“ங்கா… ங்கா….” என்று அழுது கொண்டே மண்ணுலகிற்கு வருகை தந்தது அச்சின்னக் குயில்.
அதுவரை தான் அனுபவித்த வலியின் வேதனை எல்லாம் பறந்து போனது போல் உணர்ந்த ராதா, சில நொடிகளில் மீண்டும் வலியால் துடிக்கத் துவங்கினார்.
“அண்ணன் மட்டும் வெளியே சென்று விட்டானே!? நான் மட்டும் என்னைச் சுமந்த தெய்வத்தைக் காண வேண்டாமா?!” என்று அவரின் அடுத்த வாரிசு, தாயின் வயிற்றிலிருந்து வெளிவர முயற்சி மேற்கொண்டது.
சில மணி துளிகளுக்குப் பின் அச்சின்னச் சிசுவும், தாயின் கருவறையை விட்டு வெளியேறி பூமகளின் மடியில் வந்து வீழ்ந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களை பூமிக்கு கொண்டு வந்த தாயின் உள்ளம், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனது.
மருத்துவர் இரண்டு குழந்தைகளையும் லாவகமாகக் தன் கையிலெடுத்து, தாயினருகே கொண்டு சென்றார்.
“ம்ம்!” என்று தலையசைத்தபடியே, ஆனந்தக் கண்ணீரோடு தன் மகவுகளைக் கையிலேந்திய ராதா, இரு பொக்கிஷங்களையும் தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமிட்டார்.
தனது குழந்தைகளை கண்ணாரக் கண்டு ரசித்தவர் நெஞ்சில், சற்றே துயரம் சூழ்ந்தது.
ஆனால் சில நொடிகளில் தன் மனதைத் தேற்றிக் கொண்டவர், “உங்க ரெண்டு பேருக்கும் எந்தக் குறையும் வராம அம்மாவும், அப்பாவும் வளர்ப்போம்டா!” என்று உறுதியாகச் சொல்லி மறுபடியும் அம்மலர்களை தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.
வெளியே அன்னையையும், பிள்ளைகளையும் காணத் தவித்து கொண்டிருந்தன சில அன்பு நெஞ்சங்கள்.
சிறிது நேரத்தில் தாயும், பிள்ளைகளும் வெளியே அழைத்து வரப் பட, அவர்களை நோக்கி ஓடிய கிருஷ்ணன், தன் மனைவியையும், அவர் அருகே படுத்திருந்த பிள்ளைகளையும் ஆசையோடு கண்டு ரசித்து, தன் அன்பு முத்தங்களை அள்ளி வழங்கினார்.
தங்கள் குடும்பத்திற்கு புது வாரிசுகள் கிடைத்த சந்தோஷத்தில் ராதா, கிருஷ்ணன் தம்பதியரின் பெற்றோர்களும், மகிழ்ச்சியில் திளைத்தபடி, தங்களது பேரன்களை கொஞ்சி மகிழ்ந்தனர்.
அனைவர் மனதிலுமே சந்தோஷம் தாண்டவமாடியது என்றாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில சிறு சோகம் ஒட்டிக் கொண்டிருந்தது! அதற்குக் காரணம்?!
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, “ஏய் நிலா மெவ்வாப் போடி… என்னால ஓட முட்ல!” என்று கத்திக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தாள், நிரஞ்சன், ரஞ்சனின் ஆசைத் தங்கை நிவேதா.
“சீக்கிரம் வாடி… அவங்க கண்டு பிச்சிரப் போறாங்க!” என்று அவளை இழுத்துக் கொண்டு அவர்கள் வீட்டினுள் ஓடினாள் நிலா.
அவள் வீட்டினுள் நுழைந்தவுடன், கூடத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவன், வேகமாக எழுந்து போய் தன் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்ள முயன்றான்.
எப்போதுமே அவனது முயற்சியில் ஜெயித்துவிடும் அவனை, இன்று எப்படியேனும் தோற்கடித்து விடவேண்டும் என்று, தன் விளையாட்டைக் கூட மறந்து, நிலா வேகமாகச் சென்று அவன் அறைக் கதவின் இடுக்கில் வழிமறித்து நின்றாள்.
“ஏய் போ…! இங்கர்ந்து போ…!” என்று கதவின் பின்னே ஒளிந்து கொண்டு, அவளை அங்கிருந்து விரட்ட முனைந்தான் அச்சிறுவன்.
ஆனால் அவளோ விடாப் பிடியாக கதவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அங்கேயே நின்றாள்.
“போ ன்னு சொல்றேன்ல… போ!” என்று அவன் மறுபடியும் அவளை விரட்ட அவளோ, மிக ஆச்சர்யமாய்,
“ஏன் எப்போ எப்போ என்னைப் பாத்தாலும், உள்ள உள்ள ஒளிஞ்சிக்குற?! என்னைப் பார்த்தா உக்கு பயமா இக்கா…?!” என்றாள்.
“அப்போ ஏன் என்கிட்டப் பேச மாற்ற…?! நிவிகிட்ட மட்டும் பேசுற இல்ல?!” என்று அச்சிறுமி பாவம் போல் வினவ,
“அது… அது நீ மட்டும் என்னைக் கேட்குறியே?! உனக்கு என்னைப் பிடிக்குமா?!” என்றான் பட்டென்று.
“ம் ரொம்ப பிடிக்கும்! நிவி உன்னை பத்தி நெய்ய சொல்வா!” என்றாள் நிலா தன் பால் புன்னைகையைச் சிந்தி.
அப்போது மெல்ல அவன் தலையை வெளியே நீட்டி அவள் முகத்தைப் பார்க்க, அவளின் கள்ளமில்லா புன்னகையால் ஈர்க்கப்பட்டான்.
“பிரெண்ட்ஸ்…!!” என்று நிலா தன் வலது கை சுண்டு விரலை அவனருகே நீட்ட,
அவனும், “ப்ரெண்ட்ஸ்…!” என்று தனது சுண்டு விரலை அவள் விரலுடன் கோர்த்து அவர்கள் நட்பிற்கு வித்திட்டான்.
அன்று தங்கள் கல்லூரியின் வகுப்பறைக்குள், முதல் நாள் வகுப்பின் போது, அவளுடன் சேர்ந்து நடந்து வந்தவனைப் பார்த்து, அனைவரும் தங்களுக்குள் ஏதோதோ பேசத் துவங்கினர்.
அதையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாமல், ஆண்கள் இடத்தில் அவனும், பெண்கள் இடத்தில் அவளும் சென்று அமர்ந்து கொண்டனர்.
சில நிமிடங்களுக்குள் பேராசிரியை ஒருவர் அவர்கள் வகுப்பிற்கு வருகை தர, அனைவரின் சலசலப்பும் அடங்கிப் போனது.
பாடங்கள் நடக்கத் துவங்கிய பின்னும் கூட, ஒரு சிலர், அப்பெண்ணின் மீதும், அப்பையனின் மீதும் அவ்வப்போது பார்வையைச் செலுத்தி வந்தனர்.
அன்று அனைத்து வகுப்புகளும் முடிவைடைந்த பின்னர், உணவு இடைவேளையின் போது, நிலா தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று, வகுப்பின் நடுவே போய் நின்றாள்.
“ஹாய் பிரெண்ட்ஸ்… ஐயம் நிலா. அவன் என்னோட பிரெண்ட் – – – . நானும் காலையில வந்ததுல இருந்து கவனிக்கறேன்! எல்லோரும் எங்க ரெண்டு பேரையும் பார்த்து உங்களுக்குள்ளயே ஏதோ பேசிக்கறீங்க! நாங்களும் உங்களைப் போலத்தான்! எங்களை உங்க பிரெண்ட்ஸா ஏத்துக்க மாட்டீங்களா?!” என்றாள் தன் அழகான புன்னகையுடன்.
அவளின் இயல்பான பேச்சு அனைவருக்கும் பிடித்துப் போக, அனைவரும் அவர்களிடம் இயல்பாகப் பழகத் துவங்கினர்.
“பாட்டி… என்ன பண்றீங்க? பூஜையெல்லாம் முடிஞ்சதா?!” என்று வினவியவள், ராதா அருகே சென்று,
“என்ன ஆன்ட்டி இன்னுக்கு என்ன டிஃபன்?! அட நம்ம சாருக்கு பிடிச்ச ஆப்பம் தேங்காய்ப் பாலா?! அவன் சீக்கிரம் கிளம்பின மாதிரிதான்!” என்று சலித்துக் கொண்டாள்.
“ஏய்… நீயும் உட்கர்ந்து சாப்பிடேன்டி! சுப்பரா இருக்கு!” என்று அவள் கைபிடித்து இழுத்து அமர வைத்தாள் நிவேதா.
“ம்ஹும் இல்ல வேணாம் நிவி… நான் ஏற்கனவே சாப்பிட்டேன்!” என்று எழப் போனவளை,
“அதெல்லாம் இல்ல ஆன்ட்டி!” என்று சாப்பிடத் துவங்கினாள் நிலா.
அப்போது தன் அறையிலிருந்து வெளியே வந்த கிருஷ்ணன், “என்னம்மா நிலா எப்படி இருக்க? ஆளையே பார்க்க முடியல?! ரொம்ப பிஸியாகிட்ட போல?!” என்றபடியே அவளருகே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார்.
“நான் எப்பவும் ஃப்ரீயா தான் அங்கிள் இருக்கேன். நீங்களும் தத்தாவும்தான் ரொம்ப பிஸி! சன்டேஸ்ல கூட உங்க ரெண்டு பேரையும் பார்க்கவே முடியறதில்லை! இப்பக் கூட பாருங்க! தாத்தாவைக் காணோம்!” என்றாள்.
“என்னம்மா பண்றது எங்க வேலை அதுபோல! ஒரு நாள் கூட ஓய்வில்லாத வேலை!” என்று சொல்லியபடியே தனது தட்டைக் காலி செய்தார் கிருஷ்ணன்.
“பொறுமையா சாப்பிடுங்க அங்கிள்! இப்படி சாப்பிட்டா சாப்பாடு எப்படி உடம்பில ஒட்டும்!?” என்று கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு, ராதாவிடம் திரும்பி,
“ஆன்ட்டி… நீங்க இதெல்லாம் சொல்ல மாட்டீங்கள?!” என்றாள் நிலா.
“அதெல்லாம் ஆயிரம் முறைக்கும் மேல சொல்லியிருப்பேன்! கேட்டாதானே!” என்று சலித்துக் கொண்டார் ராதா.
ஆனால் அதற்குள் தன் காலை உணவைப் பெயருக்கென்று முடித்துக் கொண்ட கிருஷ்ணன், “நான் கிளம்பறேன் ம்மா..!” என்று அனைவருக்கும் பொதுவாகச் சொல்லி விடைபெற்றார்.
என்ன செய்வது அவரது வேலை அப்படி!? சென்னையின் மிக பரபரப்பான பகுதியில், அமைந்திருக்கும் அந்த பிரமாண்டமான ஜவுளிமாளிகை, அவர்கள் குடும்பத்திற்கு உரியது.
அவரது தந்தை இராமநாதன் காலத்தில் துவங்கிய கடை, இப்போது மிகப் பெரிய அளவில் புகழடைந்து பல்வேறு கிளைகள் கொண்ட கடையாக உருமாறியிருந்தது.
அதற்கு முக்கியக் காரணம், ராமநாதனும், கிருஷ்ணனும்தான். அவர்களது ஓயாது உழைப்பும், முயற்சியுமே அவர்கள் இன்று இந்நிலைக்கு வரக் காரணம்.
இராமநாதன் சற்று கெடுபிடியானவர் என்றாலும் மிக நியாயவாதி. தங்களின் பின் நிலைமையை மறக்காமல் வாழ்ந்து வருபவர்.
அவர்கள் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். ஆனால் அவரது விருப்பம் யார் மனதையும் பாதித்ததில்லை இன்றுவரை! ஆனால் இனி வரும் நாட்களில்?!
‘கிருஷ்ணாஸ் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பிரம்மாண்டமான ஜவுளி மாளிகை, அனைவரின் பார்வையையும் எளிதாகக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
“டேய் மணி… வந்த சரக்கை எல்லாம் சரியா கவனிச்சு எடுத்து வைச்சியா? அந்த மேனேஜர் முருகனை என்னை வந்துப் பார்க்கச் சொல்லு. வேலை செய்யிறவங்களுக்கெல்லாம் நேரத்துக்கு டீ, காபி, கொடுக்கறீங்களா? வேலை செய்யிறவங்களுக்கும் சரி, வாடிக்கையாளர்களுக்கும் சரி எந்தக் குறையும் வரக் கூடாது சொல்லிட்டேன்!” என்று எழுபது வயதிலும் ஓயாது கட்டளைகளை பிறப்பித்தபடியே, கடையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் இராமநாதன்.
உடுத்தி இருந்த வெள்ளை வேட்டியும், சட்டையும், மேல் துண்டும் பளிச்சென்று இருந்தது, அவரின் கறைபடாத உள்ளத்தைப் போல்.
தலை முடி முக்கால் வாசி நரைத்துவிட்டிருந்தாலும், முகத்திலும், உடலிலும் முதுமையின் பாதிப்பு அதிகமில்லை. எழுபது வயதிலும் ஐம்பது வயது மனிதர் போலவே காட்சியளித்தார்.
அவர் அனைத்து தளங்களையும் பார்வையிட்டு விட்டு வந்து தனது இருக்கையில் அமரவும், கிருஷ்ணன் அங்கு வந்திருந்தார்.
“என்னடா சரியா சாப்ட்டியா? இல்ல அப்படியே ஓடிவந்துட்டியா?!” என்றார் மகனைப் பார்த்து.
“சாப்பிட்டேன் ப்பா…!” என்றவர், தன் கைகளில் இருந்த சிறிய ஹாட்பேக்கை அவரிடம் கொடுத்து,
“இந்தாங்க ப்பா… உங்க மருமக கொடுத்துவிட்டா…! சீக்கிரம் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் இறங்கினார்.
“நான்தான் காலையிலயே கூழ் குடிச்சிட்டு வந்துடறேனே…! அப்புறமும் தினமும் இத வேற ஏன்பா கொண்டார்ற?!” என்று இராமநாதன் அலுத்துக் கொள்ள,
“எனக்கு அதெல்லாம் தெரியாது! நீங்களாச்சு! உங்க மருமகளாச்சு!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் கிருஷ்ணன்.
அங்கு, அரைமணி நேரமாக அவனது தோழனுக்காகக் காத்திருந்து, காத்திருந்து பொறுமையை இழந்த நிலா, அவன் வெளியே வராது போகவே,
“இன்னும் என்ன பண்றாண்டி அவன்?! காலங்கார்த்தாலயே என்னைய போன் போட்டு எழுப்பிட்டு, அவன் இன்னும் கிளம்பறானா?!” என்று நிவியிடம் சொல்லிக் கொண்டே, அவன் அறைக் கதவைப் படாரெனத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அங்கு எ.ஸி ஃபுல் கூலிங்கில் ஓடி கொண்டிருக்க, அவளின் உற்ற தோழன் போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான்.
“எருமை எருமை! காலங்கார்த்தாலயே என்னைய எழுப்பி விட்டுட்டு, இது மட்டும் நல்லா தூங்குது பாரு?!” என்று கோபத்துடன் சென்றவள் கண்களில், அருகே டேபிளில் இருந்த தண்ணீர் ஜாடி பதிய, அதனை எடுத்து மூடியைத் திறந்து அவன் மேல் ஊற்றி அவனுக்கு நீராபிஷேகம் செய்தாள்.
படுத்திருந்தவன் மூச்சுத் திணற, போர்வையை விலக்கி எழ முற்பட, அதற்குள் அருகிலிருந்த தலையணையை எடுத்து, படார் படாரேன அவன் மேல் நான்கு மொத்து மொத்திவிட்டு,
“எருமை எருமை! காலங்கார்த்தால என்னை எழுப்பிவிட்டுட்டு, நீ மட்டும் நல்லா இழுத்துப் போர்த்திட்டு தூங்கறியா?!” என்றவள், போர்வை விலக்கிக் கொண்டு முகத்தை வெளியே காட்டியவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“நீ நீயா??!!” என்று அவள் வெறுப்புடன் கேட்க, அவன் சரமாரியாய் அவள் மேல் வார்த்தைகளை வீசத் துவங்கினான்.
“சனியனே… சனியனே… அறிவில்லை உனக்கு?! தூங்கிட்டு இருக்கவன் மேல இப்படி தண்ணியைக் கொட்டுறியே! கதவு திறந்திருந்தா?! அப்படியே உள்ள நுழைஞ்சிடுவியா?! நாய் நுழையற மாதிரி! கொரங்கு! எல்லாம் இந்த வீட்ல இருக்கவங்க கொடுக்கற இடம்! முக்கியமா அவனைச் சொல்லணும்!” என்று அவன் கடும் கோபத்தில் திட்டிக் கொண்டிருக்க,
அவளோ, தன் தலையில் கைவைத்துக் கொண்டு, “போச்சு போச்சு! எல்லாம் போச்சு! உன் முஞ்சியில முழிச்சிட்டேனா!? உருப்பட்ட மாதிரிதான்! இன்னிக்கு என் வேலை முடிஞ்ச மாதிரிதான்!” என்று சிறிது கூட குற்ற உணர்வே இல்லாமல் அவள் பாட்டிற்கு தன் கவலையில் ஆழ்ந்தாள்.
“டேய் எருமை… இது ஊரிலிருந்து வந்திருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாது?! இன்னிக்கு இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேன்ல?!” என்று தன் நண்பனை வருத்தெடுக்கத் துவங்கினாள் அன்புத் தோழி.
“ஏய் என்னடி ஓவரா பேசற?! வாயை ஒடச்சிடுவேன்!?” என்று போர்வையை உதறிக் கொண்டு எழுந்து வந்தான் அவன்.
“எங்க எங்க தைரியமிருந்தா கைய வைச்சி பாரேன்! பல்லு ஏகிறிடும்!” என்று அவளும் கைகளை ஓங்கிக் கொண்டு வந்தாள்.
“சீ பொண்ணா இது! சரியான இரத்தக் காட்டேரி! இது கூட எல்லாம் பிரெண்ட்ஷிப் வைச்சிருக்கான் பாரு.. இவனைச் சொல்லணும்!” என்று அவன் தலையிலடித்துக் கொள்ள,
“யாரு நான் இரத்தக் காட்டேரியா???!!! நீதான்டா கொடூர ராட்சஷன்!” என்று அவள் திட்ட,
“நீதான்டி மம்மி…!” என்று அவன் திட்ட,
“என்னையா மம்மின்னு சொன்ன??!! இதோ வரேன் இருடா டம்மி…!” என்று சொல்லி, அவள் அருகே இருந்த பூச்சாடியைத் தூக்கி கொண்டு அவனை அடிக்க நெருங்க,
“அய்யோ இது பொண்ணே இல்லடா… பேய்… பேய்… முதல்ல இது பிரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணுடா!!” என்று அவன் அங்கிருந்து வெளியே ஓடினான்.