லட்சுமிக்கு இத்தனை நாள் வாழ்வு சுமுகமாய் தான் சென்றுகொண்டு இருந்தது. அப்படி சுமுகமாய் செல்வது போல் அவளே மனதில் பதித்துக்கொண்டாள். திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு என்றெல்லாம் எதுவும் இல்லை. இப்போதைக்கு படிப்பு அவ்வளவே. எப்படியும் திருமணம் நடக்கும் என்பது தெரியும், ஆனால் அது படிப்பு முடியுமுன்னே, அதுவும் இத்தனை திடீரென்று என்றதும் மனம் குழம்பித்தான் போனது.
ஏன் இத்தனை அவசரம்?? என்ற எண்ணம் எழ,
“உன் வயசுல, என் கைல நீ நாலு வயசு குழந்தைடி…” என்று போகிற போக்கில் பேச்சி சொல்லிவிட்டு செல்ல,
பாலா சொன்னது வேறு மனதில் போட்டு உருட்ட, இரவெல்லாம் உறங்காதது வேறு அவளை அன்று சோர்வாகவே காட்டியது. அதுவும் முதல் நாள் மாடியில் ஈசன் நடப்பதை சாதரணமாகவே பார்த்திருந்தவள், அவனும் அவளை காணும் பொழுது இருவருக்குமே தங்கள் கண்களை விலக்கிக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் இப்படிதான். இவள் ஏன் பார்க்கிறாள் என்று அவனுக்கு புரியாது. ஆனால் இவள் பார்த்தாள் அவன் பார்ப்பான். பார்த்துக்கொண்டே இருப்பான். அப்படி காணும் பொழுது அவர்கள் மனம் என்ன சிந்திக்கிறது என்றெல்லாம் இருவருக்குமே தெரியாது. ஆனால் பார்வை மற்றும் ஒன்றோடு ஒன்று பின்னிகொள்ளும்.
ஈசனுக்கும் கூட அதே யோசனை தான் மனதில்.
ஏன் ஒவ்வொரு முறையும் ‘லஷ்மி’யின் பார்வையில் இருந்து தன் விழிகளை விலக்கிக்கொள்ள முடியவில்லை?? என்ற அவன் மனதின் கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.
அவளது பார்வையை சந்திக்கும் போதெல்லாம் ஒரு விசித்திர உணர்வு தோன்றுவது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அது இன்னதென்று ஆராய முற்பட்டாலும் அதற்கான விடையின் தேடலில் லட்சுமியின் கண்களுக்குள்ளே தான் மூழ்கி போவது போலத்தான் உணர்ந்தானே ஒழிய அதற்கான விடை கிடைக்கவில்லை.
இந்த உணர்வுக்கான காரணம் என்ன?? முதலில் இவ்வுணர்வுக்கு என்ன பெயர் இதெல்லாம் அவனுக்கு புரியவில்லை. சில விசயங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். ஆனால் அனைத்தையும் அப்படியே விட முடியுமா??
கஜேந்திரன், ஈசன் திருமணம் பற்றி பேசியதும் இவன் ஒரே முடிவாய் முடியாது என்று சொல்லிவிட, இதோடு இந்த பிரச்சனை முடிந்தது என்றுதான் அவனும் நினைத்தான். நினைத்தான் என்றால் தற்சமயம் இதை பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்றே எண்ணினான். நாம் நினைப்பது எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை அனைவர்க்கும் உண்டு தான். ஆனால் நடந்தாக வேண்டுமே??
மறுநாளே கஜேந்திரன் மகனை அழைத்து பேசினார்..
“ஈசா.. நீ ஒரு விஷயம் ஆசைப்பட்ட அது நடக்கல.. இப்போவும் அதையே நினைச்சிட்டு இருக்க கூடாது…”
பதிலை உடனே சொன்னவனுக்கோ, இப்பொழுது எதற்கு இந்த திடீர் பேச்சு என்று எண்ணமெழ, எதுவாக இருந்தாலும் விஷயம் தானாய் வெளியே வரட்டும் என்று காத்திருந்தான். அவனுக்கு வேலை வேறு இருந்தது. தந்தை பேசும் பேச்சும் பிடிக்கவில்லை. ஆனாலும் பாதியில் எழுந்து செல்வது மரியாதையான செயல் இல்லை என்பது நன்றாகவே தெரியும்.
வாழ்வில், ஒரு விஷயம் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ மரியதைக்காகவாவது அதனை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமானதாய் இருக்கிறது, செய்ய வேண்டியதாய் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஈசனுக்கு அப்படியான விஷயங்கள் நிறைய நடக்கிறது. பல்லை கடித்தேனும் சிலதை பொறுத்துக்கொள்ள வேண்டுமானதாய் இருக்கிறது.
வீட்டில் மரகதமும், அவன் பாட்டி முத்தழகும் கிட்டத்தட்ட ஒரு வருடமாய் இவனது திருமண பேச்சை எடுக்கின்றனர். ஏதேதோ சொல்லி அவர்கள் வாயை அடைத்துவிட்டான். ஆனால் இன்று கஜேந்திரன் முன்பு அப்படி எதுவும் செய்யமுடியவில்லை.
“ஈசா…” என்று மீண்டும் அவர் அழைக்க,
“சொல்லுங்கய்யா..” என்றான்.
“உங்கம்மாவும் கிட்டத்தட்ட ஒருவருசமா உன் கல்யாணம் பத்தி பேசுறா….”
“ம்ம்.. நான் தான் சொல்லிட்டேனேய்யா…. எனக்கு இந்த கல்யாணம் அது இதெல்லாம் வேணாம்னு…”
“சரி எப்போ வேணும் சொல்லு.. அப்போ செய்றோம்… ஆனா இதுக்கு உன்கிட்ட பதில் இல்லை சரியா???” என்றவரின் குரலில் என்ன இருந்ததோ ஆனால் ஈசனுக்கு இந்த பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை.
“அய்யா… இதை பத்தி நம்ம இனிமே பேச வேணாமே..”
தந்தையிடம் பேசுகிறோம் என்ற பவ்யம் இருந்தாலும், அதில் ஒரு அழுத்தமும் இருந்தது. ஆனால் ஈசனே இப்படியென்றால் அவனை பெற்றவர் எப்படியிருப்பார். அதுவும் அவனது வயதில் இன்னும் தாட்டியமாய் இருந்தவர். இப்பொழுதும் கூட அப்படிதான். கஜேந்திரன் என்றால் யாருக்கும் ஒரு பயம் கலந்த மரியாதை தான்.
அதே மரியாதை ஈசனுக்கும் இருந்தது. அவர் வட்டி லேவாதேவி செய்வது அவனுக்கு சுத்தமாய் பிடித்தமில்லை. ஆனால் அவருமொன்றும் யாரிடமும் அடித்து பிடுங்கவில்லை. நியாமான முறையில் தான் இன்றளவும் செய்கிறார். இல்லையென்றால் இத்தனை ஆண்டுகளாய் வெற்றிகரமாய் இதனை செய்துகொண்டு இருக்க முடியுமா??
இவனுக்கு எப்படி இவன் தொழில் பெரியதோ, அதுபோல அவருக்கு அவரது. இதற்கு விவசாயமும் அவர் கண்காணிப்பில் தான் நடக்கிறது. ஈசன் அதற்கு மட்டும் உதவியாய் இருந்தான்.
என்னதான் ஈசன் யாரையும் சார்ந்து இல்லையென்றாலும் குடும்பம் என்பது என்னவென்று அவனுக்கும் தெரியும். எப்பொழுதும் போல தன் திருமண பேச்சை இன்றும் தொடங்குவார் வழக்கம் போல மறுத்து பேசிவிட்டு வேலையை பார்க்க செல்லலாம் என்று நின்றிருந்தான்.
ஆனால் கஜேந்திரனோ, “நாங்க உனக்கு பொண்ணு பார்த்துட்டோம் ஈசா…” என்று மெல்லாமல் விழுங்காமல் அவன் தலையில் இடியை இறக்க, முதலில் அவனுக்கு இதை நம்புவதாக இல்லை.
இப்படி பேசி தன்னை சம்மதிக்க வைத்து பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்து செய்வாரோ என்று தோன்ற, தன்னை இன்னும் சிறுவயதில் தந்தை சமாளிப்பது போலவே இன்றும் செய்வது போல இருந்தது. எத்தனை வயதானாலும் பெற்றவர்களுக்கு குழந்தைகள் குழந்தைகள் தானே. ஆனாலும் தங்கள் குழந்தைகளை எப்படி கையாள வேண்டுமென்பது பெற்றவர்களுக்கு தெரியாதா என்ன??
ஈசனின் முகத்தை வைத்தே அவனுள்ளது எண்ணத்தை கண்டுகொண்ட கஜேந்திரன், “நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லைன்னு தெரியுது ஈசா.. ஆனா இதுதான் நிஜம்.. பேசி முடிச்சாச்சு… அடுத்த வாரம் கல்யாணம்… உன்னை கேட்டு உன் விருப்பப்படி பொண்ணு பார்த்து எல்லாம் செய்யனும்னு தான் எங்களுக்கும் ஆசை.. ஆனா அதுக்கு நீயும் இடம் கொடுக்கல…” என்று அவர் பேசிக்கொண்டே போக,
‘அடுத்த வாரம் கல்யாணம்…’ என்றதிலேயே ஈசனின் மனம் நின்றுவிட்டது.
என்னது திருமணமா?? ஈசனை கேட்காமல் அவன் வாழ்வில் இத்தனை பெரிய முடிவை எடுப்பதற்கு யார் சம்மதம் சொன்னது?? அவனை பொருத்தமட்டில் எதுவாக இருந்தாலும் அது அவன் எடுக்கும் முடிவாக இருக்கவேண்டும்.
ஆனால் இந்த முடிவு அவனை கேட்காமல், கேட்காமல் என்ன, கொஞ்சம் கூட அவனை பொருட்படுத்தாமல் எடுத்த முடிவு. இதற்கு அவன் சம்மதம் சொல்வதா?? சொல்வனா அவன்??
ஊரில் யாருக்கோ திருமணம் என்பது போலல்லவா ஒரு செய்தியாக இதை சொல்கிறார். முடியவே முடியாது. முதலில் என்றால் கூட எப்படியோ ஆனால் இப்பொழுது அப்படியே உறுதியாய் மறுக்கவேண்டும் என்ற எண்ணம் எழ,
“அய்யா….” என்று ஆரம்பிக்க,
அவரோ, “இன்னும் நான் முழுசா சொல்லி முடிக்கல ஈசா…” என்றவர்,
“நீ இதுக்கு சம்மதிக்கலைன்னா நானும் உங்கம்மாவும் வீட்டை விட்டு போயிடுறோம்… அதுக்கப்புறம் உன் இஷ்டம் எப்படியோ அதுபடி இருந்துக்கோ.. யாரும் எதுவும் கேட்கவும் மாட்டாங்க சொல்லவும் மாட்டாங்க..” என்றவரின் குரலிலும் கண்களிலும் இது விளையாட்டுக்கு சொல்வதல்ல என்ற செய்தி நன்றாகவே தெரிந்தது.
அதிர்ந்து தான் போனான் ஈசன். அனிதா வேண்டாம் என்று விலகி போகும் போது கூட இத்தனை அதிர்ச்சி இல்லை. அவளிடம் தான் கெஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை போன்ற ஒருவனை வேண்டாம் என்று சொல்வதால் நட்டம் உனக்கு தான் என்று அமைதியாய் சற்றே திமிராய் விலகி வந்தான்.
ஆனால் இம்முறை அப்படி இருக்க முடியவில்லை.
வீட்டை விட்டு இவர்கள் செல்வதா?? அதுவும் இந்த வயதில்?? இதென்ன பேச்சு என்று லேசாய் எரிச்சலும் கோபமும் மூண்டாலும் இது எப்படி நடக்கும் என்ற எண்ணமும் எழுந்தது. ஒருவேளை தன்னை சம்மதிக்க வைக்க தந்தை வெறுமெனே சும்மா சொல்கிறாரோ என்று அவர் முகம் பார்க்க, அவரோ தன் மனைவியை தீர்க்கமாய் பார்த்திருந்தார்.
மரகதத்திற்கும் இச்செய்தி புதியது. ஆனாலும் கணவர் ஒன்று கூறி அதை மறுத்து அவரால் பேசவும் முடியுமா என்ன??
“மரகதம் என் முடிவு சரிதான…??” என்று கஜேந்திரன் கேட்க,
“நீங்க எது சொல்றீங்களோ அதுதாங்க எப்பவுமே…” என்றார் மரகதம்.
அன்னை தந்தை இருவரின் முகமும் சொன்னதை செய்வோம் என்ற உறுதியை பிரதிபலிக்க, முதல் முறையாய் ஈசனின் மனம் அடுத்து என்ன செய்வது என்பது அறியாமல் அப்படியே நின்ற இடத்தில் ஆணி அடித்தது போல் நின்றது.
சூழ்நிலை எப்பொழுதும் ஒருபோலவே இருப்பதல்லவே..
கண்களை இறுக மூடியவனின், உடல் இறுக, மனம் அப்படியே கல்லாய் சமைய, தன்னை மீறி நடக்கும் இச்செயலை அவனால் ஒருபோதும் மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லையெனும் போது அதையும் அவனை ஜீரணிக்க முடியவில்லை. அமைதியாய் அப்படியே ஜீவனற்ற முகத்தோடு நின்றிருந்தான்..
“ஏ அய்யா ஈசா.. ஏன் இப்படி நிக்கிற.. எல்லாம் நல்லதே நடக்கும்….” என்று முத்தழகு அவனது கரம் பற்ற, எதற்குமே அவனிடம் பதிலில்லை.
கஜேந்திரன் தான் சொல்ல வந்ததை சொல்லிமுடித்துவிட்டேன் என்பது போல் பார்க்க, மகன் எதுவும் மேற்கொண்டு துடுக்காய் பேசிவிடுவானோ என்று கலக்கமாய் நின்றிருந்தார் மரகதம். மரகதத்தின் கலக்கமும், கஜேந்திரனின் உறுதியான முகமும், முத்தழகின் ஏக்கமான பார்வையும் அவனை நிச்சயம் எதுவோ செய்தது.
சில நேரம் நாம் என்னதான் ஆழமாய் யோசித்து, தீர்க்கமாய் ஒரு முடிவு எடுத்திருந்தாலும், அதையெல்லாம் ஒன்றுமே இல்லையென்றாக்கி நாம் நினைத்திருந்த அனைத்து விஷயங்களையும் தட்டி கவிழ்த்துவிட்டு நம்மை மீறி நடக்கும் செயல்கள் நடந்தேறி விடும். அப்படிதான் ஆனது ஈசனுக்கும் இன்று.
இது அவன் எதிர்பாராதது.. நினைத்தும் பார்க்காதது..
நம்மை மீறி நடப்பவைகளை பிடித்தமோ இல்லையோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் தானே. அந்த தெளிவு அவனிடம் இருந்தது. ஆகையால் தான் கஜேந்திரன் சொன்னதற்கு பதிலேதும் சொல்லாது அமைதியாய் சென்றுவிட்டான். நடப்பவை நடக்கட்டும் என்ற எண்ணத்தில் விட்டுவிட்டான். அவன் நினைத்திருந்தால் இதை ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியும். ஆனால் எதோ ஒரு தடுதல்.. குடும்பதில் மேலும் மேலும் சிக்கலை பிறப்பிக்க விரும்பவில்லை.
திருமணம் தானே… அதுவேண்டுமானால் இவர்களது முடிவாய் இருக்கட்டும். ஆனால் அதன் பிறகு வரும் அனைத்தும் என்னுடைய முடிவு மட்டுமே என்ற தெளிவு மனதில் தோன்ற, அமைதியாய் விலகி நின்றான். நீங்கள் என்னவோ செய்யுங்கள் என்று.
ஆனால் லட்சுமியோ ஈசன் தான் மாப்பிள்ளை என்றதும் அதிர்ந்து தான் போனாள்.
ஈஸ் மாமாவா???? ஐயோ…!!!!! இந்த பாலா சொல்லும்போது கூட மனதில் அத்தனை படவில்லை. ஆனால் பேச்சி வந்து சொல்லவும் நிஜமாகவே இதயம் பக்கென்று அப்படிதான் நின்றுபோனது அவளுக்கு.
“என்னடி ஈசன் தான் மாப்பிள்ளைன்னு சொல்லவும் இப்படி வாயடைச்சு போயி நிக்கிற… அதுசரி ஊர்ல இருக்க பிள்ளைங்க எல்லாம் ஈசன போல புருஷன் வேண்டும்னு வேண்டுதல் வச்சா நீ இப்படி முகத்தை சுளிக்கிற…” என்று ஒரு அன்னையாய் மகளின் நலன் மட்டுமே கருதி பேச்சி அவள் முகம் தடவி சொல்ல,
அவளோ “இதுக்கு நான் சரி சொல்லாட்டி என்ன செய்வீங்க??” என்றாள்.
பெரும்பாலும் இன்றும் கூட பெண்களுக்கு ஓரளவிற்கு மேல் திருமணத்தில் தங்களின் கருத்துக்களை அழுத்தமாய் பதிக்க முடிவதில்லை. காதல் திருமணங்கள் வேறு. ஆனால் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களில், பெண்களுக்கு அத்தனை வெளிப்படை கருத்துக்கள் சொல்ல இன்றளவும் முடிவதில்லை தான்.
‘நமக்கு தோதா இருக்கு… தெரிஞ்ச ஆளுங்க… நல்ல குடும்பம்… நல்ல பையன்… நீ போற வீட்ல நிம்மதியா இருக்கலாம்… நாங்க என்ன இப்படியேவா உன்னை விட்டுட போறோம்….’ என்று ஏனைய காரணங்களை சொல்லி அவள் வாயை மூடிவிடும் சூழலும் இருக்கத்தானே செய்கிறது. ஏதாவது ஒரு விசயத்தில் தங்கள் மனதை சமாதானம் செய்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.
இதுபோலவே தான் பேச்சியும் ஆயிரம் சொன்னார்.. இதுவரை மகளை அதட்டி பேசியிராத பேச்சிக்கு இந்த விசயத்தில் அவளை கண்டிக்க வேண்டியதாய் இருந்தது.
“நீ ஒருத்தியா போயிட்ட.. உங்கப்பாவும் இல்ல… உன்ன நல்ல இடத்துல குடுத்துட்டா நானும் கால முழுசுக்கும் நிம்மதியா இருந்திடுவேன்.. ஈசன் யாரு டி.. என் அண்ணன் மகன்.. அந்த தம்பி போல வருமா?? இப்படி சலிக்கிற… உங்க சித்தப்பா பொறுப்பு எடுத்ததுல இருந்து நம்ம எப்படி இருக்கோம்னு உனக்கே தெரியும்… உங்க அப்பா இருந்த வரைக்கும் இந்த வீட்ல நான் வைக்கிறது தான் சட்டம்..
ஆனா இன்னிக்கு நிலைமை அப்படியா இருக்கு?? இல்லைல.. உன் சித்தப்பா உனக்கு வரன் பார்த்தா அது ஈசன் அளவுக்கு இருக்குமா சொல்லு. ஆனா இது தேடி வந்த சம்பந்தம்.. அண்ணனும் அண்ணியும் விருப்பமா கேட்டு வரப்ப முடியாதுன்னு சொன்னா நல்லவா இருக்கும்…” என்று பேச்சி பல அறிவுரைகள் சொல்ல, லட்சுமிக்கு இதயம் மூளை என்று அனைத்தும் கனத்து போனது.
‘ச்சே என்னடா இது… நன்றாய் போன வாழ்வில் இப்படி ஒரு சோதனை.. இந்த ஈசனுக்கு இப்போவே கல்யாணம் செய்யவேண்டும் என்று யார் அழுதது.. அப்படியே செய்யவேண்டும் என்றாலும் இந்த ஊர் உலகத்தில் பெண்ணே இல்லையா… அத்தைக்கும் மாமாக்கும் பக்கத்து வீட்டு பெண்ணையே முடித்துவிட்டால் அலைச்சல் இல்லையென்று எண்ணமா?? அதெல்லாம் சரி இதுக்கு ஈஸ் மாமா எப்படி சரி சொன்னாங்க??? இருக்காதே… வேறெதுவோ இருக்கணுமே….’
இப்படியெல்லாம் மனம் தறிகெட்டு ஓட, அவளும் தன்னறைக்கு வந்திருந்தாள். வந்திருந்தவள் கண்ணாடி முன்பு பொத்தென்று அமர, அவள் உருவம் அவளுக்கே வேறாய் இருந்தது.. கண்ணாடியில் தெரியும் தன்னுருவத்தை வெகு நேரம் ஆழ்ந்து நோக்கியவள் நேரம் கடந்து செல்ல செல்ல இதழில் மெல்ல புன்னகை விரிந்தது..
அவளது புன்னகை அப்படியே அவள் அகமும் முகமும் படர “மாமா வசமா மாட்டினீங்களா..??” என்றவளுக்கு இன்னும் சிரிப்பு அதிகமாகியது.
ஈசன்… அவள் மனதிற்கு பிடித்தவன்.. மிகவும் பிடித்தவன்.. யாரிடமும் கூறா ரகசியமாய் ஏன் ஈசனுக்கே கூட தெரியாத ரகசியமாய் தன்நெஞ்சத்தில் பொத்தி பொத்தி வைத்திருக்கிறாள்.
இது காதலா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. என்று அனிதாவிற்காக, அவள் கொடுத்த வேதனையில் லட்சுமியை உதாசீன படுத்தினானோ, அன்றிலிருந்து மனதில் ஒரு எண்ணம் என்றாவது ஒருநாள் ஈசனுக்கு தான் மறுக்கமுடியாதவள் ஆக வேண்டும் என்று.
அது ஏன் என்றெல்லாம் தெரியாது.. அனிதா அவளை பொருத்தமட்டில் ஈசனின் கடந்த காலம். அவளை பற்றி லட்சுமி நினைப்பது கூட இல்லை. ஆனால் ஈசன்?? அவன் காட்டிய உதாசீனம், அதுவும் யாரோ ஒருத்தியால். இதை மட்டும் அவளால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
ஆனால் இன்று அவளுக்கும் அவனுக்கும் திருமணம் எனும் போதும், முதலில் ஏற்க மறுத்தாலும் அடி மனதில் ஒரு இதம் பரவத்தான் செய்தது…
“ஈஸ் மாமா…” என்று மெல்ல கூறிக்கொண்டாள்..
ஆனால் இதில் யாருமே அறியாத ஒருவிசயம் ஈசன் – லட்சுமியின் திருமண விசயத்தில் பெரும்பங்கு வகிப்பது லட்சுமியின் சித்தப்பா வேலாயுதமே.
கஜேந்திரனிடம் “ஏங்க மாமா… ஈசன் தம்பிக்கு பொண்ணு எதுவும் பார்க்கலையா..??” என்று கேட்டவரிடம் கஜேந்திரன் தன் மனக்குமுறலை கொட்ட,
“நம்ம லட்சுமிய பார்த்தா என்ன மாமா?? நீங்க பார்த்து வளர்ந்த பொண்ணு… எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.. மதினியும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என்று யோசனை சொல்ல, இரு தினங்கள் யோசித்த கஜேந்திரனுக்கும் அதுவே சரியன பட, மனைவியிடம் பேசியவர் அடுத்து நேராக பேச்சியிடம் பேசிவிட்டார்..
வேலாயுதம் செய்தது நன்மைக்கா தீமைக்கா யாரும் அறிய முடியாது. ஆனால் ஈசன் அமைதி எதை குறிக்கிறது என்று அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாய் இருக்க, லட்சுமியும் அடுத்து எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை