ஆனால் அவனோ தான் எடுத்த முடிவை சொல்லிவிட்டோம் இனி இவர்கள் சரியென்றாலும் இல்லையென்றாலும் இதில் இருந்து தான் பின் வாங்க போவதில்லை என்பது போல் நிற்க,
கஜேந்திரனோ, “ஈசா இந்த முடிவு எத்தனை நாளைக்குப்பா..” என்றார்.
இத்தனை யோசித்தவன், இதை யோசிக்காமல் இருப்பானா?? ஆனால் அவன் பதில் சொல்வதற்குள் மீண்டும் மரகதமே குறுக்கிட்டார்.
“என்னங்க.. இந்த பேச்சே வேண்டாம்னு சொல்றேன்.. நீங்க நாள் கணக்கு கேட்குறீங்க.. என்னங்க இதெல்லாம்..”
“மரகதம்.. சும்மா இரு… நான் தான் பேசுறேன்ல.. அப்புறம் என்ன.. சொல்லு ஈசா இந்த முடிவு எத்தனை நாளைக்கு.. நிரந்தரமானதா இல்லை தற்காலிகமானதா..??”
“இதுல நிரந்தரம், தற்காலிகம்னு எல்லாம் எதுவும் இல்லைங்கய்யா.. நான் ஒன்னும் வேற எங்கயோ போறேன்னு சொல்லல. இதே வீட்ல இன்னொரு பக்கம் இருக்க போறோம் அவ்வளோதான்..”
“ஹ்ம்ம் நீ சொல்றது புரியுது ஈசா… அதாவது நாங்க வெளிய போயிடுவோம்னு சொல்லி உன்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சோம்.. அதுனால இப்போ கல்யாணம் முடியவும் அதையே நீ எங்களுக்கு திருப்பி செய்ற அவ்வளோதான்… நீ எங்க முடிவுக்கு கட்டுப்பட்ட. மகனாவே இருந்தாலும் அந்த மரியாதையை நானும் திருப்பி செய்யணும்… அதுனால உன் முடிவுக்கு நான் சம்மதிக்கிறேன்…” என்று சொல்ல,
‘பரவாயில்லையே.. தன் மனதை இத்தனை அழகாய் தெரிந்து வைத்திருக்கிறாரே… ஆனால் இப்பொழுது மட்டும் தெரிந்தும் புரிந்தும் என்ன பயன்…’ என்று எண்ணியவன், ‘அதான் சம்மதம் என்று சொல்லிவிட்டாரே அப்புறம் என்ன..?? எல்லாரும் சென்று வேலையை பாருங்கள்…’ என்பது போல் பார்வையை ஓட்டியவன், அடுத்து எதுவும் சொல்லாமல் தன்னறைக்கு சென்றுவிட்டான்.
அவன் போவதையே பார்த்திருந்த அனைவரும் அடுத்து லட்சுமியை காண, அவளுக்கோ உள்ளே உதறியது.
‘ஐயோ என்ன இந்த ஈஸ் மாமா.. இப்படி என்னை மட்டும் கோர்த்து விட்டு போயிட்டாங்க…’ என்று அவளும் அவன் செல்வதையே பார்த்தபடி நிற்க,
பாலா தான், “ஏ லட்சுமி.. என்ன இது..” என்று கடிய,
அடுத்த நொடி கஜேந்திரனோ, “பாலா…” என்று அதட்டினார்.
“அய்யா..!!!” என்று பவ்யமாய் பார்த்தவனிடம்,
“லட்சுமி உனக்கு அண்ணன் பொண்டாட்டி.. அதுக்கான மரியாதையை கொடுக்கணும். அப்புறம் இன்னொன்னு.. இனிமே இதை பத்தி யாரும் பேச கூடாது.. ஜாமானெல்லாம் கொண்டு போயி அங்க வச்சிடுங்க….” என்று பாலாவில் ஆரம்பித்து அனைவர்க்கும் பொதுவாய் கூறி சென்றுவிட, யாருக்கும் அடுத்து வேறெதுவும் பேச தைரியமில்லை.
மரகதமும் முத்தழகும் முனங்கியபடி செல்ல, பாலா தலையை தொங்க போட்டு வெளிய செல்ல, லட்சுமி வீட்டினர் அவளுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை எல்லாம் அங்கே பின் வீட்டிற்கு அடுக்கச் சென்றனர்.
இப்பொழுது தனித்து நின்றது லட்சுமி மட்டும் தான். ஈசனது முடிவை பற்றி கஜேந்திரன் கூறியதே மனதில் ஓடியது. ஆக ஈசனை எதோ ஒரு கட்டாயத்தில் நிற்க வைத்து தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியவும், ஆனாலும் ஈசன் அப்படி ஒன்றும் பொறுத்து போகும் ரகமில்லையே என்றும் தோன்றியது.
‘நெஜமாவே இந்த ஈஸ் மாமா அவங்க சொன்னதுனால தான் இதுக்கு சம்மதிச்சாங்களா..?? இருக்காதே.. இந்த ஈஸ் மாமா அப்படியெல்லாம் பயந்து சரி சொல்ற ஆள் இல்லையே.. வேறெதுவோ இருக்கு… அதுவும் பொண்ணு நான் தான்னு தெரிஞ்சே எப்படி சரி சொன்னாங்க…??
ஆனாலும் இந்த ஈஸ் மாமா கூட தனியாவா??? நானா?? ஐயோ… இதென்னடா கால கொடுமை… இங்கன்னா கூட எனக்கு சப்போர்ட்டுக்கு இத்தனை பேர். ஆங்க யார் இருக்கா… முதல்ல இவங்க எல்லாம் அங்க வருவாங்களா..??’ என்று யோசித்தபடி தன் சேலை முந்தியை திருகியபடி நின்றிருந்தாள்.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருக்க, மனதில் சட்டென்று ரெண்டில் ஒன்றும் இவனிடம் கேட்டுவிட வேண்டும் என்று தோன்ற வேகமாய் மேலே சென்றாள்.
அங்கே ஈசனோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தான். அவன் தந்தை இத்தனை சீக்கிரம் இதற்கு சம்மதம் சொல்வார் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் தன்னை சரியாய் யூகித்து தான் இதற்கு சம்மதம் சொன்னார் என்று தெரியவும், மனதில் ஒரு ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி பரவியது என்னவோ உண்மை தான்.
ஆனாலும் ‘என்னை இப்படி சொல்லித்தானே சம்மதிக்க வச்சீங்க.. அப்போ எனக்கும் இப்படிதானே இருந்திருக்கும்… இருக்கட்டும் இனியும் என் வாழ்க்கை இப்படியே அடுத்தவங்க இஷ்டத்துக்கு போகாது. என் வாழ்க்கை என் இஷ்டம்… தான்…’ என்று நினைத்தவனின் எண்ணப்போக்கை கலைத்தது, “மாமா….” என்றழைப்பு.
வேறு யார் லட்சுமி தான்..
‘என் வாழ்க்கை என் இஷ்டம்…’ என்று அவனை நிம்மதியாய் அப்படி இருக்க விட்டுவிடுவாளா.?? இதோ நினைத்து முடிக்கவில்லை வந்து நின்றுவிட்டாளே.
ஈசன் வெறுமெனே திரும்பிப் பார்க்க “ஏன் மாமா இப்படி பண்ணீங்க…??” என்று எடுத்த எடுப்பிலேயே ஹை பிச்சில் ஆரம்பித்தாள்.
“என்கிட்ட சத்தம் போட்டு பேசினா பிடிக்காது…”
‘அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்…’ என்று நொடித்துக்கொண்டவள், “ம்ம்ச்.. இப்போ தனியா போக என்ன மாமா அவசரம்..???” என்றாள் குரலில் மட்டும் சிறிது பவ்யம் காட்டி.
அவள் முகத்தையே ஒருநொடி தீவிரமாய் பார்த்திருந்தவன், வழக்கம் போல் அவள் பார்வையில் மூழ்கத் தொடங்க, தானே தன்னை உலுக்கிக்கொண்டவன் வேகமாய் வேறுபுறம் முகத்தை திருப்ப, “பதில் சொல்லுங்க மாமா…” என்றாள் காரராய்.
“ம்ம்ச் என்னத்த சொல்லு சொல்லுனு…” என்று ஒரு வேகத்தில் மீண்டும் திரும்பியவனுக்கு படக்கென்று புத்தியில் மின்னல் வெட்ட, சட்டென்று இதழில் வந்து ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டது.
“அது லஷ்மி.. நீ கீழ வரும் போது உன் சித்தி என்ன கேட்டாங்க…??” என்று முகத்தில் தோன்றிய புன்னகையை அவள் கண்ணுக்கு எட்டாதவாறு பார்த்துகொண்டான்.
“சித்தி என்ன கேட்டாங்க…?? அதுக்கும் இப்போ நம்ம தனியா போறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு…??” என,
“அட என்னையவே கேள்வி கேட்டா எப்படி லஷ்மி… யோசி.. நீ ரெடியாகி கீழ வரும் போது உன் சித்தி உன்கிட்ட ஒன்னு கேட்டாங்க.. அதென்ன…??” என்று கேட்டான்.
அவன் கேள்வியின் பின்னே பயணித்தவள், காலையில் என்ன நடந்தது என்று தன் மனதை பின்னோக்கி யோசிக்க வைத்தவள், ‘சித்தி என்ன கேட்டாங்க??’ என்று யோசிக்க, அடுத்த நொடி அவளிதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. குப்பென்று வியர்த்து விட, இதழ்கள் லேசாய் நடுங்க, முகம் கூட சூடாய் சிவந்துவிட்டதை போல் உணர்ந்தாள்.
‘ஐயோ… அதை எப்படி இந்த ஈஸ் மாமா கேட்டாங்க..’ என்று நினைத்தவளுக்கு டன் டன்னாய் அசடு வேறு வழிந்தது.
“என்ன பதிலையே காணோம்..?? உங்க சித்தி என்ன கேட்டாங்க??” என்று மீண்டும் அதே கேள்விக்கு அவன் வந்து நிற்க,
‘தெரிஞ்சுக்கிட்டே கேக்குறது..’ என்று கடிந்தவள், வேகமாய் ஜன்னல் பக்கம் திரும்பி நின்றுகொண்டாள். ஆனால் அவனோ விடாகண்டனாகிற்றே. அவளிடம் சற்றே நெருங்கி வந்து,
“சொல்லு லஷ்மி உங்க சித்தி என்ன கேட்டாங்க… ??” என,
“ஹா… அது.. அதெல்லாம் ஒண்ணுமில்லையே….” என்று பூசி மொழுகினாள்.
“ஹ்ம்ம் அப்படியா.. பின்ன எதுக்கு நீ ரூம்ல கேமரா வைக்க சொன்ன..??” என்று அவன் கூசாமல் அப்படியே கேட்க, இவளுக்கு தான் கூச்சமாய் போனது.
‘ஐயோ… ச்சி ச்சி… இதென்ன இந்த ஈஸ் மாமா கல்யாணமாகி ஒருநாள்ல இல்ல இல்ல ரெண்டாவது நாள்ல இப்படி கேட்கிறாங்க.. கொஞ்சம் கூட கூச்சனாச்சமே இல்லையா…’ எண்ணிய மனதை வேகமாய் அடக்கினாள்.
இப்படியெல்லாம் பேசினால் நான் ஒன்றும் பதில் சொல்லமாட்டேன் என்ற ரீதியில் அவள் நிற்க, “ஹ்ம்ம் நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்ட.. அப்படிதானே…” என்று மேலும் நெருங்க, அவளோ,
“ஹா என்ன மாமா.?? என்ன?? அத்தை எதோ நல்ல நேரத்துல போயி அந்த வீட்ல விளக்கு எத்தணும் சொன்னாங்க.. அதான் உங்களை கூப்பிட வந்தேன்.. வர்றீங்களா.. போகலாம்…” என்று படபடவென்று சொல்ல, அவனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘இனி உன் பாடு திண்டாட்டம் தான் லஷ்மி…’ என்று எண்ணிக்கொண்டவன் முன்னே நடக்க,
“போங்க மாமா போங்க.. தனியாவே வந்து என்கிட்டே சிக்குறீங்களே…” என்று லட்சுமியும் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
இப்படித்தான் இவர்கள் தனி குடித்தனம் சென்றதும். ஆனால் வந்த மறுநாளே ஈசன் தன் வேலையை காட்டிட தொடங்கினான். அந்த வீட்டில் அனைவரோடும் இருந்தால் இவன் செய்வதற்கெல்லாம் ஏன் எதுக்கு என்ன என்ற கேள்விகள் வரும். ஆனால் இங்கே அப்படியில்லையே. லட்சுமியை மிக சுலபமாய் அவன் சரி செய்துவிடுவான். அவன் நினைத்தது போல் அவன் விருப்பத்திற்கு இருக்கலாம் இங்கே.
தனியே என்று வந்ததிலிருந்து காலையில் கிளம்பி பண்ணைக்கு சென்று அடுத்து கேபிளுக்கு சென்று பார்த்துவிட்டு சூப்பர் மார்கெட் போனால் மதியம் ஒருமுறை வீடு வருவான். காலையில் என்ன உண்டான், முதலில் உண்டான என்று கூட லட்சுமிக்கு தெரியவில்லை.
மதியம் இவன் வந்த நேரம் உண்ண சொன்னதற்கு, முதல் நாள் உண்டவன் மறுநாள் இருந்து மதியம் வருவதையும் தவிர்த்துவிட்டான். இரவு பத்து மணிக்கு வருவான், கேட்டால் அப்பொழுதும் சாப்பிட்டுவிட்டேன் என்பான்.
இரண்டொரு நாள் பொறுத்து பார்த்த லட்சுமிக்கு கோவம் அடக்க முடியாமல் வந்தது. எதற்கு இவன் இப்படி இருக்கிறான் என்று தெரிந்தால் தானே அவளும் ஏதாவது செய்வாள் இல்லை கேட்பாள்.
இதோ இரவு வந்தால் இப்படிதான் கண்களை மூடி வெகு நேரம் சாய்ந்து அமர்ந்திருப்பான். லட்சுமியும் அவன் பேசுவான் ஏதாவது கேட்பான் என்று டீவி பார்க்கும் சாக்கில் அமர்ந்தேயிருப்பாள். எத்தனை நேரம் அப்படியே இருக்க, உறக்கம் வந்ததும் அறைக்கு சென்று படுத்த பிறகு, இவன் கண்களை திறப்பான்.
அதன் பின்னும் கூட லட்சுமி நன்றாய் உறங்கிவிட்டாள் என்று தெரிந்தபின்னே தான் இவனும் படுக்க போவான். நல்ல வேளை இருவரும் வெவ்வேறு அறையில் உறங்கிடவில்லை. தனி வீடு என்று சொன்னவன், தனி அறை என்று எண்ணிடவில்லை.
ஆனால் அவளும் மனுசி தானே. இன்று பொறுமை மிகவும் அவளை சோதனை செய்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவள், முடிந்த மட்டும் தொலைக்காட்சி சத்தத்தை அதிகரிக்க, அச்சத்தத்தில் சட்டென்று கண்கள் திறந்தவன் இவளை காண, அவளோ ருத்ர தேவியாய் இவனை பார்த்திருந்தாள்.