இத்தலத்தில் முருகப்பெருமான் வேலப்பர் எனும் திருநாமத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வேலப்பர் குடிகொண்டிருக்கும் இப்பகுதி முழுமையும் ஆதிகாலத்தில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்பகுதியில் கோவிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடி பாகத்தில் இருந்து எப்பொழுதும் வற்றாத ஊற்றாக தண்ணீர் பொங்கிக்கொண்டே இருப்பதனால் இத்தலம் மாவூற்று என்றும், இத்தல முருகன் மாவூற்று வேலப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆண்டிபட்டியில் இருந்து சிறு தூர பயணமே இருக்கும் இக்கோவிலில் தான் ஈசனது குடும்பத்தில் முதல் முதல் நடக்கும் எவ்வொரு விசேஷமும் நடந்தேறும். அதுபோலத்தான் இன்றும். அதிகாலை சுப முகூர்த்த வேளையில் ஈசன் லட்சுமியின் திருமணமும் இனிதே நடந்துகொண்டு இருந்தது.
பட்டு வேட்டி சட்டையில், கழுத்தில் மாலையோடு, நெற்றியில் அரும்பியிருக்கும் சிறு சிறு வேர்வை துளிகளோடு, பளீச்சென்று புன்னகைக்கும் திருநீறு கீற்றோடு, தன்னுயரம் முழுமைக்குமாய் நிமிர்ந்து நின்றிருக்கும் ஈசனை நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை லட்சுமியால்.வந்ததில் இருந்து பக்கவாட்டில் தான் பார்க்க முடிந்தது. அவனுக்கும் அப்படிதான்.
ஈசன் திருமணத்திற்கு சம்மதிக்கவெல்லாம் இல்லை. ஆனால் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாய் இருந்தான். புயலுக்கு பின் வரும் அமைதியோ இல்லை முன் வரும் அமைதியோ அது அவன் மட்டுமே அறிந்த ஒன்று. ஆக மொத்தத்தில் அவன் ஒரு முடிவில் இருக்கிறான் என்பது அவனது அமைதியே அனைவர்க்கும் சொல்லாமல் சொல்லியது.
பெண் யார்?? எந்த ஊர் என்றெல்லாம் அவன் அறிந்திட முற்படவில்லை. பாலாவின் வாய் மொழியாகத்தான் மணப்பெண் லட்சுமி என்பது தெரியும். கேட்டதும் அதிர்ச்சி தான்..
‘லஷ்மியா… அவ எப்படி சம்மதிச்சா?? என்னை முறைக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்குமே… பிறகு எப்படி சரி சொன்னா?? சரி சொன்னாளா?? இல்லை சொல்ல வச்சாங்களா??’ என்ற யோசனை ஓட, அதற்குள் திருமண நாளே வந்திருந்தது.
ஈசனுக்கோ லட்சுமிக்கோ வேறு சிந்திக்க யாரும் அவகாசம் கொடுக்கவில்லை. அடுத்தவாரம் திருமணம் என்றதில் இருந்து ஈசன் வீட்டிற்கு வருவதையே தவிர்த்திருந்தான் என்றால். லட்சுமியோ யாரோடும் பேசுவதையே நிறுத்தியிருந்தாள்.
ரேவதியும் கூட லட்சுமியை காண வந்தவள், “அடியே லட்சுமி முறைச்சு பார்த்து பார்த்தே கடைசியில எங்க அண்ணன சரிகட்டிட்ட…” என்று கேலி பேச, மௌமாய் மட்டுமே லட்சுமி பார்த்தாள்.
அவளுக்கு என்னவோ ஈசனை தனக்கு பிடிக்கும் என்பது அடுத்தவர் அறியக்கூடாது என்று எண்ணினாள். ஈசனே அறிவதை அவள் விரும்பவில்லை. அப்படியிருக்கையில் அடுத்தவர் அறியும்படி நடப்பாளா??
ஒருவாரம் றெக்கை கட்டிக்கொண்டு காற்றில் பறந்தது போலானது. திருமண சேலை எடுப்பது, பத்திரிக்கை அடிப்பது, சொந்த பந்தங்களை திருமணத்திற்கு அழைப்பது, நகை நட்டு பாத்திர பண்டம் என்று வாங்குவது, வீட்டை புதுப்பிப்பது, என அனைத்தையும் செவ்வனே செய்து முடித்தார் கஜேந்திரன்.
ஈசனை எதற்கும் யாரும் ஒன்றும் கேட்கவில்லை. அவனும் என்ன ஏதென்று கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் நடப்பது அனைத்தும் அவனுக்கு தெரிந்தே இருந்தது. அவனுக்கான உடை எடுக்கும் போது மட்டும் மரகதம் அவனை அழைத்தார்.
“பொண்ணு பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு ட்ரெஸ் எடுக்க தெரியாதா…” என்று கூறிவிட அதையும் அவரே தான் எடுக்கவேண்டி இருந்தது.
ஆனால் லட்சுமி அப்படியில்லை மனதிற்குள் ஒவ்வொன்றையும் ரசித்தாள். என்ன அவளது ரசிப்பை யாரும் அறியாமல் ரகசியமாய் ரசிக்கவேண்டியதாய் இருந்தது. உறங்கும் போது அன்றைய நாளில் நடந்த அத்தனையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
அடிக்கடி அவளறையில் ஜன்னல் திண்டில் அமர்ந்துகொண்டாள். மனதின் ஓரத்தில் ஒரு எண்ணம் ஈசன் அன்றுபோல் இன்றும் அவன் வீட்டு மொட்டை மாடியில் நடப்பானா என்று. ஆனால் ஈசனோ ஆளையே காணவில்லை. திருமணத்திற்கு முதல் நாள் தான் ஈசன் வீடு வந்து சேர்ந்திருந்தான். வரவைக்க பட்டிருந்தான் போல.
ஏனோ மனதில் இந்த ஒருவாரம் இல்லாத ஒரு படபடப்பு. நாளை விடிந்தால் திருமணம். ஈசனை பற்றியும் தெரியும். அவனை யாராலும் எந்த சூழலிலும் கட்டுபடுத்த முடியாது என்று நன்றாகவே தெரியும். மனதில் மூழும் கலக்கத்தை அவளால் துடைத்தெரிய முடியவில்லை. அவளது கலங்கிய முகத்தை பார்த்து,
“எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படிதான் டி இருக்கும். கல்யாணம் ஆகிட்டா சரியா போகிடும்…” என்று பேச்சி சொல்லி செல்ல, ரேவதி வந்து தான் இவளுக்கு மருதாணி வைத்துவிட்டாள்.
மருதாணி வைத்தபடியே “உண்மைய சொல்லு டி உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சு தான இருக்கு??” என்று ரேவதி கேட்க,
“ம்ம்ச் விடிஞ்சா கல்யாணம்.. இப்போ கேக்குற கேள்வியா டி இது??” என்று வழக்கம் போல லட்சுமி சமளிக்க,
“ஹ்ம்ம் எனக்கு தெரியும் டி கள்ளி… உனக்கு பிடிக்காத ட்ரெஸ் எடுத்தாலே நீ என்னா ஆட்டம் ஆடுவன்னு. அப்படியிருக்கும் போது மாப்பிள்ளை பிடிக்காம போயிருந்தா நீ இந்நேரம் சும்மாவா இருந்திருப்ப??” என்ற ரேவதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை லட்சுமி.
“உன்கிட்ட கேட்டேன் பாரு… சரி சரி சீக்கிரம் தூங்க பாரு டி.. நாளைக்கு விடிய நாலு மணிக்கு எந்திரிக்கனும்..” என்றுவிட்டு செல்ல, லட்சுமி எப்பொழுதும் போல் தான் வழக்கமாய் அமரும் ஜன்னல் திண்டில் வந்து அமர்ந்துகொண்டாள்.
அவள் கையில் வைத்திருந்த மருதானியின் மணம் அவள் மனதை நிறைத்தாலும், மெல்ல மெல்ல அவள் விரல்கள் சில்லிட்டுக்கொண்டு இருந்தாலும், மனதின் ஆழத்தில் இருந்து பொங்கிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு அவளிடம் பதிலே இல்லை.
நேரம் செல்ல செல்ல நெஞ்சில் இருக்கும் பாரம் கூட கூட, உறக்கம் மட்டும் வரவேயில்லை. ஜன்னல் கம்பியில் தன் கன்னங்களை பதித்து, கைகள் இரண்டையும் நீட்டி, வெளிய பார்த்திருந்தவளின் பார்வை திடீரென கூர்மையாக, ஐம்புலன்களும் சுறுசுறுப்பாக, இதயம் தடதடவென்று அடித்துக்கொண்டது.
ஈசன் தான்.. வழக்கம் போல மொட்டை மாடியில் நடந்துகொண்டு இருந்தான். அன்று பார்த்தது போல் இன்றும். பின்னே கை கட்டி, சட்டையில்லாமல் பனியன் மட்டும் அணிந்து எதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் நடப்பவன் போல் நடந்துகொண்டு இருந்தான்.
லட்சுமி அமர்ந்திருந்ததை முன்னே கண்டானா என்றெல்லாம் இவளுக்கு தெரியவில்லை. அப்படி பார்த்திருந்தால் இப்படி நடந்துகொண்டு இருப்பான, அவளை தவிர்த்து உள்ளே சென்றிருக்கமாட்டான் என்று புத்தி சொல்ல, ஏன் அன்று மட்டும் நின்று பார்க்கவில்லையோ என்று மனம் முரண்டியது.
ஆனால் அவளுக்கு தெரியவில்லை ஈசன் இவளை பார்த்திருந்தான் என்று. இவள் பார்ப்பதும் அவன் அறிந்திருந்தான் என்று. அவனுக்கு ஏனோ லட்சுமியின் பார்வையை சந்திக்க முடியவில்லை. முடியவில்லையா பிடிக்கவில்லையா அவனுக்கே அது விளங்கவில்லை…
ஈசன் பார்க்கிறானா பார்க்கிறானா என்று இவளது பார்வை பூத்தது தான் மிச்சம். அவனோ நீ நகர்ந்து செல்லும் வரை நானும் இப்படியே தான் நடப்பேன் ஆனால் உன்னை காண மாட்டேன் என்ற பிடிவாதத்தில் நடந்தான் போல. லட்சுமியும் அவனுக்கு சளைத்தவள் அல்லவே.
நீ பார்க்காமல் நான் இங்கிருந்து நகரவே மாட்டேன் என்பது போல அமர்ந்திருந்தாள். இருவரின் பிடிவாதத்திற்கும் இடையில் நேரம் தான் சிக்கிக்கொண்டு தவித்து முழித்து கரைந்துகொண்டு இருந்தது.
ஈசனுக்கே அவள் அப்படி அமர்ந்திருப்பது என்ன தோன்றியதோ தெரியவில்லை, வேகமாய் தன் அலைபேசியில் மனோஜிற்கு அழைத்தவன் என்ன சொன்னானோ, அடுத்த இரண்டு நிமிடத்தில் மனோஜ் லட்சுமியின் அறையில் இருந்தான்.
“அக்கா நீ இன்னும் தூங்கலையா.. மாமா பார்த்திட்டு என்னை திட்றாரு…” என,
‘மாமாவா….’ என்றெண்ணியவள் வேகமாய் ஜன்னல் பக்கம் திரும்பி ஈசன் இருக்கிறானா என்று பார்க்க. ம்ம்ஹும் ஆளே காணவில்லை. சென்றுவிட்டான் போல. ஆனாலும் அந்த இருளை லட்சுமியின் கண்கள் அலசி தீர்த்தது.
“அக்கா.. அங்க என்ன பார்த்துட்டு இருக்க.. சீக்கிரம் தூங்கு…” என்றவன் அவளையும் தாண்டி ஜன்னலை அடைக்க,
“டேய் அதை ஏன் அடைக்கிற.. திறந்து வை…” என்று லேசாய் கடிந்துவிட்டு, வந்து படுத்துக்கொண்டாள்.
முனங்கியபடி மீண்டும் ஜன்னலை திறக்க, அங்கே எதிரே மொட்டை மாடியில் ஈசன் நின்றிருந்தான். அவனை கண்டதும் இந்த மனோஜ் சற்றே சத்தமாய், “மாமா நீங்க சொன்ன மாதிரி அக்காவ படுக்க வச்சிட்டேன்…” என்று கத்த, ஈசன் லட்சுமி இருவருக்குமே மனம் திடுக்கென்றானது.
‘இருக்கிறானா…’ என்று அவளும், ‘இப்படி போட்டுக்கொடுத்தானே…’ என்று அவனும் நினைக்க, ஈசன் பதில் பேசாது வேகமாய் அவனறைக்கு சென்று விட்டான். ஆனால் லட்சுமி படுத்தபடி தான் இருந்தாள். மனதிற்குள் லேசான இதம் பரவியது. மெல்ல வந்து புன்னகை இதழில் ஒட்டிக்கொள்ள நிம்மதியாய் கண் மூடினாள்.
அதே நிம்மதி தான் மனதில் மறுநாளும் பரவியிருந்தது. மணப்பெண் கோலத்தில் ஈசன் அருகில் நிற்கும் பொழுது அதே நிம்மதி தான். அதுவும் காரிலிருந்து இறங்கும் போது ஒரு பார்வை பார்த்தானே. ஹப்பா நிஜமாகவே ஒரு முறை மூச்சு நின்று தான் வந்தது..
இது என்ன பார்வை புதிதாய்?? இதற்கான அர்த்தம் என்ன?? மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் எண்ணங்களை எல்லாம் தூண்டில் கொண்டு ஒரு இழுப்பில் இழுத்து வெளியே போட்டுவிடும்படியான ஒரு பார்வை. ஒருவேளை லட்சுமி மனத்தில் இருப்பது என்னவென்று தெரிய அப்படி காண்கிறானோ??
லட்சுமி அத்தனை ஒன்றும் ஆனால் பார்க்க பளிச்சென்று இருப்பாள். திருமண புடவை அவளது நிறத்திற்கு ஏற்ப சிவப்பும் பச்சையும் கலந்து ‘டபுள் ஷேடோ..’ போல தேர்வு செய்திருந்தார்கள். சேலையின் பெறுமானத்திற்கு ஏற்றவாறு நகைகளும் அணிந்து, முழு அலங்காரத்தில் தன்னருகே நிற்பவளை ஈசனாலும் நேருக்கு நேராய் கண்டிட முடியவில்லை.
அவளிடம் பேச நிறைய இருப்பது போல தோன்றியது அவனுக்கு.. வேறுவிதமாக எல்லாம் இல்லை. இவள் எப்படி இத்திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்?? இந்த கேள்வி ஈசனை வண்டாய் குடைந்தது. இவளே சரியென்று சொன்னாளா?? இருக்காதே.. சும்மாவே முறைப்பவள், முகத்தை திருப்புபவள் பிறகெப்படி என்று மனம் போட்டு பாடாய் படுத்தியது.
தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்பது போல் ஒரு உந்துதல். கேட்டுவிடலாமா, என்று லேசாய் தலையை அவள் புறம் திருப்ப, அவளோ அத்தனை நேரம் இவனை கண்டிருந்தவள் ஈசன் லேசாய் திரும்புவது கண்டு வேகமாய் சந்நிதானத்தை கண்டு நின்றுகொண்டாள்.
பாலாவிற்கும் ரேவதிக்கும் இவர்களின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அத்தனை வேடிக்கையாய் இருந்தது. போதாத குறைக்கு மனோஜ் வேறு. இயல்பிலேயே சற்று உளறு வாய். அதுவும் நேற்று அவனை ஈசனே அழைத்து பேசியது, லட்சுமியை சீக்கிரம் உறங்கச் சொன்னது எல்லாம் தான் என்னவோ பெரியவன் என்ற எண்ணம் தர, அனைவரிடமும் சொல்லிவிட்டான்.
ஈசனையும் லட்சுமியும் கண்ட பாலாவோ ரேவதியிடம் “அண்ணனும் லட்சுமியும் ஒருத்தருக்கொருத்தர் பார்க்க கூட மாட்டேன்கிறாங்க…”என்று சொல்ல.
“அவங்க பார்த்துக்கலைன்னு நீ பார்த்தியா…??” என்றாள்.
“பார்த்தாலே தெரியலையா..”
“நமக்கு வெளிய தெரியுறது வேற பாலா.. அவங்கக்குள்ள இருக்கிறது வேற…”
“என்ன சொல்ற??” என்று வியப்பாய் பார்த்தான் பாலா.
“நமக்கு ஈசண்ணா பத்தியும் தெரியும், லட்சுமி பத்தியும் தெரியும். ஆனா பாரு ரெண்டுபேரும் எதுவுமே தெரியாத மாதிரி நிக்கிறத. இவங்களை யாராவது கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தி சரி சொல்ல வச்சிருக்க முடியுமா??” என்று ரேவதி சொல்ல, பாலாவிற்கும் அப்பொழுது தான் விஷயம் லேசாய் புரிந்தது.
“அதானே… ஆமா லட்சுமி எதுவும் உன்கிட்ட சொன்னாளா…??”
“அவ எங்க சொல்ல போறா.. ” என்றவள் அங்கே பார் என்பது போல் கை காட்ட, அர்ச்சகர் வந்து ஈசன் முன்னே தாலி வைத்திருந்த தட்டை நீட்ட, லட்சுமிக்கும் சரி ஈசனுக்கும் சரி உடலில் ஒரு சிறு நடுக்கம் ஓடத்தான் செய்தது.
எதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இத்தனை தூரம் வந்தாகிவிட்டது, இதோ இன்னும் ஒருசில மணி துளிகளே.. அதற்குப்பின் அவனுக்கும் சரி அவளுக்கும் சரி வாழ்வு என்பது ஒன்றாகிவிடும். ஆனால் மனம் ஒன்றாகுமா?? ஒன்றுபடுமா?? என்று லட்சுமி நினைக்க,
இவள் எதனை நம்பி, இல்லை யாரது சொல்லை கேட்டு தன்னை திருமணம் செய்ய சரி என்று சொன்னாள்?? படிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் திருமணத்திற்கு என்ன அவசரம்?? இதெல்லாம் இவள் யோசிக்கவே இல்லையா என்று ஈசன் நினைக்க,
இருவரின் சிந்தனைகளும் வெவ்வேறாய் இருக்க, ஈசன் கையில் தாலி எடுத்து கொடுக்கப்பட, அனைவரும் அச்சத்தை தூவ, மேல தளங்கள் முழங்க, லட்சுமியின் கண்கள் ஒரு நொடி அவன் முகத்தை தொட்டு மீள, அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ஈசன்.
எப்பொழுதும் நேருக்கு நேர் முகம் நோக்கி, பின் முறைத்து தன் முகத்தை திருப்புபவள் இன்று ஒன்றும் சொல்லாமல் தலை தாழ்ந்து அவனிட்ட தாலியை அழகாய் ஏற்றுக்கொண்டாள். ஆசையாகவும் ஏற்றுக்கொண்டாள்.
கோவிலில் வைத்து திருமணம் முடிந்ததும் அடுத்து நேராய் இருவரும் ஆண்டிபட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமண மண்டபத்திற்கு வர, ஹப்பா கூட்டம் நிரம்பி வழிந்தது. கஜேந்திரன் ஊரைய அழைத்திருந்தார் போல.
முன்னே கஜேந்திரனும் மரகதமும் நடக்க, அவர்களை அடுத்து ஈசனும் அவனுக்கு அருகிலும் இல்லாமல் பின்னாலும் இல்லாமல் சற்றே தள்ளி லட்சுமி நடந்து வர, இவர்களின் பின்னே பேச்சி பாலா ரேவதி என்று அனைவரும் வர, மண்டபத்தில் இருந்தவர்களின் மொத்த பார்வையும் ஈசனையும் லட்சுமியையும் தான் பார்த்திருந்தனர்.
லட்சுமிக்கு மனதிற்குள் பெருமையாய் இருந்தது. ஊரே மதிக்கும், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்கிக்கொண்ட ஈசனின் மனைவி அவள். அனைவரின் பார்வையும் இவர்கள் மீது படிய ஈசனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இவளால் நடக்க முடியவில்லை.
மெல்ல தான் நடந்தாள். சேலை கட்டியும் அத்தனை பழக்கமில்லை. எங்கே தட்டி விழுந்தால் அதுவேறு அசிங்கம் என்று மெல்ல மெல்ல தான் அடி எடுத்து வைத்தாள். மேடையை நெருங்கியிருந்த ஈசனோ எங்கேடா அருகில் வந்தவள் என்று திரும்பி பார்க்க, அவளோ அவன் பார்க்கவேண்டும் என்பதற்காகவே மெல்ல நடந்தவள் போல் அடுத்த நொடி சற்றே வேகமாய் எட்டுவைத்து அவனை எட்டிப்பிடித்தாள்.
ஒரு நொடி அவள் மீது ஈசனின் கவனம் பாய்ந்து மீள, கஜேந்திரன் “ஈசா…” என்று மேடைக்கு அழைக்க,
“பாருங்க மாமா பாருங்க… நல்லா பாருங்க.. இனி என்னை மட்டும் தான் நீங்க பார்க்க முடியும்….” என்ற எண்ணம் அவள் முகத்திற்கு தனி ஒளியை தர, அவளும் சிரித்த முகமாகவே ஈசனோடு இணைந்து மேடையில் நின்றாள்.