லட்சுமி கேட்டதற்கு ஈசன் பதில் சொல்வான் என்று பாலா அவன் முகம் பார்க்க, ஈசனோ வேறு யோசனையில் இருந்தான் போலும்.
“அது… நேத்து கேபிள் வயர் எல்லாம் கட் பண்ணி போட்டது அந்த துரைசாமி ஆளுங்க தான் ல.. மதினி…. ஓரளவு சரி பண்ணாலும்.. இன்னும் முழுசா சரியாகலை.. ஜங்சன் இருக்க இடத்தில எல்லாம் வயர மாத்தி மாத்தி போட்டு ரொம்ப பண்ணிருக்காங்க..
நமக்கு நட்டம் வேற.. ஆளுங்க கேட்கிறதுக்கு பதில் வேற சொல்ல முடியலை. பிரபுவும், இன்னொரு ஆளும் சேர்ந்து தான் இப்போ ஆபிஸ்ல உக்காந்து எல்லாம் டியூன் பண்ணிட்டு செட் பண்ணிட்டு இருக்காங்க.. ரெண்டு மூணு இடத்துல ஜங்சன் பாக்ஸை போட்டு உடைச்சிருக்காங்க.. அங்க எல்லாம் புதுசு வேற வைக்கணும்…” என்று பாலா எடுத்து சொல்ல,
இத்தனை பிரச்சனை இருந்துமா ஈசன் இத்தனை நேரம் தன்னோடு இருந்தான் என்று தோன்ற, இதெல்லாம் எதுவும் தெரியாமல் தான் பாட்டுக்கு அவனை இஷ்டத்திற்கு காலையில் பேசிவிட்டோமே என்று தோன்றியது. ஆனாலும் லட்சுமிக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தான் தோன்றியது. அந்த துரைச்சாமி ஒருவகையில் இவர்களுக்கு உறவும் கூட.
“ஏன் பாலா.. நிஜமாவே இதெல்லாம் துரைச்சாமி மாமா தான் பண்ணாங்களா?? நல்லா தெரியுமா???” என்றவளின் குரலில் எதற்கும் இன்னொருமுறை விசாரித்து பார்ப்போமே என்ற செய்தி இருக்க,
“ஆமா.. அவனை மாமான்னு வேற சொல்லிக்க.. என்னை பத்தி தெரியாம வம்பு வச்சிட்டான்… கண்டிப்பா இதுக்கு அவன் பதில் சொல்லித்தான் ஆகணும்…” என்று ஈசன் லட்சுமியை பார்க்க, அவன் பார்வையில் இருந்த தீவிரம் அவளை வாயடைக்க வைத்தது.
லேசாய் பயந்துபோய் பாலாவை பார்த்தாள். அவனோ அண்ணனுக்கு மேல் முறுக்கிக்கொண்டு நின்றிருந்தான். ஒருவேளை ஈசன் இருக்கிறான் என்ற தைரியாமோ என்னவோ.
‘எங்க இருந்துதான் இந்த ரெண்டுக்கும் கோவம் வருமோ…’ என்றெண்ணி முடிக்கவில்லை,
“பாலா… நாளைக்கு துரைச்சாமியா நான் பார்க்கணும்..” என்றான் ஈசன்.
துரைச்சாமியும் தனி கேபிள் வைத்திருப்பவன் தான். ஈசனுக்கு முன்னேயே தொடங்கியவன். ஆனால் தொழில் சுத்தமில்லை. ஈசன் புதிதாய் கேபிள் தொடங்கவும் அவனிடம் இருந்த முக்கால்வாசி வாடிக்கையாளர் இங்கே மாறினர். அது அவனுக்கு ஏகப்பட்ட கடுப்பு.
அதுவுமில்லாமல் ஈசன் கேபிளில் புதிது புதிதாய் யுக்திகளை கையாள அது இன்னும் பேர் பெற்றது. ஆண்டிபட்டி சுற்றிலும் இன்னமும் வாடிக்கையாளர் பெருக, ஒன்றிற்கு இரண்டாய் ஆபிஸ் போட்டான் ஈசன்.
காலை ஐந்து மணிக்கு கடவுள் வாழ்த்தோடு தொடங்கும் நிகழ்சிகள், அன்றைய நாட்டு நடப்பு தொடங்கி, ஊரில் நடக்கும் நல்லது கெட்டது, முக்கிய நிகழ்வுகள் என்று ஆரம்பித்து, ஜவுளிக்கடை, நகைக்கடை விளம்பரம், தினசரி மார்கெட் நிலவரம் என்று வலம்வந்து, நேயர் விருப்பம் பாடல்கள் மற்றும் நேரலை பேட்டிகள் என்று பயணித்து, மக்களின் மனதில் ஈசன் கேபிள் தனி இடத்தை பிடித்தது.
இதற்கான பொருள் செலவும் ஜாஸ்தி தான் என்றாலும் நல்ல தரமான ஒளிபரப்பு என்பதால் அனைவரும் விரும்பினர். ஈசன் தன் கேபிளுக்கு என்றே தனி கேமரா குழு வைத்திருந்தான். இருபது பேருக்கும் மேலே குழுவாகவோ இல்லை தனி தனியாகவோ மற்ற வேலைகளை கவனிக்க, அது ஒரு தனியார் சேனல் போலவே இயங்கிக் கொண்டிருந்தது.
ஈசன் கேபிள் தொடங்கியதால் தான் தனக்கு வாடிக்கையாளர் இல்லாது போயினர் என்று மட்டுமே துரைசாமிக்கு. ஆகையால் ஆரம்பத்தில் இருந்தே சிறு சிறு குடைச்சல் குடுத்தவன், இன்று ஆண்டிபட்டியில் இருக்கும் மற்றொரு பெரிய மனிதர் வீட்டின் திருமண நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப ஈசன் பேசியிருக்கிறான் என்று தெரிந்ததும், இன்னும் இன்னும் ஆத்திரம் கிளர்ந்தெழ, இப்படி வயர்களை எல்லாம் பிடுங்கியதுமில்லாமல் நிறைய நட்டத்தையும் உண்டாக்க முயற்சித்திருக்கிறான்.
ஆகையால் தான் ஈசனுக்கு இத்தனை கோவம். இதெல்லாம் லட்சுமிக்கு தெரியுமா என்ன?? பாலா சொன்ன பிறகு தான் பிரச்னையின் தீவிரம் புரிந்தது. ஆனால் இதுவே வேறு எந்த பெரிய பிரச்சனைக்கும் காரணமாகி விடக்கூடாதே என்று அஞ்சினாள்.
“மாமா… எதுக்கும் பெரிய மாமாவை வச்சு பேசுவோமே….” என்று தயங்கி தயங்கி சொல்ல,
“அதெல்லாம் சரியா வராது லஷ்மி..” என்று ஒரே பேச்சாய் முடித்துவிட்டான்.
“பாலா நாளைக்கு நம்ம அவனை நேராவே சந்திப்போம்…” என,
“சரிண்ணா .. நான் பசங்க கிட்டயும் சொல்லிடறேன்…” என்க,
‘ஐயோ…இவங்க பேச போறாங்களா?? இல்லை அடிதடிக்கு போறாங்களா??’ என்று அஞ்சியவள்,
“பாலா…ஒருநிமிஷம்…” என்று அவனை நிறுத்தியவள், ஈசனிடம் திரும்பி,
“ம்ம்ச் லஷ்மி…. போலீஸ் கிட்ட சொல்ல எனக்கு தெரியாதா?? ரெண்டு பக்கமும் கூப்பிட்டு பேசுவாங்க.. அவன் நான் செய்யவே இல்லைன்னு சொல்லுவான்.. மேற்கொண்டு நம்ம ஒன்னும் செய்ய முடியாது.. அப்படியே எழுதிவாங்கினாலும் கொஞ்ச நாள் விட்டு வேற யாரையும் வச்சு மறுபடியும் பிரச்சனை பண்ணுவான்.. இதுக்கு நேரா நான் போறது தான் ஒரே வழி…” என்று முடிவை சொல்லி முடிக்க, அதற்குமேல் அவளால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“கதவை சாதிக்க லஷ்மி… நாங்க கேபிளுக்குப் போறோம்…” என்று சொல்லி இருவரும் கிளம்ப,
பாலாவோடு முன்னே நடந்தவன், லட்சுமியின் குரலில் பின்னே திரும்பி அவளை காண, அவளோ நின்ற இடத்தில் தான் நின்றிருந்தாள்.
“தனியா இருக்க பயமா இருக்கா லஷ்மி…??” என,
“இல்ல மாமா நேத்து அத்தை வந்தாங்களே.. அதான்..” என்று இவள் சொல்ல,
“எவ்வளோ நேரம்னாலும் நானே வந்திடுவேன்.,..” என்று ஈசன் சொல்லவும், சட்டென்று முகம் மலர புன்னகைத்தாள்.
இதெல்லாம் பார்த்த பாலாவிற்கு ஆச்சரியமாய் போனது. தன் அண்ணன் தானா இது என்று இன்னும் நம்பமுடியவில்லை. அவனுக்கு நன்றாய் தெரியும் நடந்துகொண்டு இருக்கும் பிரச்சனையின் தீவிரம். அப்படியிருக்கையில் அதை சிறிதும் முகத்தில் காட்டாது இங்கே லட்சுமியோடு ஈசன் சாவதானமாய் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு முதலில் நம்பவே முடியவில்லை.
‘என்ன டா நடக்குது….???’ என்பது போல் பார்த்தால், ஈசன் யாருடனோ சற்று தள்ளி நின்று அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தான், லட்சுமியோ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதைக்கு தன் அண்ணன் இப்பக்கம் திரும்ப மாட்டான் என்று எண்ணியவன்,
“ஹே லச்சு.. என்ன பண்ணின நீ?? ” என்றான் ரகசியமாய்.
“நானா… நைட்டுக்கு எதுவும் செய்யலை… மதியம் பண்ணதே இருந்துச்சு.. சூடு மட்டும் செஞ்சு வச்சேன்…” என்றாள் அவன் கேட்பது புரியாமல்.
அவள் சொன்ன பதிலை கேட்டு ஒருநொடி அவள் முகம் பார்த்த பாலா,
“அட மங்குனி மதினி… எங்க அண்ணனை என்ன பண்ண??? ஆள் ஒரு தினுசா இருக்காப்ல…” என்று கேட்க, லட்சுமியோ முறைத்தாள்.
“சரி சரி… இந்த முறைப்பெல்லாம் அங்க வச்சுக்க.. இப்படி பார்த்து பார்த்து தானே சிங்கத்த சிரிக்க வச்ச…” என்று இன்னும் வம்பிழுத்தான் பாலா.
“டேய் வேணாம்.. ஓடிரு பேசாம.. நானே உள்ளுக்குள்ள ஏகப்பட்ட கடுப்புல இருக்கேன்…” என்று இவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,
“பாலா… கிளம்புவோமா…” என்று ஈசன் திரும்ப, இருவரும் கப்சிப் என்று நின்றுவிட்டனர்.
சரியென்று பாலாவும் ஈசனும் கிளம்ப, வாசல் வரை வந்த லட்சுமியை கண்டு,
“வரும் போது கால் பண்றேன்.. அப்போ மட்டும் கதவை திற…” என்று ஈசன் சொல்லி செல்ல அவர்கள் போவதையே வெகு நேரம் பார்த்திருந்தாள்.
மனதிற்குள் இதமாய் இருந்தது. ஈசன் இப்படியெல்லாம் தன்னிடம் நடந்துகொள்வான் என்று அவள் சிறிதும் நினைக்கவில்லை. கதவை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தவள் நேராய் சென்று கண்ணாடி முன்னே நின்றுகொண்டாள். அவள் முகமே அவள் அகத்தை வெளிக்காட்ட, மனமோ சந்தோஷ வானில் சிறகடித்து பறந்தது.
‘ஈஸ் மாமா… எனக்கு நம்பிக்கையிருக்கு.. சீக்கிரமே நம்ம வாழ்க்கை சரியாகிடும்…’ என்று தனக்குள் கூறிக்கொண்டவள்,
‘ச்சே இந்த ஈஸ் மாமா லாஸ்ட்ல என்னவோ சொல்ல வந்தாங்க.. அதுக்குள்ள இந்த பாலா வந்துட்டான்… என்ன சொல்ல வந்திருப்பாங்க…??? முதல்ல இந்த நடுவாசல் கதவை மூடி வைக்கணும்.. பொசுக்குன்னு யார்னாலும் வந்திடுறாங்க…’ என்று எண்ணியவளுக்கு அடுத்து எப்போதடா ஈசன் வருவான் என்று தோன்றியது.