14
“சூர்யோதயா சபரிநாதன்! சூர்யப் பெண்ணா நீங்க? அதான் சுட்டெரிக்கிறீங்க போல?”
ப்ரித்விராஜ் தன் பின்னால் இருக்கும் பெயருக்கு அர்த்தம் தேடாததில் மனதில் நிம்மதியெழுந்த போதிலும், ‘என்னவாகிற்று எனக்கு? ஏன் அப்படிச் சொன்னேன்?’ என்று தன்னையே கடிந்து கொண்டாள். ஏதோ தப்பு செய்த உணர்வு அவளுள்.
“என்னாச்சி சூர்யோதயா திடீர்னு டல்லாகிட்டீங்க? எதாவது பிரச்சனையா?”
“இ..இல்ல. ஏதோ நினைப்பு. என்ன ஒர்க் பண்றீங்க?”
“என்னை நெருங்கி வர்றவங்க பல்லைத்தட்டி கையில குடுக்கிறேன்.”
“ரௌடியா நீங்க?”
“ரௌடியா! ஹா..ஹா பல் டாக்டர்னு கூட சொல்லலாம்.”
“ஹிஹி சொல்லலாமே. தப்பில்லையே!” என அசடு வழிய புன்னகைத்தாள்.
“நீங்க ஒர்க் பண்ற ஃபேஷன் வேர்ல்ட் பக்கத்துலதான் சின்னதா என்னோட ஹாஸ்பிடல் இருக்கு.”
“அது உங்களோடதா? அடப்பாவி! அது பெரிய நேம் உள்ள ஹாஸ்பிடல். சின்னதுன்னு சொல்றீங்க. ஆமா பல்லைப் பிடுங்க எதுக்கு நண்பா அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்? ஜஸ்ட் பத்துக்குப் பத்து அடி போதாதா?”
“ஹோய்! நீங்க சொல்றது க்ளினிக். என்னது ஹாஸ்பிடல். இரண்டுக்கும் வித்தியாசமிருக்கு தோழியே!”
“ஆமா பண்றது ரௌ…”
“ஹேய் ஸ்டாப் ஸ்டாப். போதும் டேமேஜ் பண்ணினது. வேலைக்குதான போறீங்க? வாங்க போகலாம்.”
“இல்ல நண்பா. நான் நடந்தே போயிருவேன். நீங்க போங்க” என்றாள்.
[the_ad id=”6605″]
“ஆர் யூ ஸ்யூர்?”
“எஸ் சார்” என்று சல்யூட் அடிக்க… ‘பை’ சொல்லிக் கிளம்பினான்.
‘நட்பு! அம்மாவின் தாயன்பைப் போல்! மனம் விரும்புபவனின் காதலைப் போல்! நட்பு என்ற மூன்றெழுத்தும் அன்பில் வார்த்து, அன்பை மட்டுமே பிரதிபலிக்கும்.’
நட்பு என்ற ஒன்றை வைத்து சூர்யாவைக் கட்டுப்படுத்தத் தயாராயில்லை ப்ரித்விராஜ். வரவில்லை என்றதும் அவள் செல்லும் வழியை ஆராய்ந்தபடி சென்றான்.
‘ஆண் நட்பே கூடாதென்ற தான் இன்று ஒரு ஆணை நட்பாக்கியிருக்கிறேன். ஒரு வாட்ச் உன்னை நட்புல சிக்க வச்சிருச்சி சூர்யா. ப்ருத்வி இன்னைக்கு சபரி மச்சான் பற்றிக் கேட்கவில்லை என்றாலும், என்றாவது நினைவு வைத்துக் கேட்டால்…’ தலை பாரமாகியது சூர்யாவிற்கு.
கையிலிருந்த வாட்சைப் பார்த்து, “எனக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியலை மச்சான். என்னவோ ஒரு மாற்றம்! ப்ரித்விகிட்ட ஏன் அப்படிச் சொன்னேன்னும் விளங்கல. ஆனால், என் எண்ணம் தப்பு. நான் தப்பு. என்னால உங்களைக் கல்யாணம்… எப்பவும் முடியாது மச்சான். மும்பையை விட்டு எங்கேயும் போகக்கூடாது சொன்னீங்க. என்னால அங்க இருக்க முடியலை. கண்காணாத இடமா பார்த்து வந்துட்டேன். என்னை நீங்க தேடியிருப்பீங்க தெரியும். மன்னிச்சிருங்க மச்சான்.”
ஏனோ ஹரிணி நினைவில் வர, அவளின் அம்மா என்ற அழைப்பு மனதின் அடி ஆழம் வரை சென்று தாக்கியது. ‘அம்மா சீக்கிரம் வாங்க. நான் தினமும் உங்களுக்காகக் காத்திருக்கேன்.’ அன்று பார்த்த வீடியோ காட்சிகள் கண்முன் வந்தது. ‘எனக்காகக் காத்திருந்து நான் வரலன்னதும் ஏமாந்து போயிருப்பாளோ? உனக்கு அம்மாவாகிற தகுதி எப்பவும் எனக்கில்லடா. உனக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பாங்க. சபரி மச்சான் வாழ்க்கை எப்பவும் சந்தோஷம் நிறைஞ்சதா இருக்கணும். அவங்க சந்தோஷமே என சந்தோஷம்.’
வேலை செய்யுமிடத்தில் நுழையும் வரை அவள் மனது அவளுக்கு எஜமானி. உள்ளே நுழைந்த பின் கடமை மட்டுமே அவளின் எஜமானி. தன் நினைவுகளை ஒதுக்கி வேலையில் ஆழ்ந்தாள்.
“சூர்யா அந்த நியூ மாடல் தயாராகிருச்சா? ஜே எம்.டி கால் பண்ணிக் கேட்கிறார்.”
“சார் அவருக்கெப்படி?”
“நான்தான்மா சொன்னேன். அதுவுமில்லாம நீ அங்க பண்ணின டிசைனிங்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அது உன்னோடதுன்னு எம்.டிக்கும் தெரியும். இருந்தும் உனக்கு அந்த நேம் கொடுக்க முடியலை. அங்க இருந்தா உன் டிசைனிங் ஆடைக்கான அங்கீகாரம் கிடைக்க விடமாட்டாங்க. அவங்க எம்.டியோட சொந்தக்காரங்க வேறயா… சோ, அவர் நினைத்தால் கூட சில நேரம் அவங்களை கண்ட்ரோல் பண்றது கஷ்டம். அதான் உனக்கு இந்த இடமாற்றம்.”
அவை சூர்யாவினால் உருவானதென்று கண்டுபிடித்து எம்.டிக்குச் சொன்னது தான்தான் என்று அவளிடம் சொல்லவில்லை ஸ்ரீகர்.
படைப்புத் திருட்டு எங்குதான் இல்லை.
“ஆச்சர்யமாயிருக்கு சார். என் சார்பா எம்.டிகிட்ட தேங்க்ஸ் சொல்லிருங்க சார். ஒரு சாதாரண பொண்ணு எனக்காகவும் பார்த்திருக்காங்கன்னா பெரிய மனசு வேணும்” என்றாள் உளமாற.
“ஆமா. உன்னை ரெகமண்ட் பண்ணினவருக்கு பெரிய மனசுதான்.”
“என்னை ரெகமண்ட் பண்ணினாங்களா? யார் சார்?”
“யாருக்குத் தெரியும். உனக்குன்னு தனியா முக்கியத்துவம் குடுத்ததும் கேட்டேன். சீக்ரெட்னு சொல்லிட்டாங்க. சரி எப்ப முடியும் அதைச் சொல்லு?”
“மேக்சிமம் முடிச்சிட்டேன். இன்னும் இரண்டு நாள்ல ஃபுல் ஒர்க் கம்ப்ளீட் பண்ணிருவேன் சார்.”
“முடிச்சதும் சொல்லு. எம்.டிகிட்ட அப்ரூவல் வாங்க அனுப்பணும். எந்த மாதிரி வயசுள்ளவங்களுக்கு?”
“குழந்தைங்களுக்கும் வயசுப் பொண்ணுங்களுக்கும் பர்த்டே, ரிசப்ஷன், பார்ட்டீஸ், பங்ஷன் டைம் போட்டா லுக் அன்ட் க்ராண்டா இருக்கும் சார். அதான் இரண்டு விதமான மாடல்ல ரெடி பண்ணிருக்கேன். ஒண்ணு இல்லன்னா ஒண்ணு கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும் சார்” என்றாள் நம்பிக்கையாக.
அவளின் நம்பிக்கையில் புன்னகைத்து, “இரண்டுமே கூட சக்சஸாகலாம். என்னை சார்னு கூப்பிடாம அப்பா இல்லன்னா ஹிந்தியில பப்பா, பாபுஜி இப்படி எதையாவது கூப்பிடச் சொல்லி சொன்னா ஏன் கேட்க மாட்டேன்ற?”
“சொன்னா தப்பா எடுத்துப்பீங்களோன்னுதான் சார் சொல்லலை.”
“புரியலைமா?”
“எனக்கு அப்பான்ற வார்த்தை பிடிக்காது சார். என் அப்பாவையே அப்படி சொல்லிக் கூப்பிட்டதில்லை. அந்த உறவுக்கான மரியாதையை அவர் கொடுக்கத் தவறிட்டார். அதெல்லாம் உள்நாட்டு விவகாரம் சார்.”
இசக்கியின் கணவர் அழகரை மட்டும் ‘அழகுப்பா’ என்பது ஏனோ! அவளே அறியாததில் அதுவும் ஒன்றோ!
“லைஃப்ல நிறைய அனுபவப்பட்டிருக்க தெரியுது. ஓகே நீ வேலையைக் கன்டினியூ பண்ணு” என்று நகர… அப்பாவைப் பற்றிய எண்ணங்களை அடக்கி, எம்.டி பாராட்டி தன் திறமையை மதித்ததில் சொல்ல முடியாதொரு மகிழ்ச்சி சூர்யாவினுள்.
[the_ad id=”6605″]
அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் சூர்யா. முதல் முறையாக பெரிய அளவில் அவளுடைய ஆடை ஒன்றிற்கு இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மற்றொன்று கம்பெனி மாடலுக்கு.
“அக்கா ட்ரீட் எங்க?” என்று கடை ஊழியன் கேட்க…
“ட்ரீட்டா? நான் இதுவரை அப்படி கொடுத்ததில்லை. வேணும்னா வீட்லயிருந்து ஸ்வீட் செய்து கொண்டு வர்றேன்.”
“எனக்கு லட்டு” என ஒருவர் ஆரம்பிக்க… “எனக்கு பாயசம்.” “எனக்கு திருநெல்வேலி அல்வா.” “எனக்கு தேங்காய் பர்பி” என ஆளுக்காள் ஆரம்பிக்க… “சரி சரி முடிந்தளவு நாளைக்குக் கொண்டு வர்றேன்” என்றிருந்தாள்.
முந்தைய நாள் தேவையானதை வாங்கி வந்திருந்ததால், காலையில் சீக்கிரம் எழுந்து அனைத்தையும் செய்து கடைசியாக பாயசம் வைத்து, தனித்தனியாக பேக் செய்து, குளித்துத் தயாராகி ஆட்டோ பிடித்து கடைக்கு வந்தாள்.
அல்வா கேட்ட பெண்ணிடம் வந்தவள், “இந்த முறை சரியா வரல. நெக்ஸ்ட் செய்து தர்றேன்” என்று கொண்டு வந்தவற்றை அனைவரிடமும் கொடுத்து, ஸ்ரீகருக்குக் கொடுத்ததும், “ஃப்ரண்ட்கு கொடுத்துட்டு வர்றேன் சார்” எனறாள்.
ரொம்பவே ஆச்சர்யம் அவருக்கு. இருப்பினும் யார் என்னவென்று விசாரித்து, சட்டென யாரையும் நம்பக்கூடாதென்று வலியுறுத்தி அனுப்பினார். அத்தகவலை ஒருவனுக்கு மெசேஜ் செய்ய… கவனமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி பதில் மெசேஜ் வர… சரியென்று அனுப்பி சூர்யாவைத் தொடர ஆள் அனுப்பினார்.
செல்லில் தனக்கு வந்த மெசேஜைப் பார்த்து புன்னகைத்த சபரி, அதற்குப் பதிலளித்து பிடித்த நிகழ்வுகளை சுகமாக எண்ணியபடி அமர்ந்திருந்தான்.
“வணக்கம் நண்பா.” தன் முன் நிற்கும் சூர்யாவைக் கண்டு ஆச்சர்யத்தில் விழிவிரிக்க… “ஹலோ டாக்டர் சார். பார்த்து கண்ணு அப்படியே ஸ்டோன் ஆகிடப்போகுது. அப்புறம் உங்க ஒய்ஃப்தான் பாவம்” என்றாள் கேலியாக.
“அது கல்யாணம் ஆன பிறகு அவள் ஃபீல் பண்ணிக்கட்டும். நீங்க என்ன இப்படி சர்ப்ரைஸ்லாம் குடுக்குறீங்க? ஹார்ட் பீட் சில நொடி நின்னுருச்சி தெரியுமா? இன்பார்ம் பண்ணிட்டு வர்றதில்லையா?” நெஞ்சைப் பிடித்தபடி கேலியில் அவனும் இறங்கினான்.
“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு, ஒரு பேமிலி பேக்ரௌண்ட் மியூஸிக் வச்சிக்கச் சொல்றீங்களா?”
“வேண்டாம் தோழியே! ஏன் நிற்கிறீங்க? ப்ளீஸ் நீங்க உட்காருங்க. நீங்க நின்னா என்னோட கால் வலிக்குது” என கண்ணீர் துடைப்பது போல் செய்ய…
சட்டென்று சிரித்து, “பயங்கரமா கால் வாருறீங்க. உங்க ஹாஸ்பிடல் நல்லாயிருக்கு டாக்டர்.” அவனோ சூர்யாவை முறைக்க… “ஏன் முறைக்கிறீங்க? நல்லாயிருக்கு சொன்னது தப்பா?”
“சொன்னது தப்பில்லை. கடைசியில் சொன்ன டாக்டர்தான் தப்பு.”
“சரி சரி சூப்பராயிருக்கு நண்பா.”
“ஹ்ம் அது. என்ன திடீர் வரவு?”
“ஓ… சாரி மறந்துட்டேன்” என்று கையிலுள்ள பார்சலைக் கொடுத்தாள்.
என்னவென்று பிரித்துப் பார்த்தவன் கண்களில் சிறு சிறு கவர்களில் அடைத்து ஒட்டப்பட்ட இனிப்புகள் இருக்க… “கடையில் வாங்கியதா? என்ன விசேஷம்?” என்று பற்களால் கவரைப் பிரிக்க…
அவன் கையைத் தட்டி, “டாக்டர் பண்ற வேலையா இது? பக்கத்துல உள்ள கத்திரி எடுத்து கட் பண்றதுக்கென்ன?”
“அது பழக்க தோஷம். என்ன விசேஷம்னு சொல்லலையே?”
“முதல்ல சாப்பிடுங்க சொல்றேன். வீட்ல நானே செய்து எல்லாருக்கும் தரணும்னு தனித்தனி பேப்பர் பேக்கிங் செய்தேன். பாயசம் மட்டும் டிபன் பாக்ஸ்ல எடுத்துட்டு வந்தேன்” எனவும் அனைத்தையும் டேஸ்ட் செய்து “சூப்பர்” என்று விரலால் காண்பித்தான்.
“நான் மாடல் செய்த ட்ரெஸ்கு இந்தியா லெவல் அங்கீகாரம் கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே மார்கெட்டிங் வரப்போகுது.”
“வாவ்! வாழ்த்துகள் தோழியே. இன்னும் நிறைய சாதிக்கணும்.”
“நன்றி நண்பா.”
“அதுக்கான ட்ரீட்தானா இது? ரொம்ப சிம்ப்ளாயிருக்கே?”
“பைவ் ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி வைக்கற அளவுக்கு உங்க தோழிக்கு பணமும் கிடையாது. அது வழக்கமும் இல்லை. சரி டைமாகுது வர்றேன் நண்பா.”
“தேங்க்ஸ் பார் யுவர் ட்ரீட்” என்றதும் புன்னகையுடன் கிளம்ப அவளையே சிறு ஆராய்ச்சியாய் பார்த்திருந்தான் ப்ரித்விராஜ்.
“சூர்யா! ரைட் சைடுல ஒரு கடையில நியூ கலக்ஷன்ஸ் அறிமுகப்படுத்தியிருக்காங்க. நீ போய்ப் பார்த்தா எதாவது ஐடியாஸ் கிடைக்கலாம்.”
“ரைட் சைடுலனா? நான் பார்த்திருக்கேனா தெரியலையே சார்.”
“அதனாலதான் நானே சொல்றேன். ரைட் சைட்ல செகண்ட் ஸ்ட்ரீட் மெய்ன்ல சபரி கலக்ஷன்ஸ் இருக்கு. இதுதான் அவங்களோட மெய்ன் ஆஃபீஸ். இதைத் தவிர இன்னும் இரண்டு கேரளாவுல இருக்கு. சென்னையில ப்ராஞ்ச் ஓபன் பண்ண எல்லாம் தயாராகிருச்சி. இங்க உள்ள எல்லாமே சொந்த டிசைனிங். யார் அந்த டிசைனர்னு யாருக்குமே தெரியாதளவு சீக்ரெட்டா மெய்ன்டெய்ன் பண்றாங்க. நம்ம எம்.டிக்கு அவங்க டிசைன் மேல ஒரு கண்ணுன்னா பாரேன்.”
ஸ்ரீகர் பேசுவதை எங்கே அவள் கேட்டாள். சபரி கலக்ஷன்ஸ் என்றதிலேயே நின்று விட்டாளே. ‘சபரின்னா மச்சான் மட்டும்தான் இருக்கணுமா? சபரின்ற பெயர் நிறைய பேருக்கு இருக்கே. இராமேஸ்வரத்திற்கும் கேரளாவிற்கு… ம்கூம் நம்மை நாமே குழப்பிக்கக்கூடாது சூர்யா.’
“என்ன சூர்யா போயிட்டு வர்றியா?” என்றவருக்கு அவள் தான் பேசியதைக் கேட்கவில்லை என்பது புரிந்ததும் மௌனமாகப் புன்னகைத்து திரும்பவும் சொல்ல, “சரிங்க சார். பார்க்கிறேன்” என கிளம்பியதும் மெசேஜ் செய்தார்.
செல்லில் தனக்கு வந்த மெசேஜைப் பார்த்து புன்னகைத்த சபரி, அதற்குப் பதிலளித்து சிசிடிவியைப் பார்க்கலானான்.
சபரி கலக்ஷனில் சூர்யா நுழையும்போது மாலை ஆறு. அந்த மூன்றடுக்கு பில்டிங் கார் பார்க்கிங்குடன் பலத்த செக்யூரிட்டி பாதுகாப்போடு இருந்தது. என்ட்ரான்ஸில் கண்ணாடிக்குப் பின் இருந்த ஆண் பெண் குழந்தை பொம்மைகளுக்கு மாட்டியிருந்த ஆடை சிவப்பு கலரில் கண்ணைக் கவர்ந்தது. கண்ணை உறுத்தாத பளிச் ஃபேன்சி சிவப்பு கலர் புடவையும். ஆண் பொம்மைக்கு சந்தன நிற பேண்டும் சிவப்பு நிற சட்டையும், குழந்தையின் சிவப்பு நிற பார்த்த பொழுது, அவளின் கலைக்கண் ‘அற்புதம்’ என பாராட்டி, ‘அட’ போட வைத்தது. உள்ளே சென்று அனைத்தையும் பார்க்கும் உந்துதல் எழ மெல்ல உள்ளே சென்றாள்.
“வெல்கம் மேம்” என்ற குரலில் திரும்பியவள் மெழுகுப் பொம்மையாய் நின்றிருந்த நிஜ பொம்மையின் முகத்தைக் கண்டு பெண்ணென எண்ணியவள், பொம்மையென்று அறிந்ததும் மானசீகமாகத் தலையில் தட்டி புன்னகைத்து நடக்க ஆரம்பித்தாள். அடுத்த வெல்கம் மேம்-ஐ கண்டுகொள்ளாது செல்ல… “மேம் வெல்கம்” என்று தன்முன் நின்றிருந்த நிஜ பெண்ணைக் கண்டு பயந்து நகர்ந்து, “ஏங்க இப்படி பயமுறுத்திட்டீங்க? உங்க வெல்கம்கு தேங்க்ஸ்” என்றாள் படபடப்புடனே.
[the_ad id=”6605″]
“சாரி மேம்.”
“இட்ஸ் ஓகே. இப்படி ஒவ்வொருத்தரையும் வரவேற்க முடியமா?”
“முயன்றால் முடியும் மேம். ஆயிரம் பேர் வந்தாலும் சிரிச்சிட்டே வரவேற்கணும்ன்றது ரூல். நீங்க சினி ஸ்டாரா?”
“என்னது சினி ஸ்டாரா? ஏங்க உங்களுக்கே ஓவரா தெரியலையா?”
“சாரி மேம்” என ஏதோ யோசித்தவள், “இங்க நிறைய சினி ஸ்டார்ஸ்தான் வருவாங்க. உங்களுக்கு முன்ன நடிகை ஒருத்தர் போனாங்க. அதான் நீங்களும்…”
“நான் ஸ்டார்லாம் இல்லங்க. பக்கத்துல ஃபேஷன் வேர்ல்ட்ல ஒர்க் பண்றேன். இங்க எல்லா கலக்ஷனும் நல்லாயிருக்கு சொன்னாங்க. அதுக்காக விண்டோ ஷாப் பண்ணவும் வரல” என்றாள் வேகமாக.