இத்தனை நாள் இப்படி இவர்கள் வந்ததில்லை. எப்பொழுதாவது முத்தழகு வந்து போவார். மரகதம் ஏதாவது சொல்லவேண்டும் என்றால் மட்டுமே வருவார். அங்கும் வேலை சரியாய் தானே இருக்கும். ஆனால் இன்று இருவரும் சேர்ந்து வரவும் அவளுக்கு என்னவாய் இருக்கும் என்று மனதில் உறுத்திக்கொண்டே இருக்க,
“அவரும் வேலு அண்ணாவும் மதுரைக்கு போயிருக்காங்க… பாலாவும் கடைக்கு போயிட்டான்.. சரி நாங்க ரெண்டு பேரும் என்னத்த செய்யன்னு இங்க வந்திட்டோம்…” என்றார்.
“ம்ம் அதுவும் சரிதான் அத்தை…” என்றவள் மேற்கொண்டு மதிய சமையலுக்கு எல்லாம் தாயார் செய்ய,
முத்தழகு, “லட்சுமி.. அந்த காய் வெங்காயம் எல்லாம் எடுத்து குடு நான் அரிஞ்சு தர்றேன்…” அரிவாள்மனையுடன் அமர,
“எதுக்காம் இப்போ நீங்க காய் வெட்ட உட்காந்தா ராத்திரி சாப்பாட்டுக்கு தான் ஆகும் பாட்டி.. வேணாம்.. நானே பார்த்துக்கிறேன். நேரமாச்சு….” என்று அவரை வம்பிழுத்தபடி வேலையை தொடங்க,
“இந்தாடி.. என்ன பேச்சு நீளுது.. நான் பார்க்காத வேலையா?? உன் வயசுல நான் எம்புட்டு வேலை செய்வேன் தெரியுமா?? வீட்டு வேலை தோட்ட வேலைன்னு சும்மா பம்பரமா சுத்திட்டு இருப்பேன்…” என்று பதிலுக்கு முதழகும் வாய் பேச,
“ஆமாமா பம்பரமா சுத்தி சுத்தி தான் கீழ விழுந்து பல்லு முக்காவாசி காணோம்..” என்று பதிலுக்கு லட்சுமியும் வாய் கொடுக்க,
“ஹ்ம்ம் நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது… ரெண்டு பேரும் பேசாம இருங்க…” என்று மரகதம் சமாதானம் செய்ய முன் வர, இப்படியே நேரம் நன்றாகவே போனது லட்சுமிக்கு.
ஆனாலும் அவ்வபோது பார்வை மட்டும் ஈசன் எழுந்துவிட்டானா என்று பார்த்தபடி இருந்தது.
“ஈசன சாப்பிட்டிட்டு கூட தூங்க சொல்லியிருக்கலாம்ல லட்சுமி…” என்று மரகதம் சொல்ல,
“இல்லத்தை நைட்டு முழுக்க தூங்கலை போல… அதான் வந்ததும் குளிச்சிட்டு தூங்குறாங்க…” என்று சொல்ல, மகன் நன்றாய் உறங்குவதை கண்டவர், மெல்ல தன் மருமகளிடம்,
“லட்சுமி நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காத.. ஈசன் இப்படி தனியா வருவான்னு நான் நினைக்கல.. அது.. அது.. நீ அங்கன இருந்தா அவன் உன்னை எப்படி பார்த்துக்கிறான்னு எங்களுக்கு தெரியும், என்னதான் நடுவாசல் ஒரே வீடுன்னாலும், இங்க என்ன நடக்குதுன்னு தெரியாதுல்ல…” என்று இழுக்க,
அவர் முகமே எதுவோ சொல்ல வருகிறார் என்பதனை உணர்த்த “என்னத்தை சொல்லுங்க…” என்றாள் லட்சுமி.
“சந்தோசமா இருக்கீங்களான்னு கேட்க வர்றீங்களா அத்தை…” என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.
இது தான் லட்சுமி. யாராக இருந்தாலும் மனதில் பட்டதை உடனுக்குடன் கேட்டு விடுவாள். அது கணவனாக இருந்தாலும் என்ன அவனை பெற்றவராக இருந்தாலும் என்ன?? ஆனால் மரகதத்திற்கு தான் ஆச்சரியம். தான் கேட்க சங்கடப்பட்ட ஒன்றை தன் மருமகள் ஒரே போடாய் கேட்கவும். பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டும் ஆட்டினார்.
ஆனால் லட்சுமிக்கு தான் இந்த பேச்சு எப்படியோ போனது. திருமணமான ஒரே நாளில் அவள் சித்தியும் இதே கேள்வி தான் கேட்க, ஒரு வாரம் சென்றதும் அவள் மாமியாரும் இதையே கேட்க, இவர்கள் எல்லாம் என்ன நினைத்துகொண்டு இருக்கிறார்கள் என்றே எண்ண தோன்றியது. ஈசனை பற்றி அவர்களுக்கு தெரியாதா?? இல்லை அவளை தான் தெரியாதா??
அவர் முகத்தை பார்க்காமல் வேலை இருப்பது போல திரும்பி நின்றபடி, அடுப்பில் எதுவோ செய்துகொண்டு,
“இந்த கல்யாணம் நடந்ததுல நான் சந்தோசமாத்தான் அத்தை இருக்கேன். அதுனால இந்த கேள்விய நீங்க ஈஸ் மாமா கிட்ட கேட்டீங்கன்னா அவங்க பதிலும் தெரிஞ்சிடும்.. ஏன்னா கல்யாணம் எங்க ரெண்டு பேருக்கு தானே ஆச்சு.. அப்போ கேள்வியும் ரெண்டு பேருக்கும் தான் கேட்கணும்…” என்று சொல்லி முடிக்க,
“ஆத்தி.. அவன்கிட்ட இதை பத்தியெல்லாம் பேச முடியுமா???” என்று வாயில் விரல் வைத்தார் மரகதம்.
லட்சுமிக்கு உள்ளூர சிரிப்பு.. மரகதம் போய் இப்படியெல்லாம் ஈசனிடம் கேட்க முடியுமா?? ஆனாலும் உனக்கு தைரியம் தான்டி லட்சுமி என்று எண்ணிக்கொண்டாள்.
இதற்குமேல் இதை பற்றி பேசினால் நன்றாய் இருக்காது என்று தோன்ற, “சரி லட்சுமி, கொழம்புக்கு தாளிச்சு ஊத்து.. சீரகம் நிறையா போடு.. அப்போதான் அவனுக்கு பிடிக்கும்…” என்று சொல்லி பேச்சை மாற்றினார்.
அவளும் சரியென்று அவர் சொன்னது போலவே தாளித்து, குழம்பை எடுத்து கடாயில் ஊற்றும் நேரம்,
“என்ன கிழவி எப்போ வந்த…??” என்று ஈசன் குரல் கேட்க, அந்த நொடி என்ன தோன்றியதோ, அவன் குரல் கேட்ட உணர்வில் லட்சுமி குழம்பை பொத்தென்று கடாயில் ஊற்றிட, அதுவோ சூடான எண்ணெயில் விழுந்த வேகத்தில் இவள் மீதே தெரித்தது. கழுத்து கை என்று லேசாய் குழம்பு தெரித்திட,
“ஸ்… ஆ….” என்று கத்திவிட்டாள்.
மரகதம் பதறி போய் அருகே வர, அதற்குள் அவள் வேகமாய் தண்ணீர் கொண்டு துடைக்க,
“என்னாச்சு என்றபடி…” ஈசன் உள்ளே வந்தான்.
திகைத்து நின்ற மரகதமும், திரும்பி நின்றிருந்த லட்சுமியும் மட்டும் தான் அவன் கண்களில் பட என்ன நடந்திருந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. இருவரையும் மாறி மாறி பார்த்தவனுக்கும், மரகதத்தின் கேள்வி பார்வைக்கும், பொதுவாய் “கை சுட்றுச்சு…” என்று பொதுவாக மட்டும் பதில் கூறினாள்.
“பார்த்து வேலை செய்மா…” என்று மரகதம் கூற, அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், பின் “ம்மா சாப்பிட எடுத்து வைய்யுங்க..” என்று வெளியே சென்று அமர்ந்துகொண்டான்.
ஈசன் சென்றதும் அவன் பின்னோடு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மரகதம் செல்ல, லட்சுமிக்கோ கண்களில் பொசுக்கென்று நீர் வந்து விட்டது. சூடான குழம்பு தெரித்த எரிச்சல் வேறு, ஈசனின் பாராமுகம் வேறு, இது போதாது என்று அவன் மரகதத்தை சாப்பாடு போட சொன்னது வேறு.
திருமணமான இத்தனை நாட்கள் கழித்து மதிய வேளையில் உண்ண வந்திருக்கிறான். அதுவும் அவள் சமைத்திருக்கிறாள், பார்த்து பார்த்து அவனுக்கு தானே பரிமாற ஆசையாய் இருந்தது. ஆனால் நடக்கவேண்டுமே.
சமையலறை வாசலுக்கு வந்து நின்றுகொண்டாள், அங்கேயோ ஈசன் கீழே அமர்ந்திருக்க, மரகதம் அவன் முன் அமர்ந்து பரிமாறி கொண்டு இருந்தார். லட்சுமிக்கோ உள்ளே ஏக்கம் பொங்கி வழிந்தது. மரகதம் அருகிருக்கும் போது இவளும் சென்று அங்கே அமர்வதும் சரியாய் இருக்காது.
‘இந்த அத்தைக்கு அறிவேயில்ல.. எங்கிட்ட கேள்வி மட்டும் நல்லா கேட்க தெரியுதுல்ல.. சமைச்ச எனக்கு சோறு போட தெரியாதா.. இந்த ஈஸ் மாமா தான் லூசு மாதிரி சொல்றாங்கன்னா இவங்களும் இப்படித்தான் செய்யணுமா…’ என்று மனம் குமுறி நின்றிருந்தாள்.
அவள் பார்வை எல்லாம் அவன் மீது தான் இருந்தது.. ஈசனும் இரண்டொரு முறை திரும்பி பார்த்தவன், அவளிடம் ஒன்றும் சொல்லாமல், “நீங்க எல்லாம் சாப்பிடலையா…???” என்றான் மொட்டையாய்.
சரி இதையே சாக்காய் வைத்து அவனோடு பேச்சை தொடங்கலாம் என்று லட்சுமி வாய் திறக்க, அதற்குமுன் முத்தழகு,
“நீ முதல்ல சாப்பிடு ஈசா.. நாங்க மூணு பேரு அடுத்து ஒண்ணா சாப்பிடுறோம்..” என்று பேச்சை முடித்து வைக்க, ‘ஏய் கிழவி…’ என்று பல்லை கடித்துக்கொண்டாள்.
அவன் உண்டு முடித்து, அடுத்து இவர்கள் மூவரும் உண்டு முடித்து எப்போதடா தனிமை கிடைக்கும் என்று லட்சுமி காத்திருக்க, ஈசனோ அறைக்குள் போன வேகத்தில் வேறு உடைக்கு மாறி வெளிவந்தவன்,
“பண்ணைக்கு போயிட்டு, கடைக்கு போறேன்…” என்று பொதுவாகவே சொல்லி சென்றுவிட்டான். இவளுக்கோ சப்பென்று ஆனது..
சிறிது நேரத்திலேயே முத்தழகும், மரகதமும் கிளம்பி சென்றுவிட, லட்சுமிக்கோ இன்னும் தவிப்பாய் போனது. ஆனால் இறைவனுக்கு லட்சுமியின் தவிப்பு புரிந்ததுவோ என்னவோ ஈசன் சீக்கிரமே வீடு வந்தான்.
அவன் புல்லட் சத்தம் கேட்கவுமே, வேகமாய் வாசலுக்கு வந்தவளை அன்று காலை போலவே இப்பொழுதும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். இவளும் வால்பிடியாய் பின்னோடே செல்ல, அவனோ அறைக்குள்ளே உடைமாற்ற,
‘ச்சி.. ச்சி இந்த ஈஸ் மாமா கதவை சாத்தாமா..’ என்று தலையில் அடித்துக்கொண்டு அவன் வெளிவர காத்திருக்க, லேசாய் பின்னே திரும்பி பார்த்தவன், ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்து வெளியே வந்தான்.
ஆனாலும் அவளை கண்டுகொள்ளாமல், நேராய் அடுப்படிக்குள் செல்ல,
“மாமா…” என்றபடி அவளும் பின்னே செல்ல, அதெல்லாம் அவன் கண்ணில் பட்டது போலவே தெரியவில்லை.
“மாமா நான் எடுத்து வைக்கிறேன்…” என்று வந்தவளை கண்டுகொள்ளாது அவனாகவே தட்டில் போட்டுக்கொண்டு வந்து அமர, லட்சுமியோ வேகமாய் தண்ணீர் எடுத்து வந்து வைத்தாள். ஆனால் அவனோ அதெல்லாம் சிறிதும் கூட சட்டை செய்யவில்லை.
இவள் காத்திருப்பது தெரியாமல் எல்லாம் இல்லை. இருந்தும் மனதினுள் ஒரு பிடிவாதம், பார்வையை பிடிவாதமாய் இவள் பக்கம் திருப்பாமலேயே உண்டவன், தானே தட்டையும் எடுத்துக்கொண்டு போய் போட்டுவிட்டு வெளி வந்தான்.
அவனது செய்கைகள் லட்சுமிக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் அனைத்தும் தன்னால் தான் என்று உணர்ந்தே இருந்ததால், அவன் பின்னேயே சுற்றினாள். இறுதியாக அவன் குளியலறைக்குள் நுழைய, அது அவளுக்கு புத்தியில் எட்டாமல் அவளும் பின்னோடு போக, அதை உணர்ந்த ஈசனோ வேகமாய் திரும்பி அவளையும் இழுத்து சுவரில் சாய்த்து நிறுத்தி,
“என்ன தான் டி வேணும் உனக்கு??? ஒன்னு பேசாமையே முகத்தை திருப்புற.. இல்லை பேசியே பின்னாடி சுத்துற…” என்று சற்றே எரிச்சலாய் கேட்டபடி தன் கண்களை அவள் விழிகளோடு உறவாட விட, ஈசனின் இந்த திடீர் செய்கையில் அனைத்தும் மறந்து போனது அவளுக்கு.
அவளது இரண்டு தோள்களையும் அவன் கரங்கள் பற்றியிருக்க, இருவருக்கும் இடையே இடைவெளி இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல், அதுவும் குளிக்கும் அறைக்குள் அவன் பின்னே தானும் வந்ததை எல்லாம் எண்ணி, வெக்கம் மேலிட, தான் ஏன் அப்படி வந்தோம் என்பதையும் மறந்து அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள்.