11
தன் முன்னே வந்த ஒருவன் பல்லிளித்தபடி நிற்க, சடனாக நடையை நிறுத்திய சூர்யோதயா, “க்யா பையா?” என்றாள் கடுப்புடன்.
அவளின் முறைப்பில், “குச் நஹி” என முனகி அவன் விலக செல்போன் பேச்சைத் தொடர்ந்தபடி நடக்கையில், ஏதோ ஒரு உணர்வு உந்தத் திரும்பிப் பார்க்க யாருமில்லை. திரும்பத்திரும்ப அவ்வுணர்வு வர, ஒரு கட்டத்திற்கு மேல் தோளைக் குலுக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.
முன்னரெல்லாம் அவளை யார் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியாது. பட்ட அனுபவம் ஆட்களை எடைபோடக் கற்றுக் கொடுத்திருக்கிறது போலும்!
“சூர்யா” என்ற சத்தமான குரல் செல்போனைத் தாண்டி கேட்க, கேள்வியாய்த் திரும்பியவள் அங்கு நின்றிருந்தவனைப் பார்த்து, “கோன் ஹை?” என்றாள்.
“ஏய்! என்னைத் தெரியலையா? நான் முத்துகுமார். நீ சூர்யா இல்லைன்னு சொல்லிராத. என்னை ஏமாற்ற முடியாது” என்றான். அவன் பார்வையே சொல்லியது உன்னை எனக்குத் தெரியாதா என்று.
சில நொடி கண்மூடித் திறந்தவள், “நான் ஏன் இல்லன்னு சொல்லணும்? நான் சூர்யாதான். இப்ப அதுக்கு என்ன?” என்றாள்.
“ஏற்கனவே அழகு நீ. இப்ப இன்னும் சூப்பராயிருக்க. உன் புருஷன் குடுத்து வச்சவன். நாம தனியா…”
“தனியா?”
[the_ad id=”6605″]
“சும்மா கொஞ்ச நேரம்…”
“என்ன செருப்படி வேணுமா? அதுக்கு ஏன் தனியா போகணும்? இப்பவே தர்றேன் வா” என சிரித்தபடி சொல்ல…
“ஏய்! என்ன ஓவரா பேசுற. வான்னா வருவியா?”
“என்னடா அதிகாரம் பண்ற? நான் உன்னோட வரணுமா? அப்ப உன் பொண்டாட்டியை யாரோட அனுப்பிட்டு வரப்போற?” காட்டமாகவே கேட்டாள்.
“என்னடி திமிரா?”
“ஆமாடா திமிருதான். என்ன இப்போ?”
“உன்னை எத்தனை பேர் உரசியிருக்கான்னு எனக்குத் தெரியாது நினைச்சியா? உன் பத்தினித்தனத்தை என்கிட்டயே காட்டுறல்ல நீ. உன்னை…”
“ஏய் நிறுத்து. உனக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சா?”
“ஆமா. என் மாமா பொண்ணைதான் முடிச்சிருக்கேன். இப்ப மாசமாயிருக்கா” என்றான் பெருமையாய்.
“ஓ… அப்ப முழுமையான ஆண் பெண் உறவு எப்படின்னு அனுபவ ரீதியா தெரிஞ்சிருக்கும். நீயே சொல்லேன்? என் உடம்பைப் பார்த்த, தொட்டுத் தடவின. அப்புறம்… சொல்லு? அவ்வளவுதான? அல்பத்தனமான உன் நடவடிக்கைக்கு நான் பலியா? நான் பத்தினிதான்டா! மனசாலயும் உடலாலயும் எந்தத் தப்பும் பண்ணல. என்னைத் தப்பானவள்னு சொன்னா, பச்சைக் குழந்தைகிட்ட அல்பமா நடந்துகிட்ட உங்க ஆண் வர்க்கம்தான்டா வெட்கப்படணும். இனி ஒரு முறை என்னை அசிங்கப்படுத்தணும்னு நினைச்ச… உன் பொண்டாட்டிகிட்ட சொல்வேன்.”
“பெண்ணின் அங்கங்களை உங்க கண்கள் மேயுறதாலயோ, தொடுறதாலயோ ஒரு பெண் கெட்டுப் போனவளாகிடுறாளா? பஸ்ல, ட்ரெய்ன்ல ஒரு பெண்ணை விடுறீங்களா? வெறும் தொடுகையில் கெட்டுப் போகணும்னா, அதைச் செய்யுற ஆணுக்கு என்ன பெயர்டா? இன்னொரு முறை நான்னு இல்ல வேற எந்தப் பொண்ணுகிட்டேயும் வம்பு பண்ணின தெரிஞ்சது, மானம் மரியாதைலாம் பார்க்காம உன் வீட்ல வந்து நின்னு கத்தி சொல்வேன். அப்புறம் உன் மானம்தான் ப்ளைட்ல பறந்து போகும். உன் பொண்டாட்டி கூட உன்னை மதிக்கமாட்டா. அதான் வேணும்னா வா… வந்து தொடுடா” என்றாள் ஆங்காரமாய்.
“இ..இல்ல வேண்டாம் சூர்யா. நீ இருக்கிற பக்கமே நான் வரமாட்டேன்.”
“சூர்யான்னா நெருப்புன்னும் அர்த்தமிருக்கு. நெருங்கின சுட்டுப் பொசுக்கிருவேன் ராஸ்கல். போயி எது வேணும்னாலும் உன் பொண்டாட்டிகிட்டக் கேளு. அடுத்தவள் பின்னாடி சுத்தினா உன் பொண்டாட்டி பின்னாடி வேற எவனாவது சுத்தப்போறான். கர்மா இஸ் பூமராங்டா பொறுக்கி. பி கேர்புல்” என்று வன்மையாகவே கண்டித்தாள்.
“சாரி சூர்யா.”
அவன் சொல்வது வெறும் வாய் வார்த்தை என்பது புரிய, “ச்சீ.. போடா. நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்” என்று தன் நடையைத் தொடர… பலத்த கைதட்டல் சத்தம் கேட்டு யாரெனப் பார்த்தவள் சபரியைக் கண்டு சிலையாக நிற்க… அவனுக்கோ டாக்டரிடம் பேசியது நினைவில் வந்தது.
விக்னேஷ் சூர்யாவை விட்டுச் சென்றதும், “ஏன் டாக்டர் எனக்காக இதைச் செய்ய முடியமா? ஒரு தங்கையா நினைச்சிப் பண்ணுங்க டாக்டர். காலத்துக்கும் அந்த நன்றியை மறக்கமாட்டேன்” என்று ருத்ரன், சக்தியிடம் கேட்டாள்.
“டைவர்ஸ் மட்டும் போதுமா சூர்யா? உன் வாழ்க்கை நடத்த வேலை எதுவும் வேண்டாமா?”
“டாக்டர்” என்றாள் கண்கலங்க.
“விக்னேஷ் மனசுல உள்ளது புரியவுமே உங்களுக்காக ஒரு வேலைக்கு ரெடி செய்துட்டேன். உங்களுக்குப் பிடிச்ச தையல் வேலைதான். ஆனா, இடம்தான் பெருசு. உங்களுக்குக் கத்துக்கவும் முன்னேறவும் நிறைய ஆப்ஷன் இருக்கு. அவங்களுக்கு நீங்க தயாரிக்கிற டிசைன் பிடிச்சிருச்சினா, உங்க ரேஞ்ச் வேற லெவல்ல இருக்கும். ஒரு பெரிய டிசைனராகுறதுக்கான வாய்ப்பும் அங்கயிருக்கு. ஹாஸ்டல்ல தங்குறதுக்கு ஃப்ரண்ட் ஒய்ஃப் அனிதா மூலம் ஏற்பாடு செய்துட்டேன். பட், இதெல்லாம் நடக்கணும்னா நீங்க மும்பைக்குப் போகணும்” என்று ருத்ரன் முடிக்க…
“எனக்கு ஆங்கிலமே வராது. இதுல ஹிந்தி எப்படி டாக்டர்?”
“சூர்யா ஒரு பழமொழியிருக்கு. கற்றது கையளவு! கல்லாதது உலகளவு! படிங்க! கத்துக்கோங்க! நீங்க நினைச்சா ஒரே மாசத்துல ஹிந்தியை பிக்கப் பண்ண முடியும். பெஸ்ட் ஆப் லக்.”
“தேங்க்யூ டாக்டர்” என்றாள் சந்தோஷத்துடன்.
“தேங்க்ஸ் என் ஒய்ஃப்கு சொல்லுங்க. சூர்யாவுக்கு ஸ்ட்ராங் ரெகமன்டேஷன் தந்திருக்காங்க.”
“தேங்க்யூ டாக்டர் மேடம்.”
“நோ பார்மாலிட்டீஸ் சூர்யா. வாழ்க்கையில நல்ல இடத்துக்கு வருவ. அதோட நீ விரும்பின கணவன், குழந்தைன்னு சந்தோஷமாயிருப்ப” என்றாள் பிரம்மசக்தி.
‘அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை’ என்பதை மனதில் நினைத்து வெளியே புன்னகைத்துக் கொண்டாள்.
“சூர்யா நீ என்ன நினைக்கிற புரியுது. கண்டிப்பா உன் லைப்ல ஒருத்தர் வருவார். இதே ஹாஸ்பிடலுக்கு உன் முதல் டெலிவரிக்கு வரத்தான் போற. இதை நான் சேலஞ்சாவே எடுத்துக்கிறேன்” என்ற சக்திக்கு… புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள்.
“பிரம்மு டைவர்ஸ் முடியுறவரை நம்ம ஹாஸ்பிடல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வச்சிரு.”
[the_ad id=”6605″]
“கண்டிப்பா ருத்” என்று அவளுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, மியூச்சுவல் என்பதால் டைவர்ஸ் உடனே கிடைக்க ரெடி செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மும்பையில் வேலையில் சேர்ந்துவிட்டாள்.
தெற்கே பிறந்த சூர்யோதயா இப்போது வடக்கே சயனித்திருக்கிறாள். மீண்டும் உதயமாவது எப்போதோ!
கைதட்டியபடி வந்த சபரி முத்துகுமாரை நோக்கி எட்டி ஒரு உதை கொடுத்தான். தூரப்போய் விழுந்தவனை விடாது திரும்பவும் கால்களால் துவம்சம் செய்ய, கைகளோ தன் வேலையைத் தொடர்ந்தது.
“இன்னும் ஒரு செகண்ட் இங்க நின்ன செத்துருவ போடா” என விரட்டி கை ஓசையுடன் வந்தவன், “சூர்ய உதயத்துல பிறந்தவள், இப்ப உச்சி வெயில் சூர்யனா சுட்டெரிக்கும் சூர்யோதயாவா! சூப்பர்ல! வாழ்த்துகள் வெள்ளச்சி” என்றான் அவள் புறம் கை நீட்டியபடி.
அதைக் கண்டுகொள்ளாது, “யார் சார் நீங்க? முன்னப்பின்ன தெரியாதவங்ககிட்ட கை கொடுக்குற பழக்கமெல்லாம் கிடையாது” என்று சற்று திமிராகவே நடக்க…
“அச்சா ஜி!” சட்டென போனை எடுத்து ரீசன்ட் காலிலிருந்த நம்பருக்கு வீடியோ கால் போட்டு எதிரில் எடுக்கப்பட்டதும், “அத்தை நான் சபரி பேசுறேன். உங்க பொண்ணைப் பார்த்துட்டேன் அத்தை. ஆனா அவங்களுக்கு என்னை யாருன்னு தெரியாதாம். நீங்க சொன்னது இந்தப் பொண்ணா பாருங்க” என்று அவளருகில் நின்று காண்பிக்க… முகம் திருப்பி நடந்தவள் கைபிடித்துத் தடுத்து அருகில் நிறுத்த, இருவர் ஜோடிப்பொருத்தம் பார்த்த தாயின் மனசு நிறைந்தது. நிறைய வருடங்கள் ஆசைப்பட்டது இதற்காகத்தானே!
“ஏன்டா வெள்ளச்சி இந்த அம்மாகிட்டப் பேசமாட்டியா? நாங்க அவ்வளவு அந்நியமா போயிட்டோமா?”
“அம்மா இப்படிப் பேசாதீங்க.” நீண்ட நாட்கள் கழித்து இசக்கியைக் கண்டதும் கண்கலங்க, சபரியின் கையை விலக்க முயற்சிக்க… அவனோ விட்டால் ஓடிவிடவாளென்று பயந்து பிடியை விலக்காமல் நின்றான்.
“ப்ளீஸ் சபரி மச்சான்! நான் எங்கேயும் போகல. முதல்ல கையை எடுங்க” என்றாள் கெஞ்சலாக.
“அப்படி வா வழிக்கு. பெயரோட சேர்த்து மச்சான்ற உறவும் வருது.” அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சைக் காண்பித்து, “நீ இங்க உட்கார்ந்து பேசு. நான் தள்ளி உட்கார்ந்திருக்கேன்” என்று அமர…
பெஞ்சின் இன்னொரு முனையில் அமர்ந்தவள், “நான் என்னம்மா செய்யட்டும்? எனக்கு யாரையும் பார்க்கிற தைரியம் கிடையாது. அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னாகுமோன்ற பயம். அதான் கல்யாணம் முடிச்சிக் கொடுத்த பொண்ணு நல்லாயிருக்காள்ன்ற நிம்மதியோட இருக்கட்டும்னு விட்டுட்டேன்.”
“நான் இல்லையாடா? நான் என்ன செத்தா போயிட்டேன்” என்று ஆதங்கத்தில் கேட்க…
“ம்மா… ஏன்மா? நான் ஏற்கனவே செத்துட்டேன். என்னால யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாதுன்னு தான்மா வரலை” என்றவள் கண்களில் கண்ணீர்.
“உன்னால யாருக்கும் பிரச்சனை வராதுடா. நீ எங்களோட தேவதைப் பொண்ணுடா. நீயா எதையோ ஏன் கற்பனை பண்ணிக்கிற?”
“நான் தேவதையா? என்னைத் தப்பானவள்னு அந்த விக்னேஷ் சொல்றான்மா. நான் எந்தத் தப்பும் பண்ணலம்மா. நிஜமா பண்ணல” என குலுங்கி அழுதவளைக் கண்டு இசக்கியும் கண்ணீர் வடித்தார்.
சபரிக்கு அதற்குமேல் பொறுமையில்லாமல் அவளருகில் நெருங்கி தன் தோள் சாய்க்க, அழுகையில் எதையும் யோசிக்காது சாய்ந்தவள் சபரியின் “அத்தை அழுதது போதும். உங்க பொண்ணு கிடைச்சிட்டாள்ல அதுக்கு சந்தோஷப்படாம… முதல்ல கண்ணீரைத் துடைச்சிட்டு சிரித்த முகமா பேசுங்க” என்றதில் அவனை விட்டு விலகியவள் “சாரி” என்றாள் மெல்லிய குரலில்.
“அத்தை உங்க பொண்ணு பேச்செல்லாம் மாறி டீசன்டா ஆங்கிலமும் ஹிந்தியும் சர்வசாதாரணமா வருது” என்றான்.
“என் பொண்ணு புத்திசாலிடா.”
“ஆமாமா நீங்கதான் மெச்சிக்கணும்” என்றதும் கோபத்தில் அவனை முறைக்க… “ஏய் இசக்கி! உன் பொண்ணுக்கு கோபமே வராது. கோபம்னா என்னன்னே தெரியாது சொன்ன? இவள் என்னடான்னா வார்த்தையிலேயே விளாசித் தள்ளுறா. பார்வையாலயே எரிக்கிறா. ஏன் பொய் சொன்ன?”
“கேப்ல கெடா வெட்டுறியாடா மருமகனே. என் பொண்ணு வாழ்க்கைப் பாடம் கத்துக்கிட்டாள்டா. துரத்தின நாயைக் கண்டு ஓடாம, நின்னு அடிக்கிற தைரியம் வந்திருக்கு. எனக்குப் பெருமையானதுடா இது.”
‘எப்புடி!’ என்பதாய் சூர்யா சபரியை கெத்துப் பார்வை பார்க்க…
அப்பார்வை தனில் சபரிநாதன் தொலைந்தே போனானோ! ‘சூப்பர்’ என்பதாய் விரல்களில் அபிநயம் பிடித்துக்காட்ட, அவளின் பளிச்சென்ற புன்னகையில் மொத்தமாகச் சரணடைந்தது அவனின் மனம்.
“அத்தை வேறெதுவும் பேசணுமா?”
“என் பொண்ணை என்கிட்டக் கொண்டு வந்து ஒப்படைச்சிருடா மருமகனே” என்றார்.
‘வேண்டாம்’ என்று சூர்யா தலையசைத்து மறுக்க…
“அதுதான் உங்களோட ஆசைன்னா நான் கூட்டிட்டு வர்றேன்” என்று காலை கட் செய்தான்.
“இல்ல நான் எங்கேயும் வரல. எனக்கு இங்க இருக்கதான் பிடிச்சிருக்கு.”
“எப்படிமா? யாருமில்லாத அனாதை மாதிரி தனியாயிருக்கவா?”
“ஆமாம்னு வச்சிக்கோங்க.”
“அடிச்சிப் பல்லை உடைச்சிருவேன் ராஸ்கல். உனக்காக உன் நிலை தெரிஞ்சதிலிருந்து சோறு தண்ணியில்லாம பட்டினியா கிடக்கிறாங்க. உனக்கு தனியா வாழ்ற சொகுசு கேட்குதா? இந்த லைஃப்லதான யாரும் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டாங்க. அதான் உனக்கு வேணும்ல?” என காட்டாமாகவே கேட்டான்.
“என்னை யாரும் கேள்வி கேட்கவும் வேண்டாம். நானும் யாருக்கும் பாரமாயிருக்கவும் வேண்டாம்.”
“குழந்தை மாதிரி அடம் பிடிக்காத உதயா. உன்னை யாரும் பாரமா நினைக்கல. இனி நினைக்கப் போறதும் இல்ல. கண்டதையும் கற்பனை செய்யாம என்னோட வாமா” என்றான் தன்மையாகவே.
“இல்ல மச்சான் அதெல்லாம் சரிவராது.” தன் வாதத்தில் உறுதியாக நிற்க…
[the_ad id=”6605″]
“விக்னேஷ் சொன்னது சரின்ற மாதிரியிருக்கு நீ செய்யறது. அவனுக்காகத்தான் நீ தனி வாழ்க்கை வாழ்றியா? அதுக்கு டைவர்ஸ் பண்ணாம அவனோடவே வாழ்ந்திருக்கலாமே?” என்றான் கோபமாக.
“மச்சான் ப்ளீஸ். அவனுக்காக நான் ஏன் வாழணும்? நான் எனக்கான வாழ்க்கை வாழ்றேன். அதுல எந்தவித இடைஞ்சலும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறதுல என்ன தப்பு?”
“அதானே! யார் அதைத் தப்புன்னு சொன்னது? நீ வாழுமா! தனியா! நிம்மதியா! மத்தவங்க நிம்மதியைப் பறிச்சிக்கிட்டு…”
“மச்சான் ஏன் என்னை வார்த்தையால கொல்றீங்க? என்னால மத்தவங்க நிம்மதி போகக்கூடாதுன்னுதான் சொல்றேன். புரிஞ்சிக்க மாட்டீங்களா?”
“நீ முதல்ல புரிஞ்சிக்க உதயா. இதெல்லாம் உன்னை நீ தைரியமா காட்டிக்கப் போட்ட மேக்கப். அதையெல்லாம் கழட்டிட்டு எங்க பொண்ணா வா.”
“முடியாது மச்சான்” என்றாள் பிடிவாதமாய்.
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? விக்னேஷ் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.”
“ஓ… ஓகே. அதில் ஒண்ணும் தப்பில்லையே. நானே லாஸ்ட் டைம் அவரை வேற கல்யாணம் செய்துக்கச் சொல்ற முடிவுலதான் இருந்தேன். இப்ப அதுக்கென்ன?”
“நீயும் அவன்கிட்ட சவால் விட்டியாமே? அவன் அடிச்சி சொல்றான் அவனைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டன்னு.”
“அவன் கிடக்கிறான் லூசு. அந்த விஷயத்தை அத்தோட மறந்துட்டேன்” என்றாள் அசால்டாக.
“விக்னேஷை மறந்தது உண்மைனா அவன் கொட்டுன விஷத்தையும் மறந்து என்னோட வா. உனக்காக எல்லாரும் காத்திருக்காங்க.”
“சாரி மச்சான். நீங்க என்ன சமாதானப்படுத்தினாலும் நான் எங்கேயும் வர்றதாயில்ல. இப்ப எனக்கு வேலைக்கு நேரமாகிருச்சி. நீங்க டைம் வேஸ்ட் பண்ணாம ஊருக்குக் கிளம்புங்க” என விறுவிறுவென்று நடந்தாள்.
அவனோ அவ்விடத்தை விட்டு எழவில்லை. செல்லும் அவளையேப் பார்த்திருந்தான். வாழ்க்கை கொடுத்த ஏமாற்றம் அவளை எந்தளவு மாற்றிவிட்டது. பதில் பிடிவாதம் பிடித்தாலன்றி அவள் சரிவரமாட்டாள் என்று அங்கேயே அமர்ந்துவிட்டான்.
‘என்னதான் வேண்டுமாம் இந்த மச்சானுக்கு? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களிடம் செல்வது? என்னதான் நல்லவர்கள் என்றாலும் தன் திருமண வாழ்க்கை நன்றாகயில்லையே. அதுவும் சபரி மச்சான் இருக்குமிடத்தில்… ம்கூம்… அந்த விக்னேஷ் சொன்னதுதான் சரின்னு ஆகிரும். சபரி மச்சானின் சாதாரண உரிமைப் பேச்சிற்கே மனதெல்லாம் ஏதோ ஆகிறது. அவங்களோடவே இருந்தா… எப்படியும் அவங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது. அப்புறம் ஏன் கூப்பிடணும்?’
‘முதல்ல சபரி அம்மாவை உனக்குத் தெரியுமா? பழகியிருக்கியா நீ? அதுவுமில்லாம சபரி கூப்பிட்டது உன் இசக்கி அம்மா வீட்டிற்கு. நீ ஏன் அவனின் அம்மாவை கணக்கிலெடுக்கிறாய்?’ என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
‘அ..அதெல்லாம் எனக்குத் தெரியாது. எது நடந்தாலும் யார் வீட்டுக்கும் போகமாட்டேன். இந்த வாழ்க்கை! இந்த வேலை போதும். வேற எதுவும் வேண்டாம். ஆமா வேண்டவே வேண்டாம். நான் தனிப்பறவை!’ தன் மனதைத் தேற்றி அந்த ஃபேஷன் வேர்ல்ட் ஜவுளிக்கடலுக்குள் நுழைந்தாள்.