த மகனை நினைத்து வருந்த,
“ம்மா… அடுத்து அண்ணா யாருகிட்டயும் ஒன்னும் பேசல… இப்போதான் வீட்டுக்கு போச்சு, அப்புறம் தான் நானும் கிளம்பி வந்தேன்..” என்று பாலா சொல்ல,
“வீ… வீட்டுக்கு போயிட்டானாடா… அப்போ சரி.. வா இப்போவே போயி பார்ப்போம்..” என்று மரகதம் கிளம்ப,
“ம்மா ப்ளீஸ்.. இப்போ வேணாம்.. கொஞ்சம் அண்ணனை தனியா விடுவோம்.. அங்க லட்சுமியும் இருக்கு.. எதுனாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்..” என்று மேலும் எடுத்து கூறி, ஒருவழியாய் அவரை உறங்க அனுப்பியவனுக்கும் மனதில் நிம்மதி இல்லை.
அனிதா விசயத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கும் தெரியும் தானே. அதில் சிறிதளவு கூட ஈசன் மீது தவறில்லையே.
எப்போதடா விடியும் என்று தாயும் மகனும் காத்திருக்க, பொழுது விடிந்த அடுத்த வேளை, வீட்டில் அவசர அவசரமாய் அனைத்தும் செய்துவைத்துவிட்டு பாலாவையும் அழைத்துகொண்டு மரகதம் நடுவாசல் வழியே இந்த வீட்டிற்கு வந்தால், அங்கு வீட்டின் வாசல் கதவோ திறந்தபடி இருக்க, லட்சுமியோ தான் அமர்ந்த நிலையிலேயே உறங்கிக்கொண்டு இருக்க, ஈசனும் அதே போல் இருக்கையிலேயே உறங்கியிருக்க, வந்து பார்த்த இருவருக்குமே அதிர்ச்சி தான்.
“என்ன கதவு திறந்து கிடக்கு… இந்த புள்ள லட்சுமியும் இப்படி தூங்குது…” என்று வேகமாய் உள்ளே வந்து வீட்டை ஒருமுறை தன் கண்களால் அலசியவர்,
“லட்சுமி… லட்சுமி…” என்று அவளை உசுப்பினார்.
அமர்ந்த நிலையிலேயே உறங்கியதால் கை கால்கள் எல்லாம் அப்படியே பிடித்துக்கொள்ள, அவளுக்கோ உடம்பை அசைக்க கூட முடியவில்லை. யாரோ தன்னை அழைப்பது போல் இருந்தாலும் கண்களை திறக்க கூட முடியவில்லை. இதற்கு நடுவே பாலா ஈசனை எழுப்பியிருக்க, அவன் சட்டென்று முழித்துவிட்டான்.
“என்னண்ணா இப்படியே தூங்கிட்ட…” என்றபடி அவனை எழுப்பி நிறுத்த பாலா முயல,
“நானே எழுந்துப்பேன்…” என்று ஈசன் எழுந்து, கை கால்களை சற்றே அசைத்து இப்படி அப்படி திருகி நிற்க, மரகதம் இன்னும் லட்சுமியை எழுப்பிக்கொண்டு இருந்தார்.
அப்பொழுது தான் ஈசனுக்கு லட்சுமி என்ற ஒருத்தியும் இவ்வீட்டில் இருப்பது தெரிய, ‘லஷ்மி எதுக்கு இப்படியே தூங்கினா.. ஒருவேளை நான் வந்ததை பார்த்து வெய்ட் பண்ணாலோ..’ என்று எண்ணியவனுக்கு அப்பொழுது தான் முன் தினம் நடந்தது, தான் நினைத்தது எல்லாம் நினைவில் வர,அவனது பார்வையும் லட்சுமி மீது படர,
லட்சுமியின் கலைந்த தலையும், இரவெல்லாம் நான் கலங்கி தவித்திருந்தேன் என்று பறைசாற்றிய முகமும் அவனுக்கு என்ன உணர்த்தியதோ, தனக்கு சற்று முன்பு நினைவில் வந்தது எல்லாம் எங்கோ ஒதுங்கி போக, இவளால் சரியாய் எழுந்து கூட நிற்க முடியாது போலவே என்ற எண்ணமும் தோன்ற,
சரியாய் அதே நேரம் லட்சுமியும் மெல்ல கண் விழித்து, எழுந்து நிற்க முயல, மடக்கிய நிலையிலேயே அத்தனை நேரம் இருந்ததால் கால்கள் அவள் சொல் பேச்சை கேட்கவில்லை. எழுந்த நிற்க முயன்றது தான் தெரியும்.. அடுத்த நொடி தள்ளாடி கீழே விழ போக, அருகில் இருந்த மரகதம் அவளை தாங்கி பிடிக்கும் முன்னே, ஈசன் இரண்டே எட்டில் அவளை சமீபித்து தாங்கியிருந்தான்..
“பார்த்து லஷ்மி….” என்றவனின் குரலில் தொனித்த அக்கறையும், அவனது அருகாமையும், அவளுக்கு மனதிற்குள் இதம் கொடுத்தாலும், இதெல்லாம் வேஷம், அடுத்தவருக்காக செய்கிறான் என்று தோன்ற உடம்போடு சேர்த்து மனமும் இறுகியது.. அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்தவள் படக்கென்று திரும்பிக்கொண்டாள்.
இரவு வந்ததும் தான் அப்படி அமர்ந்திருப்பதை இவனும் தானே கண்டிருப்பான், அப்பொழுதெல்லாம் ஒன்றும் கேட்காமல் இப்பொழுது என்னவாம் ‘பார்த்து லஷ்மி….’ என்று சொல்லிக்கொண்டு வரவேண்டியது என்று மனதிற்குள்ளே நொடித்தவள்,
“நா.. நானே.. போயிப்பேன்…” என்று ஈசன் கரங்களை பற்றி அவனை விலக்க முயல,
“என்ன போயிப்ப.. நிக்கவே முடியலை..” என்று இன்னும் அவன் பிடி அவள் இடையில் அழுந்த,
‘ஐயோ இந்த ஈஸ் மாமா எல்லார் முன்னாடியும் இப்படி பண்ணி தொலையணுமா…’ என்று நினைக்கும் பொழுது தான் ஈசன் தன் அம்மாவோடு ஒரு வார்த்தை கூட பேசாதது புரிந்தது. வேகமாய் தன் மாமியாரை பார்த்தவள், திரும்பி ஈசனை பார்க்க முயலோ, அவன் என்ன சொல்ல வந்தானோ,
“ரெண்டு பேரும் போய் முகம் கழுவிட்டு வாங்க….” என்று மரகதம் சொல்ல, இருவரும் வேறெதுவும் பேசாது தங்கள் அறைக்கு செல்ல இருவர் மனதிலும் ஆயிரம் கேள்விகள். இரண்டு அடி எடுத்து வைக்கும் போதே அவனிடம் இருந்து விலகி தான் நடந்தாள்.
‘என்னாச்சு இவளுக்கு…’ என்றபடி அவன் பார்க்க, அறைக்குள் நுழைந்தது தான் தாமதம் லட்சுமி வேகமாய் தன்னுடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். ஈசன் அவளை பற்றியிருந்த இடத்தில் இன்னமும் அதன் அழுத்தத்தை உணர முடிந்தது அவளால்.
‘ச்சே இந்த ஈஸ் மாமா என்ன தான் ஆளோ… நேத்து ஒரு வார்த்தை கேட்கலை ஆனா இன்னிக்கு அம்மா முன்னாடியும் தம்பி முன்னாடியும் அவ்வளோ அக்கறை இருக்க மாதிரி காட்டிகிறது…’ என்று அவனை திட்ட தொடங்கியவள்,
‘என்னாச்சு… இந்த ஈஸ் மாமா முகமும் சரியில்லையே.. ஓ..!! நேத்து பஞ்சாயத்துக்கு போனாங்கள்ள.. எதுவும் பிரச்சனை ஆகிருக்குமோ.. அதான் ஈஸ் மாமாவும் அப்படியே தூங்கிட்டாங்களோ…’ என்று பழையபடி அவனை பற்றியே சிந்திக்க தொடங்க, மிகவும் கடினப்பட்டே அவள் மனதை அடக்கினாள் லட்சுமி.
‘வேண்டாம் லட்சுமி.. நீ இப்படி உன் ஈஸ் மாமாவ நினைச்சு நினைச்சு தான் இப்போ இப்படி இருக்க.. வேணாம்.. எதுவா இருந்தாலும் இனி உன் மாமாவே சொல்லட்டும் நீயா வழிய போகாத…’ என்று அவள் மனம் சொல்ல, அதுதான் சரி என்று முடிவெடுத்தவள், நிதானமாகவே குளித்து முடித்து வெளி வர, ஈசன் அப்படியே கண்களை மூடி கட்டிலில் சாய்ந்திருந்தான்.