ஒரு வெற்று பார்வை. நிர்மலமாய் நிர்சலனமாய் என்பார்களே அது போல. சிறிதும் கூட இது என்ன மாதிரியான பாவம் என்று யாராலும் கணித்திட முடியாத ஒரு வெற்று உணர்வை பிரதிபளிக்கும் பார்வை. கல்லென இறுகிய முகமும் இல்லை, கண் வழியே தன்னுணர்வுகளை வெளிபடுத்தவும் இல்லை. இந்த பார்வையின் பொருள் என்ன, இல்லை இந்த பார்வைக்கு பின்னே இருக்கும் சங்கதி தான் என்ன?? யார் அறிவார் ஈசனை தவிர.
திருமணம் முடிந்து ஒருவாரமே கடந்த நிலையில், அதுவும் மறுநாளே தனிக்குடித்தனம் என்ற நிலையில், லட்சுமி வீட்டிலிருந்து வேலாயுதம் மறுவீட்டு விருந்து என்று அழைக்கவும்,
“நம்ம என்ன தூரமாவா இருக்கோம் மாமா..?? இதோ பக்கத்து பக்கத்து வீடு தானே.. இதிலென்ன அங்க ஒருநாள் இங்க ஒருநாள்ன்னு…” என்று ஈசன் சொல்லிவிட, அவரோ வேறு வழியில்லாமல் கஜேந்திரன் முன் போய் நின்றார்.
கஜேந்திரன் மகனை அழைத்து பேச, அவனோ “இன்னும் எது எதுக்கு தான் என்னை கட்டாய படுத்த போறீங்கய்யா??” என்று இறுகிய குரலில் கேட்க அவரும் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
மறுவீடு என்பது இவர்கள் தனி குடித்தனம் வீடு என்ற அளவிலேயே நின்றது. பொறுத்து பொறுத்து பார்த்த மரகதம் மகனை கடிய,
“நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன்.. நினைச்சு பாருங்க.. வெளியூர்ல இருந்தா கூட பரவாயில்லை. இதோ இங்க இருந்து பேசினா அங்க கேட்கும். அதுவுமில்லாம மறுவீட்டு அழைப்பு விருந்தெல்லாம், புதுசா இருக்க ஆளுங்க பழகனும்னு வச்சுக்கிட்டது. லஷ்மி வீடென்ன எனக்கு புதுசா?? இல்லை நான் என்ன அவங்களுக்கு புதுசா?? அப்படியிருக்கும் போதும் இதெல்லாம் தேவையா??” என்று வக்கணையாய் பேசி வாயடைத்துவிட்டான்.
ஆனால் உள்ளூர லட்சுமிக்கு ஆசை தான். அவனுக்கு எப்படியோ, ஆனால் அவளுக்கு அனைத்துமே அவள் மனதிற்கு பிடித்தமாய் தானே நடந்தது. ஒவ்வொரு தருணத்தையும் மனதார ரசித்தாள். அப்படியிருக்கையில் மறுவீடு செல்லாமல் இருப்பது உள்ளூர சங்கடமாய் இருந்தாலும் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ள வில்லை.
அவனை பொறுத்தவரை திருமணம் முடிந்தபிறகு எதுவுமே அவனது வாழ்வில் மாறவில்லை.. ஆனால் லட்சுமிக்கு அப்படியில்லையே..
திருமணத்தில் ஆணினது வாழ்வில் புதிதாய் ஒரு உறவு வந்திருக்கிறது, ஆனால் பெண்ணிற்கு அனைத்துமே அல்லவா புதிதாய் இருக்கிறது. என்னதான் பக்கத்தே வீடானாலும், சிறு வயதில் இருந்து தெரிந்த பழகிய ஆட்கள் என்றாலும் லட்சுமிக்கு என்று மனதில் சிறு சிறு ஆசைகள் இருக்கவும் செய்யும் தானே.
அதே போல ஐந்தாம் நாள் தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என்று மரகதம் சொல்ல, ஈசன் “அதுக்கு நான் என்ன செய்யணும்???” என, லட்சுமி பார்த்த பார்வையில் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாதவன்,
“எப்போன்னு சொல்லுங்க, வர்றேன்…” என்று முடித்துக்கொண்டான்.
அவனுக்கு இப்படியான சம்பிரதாயங்களில் முதலில் அத்தனை ஈடுபாடில்லை.. நம் முன்னோர்கள் எல்லாம் இப்படிதான் செய்தார்களா என்ன?? பணம் நிறைய இருக்கிறவர்கள் அதனை செலவு செய்ய வழி தெரியாமல் இப்படியெல்லாம் செய்தால், அதுவே பழக்கமும் ஆகி, இல்லாதவர்கள் கஷ்டப்பட்டு, கடனை உடனை வாங்கி இதையே செய்ய வேண்டிய சூழல் வந்திட, ஈசனுக்கு இதெல்லாம் கொஞ்சமும் உடன்பாடில்லை.
ஆனால் இது மற்றவர்களுக்கு புரியவேண்டுமே. அவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததனால் தான் இப்படி அனைத்தையும் தவிர்க்கிறான் என்று நினைக்க, லட்சுமியின் மனமோ இன்னும் தவித்தது.
ஏற்கனவே ஒன்றும் பேசுவதில்லை, இப்பொழுது இது எல்லாத்தையும் வேறு அவன் ஒவ்வொன்றாய் சொல்ல. ‘ச்சே.. இந்த ஈஸ் மாமா அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணாங்க…’ என்று நொடித்தபடி அவனை கண்டவளை அவனும் பார்த்தான்.
பல நாட்கள் கழித்து இருவர் பார்வையும் பேசிக்கொள்ள, ஈசன் மேற்கொண்டு எதுவும் பேசாது, மறுநாள் தாலி பிரித்து கோர்க்கும் போது வந்து நின்றான். தாலியை தங்கச் சங்கிலியில் கோர்த்து மீண்டும் அவள் கழுத்தில் அணியும் போது லட்சுமியின் பார்வை அவளையும் அறியாது ஈசனை காண, அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.
“ஈசா வா.. வந்து குங்குமம் வச்சி விடு..” என்று மரகதம் அழைக்க,
‘ஈஸ் மாமா மறுப்பேதும் சொல்லாம வரணுமே..’ என்று கலங்கியபடி கலங்கியபடி அவனை காண, அவனோ மறுப்பேதும் சொல்லாமல் வந்து இவள் முன்னே நின்றான்.
“ம்ம்ம் இந்தா வச்சு விடு…” என்று குங்கும சிமிழை அவன் முன் நீட்ட, லட்சுமியின் அவன் முன் தாலியை எடுத்து நீட்ட, தன்னப்போல் ஈசனின் கரங்கள் குங்குமத்தை எடுத்து தாலியில் வைத்துவிட்டு, அவள் கண்களை காண, லட்சுமிக்கு மனதில் அதிர்வலை பரவி, சிலிர்க்க வைத்தது.
கண்களை இறுக மூடி அந்த நொடியை ஆழமாய் ரசித்து, மனதில் பதித்துக்கொண்டாள். அவள் கண்கள் மூடி நின்ற அந்த நொடி அவனுக்கு என்ன தோன்றியதோ, மீண்டும் சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்தவன் அவள் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்துவிட்டான்.
அவன் விரல்களின் அழுத்தத்தில் கண்கள் திறந்தவளுக்கு இதெல்லாம் நிஜமா என்று தான் தோன்றியது. ஆனால் அவள் கனவா நிஜமா என்று தன்னுள்ளே பட்டிமன்றம் செய்து ஒரு முடிவிற்கு வருமுன் ஈசன் பழையபடி அவன் அமர்ந்த இடத்திற்கு சென்றிருந்தான்.
இதையெல்லாம் கண்டுகொண்டிருந்த அனைவர்க்கும் அந்தளவில் மகிழ்ச்சி என்றாலும், பேச்சியின் முகமோ கொஞ்சம் குழம்பிய நிலையிலேயே தான் இருந்தது. தன் அம்மாவின் முகத்தை பார்த்தே கண்டுகொண்டவள், யாரும் அறியாவண்ணம்,
“என்னம்மா?? ஏன் ஒருமாதிரி இருக்க???” என,
“உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கணும் லட்சுமி…” என்று ஒரு அன்னையாய் வருத்தம்கொள்ள,
“அட… இதுக்கெல்லாம் ஏன்மா வருத்தமாயிருக்க?? எல்லாம் சரியா போகும்.. ஈஸ் மாமா பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும் தான. அப்புறம் என்ன..??” என்று பேச்சிக்கு தைரியம் சொன்னாள்.
“அண்ணனும் அண்ணியும் வந்து கேக்கும் போது, எனக்கு மறுக்க முடியலை. அதுவுமில்லாம என் கண்ணு முன்னாடியே இருப்பன்னு தான் சரின்னு சொன்னேன்…”
“இப்பவும் என்னம்மா உன் கண்ணு முன்னாடி தானயிருக்கேன்.. எல்லாம் சரியா போகும்.. ஈஸ் மாமா என்னை நல்லதான் பார்த்துக்கிறாங்க.. அவங்களுக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் பிடிக்காது அதான்..” என்று கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசிய மகளை கண்டு பேச்சிக்கு மனதினுள் நம்பிக்கை பிறந்தது. லட்சுமியின் கன்னம் தடவி சிரித்துவிட்டு போனார்.
இப்படி ஒவ்வொருவராய் சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தாள் லட்சுமி. ஈசனிடம் எது பேசினாலும் அது பயனில்லாமல் போக வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் இவளைத்தான் பிடித்தனர்.
மரகதம் வந்து இவளிடம் “என்ன லட்சுமி தனியா இங்கன இருக்க சங்கடமா இருக்கா??” என்று வினவ,
“இல்லத்தை… நீங்க பாட்டி எல்லாம் இங்க தானே இருக்கீங்க.. அதுனால ஒன்னும் தெரியலை..” என்று சிரித்தபடியே சொன்னாலும் அவளுக்குமே இப்படி தனியே இருப்பது இஷ்டமில்லை.
மற்ற கணவன் மனைவி போல் திருமணமான புதிதில் ஒருவரை விட்டு ஒருவர் விலகாது, ஊடலும் கூடலுமாய் இருந்திருந்தால் இந்த தனிமை பிடித்திருக்குமோ என்னவோ. இங்கே தான் பேச்சிற்கே பஞ்சமாய் அல்லவா போய்விட்டது. அதை அவள் யாரிடம் சொல்ல முடியும்.
“அவன் கொஞ்சம் அப்படிதான்.. போக போக எல்லாம் சரியாகிடும் லட்சுமி.. நீ தான் கொஞ்சம் விட்டு பிடிக்கணும்.. சீக்கிரமே அவனை அங்க கூட்டிட்டு வந்திடு கண்ணு…” என்று ஆறுதலாக மரகதம் சொல்ல, முத்தழகு வேறு தன் பங்கிற்கு புலம்பிவிட்டு செல்ல, இவளுக்கு பொறுமை சிறிது சிறிதாய் பறக்கத் தொடங்கியது..
“ஈஸ் மாமா பத்தி உங்க எல்லாருக்கும் தெரியாதா?? ஏன் அவங்கட்ட சொல்ல வேண்டியதுதானே இத்தனையும்.. நான் மட்டும் என்னதான் செய்ய.. எல்லாமே உடனே மாரிடனுமா என்ன…??” என்று கத்த வேண்டும் போல் இருந்தாலும், தன்னுள்ளே அடக்கி அமைதியாகவே அனைவரிடமும் பேசினாள்.
ஆனால் இதெல்லாம் ஈசனுக்கு எங்கே புரிய போகிறது வழக்கம் போல் இரவு வீடு வந்தவன், கண்களை மூடிக்கொண்டு, கைகளை கட்டியபடி அமர்ந்திருக்க, பேசுவான் பேசுவான் என்று பொறுத்து பொறுத்து பார்த்தவள் டிவியின் சத்தத்தை அதிகரிக்க, அச்சத்தத்தில் அவளை காண, அவளோ ருத்ர தேவியாய் இவனை பார்த்திருந்தாள்.
டிவியின் சத்தம் வேறு அவனுக்கு எப்படியோ இருக்க, இவளும் முறைத்து அமர்ந்திருக்க, சில நொடிகள் அவளையே பார்த்தவன், பின் ஒன்றும் சொல்லாது டிவியை அமர்த்தினான்.
ஒருவேளை அப்படியே அறைக்கு சென்றுவிடுவானோ என்று பார்த்தவளை மீண்டும் திரும்பி பார்த்தவன் வந்து பழையபடி அமர, அவளுக்கு இன்னும் இன்னும் கோவம் அதிகமாகியது.
“என்னை எதுக்கு மாமா கல்யாணம் பண்ணீங்க???” என்று அடக்கப்பட்ட கோவத்தில் வந்த கண்ணீரை கன்னங்களில் வழியா வண்ணம் விழிகளுக்குள்ளே அடக்கிவைத்தபடி அடிக்குரலில் கேட்ட லட்சுமி அவனுக்கு புதிது தான்.
அவள் அழுது ஒருசில முறைதான் பார்த்திருக்கிறான். அதுவும் பல வருடங்களுக்கு முன். அதன் பின் அவன் கண்டதெல்லாம் முகத்திருப்பல்கள் மட்டும்தான். ஆனால் இப்பொழுது கண்ணீர் விழிகளோடு கேட்கவும், அவனுக்கு ஏனோ சங்கடமாய் போனது. ஆனாலும் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல்,
“என்ன லஷ்மி..??” என்றான்.
அவ்வளவு தான் கண்ணீராவது இன்னொன்றாவது. கண்களை இறுக மூடி மூச்சை ஆழ எடுத்து விட்டவள், முகத்தையும் கண்களையும் நன்றாய் துடைத்துவிட்டு,
“என்னை எதுக்கு கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்டேன்??” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.
“இப்போ எதுக்கு லஷ்மி இந்த கேள்வி???”
“ஏன் கேட்கக் கூடாதா??? இப்போ கேட்காம பின்ன எப்போ கேட்பாங்க?? சொல்லுங்க யாரை பழிவாங்க இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னீங்க??அத்தை மாமாவையா?? இல்லை என்னையா??”
“ஹே!!! லஷ்மி என்ன இது பெரிய வார்த்தை எல்லாம் பேசுற???” என்றவனுக்கு நிஜமாகவே அப்படியான எண்ணம் எதுவுமில்லை.
அவனை பொறுத்தவரை இந்த திருமணம் அவன் விருப்பமில்லாமல் நடந்த ஒன்று தான். ஆனால் இதற்குமேலும் அவன் வாழ்வில் யாரும் தலையிடுவது அவனுக்கு பிடிக்கவில்லை.
அதற்காக யாரை அவன் பழிவாங்கிட முடியும்?? அவனை பெற்றவர்களையா?? இல்லை லட்சுமியையா?? இரண்டுமே முடியாதே. அப்படி செய்தால் அது அவனை அவனே பழிவாங்கி கொண்டது போல் அல்லவா ஆகும்.
“ஓ..!!! நான் சொன்ன வார்த்தை பெருசா போச்சு… ஆனா நீங்க செய்ற எதுவுமே உங்களுக்கு பெருசா தெரியலை அப்படித்தான..”
அவளது பேச்சும், கோவமும், பாவமும் நிஜமாகவே அவனுக்கு இவள் ஏன் இப்படி பேசுகிறாள் என்று புரியாமல் இல்லை, அதற்கான காரணமும் அவனிடம் இருக்கிறது. இருந்தாலும் ஆரம்பித்தவள் அவள் தானே ஆக அவளே முடிக்கட்டும் என்றெண்ணியவன்,
“ம்ம்ச் என்ன லஷ்மி.. எதுவான்னாலும் தெளிவா சொல்லு…” என்றான்.