13
கேரள மாநிலம் பசுமையுடன் கூடிய மனதிற்கு இதமான நெருக்கமான உணர்வு ஏற்படக்கூடிய இடத்திற்கு சூர்யோதயா வந்து இரண்டு மாதங்களாகிறது. ஓரளவு அங்குள்ள மொழி பழக்கவழக்கங்கள் பிடிபட்டிருந்தது. கேரள பிரபலங்கள் அதிகமுள்ள இடத்தினருகே இருந்தது அவள் வேலை செய்யும் ஃபேஷன் வேர்ல்ட்!
திருமணத்தின் போது போட்டிருந்த டிசைனிங் தங்கக் கம்மலும், சடங்கின்போது இசக்கி போட்ட செயினும், வலது கையில் கருப்பு நிறக் கயிறும், இடது கையில் சபரி கிஃப்ட் செய்திருந்த விலை அதிகமுள்ள வாட்ச். இவை மட்டுமே அவளின் அணிகலனாக இருந்தது.
சென்னையில் இருந்த வரை சபரி தந்த கிப்ட் என்னவென்று பார்த்ததில்லை. டைவர்ஸ் கேட்டு சூர்யாவை ஹாஸ்பிடலிலேயே விட்டு வந்த விக்னேஷ், வீட்டிலுள்ள அவளின் பொருட்களை மட்டும் எடுத்து ஹாஸ்பிடலில் கொடுத்து அவளிடம் ஒப்படைக்கச் சொன்னதில் இருந்தது இந்த கிஃப்டும், இசக்கி திருமணத்தின் போது போட்ட நெக்லஸ{ம்! மும்பையில் வேலைக்குச் சென்ற பொழுது வாட்ச் அவசியம் என்பதை உணர்ந்ததால், சபரியின் கிஃப்டை எடுத்துக் கொண்டாள்.
“என்ன சூர்யா ரொம்ப நிதானமா வர்ற மாதிரியிருக்கு?” பில்லிங் செக்ஷன் ஹெட் கேட்க…
“கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு மெதுவா நடந்து வர்றேன் சேட்டா. ட்ரஸ் மாடல்ஸ் பார்த்தேன். சிலது துணி நல்லாயிருக்கு மாடல் சரியில்லை. மாடல் நல்லாயிருந்தா கலர்ஸ் மேட்சிங் சரியில்லை.”
“வேடிக்கை கூட வேலையை வச்சிதானா?”
“டைம் பாஸாகணுமே சேட்டா. அதுவும் பிரயோஜனமா இருக்கணுமே. ஸ்ரீகர் சார் வந்தாச்சா?”
“உன் பின்னாடிதான் நிற்கிறார்” எனவும், ‘முன்னாடியே சொல்லியிருக்கலாமே?’ என கண்ணால் திட்டி முறைத்து வேகமாகப் பின்னால் பார்த்து, “குட் மார்னிங் சார்” என்றாள்.
“குட் மார்னிங் சூர்யா.”
“சாரி சார் நீங்க வந்ததைக் கவனிக்கலை.”
“அதனாலென்னமா… உன் தொழில் பற்றிய கமண்டை ரசனையா சொன்ன. நம்ம மைண்ட் செட் எப்படியிருக்கோ அதைக் கொண்டுதான் நம் கண் பார்க்கும். எனி நியூ ஐடியாஸ்?” அவளுடன் கேட்டபடியே உள்ளே செல்ல…
“இருக்கு சார். சாம்பிள் ஒண்ணு ரெடி பண்ணித் தர்றேன். பார்த்துட்டு சரியாயிருக்கா, இல்ல சேஞ்ச் பண்ணனுமா சொல்லுங்க?”
“எவ்வளவு நாளாகும்?”
“இன்னும் த்ரீ டேஸ்குள்ள சார்.”
“குட். உன் கம்ப்யூட்டர் டிசைனிங் படிப்பு எப்படிப் போகுது. கரஸ்ல டிகிரி வேற பண்றல்ல?”
[the_ad id=”6605″]
“எல்லாம் உங்களோட ஆலோசனைப்படிதான் சார். கம்ப்யூட்டர் ஏற்கனவே நாலு மாசம் மும்பையில முடிச்சிட்டதால, இங்க அதைத் தொடர்றது பெருசா வித்தியாசம் தெரியல. டிகிரிக்கு செமினார் க்ளாஸ் எங்கன்னு விசாரிக்கணும் சார்.”
“அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல. நெட்ல போட்டுப் பார்த்தா எல்லாம் தெரியப்போகுது. கைக்குள்ள உலகத்தை வச்சிட்டு வெளில ஏன்மா தேடுற?” என்றார் புன்னகையுடன்.
“சாரி சார். தேங்க்யூ.”
“எதுக்குமா?”
“எல்லாத்துக்கும் சார். எனக்கு எல்லா விஷயத்திலும் முழு ஆதரவு கொடுத்திருக்கீங்க. இந்தளவு வெளிப்படையா பேசுறது நானான்ற அளவு தன்னம்பிக்கையை, பக்குவத்தைக் கொடுத்திருக்கீங்க சார்.”
“திறமை உள்ளவங்களை என்கரேஜ் பண்றோம்னா அதுக்கான சுயநலமும் எங்களுக்கு இருக்கே சூர்யா. உன்னுடைய உழைப்பு எங்க பேஷன் வேர்ல்ட்கு ஆத்மார்த்தமா கிடைக்கும்ன்ற நம்பிக்கைதான்.”
“கண்டிப்பா சார். என்னோட பெஸ்டைக் கொடுக்குறேன்” என்றாள் உறுதியுடன்.
இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு வந்தவள் வீட்டைப் பெருக்கி, வாங்கி வந்திருந்த தோசை மாவில் மெல்லிசாக மூன்று தோசைகள் ஊற்றி எடுத்துக் கொண்டாள். அதற்கு தொட்டுக்கொள்ள, பூண்டு இடித்து மிளகாய்த் தூளும், உப்பும் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு ஸ்பூனில் மிக்ஸ் செய்து, கூகுளில் ஆடை டிசைன் பார்த்தபடி சாப்பிட… முடிந்ததும் படிக்க புத்தகங்களைத் தூக்கி உட்கார்ந்துவிட்டாள்.
அனைத்தும் ஆங்கிலப் பதிப்பாக இருக்க, அர்த்தம் தேட டிக்ஷனரியும் ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகமும் கொண்டு தன் சிறு சிறு சந்தேகங்களைப் போக்கி, சிலவற்றிற்கு கூகுளின் உதவியையும் நாடுகிறாள். படிப்பு.. படிப்பு.. படிப்பு மட்டுமே அவளிடம். தன் வீட்டில் அன்று சூழ்நிலையால் படிக்க முடியாததை, இப்போதைய தன் தனிமையில் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
அதனாலயே ஸ்ரீகர் ஹாஸ்டல் சேர்த்து விடுகிறேன் என்றதற்கு, தன் படிப்பு வேலை அனைத்திற்கும் வீடுதான் சரிவரும் என்றுவிட… எந்நேரமும் ஆட்கள் நடமாட்டமுள்ள ஏரியாவில் ஒரு பெட்ரூம் ஹால் கிச்சன் உள்ள வீடு பிடித்துக் கொடுத்ததோடு, வீட்டிற்கு அட்வான்ஸ் அவளைப் பின்னர் திருப்பித் தரச்சொல்லி அவரே கொடுத்தார். ஹாலில் ஒரு தையல் மிஷினும் (சிங்கர்), பவர் மிஷினும் கிடந்தது. சுற்றிலும் ஹேங்கரில் அவள் தைத்த மாடல் ஆடைகளும் காட்சியளித்தது.
யாரையும் எதையும் யோசிக்காத நிம்மதியான வாழ்வு. தாயின் நினைவு வரும்போதெல்லாம் சற்று நேரம் அமைதியாக யோகா செய்து விரட்டியடிப்பாள். தன் பின்னால் வரும் ஆண்களை எப்பொழுதும் போல் கண்டுகொள்வதில்லை. ஆதலால் சில நாள் சுற்றி இது வேலைக்காகாது என செல்பவர்கள் அதிகமாயினர். அவர்கள் கொடுக்கும் திமிர் பிடித்தவள் பட்டம் கூடத் தித்திப்பாகியது. அந்தப் பட்டம் ‘நான் அப்படித்தான்டா’ என உடலிலும் ஒருவித நிமிர்வைக் கொடுத்தது எனலாம்.
அவளது கம்ப்யூட்டர் கோர்ஸ் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை. அது முடித்து வீட்டிற்கு வந்து சாப்பிட எதாவது செய்து சாப்பிட்டுக் கிளம்பிவிடுவாள். மதிய உணவு ஸ்ரீகர் பொறுப்பு.
படித்துக் கொண்டிருந்தவளுக்குத் தூக்கம் வர, அதைக் கலைக்கவென்று அன்று தோன்றிய கற்பனையைத் துணியில் உருவாக்க பாதி வேலையிலேயே ஓரளவு திருப்தி எழவும் அதை ஓரம்கட்டி, ஒருவர் படுக்கக்கூடிய சின்ன பெட்டை எடுத்து தரையில் போட்டு, அதன்மேல் தலையணை வைத்து பெட்ஷீட்டை எடுத்து விரித்து அமர்ந்தவள், “ஓம் முருகா!” என மூன்று முறை உச்சரித்து, “நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கிறேன். எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக்குடு முருகா” என மனதார வேண்டி படுத்ததும் உறங்கினாள்.
“என்னம்மா தூங்கலையா?”
[the_ad id=”6605″]
“தூக்கம் வரலைடா ராமு.
“அவளையே நினைச்சிட்டு இருக்கீங்களா? விடுங்கம்மா அவளா வர்றவரை காத்திருக்கலாம்.”
“ஒரே பொண்ணுடா அவள். பொம்பளைப் புள்ளைய நல்லவன்னு ஒருத்தனை நம்பிக் கட்டிக்கொடுத்து, இப்ப அவளே எங்கயிருக்காள்னு தெரியாம இருக்கோம். கூடப்பிறந்த உங்க கல்யாணத்துக்குக் கூட என் பொண்ணு இல்லையே! என்னை மாதிரியே நாலாவதா பிறந்து, இப்படி நாதியில்லாதவள் மாதிரி எங்க இருக்காள்னே தெரியலையே” என்று அழுதவர், “ஏன் ராமு? இன்னொரு நேரம் மும்பைக்கு போய்ப் பார்த்துட்டு வர்றியா?” என்றார்.
“அம்மா சூர்யா அங்க இல்ல. வேற எங்கேயோ வேலைக்குப் போயிட்டா. அவளுக்கு உலகம் புரிஞ்சிருச்சிமா. இனிமேல் அவளே அவளைப் பார்த்துப்பா” என்று தாய்க்குப் புரியவைக்க முயன்றான்.
“சபரிக்கு அவளைப்பற்றி எதாவது தெரியுமா கேட்டியா?”
“அவரும் நம்மைப் போலதான் அவளைத் தேடிட்டிருக்கார்மா.”
“முதல்லயே இசக்கி என்கிட்ட கேட்டிருந்தா சபரிக்கே குடுத்திருப்பேன். என் பொண்ணு கண்முன்ன இருந்திருப்பா. யாரோ வந்து கேட்டாங்கன்னு குடுத்து அவள் வாழ்க்கையை பாழ் பண்ணிட்டேனே” என்று சேலைத்தலைப்பால் வாயை மூடி அழுதார்.
‘அப்படி இசக்கி சித்தி கேட்டிருந்தாலும் இரண்டாவது கல்யாணமென்று தான் சம்மதித்திருக்க மாட்டோமென்று ராமனுக்குத் தோன்றியது. அதுதான் ஒரு அண்ணனின் யதார்த்த மனது. இன்றைய சூழ்நிலை வேறல்லவா! அனைத்தையும் மாற்றி யோசிக்கிறது.’ தாயை முதலில் சமாதானம் பண்ண எண்ணி, “அதனால என்னம்மா… அவள் கிடைச்சிட்டா சபரி மச்சானுக்கே கொடுத்திரலாம் “என்றான்.
“அவள் சம்மதிப்பாளா?”
“வாழ்க்கையில பெரிய அடிபட்டிருக்காள்மா. சம்மதிக்கிறது ரொம்பவே கஷ்டம்தான். முதல்ல இருக்கிற இடம் தெரியட்டும் பார்க்கலாம்.”
“பரிமளா தூங்கியாச்சா?”
“அவள் அப்பவே தூங்கிட்டா. கண்டதையும் யோசிக்காம படுத்துத் தூங்குங்க. வர வர உங்க ரெண்டாவது பையன் பண்ற அட்டகாசம் வேற பொறுக்கல.”
“பேசாம அவனைத் தனியே விட்டுறேன்டா. பொண்டாட்டியைக் காப்பாத்தவாவது வேலைக்குப் போவான்ல?”
“ஆமா போறான். அப்படியே உங்க புருஷனை ஜெராக்ஸ் எடுத்திருக்கான். என்ன பொண்ணுங்க சகவாசமில்லாம ஒரே பொண்ணோட முடிஞ்சிருச்சி. வேலை வெட்டியில்லை. கல்யாணம் முடிச்சாச்சி. அவளாவது பொறுப்பா இருக்காளா? நமக்குன்னு வந்து சேருதுங்க பாருங்க” என்று தலையிலடித்துக் கொண்டான்.
“அவன் தலையெழுத்து நாம ஒண்ணும் செய்ய முடியாது. சின்னவனாவது போன் பண்ணினானா?”
“எப்பவாவது பண்றான். ஏன்டான்னா, தீவிரமா படிச்சிட்டிருக்கேன்னு சொல்றான். உண்மை என்னவோ யாருக்குத் தெரியும். சரி நீங்க உள்ள போய் தூங்குங்க” என்று தன்னறைக்குச் சென்றான்.
“சபரி” என்ற அழைப்பில் திரும்பாமலேயே, “சொல்லுங்கம்மா?” என்றான்.
“மணி ரெண்டாகுது தூங்காம நிற்கிற?”
‘மனசும் ரெண்டாதான்மா இருக்கு.’ நினைத்ததை வெளியே சொல்லாமல், “தூக்கம் வந்தா தூங்குறேன். நீங்க எதுக்கு இப்ப எழுந்து வந்தீங்க? சுகர் மாத்திரை போட்டீங்கதானே?”
“அ..அது மறந்துட்டேன்டா.”
“உங்க உடம்பை நீங்கதான்மா பார்த்துக்கணும். நான் எப்பவாவது வர்றவன். நீங்க மாத்திரை போட்டுட்டேன்னு சொல்றதை நம்பிருவேன். நீங்க போட்டீங்களா? பொய் சொல்றீங்களான்னு உங்களுக்குத்தான் தெரியும். இப்ப இல்லன்னாலும் கொஞ்ச நாள் கழிச்சி பாப்பாவை நீங்கதான் பார்த்துக்கணும்.”
“அதுக்குதான் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன். நீதான் கேட்குறதில்ல.”
“அம்மா உங்க மருமகள் கிடைச்சதும் கூட்டிட்டு வர்றேன். தாராளமா பண்ணி வைங்க.”
“இப்படிச் சொல்லியே மாசக்கணக்காகுது. அவள் எங்கயிருக்காள்னு தெரியாம எப்படிடா கூட்டிட்டு வருவ? அதுக்குள்ள உனக்கு வயசாகிரும் சபரி. பொண்ணு பார்க்கவா?” என்றவர் கண்கள் ஆசையில் பளபளத்தது.
“ஏற்கனவே உங்க அவசரத்துக்கு முடிச்சி பட்டதெல்லாம் போதும்மா. இன்னொரு அவசரம் வேண்டாம். அதிலும் உதயா மட்டும்தான் என் மனைவியா வர முடியும். எத்தனை வயசானாலும் காத்திருக்கேன்.”
“ஹ்க்கும் அப்படி என்னதான் இருக்கோ அந்தப் பொண்ணுகிட்ட? சொல்றது எதையும் கேட்கமாட்டேன்ற?”
“பொண்ணுக்கு உண்டான எல்லா தகுதியும் இருக்குதும்மா.”
“ஊர் உலகத்துல அவள் ஒருத்திதான் தகுதியோட இருக்காள்னு இல்லடா. நிறைய பொண்ணுங்க இருக்காங்க.”
“உங்க அண்ணன் பொண்ணு மாதிரியா?” கோபத்தில் பட்டென்று கேட்டவன் அர்த்த ராத்திரியில் தாயை மேலும் நோகடிக்க மனமில்லாது, “ப்ச்… போய்த் தூங்குங்க” என்றான்.
“டேய் தம்பி!”
“என்னம்மா பிரச்சனை உங்களுக்கு?”
“அ..அது ஒரு பொண்ணு…” மகனின் கோபப்பார்வையில், “மூக்கு முழியுமா லட்சணமா இருப்பாள்டா. நல்ல வசதி! நல்ல குணம்! அப்புறம்…”
“அப்புறம்?” கேலியை மறைக்காது கேட்டான்.
“ஜாதகம் பலமா சேர்ந்திருக்கு. நீ பொண்ணைப் பார்த்துட்டு முடிவு சொல்லு.”
“ஓ… ஜாதகம் பார்க்கிற அளவுக்குப் போயாச்சா. குட்! அப்ப நான் கடைசிவரை நிம்மதியா இருக்கக்கூடாது. அப்படித்தானம்மா? சப்போஸ் உதயா வந்தாலும் அவளை முழு மனசோட ஏத்துக்க மாட்டீங்க?”
மகன் கோபப்படுவான் என்று தெரிந்தே, “அ..அவள் ஏற்கனவே கல்யாணமானவள்” என்றார்.
“அப்ப நான் யாரும்மா?” தாயைவிட வேகமாக வந்தன வார்த்தைகள். “அவளைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”
“உனக்குனாப்ல தெரியுமாக்கும்?” என முனகலாகச் சொல்ல…
“இதுவரை கொஞ்சமா தெரியும். என் மனைவியானதும் முழுசா தெரிஞ்சுக்கிறேன். சரி நீங்க பார்த்திருக்கிற பொண்ணு நல்லவள்னு எதை வச்சிச் சொல்றீங்க?”
“நான் பார்த்துப் பேசியிருக்கேன்.”
உங்க அண்ணன் பொண்ணுகிட்டக் கூடதான் சின்ன வயசிலிருந்து பார்த்துப் பேசியிருக்கீங்க. அவளை எந்தளவு புரிஞ்சிக்கிட்டீங்க? சும்மா எதாவது பேசாதீங்க. உதயாதான் உங்க மருமகள். பணம்தான் பொண்ணுக்கு அழகுன்ற நினைப்பை விட்டுட்டு குணத்தை மட்டும் பாருங்க. இப்படியே போனா அப்பாகிட்டச் சொல்லி வேற அம்மா பார்க்க வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கை செய்தான்.
“டேய்!” என அலறிய தாயை நக்கலாகப் பார்த்து, “இந்த பயம் எப்பவும் இருக்கணும். இல்ல இப்ப வாய் வார்த்தையா இருக்கிறதை செயல்ல காட்டிருவேன்” என்று தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
காலையில் மகனைத் தேடி வந்த சபரியின் அப்பா ராஜாங்கம், “நீ சொன்னது நிஜமா?” என்றார்.
[the_ad id=”6605″]
அவர் குரலில் அப்பட்டமான ஆர்வம் இருந்ததை உணர்ந்தவனுக்குப் புன்னகை வந்தது. தான் கொளுத்திப் போட்டதில் எந்நேரமென்றாலும் கணவனைத் தூங்கவிடாமல் தாய் வெடித்திருப்பார் என்பது தெரியும். இதோ சாட்சியாய்!
“என்ன சொன்னேன்பா? எதை நிஜமான்னு கேட்குறீங்க? கேட்கிறதைத் தெளிவா கேளுங்கப்பா?”
“அதான்டா எனக்குப் பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னியாமே?”
“ஆமா சொன்னேன். இப்ப அதுக்கென்ன?”
“அதுக்கென்னவா? டேய் மகனே! நான் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து ஜிவ்வுன்னு வானத்துல பறந்துட்டிருக்கேன்.”
“அப்பா அதிகம் பறக்காதீங்க. கீழ விழுந்தா சரளா சுனாமி வாரிச்சுருட்டிட்டுப் போயிரும். அதனால உண்டாகிற சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை.”