‘இந்த சாய்மானத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..’ என்று முனுமுனுத்தப்படி கண்ணாடி முன்னே நிற்க, அவளது அரவம் உணர்ந்த ஈசனோ எழுந்து அமர்ந்து லட்சுமியை பார்க்க, அவளோ சிறிதும் அவனை கண்டுகொண்டாளில்லை.
ஈசனது பார்வை கண்ணாடி வழியே அவளை சென்று தாக்க, அவளோ பழைய மாதிரி ஒரு வெற்று பார்வை தான் அவனை நோக்கி வீசினாள். அதே பார்வை.. திருமணத்திற்கு முன்பு வரை அவள் பார்த்த அதே பார்வை.
அது ஈசனுக்கு புரியாமல் போகுமா என்ன??
‘என்னாச்சு இவளுக்கு.. ஏன் மறுபடியும் இப்படி பார்க்கிறா…’ என்று யோசித்தவன், முதல் நாள் தான் வந்தது தெரிந்தும் தன்னிடம் ஒருவார்த்தை கூட இதுவரை லட்சுமி கேட்கவில்லை என்பதை உணர்ந்து, ‘கல்யாணத்துக்கு அப்புறம் நல்லாதானே இருந்தா.. இப்போ என்னவாம்..’ என்று தோன்ற, அவன் எப்படி இருக்கிறான் கல்யாணத்திற்கு பிறகு என்று உரைக்கவில்லை.
முன்தினம் இரவு அவன் என்ன நினைத்தான் என்று அவளுக்கு தெரியாது, அவள் என்ன நினைத்தாள் என்று அவனுக்கும் தெரியாது, ஆனால் இருவர் மனதிலுமே மற்றவர் தன்னை கவனிக்கவேயில்லை என்று எண்ணம் தோன்றியது.
லட்சுமி அடுத்து வெளியே வந்திட, மரகதமோ கேள்வியாய் லட்சுமி முகம் பார்க்க, பாலாவும் அப்படியே காண,
“என்னத்தை… என்ன??” என்றபடி இருவரையும் மாறி மாறி லட்சுமி பார்க்க,
“அது… அது வந்து.. ஈசன் நேத்து எதுவும் சொன்னானா???” என்று கேட்கும் போதே மரகதத்திற்கு கண்கள் கலங்கியது. தன் பிள்ளைகளை யார் ஒருவார்த்தை சொன்னாலும் பெற்ற நெஞ்சம் தாங்குமா?? அதுவும் எப்படி பட்ட வார்த்தை அது??
அவரது கலங்கிய முகமும் பாலாவின் கேள்வியான பார்வையும் லட்சுமிக்கு என்ன உணர்த்தியதோ போதாத குறைக்கு இந்த நேரத்தில் வேறு வரவும் நிச்சயம் எதுவோ பெரிதாய் நடந்திருக்கிறது என்பதனை உணர்த்த, “அத்தை.. என்ன?? என்னாச்சு…” என்று மீண்டும் லட்சுமி கேட்கும் முன்னே ஈசனும் வந்துவிட்டான்.
அவ்வளவு தான் மரகதம் நேராக மகனிடம் சென்று, “ஏ அய்யா ஈசா….” என்றழைக்க, ஈசனோ தன அன்னையை பார்த்தானில்லை..
“ம்மா… முதல்ல அண்ணனுக்கு குடிக்க எதாவது குடுங்க…” என்று பாலா சொல்ல, வேகமாய் சமையலறை நோக்கி மரகதம் திரும்ப,
“லஷ்மி நீ கொண்டு வா…” என்ற ஈசனது பேச்சு அங்கே அனைவரையுமே அதிர வைத்தது.
அவ்வளவு தான் மரகதம் அத்தனை நேரம் அடக்கிவைத்திருந்த அழுகையை வெடிக்க, “ஈசா….!!!” என்று அதிர்ந்து விளிக்க,
அவனோ, “லஷ்மி உன்னை தான் சொல்றேன்.. காது கேட்குதா…” என்று கர்ஜிக்க. லட்சுமிக்கு என்ன பதில் சொல்ல என்று கூட தெரியாமல் அவள் கால்கள் தன்னப்போல் சமையலறை நோக்கி சென்றது.
ஏற்கனவே கலக்கி வைக்கபட்டிருந்த காப்பியை ஈசனுக்கு ஏற்றவகையில் சூடு செய்து எடுத்து வந்து நீட்ட, அவனது முகமோ இன்னும் இறுகி போயிருந்தது. மரகதமோ மகன் தன்னிடம் பேசமாட்டானா என்று பார்த்திருக்க, பாலாவோ தன் அண்ணன் என்ன சொல்ல போகிறான் என்பது போல் பார்க்க இவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஈசன் வாய் திறக்க மாட்டான் என்று நிச்சயமாய் உணர்ந்தவர்,
“ஈசா….” என்றழைக்க,
தன் அம்மா இந்த காலை வேளையிலேயே வந்திருப்பது அனைத்தும் தெரிந்து தான் என்று அவனுக்கு புரியாமல் இருக்குமா என்ன?? சில நேரம் மௌனித்து இருந்தவன்,
“அண்ணா…!!!” என்று பாலாவும், “ஈசா…!!!” என்று மரகதமும் ஒருசேர அதிர்ந்து அழைக்க, ஈசனது முகத்திலோ எவ்வித உணர்வும் இல்லை.
லட்சுமிக்கோ சுத்தம்.. அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. வேடிக்கை பார்ப்பது போல் பார்த்து நிற்க, ஈசனது பார்வையும் ஒருநொடி அவளை தொட்டு தான் மீண்டது. ஆனால் மரகதமோ தன் மகனை சமாதானம் செய்யும் பொருட்டு,
“ஈசா நான் சொல்றதை கொஞ்சம் கேளு சாமி…” என்று கெஞ்ச,
“என்னமா?? இன்னும் என்ன கேட்கணும்.. காது குளிர, மனசு குளிர நல்லா கேட்டுட்டேன் நேத்து.. நான் இப்படி ஒருவார்த்தை கேட்கனும்னு தானே நீயும் அப்பாவும் அப்படி பண்ணீங்க..??” என்று அடுத்த இடியை இறக்க, மரகதத்தின் பார்வையோ நொடி பொழுதில் உனக்கு எப்படி தெரியும் என்ற அர்த்தத்தில் அவனை கண்டது.
“என்னம்மா எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா? எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சீங்களா??? எனக்கு எல்லாம் தெரியும்… எப்பவோ.. சொல்ல போனா அப்போவே தெரியும்..” என்று ஒவ்வொன்றாய் பேச பேச, மரகதம் வெகுவாக கலங்கித் தான் போனார்.
“அண்ணா…” என்று எதுவோ பாலா சொல்ல வர, நீ பேசாதே என்பது போல் தன் தம்பியையும் பார்க்க, அவனும் வாய் மூடி நின்றான்.
“என்னம்மா அப்படி அதிர்ச்சி ஆகி நிக்கிறீங்க?? இல்லை இன்னிக்கு இப்படி ஒரு பேச்சு வாங்கணும்னு தான் ஆசை பட்டீங்களா… அத்தனை பேர் முன்னாடியும் நீ யோக்கியமான்னு கேட்கிறான் மா.. உங்க விருப்பப்படியே நடந்த எனக்கு இந்த பேச்சு தேவை தான.. ” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்தில் ஈசன் சொல்ல,
என்ன நடக்கிறது என்பது புரியாவிடினும் ஈசன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிய, திகைத்து நின்றாள் லட்சுமி.
“ஈசா அப்படியெல்லாம் இல்ல ராசா.. அந்த துரைசாமி எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் சொல்றான்னு நீயும் இப்படி இருக்கலாமா?? நீ தங்கம்டா… உன்னை யாரும் ஒருவார்த்தை சொல்ல முடியுமா….” என்று மகனை சமாதானம் செய்ய மரகதம் விழைய, ஈசனோ இன்னும் இறுகினான்.
“ஹ்ம்ம் ஒரு தடவைன்னாலும் பேச்சு வாங்கினது இல்லைன்னு ஆகிடுமா?? நான் அப்படி என்னம்மா தப்பு பண்ணிட்டேன்… சொல்லுங்க… காதலிச்சது தப்பா?? இல்லை உங்கட்ட அதை மறைச்சேனா இல்லையே..???” என்று ஈசன் கேட்ட கேள்வி யாருக்கு அதிர்ச்சியோ இல்லையோ லட்சுமிக்கு நிச்சயம் அதிர்ச்சி தான். பேரதிர்ச்சி..
இத்தனை நேரம் என்னவோ ஏதோவென்று பார்த்திருந்தவளுக்கு, ஈசன் தன் கடந்த கால காதலை பற்றி பேசவும், அதுவும் அவன் தொனியில் தெரிந்த வேதனை வேறு அவளை உசுப்ப, ஒருநொடி நெஞ்சே நின்றுவிட்டது.
“ஈசா…” என்று மகனை சொல்லியபடி மரகதம் மருமகள் முகம் பார்க்க, லட்சுமியோ அதிர்ந்து போய் பார்க்க, ஈசன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
“ஏன் ஏன் இவ்வளோ ஷாக்??? எல்லாம் தெரிஞ்சு தானே என்னை லஷ்மி கல்யாணம் பண்ணா??”
எல்லாம் தெரியும் தான். கண் முன்னே பார்த்திருக்கிறாள் தான்.. அவ்வளவு ஏன் அந்த அனிதா விட்டுப்போன கடுப்பில் தான் ஈசன் லட்சுமியிடம் காய்ந்தது. அதெல்லாம் அவள் மறக்கவில்லை தான். ஆனால் லட்சுமியை பொருத்தமட்டில் அனிதா ஒரு விசயமே இல்லை. அவள் ஈசனது வாழ்விலும் இல்லை. அப்படியிருக்க ஈசன் அவளை காதலித்தது எல்லாம் நினைவில் கூட இல்லை.
ஈசன் என் கணவன் என்பது மட்டுமே அவளது சகலத்திலும் இருக்க, இன்று அவனே அவன் வாயால் தன் கடந்து போன காதலை பற்றி பேச, யாருக்கு தான் தாங்க முடியும். ஆனாலும் நின்றிருந்தாள். அசையாது.. நீ என்ன சொல்ல வேண்டுமோ சொல்.. நீ சொல்வது எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையில் அவள் நிற்க,
“வேணாம் ஈசா.. முடிஞ்சு போனது பத்தி பேசாத.. விடு…” என்று மரகதம் சொல்ல,
“எது முடிஞ்சு போனது?? எது?? நானும் அப்படிதான் நினைச்சேன்.. ஆனா அது அப்படியில்லைன்னு நல்லா தெரிஞ்சு போச்சு.. சொல்லும்மா ஏன் அப்படி செஞ்சீங்க??? உங்களுக்கு அனிதாவ பிடிக்கலைனா அதை நேரா என்கிட்டே சொல்லிருக்கலாம்..
அதை விட்டு அவங்க வீட்ல வெளிநாட்டு மாப்பிள்ளை அது இதுன்னு சொல்லி தூண்டி விட்டு.. அனிதா மனசையும் மாத்தி.. ஏன் மா இப்படி பண்ணீங்க… அன்னிக்கு நீங்க எல்லாம் பண்ண ஒருவிசயம், ஒரு நிமிசம்னாலும் இப்போ நான் தலை குனிஞ்சு நின்னேன்ல… எனக்குன்னு ஒரு பேர்… ஒரு அடையாளம் இதை உருவாக்க இத்தனை வருசத்துல எவ்வளோ கஷ்டபட்டிருப்பேன்.. அதெல்லாம் இப்போ ஒண்ணுமே இல்லைங்கிற மாதிரி அந்த துரைசாமி பேசிட்டு போயிடான்ல..” என்று கோவமும் விரக்தியும் ஒருவித கசப்புணர்வும் கலந்த குரலில் ஈசன் பேச மரகதமோ சொல்வதற்கு வார்த்தைகளை தொலைத்து விட்டு நின்றிருந்தார்.
உண்மைதான் ஈசன் சொன்ன அனைத்தும் உண்மை தான். அனிதா ஈசனது காதல் கஜேந்திரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனாலும் மகனுக்காக என்று மரகதம் சொன்னாலும் சரி பார்ப்போம் என்று இருந்தவருக்கு, என்னவோ அனிதாவை காணும் போதெல்லாம் இவள் ஈசனுக்கு பொருந்தி வரமாட்டாள் என்றே தோன்றியது.
ஈசனுக்கு பொருந்தியும் வரமாட்டாள், அந்த வீட்டிற்கு ஏற்ற மருமகளாகவும் இருக்க மாட்டாள் என்று தோன்ற, மகனிடம் இதை பற்றி பேசினால் அவன் முடிவு இன்னமும் உறுதியாகுமே தவிர தளராதே.ஆகையால் ஒரு தந்தையாக, அந்த வீட்டின் தலைவனாக அனிதாவை ஈசனது வாழ்வை விட்டு அகற்றும் முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் செவ்வனே செய்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார்.