“இல்ல லட்சுமி.. என்கிட்டே இப்போ காசு இருக்கு டி.. நான் கட்டிட்டு வரேன்.. அடுத்து நீ குடு.. இப்போ என்ன..???”
“ம்ம் உன்கிட்ட எப்படி டி அவ்வளோ பணம்.. அதுவும் எனக்கும் சேர்த்து கட்ற அளவு…??” என்று கேட்டவளை விசித்திரமாய் பார்த்தாள் ரேவதி..
“என்ன டி பதில் சொல்லு அதைவிட்டு இப்படி பார்த்தா என்ன அர்த்தம்??”
“உனக்கு தெரிஞ்சு கேட்கிறியா?? இல்லை தெரியமா கேட்கிறியா??”
“எ.. என்ன…??”
“ஹ்ம்ம்.. ஈசண்ணா கேபிள்ல வேலைக்கு நான் சேர்ந்து பத்துநாளுக்கு மேல ஆச்சு டி.. அண்ணா பணம் குடுத்தாங்க எனக்கு…” என்று ரேவதி மெல்ல சொல்ல,
லட்சுமி அதிர்ந்தே போனாள். இது சுத்தமாய் அவளுக்கு புதிது.. யாருமே அவளிடம் சொல்லவில்லை. ரேவதி, பாலா, அவ்வளவு ஏன் ஈசன் அவன் கூட சொல்லவேயில்லை. என்னிடம் ஒருவார்த்தை சொல்ல வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய மனதை உன்னிடம் ஏன் சொல்லவேண்டும் என்ற கேள்வியும் அதே மனதே சொல்லி பட்டென்று தலையில் தட்டியது.
தன்னை சுத்தி இத்தனை நடக்கிறது, ஆனால் எதுவுமே தனக்கு தெரியவில்லை என்று தோன்ற தான் எதோ தவறு செய்வது போல் உணர்ந்தாள் லட்சுமி.
“என்.. எனக்கு நிஜமாவே தெரியாது டி…” என்றவளுக்கு கண்ணில் நீர் முட்டியது.
“அதானே.. உனக்கு எப்படி தெரியும்.. கல்யாணம் ஆனதும் ஆளே மாறிட்ட தானே.. ஒருவார்த்தை என்ன எதுன்னு கேட்கலை. நீயும் எங்கயும் போனது வந்தது போலவும் தெரியலை. சரி அதைவிடு எனக்கு போட்டோஷாப்ல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு பாலா ஈசண்ணா கிட்ட சொல்லிருப்பான் போல, அதான் அண்ணா கூப்பிட்டு கொஞ்சம் வேலை குடுந்தாங்க. கொஞ்சம் பழகவும் அப்படியே கண்டினியு பண்ண சொல்லிருக்காங்க. இப்போ பத்து நாளா நான் அங்க தான் போறேன்..
எப்படியும் ப்ராஜெக்ட் நம்ம பே ப்ராஜெக்ட் தான் செய்ய போறோம். வீட்ல அடுத்து சும்மாதான டி இருக்க போறோம்.. எனக்கும் இது பிடிச்சிருக்கு..” என்று ரேவதி பேசிக்கொண்டே போக, லட்சுமிக்கோ தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.
நிறைய பேசினாள் ரேவதி, இத்தனை நாள் பேசாதிருந்த அனைத்தும் சேர்த்து பேசினாள். ஆனால் அவள் பேசியதில் முக்கலாவாசி லட்சுமிக்கு புதிதாய் இருந்தது.
இந்த கொஞ்ச நாட்களில் இத்தனை நடந்திருக்கிறதா?? என்று யோசிக்க, தான் இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகமும் சேர்த்தே எழுந்தது. மனதினுள்ளே பல எண்ணங்கள்.. பலவிதமாய் பரவி அவளை முழுக்க முழுக்க சிந்தனை என்னும் லட்சம் கோடி கரங்கள் பிடித்து உள்ளே இழுக்க, எதிரே ரேவதி என்பவள் அமர்ந்து தன்னோடு பேசுகிறாள் என்பதே லட்சுமிக்கு மறந்து போனது.
“ஏய்.. லட்சுமி நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன டி கனவு காண்கிற???” என்று லட்சுமியை பிடித்து ரேவதி உலுக்க,
“அ.. என்ன டி..” என்றாள் எழும்பாத குரலில்.
“அது சரி.. அப்போ நான் இவ்வளோ நேரம் சொன்னது எதுவும் காதுல விழல??” என்று மணிக்கணக்காய் பேசி அது எதிரிளிருப்பவள் காதுக்குள்ளே கூட செல்லவில்லை என்ற எரிச்சலில் கேட்க, லட்சுமியோ பொத்தாம் பொதுவாய் தலையை அசைத்தாள்.
“சுத்தம்.. அதுசரி.. இப்படி உள்ள அடைஞ்சு கிடந்தா அப்படித்தான் இருக்கும்.. கொஞ்சம் அக்கம் பக்கம் என்ன எதுன்னு பார்த்து இரு டி..” என்று ரேவதி சாதாரணமாகவே சொல்லி செல்ல அதுவோ லட்சுமியின் மனதில் ஆழ பதிந்தது.
உண்மை தானே… என்று லட்சுமிக்கும் ஈசனுக்கும் திருமணம் நடந்து முடிந்ததோ அன்றிலிருந்து ஈசனை நினைப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவளுக்கு பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. இதற்கும் பக்கத்து வீடு அவள் பிறந்த வீடு. பிறந்த வீடு என்ற எண்ணம் வரவுமே, திருமணத்திற்கு பிறகு இன்னமும் தான் தன் பிறந்த வீட்டிற்கே செல்லவில்லை என்பது உரைக்க, இன்னும் ஐயோ என்றானது.
அவ்வப்போது வந்து பேச்சி பார்த்துவிட்டு செல்வார். மனோஜ் வருவான். முத்தரசி வருவார் அவ்வபோது. மரகதமும், முத்தழகும் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் தான் எங்கே சென்றோம் என்று அவள் நினைத்ததற்கு பதில் என்பது பூஜ்யமே..
ஈசன்….. ஈசன்…. ஈசன்…..
அவனை தவிர இந்த நாட்களில் தான் வேறு எதை நினைத்தோம் என்று தோன்றிய அடுத்த நொடி அவன் அப்படியா?? என்ற கேள்வியும் வர லட்சுமிக்கு இதயம் படக்கென்று நின்று தான் துடித்தது.
நிஜம் தானே.. இதுவரைக்கும் ஈசன் தனிக்குடித்தனம் செல்வது பற்றி மட்டும் தான் அவனாய் கூறினான் அதுவும்கூட இவளிடம் என்று தனியாய் பகிரவில்லை. அனைவரின் முன்னிலும் பொதுவாய் சொன்னது.. அவ்வளவே.
அதன்பின் இங்கு வந்த பிறகோ, அன்றொரு நாள் இவள் கோவப்பட்டு பேசவும் எதுவோ போனால் போகிறதென்று அவளுக்கு சற்றே ஆறுதலாய் பேசினான் போல. அவ்வளவே. ஆனால் அதற்கு பிறகு அவனாய் எதுவுமே சொல்லவில்லையே.. ஏன்??
ஏன் என்ற இந்த கேள்விக்கு பதில் அவளிடம் சுத்தமாய் இல்லை. இது ஈசனை கேட்கவேண்டிய ஒன்றல்லவா?? ஒருவேளை ரேவதி சொன்னது போல், நான் கல்யாணம் ஆகவும் மாறிவிட்டேனா?? என்ன மாறினேன்..??
இதை யோசிக்கத் தொடங்க, அவளுக்கு புத்தியில் எதுவுமே உரைக்கவில்லை. சொல்ல போனால் இந்த வீடு, ஈசன் இவற்றை தவிர அவளுக்கு எதுவுமே நினைவில் வரமாட்டேன் என்று அடம் செய்தது. இப்படி அவள் சுற்றிலும் நடக்கும் எதையுமே உணராமல் கவனிக்காமல் ஈசன் மட்டுமே குறி என்று இருப்பது சரியா?? அது அவளுக்கு நல்லதா?? இல்லை இது ஈசனுக்கே முதலில் நல்லதா??
முன்பெல்லாம் ஈசனை கண்டாலும் காணாவிட்டாலும் அவனது அனைத்தும் அவளுக்கு தெரியவருமே.. ஆனால் இப்பொழுது அதெல்லாம் எதுவுமே இல்லையே.
இதென்ன?? நான் இப்படியா இருந்தேன்?? இல்லையே.. ஓரிடத்தில் இருந்தாலும் என் மனமும் கண்களும் சுற்றி நடக்கும் ஆயிரம் விசயங்களை கவனிக்குமே.. ஆனால் இப்பொழுது, அவள் கணவன் ஈசன், அவனை சுற்றியே என்ன நடக்கிறது என்பது அவளுக்கு தெரியாமல் போனதே.
நினைத்துப்பார்த்தால் அவனாக எதுவுமே ஒரு விரல் அசைத்ததாய் கூட தெரியவில்லை. ஆனால் நான் அப்படியா?? இல்லையே?? திருமணத்திற்கு முன் ஈசன் மீது கோவமிருந்தது உண்மை, அவனிடம் முகம் திருப்பியது உண்மை, ஆனால் அதன்பின் முதலும் முற்றிலுமாய் அவளும் அவளது வாழ்வும் அப்படியே ஈசனை சார்ந்தல்லவா மாறிவிட்டது.
ஆனால் இந்த மாற்றம் ஈசனிடம் இல்லையே?? முதலில் அவனுக்கு என்ன மாறியது?? அவன் வாழ்வில் எதுவும் மாறியாத?? இல்லையே. வழக்கம் போல் அவனது அன்றாடம் எல்லாம் சொன்னது சொன்னபடி நடந்தேறிக்கொண்டு தானே இருக்கிறது. அவனிஷ்டம் போல எப்பொழுதும் இருக்கிறான்… செய்கிறான்..
ஆனால் நான்??
அருகிலிருக்கும் பெற்றவளை கூட காண தோணாது அப்படி என்ன நினைப்பில் மூழ்கிவிட்டேன்.. என்று லட்சுமிக்கு இதெல்லாம் தோன்ற தோன்ற தலையே வெடிப்பது போல் இருந்தது.
பிறரை போல் அமையும் திருமண வாழ்வென்றால் இந்நேரம் அவள் முகத்தில் ஒரு பூரிப்பு வந்திருக்கும். புது மணப்பெண் என்பது முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். இங்கே அப்படியா இருக்கிறது?? தன்னை பார்த்தால் புதிதாய் திருமணம் ஆனது போலவா இருக்கிறது?? அவளுக்கு தெரியும் தான் ஈசனோடான இவ்வாழ்வு அனைவர்க்கும் அமையும் திருமண வாழ்வை போல் இருக்காது என்று ஆனாலும் இப்பொழுது மனம் வலிக்கிறதே.
அவ்வளவு ஏன் இதுவரைக்கும் அருகிலிருக்கும் கோவிலுக்கு கூட அவனோடு அவள் செல்லவில்லை. ஆக மொத்தம் இந்த வீட்டை விட்டு அவள் எங்கேயுமே செல்லவில்லை. ஆனால் ஈசன்.. அவனை யார் கேட்டிட முடியும்?? ஒருவேளை யாரும் எதுவும் கேட்க கூடாது என்றுதான் இந்த தனி குடித்தனமா??
முதல் நாள் இரவு ஈசன் அவளுக்கு மருந்திட்டது எல்லாம் நினைவில் சுத்தமாய் இல்லை. அவளை பொருத்தமட்டில் தான் மட்டுமே இப்படியிருக்கிறோம் என்று தோன்ற, தன்னை சுற்றி நடக்கும் எதையுமே தான் உணரவில்லை, கவனிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சியும் தோன்ற, போதாத குறைக்கு ஈசனாய் எதுவும் சொல்லவும் இல்லை என்ற உண்மை உரைக்க, இவள் இப்படி இருப்பது நல்லது தானா என்ன கேள்வி எழுந்தது.
லட்சுமிக்கு ஈசனது வாழ்விலும் மனதிலும் தன்னிலை என்பது எதுவென்று தெரிந்திட மனம் ஆசை கொண்டது.
மனைவியா?? இல்லை சிறுவயது முதல் பார்த்து பழகிய பெண்ணா?? நான் அவனுக்கு யார்?? ஈசனது பெற்றோர் காட்டிய பெண் நானில்லாமல் வேறு யாராக இருந்தாலும் அவன் திருமணம் செய்திருப்பானா?? இந்த திருமணத்தால் அவன் வாழ்வில் எவ்வித மாற்றமும் இல்லாதிருக்கும் போது தான் மட்டும் ஏன் இப்படி ஆகிப்போனேன். என்று இதெல்லாம் யோசிக்க யோசிக்க லட்சுமியின் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்தது. இதே எண்ணத்தில் இருக்கையில் சாய்ந்திருந்தவளுக்கோ எதிரே வந்து ஈசன் அமர்வது கூட கண்ணில் படவில்லை.
கோவமும், குழப்புமாய் முகமே எப்படியோயிருக்க, வீடு வந்த சேர்ந்த ஈசனுக்கோ தன் வீட்டு இருக்கையில் அவன் மனைவி என்பவள் எதோ சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருப்பது எல்லாம் கருத்தில் கூட படவில்லை. அத்தனை ஏன் வீட்டில் லட்சுமி என்ற ஒருத்தி இருக்கிறாள் என்று கூட அவனுக்கு அந்நேரம் நியாபகம் இல்லை. வண்டியை நிறுத்தி உள்ளே வந்தவன் அப்படியே கண்களை மூடி இன்னொரு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தான்.
எதிரே இருப்பவர் தங்கள் சரி பாதி என்றெல்லாம் இல்லாமல் இருவரும் தங்களுக்குள் சிந்தனை வயப்பட்டு இருக்க, கண்ணுக்கு தெரியா ஒருதிரை ஒன்று இருவருக்கும் நடுவே சட்டமாய் சிம்மாசனமிட்டது.