நயந்தினி அப்போது பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். தினமும் ராகவியை பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்வது அவள் வழக்கம். ஆனால் ராகவியின் தாய்மாமாவின் மகன் வந்து இரண்டு நாட்களாக தங்கியிருப்பதால் அவளை அங்கே அடிக்கடி போக வேண்டாம் என்று நளினி கூறியிருந்தார். அந்தநேரம் தேர்வு நேரம் என்பதால் அவளும் படிப்பில் தீவிரமாகிவிட்டாள். ஆனால் மறுநாள் அவளுக்கு கணித தேர்வு. அந்த பாடம் குறித்து அவளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. அதனால் ராகவியை கேட்டு தெளிவு பெற, அவளைப் பார்க்க கிளம்பிவிட்டாள்.
நிகர்வேலன் அப்போது லண்டனில் தன் மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்தான். விடுமுறை சமயத்தில் அவன் நேராக திருநெல்வேலியில் உள்ள தங்களின் வீட்டிற்கு செல்வது தான் வழக்கம். சாகரியும் அவன் வந்திருப்பது தெரிந்தால் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு திருநெல்வேலிக்கு சென்றுவிடுவார்.
ஆனால் இந்தமுறை ரோஹனுக்கு தேர்வு நேரம். கார்மேகனும் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு வந்து இங்கே அவர்கள் ஷோரூமை கவனித்துக் கொண்டிருப்பதால் சாகரியால் குடும்பத்துடன் திருநெல்வேலி செல்ல முடியவில்லை. அதனால் லண்டன் செல்வதற்கு எப்படியோ அவன் சென்னைக்கு தான் வரவேண்டும் என்பதால், அப்படியே அத்தை வீட்டிற்கு வந்து அனைவருடனும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு பின் விமானம் ஏறலாம் என்று நிகர்வேலன் இங்கு வந்திருந்தான்.
நயந்தினி வீட்டிற்கு வரும்போது ராகவி வரவேற்பறையில் தான் இருந்தாள். நிகர்வேலன் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தான். அது தெரியாமல் நயந்தினி உள்ளேப் போக தயங்கி வாசலிலேயே நிற்க, அவளை பார்த்த ராகவியோ, “ஹே நயனி வா வா, எதுக்கு அங்கேயே நிற்கிற,” என்று கேட்க,
“சும்மா தான்,” என்றபடி நயந்தினி உள்ளே வந்தாள்.
“ஆமாம் ரெண்டுநாளா எங்க உன்னை ஆளை காணோம்,” என்று ராகவி கேட்க,
“எக்ஸாம்க்கு பிரிப்பேர் செய்துட்டு இருந்தேன் க்கா, அதில்லாம உங்க வீட்டில் கெஸ்ட் வந்திருக்காங்கல்ல, அதான் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைச்சென்.” என்று அவள் பதில் கூறினாள்.
“யாரு நிகரையா சொல்ற, அவன் அதெல்லாம் தொந்தரவா நினைக்க மாட்டான். நீ வந்திருந்தா அவனுக்கு உன்னை அறிமுகம் படுத்தி வச்சிருப்பேன்.” என்ற ராகவி,
“நிகர் அவன் ரூம்ல இருப்பான். இரு அவனை கூப்பிட்றேன்.” என்று எழுந்திருக்கவும்,
“அக்கா, அவங்களை ஏன் தொந்தரவு செய்றீங்க, எனக்கு மேத்ஸ்ல கொஞ்சம் டவுட் இருக்குன்னு கேட்க தான் வந்தேன். நிறைய இருக்கு க்கா படிக்க, முதலில் இந்த டவுட்டை கிளியர் செய்ங்க,” என்று நயந்தினி அவளை தடுத்து நிறுத்த,
“சரி என்ன டவுட் சொல்லு,” என்று ராகவியும் அதில் கவனம் வைக்க ஆரம்பித்துவிட்டாள்.
ராகவி அவளுக்கு கணக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருக்க, அதில் கவனம் வைத்தாலும் நயந்தினி கவனம் அவ்வப்போது ராகவியின் கழுத்தில் இருக்கும் டாலரில் பதிந்தது. ராகவி கழுத்துடன் ஒட்டிய தங்க சங்கிலியில் வேல் சின்ன டாலர் அணிந்திருந்தாள். அது தங்க சங்கிலி என்றோ, அந்த வேலில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. என்றோ நயந்தினிக்கு தெரியாது.
ராகவி அவ்வப்போது அந்த வேல் டாலர் வைத்த சங்கிலியை போடும் போதெல்லாம் நயந்தினி அதை பார்த்து ரசிப்பாள். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னதில்லை. ஆனால் இன்று அவளுக்கு என்ன தோன்றியதோ, “சரி டவுட்லாம் கிளியராச்சா?” என்று ராகவி கேட்கவும்,
“ம்ம் நல்லா புரிஞ்சுது, கண்டிப்பா மேத்ஸ்ல நல்ல மார்க் எடுப்பேன் பாருங்க,” என்று பதில் கூறிய நயந்தினி.
“அக்கா, உங்க செயின்ல போட்டிருக்க டாலர் ரொம்ப அழகா இருக்கு, எங்க வாங்கனீங்க, எனக்கும் இதுமாதிரி எனக்கும் வேணும்,” என்று நயந்தினி கேட்க,
ராகவியோ வேலில் வைரக் கற்கள் பதித்திருப்பதை கூறாமல், “இதுவா, இது கோல்ட் செயின். இது எங்க நகை கடையில் பிரத்யேகமா எங்களுக்காக செய்தது.” என்று சொல்ல,
“ஓ இது கோல்டா, சாரி இதை நான் கவரிங்னு நினைச்சுட்டேன்.” என்று நயந்தினி கூற,
“உனக்கு இது பிடிச்சிருந்தா கொஞ்சநாள் போட்டுக்கோ, அப்புறம் மாமாவிடம் சொல்லி உனக்கும் இதுமாதிரி செய்ய சொல்றேன்.” என்ற ராகவி,
“அய்யோ அதெல்லாம் வேண்டாம் க்கா, நீங்களே போட்டுக்கோங்க, நான் சும்மா நல்லா இருந்துதேன்னு தான் கேட்டேன்.” என்ற நயந்தினியின் மறுப்பை பொருட்படுத்தாமல், அவளது கழுத்தில் மாட்டிவிட்டாள்.
அப்போது அங்கு வந்த நிகர்வேலன் அதை பார்த்துவிட்டு, “ராகவி என்ன இது?” என்று கேட்க,
அவன் எதை கேட்கிறான் என்பதை கவனிக்காமல், “ஹே நிகர் வா வா, நான் அடிக்கடி சொல்லுவேனே நயந்தினி. அது இவ தான், நளினி ஆன்ட்டியோட பொண்ணு, எனக்கு தங்கை இல்லாத குறையை இவ தான் தீர்த்து வச்சா, எனக்கு ரொம்ப குளோஸ்,” என்று நயந்தினியை தன் மாமன் மகனுக்கு அவள் அறிமுகப்படுத்தி வைக்க, நயந்தினியோ அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
ஆனால் அதை கண்டுக் கொள்ளாத நிகரோ, “அதுக்காக இப்படி காஸ்ட்லி செயினை கழட்டிப் போடுவியா?” என்று கேட்டான்.
அவன் கேள்வியில் நயந்தினியின் புன்னகை முகம் மாறிவிட, “ஹே சும்மா அவ ஆசைப்பட்டாளேன்னு போட்டுவிட்டேன்.” என்று ராகவி அதற்கு பதில் கூறவும்,
“என்ன ராகவி, ஆசைப்பட்டா உடனே அதை கழட்டி கொடுக்கணுமா? இதோட முக்கியம் தெரியாம இந்த பொண்ணு இதை தொலைச்சிட்டா என்ன செய்றது? செயின் தங்கம் தான், ஆனா அது போனா கூட பரவாயில்லை. ஆனா அந்த வேல் டாலர் எவ்வளவு ஸ்பெஷல். நமக்குன்னு ஸ்பெஷலா டைமண்ட் வரவழைச்சு அதில் நமக்காக ஸ்பெஷலா டிஸைன் செய்தது இந்த டாலர்.” என்று அவன் விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்க,
அதில் கோபமான நயந்தினியோ, “போதும், இது கோல்ட் செயின் என்றோ, இதில் டைமண்ட் பதிச்சிருக்குன்னோ எனக்கு தெரியாது. சாதாரணமா அது கவரிங்னு தான் நினைச்சேன். அது கோல்ட்னு தெரிஞ்சு அக்காவிடம் வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா அக்கா தான் கேட்காம போட்டு விட்டாங்க, இதில் டைமண்ட் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வேண்டாம்னு சொல்லியிருப்பேன்.
நாங்கல்லாம் மிடில் கிளாஸ். எங்களால நினைச்ச நேரம் கோல்ட், டைமண்ட்லாம் வாங்க முடியாது தான், அதனால உங்களை விட எங்களுக்கு அதோட வேல்யூ நல்லாவே தெரியும், அதேசமயம் மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு தான் எங்கம்மா எனக்கு சொல்லி தந்திருக்காங்க, இது டைமண்ட் டாலர்னு தெரியாம தான் அக்காவிடம் கேட்டேன். அதுகூட எந்த கடையில் கிடைக்கும்னு தெரிஞ்சா வாங்கிக்கலாம்னு தான்,” என்று நிகர்வேலனிடம் அவள் கோபமாக கூறவும்,
“நயனி, உனனைப்பத்தி தெரியாதா? அவன் ஏதோ தெரியாம பேசிட்டான். அதெல்லாம் பெருசா எடுத்துக்காத,” என்று ராகவி சமாதானம் கூறினாள்.
ஆனால் நயந்தினியால் அந்த சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இல்லக்கா, எனக்கென்னமோ இதை போட்டுக்க தகுதி இல்லாத மாதிரி பேசறாங்க, நான் சும்மா கூட கேட்ருக்க கூடாது. அம்மா அப்பவே அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க, அங்க போகாதன்னு சொன்னாங்க, நான்தான் அதை கேட்காம வந்தேன். இந்தாங்க உங்க செயின்.” என்று அதை கழட்டி ராகவியிடம் கொடுத்தவள், நிகர்வேலனையும் கோபமாக முறைத்துவிட்டு, சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும், “என்ன நிகர் நீ, எதுக்கு இப்படி பேசின, நீ இப்படியெல்லாம் பேசற ஆள் கிடையாதே, அந்த பொருள் காஸ்ட்லினு எனக்கு தெரியாதா? நயனி ஆசையா கேட்டாளேன்னு சும்மா போட்டுவிட்டேன். அவளே கொஞ்ச நேரத்தில் அதை கழட்டிக் கொடுத்துடுவா, இல்லன்னாலும் நளினி ஆன்ட்டி அவளிடம் சொல்லி கொடுத்துட்டு வரச் சொல்லிடுவாங்க, அது தெரியாம ஏன் இப்படியெல்லாம் பேசின நீ.” என்று ராகவி நிகர்வேலனிடம் கோபப்பட,
“இது காஸ்ட்லி அப்படிங்கறதால நான் அப்படி பேசல, இந்த வேல் டாலர் நமக்கு ஸ்பெஷல். நம்ம குடும்பத்து ஆளுங்க தான் இதை போட்டுக்கணும், ஏதோ ராசி, தோஷமெல்லாம் பார்த்து ஸ்பெஷலா பூஜையெல்லாம் செய்து அப்பா நமக்கு இதை ரெடி செய்தாங்க, அதோட வேல்யூ அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்? அதில்லாம அதில் டைமண்ட் பதிச்சிருக்குன்னு அவளிடம் நீ சொல்லலை தானே, அது தெரியாம அவ அதை கேர்லெஸா ஹேண்டில் செய்தா என்ன செய்றது? இதுவே நார்மலா ஏதாவது ஜூவல்ஸை போட்டுக்க சொல்லி கொடுத்திருந்தா அதை நான் கவனிச்சு கூட பார்த்திருக்க மாட்டேன்.” என்று நிகர்வேலன் அதற்கு பதிலளிக்க,
“அதை நீ தனியா கூப்பிட்டு சொல்லியிருக்கலாம், அதை விட்டுட்டு நயனி முன்னாடியே அதை சொல்லணுமா? அவ ரொம்ப ஹர்ட் ஆகிட்டா பாரு, நளினி ஆன்ட்டி அம்மாக்கு ரொம்ப நல்ல ஃப்ரண்ட். இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா கஷ்டப்படடுவாங்க, நயனியுமே முன்ன மாதிரி சகஜமா இங்க வருவாளான்னு தெரியல,” என்று ராகவி வருத்தமாக பேச,
“சாரி ராகா, நான் அந்த பொண்ணிடம் அப்படி நேரடியா பேசியிருக்கக் கூடாது தான், நான் இந்த வேல் டாலர் ரொம்ப ஸ்பெஷல் என்பதால் தான் அப்படி சொன்னேன். மத்தப்படி அவங்க மிடில் கிளாஸ். அவங்களுக்கு இதை போட்டுக்க தகுதியில்லை அப்படியெல்லாம் நான் நினைக்கல, திரும்ப அந்த பொண்ணு வந்தா நான் சாரி கேட்டுட்றேன் ஓகேவா?” என்று அதை சாதாரணமாக சொல்லிவிட்டு அவன் தனதறைக்கு சென்றுவிட்டான்.
நயந்தினியை நேரில் பார்த்தால் மன்னிப்பு கேட்கலாம் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் தான் அவன் இருக்கும்வரை அங்கு வரவே இல்லையே, அதனால் அதை பெரிய விஷயமாக எடுக்காமல் அவன் இரண்டு நாளில் லண்டனுக்கும் புறப்பட்டு விட்டான்.
ஆனால் நயந்தினியால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ராகவியின் குடும்பம் வசதியானவர்கள். சொந்தமாக நகைக்கடைகளும் துணிக்கடைகளும் வைத்திருக்கிறார்கள் என்பது அவளுக்கு தெரியும் தான், ராகவியும் கழுத்தில் அவ்வப்போது விதவிதமாக நகைகள் போட்டு பார்த்திருக்கிறாள். ஆனால் அது அனைத்தும் தங்கமாக இருக்கும் என்ற புரிதல் அவளுக்கு இருந்ததில்லை. அதனால் தான் அப்படி ஒரு பைத்தியக்கார தனத்தை செய்ததாக அவள் நினைத்துக் கொண்டாள்.
இப்போது கூட நடந்த சம்பவத்தால் ராகவி மீதோ மற்றவர்கள் மீதோ அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் வசதியானவர்களாக இருந்தாலும் பழகும் விதத்தில் அவர்கள் இதுவரை ஏற்றதாழ்வு காட்டியதில்லை. ஆனால் நிகர்வேலன் அப்படியில்லை. பணக்கார திமிரில் நடந்துகொள்கிறான். ஏற்றதாழ்வு பார்க்கிறான் என்றே அவனைப்பற்றி நினைத்துக் கொண்டாள். அதனாலேயே அவன் இருக்கும்வரையில் அங்கு செல்லவில்லை. அதன்பின்பும் அங்கு போக அவள் தயக்கம் காட்ட, ராகவி வந்து அவளிடம் சமாதானம் பேசியதில் சரியாகிவிட்டாள்.
அப்போது போலவே இப்போதும் நிகர்வேலன் நடந்து கொள்ளவும், அவளுக்கு கடுப்பாகிவிட்டது. பின் காலையில் ஏன் தேவையில்லாமல் அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து குளித்து தயாராகி காலை உணவை சாப்பிட்டவள், ராகவியை காணச் சென்றாள்.
அறையை விட்டு வெளியே வந்ததும் அவள் கண்கள் தானாக பக்கத்து அறையின் கதவில் பதிந்தது. கதவில் பூட்டு இல்லாததால் நிகர்வேலன் உள்ளே இருக்கிறான் போல என்று நினைத்தவள், “அப்போ நேத்து பூட்டியிருந்துச்சே, ஒருவேளை நைட் தான் வந்திருப்பானோ, போயும் போயும் இவனுக்கு பக்கத்து ரூமா நமக்கு தரணும்,” என்று புலம்பியப்படியே சென்றாள்.
அங்கு சென்றால் ராகவியின் அறையில் அவன் நின்றிருந்தான். நேற்று அவன் வந்தது யாருக்கும் தெரியாது. காலையில் ரெசார்ட் மேனேஜர் சேகரனுக்கு சொல்லவும், அவர் மகனை பார்க்க நேராக அறைக்கு வந்தார். இரவு வெகுநேரம் விழித்துக் கொண்டிருந்ததால் அப்போது தான் கண்விழித்த நிகர்வேலன் தந்தையிடம் பேசிவிட்டு, அதன்பின் குளித்து தாயாராகி ராகவியை காண வந்தான்.
அவனை அங்கு எதிர்பார்க்காத ராகவி, உடனே அன்னை, தந்தை, தம்பி என எல்லோருக்கும் அழைத்து சொல்லவே, அவனைப் பார்க்க ராகவியின் அறைக்கு அனைவரும் வந்திருந்தனர்.
அதுவும் இவள் உள்ளே போன நேரம் தான், “என்ன நிகர் மாம்ஸ், நான் நேத்து கேட்டப்போது கூட வருவது கஷ்டம்னு சொல்லிட்டு இருந்தீங்க, இப்போ என்ன நைட்டே வந்திருக்கீங்க?” என்று ரோஹன் வியப்பாக கேட்க,
“அதானே நிகர், என்னிடமும் அதைத்தானே சொன்ன,” என்று சாகரியும் கேட்கவும்,
“அங்க வேலை இன்னும் முடியல தான், கல்யாண வரைக்குமே வேலை இருந்துட்டே தான் இருக்கும், இங்க அப்பாவும் மாமாவும் பிஸ்னஸையும் பார்த்துக்கிட்டு, இங்க கல்யாண வேலையும் பார்க்கணும்னா அவங்களுக்கும் கஷ்டம். அதான் அங்க பொறுப்பான ஒருத்தரிடம் எல்லா வேலையும் ஒப்படைச்சிட்டு வந்திருக்கேன்.” என்று நிகர் அதற்கு பதில் கூறினான்.
“நீ சொல்றதும் சரிதான், நீ இருந்தா எல்லாம் சரியா நடக்கும், எல்லாம் பொறுப்பா பார்த்துப்பேன்னு என்னொட ஃப்ரண்ட் நளினியிடம் சொல்லிட்டு இருந்தேன். அதுக்கேத்த மாதிரியே வந்துட்ட,” என்று சொன்ன சாகரி,
“நாளைக்கு திருநெல்வேலி போய் அப்பா, அம்மாவை அழைச்சிட்டு வருவதா சொன்னீயே, இப்போ யாரு போய் கூட்டிட்டு வருவா?” என்று கேட்க,
“தாத்தா பாட்டியை கூட்டிட்டு வர ஆள் அனுப்பியாச்சு அத்தை, இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டியில் அவங்க இருப்பாங்க,” என்று நிகர் அதற்கு பதில் கூறவும்,
“அப்போ சரி, நான் போய் இன்னைக்கு பார்ட்டிக்கான வேலையெல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கிறேன்.” என்று சாகரி கூற,
“அதான் நீ வந்துட்ட இல்ல, இங்க எல்லாம் நீ பார்த்துக்கோ, அண்ணா நகர் பிரான்ச் மாடிஃபை செய்றோமே, அங்க எல்லாம் சரியா நடக்குதான்னு நான் பார்த்துட்டு வந்துட்றேன். மச்சான் உன்னோட ரூம்ல தானே இருக்கார். அவரிடம் சொல்லிடு,” என்று கார்மேகனும் கிளம்பிவிட்டார்.
“நல்லவேளை நீங்க இல்லாம இன்னைக்கு பார்ட்டி போர் அடிச்சிருக்கும், சரி நான் இன்னும் பிரேக்பாஸ்ட் சாப்பிடவே இல்லை. போய் சாப்பிட்டு வந்துட்றேன்.” என்று ரோஹனும் கிளம்பிவிட்டான்.
இப்போது அறையில் ராகவி, நயந்தினி, நிகர்வேலன் மூவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் குடும்பமாக பேசவே, நயந்தினி அங்கிருந்து அப்போதே செல்ல தான் பார்த்தாள். ஆனால் ராகவி அவளை விடவில்லை. அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டது மட்டுமில்லாமல் அவளது கைகளையும் பிடித்துக் கொண்டாள். அதனால் அங்கு சங்கடத்துடன் அமர்ந்திருந்த நயந்தினி தப்பி தவறி கூட இத்தனைநேரம் நிகர்வேலனை பார்க்கவில்லை.
ஆனால் அவனோ மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டுதானிருந்தான். இதில் அனைவரும் போனதும், “என்ன ராகவி, மாதேஷ் என்ன சொல்றாரு,” என்று அத்தை மகளை அவன் கேலி செய்ய,
“எங்க நிகர், அவங்களோட எங்க தனியா பேச முடியுது. அம்மா யாராவது ஏதாச்சும் சொல்வாங்கன்னு தடை போட்றாங்க, நேத்து வந்ததும் பார்த்தது தான், இதோட இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டியில் தான் பார்க்கணும், அப்போ கூட பேச முடியுமா தெரியல, நீ வந்தீன்னா அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்வன்னு தான் உன்னை எதிர்பார்த்துட்டே இருந்தேன்.” என்று அவள் கூறவும்,
“அதான் நான் வந்துட்டேன் இல்லை. மாதேஷ் கூட நீ தனியா பேச நான் ஏற்பாடு செய்றேன்.” என்று நிகர் கூறினான்.
அதைக்கேட்டு கொண்டிருந்த நயந்தினியோ, ‘இவர்கள் குடும்பத்திற்கே இவன் முக்கியமானவனாக இருக்கிறானே?’ என்று நினைத்துக் கொண்டாள். அப்போது கூட அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
நயந்தினி தன்னை தவிர்ப்பதை உணர்ந்து, அவள் தன்னை பார்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிகர்வேலனுக்கு உண்டாக, “ஆமாம் இவங்க யாரு? உன்னோட ஃப்ரண்ட் எல்லோரையும் எனக்கு தெரியுமே, ஆனா இவங்களை நான் பார்த்ததேயில்லையே,” என்று ராகவியிடம் கேட்க,
அந்த கேள்வியில், ‘நேத்து நைட் தானே பார்த்தான்?’ என்று நயந்தினி அவனை நிமிர்ந்து பார்க்கவும், அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
அவனது அந்த செய்கையை எதிர்பார்க்காதவள், உடனே தலைகுனிந்து கொண்டாள். பின் மிண்டும் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் சாதாரணமாக நிற்கவும், ‘ஒருவேளை இது என்னோட பிரம்மையோ, ஏன் நேத்து நைட்ல இருந்து இப்படியே எனக்கு தோனுது.” என்று நினைத்து குழம்பினாள்.
அதற்குள் நிகர்வேலன் கேட்ட கேள்விக்கு ராகவியோ, “என்ன நிகர், இது யாருன்னு உனக்கு தெரியலையா? இது நயனி, முன்ன இருந்த வீட்டில் எங்க பக்கத்து வீட்டில் இருந்தாளே, உங்க ரெண்டுப்பேருக்கும் பர்ஸ்ட் மீட்டிங்கே முட்டிக்கிச்சே, அந்த இன்ஸிடன்ட்டை மறந்துட்டீயா?” என்று கேட்கவும்,
“ம்ம் என்னை ஞாபகம் வச்சிக்கிற அளவுக்கு நான் என்ன வி ஐ பியா க்கா,” என்று நயந்தினி வேண்டுமென்றே அவனைப் பார்த்தப்படி கேட்டாள்.
“ஹே இன்னும் அவன் பேசினதை நீ மறக்கலயா? நிகர் ஸ்டேடஸ் பார்த்து பழகற ஆளே கிடையாது.” என்று மாமன் மகனுக்கு ராகவி ஆதரவாக பேச, நயந்தினி அதற்கு பதில் கூறவில்லை.
“என்ன நிகர், இப்போ நயனியை ஞாபகம் வந்துடுச்சா?” என்று ராகவி அவனிடம் கேட்க,
“ம்ம் நல்லாவே ஞாபகம் வந்துடுச்சு,” என்று நிகர்வேலன் அதற்கு பதில் கூற,
‘அப்படி ஒன்னும் என்னை ஞாபகப்படுத்திக்க தேவையில்லை.’ என்று நினைத்து நயந்தினி அவனை பார்க்க, மீண்டும் அவன் கண்ணடிக்கவும்,
‘இவனுக்கு என்னை நல்லா ஞாபகம் இருக்கு, ஆனாலும் வேணும்னே வெறுப்பேத்தறான். இவனை விட்டு விலகி இருக்கணும்,’ என்று அவள் நினைக்க, அவளை எப்படி நெருங்குவது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இதில் இவர்கள் இருவருக்கிடையே விக்கியின் குறுக்கீடு ஏதாவது இருக்குமா?