“சரி மாமா.. வாங்க வந்து எல்லார்கிட்டயும் என்கிட்ட இப்போ சொன்னதை சொல்லுங்க…” என்று லட்சுமி கட்டிலில் இருந்து எழுந்து நிற்க, ஈசனே அரண்டு தான் போனான்.
“லஷ்… லஷ்மி..என்ன சொல்ற?? ” என்று அவனும் வேகமாய் எழ,
“பின்ன என்ன மாமா?? இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்?? இந்த கல்யாணம் பிடிக்கலையா இல்லை என்னை பிடிக்கலையா??” என்று ஏகத்துக்கும் முறைத்து நின்றவளை பார்க்க வியப்பாய் தான் இருந்தது ஈசனுக்கு.
இவள் இப்படியெல்லாம் பேசமாட்டாளே என்று சிந்திக்கும் பொழுது தான் ‘இவள் பேசவே மாட்டாளே…’ என்று தோன்றியது.
லட்சுமியும் அடக்க ஒடுக்கமாய் தான் அறைக்குள்ளே வந்தாள். உள்ளூர பயம் தான். ஈசனை எப்படி தனியே எதிர்கொள்வது என்று. என்ன கேட்பானோ என்றிருந்தது. ஈசனுக்கும் அப்படிதான். லட்சுமியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்றிருந்தது. அவளிடம் என்ன கேட்பது?? என்ன சொல்வது என்றெல்லாம் நிறைய யோசித்து வைத்திருந்தான். ஆனால் லட்சுமி உள்ளே வந்ததும் அனைத்தும் மறந்து போனது.
முதலில் அவன் மனம் என்னவென்று அவனுக்கே தெரியவில்லை. திருமணத்தை பற்றி சிந்தித்துக்கூட பார்த்திராமல் இருக்கும் பொழுது இப்படி ஒரே வாரத்தில் திருமணம் என்று கூறி அதையும் நடத்தி முடித்திருந்தால் அவனுக்கும் மனநிலை எப்படி இருக்கும். இந்நிலையில் சாந்திமுகூர்த்தம் வேறு. தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல் தான் இருந்தது ஈசனுக்கு.
சரியாய் அதே நேரம் லட்சுமியும் உள்ளே அனுப்பப்பட, அவளுக்கும் நெஞ்சினுள்ளே அதே படபடப்பு. ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை. எப்பொழுதும் போலவே ஈசனை நேராய் பார்த்து தான் நடந்து வந்தாள். அவளிடம் கொடுத்துவிட்ட பாலை அவனிடம் கொடுத்துவிட்டு, அவளாகவே கட்டிலில் அமர்ந்துகொண்டாள். நீ சொல்லி நான் எதையும் செய்ய வேண்டியதுமில்லை, அப்படி எதுவும் செய்யபோவதுமில்லை என்று அவளது செயல் நன்றாகவே உணர்த்தியது ஈசனுக்கு.
‘இந்த லஷ்மிக்கு இவ்வளோ தைரியமா…?’ என்று நினைத்தவன், நீ எப்படி இத்திருமணத்திற்கு சரியென்று சொன்னாய் என்று கேட்க நினைத்து, அதை கேளாமல், அவளது முகத்தை கூட பாராது, பார்வையை வேறெங்கோ பதித்து,
“லஷ்மி… உனக்கு எப்படின்னு தெரியலை.. ஆனா எனக்கு இந்த கல்யாணம்.. கொஞ்சம் கூட என் விருப்பம் இல்லாம தான்…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,
தன்னிடம் சொன்னதை வெளியே வந்து அனைவரிடமும் சொல் என்று சொல்லிக்கொண்டே லட்சுமி கட்டில்விட்டு இறங்கியிருந்தாள். ஈசன் அதை உணர்வதற்குள் அவள் அடுத்த கேள்விக்கு தாவியிருந்தாள்.
‘கல்யாணம் பிடிக்கலையா??? இல்லை என்னை பிடிக்கலையா??’ இப்படி நேரடியாகவே லட்சுமி கேட்கவும் முதலில் சற்றே திகைத்த ஈசனுக்கு இப்பொழுது இதழில் வந்து ஒரு புன்னகை ஓட்டிக்கொண்டது.
“அப்போ நீ பிடிச்சு தான் சரின்னு சொன்னியா லஷ்மி…??” என்றவனின் பார்வையில் வாயடைத்து போனாள்.
அவனை திகைக்க வைக்க இப்படியொரு கேள்வி கேட்டாளா?? இல்லை அவளே திகைத்து நிற்க இப்படி ஒன்றை எடுத்து கொடுத்தாளா என்று லட்சுமி அறியவில்லை. லட்சுமி என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, ஈசனுக்கோ இன்னும் புன்னகை விரிந்தது.
‘இப்ப எதுக்கு இந்த மாமா லூசு மாதிரி சிரிக்கிறாங்க..’ என்று அவன் முகம் பார்க்க,
“ஹ்ம்ம் நீ சொல்றதெல்லாம் சரிதான் லஷ்மி… வா வெளிய போய் எல்லார்கிட்டயும் இப்போவே பஞ்சாயத்து வைப்போம்…” என்று வேட்டியை மடித்துக்கொண்டு முன்னே நடக்க,
‘அய்யோ!!! ஒரு பேச்சுக்கு சொன்ன பொசுக்குனு இப்படி போகணுமா மாமா… லட்சுமி ஈஸ் மாமா பத்தி தெரிஞ்சும் நீ வாய் குடுக்கலாமா??? வழக்கம் போல முறைப்பாவே இருந்திருக்கலாமே…’ என்று தன் அவசரக் குடுக்கை தனத்தை எண்ணி அசடு வழிய நின்றவளை இரண்டெட்டு எடுத்து வைத்தவன் திரும்பி பார்த்தான். அவள் முகமே காட்டி கொடுத்தது லட்சுமியின் மனம் என்ன எண்ணுகிறது என்று.
“நீங்க தானே பிடிக்கலைன்னு சொன்னீங்க.. நீங்களே போய் சொல்லுங்க மாமா…” என்று வேகமாய் கெளரவமாய் பின்வாங்கினாள்.
“நான் உன்கிட்ட தானே லஷ்மி சொன்னேன்.. வெளிய போய் எல்லார்கிட்டயும் சொல்லனும்னு சொல்லலையே…”
“பிடிக்கலைன்னா.. பின்ன ஏன் கல்யாணம் பண்ணீங்க..??”
அவளுக்கு தெரியும், இருவருக்குள்ளும் என்ன நடந்தாலும் அதை ஈசன் வெளியே சொல்லமாட்டான் என்று. ஈசனது மனம் இரும்பு பெட்டி. உள்ளிருப்பதை யாராலும் வெளியே கண்டறிய முடியாது. அத்தனை கௌரவம் பார்ப்பவன், தான் ஒரு வார்த்தை சொன்னதும் உடனே கிளம்பி நின்றதை இப்பொழுது தான் யோசித்தாள். ஆக ஒரே நொடியில் தன்னை அடக்கிவிட்டான் என்றே தோன்றியது அவளுக்கு.
‘ச்சே இப்படி வாய் குடுத்து நம்மளே மாட்டிகிட்டோமே…’ என்று நொந்தவள், வெளியே காட்டிக்கொள்ளாது, “சொல்லுங்க மாமா ஏன் பண்ணீங்க… உங்களை ஒன்னும் கை கால கட்டி போட்டு இந்த கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரலைல…??” என்றாள்.
நியாயமான கேள்வி தானே..
அவனை ஒன்றும் யாரும் கட்டாயப்படுத்தி இழுத்து வரவில்லை. ஆனால் கட்டாயம் என்பது உடலுக்கு மட்டுமில்லையே. கை காலை கட்டிபோட்டு இழுத்து வந்தால் தான் கட்டயமா?? அதே கட்டாயத்தை மனதிற்கும் விதித்தால். அதன் பெயர் என்னவாம்??
நீ இதற்கு சம்மதம் சொல்லாவிட்டால், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுவோம் என்று கஜேந்திரன் சொல்லும் பொழுது ஈசன் மனம் எப்படி வேதனை பட்டது என்று அவன் மட்டுமே அறிந்த ஒன்று. ஒருவேளை அதே போல வேறெதுவும் கட்டாயம் லட்சுமிக்கும் இருந்ததுவோ என்று தான் கேட்க நினைத்தான். ஆனால் லட்சுமியோ பேச்சை மாற்றிவிட்டாள்.
“ம்ம் நீ சொல்றது சரிதான் லஷ்மி.. யாரும் கட்டாய படுத்தல..” என்றவன் மீண்டும் கட்டிலில் வந்தமர,
‘ஹப்பாடி…’ என்ற ஒரு பெருமூச்சு லட்சுமியிடம் இருந்து வெளிப்பட்டது.
இத்தனை நேரம் இல்லாத தயக்கம் லட்சுமிக்கு இப்பொழுது வந்து ஓட்டிக்கொண்டது. கடந்து போன இத்தனை நாட்களில் ஏன் சில வருடங்களாகவே லட்சுமி ஈசனிடம் பேசுவதில்லை. அவனும் ஒன்றும் அதற்கு தேடி வந்து காரணம் எல்லாம் கேட்கவில்லை. நீ பேசினால் பேசுவேன் இல்லையென்றால் இல்லை. நீ பேசினாலும் பேசாவிட்டாலும் எனக்கொன்றும் இல்லை என்ற ரீதியில் இருந்தான்.
அதுவே அவளுக்கு இன்னும் அவளது ஒதுக்கத்தை அதிகரித்தது.. அந்த அனிதா விட்டு போனாள் என்று எப்படி காய்ந்தான், எப்படி எரிந்து விழுந்தான். ஆனால் நான் பேசினாலும் பேசாவிட்டாலும் ஒன்றுமே இல்லை என்பது போல் தானே இருக்கிறான்.
அப்போ இத்தனை நாட்களாய் அவன் அன்பாய் பேசியது எல்லாம் பொய்யா?? ஐயோ பாவம் என்று இரக்கம் கொண்டானா?? தந்தையை இழந்து தவிக்கிறாள் என்றெண்ணி பரிதாபம் கொண்டானோ?? உள்ளத்தில் இல்லாத உறவு உதட்டளவில் இருந்து என்ன பிரயோஜனம்..??
இவையெல்லாம் தோன்ற, இவன் ஒன்றும் என்னிடம் பாசமும் வைக்கவேண்டாம் பரிதாபமும் கொள்ள வேண்டாம் என்று மனம் எண்ண லட்சுமிக்கு ஈசனை கண்டாலே ஒரு கோவமும் எரிச்சலும் உண்டானது.
அதன் பொருட்டே அவளது முகத்திருப்பல்கள் தொடங்கின. அப்படியே அவள் முறைத்தாலும் ஈசன் ஒன்றும் அதை பெரிதாய் எடுத்துகொள்ளவில்லையே?? ஏன் இப்படி செய்கிறாய் என்று ஒருமுறை கூட கேட்கவில்லையே?? அவள் அப்படி செய்யும் பொழுது ஆராய்ச்சியாய் ஒரு பார்வை பார்ப்பானே தவிர, வேறெதுவும் இல்லை. அவள் பார்த்தால் இவன் பார்ப்பான்.. பார்க்கும் வரைக்கும் பார்ப்பான்.
அவனது பார்வை ஒன்றுமட்டும் தான் லட்சுமிக்கு மனதில் இருந்த ஒரு சிறு ஆறுதல். ஆனால் அதைமட்டுமே வாழ்வின் முழுமைக்கு வைத்துகொள்ள முடியாதே. ஆனால் இப்பொழுது எப்படி இத்தனை இயல்பாய் பேசுகிறான் என்றிருந்தது.
இத்தனை நேரம் படபடவென்று பொரிந்தவள், திடீரென்று இப்படி யோசனையாகி அமைதியாய் நிற்கவும் ஈசனுக்கே என்னவோ போலானது. ஒருவேளை தான் நினைத்தது சரிதானோ என்று தோன்றியது.
“லஷ்… லஷ்மி…” என்றழைக்க, அவளிடம் பதிலே இல்லை.
“லஷ்மி…” என்று மீண்டும் அழைத்து பார்த்து லேசாய் அவளது கைகளை தட்ட,
“ஹா… என்.. என்ன மாமா…” என்றாள் திடுக்கிட்டு.
அவளையும் அறியாது ஒரு பயம், சஞ்சலம், மனதில் வந்து இறுக்கமாய் ஒட்டிக்கொள்ள வியர்க்கத்தொடங்கியது.
“என்னாச்சு லஷ்மி… இப்படி நீ நின்னுகிட்டே இருக்க???”
“வேறென்ன செய்யணும்…” என்றாள் பரிதாபமாய்.
“இப்படி உக்கார்…” என்று சொல்ல மறுபேச்சு பேசாமல் அமர்ந்தாள்.
ஈசனுக்கு முதலில் லட்சுமியிடம் எப்படி பேசிடவேண்டும் என்று கூட தெரியவில்லை. ஏனெனில் அவனுக்கு லட்சுமியை தெரியும் அவ்வளவே. சிறு வயதில் இருந்து பார்த்து பழகியவள். அவ்வளவே. மத்தபடி அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, அவளிடம் எப்படி பேசினால் நன்றாய் இருக்கும் இதெல்லாம் தெரியாது. ஆகையால் தான் இந்த ஒருநாளிலே இத்தனை திகைப்பு.
ஆனால் லட்சுமிக்கு அப்படியில்லை. ஈசன் சம்பந்தப்பட்ட அத்தனையும் அவளுக்கு அத்துப்படி. அவனை முறைத்து முறைத்தே அவனை பற்றிய அனைத்தும் முறையாய் தெரிந்து வைத்திருந்தாள்.
ஆகையால் தான் மனதில் பயமிருந்தாலும் ஈசனோடு அவளால் இயல்பாய் பேசிட முடிந்தது. இந்த திருமணம் அவள் ஏற்றுகொண்ட ஒன்று, அவள் மனம் சம்மதித்த ஒன்று ஆனால் ஈசனுக்கு அப்படியல்லவே. அதன் தாக்கம் இருக்கத்தானே செய்யும். அடுத்து என்ன சொல்வான்?? வேறெதுவும் கேட்பானோ?? கேட்டால் என்ன பதில் சொல்ல என்று லட்சுமி யோசிக்க, அவனோ வேறு பேசினான்.
“லஷ்மி… உனக்கு மேல படிக்க ஆசையா???”
“ஹா..!!! என்.. என்ன மாமா..??”
“இல்ல படிக்கணும்னு….” என்று அவன் கூறி முடித்திடவில்லை,
ஆனால் லட்சுமி வேறெந்த உள்ளர்த்தமும் வைத்து கேட்கவில்லை. ஒருவேளை அவனுக்கு அப்படியேதும் ஆசைகள் இருக்கிறதோ என்று எண்ணித்தான் கேட்டாள். ஆனால் ஈசனுக்கு தான் எப்படியோ ஆனது. நான் எந்த அர்த்தத்தில் கேட்டால் இவள் என்ன இப்படி பேசுகிறாள் என்று.
ஒருவேளை இந்த திருமணத்திற்காக தன் கனவுகளை எல்லாம் மனதிற்குள்ளே போட்டு புதைத்து கொண்டாளோ என்று அறிய விரும்பினால், இவள் இப்படி பேசுகிறாளே என்று எரிச்சலாய் கூட வந்தது. ஏனெனில் இத்தனை பொறுமையாய் ஈசன் யாரிடமும் பேசியது இல்லை. எவ்வொரு விசயத்தையும் இப்படி கையாண்டதும் இல்லை..
“ம்ம்ச் லஷ்மி.. நான் என்ன கேக்குறேன்.. நீ என்ன சொல்லிட்டு இருக்க..??”என்று சற்றே காட்டமாய் பேச,
“நானும் ஒன்னும் தப்பா சொல்லலையே?? உங்களுக்கு ஒருவேளை நமக்கு வர போற பொண்டாட்டி பெரிய படிப்பு படிச்சு இருக்கணும்னு ஆசை இருக்குமோன்னு தான் அப்படி கேட்டேன்…” என்றாள் வெகு சாதாரணமாய்.
“யோசிங்க மாமா.. நல்லா யோசிங்க.. இனி இப்படிதான் ஒவ்வொரு விசயத்துக்கும் என்கிட்டே பேசுறதுக்கும் முன்னாடியும் சரி பின்னாடியும் சரி யோசிக்கணும்..” என்று மனதிற்குள் எகத்தாளமாய் எண்ணி முடித்திடவில்லை,
“ஆமா எனக்கு வர போற பொண்டாட்டி மாஸ்டர் டிகிரி பண்ணிருக்கனும்னு ஆசைப்பட்டேன்…” என்று ஈசன் சொல்ல,
“அய்யோ..!!!!” என்றாள் அவளுமறியாது. அவளது பாவத்தை பார்த்து ஈசன் மனதிற்குள் சிரித்துகொண்டான்..
‘என்னையவே சுத்தல்ல விடுறியா லஷ்மி.. இன்னும் உனக்கு என்னை பத்தி சரியா தெரியலை….’ என்று எண்ணியவன்,
“என்ன லஷ்மி,…” என.
“ஒண்ணுமில்ல மாமா…. எனக்கு தூக்கம் வருது…” என்றாள்.
“ஓ..!!! சரி தூங்கு… இன்னொரு முக்கியமான விஷயம் பேசிடலாம்னு பார்த்தேன்…” என்றவன் அவள் முகம் பார்க்க,
“ஹ்ம்ம் சொல்லுங்க மாமா…” என்றாள் மிக பவ்யமாய்..
மறுபடியும் படிப்பை பத்தி பேசுவானோ என்றிருந்தது. ஆனால் ஈசன் என்ன நினைத்தானோ,
“ம்ம்ம் பரவாயில்ல.. தூங்கு லஷ்மி.. நாளைக்கு எல்லார் முன்னாடியும் பேசிக்கலாம்.. ஆனா ஒன்னு எப்பவுமே நீ நான் சொல்ற விசயங்கள்ல நம்பிக்கை வைக்கணும் சரியா??” என்றான் அவள் கண்களுக்குள்ளே தான் பார்வையை பதித்து.
சட்டென்று தான் பார்வையை லட்சுமியால் விலக்கிக்கொள்ள முடியவில்லை அவளால். இதென்ன பார்வை?? இப்படி பார்த்தால் நான் என்ன செய்வேன்?? இவன் எதை நம்ப சொல்கிறான்?? இவனையா?? இவன் செயலையா?? இவன் சொல்லையா?? என்று லட்சுமியின் மனம் ஈசனது பார்வைக்குள்ளே பயணம் செய்ய,
“லஷ்மி…” என்றான் அழுத்தமாய்.
“அ… மாமா… என்ன???”
“பேசுறப்போ கவனிக்க பழகு… சும்மா சும்மா பேசிட்டிருக்க எனக்கு பிடிக்காது…” என்ற ஈசனது முக பாவத்தில் வழக்கமான ஈசன் வெளிபட்டான்.
“ம்ம் சரிங்க மாமா…” என்றவளுக்கு தன்னையும் அறியாமல் குரல் இறங்கிவிட்டது.
“நான் சொன்னது புரிஞ்சதா???”
“ம்ம்…” என்று வேகமாய் தலையை உருட்டினாள்.
“என்ன சொன்னேன்???”
‘ஐயோ!!! ஒரு கேள்வி கேட்க சொன்னா இந்த மாமா அந்த ஒரு கேள்வியில இருந்து ஒவ்வொரு கேள்வியா கேக்குறாங்களே…’ என்று நொந்துகொண்டவள்,
“இனிமே நீங்க பேசுறதை கவனிக்கிறேன் மாமா…” என்று பல்லை கடித்தபடி கட்டிலில் ஒரு பக்கம் படுக்க போக,
“அப்படியெல்லாம் நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் மண்டைய ஆட்ட மாட்டேன் மாமா.. நீங்க சொல்றதை கேட்பேன். ஆனா அது எனக்கும் சரின்னு பட்டாதான் உடன்படுவேன்…” என்றவள் கண்களை இறுக மூடி படுத்துவிட்டாள்.
அவளை பொருத்தமட்டில் ஈசன் ஒவ்வொரு விசயத்திற்கும் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் மிக ஆழமாய் பதிந்திருந்தது. ஈசன் பதிலேதும் கூறாமல் ஒரு சில நொடிகள் அவளது விழிகள் மூடிய முகத்தையே காண, பிறகு என்ன எண்ணினானோ,
“சரி தூங்கு லஷ்மி.. நாளைக்கு எல்லார் முன்னாடியும் ஒரு விஷயம் சொல்வேன். அதுக்கு மட்டும் நீ உடன்பட்டா போதும்..” என்றவன் எழுந்து வழக்கம் போல நடக்க சென்றுவிட்டான்.
என்ன சொல்ல போகிறானோ என்ற எண்ணமே அவளது உறக்கத்தை துரத்தி அடித்தது.