கண்களை இறுக மூடி, கைகளை கட்டிக்கொண்டு, சாய்விருக்கையில் அமர்ந்து கால்களை எதிரே இருந்த டீபாயின் மீது நீட்டி அமர்ந்திருந்த ஈசனை காண காண லட்சுமிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
‘என்ன இந்த ஈஸ் மாமா… தினமும் இப்படிதான் பண்றாங்க.. ச்சே.. நான் ஒருத்தி இருக்கிறது கண்ணுக்கு தெரியலையோ…’ என்று கழுத்தை நொடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். இது தினமும் நடக்கும் ஒன்று தான்.
தனிக்குடித்தனம் என்று வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அதுவும் ஈசன் அத்தனை உறுதியாய் பிடிவாதமாய் வீட்டில் பேசி ஏற்பாடு செய்தான். லட்சுமிக்கு கூட இதில் அத்தனை சம்மதம் இல்லை. அவள் மறுப்பாய் பேச வாய் திறக்கும் போது ஈசன் பார்த்த ஒரு பார்வையில் அப்படியே வாய் மூடி நின்றுவிட்டாள்.
ஈசன் – லட்சுமி திருமணம் முடிந்து மறுநாள் விடியற்காலையே ஈசன் எழுந்து குளித்து தயாராகி நிற்க, லட்சுமியோ அப்பொழுது தான் கண் விழித்தாள்.
“என்ன ஈஸ் மாமா நடுராத்திரில தலை சீவுறாங்க…” என்று கண்ணை கசக்கி, சுருக்கி, விரித்து கடிகாரத்தை காண அது காலை மணி எட்டு என்று காட்டியது.
அவ்வளவுதான் விருட்டென்று பெட்ஷீட்டோடு எழுந்தமர்ந்தவளை பார்த்தவனுக்கு லேசாய் ஒரு புன்சிரிப்பு வந்து போனது. ஆனாலும் வேறெதுவும் சொல்லாது,
“சீக்கிரம் ரெடியாகி வா லஷ்மி. கொஞ்சம் முக்கியமா பேசணும்…” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அவன் போவதையே பார்த்திருந்தவளுக்கு, “முக்கியமான விஷயம் பேசணும்னா இங்கயே இப்போவே பேசவேண்டியது தான. அதுக்கு ஏன் ரெடியாகி வேற வர சொல்லனும்…” என்று முனுமுனுத்தபடி, அவளும் தயாராகி கீழே போக, முதலில் அவளை எதிர்கொண்டது அவளது சித்தியும், மரகதமும் தான்.
பேச்சி சற்று ஒதுங்கியே நின்று மகளை காண, அவளது கண்களோ தன் அன்னையை தான் தேடியது.
அதற்குள் முத்தரசி, “என்ன லட்சுமி.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா..” என்று காதை கடிக்க, இவளுக்கு சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை.
மரகதமோ மருமகளை பார்த்து சிரிக்கமட்டும் செய்துவிட்டு நகர்ந்து போய் பேச்சியிடம், “நல்லதே நடக்கும் பேச்சி…” என்று கூறி அவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட, அந்த இடைவெளியில் தான் முத்தரசி இப்படி லட்சுமியிடம் கேட்க,
“என்ன சித்தி…??” என்றாள் ஒன்றும் புரியாமல்.
“அட இவ ஒருத்தி.. எல்லாம் விளக்கி சொல்லணும்…” என்றபடியே லட்சுமியின் காதில் இன்னும் ரகசியம் பேச, கேட்ட அவளுக்கோ எரிச்சலாய் வந்தது.
என்னடா இது உலகம், திருமணம் முடிந்து ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறைக்குள்ளே இரவு தூங்கி எழுந்தால் அவர்களுக்குள் அனைத்தும் முடிந்துவிட்டது என்று அர்த்தமா??? கொஞ்சம் கூட இந்தத் திருமணம் எப்படி எந்த சூழலில் நடந்தது என்று யோசிக்க மாட்டார்களா என்று தோன்றவும் எரிச்சலாய் வந்தது, ஆனாலும் ஒன்றும் வெளிக்காட்டாது,
“இன்னிக்கு நைட்டு ரூம்ல கேமெரா செட் பண்ணி வைங்க சித்தி..” என்று மட்டும் சொல்லி செல்ல,
“கூறு கெட்டவ, நான் என்ன கேக்குறேன்.. இவ என்னத்த சொல்றா.. பாவம் ஈசன்.. இவளை கட்டி…” என்று புலம்பியபடி செல்ல, மரகதமோ லட்சுமியையும் ஈசனையும் சாப்பிட அழைக்க, ஈசனும் சென்றான். லட்சுமியும் பின்னோடு சென்றாள்.
அவனோ ஒன்றுமில்லை என்று தலையசைத்து, உணவு உண்ண, மரகதம் மனமோ மகன் மருமகளை கண்டு மகிழ்வடைந்தது.
சரியாய் அதே நேரம் கஜேந்திரன், பாலாவோடு வர, தன் அண்ணனை பார்த்து மெல்ல சிரித்த பாலாவோ, லட்சுமியை கண்டு அனைத்து பற்களையும் காட்டி கிண்டலாய் தன் அண்ணனை ஜாடை காட்டி அவளைக் காண, அவளோ ‘ஓடி போ’ என்று சைகை மட்டும் செய்துவிட்டு குனிந்துகொண்டாள்.
பாலா மட்டும் ஈசனோடு எதுவோ பேசிக்கொண்டே உணவருந்த அவன் பேசுவதற்கெல்லாம் ஆமோதித்தோ, மறுப்பாகவும் தலையை மட்டும் அசைத்தானே ஒழிய ஈசன் பதிலாய் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. இப்படி அமைதியாய் அங்கே நேரம் கழிய, கஜேந்திரன் உண்டுவிட்டு எழ, அதே நேரம் ஈசன்,
“அய்யா…!” என்றழைக்க, கஜேந்திரனோடு சேர்த்து அங்கிருந்த அனைவருமே அவனை தான் பார்த்தனர்.
ஏனெனில் ஈசன் அவனாய் யாரையும் தேடிவந்து பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. அதுவும் அவன் தந்தையோடு முற்றிலும் அவனாய் பேசுவதை நிறுத்தியிருந்தான். ஆனால் அவர் ஏதாவது கேட்டாலோ, இல்லை பேசினாலோ மரியாதையாய் பேசுவான். அவ்வளவே. அப்படியிருக்கையில் அவனாகவே அவரை அழைக்க, அனைவருக்குமே மனதில் ஒருவித மகிழ்ச்சி தான்.
ஆனாலும் கஜேந்திரன் எதையும் வெளிக்காட்டாது “என்ன ஈசா..” என்க,
“வெளிய எதுவும் முக்கியமான வேலை இருக்குங்களாய்யா??” என்றான்.
“இல்ல ஈசா, ஏன் உனக்கு எதுவும் பேசணுமா..??”
“ம்ம் ஆமாங்கய்யா..” என்று சொல்லியபடி கையை கழுவி விட்டு அவனும் ஏழ, லட்சுமியும் அப்படியே எழ, “நீ சாப்பிட்டு வா லஷ்மி.. சாப்பிடும் போது பாதியில எழ கூடாது…” என்றவன்,
“ஒரு ரெண்டு நிமிசங்கய்யா.. லஷ்மியும் வரட்டும்…” என்று அவள் உண்டு முடிக்கும் வரைக்கும் அவளருகே நிற்க, அவளுக்கோ லஜ்ஜையாய் இருந்தது.
“மாமா.. எனக்கு சாப்பிடும் போது இப்படி பார்த்திட்டு நின்னா பிடிக்காது…” என்று முனுமுனுக்க,
“எனக்கு சாப்பிடும் போது பாதியில் எழுந்தா சுத்தமா பிடிக்காது…” என்று அவன் சொன்னதும், வேறு வழியில்லாமல் வேக வேகமாய் இட்லியை விழுங்கினாள்.
கஜேந்திரன் இருவரையும் பார்த்தவர் “நான் ஹால்ல உட்கார்ந்திருக்கேன்…” என்று கூறியபடி சென்றுவிட்டார்..
‘இந்த மாமா வேற, பக்கத்துல நின்னுகிட்டு.. எனக்கு சாப்பிட தெரியாதா.. எக்ஸாம் ஹல்லா ஸ்டாப்ஸ் யாரும் கிட்ட நின்னாவே எழுத வராது. இதுல சாப்பிடும் போது கிட்ட நின்னா எப்படி சாப்பிட…’ என்று மனதினுள் புகைந்துகொண்டே வேகமாய் உண்டுமுடித்தாள்.
அவள் கடைசி வாய் உண்டு முடிக்கவும் தான் ஈசன் நகர்ந்தான். எப்பொழுதும் அவனுக்கு உணவை வீண் செய்வது சுத்தமாய் பிடிக்காது. லஷ்மி ஒருவழியாய் உண்டு முடிக்க, ஈசன் முன்னே தன் தந்தையிடம் நகர, அவன் பின்னோடே தன் அத்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு லஷ்மியும் நடந்தாள்.
கஜேந்திரன் சாய்விருக்கையில் அமர்ந்திருக்க, அவரருகே வேலாயுதமும் அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும், “வாங்க மாமா…” என்று வரவேற்றவன், அருகே இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்துகொள்ள,
பாலாவும் வந்து எதிர்பக்கம் இருந்த இருக்கையில் அமர, மற்ற பெண்களோ சற்று தள்ளி நிற்க. ஈசன் அத்தனை சீக்கிரத்தில் எல்லாம் பேசிட ஆரம்பிக்கவில்லை.
“ஈசா.. பேசணும்னு சொன்ன.. அமைதியா இருந்தா எப்படிய்யா…” என்று கஜேந்திரன் மகனை காண,
“ஆமாய்யா.. பேசணும்.. ஆனா நீங்க எல்லாம் இதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை. ஆனாலும் இது தான் என்னோட முடிவு.. இதுல எந்த மாற்றமும் இல்லை…” என்று முன்னுரையை பலமாய் போட,
லட்சுமிக்கே ஒன்றும் புரியவில்லை. பாலாவோ அவளிடமே என்ன என்பது போல் சைகையில் கேட்க, அவளும் ஒன்றும் தெரியவில்லை என்று உதட்டை பிதுக்கினாள்.
மரகதம் வந்து மெல்ல லட்சுமியிடம், “என்ன விஷயம் லட்சுமி.. உன்கிட்ட எதுவும் சொன்னானா?? ” என,
“எனக்கும் தெரியலை அத்தை..” என்று இவள் சொன்னது நன்றாகவே ஈசன் காதிலும் விழுந்தது.
“ம்மா.. லஷ்மிக்கு எதுவும் தெரியாது.. இது முழுக்க முழுக்க என்னோட முடிவு தான்..”
“அதெல்லாம் சரி ஈசா.. அதை கல்யாணம் முடிஞ்சு மறுநாளே பேச என்ன அவசரம் வந்துச்சு…”
“அவசரம் இல்லம்மா.. அவசியம்…”
அவன் குரலே சொல்லியது, அடுத்து ஈசன் எதுவோ பெரியதாய் சொல்ல போகிறான் என்று. லஷ்மிக்கோ உள்ளே நடுங்கவே தொடங்கியது.
‘இதென்னடா இந்த ஈஸ் மாமா ஏதாவது சும்மா பேச போறாங்கன்னு நினைச்சா, குரலே சரியில்லையே..’ என்று யோசித்து நின்றவளின் முகத்தை ஒருமுறை திரும்பி பார்த்தவன், தன் தந்தை பக்கம் திரும்பி,
“அய்யா நம்ம பின் வீடு இருக்குல்ல.. அதுல நானும் லஷ்மியும் தனியா போயிடலாம்னு இருக்கோம்…” என்று அசராமல் சொல்ல,
“என்ன…???!!!!!” என்று வேலாயுதமும், பாலாவும் எழுந்துவிட, மரகதமோ, “ஈசா…!!!!” என்று அதிர்ந்தவர் அப்படியே சிலையென நிற்க, லஷ்மிக்கும் இது புது தகவல் தானே..
“மாமா….” என்று சொன்னவளின் உதடுகளில் இருந்து வார்த்தை வெளிவரவில்லை. அதிர்ந்து போய் தான் அவளும் அவன் முகம் பார்த்தாள். அடுத்த நொடி அவன் பார்த்த பார்வை அவள் வாயடைத்தது. சற்று தள்ளி நின்றிருந்த பேச்சியும், முத்தரசியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள,
முத்தழகு, “ஏ.,. அய்யா… ஈசா… தனியா போக போறியா?? அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு… என்னய்யா இது நம்ம குடும்பத்துல இல்லாத வழக்கமா சொல்ற…” என்று பதறிய குரலில் கேட்க,
இவை அத்தனை நடந்தும் கூட சிறிதும் பதறாமல், முகத்தில் எதையும் காட்டாது இருந்தவர்கள் இருவர். ஒன்று இந்த முடிவை எடுத்தவன் ஈசன், மற்றொருவர் அவன் தந்தை கஜேந்திரன்.
“அண்ணா.. என்னண்ணா… இதென்ன திடுதிப்புன்னு வந்து இப்படி சொல்ற… இப்போ என்ன ஆகிடுச்சுனு நீ தனியா போறேன்னு சொல்ற…” என்று பாலா வந்து ஈசனின் கரங்களை பற்றிக்கொள்ள,
“பாலா… நான் வேற எங்கேயோ போகல.. பின்னாடி இருக்க நம்ம வீட்டுக்கு தான் போறேன்… இந்த வீட்டுக்கு அந்த வீட்டுக்கு நடுவில ஒரு கதவு அவ்வளோதான…” என்று தம்பியின் வாயை இலகுவாய் அடக்கிவிட்டான்.
“இங்க பாரு ஈசா.. நீ என்ன சொன்னாலும் சரி இதுக்கு சரின்னே சொல்ல மாட்டேன்.. இப்போ எதுக்கு நீ தனியா போறேன்னு சொல்ற?? இதென்ன பழக்கம்?? இத்தனை நாள் நீ பண்ண எதையும் நாங்க ஏதாவது சொல்லிருப்போமா?? இல்லையே… இதுக்கு நான் சம்மதிக்கவே முடியாது…” என்று மரகதம் ஒரேடியாய் மறுக்க,
தன் அன்னை பேசுவதையே கண்டிருந்தவன், ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்து, “ம்மா நான் என் முடிவை தான் சொன்னேன்…” என்றான் இறுகிய குரலில்.
ஈசன் இப்படி சொல்லவும் மரகதத்திற்கு என்ன தோன்றியதோ, வேகமாய் தன் கணவரை காண, கஜேந்திரனோ அமைதியாய் பார்த்திருந்தார். இத்தனை வருடங்களில் அவர் முன்னே அதிர்ந்து கூட பேசாத மரகதம், இன்று தன் மூத்த மகன் திருமணமான மறுநாளே தனியே செல்கிறேன் என்று சொல்லவும் என்ன செய்வது என்று தெரியாமல்,
“என்னங்க.. என்ன அமைதியா இருந்தா எப்படி?? ஈசன் சொல்றதுக்கு முடியாதுன்னு சொல்லுங்க…” என்று கலங்கிப்போய் கேட்க,
“ஷ்.. மரகதம்.. மெல்ல பேசும்மா…” என்றவர் சுற்றி நின்றிருந்த அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு,
“ம்மா மருமகளே எல்லாருக்கும் குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வா..” என்று லட்சுமியிடம் சொல்ல, அவளும் சரியென்று தலையை உருட்டிவிட்டு வேகமாய் சென்று அனைவருக்கும் நீர் கொண்டு வந்து தந்தாள்.
ஈசனிடம் கொடுக்கும் போதோ கைகள் நடுங்க, மனமோ, ‘பாவி ஈஸ் மாமா… இதை நீங்க எப்போயிருந்து முடிவு செஞ்சு வைச்சீங்க.. ச்சே..’ என்றெண்ணியபடி தான் டம்ப்ளரை நீட்டினாள்.