“இவ்வளோ நேரமாச்சு… இன்னும் இந்த ஈஸ் மாமாவ காணோம்…” என்று கடிகாரத்தையும், வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள் லட்சுமி. நேற்று இரவு சென்றவன் பொழுது விடிந்தும் வந்தபாடில்லை. இவளுக்கு துணை இருந்த மரகதம் கூட,
“அங்க வீட்ல வேலை நிறைய இருக்கு லட்சுமி… நீ இங்க ஒன்னும் செய்யாத.. நானே எல்லாம் செஞ்சு பாலாக்கிட்ட குடுத்து விடுறேன்…” என்று சென்றுவிட்டார்.
சரி ஈசனும் வந்துவிடுவான் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிச்சம்.
‘ஈஸ் மாமா… ஏன் இவ்வளோ நேரம் பண்றீங்க.. போன் பண்ணாலும் எடுக்கமாட்றீங்க…’ என்று தன் கையில் இருந்த அவள் அலைபேசியில், திருமணத்தன்று எடுத்த, இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இதழில் மெல்லோடிய ஒரு புன்னகையோடு நின்றிருந்த ஈசன் புகைபடத்திடம் தான் பேசினாள் லட்சுமி.
லட்சுமியின் மனமோ நேற்று தன்னிடம் ஈசன் பேசியதையே எண்ணமிட, அவனை எப்போதடா காண்போம் என்று ஏங்கியது.
‘இந்த ஆத்தை வேற.. எம்புள்ள இப்படி எம்புள்ள அப்படின்னு… ஈஸ் மாமா பத்தி பேசியே என்னை ஒருவழி செஞ்சிட்டாங்க… இல்லாட்டி எனக்கு அவங்களை பத்தி தெரியாதா…’ என்று நொடித்தவள், மீண்டும் ஈசனுக்கு அழைத்து பார்க்க, அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்ததே தவிர அவன் எடுப்பது போல் தெரியவேயில்லை.
‘ம்ம்ஹும் இது வேலைக்காகாது….’ என்று யோசித்தவள் வேகமாய் கேபிள் ஆபீஸுக்கு அழைத்தாள். இரண்டொரு வினாடி சென்றதுமே அழைப்பு எடுக்கப்பட,
“பிரபுண்ணா… மாமா… எங்க..???” என்றாள் யார் பேசுகிறார்கள் என்று கூட தெரியாமல்.
ஆனால் அழைப்பை எடுத்தது ஈசன்..
“லஷ்மி…” என்று குரலிலேயே, அவன் அங்கேதான் இருக்கிறான் என்று புரிந்துவிட, மற்றது எதுவும் அவள் புத்தியில் ஏறமால், இத்தனை நேரம் ஏன் வராமல் இருந்தான் என்று கேட்கவும் மறந்து, தன்னை இப்படி தவிக்க விட்டானே என்று மட்டும் எண்ணியவளுக்கு கோவமே வர,
“மாமா… ஆபிஸ்ல இருந்துட்டு தான் வீட்டுக்கு வராம இருக்கீங்களா??? நான் எவ்வளோ நேரமா உங்களுக்கு கூப்பிட்டு பார்க்க.. என்னதான் செய்றீங்க.. எடுத்து பேசினா என்னவாம்..??” என்று வேகமாய் பொரிந்து தள்ளிவிட்டாள்.
ஆனால் அப்பக்கம் ஈசன் எந்நிலையில் இருக்கிறான் என்று இவளுக்கு தெரியாதே. இரவெல்லாம் அலைந்து, பிரச்னையை சரி செய்துவிட்டு அப்பொழுது தான் கேபிள் ஆபீஸ்க்கு வந்து சேர்ந்திருந்தான். பிரபுவும் பாலாவும் கேபிள் ஆபிஸில் இருந்தே மற்ற வேலைகளை காண, ஈசனும் மற்றொரு வேலையாலும் தான் உறங்காமல் அலைந்து திரிந்து எங்கெங்கே பிரச்சனை என்று பார்த்து சரி செய்து வந்தது, இரவெல்லாம் உறங்காத களைப்பும், வீதி வீதியாய் அலைந்து திரிந்த அலுப்பும் வேறு அவனுக்கு எப்படியோ இருக்க கண்கள் மூடி நிம்மதியாய் சிறிது நேரம் அமர்ந்திட மாட்டோமா என்று தான் தோன்றியது.
தன்னை கொஞ்சம் சமன் செய்துகொண்டு அவனே அழைத்து பேசியிருப்பான் லட்சுமிக்கு. ஆனால் அது வரை எல்லாம் எனக்கு பொறுமையில்லை என்பது போல் அவளோ விடாது அழைக்க, அதுவும் எடுத்த உடனே என்ன சொல்ல வருகிறான் என்று கூட கவனிக்காமல் பொரிய, அவனுக்கோ எல்லாம் சேர்த்து கடுப்பாகி போனது.
“ஏய்… கொஞ்சம் நிறுத்துறியா…??? விட்டா பேசிட்டே போற.. நேத்து உங்கிட்ட சொல்லிட்டு தானடி போனேன்.. கிளம்பி வந்த எனக்கு வீட்டுக்கு வர தெரியாதா….” என்று கத்திவிட்டு பட்டென்று போனை வைத்துவிட்டான்.
அவன் பேசியதில் கண்கள் குளம் கட்டியிருந்தது. தானும் அப்படி எடுத்ததுமே வேகமாய் பேசியிருக்க கூடாது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. அவனுக்காக தான் இப்படி காத்திருக்க, எதிர்பார்த்திருக்க, அவனோ தன்னை அலட்சியபடுத்திவிட்டான் என்றே எண்ணினாள்.
‘எப்பவுமே உங்களுக்கு நான்னுன்னா லேசு தான் ஈஸ் மாமா… என்ன பண்றது.. என் விதி அப்படி போல.. உங்களை காணோமேன்னு தான கூப்பிட்டேன்.. அதுக்குன்னு இப்படியா பேசுவீங்க… ச்சே.. என்ன மனசு உங்களுக்கு.. நேத்து வரைக்கும் ஒருமாதிரி, இப்போ ஒரு மாதிரி பேசுறீங்க…’ என்று தன் போக்கில் அவனை அர்ச்சித்து கொண்டிருந்தவளை,
“லச்சு….. மதினி…” என்ற பாலாவின் குரல் கலைத்தது.
இவன் எப்படி உள்ளே வந்தான் என்று கேள்வியாய் பார்க்க,
“ம்ம்ம்.. வச்சிட்டு போ நான் சாப்பிட்டுக்குறேன்…” என்று சொன்னாள் அவன் முகம் கூட பாராது.. ஆனால் பாலாவிற்கு லட்சுமியை பற்றி தெரியாதா?? அதுவும் தோழி வேறு.
“ம்ம்ச் இப்போ எதுக்கு சோக கீதம் வாசிக்கிற??” என்று அக்கறையாய் கேட்க தொடங்கியவன் “மதினி…” என்று கிண்டலோடு முடித்தான்.
என்று கஜேந்திரன் லட்சுமிக்கு மரியாதை கொடுத்து பேசு என்று மகனை கடிந்தாரோ அன்றிலிருந்து அப்படிதான் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
“மதினி மதினி…” என்று சொல்லி அவளிடம் நன்றாய் வாங்கிக்கட்டிக்கொள்வான்.
இன்றோ ஏற்கனவே லட்சுமி ஒருவித தவிப்புணர்வில் இருந்தாள், போதாத குறைக்கு ஈசன் வேறு அவளை திட்டவும் இன்னமும் மனம் எப்படியோ போனது. இந்த பாலா வேறு வந்து எரியும் நெருப்பில் நெய் அண்டாவை கொட்ட அது இன்னமும் கொழுந்து விட்டு எரிந்தது.
“இந்தா அடி வேணுமா உனக்கு… மதினியாம்.. மதினி.. போ அங்கிட்டு.. குடுத்துட்டல்ல கிளம்பு… வந்துட்டான் மதினின்னு கூப்டுக்கிட்டு…” என்று ஈசன் மீதிருந்த கோவத்தை எல்லாம் இவன் சிக்கினான் என்று காட்ட, அவனோ ஒன்றும் சொல்லாமல், அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்து,
“என்ன லச்சு.. இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற…” என்றான் அமைதியாய்.
சிறுவயதில் இருந்து பார்த்தவள், உடன் பழகியவள். அவனுக்கும் புரியும் தானே. அவன் அப்படி கேட்டதும் அவளுக்கே தான் பேசியது அதிகமாய் தெரிய,
“ம்ம்ச் ஒண்ணுமில்ல விடு… சரி நீ கிளம்பு..” என,
“ஹ்ம்ம் நான் இன்னும் உனக்கு முதல்ல பிரன்ட் தான் லச்சு.. அப்புறம் தான் உனக்கு கொழுந்தன்…” என்று பாலா சொல்லவும், அவ்வளவு தான் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் பொசுக்கென்று பொங்கிய சோடா பாட்டில் போல் வெளி வந்தது.
கண்ணீரை துடைத்தபடி, நடந்ததை சொன்னவள், அவன் பதிலுக்காய் காத்திருக்க, அவனோ கேட்டதுமே, அவளை முறைக்கத்தான் செய்தான்.
“அறிவிருக்கா உனக்கு.. நைட் புல்லா கிட்டத்தட்ட நம்ம ஊற சுத்தி நூறு கிலோ மீட்டார் வண்டிலேயே அண்ணா அலைஞ்சிருக்கான்.. நம்ம போட்ட கேபிள் வயர் எல்லாம் எவனோ கட் பண்ணிருக்கான்.. எல்லா ஜங்க்சன்லையும் வயர் மாத்தி மாத்தி போட்றுக்கானுங்க.. போன் மேல போன்… கேட்கிறவங்களுக்கு நேத்திருந்து பதில் சொல்ல முடியலை..
அண்ணனும் நம்ம காசியண்ணனும் தான் ராத்திரி எல்லாம் அலஞ்சு நைட்டோட நைட்டா ஓரளவுக்கு சரி பண்ணாங்க.. நானும் பிரபுவும் ஆபிஸ்ல இருந்து மத்த வேலைய பார்த்தோம்… நாங்களாவது நடுவுல கொஞ்சம் தூங்கினோம்.. அண்ணன் அதுவுமில்லா… எடுத்ததுமே இப்படிதான் பேசுவியா…”
இத்தனை நடந்தது லட்சுமிக்கு தெரியாதே.. அவள் அறிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று, முதல் நாள் இரவு வீட்டிலிருந்து கிளம்பியவன், இன்னும் வரவில்லை. என்னானதோ, ஏதானதோ.. அழைத்தும் எடுக்கவில்லை. இது மட்டுமே தான் மனதில் இருக்க, ஈசன் அழைப்பை எடுத்ததும் அப்படி பேசிவிட்டாள்.
ஆனால் இரவெல்லாம் அவன் உறக்கமில்லாமல் அலைந்து திரிந்து வந்தது தெரிந்திருந்தால் அவள் ஏன் இப்படி பேசியிருக்க போகிறாள். பாலா சொன்னதை கேட்டதும் அவளுக்கே ஒருமாதிரி சங்கடமாய் போனது. தான் செய்தது தவறு என்று புரியவும்,
“ம்ம்ம்.. சாரி பாலா…. எனக்கு இதெல்லாம் தெரியாதுல்ல…” என்றாள் முகத்தை பாவமாய் வைத்து.
“ஹ்ம்ம் இப்போ மூஞ்சிய இப்படி வச்சு என்ன செய்ய.. எங்க அண்ணன பாக்கும் போதெல்லாம் காந்துற…”
“ம்ம்ச் நான் தான் சாரி சொல்லிட்டேன்ல..”
“சரி சரி.. சாப்பிடு.. நான் கேபிளுக்கு போயிட்டு அண்ணன அனுப்புறேன்…” என்று கிளம்ப எத்தனித்தவன், “அப்புறம் மதினி…” என்று எதோ முக்கியமான விசயம் சொல்ல வருவது போல் முகத்தை திருப்ப, ,
“டேய் நீ அடி வாங்க போற… போயிடு..” என்று விரட்டினாள்.
“சரி சரி… ரொம்பத்தான்….” என்று கிளம்பி சென்றான்.
லட்சுமிக்கு நிஜமாகவே மனம் மிகவும் சங்கட்டமாய் போனது. இத்தனை அலைந்து வந்திருப்பவனை தானும் கடிந்துவிட்டோமே என்று மனம் நொந்தபடி ஈசனுக்காக காத்திருந்தாள்.
வாசலை நோக்கி சேரை இழுத்து போட்டு அமர்ந்திருந்தவளுக்கு ஈசனின் புல்லட் சத்தம் காதில் விழ, ‘மாமா வர்றாங்க…’ என்று கூறிக்கொண்டே வேகமாய் வாசலுக்கு சென்றாள்.
ஈசனோ வண்டியை நிறுத்தியவன், இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உள்ளே சென்றுவிட்டான். அவனிடம் மன்னிப்பு கேட்கவே அவள் மனம் விழைய, அவன் பின்னோடே சென்றாள். ஆனால் ஈசனோ அவள் அவனை நெருங்குமுன், குளியறைக்குள் நுழைந்திருந்தான்..
‘ஹ்ம்ம்.. சரி கொஞ்சம் பிரெஷ் ஆகி வரட்டும்….’ என்று வேகமாய் சாப்பிட எடுத்து வைக்க போனாள்.
ஆனால் ஈசனோ, அவனுக்கு இருக்கும் அசதியில், உண்பதாவது வேறாவது, கொஞ்ச நேரமாவது காலை நீட்டி படுத்துறங்கினால் போதும் என்று தான் தோன்றியது. குளித்து முடித்து வந்தவன், உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தான். அடுத்தடுத்து நிறைய வேலைகள் வேறு இருந்தது. அதெல்லாம் சரியாய் செய்ய வேண்டுமென்றால் அவன் சிறிதாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
நேரம் செல்ல செல்ல, ஈசனை வரக்காணோம் என்றதும் மீண்டும் அறைக்குள் எட்டி பார்த்தாள். அவனோ நன்றாய் உறக்கத்தில் இருந்தான். சீரான மூச்சும், ஏறியிறங்கும் அவனது அகன்ற மார்பும் கண்ணுக்கு பட, அவனருகே சென்றாள்.
தினமும் ஒரே கட்டிலில் இருவரும் படுத்துறங்கினாலும், ஈசன் முகத்தை இதுவரைக்கும் உறக்கத்தில் கண்டதில்லை லட்சுமி. அவள் உறங்கிய பின் வருவான், அவள் விழிக்கும் முன் எழுந்து பண்ணைக்கு சென்றிருப்பான். ஆனால் இன்று ஈசனை அவன் உறங்கும் போது கண்ணார காணும் வாய்ப்பு அமைய, அதை அப்படியே விட்டு விட லட்சுமியின் மனம் ஒப்புமா என்ன??
அவனருகே சென்று நின்றவளுக்கு, ஈசனை காண காண, ஏனோ கண்ணில் நீர் நிறைந்தது. எத்தனை நாள் அவனோடு வாழ்ந்திட வேண்டும் என்று மனதினுள்ளே தன் ஆசைகளை போட்டு பூட்டியிருப்பாள்.
கண் முன்னே அவனிருந்தாலும், உரிமையாய் ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் தனக்கு தானே ஒரு முகமுடி போட்டு எத்தனை தவித்திருப்பாள். ஆனால் இன்று அவளோ ஈசன் மனைவி. பிடித்தோ பிடிக்காமலோ ஈசனுக்கு எப்படியிருந்தாலும் இந்த பிறவியில் அவள் தானே மனைவி. அவனும் அதை தானே சொன்னான்.
‘எதோ ஒரு நம்பிக்கை இருக்க போய் தானே நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்ட…’ என்று அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தானே. ஆனால் அது எதோ ஒரு நம்பிக்கை இல்லை, முழுதும் முற்றிலுமாய் ஈசன் மீது அவள் கொண்ட நம்பிக்கை. அவன் மீதிருந்த அவள் காதலின் நம்பிக்கை. என்னதான் ஒருமுறை அவன் அவளை அலட்சியப்படுதியிருந்தாலும் ஈசன் தன்னை கை விடமாட்டான் என்ற நம்பிக்கை.
இதெல்லாம் சேர்ந்து தானே அவளை திருமணத்திற்கு தயார் செய்தது. மனதில் இந்த எண்ணங்கள் எல்லாம் வந்து போக, ஈசனும் அயர்ந்து கண்ணுறங்க, அவளையும் அறியாது அவள் கரங்கள் ஈசன் தலை முடியை வருடத் தொடங்கியது.
‘சாரி ஈஸ் மாமா… நான் ரொம்ப பேசிட்டேன்..’ என்று மனதிற்குள் சொன்னவள் அவன் விழிப்பதற்காய் காத்திருந்தாள்.
லட்சுமியின் மென்கரங்கள் வருட வருட, ஈசனுக்கு இன்னும் உறக்கம் சொக்கியதோ என்னவோ, கண்களை திறக்காமல் மெல்ல புரண்டவன் அவள் கை மீதே தன் தலையை வைத்துறங்க, அவன் புரண்டதுமே, அதிர்ந்தவள், ஈசனின் இந்த செய்கையில் இன்னும் அதிர்ந்து தான் போனாள்.
ஆனால் அவன் முழிக்காமல் மீண்டும் உறங்க, அதன் பின்னே தான் நின்ற மூச்சு திரும்ப வந்தது லட்சுமிக்கு.
‘ஹப்பாடி.. ஒருநிமிஷம் பயந்தே போயிட்டேன்… நான் தலைய தடவினத மட்டும் இந்த ஈஸ் மாமா பார்த்தாங்க அவ்வளோ தான்..’ என்று பெருமூச்சு விட்டவள், மெல்ல மெல்ல அவன் உறக்கம் கலையாதவாறு தன் கைகளை விடுவித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.
லட்சுமிக்கு மனம் இப்பொழுது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஆனாலும் ஈசன் முழித்ததும் முதல் வேலையாய் அவனிடம் மன்னிப்பை கேட்டிட வேண்டும் என்று முடிவெடுத்துகொண்டாள். அவன் எப்போதடா முழிப்பான் என்று காத்திருந்தவள், வேலைய செய்துகொண்டு இருக்க, அவளுக்கு பசி மறந்து போனது. சிறிது நேரத்திலேயே மரகதமும் முத்தழகும் வந்துவிட, அவள் உண்ணவில்லை என்று தெரிந்ததும், அதட்டி உருட்டி உண்ண வைத்தனர்.
“இங்க பாரு லட்சுமி. அவன் அப்படிதான்.. வேலைன்னு வந்துட்டா சாப்பாடு தூக்கம்னு எதையும் பார்க்க மாட்டன்.. அதுக்குனு நீ இப்படி சாப்பிடாம எல்லாம் இருக்காத…” மரகதம் லேசாய் அரட்ட வேறு வழியில்லாமல் உண்டாள்.