முதல் குழந்தை மாமியாரைப்போல் கருப்பாகப் பிறக்க, பூவரசியின் மாமியாரைக் கையில் பிடிக்க வழயில்லாது போனது. பால் குடிக்க மட்டுமே பூவரசியிடம் வந்தான் அவன். ராமன் என்று மகனுக்கு அவர்களே பெயர் வைக்க, அதிலும் ஒரு நிம்மதி பூவரசிக்கு. அவள் தகப்பனின் பெயர் பலராமனின் பின் பாதியாகிற்றே.
பிரசவ நேரத்தில் அழுதுகொண்டு தன் தாய் கேட்ட கேள்வி இன்னும் மனதினுள் ஓடுகிறது. “என்ன பூவுமா? உடம்பெல்லாம் தடிப்புத் தடிப்பாயிருக்கு? ஐயோ! அருமை பெருமையா வளர்த்த புள்ளையை இப்படிப் பண்ணி வச்சிருக்காங்களே. கடவுளே! இதுக்காகவா என் புள்ளையை அவங்களுக்குக் கொடுத்தேன்” என அழுது அரற்ற…
“அம்மா அப்படி எதுவுமில்லம்மா. மாசமா இருக்கிறப்ப ஆட்டுக் கொட்டகை கீழ சரிஞ்சி விழுந்திருச்சிமா. வயித்துல படக்கூடாதுன்னு கொஞ்சம் பார்த்ததுல என்மேல் விழுந்து அடிபட்டிருச்சி. அவர்தான்மா பதறிப்போய் தூக்கிட்டு ஆஸ்பத்திரி கொண்டு போனார்” என்றாள்.
“மருமகனா? உன்னை நல்லா பார்த்துக்கிறாங்கள்லமா. அப்ப சரி. எனக்குப் பெரியவளையோ உன் அண்ணன்களையோ நினைத்துப் பயமில்லைமா. உன்னைத்தான் தூரமா கட்டிக் கொடுத்திருக்கோமே, எப்படியிருக்காளோ? என்னன்னு சமாளிக்காளோ தெரியலையேன்னு ஒவ்வொரு நாளும் வாயில சோறு இறங்கமாட்டேன்னுது” என்றார் கண்ணைத் துடைத்தபடி.
வந்த அழுகையை அடக்கி தாயறியாமல் தொண்டையை சரிசெய்து, “எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்கம்மா” என்றவளுக்கு, ஆட்டுக்கொட்டகை கீழே விழுந்ததற்குக் காரணம் தான்தான் என்று தன்னை அடித்த மாமியாரைத் தடுக்காது வேடிக்கை பார்த்த தன் கணவன் உட்பட மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் கண்முன் வந்துபோனது.
‘என்ன பாவம்… யாருக்குச் செய்தேன் நான்? எனக்கு ஏனிந்த நிலை? காலத்திற்கும் மாறவே மாறாதா? எவ்வளவு அடி வாங்கினாலும் மறத்துப் போகமாட்டேன் என்கிறதே இவ்வுடல்.’
கணவன்! மாமியார்! மாமனார் தாண்டி அற்பப்புழுவைப்போல் பார்க்கும் சிறியவர்களை என்னவென்று சொல்வாள். அவர்களின் குத்தல் பேச்சுகள் அளவு மீறுகிறது. அடித்து நொறுக்கும் ஆத்திரம் வருகிறது. ஏதும் செய்ய முடியாது பெண்ணென்ற போர்வை கட்டிப்போடுகிறது. மீறி குரல் கொடுத்தால் தன் தாய் தந்தையைப் பேசும் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கேட்க இயலவில்லை. அதற்காகவே அடங்கினாள் பூவரசி. அடக்கி ஆள்வதாக எண்ணினர் கணவன் வீட்டினர்.
[the_ad id=”6605″]
தாய்க்குத் தெரியாமல் கண்ணீரை மறைத்துப் புன்னகைத்த பூவரசிக்கு அங்கிருந்த மூன்று மாதங்கள் தாயின் கவனிப்பில் பழைய அழகைப் பெற்று குழந்தையுடன் வீடு வர, அதே இம்சைகள். என்னவொரு சந்தோஷமென்றால் தன் மகனைக் கொண்டாடினார்கள். அடுத்த பிரசவத்திற்கும் தாய் வீடே கதியாக, அந்த ஐந்து மாத நிம்மதிக்காகவே அடுத்தடுத்து குழந்தை பெறலாம் என்றானது அவள் மனதின் எண்ணங்கள்.
மூன்றாவது குழந்தை இறந்தே பிறக்க ஆபரேஷன் செய்து விடலாம் என்ற டாக்டரிடம், மகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடுமென்று பயந்து வேண்டாமென மறுத்தார் கோசலை. இந்தக் காலத்தில் அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்று புரியவைக்க முயன்று டாக்டர்தான் தோற்றுப்போனார்.
பூவரசிக்குமே குழந்தை பிரசவம் என்ற ஒன்றில்லையெனில் எப்படி தாயைப் பார்ப்பது என்ற எண்ணமெழுந்த நிமிடம், “இப்ப வேண்டாம்” என்றிருந்தாள்.
“என்னதான் காலம் மாறினாலும் உங்களை மாதிரிப் பெண்கள் மட்டும் மாறிராதீங்க. அடுப்படியும் பிரசவமும் மட்டும் போதும் உங்களுக்கு” என்று திட்டி, “உடம்பைப் பார்த்துக்கோ” என அக்கறைப்பட்டே சொல்லிச் சென்றார்.
டாக்டருக்கு பூவரசியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் காயங்கள் அனைத்தும் மனிதர்களால் ஆனது என்பதைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன. இவ்வளவு அடிகள் வாங்கியும் கணவன் பெயர் என்னவென்று கேட்டதற்கு, பெயர் சொல்லக்கூடாது டாக்டர் என்கிறாள். இதே மற்ற பெண்ணாயிருந்தால் இந்நேரம் அவனை விட்டு விளாசியிருப்பாள். அப்பாவியாக இருக்கலாம். அதற்காக இப்படியா என்றுதான் தோன்றியது அந்த அரசாங்க ஆஸ்பத்திரி டாக்டருக்கு.
அவர் அறியாதது! பிற்காலத்தில் கணவனின் தாலிகூட கழுத்தில் இல்லாமல் தொலைந்து போக… அதை வாங்கித் திரும்பப் போடும் எண்ணமில்லாது, வெறும் கயிறை மட்டும் கட்டித் தைரியமாக நடக்கும் புரட்சியும் அவளிடம்தான் உள்ளதென்று.
கணவனின் லீலாச்சாரங்கள் அரசல் புரசலாக பூவரசிக்குத் தெரிந்த போதிலும், கடனே என்று வாழ இரண்டாவது மகன் மட்டுமே அவளுக்கு ஆறுதலாகிப் போனான். அவனை மாமியார் சீண்டவில்லை. காரணம் தாயைப்போல் இல்லையென்றாலும் ஓரளவு நல்ல கலராகவே இருந்தான் லட்சுமணன்.
ஒருநாள் இரவில் ஏதோ கனவு வந்து பயத்தில் மகளைத் தேடி அவளின் ஊருக்கு வந்த பலராமன் பார்த்தவை அனைத்தும் மகளின் உருக்குலைந்த தோற்றமே! உள்ளுக்குள் அழுது கரைந்தார் என்றால் அது மிகையில்லை. கை கால்களிலெல்லாம் கொப்பளங்களாக இருந்தது. வலியைப் பொறுத்து வேலை செய்வது அவர் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
தற்செயலாகத் தகப்பனைக் கண்டதும் சந்தோஷத்தில் ஓடிச்சென்று, கைபிடித்து உள்ளே வரச்சொன்ன மகளின் தலை வருடி, “என்னமா இதெல்லாம்?” என்றார் கண்களில் கண்ணீர் வழிய.
அவரின் கண்ணீரில் தனக்குமே அழுகை வர, அடக்கப் பார்த்தும் அடங்காது வந்ததைத் துடைத்து, “அது ஒண்ணுமில்லப்பா. இந்த ஏரியாவுல ஏதோ ஒரு காய்ச்சலாம். அது என்ன நோய்னு தெரியலைன்றாங்க. இப்படித்தான் கொப்பளமாகி வெடிச்சிப் புண்ணாகி அப்புறம் சரியாகுது. சிலர் செத்துக்கூடப் போயிருக்காங்கப்பா” என்றாள் புன்னகையுடன்.
‘நல்லா நடிக்கிறமா.’ மனதில் நினைத்ததைச் சொல்ல வழியில்லாது, “நீயும் பையன்களும் நம்ம வீட்டுக்கு வந்திடுறீங்களா? அப்பா உங்களை நல்லா பார்த்துக்கிறேன்மா?” என்றார்.
“இல்லப்பா. நான் இங்கேயே இருக்கேன். அங்க வந்தா உங்களுக்கும் இந்த நோய் வந்திரும்.”
தன்னை நம்ப வைக்க மகள் சொல்லும் பொய்யில் கரைந்தவர், “உடம்பைப் பார்த்துக்கோ பூவுமா” என்று மகளை ஆறுதலாக வருடி வீட்டிற்குள் கூடச் செல்லாது திரும்ப பஸ் ஏறிச் சென்றார்.
சென்ற ஒரு வாரத்திற்கெல்லாம் அவர் இறந்த செய்தி வர துடித்ததென்னவோ பூவரசி மட்டுமே! ஊருக்குச் செல்ல மட்டுமே பஸ்ஸிற்கு பணம் கொடுத்து தனியே அனுப்பிவிட்டு, சம்பிரதாயத்திற்கென்று அடுத்த பஸ்ஸில் வந்தான் தர்மராஜன். வந்தவனுக்கு சாவு வீட்டிலும் ராஜமரியாதைதான்.
[the_ad id=”6605″]
“பூவரசி புருஷனா நல்லாத்தான் இருக்காரு. கல்யாணம் முடிச்சி இத்தனை வருஷத்துல இப்பதான் வந்திருக்காரு. ஹ்ம் மாமனார் செத்துதான் மருமகன் மாமனார் ஊருக்கு வரணும்னு இருந்திருக்கு” என சுற்றங்கள் அவரைத் தாங்கியது.
பூவரசி சும்மாவே எதுவும் சொல்லமாட்டாள். அவளின் தாய் தகப்பனோ அதற்கு மேல். அவளின் உடன் பிறந்தவர்களிடம் கூட தர்மராஜனைப் பற்றிச் சொன்னதில்லை. மகளின் புகுந்த வீட்டுக் கௌரவம் தன் வீட்டினரிடம், பெத்த பிள்ளைகளிடம் கூட கெடக்கூடாதென்ற எண்ணமே!
தர்மராஜனைப் பார்த்த கோசலை கணவனைத் திரும்பிப் பார்த்து, ‘இப்படிப் பொண்ணு வாழ்க்கையைக் கடைசிவரை போராட்டத்துல விட்டுட்டு போயிட்டீங்களே’ என மனதினுள் அரற்றினார். ‘கனவா வருது கோசலை. நம்ம பூவுக்கு ஏதோ பிரச்சனைன்னு மனசு சொல்லுது. நான் பார்த்துட்டு வர்றேன்’ என்று அங்கு சென்று திரும்பி வந்தவரின் புலம்பல்கள் யாவும் இப்பொழுதும் காதில் கேட்டபடியிருந்தன.
“கோசலை என் பொண்ணை அவன் கொடுமைபடுத்துறான். மருமகனா போயிட்டான். இல்லன்னா…” என பல்லைக்கடித்தவர், “உடம்பெல்லாம் கட்டி கட்டியா இருக்கு. கேட்டா பெயர் தெரியாத நோய் வந்துட்டதா சொல்றா. பெரியவளையாவது அடிச்சிருக்கேன். சின்னவளை அதட்டினது கூடக்கிடையாது. ஆனா, இப்ப… தாலி கட்டிட்ட ஒரே காரணத்தை வச்சி என் பொண்ணை அடிச்சி சாகடிக்கிறாங்க. நீ அப்பவே சொன்ன நான்தான் கேட்கலை. பக்கத்து வீடுகள்ல அவனைப்பற்றி இன்னும் என்னென்னவோ சொல்றாங்க. தப்புப் பண்ணிட்டேனே! தங்கமான பொண்ணை இப்படி பாதாளத்துல தள்ளிவிட்டுட்டேனே! கண்ணுல ரெத்தம் வருது கோசலை. என்னால தாங்க முடியலையே!”
வந்த அன்று கதறியவர்தான், அத்தோடு உடம்புக்கு முடியாமல் போக சாகும்வரை புலம்பியே செத்தார்.
‘என் பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிட்டு நாலுநாள் கண்ணீர் வடிச்சிட்டு போய் சேர்ந்துட்டீங்க. ஆனா, அவள் கடைசி வரை…’ மகளுக்கும் சேர்த்தே அழுதார் கோசலை.
அதன் பின் பதினாறாம் நாள் காரியமெல்லாம் முடிந்து தன் சித்தி பையனுடன் ஊருக்கு வந்தவள், அதே பஸ்ஸில் தன் தம்பியை அனுப்பிவிட்டு பிள்ளைகளுடன் வீடு வர, காரணமே இல்லாமல் பெரிய சண்டையே நடந்தது.
முதல் முதலாக அனைவரின் முன்னும் எதிர்த்து நிற்க, அதற்கு அவளுக்கு அடிகள் கிடைத்தாலும், “என் அப்பாவைக் கொன்னது நீங்கதான். என்னை இங்க பார்த்து மனம் உடைஞ்சிதான் செத்துப் போயிட்டாங்க. நீங்கள்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்க” என்று சாபமிட…
“நாங்க நல்லாதான் இருக்கோம். உங்க நிலைதான் சரியில்லை” என்று முருகேஸ்வரி இடையிட…
“உனக்கு இன்னும் கல்யாணமாகலை முருகேசு. உன்னை எதுவும் சொல்லக்கூடாது பார்க்கிறேன்” என்று கடினமாகவே சொன்னாள் பூவரசி.
“ஏன் சொல்லித்தான் பாரேன்” என்று ஏகவசனத்தில் கொழுந்தனவன் ஆரம்பிக்க…
“மரியாதைன்னா என்னன்னு உன் வீட்டுல சொல்லித்தரலையா? போய் அதைக் கத்துக்கோ” என்று மூஞ்சிலடித்தாற்போல் சொன்னாள்.
“அதெல்லாம் சொல்லித் தந்திருக்காங்க. உன்னைத்தான் மரியாதையா கூப்பிடப் பிடிக்கலை” என்றான் இளக்காரமாக.
“கூப்பிடுவடா. நீ மட்டுமில்ல இவளும்தான். ஒரு நாள் இல்ல ஒரு நாள், என் மதிப்பு உங்களுக்குத் தெரியும்போது நாங்க செய்தது தப்புன்னு நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க. இது கண்டிப்பா நடக்கும்” என்றாள் குரலுயர்த்தி.
“ஆங்! பார்க்கலாம் பார்க்கலாம்.”
“நானும் பார்க்கத்தானே போறேன்” என்றாள் பதிலுக்கு.
“என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரியா வருது. உங்கப்பன் வீட்டுக்குப் போனதுல பேய் கீய் அடிச்சிருச்சா என்ன? இந்தக் குதி குதிக்கிற? வாங்குனதெல்லாம் பத்தாதா உனக்கு?” என்று மாமியார் வர…
“மாட்டை அடிக்கிற மாதிரி உங்களை உங்க புருஷன் அடிச்சி அவமதிச்சிருந்தா, அப்பத் தெரிஞ்சிருக்கும்” என் வலிகள் என்னன்னு.
“நான் என்ன உன்னை மாதிரி ஒண்ணுமில்லாதவளா? நான் ராணிடி. என் பிறந்த வீடும் வசதி. புகுந்த வீடும் வசதியில் குறைச்சலில்லை. பிள்ளைங்களும் தங்கமா தாங்குறாங்க” என்றவர் குரலில் அளவில்லா பெருமை.
“எல்லா நேரமும் காற்று ஒரே பக்கமா வீசுறதில்லை அத்தை.”
“என்னடி மாமியார்ன்ற மரியாதையில்லாமல் பேசுற?”
“மரியாதையில்லாமல் பேசுறேனா? இப்பவும் வாங்க போங்கதான் சொல்றேன். எப்பவும் நான் அப்படித்தான். உங்களை வா போ சொல்லமாட்டேன்” என பதிலுக்குப் பதில் பேசியதில் மாமியார் வாயில் அடித்துக்கொண்டு அழுதார்.
அப்பொழுதுதான் அவள் பேசுவதைக் கேட்டபடி வந்த தர்மராஜனிடம், “நடத்தைக் கெட்டவளைக் கூட்டிட்டு வந்திருக்கடா. ஊருக்குப் போயிட்டு வந்ததுல எவன் என்ன சொல்லி அனுப்பினானோ இங்க வந்து பேயாட்டம் போடுறா. பக்கத்துல கடைக்குப் போனா அவன்கூட பல்லைக்காட்டிட்டு நிற்கிறதா எல்லாரும் என் காதுபடப் பேசுறாங்க. இப்ப என்ன பேச்சி பேசுறா பாரு” என்று ஏத்திவிட்டார் மாமனார்.
எப்பொழுதும் போல் கை நீட்டி, “கொன்னு புதைச்சிருவேன். எங்க வீட்டுல உள்ளவங்களையா எதிர்த்துப் பேசுற” என்று மிரட்ட…
“ஆமா கேட்க நாதியில்லாம இருக்கேன்ல. அப்படித்தான் பேசுவீங்க. எங்கப்பாவைக் கொன்னது பத்தாதுன்னு என்னையும் கொல்லணுமா? எங்கப்பாவை நோகடிச்ச பாவம் உங்களைச் சும்மா விடாது.”
“என்ன செய்யுமாம் உங்க பாவம்? எங்களைக் கொன்னுருமா” என்ற மாமியாரின் விதண்டாவாதமான கேள்வியில்…
“ஆமாம். கடைசி காலத்துல பார்த்துக்க ஆளில்லாம, படுத்த படுக்கையாகி, உடம்பெல்லாம் அரிச்சி புழு வந்துதான் சாவீங்க. கடைசி வரை உங்க கட்டையில கூட முழிக்கமாட்டேன். இது நான் கும்பிடுற முருகன்மேல சத்தியம்” என்றாள் வேகமாக.
“ஹோ… பெரிய பத்தினி. இவள் சாபம் விட்டுதான் பலிக்கப்போகுது. போடீ” என்றான் தர்மராஜன்.
[the_ad id=”6605″]
“ஆமா. பத்தினிதான். உங்க ஒருத்தருக்கு மட்டும்தான் முந்தானை விரிச்சது உண்மைனா என்னோட சாபம் பலிக்கும். அப்ப தெரியும் நான் பத்தினியா… இல்லையான்னு.”
“அப்ப என் அப்பாவுக்கு என்ன சாபம்னு சொல்றீங்களா?” என்று ஏளனமாக வினவ…
அவளின் மனதிலிருந்த கோபம் குறைந்ததாலோ என்னவோ, “அவருக்கும் அதேதான்” என்று உள்ளத்திலிருந்து சொல்லாமல் உதட்டளவில் சொன்னாள்.
அதன் பின்னான வருடங்களில் அங்கு வேலை செய்கிறேன் இங்கு வேலை செய்கிறேன் என்று இரண்டு மூன்று ஊர்களுக்கு மனைவி குழந்தைகளை இழுத்தடித்துக் கடைசியில் சொந்த ஊரின் அருகிலுள்ள அந்தப் பெரிய ஊரான சாயல்குடிக்கு வந்தார்கள்.
அந்த வீட்டின் உரிமையாளர் தர்மராஜனின் நண்பன் சேவியரின் தாய் பூவரசியை ஆதரிக்க… கணவனின் உழைப்பில் நம்பிக்கையில்லாத பூவரசி, களையெடுப்பது, விறகு வெட்டச் செல்வதென்று பிள்ளைகளுக்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
பிள்ளைகளுக்கு ரேஷன் கடை அரிசியே உணவாகிப் போக, தேங்காய்த் துவையலே அனேக நேரம் தொடு உணவானது.
அந்நேரம்தான் பிறந்தாள் அவள்! தாயின் துயரையும் சேர்த்துத் தாங்கப் பிறந்த சூர்யபுத்திரியோ!
“ஏய் பூவு! உன் பொண்ணு கொழுகொழுன்னு என்ன அழகாயிருக்கா இந்த வெள்ளச்சி. சூர்யோதயத்துல பிறந்திருக்கா. பேசாம சூர்யோதயான்னு பெயர் வை. நல்லாயிருப்பா” என மனதார சொன்னாள் இசக்கி.
இசக்கிக்கு அந்த பிரசவத்தில் பிறந்த ரவி மட்டுமே பையன். அதன் பின் கருவும் நிற்கவில்லை. அவன் மட்டுமே போதுமென்று விட்டுவிட்டார்கள். இப்பொழுது மனிதர்களின் மனங்களை அதிகம் கற்றுக்கொண்டாள் இசக்கி. இசக்கி சொன்னால் சரியாயிருக்கும் என்ற எண்ணம் அவளைச் சார்ந்தவர்களிடம் இருக்கும்.
“சூ..ர்..யோ..த..யா!” சொல்லிப்பார்த்த பூவரசி, “சூர்யா-உதயா… சூர்யோதயா! பெயர் நல்லாயிருக்கு இசக்கி. யார் என்ன சொன்னாலும் என் பொண்ணுக்கு இதான் பெயர். இதில் மாற்றமேயில்லை” என்றாள் உறுதியாக.
சூர்யோதயா! சூரியனைப்போல் சுட்டெரிப்பாளா? அல்லது சூர்யபுத்திரன் கர்ணன்போல் தனிக்கொடியாகத் தன்னைத்தானே செதுக்குவாளா!