“என்ன லட்சுமி சொல்ற??? நீ இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. இப்படி அவனுங்களை போகவிட்டு அப்புறம் வந்து கைய பிசைஞ்சிட்டு நிக்கிற..??” என்று மரகதம் கலங்கி சொல்ல,
“நான் என்னத்தை சொல்ல.. காலையில பண்ணைக்கு போயிட்டு வந்ததுல இருந்து மாமா வீட்ல இருந்தாங்க.. கேபிளுக்கும் போகல கடைக்கும் போகலை.. நான் என்ன கேட்டும் ஒரு வார்த்தை பேசலை… ” என்று லட்சுமி முகம் சுனங்க,
“ஹ்ம்ம் என்ன யோசனை பண்ணானோ தெரியலையே.. யோசிக்காம பண்ணாலே நமக்கு திக்குன்னு இருக்கும்.. இதுல யோசிக்க வேற செஞ்சானா???” என்றவர், “நைட்டு இந்த பாலா வீட்டுக்கே வரலியே…” என்று சந்தேகமாய் மருமகள் முகம் நோக்க,
“அப்படியா அத்தை.. இவர் வரவே நைட்டு ரெண்டு மணி… பாலா ஒருவேளை அங்கேயே இருந்தானோ என்னவோ…” என்று கூறும்பொழுதே ஈசன் தனக்காக வந்தானோ என்று தோன்ற, மனதில் சிறு நிம்மதி பரவத்தான் செய்தது.
மரகதமும் அதையே தான் நினைத்தார். ஏனெனில் நடந்த பிரச்சனைகள் ஓரளவிற்கு அவருக்கும் தெரிந்தே இருந்தது. ஈசன் முன்போல் இருந்திருந்தால் அந்த துரைசாமியை ஒரு வழி செய்யாமல் வீட்டு பக்கம் கால் கூட வைத்திருக்க மாட்டான், ஆனால் இப்பொழுதோ எந்நேரம் என்றாலும் அவன் வீடு வருவது மனதிற்கு நிம்மதியாய் இருந்தது.
“அத்தை பாலாக்கு நீங்க கூப்பிட்டு பாருங்களேன்… மாமா கிளம்பி போகும்போதே கோவமா தான் போனாங்க…” என்று லட்சுமி சொல்ல, சரியென்று மரகதமும் தன் இளைய மகனுக்கு அழைக்க, அவனோ எடுத்தபாடில்லை.
மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்ச, “ஹ்ம்ம் இந்த சின்னவன் வேற மூத்தவன் பேச்சுக்கெல்லாம் ஆடுவானே.. ஈசன் ஒருவகைன்னா இந்த பாலா ஒருவகை..” என்று இருக்கையில் சாய்ந்தார் மரகதம்.
“இப்போ என்ன செய்றது அத்தை..??”
“அந்த துரைசாமி சும்மாவே கிறுக்கு பிடிச்சவன்.. வீம்புக்குன்னு ஏதாவது செய்வான்.. வம்பு குறுக்கால போனா, நீ ஏன் குறுக்கால போற என்கூட வான்னு இழுத்துக்கிட்டு போவான். இந்நேரம் பார்த்து உங்க மாமாவும் ஊர்ல இல்லையே… நம்ம மரக்கடைக்காரர் பொண்ணு கொடுத்த இடத்துல எதோ பஞ்சயத்தாம்.. ரெண்டு பேரும் தோஸ்த்துல.. அதான் காரைக்குடி வரைக்கும் போயிருக்காங்க..”
“ம்ம்ம்… சித்தப்பாவா அங்க போக சொல்லுவோமா அத்தை…??”
“வேலு அண்ணாவா?? அடி நீ என்ன?? அவரும் தான் உங்க மாமா கூட போயிருக்கார்.. ஆமா அந்த வீட்டுக்குள்ளயிருந்தா உனக்கு சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாதா??? இப்படி எல்லாத்துக்கும் முழிச்சு நிக்கிற லட்சுமி…” என்று கேட்ட மாமியாருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
இவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொண்டிருக்க நேரம் போனது தான் மிச்சம் லட்சுமிக்கோ அன்று காலையில் நடந்த அனைத்தும் நினைவில் வந்து மேலும் அவள் பயத்தை அதிகரிக்க செய்தது.
பொழுது விடிந்து லட்சுமி கண் முழிக்கும் போதே ஈசன் பண்ணைக்கு சென்றிருந்தான். இது தினமும் நடக்கும் ஒன்று தான் என்றாலும், முதல் நாள் இரவு வந்ததே இரண்டு மணிக்கு, இன்னும் கொஞ்ச நேரம் சேர்த்து உறங்கியிருந்தால் என்ன என்று ஈசனை லேசாய் கடிந்துகொண்டே தான் அன்றைய நாளின் வேலைகளை தொடங்கினாள் லட்சுமி. வழக்கம் போல் அவன் வரும் நேரம் தாண்டியும் ஈசன் வராது போக,
‘ஐயோ..!!! இப்பவும் எதுவும் பிரச்சனையா… ஆண்டவா.. நானே இப்போதான் இந்த ஈஸ் மாமா மனசு மாறுதுன்னு சந்தோசமா இருந்தேன்.. அது பொறுக்கலையா??’ என்று இறைவனிடம் வேண்டியவள் மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்க, ஈசனும் ஒருவழியாய் வந்து சேர்ந்தான்.
ஆனால் லட்சுமியிடம் ஒன்றுமே பேசவில்லை. அவள் கேட்பதற்கு கூட ஆம் இல்லை என்று பதில் சொன்னானே தவிர, வேறெதுவும் அவனாய் பேசிடவும் இல்லை, சொல்லவும் இல்லை. லட்சுமிக்கு முதல் நாள் ஈசன் தன்னை கவனித்தது எல்லாம் மனதில் வந்து ஊசலாட, அவன் தன்னை பார்க்க கூட மாட்டானா என்று ஏக்கமாய் இருந்தது.
ஆனால் ஈசனுக்கோ தன்னையொரு ஜீவன் கவனிக்கிறது, தனக்காக, தன் பார்வைக்காக காத்திருக்கிறது என்றெல்லாம் இல்லாமல், அவ்வபோது யாருக்கோ அழைத்து பேசுவதும், பாலாவிற்க்கு பேசுவதும் பின்பு சூப்பர் மார்க்கெட்டிற்கும், கேபிளுக்கும் அழைத்து வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தான்.
அவன் முகத்தில் இருந்த பாவம் எல்லாம் சிந்தனை சிந்தனை சிந்தனை மட்டுமே. மதியம் தாண்டியும் பொழுது இப்படியே ஓட, லட்சுமிக்கோ கத்த வேண்டும் போல் இருந்தது.
அவ்வீட்டில் இருப்பதோ இருவர். அவன் அந்நேரம் அங்கே இல்லாமல் இருந்தால் கூட லட்சுமிக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. ஆனால் இப்படி அவன் முன்னால் உட்கார்ந்துகொண்டே ஒன்றும் பேசமல் அமைதியாய் இருப்பது சத்தியமாக எரிச்சலை தான் கிளப்பியது.
இவன் முன்னால் அமர்ந்து இவனையே பார்த்திருந்தால் தனக்கு தான் இன்னும் டென்ஷன் என்று உணர, வேறெதுவும் கேட்காமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
மாலை நான்கு மணியளவில் பாலா வர, வெளியே பேச்சுக்குரல் கேட்கவும் அறையில் இருந்து வெளியே வந்தவள், வெளியே செல்ல தயாராகி நின்றிருந்த ஈசனை தான் கண்டாள்.
‘எப்போ ரெடியானாங்க…??’ என்று கேள்வியோடு அவனை காண, அவனோ தன் தம்பியோடு எதோ பேசிக் கொண்டிருந்தான். இருவரும் கிளம்பும் முன் வேகமாய் காப்பியை கலக்கி கொண்டு வந்து நீட்ட, பாலாவாது ஒரு சிரிப்போடு எடுத்தான், ஈசனோ எதுவுமே இல்லை.
காப்பியை ஒரு மிடறு விழுங்கியபடி, “பசங்க கிட்ட சொல்லிட்டியா பாலா…” என்று ஈசன் கேட்க,
“சொல்லிட்டேண்ணா.. எல்லாம் அங்க தான் இருப்பாங்க.. தேவைன்னா உள்ள வந்திடுவாங்க…” என்று பாலா பதில் சொல்ல,
‘என்ன இது.. என்ன பசங்க?? என்ன உள்ள வருவாங்க…??’ யோசித்த லட்சுமிக்கு அப்பொழுது தான் புத்தியில் உரைத்தது அன்று துரைசாமியை காண போகின்றனர் என்று. அடுத்த நொடி திக்கென்று தான் ஆனது. பாலாவேறு அண்ணனுக்கு சரியாய் கிளம்பி நிற்க,
‘இப்படின்னு தெரிஞ்சு இருந்த காப்பியில ரெண்டு தூக்க மாத்திரை போட்டு குடுத்து இருப்பேனே…’ என்று புலம்பியவளுக்கு, மனதினுள்ளே அடிதடியாகாமல் இருக்க வேண்டுமே என்று இருந்தது.
ஈசனது தோற்றமே ஒரு பயத்தை கொடுக்க, அதெல்லாம் பார்த்துகொண்டிருந்தால் முடியுமா, ‘லட்சுமி நீ ஈசன் பொண்டாட்டி.. தைரியாமா பேசு…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு,
“மாமா.. எதுவும் பார்த்து செய்ங்க.. என்ன இருந்தாலும் துரைச்சாமி நம்ம சொந்தம்…” என்று சொல்லிமுடிக்கவில்லை,
“என்னது?? சொந்தமாவது பந்தமாவது?? ஆளும் அவனும்.., சொந்தம் பந்தம் எல்லாம் அவனவன் அளவுல இருக்க வரைக்கும் தான். என் பொழப்புல கை வச்சா எவனா இருந்தாலும் சரி.. நல்லா கேட்டுக்கோ எவனா இருந்தாலும் சரி சும்மா இருக்க மாட்டேன்…” என்று சுட்டு விரல் நீட்டி எச்சரிக்க, லட்சுமிக்கு எச்சில் விழுங்க கூட பயமாய் போனது.
ஈசன் நின்ற தோரணையும், பார்த்த பார்வையும், பேசிய தொனியும், எது வந்தாலும் நான் பார்ப்பேன் என்று சொல்லாமல் சொல்லியது. எவன் வந்தாலும் என் முன்னே ஒன்றுமே இல்லாமல் தான் போகவேண்டும். உறவாய் இருந்தால் அதுவும் அளவே, என் எதிரே எதிரியாய் நின்றால் அது யாராக இருப்பினும் ஒருகை பார்க்காமல் விடமாட்டேன் என்று சொல்லாமல் சொன்ன அவன் பேச்சு யாராய் இருந்தாலும் ஒரு பயத்தை தான் கொடுக்கும்.
கைகளை பிசைந்து, கண்களில் ஒரு கலவரத்தோடு தான் நின்றிருந்தாள் லட்சுமி.
அவளது தோற்றம் ஈசனுக்கு என்ன உணர்த்தியதோ, “இங்க பார் லஷ்மி.. நான் பேசி சரி செய்யனும்னு தான் போறேன். ஆனா அதுக்காக அவன் பேசுறதுக்கெல்லாம் நான் சரின்னு சொல்ல முடியாது. இது நம்ம பொழப்பு.. நான் நேர்மையா பண்றேன்.. முடிஞ்சா நேருக்கு நேரா நிக்கட்டும்.. இல்லையா.. ஒதுங்கி போகணும், அதைவிட்டு முதுகுல குத்த நினைச்சா, இந்த ஈசன் சும்மாயிருக்க மாட்டான்…” என்று மேலும் அவளுக்கு பீதியை கிளம்பிவிட்டு தன் தம்பியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அதுவரைக்கும் கூட லட்சுமி ஒரு தைரியத்தில் தான் இருந்தாள். ஆனால் போகும் பொழுது ஈசன் கண்களில் இருந்த ரௌத்திரம் அவளை அச்சம் கொள்ள செய்தது. அடுத்த நொடி தன் மாமியாரை காண செல்ல அவரும் தானே இப்பொழுது இவளோடு சேர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்கிறார்.
இருவரும் அப்படியே அமர்ந்திருக்க, “என்ன ரெண்டு பேரும் இப்படி கப்பல் கவுந்த மாதிரி இருக்கீங்க…” என்று வெற்றிலையை வாயில் குதப்பியபடி முத்தழகு வந்து கேட்க, மீண்டும் ஒருமுறை அனைத்தையும் தன் மாமியாரிடம் சொல்லி முடித்தார் மரகதம்.
“அட இதுக்குத்தானா ரெண்டு பேரும் இப்படி இருக்கிறது.. ஈசனும் பாலாவும் யார்னு நினைச்சீங்க.. என் வளர்ப்பு.. நியாயம்னு பட்டா நியாயம் தான். அதுக்காக அந்த காவாலி பைய கால்ல விழ முடியுமா.. ஏ லட்சுமி.. இதுக்கெல்லாம் அசர கூடாது. ஈசன் வரும் போது அவனுக்கு பிடிச்ச மாதிரி எதுனாலும் செஞ்சு வை…” என்று சற்று அதட்டலாகவே சொல்லி செல்ல, அவர் போகும் வரை காத்திருந்த மரகதமோ பெருமூச்சு விட்டார்.
“என்னத்தை???”
“என்ன சொல்ல லட்சுமி… இதோ இப்படி பேசி பேசி தான் ரெண்டு பேரும் இப்படி அடங்கா கொம்புகளா வளர்ந்து நிக்கிறானுங்க.. ஈசனை விட்டு பிடிக்கணும் விட்டு பிடிக்கணும்னு சொல்லி சொல்லியே இப்போ விடவும் முடியாம பிடிக்கவும் முடியாம திண்டாடுறோம்…
இந்த பாலா.. அப்படியே அண்ணனுக்கு நேரா வந்து நிக்கிறான்.. படிப்பு முடியவும் முதல்ல இவனை மேல் படிப்புக்கு வெளியூருக்கு அனுப்பனும். நீயா இருக்கப்போயி சரி லட்சுமி.. இதேது வேற பொண்ணா இருந்திருந்தா இதான் சாக்குன்னு ஈசனை அப்படியே எங்கக்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிருப்பா…” என்று ஒரு அன்னையாய் தன் மனதில் இருப்பதை பேச,
அவர் இறுதியாய் சொன்னது அவளுக்கு மனதிற்கு அத்தனை ஏற்புடையதாய் இல்லை. ஈசன் வேறொருத்தியை மணந்திருந்தால்?? அந்த எண்ணமே அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அத்தனை கசப்பாய் இருந்தது.
அப்படியொன்று நடந்திருந்தால் அதன் பின் அவள் நிலை?? அப்படி வேறு ஒருத்தி தான் மணப்பெண் என்று இருந்திருந்தால் ஈசன் அப்பெண்ணை மணந்திருப்பானா?? அப்பொழுது மணப்பெண் என்ற இடத்தில தானிருந்தாலும் சரி இல்லை வேறு யார் இருந்திருந்தாலும் சரி இந்த திருமணம் ஈசன் செய்திருப்பானா?? என்றெல்லாம் கேள்விகள் அவள் மனதில் வண்டாய் குடைய ஆரம்பிக்க, இரண்டொரு நொடிகள் பேசியவள் பின் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அங்கிருந்து வந்துவிட்டாலும் மனம் மரகதம் சொன்னதிலேயே உழல, என்னடா இது என்பது போல் ஆனது??
‘ஆக ஈஸ் மாமா நிஜமாவே அவங்க அப்பா அம்மா சொன்னதுனால தான் என்னை கட்டினாங்களா…?? இல்லை இல்லை சொன்னதுனால இல்லை, நாங்க வீட்டை விட்டு போயிடுவோம்னு சொன்னதுனால தான் என்னை கல்யாணம் பண்ணாங்க ஈஸ் மாமா.. அந்த இடத்துல நான் இல்லாம வேற பொண்ணு இருந்திருந்தா??’ என்று மனதை இஷ்டத்திற்கு யோசனைகளின் பிடியில் விட்டவளை வீட்டு கதவு தட்டும் ஓசை வந்து தொல்லை செய்ய,
ஒருவேளை ஈசனாய் இருக்குமோ என்றெண்ணி வேகமாய் கதவு திறந்தாள். ஆனால் வந்தது ஈசன் இல்லை ரேவதி.
ஈசனாய் இருக்குமோ என்று ஆவலாய் ஆரம்பித்த பார்வை, வந்தது ரேவதி என்று அறிந்ததும் அப்படியே ஆவல் கண்களுக்குள்ளேயே அமிழ்ந்துவிட,
“என்னடி அதிசயமா இந்தப்பக்கம்…” என்றபடி உள்ளே அவளை அழைக்க, ரேவதியோ அவளை முறைத்தபடி உள்ளே வந்தாள்,
“என்ன டி ?? நான் கேட்கிறேன் நீ முறைக்கிற??”
“முறைக்காம… கல்யாணமாகி கிட்டத்தட்ட இருபது நாளுக்கு மேலாச்சு.. இதுவரைக்கும் ஒரு போன் பண்ணியா?? அப்படி என்னடி இங்க வெட்டி முறிக்கிற வேலை?? என் நினைப்பவது இருக்கா இல்லை அதுவும் மறந்து போச்சா??” என்று கத்த,
லட்சுமிக்கே தான் செய்தது தவறு என்று தான் புரிந்தது. ஏனெனில் லட்சுமி ரேவதியின் நட்பு அப்பேற்பட்டது. இதுநாள் வரை ஒருநாள் கூட இருவரும் பேசாமல் இருந்ததில்லை. அப்படி என்னதான் இருக்குமோ பேச ஆனாலும் ஒருநாளைக்கு முக்கால்வாசி நேரம் இருவரும் ஒன்றாய் தான் இருப்பர்.
ஆனால் இன்றோ, ரேவதி என்ற ஒருத்தி நேரில் வந்து நின்ற பிறகுதான் லட்சுமிக்கு அவள் நினைப்பே வந்தது. அதை அவளே சொல்லவும் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள் லட்சுமி. மனதில் குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அமைதியாய் தலையை சரித்து அமர்ந்திருந்தாள்.
“என்ன டி அமைதியா இருக்க??” என்று ரேவதி கேட்க,
“சாரி டி…” என்றாள் நிஜமாகவே உணர்ந்து.
“என்ன சாரி…?? சாரி சொல்லிட்டா எல்லாம் சரியா போகுமா?? சரி அதெல்லாம் விடு, நாளைக்கு காலேஜ் பீஸ் கட்டனும், அடுத்தவாரம் காலேஜ் திறக்குது…” என்று சொல்ல,
லட்சுமிக்கு தான் கல்லூரி படிக்கிறோம் என்ற நினைப்பே இப்பொழுது ரேவதி சொன்ன பிறகுதான், அதுவும் நினைவு வர, ஒருநொடி தன் மீதே அத்தனை கோவமாய் வந்தது லட்சுமிக்கு.
“என்ன டி.. பீஸ் கட்டனும்… நியாபகம் இருக்கா இல்லையா?? நாளைக்கு தான் லாஸ்ட் டேட்.. எப்பவும் எனக்கு நீதான் சொல்வ.. இப்போ நான் சொல்லவேண்டி இருக்கு..” என்று ரேவதி லட்சுமியை உசுப்ப,
“ஹா என்ன டி.. பீஸ் தானே.. சரி கட்டிடலாம்…” என்று சொன்னவளுக்கு அதை யாரிடம் கேட்பது என்ற குழப்பம் வந்தது.
‘ஈசனிடமா?? இல்லை வழக்கம் போல தன் சித்தப்பாவிடமா??’
இத்தனை நாள் அவள் சித்தப்பா தானே கட்டினார். இப்பொழுது அவள் இங்கிருக்கிறாள் ஆகையால் அவள் ஈசனிடம் தானே கேட்கவேண்டும்.. அவளிடமும் அவ்வளவு பணமில்லை. என்ன செய்ய யாரிடம் கேட்க என்று யோசிக்கையில்,
லட்சுமியின் குழப்பமடைந்த முகத்தை பார்த்த ரேவதி “நான் மதியம் போல காலேஜ் போறேன் டி பீஸ் கட்ட.. உனக்கும் சேர்த்து நான் கட்டிடவா??” என்று கேட்க,
இதென்னடா புது கதை. எப்பொழுதும் தான் தானே இவளுக்கும் சேர்த்து கட்டுவேன் அதன் பிறகு தானே இவள் நமக்கு தருவாள், ஆனால் இப்பொழுதோ தலைகீழாய் அவள் சொல்ல,
“என்ன டி உளர்ற..??” என்று சற்றே எரிச்சலாய் கேட்டாள் லட்சுமி.