நிலா அவர்களுடன் வருவதால் ரஞ்சன் கோவிலுக்கு வர மறுக்க, நிவியும், நிரஞ்சனும் பிடிவாதமாய் அவனைச் சம்மதிக்க வைத்து கோவிலுக்கு தங்களுடன் கிளம்ப வைத்தனர்.
அவர்கள் பயணம் செய்து வந்த டவேரா, வாழைப்பந்தல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கும் அவர்களின் குலதெய்வமான பச்சையம்மன் கோவில் வாயிலின் அருகே வந்து நின்றது.
வாயில் எதிரிலேயே காவல் தெய்வமான முனீஸ்வரனின் சிலை, பதினைந்து அடி உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்தது.
அனைவரும் வண்டியிலிருந்து இறங்கி, முதலில் காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு, பின் கோவிலுக்குள் சென்றனர்.
பின் அம்மனை தரிசித்துவிட்டு, பொங்கல் வைக்கத் துவங்கினர்.
ஏற்கனவே கிருஷ்ணன், போன் மூலம் கோவில் பூசாரிக்கு விவரம் தெரிவித்திருந்ததால், அம்மனுக்கான அபிஷேக ஏற்பாடுகளும் ஒரு புறம் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.
பெண்கள் அனைவரும் கூடி பொங்கல் வைத்து எடுத்துவர, அம்மனுக்கு அபிஷேகம் ஆரம்பித்தனர்.
ஒன்பது வகை அபிஷேகங்கள் முடிவடைந்து, அம்மனுக்கு அலங்காரம் முடிவடைய, பொங்கலைப் படையலிட்டு அர்ச்சனை செய்து, தீப ஆராதனை நிகழ்த்தப் பட்டது.
குடும்பத்தினர் அனைவரும் மனமுருக அம்மனை வேண்டி நின்றனர்.
ஒருபுறம் பெரியவர்கள் அனைவரும், கண்மூடி அம்மனை வணங்கி நிற்க, மறுபுறம் நிவி, ரஞ்சன், நிரஞ்சன், நிலா நால்வரும் அம்மனை கைகூப்பி வணங்கி நின்றனர்.
எதிரே அம்மனை வணங்கி கண்திறந்த காமாட்சி பாட்டியின் கண்களில் பட்ட காட்சி, அவர் மனதில் ஓர் புதிய எண்ணத்தைத் தோற்றுவித்தது.
அங்கே நிலா பூசாரியிடமிருந்து பெற்ற குங்குமத்தை, தாழ்ந்தமர்ந்து நிரஞ்சன் நெற்றியில் இட்டு,
“நிரு கூடிய சீக்கிரமே உன் கல்யாணப் பொங்கல் வைக்க நாம இங்க வருவோம் பாரு…!” என்றாள்.
“நீயுமா நிலா…” என்று அவன் வேதனையோடு புன்னகைக்க,
“நீ வேணாப் பாரு! நான் சொன்னது நடக்குதா இல்லையான்னு!” என்றாள் உறுதியாக.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. நிவியின் திருமண நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.
நிரஞ்சன், ரஞ்சனிடம் பேசி அவன் மனதை மாற்ற பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனாலும் ரஞ்சனிடம் மாற்றம் எதுவும் தென்படவில்லை.
‘இவனை இப்படியே விட்டா சரிவராது! என்ன செய்யிறது?!’ என்று யோசித்த நிரஞ்சனுக்கு அந்த எண்ணம் தோன்ற, ரஞ்சனிடம் சென்று,
“ரஞ்சு நீ இப்படி வீட்லயே அடைஞ்சி இருக்கறதுனால எல்லோரும் என்னவோ ஏதோன்னு ரொம்ப கவலைப் படறாங்க…!” என்றான்.
“என்னை என்ன பண்ண சொல்ற நிரு, என்னால எந்த வேலையிலயும் முழுசா ஈடுபடமுடியும்னு தோணல…! அப்புறம் வேலையில ஏதவாது சோதப்பிட்டேன்னா?! அது வேற பிரச்சனையாகிடும்!” என்றான் ரஞ்சன்.
“வெளியில வேலைக்குப் போனா தான பிரச்சனை..! நீ ஏன் நம்ம கடைக்குப் போகக் கூடாது?” என்றான் நிரு.
“என்ன சொல்ற நிரு…! துணிக் கடையில எனக்கென்ன வேலை தெரியும்?!” என்றான் ரஞ்சன்.
“துணிகளைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாதுதான். ஆனா மேனேஜ்மண்ட் சைடை நீ கவனிச்சிக்கலாம் இல்ல…?! தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப உதவியா இருக்கும்” என்றான் நிரஞ்சன்.
“……” ரஞ்சன் அமைதியாக இருக்க,
“என்ன ரஞ்சு… சும்மா கொஞ்ச நாள் போய்தான் பாரேன். உன் மனசுக்கும் ஒரு மாற்றம் கிடைக்கும்!” என்றான் நிரஞ்சன்.
“நான் எப்படி நிரு…!? அன்னிக்கு அப்பா சொல்லச் சொல்ல மதிக்காம மும்பைலயே வேலை தேடிக்கிட்டு போனேன். இப்போ….!” என்று அவன் தயக்கம் காட்ட,
“அட நீ வேற ரஞ்சு… நீ மட்டும் வரேன்னு ஒரு வார்த்தை சொல்லு! அப்பாவும், தாத்தாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவாங்க!” என்றான் நிரஞ்சன்.
“எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் கூட இன்டிரஸ்ட் இல்ல நிரு…!” என்று ரஞ்சன் சலித்துக் கொள்ள,
“கொஞ்ச நாள் நீ கடைக்கு போய் பாரு… அப்பவும் உனக்குப் பிடிக்கலைன்னா… வேண்டாம்!” என்றான் நிரஞ்சன் அவனை எப்படியாவது சம்மதித்து விட வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்.
“ம்ம்!” என்று ஒரு பிடிப்பே இல்லாமல் சம்மதித்தான் ரஞ்சன்.
ஒரு நாள் மாலை நேரம், அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில், விதவிதமான கண்ணைப் பறிக்கும் பொம்மைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அந்தப் பகுதியில், அவன் மும்முரமாக பொம்மையைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்தைச் செலுத்தியிருக்க,
“ஏய்… தர்பூசணி…. நில்லுடி… கையில மாட்டின… நீ ஜீஸ்தான்!” என்று தன் அண்ணன் மகள் தர்ஷினியைப் பார்த்துக் கத்திய படியே தூரத்திக் கொண்டு வந்தாள் யாஷினி.
உடலோடு ஒட்டியிருந்த வெண் நிற ஜீன்சும், சிகப்பு நிற டாப்சும், அவள் மேனியின் அழகை மிகைப் படுத்திக் காட்டியது. காதில் சிகப்பு நிற பிளாஸ்டிக் வளையம் அணிந்திருந்தாள். அவள் ஓடி வந்து கொண்டிருந்த வேகத்தில், விரிந்திருந்த அவளின் கார்குழல் காற்றோடு கதை பேசியது.
அவள் துரத்திக் கொண்டு வந்த சிறுமி வேகமாக முன்னேறிவிட, அவளும் வேகமாக அவளைப் பிடிக்க ஓடினாள்.
ஓடி வந்த வேகத்தில் வழியில் நின்றிருந்தவனைக் கவனிக்காமல், வேகமாக அவன் மீது மோதினாள்.
அவள் மோதிய வேகத்தில் தடுமாறி அவன் முகம் குப்புற கீழே விழ, அவள் பதறிப் போய்,
“ஏய் எடு… எடு கையை…?! யாரு யாரு பாப்பா…?!” என்று தன்னைச் சமாளித்துக் கொண்டு, கோபமாக எழுந்து திரும்பி நின்றான் அவன்.
ஒரு சிறுவனிடமிருந்து பெரியவரின் குரல் வருவதைக் கண்டு, அவள் குழப்பமாக அவன் முகத்தை நோக்க,
கோபத்தில் கண்கள் சிவக்க அவன், அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.
அவன் முகத்தைப் பார்த்ததும் அவள், அவனின் வயதை ஓரளவு கணித்துவிட்டாள்.
ஆனாலும் அவன் நின்றிருந்த விதம் அவளுக்கு சிரிப்பைத் தோற்றுவிக்க, “ஸாரி பாப்பா.. ம்ம்… இல்ல ஸாரி… சார் ம்ம்!” என்று சிரிப்பும் வருத்தமும் கலந்து அவள் மன்னிப்புக் கோரினாள்.
அவள் மறுபடியும் பாப்பா என்று அழைத்ததோடு அல்லாமல், சிரித்தவாரே மன்னிப்புக் கோரியது மேலும் அவன் கோபத்தை அதிகரிக்கச் செய்ய,
“ஏய் யாரு யாரு பாப்பா…! என்னைப் பார்த்தா பாப்பா மாதிரி தெரியுதா உனக்கு?!” என்று அவன் எகிறினான்.
அவள் பேந்தப் பேந்த விழித்தபடி, “ஸாரி தெரியாம சிரிச்சிட்டேன் பாப்… இல்ல… இல்ல…! சார்…! இனி சிரிக்க மாட்டேன்…” என்றாள் பரிதாபமாக.
“நிரு என்னடா… பிரச்சனை…!?” என்று அங்கு வந்து சேர்ந்தாள் நிலா.
“எல்லாம் உன்னால்தான்டி…! நான் ஒழுங்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வந்திருப்பேன், இவ்ளோ குள்ளமா இருந்துகிட்டு… இந்த சின்னப் பசங்க போடுற ஜீன்ஸ், டீ ஷர்ட் எல்லாம் போடச் சொல்லி…! இப்ப பாரு… இந்தப் பொண்ணு பாப்பான்னு சொல்லி என்னைக் கேலி பண்ணுது!” என்றான் கோபமாக.
நிலா அப்பெண்ணை முறைக்க, “அய்யோ சத்தியமா எனக்குத் தெரியாதுங்க! நான் நிஜமாகவே சின்னப் பையன்னு நினைச்சுதான் அப்படிக் கூப்பிட்டேன்.!” என்று அவள் மனதார மன்னிப்புக் கேட்டாள்.
அவள் சொல்வதில் பொய்யில்லை என்று நிலாவுக்குத் தோன்ற,
“தெரியாம சொல்லியிருப்பாங்க நிரு… விடு…!” என்று அவனைச் சமாதானப் படுத்திவிட்டு,
“நீங்க போங்க…!” என்றாள் யாஷினியைப் பார்த்து.
“ஸாரிங்க… நான் தெரியாமதான் அப்படிச் சொன்னேன்!” என்று நிலாவை நோக்கிச் சொன்னவள், பாவமாக போல் அங்கிருந்து நகர்ந்தாள்.
சிறிது தூரம் சென்றதும், மறுபடியும் நின்று அவன் புறம் திரும்பி,
“ஹலோ…. பாப்பா….!?” என்று யாஷினி உரக்கக் குரல் கொடுக்க, அங்கிருந்த பலர் அவள் புறம் பார்வையை செலுத்தினர், நிலா, நிரஞ்சன் உட்பட.
“நீங்க நிஜமாகவே பாப்பா மாதிரி குட்டியா, பப்ளியா அழகாயிருக்கீங்க…!!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்தே போனாள்.
முதன் முறையாக தனது குறையை, ஒருத்தி அழகென்று சொல்லிவிட்டுச் செல்வதைக் கேட்க, அவன் மனதோரம் ஓர் இதம் பரவி, இதழ்களில் மென்முறுவல் பூக்கச் செய்தது.
அவன் புன்னகையைக் கண்ட நிலாவும், “சரியான அறுந்த வாலு போலடா…!” என்றாள் சிரித்தபடி.
பின் இருவரும், தங்கள் தோழியின் குழந்தைக்கு ஓர் அழகான பொம்மையைத் தேர்ந்தெடுத்து வாங்கிச் சென்றனர்.
நிலா, நிரஞ்சன் இருவரும் தங்கள் கல்லூரித் தோழி மஞ்சுவின் மகளின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, ரஞ்சன் சோகமே வடிவாய் பால்கனியில் அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டிருக்க,
“என்னடா… ஆச்சு உன் அருமை அண்ணனுக்கு?! எப்பவும் ரோட் ரோமியோ மாதிரி ஊரைச் சுத்திக்கிட்டே இருப்பான். இப்ப என்னவோ ஒரே சோகப் படம் காட்றான்?!” என்றாள் நிலா, நிரஞ்சனிடம்.
“பிளீஸ் நிலா… உன்கிட்ட என்னால உண்மையை மறைச்சு பொய் சொல்ல முடியாது… ஆனா அதைச் சொன்னா அவன் என் மேல வைச்ச நம்பிக்கையை நான் அழிச்சதாகிடும். ஸோ என்னை எதுவம் கேட்காத!” என்றான் நிரஞ்சன் வருத்ததுடன்.
“ஏய் நிரு… ஏன்டா இவ்ளோ பீல் பண்ற?! எனக்கு நீ எதுவும் சொல்ல வேணாம்! ஆனா எதுவா இருந்தாலும் அவனை இப்படிப் பார்க்கறதுக்கு வேதனையா இருக்குடா….!” என்றாள் நிலாவும் வருத்தம் நிறைந்த குரலில்.
“ஏய் என்னடி அதிசயமாயிருக்கு…?! அவனுக்காக நீ பீல் பண்ற?!” என்றான் நிரஞ்சன் ஆச்சர்யத்துடன்.
“அவனை எனக்குப் பிடிக்காதுதான்! அதுக்காக அவன் கஷ்டப் படுறதைப் பார்த்து நான் சந்தோஷப் படணுமா என்ன?!” என்று நிலா எதிர் கேள்வி கேட்க,
அவள் குணம் அறிந்தவன், “கொஞ்ச நாள்ல சரியாகிடுவான் நிலா… கவலைப் படாத!” என்றான்.
“ம் இன்னும் நிறைய ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கு நிலா…!” என்றான்.
“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுடா… நானும் என்னால முடிந்ததை செய்யிறேன். பை குட் நைட்!” என்று சொல்லி அவன் காரிலிருந்து இறங்கி தன் வீட்டிற்குச் சென்றாள்.
அன்று இரவு தங்கள் வீட்டு தோட்டத்தில் நடைபோட்டுக் கொண்டிருந்த யாஷினிக்கு, ஏனோ காலையில் பார்த்த அவன் முகம் மறுபடியும் அவள் மனக் கண்ணில் தோன்றி அவளுள் ஓர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
“சீ பாவம்…!” என்றாள்.
‘லூசு லூசு… ஒருத்தவங்களோட குறையை வைச்சி இப்படியா கேலி செய்யிறது?!’ என்று அவளைச் சாடியது அவள் மனம்.
“நான் என்ன தெரிஞ்சேவா அப்படிக் கூப்பிட்டேன்?!” என்றாள் அவள் வாய்விட்டு.
“முதல்ல தெரியாமதான் கூப்பிட்ட… ஆனா மறுபடியும் மறுபடியும் ஏன் அப்படிக் கூப்பிட்ட..?!” என்று அவள் மனம் கேள்வி கேட்க,
“அதுவா…?! அவரு க்யூட்டா, குட்டியா பாப்பாங்க மாதிரியே அழகாயிருந்தாரா?! அதான் அப்படிக் கூப்பிட்டேன்…!” என்று அவள் விளக்கம் கொடுக்க,
“ஏய் யாஷு… என்னடி…?! தனியா பேசிக்கிட்டு இருக்க?!” என்று அவள் முதுகில் ஒன்று வைத்தாள் அவளின் அண்ணி காவ்யா.
“இன்னிக்கு காலையில ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு காவி! அதை நினைச்சிட்டு இருந்தேன்” என்று நடந்ததை ஒப்பித்தாள் யாஷினி.
“என்ன இருந்தாலும் நீ அப்பிடிக் கூப்பிட்டிருக்கக் கூடாது..!” என்று காவ்யா சொல்ல,
“ஹேய் நான் ஒண்ணும் கேலி செய்யனும்னு நினைச்சி அப்படிக் கூப்பிடலை…! ட்ருலி.. ஹீ லூக்ஸ் ஸோ க்யூட் அஸ் எ சைல்ட்! அதான் அப்படிக் கூப்பிட்டேன்…!” என்றாள் அவன் முகத்தை தன் நெஞ்சில் நிறுத்தி.
“சரி சரி டைம் ஆகுது. இன்னும் தூங்காம தோட்டத்தில நடந்துகிட்டு இருக்கறதைப் பார்த்தா அப்பா திட்டுவாரு! வா போய் படுக்கலாம்!” என்று காவ்யா அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.
“எங்க… உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வரலையா?!” என்று தன் அண்ணனை மிக மரியாதையாய் யாஷினி விசாரிக்க,
“ஹா ஹா இவ்ளோ சீக்கிரம் அவன் வீட்டுக்கு வந்துட்டாலும்! எந்த தியேட்டர்ல உட்கார்ந்து என்ன படம் பார்த்துக்கிட்டு இருக்கோ…! அதுக்காக நான் முழிக்சிக்கிட்டு இருந்தேன்னா என் தூக்கம்தான் கெட்டுப்போகும்” என்று அருமை மனைவியாய் காவ்யா தன் கணவனின் புகழ் பாடினாள்.
“குட் பொண்டாட்டி…!” என்று அவளைத் தட்டிக் கொடுத்த யாஷினி,
“தர்ஷினி தூங்கிட்டாளா?” என்றாள்.
“ம்.. அவளைத் தூங்க வைச்சிட்டு தான் வந்தேன்’ என்று காவ்யா பதில் கொடுத்தபடியே படியேற,
“இவ்ளோ நேரம் தூங்காம என்ன அரட்டி அடிச்சிக்கிட்டு இருக்கீங்க..!?” என்றபடி தன் அறையிலிருந்து வெளிவந்தார் பஞ்சாட்சரம்.
“அய்யய்யோ மாமா பார்த்துட்டாரு!” என்று காவ்யா நடுங்க,
“ஏய்… அவர் என்ன புலியா? சிங்கமா? இப்படி பயப்படற..!” என்றவள், தன் தந்தையை நோக்கி,
“எங்களை மட்டும் கேள்வி கேட்கறீங்களே… நீங்க மட்டும் இன்னும் தூங்காம என்ன பண்றீங்களாம்?!” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டு…! வாயை மூடிக்கிட்டு பேசாம போய் படுத்து தூங்கு!” என்று மிரட்டிவிட்டு, அவர் தன் அறைக்குள் சென்றுவிட,
“ம்ம்! இந்த பஞ்சுக்கு எப்பப் பாரு எல்லோரையும் விரட்டறதே வேலையாப் போச்சு…!” என்று முனகினாள் யாஷினி.
“உங்க ரெண்டு பேர் பிரச்சனைக்கும் நடுவுல நான் வரலைமா… பை…. குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்…!” என்று சொல்லி தன் அறைக்கு விரைந்தாள் காவ்யா.
“போடி பயந்தாங்கோலி…!” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தாள் யாஷினி.
அங்கு காமாட்சி பாட்டி தன் மனதில் உள்ளதை தெரிவிப்பதற்காகத் தக்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.