“அப்படிலாம் நினைக்கலை மேம். நீங்க விண்டோ ஷாப் கூட பண்ணலாம்” என்று நகர்ந்தாள்.
“உலகம்ன்றது நெல்லிக்காய் சைஸ் என்பது உண்மைதான்ல வெள்ளச்சி. உன்னை எங்கெங்கோ தேடினா நீ இங்க என் இடத்துக்குப் பக்கத்துலயே இருந்திருக்க. ஃபேஷன் வேர்ல்ட்! எத்தனை முறை அங்க வந்திருப்பேன். எப்படி மிஸ் பண்ணினேன் உன்னை?”
சபரி வரவைக் கண்டதுமே ஸ்ரீகர் அவளை மறைத்து வைத்ததை அறிவானா!
அவள் போகும் இடமெல்லாம் சிசிடிவி வழியே பார்த்து ரசித்துக் கொண்டே, போன் எடுத்து இசக்கிக்கு அழைத்து “அத்தை உங்க பொண்ணு இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சி” என்றான் உற்சாகம் பொங்க.
“சபரி! கிடைச்சிட்டாளா? முருகா நல்லவழி காட்டிட்டப்பா” என்று கடவுளுக்கு நன்றியுரைத்து, “எங்க இருக்கா?” எனக்கேட்க…
“நம்ம கடையில… என் கண்முன்னே!”
“எப்படிடா? இங்கதான் இருந்தாளா?”
“அப்படித்தான் நினைக்கிறேன் அத்தை. மலையாளம் புரிஞ்சி பதில் பேசுதைப் பார்த்தா இந்த இரண்டரை மாசமும் இங்கதான் இருந்திருக்கா போல. சரி நான் அவள் எங்க தங்கியிருக்கா என்ன ஏதுன்னு பார்த்துட்டு அப்புறமா போன் பண்றேன்.”
“சரிடா. போன தடவை மாதிரி விட்டுட்டு வராம, என் கண் முன்ன என் பொண்ணை நிறுத்து.”
“நிறுத்திட்டா போச்சி.”
“எப்படி இருக்கா? கவலையில் ஆள் மெலிஞ்சிருக்காளா?” என கவலையாய் கேட்டார்.
“என்னது மெலிஞ்சிருக்காளாவா? அத்தை வேண்டாம். அவள் என்ன வாய் பேசுறா தெரியுமா? அவள் வர்றதைப் பார்த்ததும் ஒரு பொண்ணை அவசர அவசரமா வெல்கம் பண்ண அனுப்பினா அந்தப் பொண்ணுகிட்ட வாயாடுறா.”
முதலாளியின் உத்தரவின் பேரில்தான் அப்பெண் சூர்யாவை திரும்பத் திரும்ப வரவேற்றது. முதலில் சினி ஸ்டார் என்றுதான் நினைத்தாள். ‘விஐபி இல்லையென்றால் யார் இவள்? எத்தனையோ நடிகர் நடிகைகள் வந்த பொழுதும் இப்படி ஒரு வரவேற்பு கொடுத்ததில்லை. ஹ்ம்… பெரிய இடத்து விவகாரம் நமக்கெதற்கு’ என்பதே வரவேற்ற பெண்ணின் யோசனை.
“அவள் கடையிலையே விண்டோ ஷாப் பண்ண வரலைன்னு சொல்றா அத்தை.”
“தெரிஞ்சா சொல்வாளாடா?”
“தெரிஞ்சாதான் இன்னும் ஸ்ட்ராங்கா சொல்வா. வீம்புக்கு பணம் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.”
“அவள் நினைச்சதைச் செய்யட்டும்டா. நீ அதையிதை செய்து கலைச்சிராத. நாம இங்க இருக்கிறது அவளுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டா. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்டா.”
“ம்கூம். விட்டா உங்க பொண்ணைப் பிடிக்க முடியாது அத்தை. இனி விடுறதாகவும் இல்லை” என்று போனை கட் செய்தான்.
அடுத்த நொடி இசக்கியிடமிருந்து பூவரசிக்கு போன் பறந்தது. உடனே வருகிறேன் என்றவரைத் தடுத்து தான் சொல்லும் போது வந்தால் போதுமென்று சொல்லி வைத்தார்.
அதே நேரம் இசக்கியின் வாட்சப் சபரியின் பெயரைத் தாங்கி வர, நீண்ட நாட்கள் கழித்து மகளைக் கண்டவர் கண்கலங்கினாலும், “ஏற்கனவே நீ வெள்ளச்சி. இப்ப கேரளத் தண்ணீர், காற்று சேர்ந்து இன்னும் கலராகிட்ட.” மகளைக் கொஞ்சி அப்படியே சூர்யாவின் அண்ணன் ராமன் நம்பருக்கு வாட்சப் பண்ணிவிட்டார்.
“என்னடா நம்மாளைக் காணோம்” என்று தன் அறையை விட்டு வெளியே வந்தவன் சுற்றிலும் தேடுதல் நடத்த… “சபரி என்னைத்தான தேடுறீங்க?” பழக்கமான குரலில் பார்வை சுழற்சியை நிறுத்தி, “ஆஹா! இவங்க வந்ததை மறந்து வெளில வந்துட்டோமே” என்றெண்ணினாலும், “வாங்க அர்ச்சனா” என்று வரவேற்கவும் மறக்கவில்லை.
“இந்த ங்க விடமாட்டீங்களா?” செல்லமாகக் கேட்டாள் மலையாள சீரியலில் பிரபலமாகி வரும் கதாநாயகி அர்ச்சனா.
சபரியின் வீட்டினருகில்தான் அவளின் வீடும். சபரியைப் பற்றி ஓரளவு தெரிந்தவள். ஏதோ அவன் குணம் அவளுக்குப் பிடித்திருக்க, கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நேரடியாகவே கேட்டுவிட்டாள். அவன் சரிவராதென்று மறுத்தும் பார்க்கும் நேரங்களில், அதாவது அவனைப் பார்க்க அவள் ஏற்பாடு செய்திருந்த நேரங்களிலெல்லாம் கேட்கிறாள். இப்போதும் அவனைக் காணவே அவளின் வரவு.
சமீபகாலமாக ‘தனக்குத் திருமணமாகி குழந்தையும் இருக்கிறது’ என்பதை ஞாபகப்படுத்தினாலும் ‘பொய்’ என்றே வாதிடுகிறாள்.
“நான் பாப்பாவைப் பார்த்துக்க மாட்டேன்னு நினைக்குறீங்களா சபரி? என் பொண்ணா நல்லா பார்த்துப்பேன். நீங்க சம்மதம் சொன்னா அப்பா அம்மாவை பேசச் சொல்றேன்.”
“எனக்குக் கல்யாணமாகிருச்சி அர்ச்சனா” என்று அழுத்தமாகவே சொன்னான்.
“அப்ப உங்க ஒய்ஃப் எங்க சார்?” என்றாள் கேலியாகவே.
[the_ad id=”6605″]
“என் ஒய்ஃப்தான? வாங்க காட்டுறேன்” என்று அழைத்து முன்னால் நடக்க செகண்ட் ப்ளோரில் தேடிப்பார்த்து இல்லை என்றதும் தேர்ட் ப்ளோர் போக…
“ஏன் சபரி? இல்லாத மனைவியை இருக்கிறதா நம்பவைக்க இவ்வளவு மெனக்கெடுறீங்க. இதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமே. நான் ஒண்ணும் அவ்வளவு மோசம் கிடையாது” என்றாள் புன்னகையுடன்.
“உங்களை மோசம்னு சொன்னா நானும் மோசம்தான் அர்ச்சனா. அதுக்காக எல்லாம் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. முதல் மனைவி இருக்கும்போது இன்னொரு கல்யாணம் சட்டப்படி தப்பு.”
“பார்த்தீங்களா திரும்பவும் அதையே சொல்றீங்க?”
அர்ச்சனாவைக் கடிந்து பேச முடியாமல், ‘எங்க போன உதயா?’ என சூர்யாவை மனதிற்குள் கடிந்தவன் கண்கள் நாலாபுறமும் சுற்றி ஓரிடத்தில் புன்னகையுடன் நின்றது.
ஒவ்வொரு துணியாக எடுத்துப் பார்த்து துணிகளின் தரத்தை ஆராய்ந்து ‘சூப்பர்! ஓகே! நாட் பேட்!’ என்று கமண்ட் செய்து கொண்டிருந்தாள். சூர்யாவை வரவேற்ற பெண் விற்பனை செய்பவர்களிடம் என்ன சொன்னாளோ, சூர்யா கேட்டதை முகம் சுளிக்காமல் எடுத்துப் போட்டார்கள்.
“என்ன சபரி திடீர்ப் புன்னகை?” என்ற அர்ச்சனாவிற்கு கை நீட்டி, “ஷி இஸ் மை ஒய்ஃப் மிஸஸ்.சூர்யோதயா சபரிநாதன்” என்றான் பளிச்சென்ற சிரிப்புடன்.
அவனின் மலர்ந்த புன்னகை வேறெதோ கதை சொன்னாலும் மனம் அதை ஏற்க மறுக்க, “சபரி” என்றாள்.
“போய்ப் பேசுங்க அர்ச்சனா” என்றான் சூர்யாவின் மேலுள்ள நம்பிக்கையில்.
கடைசியாக ஏதோ ஒரு நம்பிக்கையில் அர்ச்சனா சூர்யாவை நோக்கிச் செல்ல… “ஹாய்! சூர்யோதயா சபரிநாதன் அவர்களே! ஃபேஷன் வேர்ல்டுக்கு சபரி கலக்ஷன்ல என்ன வேலை?” என்றபடி ப்ரித்விராஜ் அவள் எதிரில் நின்றான்.
“சபரின்னு சொல்லிட்டு என்ன வேலைன்னு கேட்டா எப்படி ப்ரித்விராஜ் அவர்களே! சபரியில சூர்யா இல்லன்னா எப்படி? சோ, வாட்சிங் அன்ட் பர்சேசிங்” என பதில் கொடுத்து, “அப்புறம் பல்லை உடைக்கிற நண்பா நீங்க எங்க இந்தப்பக்கம்?” என்றவாறு இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க…
சபரி சொன்னது முழுக்க உண்மையென்று புரிந்த நிமிடம் தொண்டைக்குள் துக்கம் அடைத்தது அர்ச்சனாவிற்கு. ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் காத்திருந்தாள். இப்பொழுதல்ல அவனின் முதல் திருமணத்திற்கு முன்னிருந்தே. சொல்லாத காதல்! ஊருக்குச் சென்ற சபரியின் திடீர்த் திருமணம். பத்திரிக்கை லேட்டாகவே கிடைத்தது அர்ச்சனாவிற்கு.
திருமணம் முடித்து ஒரு மாதங்கழித்து தனியாகத்தான் கேரளா வந்தான். அவன் மனைவியை விசாரித்ததற்கு இடம் ஒத்துக்கொள்ளாது என்பதால் வரவில்லையென்று கூறினான். அடுத்து ஒன்றிரெண்டு முறை போய் வந்தவன்… கடைசியாகச் சென்றபொழுது ஒரு மாதங்கழித்து குழந்தையுடன் வந்தவன்தான், மூன்றாண்டுகளாக எங்கும் செல்லவில்லை.
சமீபமாகத்தான், அதாவது சூர்யா திருமண சமயம்தான் அடிக்கடி தமிழ்நாடு செல்வது. அதுவும் சென்னையில் ப்ராஞ்ச் ஆரம்பிக்கவென்று. தன்னுடைய அடையாளத்தை அவன் அவர்கள் யாரிடமும் சொன்னதில்லை. ஏன் சூர்யாவிற்குமே அவனின் தொழில் என்னவென்று தெரியாது. இராமேஸ்வரத்தில் ஏதோ தொழில் செய்கிறான் என்பது மட்டுமே அவளின் எண்ணம்.
குழந்தையைப் பார்க்கக்கூடத் தாய் இல்லையென்றால் அவள் இறந்துவிட்டாள் என்ற முடிவுக்கு வந்த அர்ச்சனா, திரும்பவும் சபரியிடம் திருமணப் பேச்சை ஆரம்பிக்க, தனக்குத் திருமணமானதை அவளுக்கு நினைவூட்டினான். அப்படி ஒருத்தி இல்லை சும்மா தன்னை விலக்கச் சொல்கிறான் என்றே நம்பியிருந்தாள். இதோ சாட்சியாக அவனின் மனைவியே இருக்கிறாள். அதுவும் ‘மிஸஸ்.சபரிநாதன்’ என்று சொல்லிக்கொண்டு.
சபரியின் அருகில் வந்து, “சாரி சபரி. நான் உங்களை ரொம்பவே…” அடைத்த தொண்டையை சரிசெய்து, “ப்ச்.. சாரி. உங்க ஒய்ஃப் அழகாயிருக்காங்க” என்று பாராட்ட… அவன் நன்றி தெரிவித்ததும் அங்கு நிற்க முடியாமல் அவ்விடம் விட்டு அகன்றாள்.
[the_ad id=”6605″]
சபரிக்கும் அவளின் விருப்பம் தெரியும்தான். இருந்தாலும் அர்ச்சனாவை மனைவி ஸ்தானத்தில் நினைக்கத் தோன்றவில்லை. அதனாலேயே எவ்விதத்திலும் பிடிகொடுக்காமல் வில(க்)கியே நின்றான்! நிற்கின்றான்!
அர்ச்சனா சென்றதும் சூர்யாவைப் பார்க்க, ‘யார்டா அது? என் உதயாகிட்ட கடலை போடுறவன்?’ என்று பார்க்கையிலேயே நான்கைந்து பெண்களும் இரண்டு ஆண்களும் அவர்களைச் சுற்ற… அவர்களை சூர்யாவிற்கு அறிமுகம் செய்து செகண்ட் ப்ளோரிலுள்ள பட்டு செக்ஷனுக்கு அவளையும் அழைத்துச் சென்றார்கள்.
‘புது நண்பன்! அதுவும் ஆண் நண்பன். கலக்குற வெள்ளச்சி.’ புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்தவன், அவர்கள் செல்லும் வரை காத்திருந்து அவளின் வீட்டையும் அறிந்து கொண்டான்.
“அம்மா” என்றழைத்தபடி வந்த ராமனைக் கண்ட பூவரசி, ‘என்னடா ஆச்சர்யமாயிருக்கு? இந்தப் பயல் இவ்வளவு சத்தமா, ஏன் அம்மான்னு கூப்பிடவே ஆயிரம் யோசிப்பானே. என்னவாயிருக்கும்?’ என்று யோசிக்க…
“இங்க பாருங்க. இசக்கி சித்தி போட்டோ அனுப்பியிருக்காங்க.”
“என்ன போட்டோ? பையனுக்கு எதுவும் பொண்ணு பார்த்திருக்காளா?”
“ஆமாம்மா. அவங்க மருமகனுக்கு பார்த்த பொண்ணு போட்டோ அனுப்பியிருக்காங்க” என்று சிரிக்காது சொன்னான்.
“மருமகன்னா? சபரியா? என்ன சொல்ற? அப்ப என் பொண்ணு? இந்த இசக்கி இப்படிப் பண்ணுவாள்னு நினைக்கலையே.”
அழ ஆரம்பித்த தாயிடம், “முதல்ல போட்டோ பார்த்துட்டு அழுங்க” என்றான்.
“யாரோ ஒரு சிறுக்கியை நான் ஏன் பார்க்கணும்?” மகள் மேலுள்ள பாசத்தில் திட்ட…
“முதல்ல போட்டோ பார்த்துட்டு திட்டுங்க” என்று போட்டோவைக் காட்ட… பார்த்த நிமிடம், “சூர்யா! என் பொண்ணா ராமு?”
“இல்ல என் தங்கச்சி” என்றான் நக்கலாக.
‘நீ என்ன வேணும்னா பேசு’ என்று கண்டுகொள்ளாது, பெண்ணைப் பார்க்கும் ஆவல் அதிகமாக மகளின் புகைப்படத்தைத் தொட்டுத் தடவி ஆழ்ந்துவிட கண்களில் சந்தோஷக் கண்ணீர்.
பத்து நாட்களுக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் லீவ் கிடைத்ததால், வீட்டை சுத்தப்படுத்தி அனைத்து வேலையையும் முடித்து படிப்பில் மூழ்கிவிட்டாள். பனிரெண்டாக ஐந்து நிமிடங்களே இருக்கையில், திடீரென்று கதவு தட்டப்பட்ட வேகத்தில் சற்று பயம்தான் சூர்யாவிற்கு.
‘மதிய வேளையில் இதென்ன பயம்?’ என்று தன்னையே திட்டினாலும், ‘நம்மைத் தேடி யாராயிருக்கும்? ஒருவேளை ப்ரித்வியா? அவங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டாங்களே. வேற யாராவது தப்பான நோக்கத்தோட தட்டுறாங்களோ? ஒரு பொண்ணு தனியாயிருந்தா ஆகாதே இவனுங்களுக்கு.’
தொடர்ந்து கதவு தட்டப்பட, அதையும் மீறி ‘அம்மா’ என்ற அழைப்பு சூர்யாவின் காதில் விழ, கேட்ட குரல் கற்பனையோ என்று நினைக்க… தொடர்ந்த “அம்மா கதவைத் திறங்க” என்றதில் யாரென்று புரிந்ததும், வேகமாக ஓடிச்சென்று கதவைத் திறக்க… “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்ற கோரஸான குரல்களில் அதிர்ந்து! வியந்து! மயங்கி! உருகித்தான் போனாளோ! சபரி, இசக்கி, ரவி, ஹரிணியுடன் இன்னும் சிலர்.
கதவு திறந்ததும் இசக்கியைப் பார்த்தவள் அவரை நெருங்கு முன் சூர்யாவின் காலைக் கட்டியிருந்தாள் உதய ஹரிணி. வேகமாகக் குழந்தையை கையிலெடுத்து, “ஹரிணிமா! எப்படிடா இருக்க?” என்று முத்தமிட, “ஹேப்பி பர்த்டே அம்மா” என்று பதிலுக்கு குழந்தையும் முத்தமிட்டவளுக்கு தன் பிறந்தநாள் இசக்கி சொல்லியிருப்பார் என்று புரிந்தது.
“நான் இங்கயிருக்கிறது யாருக்கும் தெரியாதேடா? எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” குழந்தையைக் கேட்பது போல் சபரியிடம் வினவ…
“நாம கண்ணை மூடிக்கிட்டா உலகமே மறைஞ்சிருச்சின்னு அர்த்தம் கிடையாது. உலகம் அவ்வளவு பெருசும் கிடையாது” என்று கோபத்தில் பதிலளித்தான்.
அதில் முகம் வாட, “நானும் அப்படிச் சொல்லல ஹரிணிமா” என்றாள்.
“அப்புறம் என்ன அத்தை உங்க பொண்ணே ஒத்துக்கிட்டாங்க. டேய் பரத்” என்றதும் வெளியிலிருந்து ஒரு கிஃப்ட் பேக்குடன் அவன் நுழைய…
“பரத்! நீ எப்படி இங்க?”
“அக்கா நான் படிக்கிற காலேஜ் திருவனந்தபுரத்துல இருக்கு? ப்ளஸ் டூ முடிச்சி நேரே இங்க வந்துட்டேன். ஊரை உறவை மறந்த மாதிரி உடன்பிறப்பையும் மறந்தாச்சா?”
“ஏன்டா?” என்றவள் கண்கள் கலங்க, “உங்களை மறந்திருந்தா ஒண்ணு நான் பைத்தியமா இருக்கணும். இல்லைன்னா இந்த உலகத்திலேயே இல்லாமல் இருக்கணும்.”
“ஏய்!” என்று அனைவரும் அதட்டல் போட…
“பிறந்தநாள் அதுவுமா… உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. மும்பையில் இருக்கும்போதே இழுத்துட்டு வந்திருக்கணும். அப்படிச் செய்யாததால்தான் வாய் அதிகமா போயிருச்சி.” கோபம் குறையாமல் கத்தினான் சபரி.
“அப்படியா? எத்தனை இஞ்ச் அதிகமாயிருச்சாம். ஏன்டா பாப்பு அம்மாவுக்கு வாய் பெருசாகிருச்சா என்ன?”
“அப்பா சும்மா சொல்றாங்கம்மா. என் அம்மா எப்பவும் அழகு” என்று செல்லம் கொஞ்சினாள். அவர்கள் இருவரின் கொஞ்சலை சற்று கோபம் தணிந்து பார்த்திருந்தான்.
“சரி டைமாகுது. கேக் கட் பண்ணலாம். பரத் தையல் மிஷின்கிட்ட இருக்கிற ஸ்டூலை எடுத்து ஹால்ல வை” என்ற கட்டளையைத் தொடர்ந்து, சூர்யாவிற்கும் ஹரிணிக்கு புது ஆடை கொடுத்து மாற்றி வரச்சொல்ல… அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் வீடே மாறியிருந்தது. அதைக் கண்ட சூர்யா வியப்பில் விழிவிரிக்க…
“போதும் வெள்ளச்சி. எக்ஸ்ப்ரஷனை மாத்து. இல்ல நான் மாத்த வைக்க வேண்டியிருக்கும்” என காதோரம் கிசுகிசுப்பாய கேட்ட சபரியின் குரலில் வேகமாக முகபாவனை சரி செய்து, “பாப்பாவுக்கும் இன்னைக்குதான் பிறந்தநாளா?” என்றாள்.
[the_ad id=”6605″]
“ஆமா. நான்காவது பிறந்தநாள்” என்றதும், “பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பு” என்று கொஞ்ச… “அம்மா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கலர் ட்ரஸ்” என்று சூர்யாவின் சுடிதாரையும், தன் ப்ராக்கையும் காட்ட… “சூப்பர்” என்று குழந்தையிடம் ஹைபை கொடுத்தாள்.
“வெள்ளச்சி கேக் வெட்டுறதுக்கு முன்ன முக்கியமான விருந்தாளியை அழைச்சிரலாம்.”
“இன்னுமா? யார்மா?” என்றவளுக்கு உள்ளுர ‘அப்படியும் இருக்குமோ?’ என்ற எண்ணம் எழ, மானசீகமாகத் தலையில் தட்டி யாரென்பதாய் வாசல் பார்த்தவள் எண்ணம் போலவே பூவரசி நின்றிருந்தார்.
தாயைக் கண்டதும் சொல்ல முடியாதொரு ஆனந்தம் எழ “அம்மா” என சந்தோஷச் கூச்சலிட்டு தாயைக் கட்டிக்கொண்டாள் சூர்யோதயா!