ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமார்
என்னவோ மாற்றம் எனக்குள்
1
“ஓய்! பூவு! நீ வயசுக்கு வந்துட்டியாம்ல? எங்கம்மா இப்பதான் சொன்னாங்க. நல்லவேளை நீ பெரிய பொண்ணாகிட்ட. இல்லன்னா எங்கம்மாவே உன்னைக் கோடாங்கிகிட்டக் கூட்டிட்டுப் போயி பேயோட்டியிருப்பாங்க.”
“ஏய் இசக்கி! என்ன சொல்ற நீ? நான் நல்லாத்தான இருக்கேன். என்னை எதுக்குக் கோடாங்கிகிட்டக் கூட்டிட்டுப் போகணும்?”
“நீ நல்லாத்தான் இருக்க. ஆனா வயசுக்கு வரதுக்கு லேட்டானதும், பதினேழு வயசு முடியப்போகுது இன்னும் புள்ள பெரிய பொண்ணாகல. எதாவது பேய்க்கோளாறு இருக்குதான்னு பார்க்கலாம் வாங்கன்னு இன்னைக்கு சாயங்காலமா போகுறதுக்கு நேரமும் பார்த்தாச்சி. உன்கிட்ட சொல்லி உஷாராயிருக்கச் சொல்லலாம்னு வந்தா, நீ இப்படி…” என வாயைப் பொத்திச் சிரிக்க…
“ஐயோ!” என பயப்பார்வை பார்த்து, “ஏன்டி சித்திக்கு இந்த வேலை?” என்றாள் பூவரசி.
“அட போ பூவு! எங்கம்மா உனக்கு நல்லதுக்குச் சொன்னாங்க. அதிலென்ன தப்பு?”
“நீ பரமக்குடி போறதா சித்தி சொன்னாங்க? மச்சான் உன்னைப் பார்க்க வந்துட்டாங்களா?”
“அவங்க வரல பூவு. வளைகாப்பு போட்ட பிறகு அங்க போகக்கூடாதாம். பிள்ளை பிறந்து மூணு மாசம் வரை இராமேஸ்வரம்தான் இருப்பிடம்.”
“நிஜமாவா இசக்கி? அப்ப ஜாலி. என்னோடவே இருப்பல்ல.”
“கண்டிப்பா பூவு.”
“ஹப்பா! நல்லவேளை கோடங்கிகிட்ட சவுக்கடி வாங்காமல் தப்பிச்சிட்டேன்.”
“இப்பத் தப்பிச்சிட்ட. அடுத்து உனக்குக் கல்யாணம் முடிக்கும் போது தப்பிக்கவே முடியாது.”
“கல்யாணமா? அதுக்குள்ளயா? நான் இப்பதான பெரிய பொண்ணாயிருக்கேன். இன்னும் சடங்கு வைக்கணும். அதுக்கப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சிதான கல்யாணம் வைப்பாங்க?”
“அடக் கூறுகெட்டவளே! நீயென்னவோ பதிமூணு வயசுல வயசுக்கு வந்த மாதிரிப் பேசுற? அதைக்கூட விடு… நீ ரெண்டாவது பொண்ணு ஞாபகமிருக்கா?”
“நானொண்ணும் ரெண்டாவது இல்ல. நாலாவது” என்றாள் வேகமாக.
“அறிவுதான்டி நீ. பொண்ணுல நீ ரெண்டாவதுதான? அதைத்தான் சொன்னேன். ரெண்டாவது பொண்ணுக்கு நம்ம சைடு யாரு சடங்கு வச்சிருக்காங்க. சும்மா தலைக்குத் தண்ணியை ஊத்தி, தாய்மாமன் சேலையைக் கட்டி, மாலைபோட்டு உட்கார வச்சி, திருநீறு பூசி, சாப்பாட்டைப் போட்டு முடிச்சிருவாங்க. அப்புறம் ஏப்ப சாப்பையா ஒரு பையன் கிடைச்சா என்னை மாதிரி தள்ளி விட்டுருவாங்க.”
“உனக்கும் அப்படிதான் செய்தாங்களா இசக்கி?” என்றாள் அப்பாவியாய்.
“வேற! எனக்குத் தெரியாததையா சொல்லிட்டிருக்கேன். உனக்காவது பதினேழு. நான் பதினஞ்சில வந்து, பதினாறுல கல்யாணத்தை முடிச்சி, இப்பப்பாரு வயித்துல குழந்தை இருக்கு.”
“ஓ… கல்யாணமானா குழந்தை வந்திரும்ல?”
[the_ad id=”6605″]
“கல்யாணம் ஆகாமலும் குழந்தை வரும் பூவு. ஆனா, அது தப்பான காரியம். அப்படி நடந்தா நம்மளைக் கெட்ட பொண்ணுன்னு விரட்டியடிச்சிருவாங்க. அதனாலதான் கல்யாணத்துக்குப் பிறகு பெத்துக்குறாங்க.”
இசக்கியின் வயிற்றைத் தொட்டுப்பார்த்து, “குழந்தைக்கு எப்படி இசக்கி காத்து போகும்? குழந்தைக்குப் பயமாயிருக்காதா?”
“ம்கூம் இருக்காதாம். நம்ம வயித்துக்குள்ளதான் பாதுகாப்பா இருக்குமாம். வீட்ல அம்மா ஆரம்பிச்சி, எங்க அத்தை கூட உங்க மச்சானும் சேர்ந்து, அதைச் செய்யாத இதைத் தூக்காதன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடு. கேட்டா குழந்தை நல்லபடியா பிறக்கணுமாம்.”
“அதையெல்லாம் விடு இசக்கி. இந்தக் குழந்தை எப்படி உன் வயித்துக்குள்ள வந்திச்சி? சாமி வந்து வச்சிட்டுப் போச்சிதா?”
“அ..அது…” எப்படிச் சொல்வதென்று இசக்கி புரியாமல் முழிக்க…
“என்ன இசக்கி. எது கேட்டாலும் ஒழுங்கான பதில் சொல்லமாட்டேன்ற?”
“ஆங்! இதையெல்லாம் உன் அக்காக்காரிகிட்டக் கேட்டிருக்க வேண்டியதுதான? எனக்கெல்லாம் எதுவும் தெரியாது” என்றாள்.
இசக்கியுமே குழந்தையைப் போன்றவள். திருமண வாழ்வைப்பற்றிப் பக்குவமாக எடுத்துரைக்கும் அனுபவமும் கிடையாது. அதைப்பற்றி கேட்டால் என்னவென்று சொல்வாள். தோழியின் கேள்வியில் விழி பிதுங்கி நின்றாள்.
பூவரசிக்கும் அவளின் பெண்ணிற்கும், பொறுப்பான சகோதரியாக, தாயாக கடைசிவரை இருக்கப் போகிறவளும் இசக்கியே!
“என் அக்கா சொல்லியிருந்தா உன்கிட்ட ஏன் கேட்கிறேன். அத்தான் இருந்தா அந்த அறையை விட்டு வெளியவே வரமாட்டா. என்னோட விளையாடக் கூப்பிட்டா அத்தான் தனியா இருப்பாங்க சொல்வா. நானும் தனியாத்தான் இருக்கேன் வாக்கான்னு கூப்பிட்டா, என்னை லூசுன்னு சொல்றா. அவள் வேண்டாம். நீயே எனக்குச் சொல்லிரு.”
[the_ad id=”6605″]
“இதை உன் புருஷனா வரப்போறவன்கிட்டக் கேட்டுக்கோ. எனக்கு வேலையிருக்கு தாயே. நான் கிளம்புறேன்” என்று விட்டால் போதுமென ஓடிவிட்டாள்.
இசக்கியின் வாய்முகூர்த்தமோ என்னவோ, அடுத்த ஆறு மாதத்திற்குள் கையில் வெற்றிலை பாக்கை ஏந்தியபடி புன்னகையுடன் வந்த தன் தந்தையின் முகம் பார்த்துப் பூவரசி புன்னகைக்க… மகளின் தலைவருடி, “ஏய் கோசலை. என் பொண்ணுக்கு நல்லா படிச்ச மாப்பிள்ளையாப் பார்த்துட்டு வந்திருக்கேன்” என்று தன் சந்தோஷத்தை மனைவியிடம் பகிர்ந்தார் பலராமன்.
“அதுக்குள்ளயா? நம்ம பொண்ணுக்கு எதுவும் தெரியாதுங்க. அதுவுமில்லாம இவள் ஐந்தாவதுதான் படிச்சிருக்கா. பையன் நிறைய படிச்சிருக்கான்னா, எப்படி நம்ம புள்ளையைக் கட்ட சம்மதிச்சாங்க?”
“அது ஒரு பெரிய கதை. உன் மாமா பேரனுக்கு நேர்த்திக்கடன் செய்யப்போன இடத்துலதான் இந்தச் சம்பந்தம் வந்தது. அவர் நண்பன்தான் இவரைப் பாருங்கன்னு சொன்னது.”
“பையன் எப்படி என்னன்னு விசாரிச்சீங்களா? நீங்க பாட்டுக்கு வாக்குக் கொடுத்து வெத்தலை பாக்கு மாத்திட்டு வந்துட்டீங்க? நம்ம புள்ளையைப் பொத்திப் பொத்தி வளர்க்குறோம். எதுவும் தப்பா நடந்திரக்கூடாது” என்றார் அழுத்தமாகவே.
“அ..அது அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு ஓடிருச்சாம். நல்லா படிச்ச பையன்! ஜமீன் வம்சம்! ஊருல பாதி இடம் அவங்களோடதுதானாம். மூணு பையன் ஒரு பொண்ணுன்னு சொன்னார்.”
“கல்யாணத்தன்னைக்கு பொண்ணு ஓடிப்போகுதுன்னா, அதுக்குக் காரணம் அவளுக்கு வேற யாரையோ பிடிச்சிருக்கு சொன்னாலும், இவர் குணம் சரியில்லன்னு தெரிஞ்சி கூட போயிருக்கலாம்ல? ஏன் பொண்ணு ஓடிட்டாள்னு சொல்லணும்?” என்று வேறொரு கோணத்தைக் கோசலை பிடிக்க…
பலராமன் சற்று ஆடித்தான் போனார். பெரிய பெண்ணின் கணவன் சற்று தண்ணியடிப்பான்தான், இருந்தாலும் மகளைத் தாங்குபவன். பையன்கள் இருவருக்கும் ஓரளவு வீடு வாசல் என்று ரெடி செய்துவிட்டார். பூவரசி சின்னவளாதலால் ரொம்பச் செல்லமாக வளர்த்துவிட்டார்கள்.
இப்ப என்ன செய்வதென்று விழித்தவர், “வாக்கு கொடுத்துட்டேன் கோசலை. மாத்த முடியாது. கடவுள் மேல பாரத்தைப் போட்டு கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்” என்று எழுந்து சென்றுவிட… கோசலைக்கு மனதிற்குள் இனம்புரியாத கவலை தொற்றிக் கொண்டது. புகுந்த வீட்டிற்குச் செல்லப்போகும் பெண்ணிற்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாததை எண்ணி வருத்தமிருந்தது.
அடுத்த முகூர்த்தத்திலேயே தர்மராஜன்-பூவரசி திருமணம் நல்லபடியாக நடந்தேறியது.
முதல் நாள் இரவிலேயே தன் நீண்டநாள் சந்தேகமான, “எனக்குக் குழந்தை எப்ப வயித்துல வரும்?” என்பதை இடம் பொருள் ஏவல் அறியாமல் கேட்டுவிட்டாள்.
அதைக் கேட்டவனோ, ‘இவள் ஜகஜாலக் கில்லாடியா இருப்பாள் போலிருக்கே’ என்று முதல் நாளிலேயே ஒரு தவறான புள்ளியை பூவரசியின் மேல் வைத்து வாழ்க்கையை ஆரம்பித்தான்.
பூவரசியின், “ஏன் தொடுறீங்க? கையை மேலே வைக்காதீங்க. ஐயோ விடுங்க. என்னை விடுங்க சொல்றேன்ல?” எந்தக் கேள்விக்கும் பதிலில்லாமல் போக, அவளின் கத்தல்கள், அழுகைகள் யாவும் கண்டுகொள்ளாது வேலை முடித்து அவன் படுத்துறங்க. இவளோ வேதனையில் கரைந்தாள்.
‘ஏய் இசக்கி! இப்படின்னு சொல்லியிருந்தா நான் கல்யாணமே வேண்டாம்னு அப்பாகிட்ட அடம்பிடிச்சிருப்பேன்ல. எனக்கு சுத்தமா பிடிக்கலடி. அழுகை அழுகையா வருது. இப்படித்தான் குழந்தை வருமா? ஐயோ ஒண்ணுமே தெரியாம வளர்ந்திருக்கேனே. இவங்களைப் பார்த்தா பயமாயிருக்கு இசக்கி. அம்மாகிட்டச் சொல்லி என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுடி.’ மனம் அரற்ற மௌனமாக அழுகையில் குலுங்கினாள்.
காலை நான்கு மணிக்கெல்லாம் அவளை எழுப்பிப் பச்சைத் தண்ணீரில் குளிக்கச் சொன்ன மாமியார், எல்லாருக்கும் குளிக்கப் பெரிய பானையில் தண்ணீர் சுட வைக்கச் சொல்ல… அந்தப் பானையைப் பார்த்து அரண்டவளுக்கு காய்ச்சல் வரும் போலிருந்தது.
மாப்பிள்ளையின் தங்கை முருகேஸ்வரியும் தம்பி கோவிந்தராஜனும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துச் செல்ல, அவர்களின் விழி வழி வெக்கை ஒருபுறம் பூவரசியைச் சுட்டது.
“நல்லா பொண்ணு கொண்டு வந்தாங்க பாரு. தோள் செவப்பா பார்க்க நல்லாயிருந்தா போதுமா. ஒரு தீப்பெட்டி பத்த வைக்கத் தெரியல. இவள்லாம் நாள் முழுக்க என்ன வேலையைப் பார்ப்பா. என்ன பொண்ணு வளர்த்தாங்க இவ வீட்டுல. தேடித்தேடி பிடிச்சிட்டு வந்திருக்காங்க பாரு.” மருமகளைத் திட்டியது பத்தாதென்று மகனையும் அழைத்து, “இங்க வந்து இந்தக் கூத்தைப் பாருடா” என்று அடுப்பிற்குப் பதில் மகனிடம் பற்ற வைத்தார்.
தாயின் அழைப்பில் அரைத் தூக்கத்தில் எழுந்து வந்த தர்மராஜன் தன் எரிச்சலை மனைவியின் மீது அடியாக இறக்கி, “இது கூடத் தெரியாமல்தான் உங்காத்தா உன்னை வளர்த்தாளா? போ போயி வெந்நீர் வை” என்று நகர்ந்தான்.
நாத்தனாரும், கொழுந்தனும் புன்னகையுடன் நகர… மாமியாரோ, “இப்படித்தான் ஆரம்பத்துலயே அடக்கி வச்சிக்கணும். இல்லன்னா நம்ம தலையிலையே ஏறி மிளகா அரைச்சிருவா. நீ என் தங்கம்யா” என்று மகனை நெட்டி முறித்து நகர… பூவரசியின் நிலைதான் அதோ கதி.
பிறந்ததிலிருந்து அடியென்று வாங்கியிராதவள். ‘ஏய்! அப்பா அடிச்சிட்டார்’ என்று ஒருத்தியும்… ‘அம்மா அடிச்சதுல விளக்குமாறு பிய்ஞ்சி போயிருச்சிடி’ என்று இன்னொருத்தியும் என யாரோ ஒருவர் தன் தாய் தந்தை பற்றி சொல்லியதைக் கேட்டிருக்கிறாள். ‘அப்பொழுதெல்லாம் எங்க வீட்ல அப்படியெல்லாம் யாரும் இல்லப்பா’ என்று அவர்களிடம் பெருமை பேசியது நினைவு வந்தது.
இன்றோ ஒரு நாள் முன் கணவனாக அறிமுகமானவன் இரவிலும் வேதனைப்படுத்தி, காலையில் கைநீட்டிச் செல்கிறான். ‘இதுதான் மணவாழ்க்கையா? இதையா அனைவரும் கொண்டாடுகிறார்கள்.’ ஏனோ வாழ்க்கையின் ஆரம்பமே கசந்தது. அதிர்ந்தே பேசியிராதவள் என்பதால், அவர்களின் ஆளுமைக்கு அடங்கித்தான் போனாளோ!
விளைவு! மாமனாரின்… மருமகளென்ற எண்ணமில்லாத அசிங்கமான ஏளன வார்த்தைகள்! மாமியாரின்… தன் உடல் மீதான விமர்சனத்துடன் கூடிய அடிகள்! நாத்தனாரின்… அண்ணியவளின் அழகு மீதான பொறாமையும், சிறு வயதுப் பெண்ணிற்குரிய அறியாமையும்! கொழுந்தனுக்கு என்ன பிரச்சனையோ, ஏனென்றே தெரியாத துவேசம் பூவரசியின் மேல். பூப்போன்ற மென்மையான பூவரசியைக் கண்டாலே எரிந்து விழுந்து, அசிங்கமான வார்த்தைகளை சாதாரணமாகவே அண்ணியவளின் மேல் பிரயோகிப்பான். காரணம் வீட்டில் ஏனையவர்கள் அவளை நடத்தும் விதத்திலாக இருக்குமோ! இதற்கும் இருவரும் பூவரசியைவிட இளையவர்கள்.
கணவனின் இம்சை, அராஜகம், அடிகள் அனைத்தும் நாளாக நாளாக பழகிப்போகத் தன்னைக் காணவரும் பெற்றவர்களிடம் தன் துன்பம் கூறாது நன்றாகவே கவனித்து அனுப்புவாள். அதுவும் மாமனார் மாமியாருக்குப் பயந்தே!
[the_ad id=”6605″]
“அப்பா நான் இப்ப சமையல் செய்யுறேன் தெரியுமா? ஆனாலும், நல்லாவே வரமாட்டேன்னுதுப்பா” எனும் மகளைக் காண்கையில் பெருமைபட்டுக் கொள்ளவா, அல்லது அவளின் நிறம் மங்கிக் களையிழந்து போயிருக்கும் உருவத்தைக் கண்டு வேதனைப்படுவதா என்பது தெரியவில்லை அவருக்கு.
‘பெரிய குடும்பம்னு சொல்றீங்க. நம்ம பொண்ணுக்கு அடுப்புப் பத்த வைக்கக்கூடத் தெரியாதுங்க. எப்படி சமாளிப்பா? அவங்க எதாவது சொன்னா என் பொண்ணால எப்படி தாங்கிக்க முடியும்?’ மனைவியின் புலம்பல்கள் கண்முன் வந்து போக, தப்பு செய்துவிட்ட பாவனை அவரிடம்.
மகள் மசக்கையாக இருக்கிறாள் என்ற தகவலில்தான் அவர் இங்கு வந்ததே! வந்த அரைமணி நேரத்தில் ஆயிரத்தெட்டு வேலைகள் செய்கிறாள். குழந்தைக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற கவலை கூட இங்கு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘ஏழைக்குத் தகுந்தாற்போல் மாப்பிள்ளை பார்த்திருக்க வேண்டுமோ? அப்படிச் செய்திருந்தால் அவனை அதட்டியாவது பொண்ணை நன்றாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாமே’ என்ற எண்ணம் வராமலில்லை. இருந்தும் மனம் கேளாது மருமகனிடம் மகளை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி சொல்லிவிட்டு அவனின் முகம் பார்த்தார்.
மாமனார் என்ற மரியாதை அவனுக்கு அவர் மேல் எப்பொழுதும் இருந்ததில்லை. இதில் அவனைக் குறை சொன்னால் தாங்குமா, “என்னை என்ன படிக்காத பட்டிக்காடு நினைச்சீங்களா? இந்த சின்ன ஊர்ல இருந்தா என் மதிப்பு போயிருமா? வெளியில போய்ப் பாருங்க, என்னைக் கண்டா அவனவன் எழுந்து நிற்பான். உங்க பொண்ணுக்கு இங்க என்ன குறைன்னு சொல்லுங்க பார்ப்போம்?” தன்னைக் குறை சொன்னதால் அவரை வாய் பேசவிடாது அனுப்பினான்.
தன்னைக் கேள்வி கேட்ட மாமனாரின் மேலுள்ள கோபத்தை மனைவியிடம் அடி மிதியாகக் காட்டி, அதைத் தாயிடமும் சொல்லத் தவறவில்லை அவன். அவர் சும்மா விடுவாரா அவளை?
வலி! வலி! வலிகள் மட்டுமே அவளிடம். தங்கள் உறவுமுறையில் இல்லாத பெண்களின் கலரோ, அழகோ அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. காரணம், பல பெண்களைப் பார்த்தவன் அவன்.
திருமணத்திற்கு முன் பெண்களை, அவர்களின் நெருக்கங்களை அறியாத ஆண்கனை மட்டுமே மனைவியின் அழகும், குணமும் கவரும் போல! தர்மராஜனைப் பொருத்தவரை பூவரசி என்பவள் அவன் பழகிய பத்தோடு பதினொன்றான பெண். பெண் மட்டுமே! ஆதலால்தான் யார் என்ன சொன்னாலும் மனைவியானவளுக்கு வஞ்சகமில்லாமல் அடி உதைகளைப் பரிசளிக்கிறான்.
வேலைக்குச் செல்கிறானா என்றால் அதுவும் கிடையாது. இது தெரிந்தே ராமேஸ்வரம் கோவிலில் கணக்கெழுதும் வேலையை மருமகனுக்கு பலராமன் வாங்கிக்கொடுக்க… ‘பொண்ணெடுத்த ஊர்ல போய் உட்கார்ந்து வேலை செய்ய, நான் என்ன மானங்கெட்டவனா? அப்படி ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை’ என்று வேலையை உதறிவிட்டான்.
அந்த வேலையில் இருந்தால் அரசு வருமானம் ஒருபுறமென்றால், மகள் மனம் வாடாமல் தனியாகவும் இருப்பாள் என்ற எண்ணமாக இருந்தவருக்கு பெருத்த ஏமாற்றமே! அதன்பிறகு மருமகனிடம் எதற்காகவும் நிற்பதில்லை.
பரம்பரைச் சொத்தை விற்று உட்கார்ந்து தின்பதும், கொடை வள்ளல்கள் போல் தேடி வருபவர்களுக்கு, வயிறு வாடாமல் செய்வதுமே அவர்களை ஊரில் பெரியவர்களாகக் காட்டியது. வெளித்தோற்றத்திற்கு என்றும் மவுசு அதிகம்தான் எக்காலத்திலும்.
வருவோர் போவோர் வயிற்றை வாடாமல் செய்தவர்கள், வாழ வந்த பெண்ணின் வயிற்றையும், மனதையும், உடலையும், தங்கள் வாரிசையும் பார்க்கவில்லையே. ஏன்? அனைத்தும் வெட்டி கௌரவம். கல்யாணமென்று நடந்தால் குழந்தை பிறப்பது இயல்புதானே என்ற எண்ணமும் கூட.