அது மும்பை நகரத்திலேயே உள்ள பெரிய ஷோரூம். அதாவது விஐபிகள் வந்து பர்சேஸ் பண்ணுமிடம். ப்ளஸ் மாடலிங் ஆடைகளும் உண்டு. புதுப்புது மாடல் உடைகள் அங்கு அலங்கரிக்கும். அதில் சில இப்பொழுது சூர்யோதயாவின் கைவண்ணத்தில். அதுவும் கடந்த இரண்டு மாதங்களாய் அவளின் டிசைனில் உருவான அழகான ஆடைகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவள் பெயரில் கிடையாது. அவளின் தயாரிப்பை அவளின் மேலதிகாரி தன்னுடையதாய் எடுத்துக்கொள்ள, அதைக் கண்டுகொள்ளவில்லை அவள்.
‘பரபரப்பான மும்பை! பரபரப்பான வேலை! மனதில் வேறு எண்ணம் எழாத நிம்மதியான உறக்கம். இது போதுமே எனக்கு. ஊருக்குச் சென்றால் தன்னம்பிக்கை போவது உறுதி. தாயின் கண்ணீர்! தகப்பனின் அலட்சியம்! மற்றவர்களின் பரிதாபப் பார்வை! சிலரின் வேறு விதமான பார்வை! அனைத்தையும் தவிர்க்கவே இந்த வேலை.’
‘ஆனால், சபரி மச்சானுக்கு ஏன் இந்த வேலை? ஊருக்குத் திரும்பியிருப்பாங்களா? இல்லைன்னுதான் தோணுது. ஹரிணி பாப்பா நலம் விசாரிக்கலையே? எதாவது நினைச்சிருப்பாங்களா? ம்க்கும்… நினைச்சா நினைக்கட்டும். எனக்கென்ன? அவங்க பொண்ணு அவங்க பாடு.’
அவளுக்குள்ளே நிறைய கேள்விகள். நிறைய பதில்கள். பதில்களில்லா கேள்வியை தூக்கி ஓரம் போட்டு வேலையை ஆரம்பித்தாள்.
மாலை நான்கு மணிபோல், “சூர்யா ஜெ எம்.டி கூப்பிடுறார்” என்று மேனேஜர் சொல்லிப்போக… எழுந்து சென்று அனுமதி கேட்டு வந்தவளிடம், “மிஸ்.சூர்யா உங்களுக்கு பிரமோஷன் ப்ளஸ் ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு” என்றார்.
“சார் நான் வந்து ஜஸ்ட் எய்ட் மன்த்தான் ஆகுது. அதிலும் சிக்ஸ் மன்த் ட்ரெய்னிங். இப்ப இரண்டு மாசமாதான் டிசைனிங்கே பண்றேன். அதுக்குள்ள எப்படி?” என்பதாய் கேட்டு நிறுத்த…
“எம்.டியோட நேரடி அப்பாய்ன்மென்ட் சூர்யா. அதை நீங்க அக்செப்ட் பண்ணிதான் ஆகணும். நீங்க சொல்றதை வச்சிதான் நெக்ஸ்ட் மூவ் இருக்கும்.”
“எந்த ஊர் சார்?”
“கேரளா கேபிடல் சிட்டி திருவனந்தபுரம். அங்க நீங்க பண்ணப்போற டிசைனிங்கிற்கான அங்கீகாரம் உங்களுக்கே கிடைக்கும்.”
“சார்!” வியப்பாய் பார்த்து, “நம்ப முடியலை சார்?” என்றாள்.
[the_ad id=”6605″]
“டூ பிலீவ். ஐம் நாட் ஜோக்கர் சூர்யா. டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?”
“எ..எஸ் சார்” என்றவளுக்கு, ‘இது எவ்வளவு பெரிய ஆஃபர் புதுமுகம் என்னை நம்பி எப்படி தந்தாங்க? அதுவுமில்லாமல் தனியா சமாளிப்பேனா?’ என்ற எண்ணம் எழாமலில்லை.
அதைப் புரிந்தாற்போல், “இன்னொன்னு சொல்றேன். நீங்க மட்டும் தனியா போகலை. மிஸ்டர்.ஸ்ரீகர் உங்களோட வர்றார். அவர் எக்ஸ்பீரியன்ஸ் ஆள்தான். அவர் கைடன்ஸ்லதான் நீங்க ஒர்க் பண்ணப்போறீங்க.”
“நான் என் பதிலைச் சொல்ல நேரம் எடுத்துக்கலாமா சார்?”
“நாளைக்கு ஈவ்னிங்குள்ள சொல்லிருங்க. அதுக்கு மேல டைம் கிடையாது” என்று முடிவாக சொல்ல…
“ஸ்யூர் சார்” என்று அவள் இடம் வந்தவள் தலைக்குக் கைகொடுத்து அமர்ந்துவிட்டாள். ‘அடுத்து என்ன?’ கேள்வி அவளுள்ளே!
நடந்து செல்லும் தொலைவுதான் சூர்யாவின் ஹாஸ்டல் என்பதால், நடந்து செல்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். மெய்ன் ஏரியா என்பதால் எப்பொழுதும் ஒரு பரபரப்பு இருக்கும். ஆதலால் பயமில்லாமல் செல்வாள்.
இரவு ஏழு மணிபோல் வேலை முடித்து நடந்து செல்லும் பொழுது, காலையில் சபரியிடம் பேசிய இடம் வர, ஏதோ ஓர் உணர்வு ‘திரும்பிப் பார்’ என்றது.
‘அவங்க போயிருப்பாங்க. நீ சும்மா இரு’ என்று மனதை அடக்கினாலும் கண்கள் அப்பக்கம் போகப் பார்க்க, அதை அதட்டி நடக்க, திரும்பவும் அந்தப் பக்கமே சென்ற விழிகள் அசையாது அப்படியே நின்றது.
அதே இடத்தில் மடியிலிருந்த கைமேல் தலை வைத்து கவிழ்த்தவாறு அமர்ந்திருந்தான் சபரிநாதன்.
‘இவங்க இங்கயிருந்து போகலையா? ஏன்? என்னைக் கூட்டிப்போகவா? நான்தான் மறுத்துட்டேனே. அப்புறமும் ஏன்? வேண்டாம் சூர்யா. எதையும் பார்க்காமல் நட’ என்று மூளை அறிவுறுத்தியது. நடந்து ஹாஸ்டல் வரை சென்றவள் மனம் கேளாது திரும்பி அவனிருக்கும் இடம் வர, அப்பொழுதும் அவன் நிமிரவில்லை.
சபரியின் அருகில் அமர்ந்தும் எந்தவித அசைவும் இல்லாதிருக்க, ‘என்னவாகிற்று இவங்களுக்கு?’ மனம் பதைக்க, “மச்சான்” என்று தோளில் கை வைத்ததும் சட்டென்று நகர்த்திய கையை, அதே வேகத்தில் சட்டைக் காலரை இறக்கி விட்டு தொட்டுப் பார்க்க அனலடித்தது. “மச்சான் என்னை நிமிர்ந்து பாருங்க? மச்சான்…” என்றாள் கெஞ்சலாய்.
“ம்…” என்ற சத்தம் மட்டுமே முனகலாக வர, மெல்ல தலை நிமிர்ந்தவன் கண்கள் இரத்தச் சிவப்பாயிருந்தது.
“காலையிலிருந்து இங்கதான் இருக்கீங்களா?” தலையசைப்பு மட்டுமே அவனிடமிருந்து கிடைக்க, “எங்க தங்கியிருக்கீங்க?” எனக்கேட்டாள்.
சபரியின் கண்கள் போகுமிடம் பார்க்க, ட்ராலி பேக்கும் அதனுடன் லேப்டாப் பேக்கும் இருந்தது.
“அப்ப காலையிலதான் வந்தீங்களா?”
“ம்…”
“நான் உங்களோட வரலைன்னு சொல்லிட்டுதான போனேன். நீங்க கிளம்பியிருக்கலாம்ல? எதுக்காக இந்தக் காய்ச்சலோட இங்க இருந்தீங்க?”
“உனக்காக!”
“எனக்காகவா? நான் யார் உங்களுக்கு? எனக்காக வந்தாங்களாம்? கல்யாணம் முடிச்சிக் காலமெல்லாம் பார்த்துப்பேன்னு சத்தியம் செய்தவனே எனக்குன்னு இல்ல. நீங்க…” வார்த்தைகள் திக்க…
“உனக்காக மட்டும்!” முடிந்த மட்டும் தன் குரலில் அழுத்தத்தைக் கொண்டு வந்து சொன்னான்.
“நான்தான் வரலன்னு சொல்றேன்ல மச்சான்.”
“நீ வருவ” என்றான் புன்னகையுடன்.
“ஆமா வர்றாங்க. முதல்ல ஹாஸ்பிடல் வாங்க.”
“ம்கூம். நீ வா ஊருக்குப் போகலாம்.”
“நடக்கிறதைப் பேசுங்க. நான் நல்லா இல்லைன்னா கூடப் பரிதாபப்பட்டுக் கூப்பிடுறீங்கன்னு சொல்லலாம். அப்பக்கூட நான் வர்றது கஷ்டம். இப்ப நான் நல்லாதான் இருக்கேன். இந்த நிம்மதியை விட்டுட்டு அங்க வந்து என்ன செய்றது? ப்ச்… இதையெல்லாம் பிறகு பேசிக்கலாம். இப்ப ஹாஸ்பிடல் வர்றீங்க” என்று டேக்ஸி ஒன்றை நிறத்தி அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று உட்கார வைத்து அவளும் அமர்ந்து, “பாய் சாப்! பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல் போங்க” என்றாள் ஹிந்தியில்.
அவளது ஹாஸ்டல் தாண்டி சற்று தொலைவிலிருந்தது அந்த கிளினிக். செக்கப்பிற்காக டாக்டர் முன் அமர்ந்திருக்க சபரியை விட சூர்யாவிற்குதான் அதிக டென்சனானது.
“கூல்மா. நியூ மேரீடா?”
“நஹி டாக்டர்” என்றாள் வேகமாக.
அவளை கேள்வியாய் பார்த்த டாக்டரிடம், “அவள் சொல்றது ரைட் டாக்டர். கொஞ்சம் ஓல்ட் மேரீட்தான்” என்றான் அவருக்கு மட்டும் கேட்குமாறு.
“பார்த்தா தெரியலையே?”
“அதுவா டாக்டர். எங்க தமிழ் சினிமாவுல ஒரு டயலாக் பிரபலம். அதையே கொஞ்சம் மாத்தி சொல்றேன். பார்த்தா தெரியாது… பார்க்கப் பார்க்கத்தான் தெரியும்” என்று சூர்யாவைப் பார்த்தான். அவளுடன் இருப்பதால் ஒரு தைரியம் வந்திருக்க பேச்சும் சரளமானது சபரிக்கு.
“மச்சான் டாக்டர்கிட்ட என்ன பேசிட்டிருக்கீங்க? டாக்டர் முதல்ல செக் பண்ணுங்க.”
“அது உத…” சட்டென்று அவன் வாயில் நுழைந்த தெர்மாமீட்டரைப் பாவமாய்ப் பார்க்க…
“கம்முன்னு உட்காருங்க” என்று மிரட்டினாள்.
[the_ad id=”6605″]
“ஹை ஃபீவர் இருக்கு. எப்பயிருந்து இவருக்கு ஃபீவர்?” என்று சூர்யாவிடம் கேட்க… அவளோ சபரியைப் பார்க்க… “ஈவ்னிங் பைவ்ல இருந்து இருக்கு டாக்டர்” என்றான்.
“அப்பவே ஏன் வரல? இப்பப் பாருங்க ஹை டெம்பரேச்சர்ல இருக்கு. இதுல மருந்து எழுதியிருக்கேன் வாங்கிட்டு வாங்க” என்று அவளை அனுப்பி, வாங்கி வந்ததும் இரண்டு ஊசிகள் சபரிக்குப் போட்டு ட்ரிப்ஸ் ஏற்றியபடி… “மிஸஸ்…” என்று நிறுத்த…
“சபரிநாதன்” என்றான் வேகமாக.
“ஓ… மிஸஸ்.சபரிநாதன்” என்றதும் அவள் மறுக்கப் போக… “இந்த டேப்லட் சாப்பிடுறதுக்கு முன்ன போடணும். இது சாப்பிட்ட பிறகு. அப்பப்ப காட்டன் துணியை தண்ணியில நனைச்சிப் பிழிஞ்சி நெத்தியில பத்துபோட்டு விடுங்க. ப்ளட் டெஸ்ட் பண்ணிக்க காலையில ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க. இப்ப ட்ரிப்ஸ் முடிஞ்சதும் கூட்டிட்டுப் போங்க” என்றார்.
அவரின் மிஸஸை மறந்து, “நைட் இங்க தங்க முடியாதா டாக்டர்?” என கவலையாகக் கேட்க…
“முடியாதுமா. இது க்ளினிக். பெரிய ஹாஸ்பிடல் கிடையாது. இங்க பத்துக்கெல்லாம் க்ளினிக் மூடிருவோம்.”
“ஓ… ஓகே டாக்டர்” என்றாள். ட்ரிப்ஸ் முடிந்து ட்ரீட்மெண்டிற்கு பணம் கொடுத்து வெளியே வர, சபரிக்கோ நிற்க முடியா நிலை. சூர்யாவிற்கோ பிடிக்க முடியா நிலை. “மச்சான் இதுல உட்காருங்க. ரெண்டு பேர் பேக்கும் டாக்டர் ரூம்ல இருக்கு. எடுத்துட்டு வர்றேன்” என்று உட்கார வைத்தாள்.
டாக்டரிடம் பெர்மிஷன் கேட்டு உள்ளே சென்று எடுத்துத் திரும்பும்போது… “மிஸஸ்.சபரிநாதன் கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கோங்க. டெம்பரேச்சர் இன்னும் அதிகமானா ஜன்னி வரவும் சான்ஸ் இருக்கு. அவர் ஒய்ஃப் உங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கில்லைதான். இது என்னோட கடமைமா” என்றார் தன்மையாகவே.
அவர் சொன்ன ஜன்னியில் மனமெல்லாம் பதறித் தவித்ததில், ‘மிஸஸ்’ என்ற வார்த்தை காதில் விழாது போக, “சரிங்க டாக்டர். நான் பார்த்துக்கறேன்” என்று வெளியே வந்து ஆட்டோ பிடிக்க… டிரைவர் “எங்கே போகணும்?” என்றதும்தான்… “மச்சான் உங்களுக்கு இங்க யாரையாவது தெரியுமா?” எனக்கேட்க…
அவனோ இல்லையென்று மறுக்க… “நான் இருக்கிறது லேடீஸ் ஹாஸ்டல் மச்சான். இப்ப என்ன செய்றது? உங்களை யார் இங்க வரச்சொன்னது? இப்பப் பாருங்க…” மனம் தவித்தது அவளுக்கு.
அவளின் தவிப்பில் அவனுக்கொரு சுகம். “லாட்ஜ் போகலாம் டிரைவர். நல்ல லாட்ஜா பார்த்து நிறுத்துங்க” என்றான் சபரி.
“சார் நேத்து அரசியல்ல பெரிய தலை ஒருத்தர் இறந்துட்டார்னு எல்லா இடத்திலும் கலவரம் நடந்தது. இன்னைக்கு சாயங்காலம்தான் அவரை எடுத்தாங்க. இப்ப இந்த ஏரியாவுல எதுவும் இல்லன்னாலும் நிறைய இடங்களை மூடிட்டாங்க. லாட்ஜ்லாம் கிடைக்கவே செய்யாது. ஆட்டோவே ரிஸ்க் எடுத்துதான் ஓட்டிட்டிருக்கேன்” என்று தன் நிலைமையை உணர்த்தினான்.
“பையா ரொம்ப ஃபீவர். டாக்டர் நல்லா பார்த்துக்கலைன்னா ஜன்னி வந்திரும்னு எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்காங்க. இப்ப வெளிய எங்கேயும் படுக்க வைக்க முடியாது. ஒரு ரூம் கிடைச்சா போதும்.”
ஒரு லாட்ஜின் பெயரைச் சொல்லி, “இதான்மா இருக்கு. வசதி கம்மிதான். சம்மதம்னா சொல்லுங்க?” எனக்கேட்க…
“வசதியிருக்காதா? ப்ச்… பார்த்துக்கலாம். அங்கேயே போங்க” என்றாள்.
டிரைவர் சொன்ன விடுதி வர, அவன் மூலமே ரூம் புக் செய்து ஆட்டோவிற்கு பணம் கொடுத்தவள், இரவில் எதாவது அவசரமென்றால் தேவைப்படுமென்று நம்பர் வாங்கி அனுப்பினாள். அந்த அறைக்குள் வந்தவள் பேக்கை ஓரம் வைத்து சுற்றிலும் பார்க்க, ஒரு சின்னக் கட்டில் நடுவிலிருக்க, பாத்ரூம் அட்டாச்டாக ஒன்றிருந்தது. அழுக்குப் படிந்த சுவர்கள் பார்க்கவே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
“மச்சான் ரூம் ரொம்பச் சின்னதாயிருக்கு. வேணும்னா வேற பார்க்கலாமா?”
“அவர் சொன்னதைக் கேட்டல்ல உதயா. எனக்கு இது போதும். நீ ஹாஸ்டல் கிளம்பு.”
“நீ..நீங்க உங்களைப் பார்த்துக்குவீங்களா?”
“சாதாரண காய்ச்சல்தான்மா. அது ஒண்ணும் செய்யாது. நம்ம ஊர்ல பார்க்காததா. நீ போ” என்றான்.
அவன் குரலிலிருந்த நடுக்கம் உடலிலும் தெரிந்தது. இருந்தும் அவனோடு தனியே இருக்கவும் விருப்பமில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாய் நின்றவளைக் கண்டு, “நான் பார்த்துக்குறேன் உதயா. என்னைப்பற்றிக் கவலைப்படாம போ. இந்த மாதிரி இடத்துல நீ வேண்டாம்” என்றான் சற்று உறுதியான குரலில்.
“நான் டிபன் வாங்கித் தர்றேன். சாப்பிட்டு மாத்திரை போட்டதும் கிளம்புறேன் மச்சான். இங்கேயே ஆர்டர் பண்ணிக்கலாமா?”
“இருக்குமா தெரியலையே?”
“கேட்டுப் பார்ப்போம்” என்று ரிசப்ஷனில் விசாரிக்க, பக்கத்தில் சின்ன ஹோட்டல் இருப்பதாக சொல்லவும், வேறு வழியில்லாமல் ஆண்கள் நிறைந்த அந்தக் கடையில் நான்கு சப்பாத்திகள், அதற்கு தொட்டுக்கொள்ள தால் வாங்கி வந்து சபரியைச் சாப்பிடச் சொன்னாள்.
அவனோ அவளை சாப்பிடச் சொல்ல… “நான் ஹாஸ்டல்ல பார்த்துக்குவேன்” என்று இரண்டு சப்பாத்தியும் தாலும் வைத்துக் கொடுக்க… சூர்யாவிற்கு நேரமாகிறது என்பதாலேயே சீக்கிரமே சாப்பிட்டு மாத்திரையும் போட்டான்.
“ஏன் மச்சான் இவ்வளவு அவசரம்? நிதானமா சாப்பிடுங்க.”
“உனக்கு லேட்டாகுதுமா. இங்க நீ ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்.”
“எனக்குப் பயமில்லை மச்சான்.”
“ஆனா, வயசுப் பொண்ணைத் தனியா அனுப்புறதுக்கு எனக்குப் பயமாயிருக்கு.”
“அம்மா சொல்ல வேண்டிய டயலாக்” என்றாள் புன்னகையுடன்.
[the_ad id=”6605″]
“இப்போதைக்கு உன் பக்கத்துல அந்த ஸ்தானத்துல நான்தான் இருக்கேன். நானும் சொல்லலாம்” என்று அவள் கண்பார்த்து சொல்ல…
கண்களில் சின்ன பளிச்சிடல். அதுவும் வந்த செகண்ட் மாற, “என்ன மடக்கிட்டதா நினைப்பா போய்த் தூங்குங்க மச்சான். நான் காலையில வர்றேன்” என்று எழுந்தாள்.
“ம்… குட் நைட். போனதும் போன் பண்ணு. நம்பர் தெரியாதுல்ல” என்று அவள் செல்லைக் கேட்டு வாங்கி தன் செல்லுக்கு கால் செய்து அவளிடம் கொடுத்து அனுப்பினான்.
“ம்… பை” என்று வாசல் செல்ல…
அவள் செல்வதற்காக எதையோ பொறுத்திருந்தவன் வாசல் தாண்டவும், வேகமாக வாஷ்பேஸின் நோக்கிச் சென்று வாந்தியெடுக்க, அச்சத்தம் வெளியே சென்று கொண்டிருந்த சூர்யாவின் காதிலும் விழுந்தது. முதலில் என்னவோ என்று நடக்க ஆரம்பித்தவள், அடுத்தடுத்த ஓங்கரிப்பு சத்தத்தில் நின்று கவனித்தாள். அச்சத்தம் சபரியின் அறையிலிருந்து வருவதை உணர்ந்ததும் வேகமாகச் சென்று பார்க்க, முகத்தில் தண்ணீர் அடித்து சோர்ந்து போய் சுவரில் சாய்ந்து நின்றான்.
“ம..ச்..சா..ன்.!” குரல் திக்கித் திணறி வர அவனை அந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை. அவளே அறியாத அவளின் ஹீரோவாகிற்றே! மனது துடிக்கத்தான் செய்தது.
“நீ இன்னும் போகலையா? போ டைமாகுது” என விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.
“நீங்க இப்படி இருக்கிறப்ப நான் எப்படி மச்சான் போறது?”
“ப்ச்… நீ சரிப்படமாட்ட. முதலில் வெளில வா” என்று தன் உடல்நிலையை மறந்து அவளை இழுத்துச் சென்று ஆட்டோ ஏற்றிவிட்டு அறைக்குள் வந்து கதவை லேசாகச் சாத்தியவன் அதற்குமேல் முடியாது மயங்கிச் சரிந்திருந்தான்.
சென்ற ஆட்டோ அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் திரும்பி லாட்ஜிற்கே வந்தது. அதிலிருந்து இறங்கி வேகமாகச் சென்று கதவைத் திறக்க, பாதிக்கும் மேல் கதவு திறக்காமல் போக எட்டிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
சாய்ந்த வாக்கில் உள்ளே நுழைந்து, “மச்சான்! அச்சோ என்ன இப்படிக் கிடக்குறீங்க? எழுந்திருங்க மச்சான். என்ன செய்யுது?” அவனைத் தூக்க முயற்சித்து முடியாமல் போக ரிசப்ஷன் சென்று அங்கிருந்த பையனை அழைத்து வந்தவள், அவன் உதவியுடன் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தாள். ஏசி இல்லாததால் பேன் ஓடவிட்டு, சுடு தண்ணீர் வாங்கி வந்து முகம் கழுத்து என துடைத்து காட்டன் துணியில் பத்தும் போட்டு, ரூம் சர்வன்டிற்கு நன்றியுரைத்து வாமிட்டால் வந்த நாற்றத்தைப் போக்க வாஷ்பேசின் க்ளீன் செய்தாள்.
சபரியின் பேக்கில் எதாவது வாசனைத் திரவியம் இருக்கிறதா என்று பார்க்க பாடி ஸ்ப்ரே இருக்கக் கண்டவள் அறையைச் சுற்றிலும் அதை அடித்துக் காலி செய்ய, கொஞ்சம் மூச்சு முட்டும் வாசமிருந்த போதும் சுவரில் சாய்ந்தாற்போல் அமர்ந்து கண்மூடினாள்.