‘உண்மைதான். சூர்யோதயா அமைதியானவள்! மென்மையானவள்! இதுவரை அதிர்ந்து பேசியிராதவள்! தன் குடும்பத்திலேயே உரிமையாய் சண்டை போட்டிராதவள்! கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுபவள்! கிடைக்காத ஒன்றை நினைத்ததில்லை! ஆசை என்ற ஒன்று இருக்கிறதா என்பதை அறியாதவள்! முக்கியமாக கோபம் கொள்ளத் தெரியாதவள்!’
சிறு வயதிலிருந்து பெத்தவன் செய்யும் செயல்களைக் கண்டு பிடிக்காமலும், நேரில் கேட்க முடியாமலும் திணறியது அதிகம். சில ஆண்களின் தொடுகையைத் தட்டிவிட்டு ஓட முடியா கோழைத்தனம். விக்னேஷின் தன் கேரக்டர் மீதான பழிச்சொல் தீர்க்க இயலாதது. இப்படி ஒவ்வொன்றாய் அவளை விரட்டி விரட்டி இதோ அதை விரட்ட ஆத்திரம், கோபம், ரௌத்திரம் என்ற குணங்களைக் கையில் எடுத்திருக்கிறாள்.
பெண் கான்ஸ்டபிள் அவளைத் தனியே இழுக்க… “விடுங்க மேம். இவன் எத்தனை பொண்ணு பின்னாடி சுத்தினாலும் பணம் இருக்கிறதால யோக்யனாகிடுறான். அதே ஒரு பையனோட பொண்ணு இருந்தா அவள் விபச்சாரியா? இவனுங்க மாதிரி ஆட்கள் இல்லன்னா விபச்சாரம்னு ஒண்ணு எப்படி மேம் உருவாகும்.” அவரிடமிருந்து விலக முயற்சித்தபடி, “எவ்வளவு தைரியமிருந்தா மொழி தெரியாத இடத்துல வந்து பகை தீர்ப்ப? என்ன பண்ணிட்டேன்டா உன்னை?” என்று எகிறிக் கொண்டிருந்தாள்.
“உதயா விடு அவனை.”
“இல்ல மச்சான். அவன்…”
“அவன் எங்கேயும் போயிரலை. போகவும் முடியாது. இனி அவங்க விசாரிக்கட்டும். நீ அமைதியாயிரு” என்ற சபரியின் வார்த்தைக்கு மதிப்பளித்து, கோபத்தை வாயில் அடக்கி, கோபத்தைக் கண்களில் காட்டிக் கொண்டிருந்தாள் சூர்யோதயா.
அதுவரை வேடிக்கை பார்த்திருந்த இன்ஸ்பெக்டர், “யார் சொல்லிச் செய்த?” என்று முத்துகுமாரை அடிக்க ஆரம்பிக்க…
“ஐயோ! வலிக்குது சார்” என கத்தினாலும், ‘டேய்! இன்ஸ்பெக்டர் உன் ஆளுன்னு சொன்ன. என்கிட்ட பொய்யா சொன்ன? இப்படி என்னைச் சிக்க வச்சிட்டியேடா. என்னைச் சிக்க வச்சிட்டு நீ நிம்மதியா இருப்பியா? இரு உன்னை மாட்டிவிடுறேன்’ என்று மனதிற்குள் புலம்பியபடி, “சார் சொல்லிடுறேன் சார். ஐயோ அடிக்காதீங்க சார்.” கெஞ்சலில் இறங்கினான்.
“அப்ப சொல்லு?”
“அவன் பெயர் விக்னேஷ்” என்றதும் யார் என்னவென்ற விவரம் கேட்ட இன்ஸ்பெக்டரிடம், மும்பையில் ரெட்லைட் ஏரியா பற்றி ஃபரண்ட் தன்னை அனுப்பி வைத்தது. போனில் பேசிய விக்னேஷ் சூர்யா மும்பையில் இருப்பதாகச் சொல்லி அவளிடம் அனுப்பியது வரை சொன்னவன், “இன்னைக்கு லாட்ஜ்ல இவங்களைப் பார்த்ததா அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இப்படி ஒரு ப்ளான் சொல்லி இவங்களை மாட்ட வச்சான். வர்ற போலீஸ் உனக்கு ஆதரவா இருப்பாங்கன்னும் சொல்லி, இதுல அவன் பெயர் வரக்கூடாது சொன்னான். அவன்தான் சூர்யா புருஷன்றது எனக்கு நேத்து நைட்தான் சார் தெரியும்” என மொத்தமாக உளறினான்.
“இவனைத் தூக்கி உள்ள போடுங்க” என்றதும் அவனை செல்லுக்குள் போடப்போவதை உணர்ந்து, “சார் என்ன சார் செல்லுல போடுறீங்க? நான்தான் உண்மையை சொல்லிட்டேனே…”
கத்திக் கொண்டிருந்தவனைக் கண்டுகொள்ளாது, “நீங்க இதுல சைன் பண்ணிட்டுக் கிளம்புங்க” என்று ஒரு பேப்பரில் இருவரிடமும் கையெழுத்து வாங்கி அவர்களை அனுப்பினார்.
லாட்ஜ் பையனுக்கு நன்றி சொல்லி, “ஸ்டேஷனிலிருந்து எப்படி வருவாய்?” எனக்கேட்க… “நீங்க போங்க சார். என்னை இன்னும் கொஞ்ச நேரத்துல வெளில எடுத்திருவாங்க” என்றான்.
டாக்டருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்து, அந்த ஆட்டோவிலேயே லாட்ஜ் சென்று அவனது பேக்குகளை எடுத்து சூர்யாவின் விடுதி எங்கென்று கேட்டு அங்கு வர, சூர்யா இறங்கியதும்…
[the_ad id=”6605″]
“இது என்னோட கார்ட். போன் நம்பரோட இருக்கு. அதுல என்னோட பெர்சனல் நம்பரும் இருக்கு. பணம் தந்து உன்னைச் சங்கடப்படுத்த விரும்பல. நீ எப்ப வந்தாலும் என் வீட்டுக்கதவும், என் இதயக்கதவும் திறந்தேயிருக்கும். எத்தனை வருஷமானாலும்…” என்று அழுத்திச் சொல்ல…
நிமிர்ந்து அவன் கண்களைப் பார்க்க, அவன் விழி சொன்ன மொழியை மொழி பெயர்க்க முடியாமல் திணறி கண்களை வேறுபுறம் திருப்பினாள்.
“இல்லன்னா… ஏற்கனவே கல்யாணமானவன் வேண்டாம்னு வேற யாரையாவது செலக்ட் பண்ணினாலும் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” என நிறுத்தி அவள் முகம் பார்த்து, “அப்படிச் சொல்வேன்னு கனவுல கூட நினைச்சிராத” என்றதும் சூர்யாவிற்கு சட்டென்று சிரிப்பு எழுந்தது.
“சும்மா காமெடி பண்ணாம கிளம்புங்க மச்சான்” என்றாள் கேலியாக.
“ஏய் வெள்ளச்சி! நிஜமாதான் சொல்றேன். எப்பவும் உன் அப்பா இனிடியலை போடமாட்டள்ல. இனிமேல் சூர்யோதயா சபரிநாதன்னு தைரியமா போடு. ஏன்டின்னு நான் கேட்டால்தான் உண்டு. ஓய்! முறைக்காத… நான் கேட்கமாட்டேன்னு சொல்ல வந்தேன்.”
“நீங்க விளையாட்டா சொன்னாலும், தீவிரமா சொன்னாலும் எனக்கு பி மட்டும் போதும். பி ஃபார் பூவரசி. அப்பா அம்மா எல்லாமே என் அம்மாதான். சூர்யோதயா எப்பவும் சூர்யன் மாதிரி தனிச்சிதான் இருப்பா” என்று அழுத்தி சொன்னாள்.
“அப்ப உதயா?” என்றவன், “சூர்யனோட ரிப்ளக்ஷன்தான் சந்திரனாம். சந்திரன்னு ஒருத்தர் இருக்கும்போது சூர்யா எப்படி தனியாளாவாள். நிறைய படம் பார்த்து கெட்டுப் போயிருக்க. ரியாலிட்டிக்கு வா வெள்ளச்சி” என சீண்ட…
“உங்களை… சே… வேலையைப் பார்த்துட்டுப் போங்க” என்று கடுப்பைக் காட்டினாலும், ‘போயிட்டு போன் பண்ணுங்க. காத்திருப்பேன்’ என்றொரு மனம் நினைக்க அது வாய் வார்த்தையாய் வரவில்லை.
சபரி அவளை உணர்ந்தானோ! அவனுள்ளும் அந்த சில பொய்கள் தித்திப்பாய் இனிக்கத்தான் செய்கிறது.
“கண்டிப்பா போனதும் போன் பண்றேன்.”
‘தெரிஞ்சிருச்சா?’ என அவள் பார்வையிருக்க…
சட்டென புன்னகை உதிர்த்து கண்ணடிக்க… அவள் ‘ஆ’ வென்று பாhத்திருக்கையில்… “என்ன ஒண்ணு அத்தைக்கு என்ன பதில் சொல்றது தெரியல? ரொம்ப நம்பிக்கை கொடுத்துட்டு வந்தேன். ப்ச்… அவங்களை வேற சமாளிக்கணும். உன் அண்ணன்காரன் அதுக்கும் மேல படுத்துவான். உன் பொண்ணு, எங்கம்மா வர்றாங்கன்னு உன் வரவிற்காக வாசல்லயே உட்கார்ந்துட்டாளாம்” என்று சடைப்பாகவே சொன்னான்.
‘உன் பொண்ணா? ஹரிணி என் பொண்ணா? இல்லை. இந்த சபரி மச்சான் என்னை அங்க வரவழைக்க ஏதேதோ உளர்றாங்க.’
“நீ நம்பலைன்றது உன் பார்வையிலயே தெரியுது” என்று தன் செல்போன் எடுத்து அதில் ஒரு வீடியோவை ஓடவிட்டான்.
“அம்மா சீக்கிரமா வாங்க. நான் தினமும் உங்களுக்காக காத்திருக்கேன். எனக்கு உங்களைப் பார்க்கணும் போலிருக்கு. நீங்க அந்த வீட்ல இருக்காதீங்க. அந்த விக்கி அங்கிளை எனக்குப் பிடிக்கல. நீங்க அப்பாகிட்டப் பேசும்போது உங்களை முறைச்சிப் பார்த்தார் தெரியுமா? எனக்குப் பயமா இருந்ததா அதான் சொல்லலை. நீங்க என்னுடைய அம்மா! என்னோடதான் இருக்கணும். ஐ லவ் யூ அம்மா” என்றதுடன் வீடியோ முடிவடைய விக்கித்து நின்றிருந்தாள் சூர்யா.
“இது நாங்க சொல்லிக் கொடுத்துப் பேசிய வசனமில்லை உதயா. அவள் மனசுல பதிஞ்சு போன உறவு. உன் கல்யாணத்துக்குப் பிறகு முதல்முறையா அத்தை உன்கிட்ட பேசும்போதுதான் உன்னை அம்மா சொல்றதைக் கவனிச்சேன். எனக்கு பயங்கர ஷாக். அத்தைகிட்ட கேட்டப்ப, ஏன்? எப்படி தெரியலைடா. உன் பொண்ணு கூப்பிட்டா. வெள்ளச்சியும் மறுக்காமல் ஏத்துக்கிட்டா சொன்னாங்க.”
“தப்பில்லையா அத்தை கேட்டேன்.”
“எனக்குத் தப்பாப் படலைடா. அவள் மனசுல ஏதோ தோணியிருக்கு அதனால கூப்பிடுறா. அதான் அவளுக்குக் கல்யாணமாகிருச்சே. இதையெல்லாம் யோசிக்காதன்னு சொல்லிட்டாங்க. நேத்தைக்கும் இன்னைக்கு நடந்ததுக்கும்; முடிச்சிப் போட்டிராத. ஆனா, இப்ப நான் முடிச்சிப் போடுறதா முடிவு பண்ணியிருக்கேன்.”
“என்னது?”
“அட மூட்டை முடிச்சைக் கட்டிட்டு ஊருக்குப் போறதைச் சொன்னேன்மா. நீ என்ன நினைச்ச?” என்று கண்ணால் பதில் கேட்டான்.
“நானா? நான் எதுவும் நினைக்கலையே. அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க.”
“சரி கிளம்புறேன்” எனவும் ஆட்டோவை எடுக்க ஆரம்பிக்க, “பையா ஏக் மினிட் ருக்யே” என்றவன் ஆட்டோவில் இருந்தபடியே, “ஓய் வெள்ளச்சி! ஏமாத்திட்டு வேற எங்கயாவது போகலாம்னு நினைச்சிராத. மிஸஸ்.சூர்யோதயா சபரிநாதன் மிஸ்ஸிங்னு விளம்பரம் குடுத்திருவேன். அப்படி செய்தா இப்ப நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கிற பந்தத்தை உலகமே பார்க்கும்.”
“உங்க விளையாட்டுக்கு அளவேயில்லையா?”
[the_ad id=”6605″]
“அதை நாம சேர்ந்து விளையாடும்போது அளந்துக்கலாம்.”
“உங்களை எவ்வளவு நல்லவர்னு நினைச்சேன். நான் இப்படி இருக்கிறதால நீங்க கூட உரசிப்பார்க்க நினைக்கிறீங்கள்ல?” என்று கண்கலங்க…
சட்டென்று ஆட்டோவிலிருந்து இறங்கி அவளிடம் வர, மிரட்சியாய் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
“என்னை என்ன பெண் பித்தன்னு நினைச்சியா? உரசிப்பார்க்க நினைக்கிறேனாம்.. உரசிப்பார்க்க. நான் இருக்கிற இடத்தில் பெண்கள் இல்லாமலா இங்க வந்தேன்? வர்ற கோபத்துக்கு…” கையை இறுக மூடித் தன்னை அடக்கி சுற்றிலும் பார்வையிட்டவன், அவள் எதிர்பாரா நேரத்தில் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, “கல்யாணம் கட்டிக்க நினைக்கிறேன். உரசிப்பார்க்கக் கிடையாது. சீக்கிரமே ராமேஸ்வரம் வந்து சேர்” என்று காதோரம் சொல்லி வேகமாக ஆட்டோவில் ஏறிக் கிளம்பினான்.
அவளிடம் அதிர்வு… அதிர்வு மட்டுமே! நரம்பில் பிடித்த மின்சாரம் அவளின் உடலிலும் உள்ளத்திலும். அவ்வணைப்பில் உடலில் ஒருவித கூச்சமும், யாரும் பாhத்திருக்கக் கூடாதே என்ற பயமும் இருந்தது.
‘சபரி மச்சானா? ஏன் இப்படி நடந்துக்கிட்டாங்க? கட்டிக்க நினைக்கிறேன் உரசிப்பார்க்க இல்லைன்னு சொல்றாங்க. ஏன்? என்னைக் கல்யாணம் பண்ணவா? நான் எப்படி அவங்களை? என்னால் என்ன பிரயோஜனம்? விக்னேஷ் சொன்ன மாதிரி நானொரு மரக்கட்டை. என்னைப் போய்… இல்ல இது நடக்காது. நடக்கவும் கூடாது. ஊருல பொண்ணுக்கா பஞ்சம்னு சொல்லிட்டு, என்னை ஏன் மச்சான்..?’
மனம் வருந்த அப்படியே தன்னறைக்கு வந்தவள் அனைத்தையும் மறக்க எண்ணி படுத்துக் கண்மூட, ‘கல்யாணம் கட்டிக்க நினைக்கிறேன்’ என்று சபரி தன் கன்னத்தில் முத்தமிட்டது கண்முன் ஓட, பட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சபரி மச்சான் தொட்டதும் என் உடல் நெகிழ்ந்ததோ! விக்னேஷின் உரிமை அணைப்பில் வெறும் ஜடமாக இருந்த உடல், சபரி மச்சானின் அணைப்பில் எப்படி..? வெட்கம் நாணம் வரவில்லையென்று சொன்னவள் சபரியின் ஒவ்வொரு செயலிலும் உருகிப் போவதென்ன? விக்னேஷ் சொன்னாற்போல் நான் தப்பானவளா? விபச்சாரி என்பதை வார்த்தையில் சொன்னதோடில்லாமல் செயலிலும் காட்டிவிட்டானே அந்த விக்னேஷ். இரண்டு மணி நேரத்தில் எத்தனை அசிங்கங்கள், அவமானங்கள்.’
கண்டதையும் நினைத்த மனம் அதிலிருந்து விலக எண்ணியவள், ஆஃபீஸில் கொடுத்த இடமாறுதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, மறுநாளே தன் சம்மதத்தையும் தெரிவித்தாள்.
மும்பையிலிருந்து சென்னை வந்த சபரி நேராக விக்னேஷின் வீட்டைச் சென்றடைந்தான். அந்நேரம் அவன் வீட்டிலில்லாமல் போக, அங்கிருந்தவர்களிடம் எச்சரித்துவிட்டு வந்திருந்தான்.
விக்னேஷ் மீது கேஸ் எதுவும் பதியவில்லை. ஏனெனில் சூர்யாவிற்கு இன்னும் அவமானத்தைக் கொடுக்க விரும்பவில்லை சபரி. முத்துகுமாரை வார்ன் செய்த அனுப்பிவிடச் சொல்லியிருந்தான். விக்னேஷ் கையில் கிடைத்தால் அவன் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பதான கோபம் சபரியினுள்.
[the_ad id=”6605″]
அதிலும் ப்ளைட் விட்டு இறங்கி செல் ஆன் செய்திருக்க, இசக்கி மற்றும் ரவியிடமிருந்து ஏகப்பட்ட கால்கள் வந்திருந்தது. என்னவென்று போன் செய்தால், மும்பையில் நடந்தது பூவரசிக்குத் தெரிந்து, ‘என் பொண்ணு சபரியுடன் மும்பையில் எப்படி?’ எனக் கேட்டு அழுததைச் சொல்ல…
‘அவருக்கு எப்படி? ஒருவேளை இதுவும் விக்னேஷின் கைங்கர்யம்தானோ? என்ன மனிதன் அவன்’ என்று அவனை வசைபாட… “நான் பார்த்துக்கறேன் அத்தை. அவங்க பொண்ணு தப்புப் பண்ணமாட்டாள்னு நம்புறாங்கள்ல?”
“ஆமாடா.”
“அப்பக் கவலையில்ல அத்தை. நான் அவங்ககிட்டப் பேசிக்குறேன்.”
“அவளோட அண்ணன் மும்பை போறேன்னு நிற்கிறானாம்டா. அநேகமா கிளம்பியிருவான் நினைக்கிறேன்.”
“அப்படியாவது இங்க வந்தா சரிதான அத்தை. நான் வந்து பேசுறேன்.” போனைக் கட் செய்து சூர்யாவை அழைக்க, சில பல அழைப்புகளைத் தாண்டி போனை எடுத்தாள்.
“நான் சென்னை வந்தாச்சி. சீக்கிரமே ராமேஸ்வரம் போயிருவேன். நீயும் வந்து சேரு. காத்திருக்கேன் என் காதலியே” என கட் செய்து, அவளின் முகபாவம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தவன் அதை ரசித்துப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.