குளிர்ந்த காற்றை வீசிக்கொண்டு மரங்களின் கிளைகள் இயற்கையின் நாதத்திற்கு ஏற்றபடி தன் தலையசைக்க, வெண்ணிலவோ பளீரென்ற வெளிச்சத்தோடு அழகாய் மேகங்களுக்கிடையே ஒளிந்து விளையாட, ஈசன் லட்சுமியின் அறையிலோ, காற்றாடி உச்சபட்ச வேகத்தில் சுற்றினாலும் கூட,
லட்சுமிக்கு நெற்றியிலும், மூக்கிலும் லேசாய் வேர்வை துளிகள் பனித்துளி போல் ஒளி வீச, உதடுகளின் நடுக்கத்திற்கு ஏற்றது போல் உடம்பிலும் நடுக்கம் தோன்றி தோன்றி மறைந்தது. ஈசன் கரங்கள் அவளை தீண்ட தீண்ட, ஏற்கனவே அவன்பால் மயங்கியிருந்தவளுக்கோ சொல்லவும் வேண்டுமா.
“மாமாப்ளீஸ் மாமா… வேணாம் மாமா…” என்று கண்களை இறுக மூடி லட்சுமி படுத்திருக்க,
“சொன்னா கேளு லஷ்மி….” என்றவனின் குரலோ அவள் இதயத்தை இன்னும் வேகமாய் துடிக்க வைத்தது.
“ப்ளீஸ் மாமா…. வேணாம்.. கூசுது….”
“போக போக சரியாகிடும் லஷ்மி..” ஈசனது குரல் அவளை கட்டுப் படுத்துவது போல் இருக்க,
‘இந்த ஈஸ் மாமா தெரிஞ்சு தான் பேசுறாங்களா…’ என்றேண்ணியவள் கண்களை மெல்ல திறந்தாள். தன்னருகே அமர்ந்திருப்பவனை கண்டு மனதிற்குள் அத்தனை ஆனந்தமாய் இருந்தது.
“என்ன லஷ்மி அப்படி பாக்குற….??” என்று கேட்டவனின் குரலிலும் கண்களிலும் தான் எத்தனை கலவையான உணர்வுகள். அவன் பார்வையை தாங்க முடியாதவள் மீண்டும் தன் விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.
அவனுக்கோ உதட்டில் ஒட்டிய புன்னகை மறையவுமில்லை, மாறவுமில்லை. ஏனோ இன்னும் இன்னும் லட்சுமியை சீண்டி பார்க்கவே தோன்றியது. ஈசனின் விரல்களோ அவள் கழுத்தை வருட, தேகம் சிலிர்த்து நரம்புகள் நிறமாறி இசைமீட்ட, கூச்சம் ஒருப்பக்கமும், வெட்கம் ஒருபக்கமுமாய் உணர்வு கலவைக்குள் நீந்திக்கொண்டு இருந்தாள் லட்சுமி.
என்னதான் கண்கள் மூடியிருந்தாலும், அவள் மனம் நன்றாய் விழித்து தானே இருந்தது. அதுவும் ஈசனை மட்டுமே தானே கண்டும் நினைத்தும் கொண்டு இருக்கிறது. அப்படி நினைத்த மனமோ சற்று நேரத்திற்கு முன்னே நடந்ததையும் சேர்த்தே நினைத்தது.
ஈசன் குளியலறைக்குள் நுழைந்ததும், அவளும் அவனோடு பேசும் எண்ணத்தில் எங்கே என்று கூட உணராமல் அவன் பின்னே செல்ல, அவனோ வேகமாய் திரும்பி அவளையும் இழுத்து சுவரில் சாய்த்து நிறுத்தி,
“என்ன தான் டி வேணும் உனக்கு??? ஒன்னு பேசாமையே முகத்தை திருப்புற.. இல்லை பேசியே பின்னாடி சுத்துற..” என்று சற்றே எரிச்சலாய் கேட்டபடி தன் கண்களை அவள் விழிகளோடு உறவாட விட, ஈசனின் இந்த திடீர் செய்கையில் அனைத்தும் மறந்து போனது அவளுக்கு.
அவளது இரண்டு தோள்களையும் அவன் கரங்கள் பற்றியிருக்க, இருவருக்கும் இடையே இடைவெளி இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல், அதுவும் குளிக்கும் அறைக்குள் அவன் பின்னே தானும் வந்ததை எல்லாம் எண்ணி, வெக்கம் மேலிட, தான் ஏன் அப்படி வந்தோம் என்பதையும் மறந்து அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
இத்தனை அருகாமையில் ஈசனை இதுவரைக்கும் கண்டதில்லை. அதிலும் இப்படி ஒரு இடத்தில், பேச்சு வருவேணா என்று சண்டித்தனம் செய்ய, கண்களோ அவன் முகத்தை விட்டு நகரவே மாட்டேன் என்று அடம் பிடித்து தொலைத்தது.
பேச்சை மறந்து, தான் சொல்ல வந்ததை பார்வையில் பரிமாற்றம் செய்திட நினைக்க, அவனோ அதிர்ச்சியையும் கூச்சத்தையும் வெளிபடுத்திய அவள் விழிகளையே பார்த்திருந்தான்.
அவனுக்குமே அவளருகே இப்படி நிற்பது புதிது தானே. ஆனாலும் அவனாக ஏற்படுத்திய அருகாமைதானே. லட்சுமிக்கு ஏற்பட்ட அதிர்வு இவனுக்கு இல்லையோ என்னவோ ஆனால் எதோ ஒன்று அவனுள்ளும் ஒரு மாற்றம் நிகழத்தான் செய்தது.
“லஷ்மி…..” என்றவனின் பார்வை அவள் கண்களை தாண்டி கன்னம் வந்தடைய, அவன் பார்வை வட்டத்தில் லட்சுமியின் கழுத்தில் சிவப்பாய் இருந்த தடயங்கள் பட, சட்டென்று அவன் பார்வை மாறி,
“என்ன லஷ்மி இது…” என்று அவள் கழுத்தை தொட்டான். அவன் கை பட்டதும் தன்னியல்பான கூச்சத்தால் லேசாய் தோளை சுருக்கியவள்
“எ… எது மாமா….??” என்றாள் சத்தமே வரமால்.
“இதான்.. இப்படி செவந்திருக்கு??? என்னாச்சு…” என்று மீண்டும் அவ்விடம் வருட, அவளுக்கோ இன்னும் கூசியது. லட்சுமியின் மனதிலும் உடலிலும் ஒரு மெல்லிய அதிர்வலை பரவ, அவனுக்கோ அவள் காயம் மட்டுமே பிரதானமாய் தெரிந்ததோ இல்லை அப்ப்டிக் காட்டிகொண்டானோ தெரியவில்லை.
“அ.. அது… மதியம் கொ.. கொழம்பு தெரிச்சிடுச்சு மாமா…” என்று ஒருவழியாய் சொல்லி முடித்தவளை, இப்பொழுது முறைத்து நின்றவன் சற்றே தள்ளி விலகி நிற்க, அவன் விலகி நிற்கவும் தான் லட்சுமிக்கு மூச்சே விட முடிந்தது போல் இருந்தது.
“நான் கேட்டதுக்கு கை சுட்றுச்சு சொன்ன…??”
‘யோவ் மாமா இப்படி பார்த்து தொலையாத.. பேச்சே வந்து தொலைய மாட்டேங்குது…’
“உன்னை தான் லஷ்மி கேக்குறேன்ல….” என்றவனின் குரல் லேசாய் அதட்டியது போலிருக்க, அதில் தன்னிலை வந்தவள்,
“ஹா என்ன மாமா….” என்றாள்.
“விளங்கிச்சு….” என்று முனுமுனுத்தவன், அவள் கைகளை பற்றி இழுத்து வெளியே செல்ல, மறுபடியும் “ஸ்.. ஆ…” என்றாள் வலியுடன்.. பிடித்த கரங்களை பட்டென்று விட்டவன், இப்போ என்ன என்பது போல் பார்க்க, அவன் பிடித்த இடமும் குழம்பு தெறித்து சிவந்த்திருந்தது.
“நான் கேட்டதுக்கு ஏன் கை சுட்டுச்சுன்னு பொய் சொன்ன..??”
“என்ன அவ்வளோதான்.. பாரு எப்படி சிவந்திருக்குனு..” என்று அவளை வேகமாய் திருப்பி கண்ணாடி முன்னே நிற்க வைக்க, அந்த ஆளுயர கண்ணாடியில் அழகாய் இருவரின் பிம்பமும் தெரிய, லட்சுமிக்கு தன் காயமா தெரியும்??
அவளின் பார்வையோ ஈசனின் முகத்திலேயே இருக்க, அவனோ அவள் பதிலுக்காய் அவள் முகம் பார்த்திருந்தான்.
“சொல்லு லஷ்மி…” என்றவனின் பிடி இன்னும் அழுத்தமாய் அவள் தோள்களில் படிய,
“அ.. அது… குழம்பு தாளிச்சு ஊத்துனேன்.. அப்போதான்… நீ…நீங்க பாட்டிக்கிட்ட பேசின சத்தம் கேட்கவும் பொத்துன்னு குழம்பை விட்டு அது தெரிச்சிடுச்சு…” என்று பாவமாய் முகத்தை வைத்து கூறியவளை இப்போது அவன் பார்வை வித்தியாசமாய் பார்த்தது.
“நான்.. பேசினதுக்கும் இதுக்கும் என்ன??? ”
“அது.. அதுவந்து மாமா.. உங்கட்ட பேச நேரம் பார்த்திட்டு இருந்தேனா.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்களா… சரின்னு சமைக்க வந்தேன். திடீர்னு உங்க குரல் கேட்கவும் பட்டுன்னு விட்டேன்…” என்றவளின் பார்வையோ இதற்குமேல் எதுவும் கேட்காதே என்பது போல் இருக்க, அதெல்லாம் ஈசன் கேட்பானா என்ன??
“ம்ம் பார்த்து செய்யமாட்டியா…” என்றவன், “எதுவும் தடவுனியா??” என்று கரிசனையாய் கேட்க, அவளும் ஆம் என்பது போல் தலையை உருட்டினாள்.
“என்ன தடவுன…???”
“எண்ணெய் தான் மாமா தடவுனேன்…” என்று அவனை பார்த்துக்கொண்டே சொல்ல,
“ஏன் ஆயின்மென்ட் போடலையா…??” என்று கேட்டபடி அவன் மருந்தை எடுக்க செல்ல,
“தூங்கும் போது போடலாம்னு இருந்தேன் மாமா…” என்றவளின் பார்வையும் கண்ணாடி வழியே ஈசனை தொடர்ந்தது.
இத்தனை நேர பேச்சும் ஒருவர் முகத்தை ஒரு ஒருவர் கண்ணாடியில் பார்த்தே பேசிக்கொண்டிருக்க, அது லட்சுமிக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஈசன் தன்னை கவனிக்கிறான், தன் மீது அக்கறைகொள்கிறான், தனக்காக யோசிக்கிறான் என்றெல்லாம் நினைக்கையில் அவள் மனம் ஆனந்த நர்த்தனம் தான் ஆடியது. தன்னுணர்வுகளில் மூழ்கியவள் ஈசனை கண்ணாடி பக்கமாகவே பார்த்து நிற்க,
“லஷ்மி இப்படி வந்து படு….” என்ற ஈசனின் அழைப்பு உலுக்க,
“இருக்கட்டும் மாமா… கொஞ்ச நேரம் போகட்டும்…” என்றவளை மீண்டும் கரங்கள் பிடித்திழுத்து படுக்க வைத்தவன்., அவளருகே அமர்ந்து மருந்தை அவள் கழுத்தில் தடவ, அவளுக்கோ கூச்சமாய் போனது.
“ப்ளீஸ் மாமா வேணாம் மாமா…” என்று கெஞ்சினாலும் அவனோ விட்டபாடில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தவள், ‘போ நீ என்னமும் செய்…’ என்று கண்களை இறுக மூடிக்கொண்டு அவனை ரசிக்க தொடங்கினாள். ஈசன் அப்படி அவளை அத்தனை நிம்மதியாய் இருக்க விட்டுவிடுவானா??
“லஷ்மி…” என்று மீண்டும் அழைத்தான்.. ஆனால் இம்முறை அவள் இமைகள் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க, உதடுகள் மட்டும்,
“என்ன மாமா….” என்று பதில் கொடுத்தது.
“என்னை எதுக்கு தேடின???” என்றவனின் கரங்கள் அவள் கழுத்தில் இருந்து அவள் கைகளுக்கு மருந்திட, அவளோ அந்த இதத்தில்,
“அது மாமா… சாரி கேட்க தேடினேன்…” என்று உண்மையை சொல்ல,
அவனோ, “கேட்டியா..??” என்றான் மென்னகையோடு.
அவனும் அப்போதிருந்து அவளை பார்த்துகொண்டு தானே இருக்கிறான். கண்கள் திறப்பதும் பின் மூடுவதும், இமைகளுக்குள்ளே கருவிழிகள் அங்கும் இங்கும் அலைப்பாய்வதும், என்று அவள் முகம் காட்டும் வர்ணங்களும் ஜாலங்களும் தான் எத்தனை. தன்னை மீறிய ஆர்வத்தில் தான் ஈசன் இப்படி பேச்சை வளர்ப்பது.
இப்பொழுதும் புன்னகையோடு அவள் முகம் பார்த்து, தன் கரங்கள் பார்த்துகொண்டிருந்த வேலையை நிறுத்த, அவள் கரத்தில் இருந்து அவன் கரம் விலகியதும் கண்களை திறந்தவள்,
“என்ன மாமா..??” என்றாள் புரியாமல்..
“இல்ல சாரி கேட்க தேடினயே.. அதை கேட்டியான்னு கேட்டேன்…” என்றான் இன்னும் மலர்ந்து சிரித்து.
“அட ஆமால்ல.. மறந்தே போயிட்டேன்…” என்று தலையில் லேசாய் தட்டியவள், எழுந்தமர்ந்து கட்டிலில் சாய்ந்தபடி, “சாரி மாமா…” என்றாள் நிஜமாகவே.
“ம்ம் இந்த சாரி எதுக்கு??? மறந்துபோனதுக்கா இல்ல நீ முன்னாடி கேட்க நினைச்சதுக்கா…??” என்றவனின் குரலில் அப்பட்டமாகவே கிண்டல் தெரிய,
அவன் கிண்டல் அவளை உசுப்ப “ஹா… ஓயாம எல்லாம் நான் சாரி கேட்கமாட்டேன்.. ஒரு சாரி தான்.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிக்கோங்க…” என்று பழைய லட்சுமியாய் மாறியிருந்தாள்.
அவள் ஏன் கேட்கிறாள் என்று தெரியாமல் இருக்குமா என்ன?? ஆகையால் வேறெதுவும் விளக்கம் கேட்காமல், “ம்ம்…” என்று சொன்னவன், பின் எதோ யோசனையாய் நெற்றியை சுருக்கி எதுவோ கேட்க வர, அதே நேரம் வெளிய “அண்ணா…” என்ற பாலாவின் குரல் கேட்டது.
அவ்வளவு தான் அத்தனை நேரம் இருவரையும் ஒரு இடத்தில் பிடித்து வைத்த மாயவலை சடுதியில் மறைய, ஈசன் வேகமாய் எழுந்து வெளிவர, லட்சுமி சற்றே ஒரு பெருமூச்சை விட்டு கண்ணாடி பார்த்து தன்னை சரி செய்துகொண்டே வெளிவந்தாள்.
இருவரும் ஒரே இடத்தில் இருந்து வெளிவரவும், பாலா, “என்னண்ணா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…??” என்று கேட்டுவிட்டு,
ஈசன் அறியாவன்னம், லட்சுமியை நோக்கி, கிண்டலாய் கட்டை விரலை உயர்த்த, அவளோ ‘கொன்னுடுவேன்….’ என்று சைகை காட்டினாள். இதெல்லாம் ஈசன் கவனித்துகொண்டு தான் இருந்தான். ஆனாலும் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.
என்ன இருந்தாலும் இருவரும் நண்பர்கள் ஆகையால் அதில் தான் உள் செல்வது சரியல்ல என்று அவனுக்கு தெரியும். ஈசன் அமைதியாய் இருப்பதை பார்த்து பாலா மீண்டும் “அண்ணா…” என்றழைக்க,
“என்ன பாலா…” என்றான்.
“அது… யாருன்னு விசாரிக்க சொன்னியே…”
“ம்ம்ம்…”
“நீ சந்தேகப்பட்டது சரிதாண்ணா…”
“துரைசாமி தான….”
“ஆமாண்ணா.. அவனே தான்…”
இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த லட்சுமிக்கோ ஒன்றும் புரியவில்லை. இறுதியில் துரைசாமி பேரைக் கேட்டதும்,
“எதுவும் பிரச்சனையா…??” என்று கேட்டாள் இருவருக்கும் பொதுப்படையாய்.