‘அதுவுமில்லாமல் பிள்ளைகளைப் பெற்றதே காலம் முழுவதும் தன்னை உழைத்துக் காப்பாற்ற என்ற எண்ணமுண்டு தர்மராஜனுக்கு. உண்ண உறங்க என்றிருந்திருந்தால் கூட, பிள்ளைகள் போகிறதென்று விட்டு விடுவார்கள். தர்மராஜனோ கையில் பத்து ரூபாய் பணம் தரவில்லையென்றாலே, மனைவி பிள்ளைகளைத் தரக்குறைவாகப் பேசி மற்றவர்களிடம் நியாயம் கேட்பவர். உலகிலேயெ கவலையற்ற மனிதன் யாரென்று கேட்டால் யோசிக்காது சொல்லிவிடலாம் அது தர்மராஜனென்று!’
“ஹலோ மாமா சார்! பார்த்துப் பேசுங்க. இதுவரை உங்க குடும்பத்துப் பிரச்சனைன்னு கோபம் வந்தாலும் அடக்கிட்டு அமைதியா விலகியிருக்கேன். என்னைப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.”
“அப்ப உனக்கு இங்க என்ன வேலை?
சூர்யாவை நோக்கிக் கைநீட்டி, “இவள் என் அத்தை பொண்ணு. பார்க்கணும் தோணிச்சி வந்தேன். பார்க்கக்கூடாதுன்னு அவள் சொல்லட்டும் நான் இந்தப்பக்கமே வரமாட்டேன்” என்றான்.
“அவளோட அப்பா நான் சொல்றேன் பார்க்காத. முதல்ல எல்லாரும் இங்கயிருந்து கிளம்புங்க. உன்னையும் சேர்த்துதான்” என்று இசக்கியை நோக்கிக் கைநீட்டி மனைவியைப் பார்த்து, “நீ இவள்கிட்ட பேசப் பேசதான் என்னை எதிர்த்துப் பேச ஆரம்பிச்ச. அதுக்கு முன்ன வாயே திறக்கமாட்ட.”
மேலும் என்ன பேசியிருப்பாரோ, “அப்ப கடைசிவரை அடி வாங்கிட்டே இருக்கணும்னு சொல்ல வர்றீங்களா மச்சான்? அடிச்சிட்டே இருந்த கை இப்ப அடிக்க ஆளில்லாம துறுதுறுன்னு வருதோ? இதோதான் நிற்கிறா. அடிங்க” என்று தோழியை அவள் கணவனிடம் தள்ளிவிட…
“ஏன் அடிக்கமாட்டேன் நினைச்சியா?”
“நாங்க யாரும் அப்படிச் சொல்லலையே. அடிக்கக் கையிருந்தால்தான அடிக்க முடியும்” என்று சூர்யாவும் பரத்தும் ஒருசேரச் சொல்லி தாயைத் தங்களிடம் இழுத்து, “எங்களுக்கு விவரம் தெரியுறதுக்கு முன்ன வரை உங்க பொண்டாட்டியை அடிச்சிருக்கலாம். இப்ப இவங்க எங்க அம்மா மட்டும்தான்” என்றார்கள் இருவரும்.
தர்மராஜனோ கோபத்திலும், “என்ன சொல்ல வர்றீங்க?” என…
“டேய் தம்பி! புரியலையாம்டா?” என்றாள் கேலியாக.
“புரிஞ்சிருந்தா இந்த மிரட்டல் எப்பவோ அடங்கியிருக்கும்கா.”
“நீங்க கட்டின தாலி எங்கம்மா கழுத்துல இருந்து தொலைந்து… எத்தனை வருஷம்மா?” என்று தாயிடம் சந்தேகம் கேட்டு, “ஹான்! பனிரெண்டு வருஷமாகுது. அது உங்களுக்கும் தெரியும். என்ன செஞ்சிட்டீங்க உங்க பொண்டாட்டிக்கு? தொலைஞ்சது தெரிஞ்சதும் பதறியடிச்சி புதுசு வாங்கிக் கட்டியிருந்தா உங்களைப் புருஷன்னு சொல்வாங்க. தொலைஞ்சதுடா தொல்லைன்னு இருக்கிற நீங்க புருஷனா? தாலி இல்லன்னா அந்தப் பெண்ணுக்கு என்ன பெயர்னு படிச்ச மேதாவியான உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?”
இத்தனை வருட அவமானம், ஆதங்கம், ஆத்திரம், இயலாமை அனைத்திற்கும் சேர்த்தே கேட்டாள்.
“அப்படிக் கேளுக்கா. நான் எதைக் கேட்டாலும் சின்னப்பையன்னு, அம்மாவே என்னை கேட்கவிடாம அடக்குறாங்க” என்று தன் ஆதங்கத்தையும் கொட்டினான்.
“உன் அம்மா கொழுப்பெடுத்துத் தொலைச்சா நான் என்ன பண்ணமுடியும்? யாரோ ஒருத்தனுக்காக என்னை அசிங்கப்படுத்துறீங்கள்ல? முதல்ல உள்ளவன் மாதிரி இவனும் இவளை விட்டுட்டுப் போறானா இல்லையா பாரு” என்று மனைவியை நோக்கிச் சாபமிட்டபடி வெளியே செல்ல…
கோபத்தில் அடிக்கவே தயாராயிருந்த இளையவர்கள் கைகள் இறுகிப் பின் தளர்ந்தன.
“நீ இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத வெள்ளச்சி. உன் அப்பா புதுசா பேசுறாரா என்ன?”
[the_ad id=”6605″]
“சாரிம்மா. என்னால உங்களையும்…” இசக்கியிடம் மன்னிப்பு கேட்டாள் சூர்யா.
“இசக்கி தெரியாத ஊர்ல கோவிச்சிட்டு போயிருக்கார்” என்று பூவரசி கணவருக்காய் சொல்ல…
“நீயெல்லாம் திருந்தவே மாட்டடி. என்ன புருஷன் மேல புதுசா பாசம் பொங்குது?” என்று ஊர்ப்பட்ட கடுப்புடன் கேட்க…
“ப்ச்… பாசம்லாம் இல்லடி. கையில் காசு கிடையாது. நம்மகிட்ட வாய்குடுத்த மாதிரி எங்கயாவது எக்குத்தப்பா பேசி வம்பிழுத்து வந்தா நமக்குத்தான சிரமம்.”
“அந்தளவு லூசு கிடையாது உன் புருஷன். அதை விடு மதியத்துக்கு சமைக்கலாம் வா” என்று கிச்சன் சென்று பாத்திரம் தேட, அங்குச் சின்னதாக சிலதே இருக்க… “நீ சாப்பிடுறியா இல்லையா வெள்ளச்சி? சமைக்க சரியான பாத்திரம்கூட இல்லை.”
“நான் மட்டும்தானம்மா. காலையும் இரவுக்கும் மட்டுமேன்றதால எதாவது மாவு பாக்கெட், கோதுமை இல்ல நூடுல்ஸ், ரவை மாதிரி எதாவது செஞ்சி சாப்பிடுவேன்.”
“விட்ல அரிசி கிடையாதா?”
“இருக்குதே. ஐந்து கிலோ இருக்கும். எப்பவாவதுதான் சாப்பாடு வைக்கிறது” என்று அசடு வழிய சிரிக்க… ஏனோ அவள்படும் கஷ்டம் அனைவருக்கும் கவலையைக் கொடுத்தாலும், அதையும் மீறிய அவளது சந்தோஷம் நிம்மதியைக் கொடுத்தது எனலாம்.
உணவு செய்ய பாத்திரங்களை ரவியும் பரத்தும் வாங்கி வர, இரு அம்மாக்களும் சமையல் ஆரம்பிக்க… உதவி செய்ய வந்த சூர்யாவை பேசிக் கொண்டிருக்கச் சொல்லி அனுப்பினார்கள்.
“மச்சான் உங்க கார் செம ஸ்மூத்தா போகுது. செல்ஃப் டிரைவிங்கா?”
“ஆமா பரத். இதுக்கு ஏன் டிரைவர் போடணும்னு எனக்கு நானே உதவி செய்துக்கறேன்.”
“சபரி மச்சான் உங்ககிட்டக் கார் இருக்கா? ஆமா என்ன வேலை செய்றீங்க? இங்க எப்படி நீங்க?”
“அதையெல்லாம் இன்னொரு நாள் கேட்டுக்கோ வெள்ளச்சி. எப்படியிருக்க? என்ன வேலை செய்யுற?” என்று அண்ணனாய் அக்கறையுடன் கேட்டான் ரவி.
“சூப்பராயிருக்கேன்ணா. ஃபேஷன் வேர்ல்ட்! இந்தியா லெவல் மாடலிங் கம்பெனி. இப்ப உலகத்தரத்துக்கு உயர்த்துற முயற்சி நடக்குது. அதுல டிசைனரா இப்பதான் ஜாய்ண்ட் பண்ணியிருக்கேன். அப்படியே கரஸ்ல படிச்சிட்டிருக்கேன்.”
“ம்… பெரிய ஆளாகிட்டீங்க. ஹேய் வெள்ளச்சி! டிசைனிங்கிற்கு ஃபேஷன் டெக்னாலஜி படிச்சிருக்கணுமே? எந்த குவாலிபிகேஷனும் இல்லாம் உன்னை எப்படி எடுத்தாங்க?”
“அண்ணா எனக்குத் தையல் தெரியும்.”
“ஓய்! வீட்ல தையல் கத்துக்கிறதும் ஃபேஷன் டிசைனரிங் படிப்பும் ஒண்ணா?”
“இல்லன்னு எனக்கும் தெரியும். ருத்ரன் அண்ணா ரெகமண்டேஷன்ல சும்மா ஹெல்பராதான் போனேன். அங்க சிக்ஸ் மன்த் ப்ராக்டீஸ். ஹாஸ்டல் வந்த பிறகு போரடிக்குதுன்னு சின்னச் சின்னதா ஆரம்பிச்ச என் மாடலை, எனக்கு டிசைனராகவும் மேனேஜருமாக இருந்தவர்கிட்டக் காட்டினேன். முதல்ல இதென்ன அசிகப்பிரசிங்கித்தனம்னு திட்டிட்டு, அதை எடுத்துட்டுப்போய் எம்.டிகிட்டக் காண்பித்து அவரோடதுன்னு சொல்லி நேம் வாங்கிட்டார். ஸ்ரீகர் சார் அதைக் கவனிச்சி மேலிடத்துல சொல்ல, அங்கயிருந்தா என் திறமை வெளிவராதுன்னு இங்க அனுப்பிட்டாங்க.”
“கொஞ்ச நாள் முன்னதான் என்னோட தனி டிசைனிங்கிற்கான அங்கீகாரம் கிடைச்சிருக்கு. அதுவும் என்னோட நேம்ல எவ்வளவு சந்தோஷமாயிருந்தது தெரியுமா? இப்ப எனக்குன்னு ஒரு நேம். அம்மாவைப் பார்த்து உடனே சொல்லணும் ஆசை. இருந்தாலும் ஊருக்குப் போகத்தோணல.”
“வெள்ளச்சி பிறக்கும்போதே சொன்னேன்ல பூவு இவள் சாதிப்பாள்னு.”
“சந்தோஷம்தான் இசக்கி. ஆனா, அவளோட வாழ்க்கை? அவள் வாழ வேண்டாமா இசக்கி? அவளுக்குன்னு ஒரு குடும்பம் இருந்தா என் ஆன்மா சாந்தியடையும் இசக்கி.”
“லூசு மாதிரிப் பேசாத பூவு.”
“லூசுதான் இசக்கி. கட்டினவன் சரியில்லாததால, பிள்ளைகளைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியாம வேலை வேலைன்னு போயி என் பொண்ணுக்கு தாயன்பைக் கொடுக்கலையே. அவள் பிறந்தப்பவே குழந்தையை நல்லா பார்த்துக்கன்னு நீ சொன்ன. என்னால பார்த்துக்க முடியலை இசக்கி.”
“விட்டா பேசிட்டேயிருப்ப. பிள்ளைங்க பசியில இருக்காங்க. ஒழுங்கா வேலையைப்பாரு” என்று அதட்டலிட… பூவரசியோ அதைக் கவனிக்காது, “இவளை நான் நாலாவதா பெத்திருக்கக்கூடாதுடி. என்னை மாதிரியே கல்யாண வாழ்க்கை சரியில்லையே” என்று புலம்பலைத் துவங்க…
“பூவு நாலாவது பொண்ணு நாய்படாத பாடுன்னு யார், எந்த அனுபவஸ்தர் சொன்னதுன்னு தெரியாது. நிஜத்திலும் நிறைய பார்த்திருக்கோம்! பார்த்துட்டும் இருக்கோம்! அந்த நிஜத்திலும் இன்னுமொரு உண்மை ஒழிஞ்சிருக்கு.”
“இதுல எந்த உண்மையைக் கண்டுபிடிச்ச?”
“சொல்றதுக்குள்ள என்ன அவசரம்? பிறந்த வீட்ல எந்தவித கஷ்டமும் இல்லாம சுகமா வாழ்ந்தவங்க, புகுந்த வீட்ல நிறைய கஷ்டப்படுவாங்களாம். பிறந்த வீட்ல கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சவங்க, புகுந்த வீட்ல ஜெகஜோதியா வாழ்வாங்களாம்.”
“அப்ப சூர்யா கல்யாணம் ஏன் தோத்தது இசக்கி?”
“விதிப்பயனை கடக்கணுமே பூவு. அவளுக்கு சபரிதான்றப்ப, விக்னேசுடனான கல்யாணம் எப்படி நிலைக்கும்? இப்ப உன் பொண்ணு சொந்தக் கால்ல நிற்கிறா? அவளோட ஒவ்வொரு பேச்சிலும் நிறைய தன்னம்பிக்கை தெரியுது. சாமான்யமா கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டா. ஒத்துக்க வைக்கிறது ரொம்பவே கஷ்டம்.”
“என்ன இசக்கி இப்படிச் சொல்ற? அப்ப சபரி மேல அவளுக்கு விருப்பம் இல்லையா?”
[the_ad id=”6605″]
“ப்ச்… பூவு! சபரியை அவளுக்குப் பிடிக்கும். அவன் பொண்ணை அதைவிடப் பிடிக்கும். அவனைக் காதலிக்கிறாளா கேட்டா தெரியாது. வாழ்க்கையில மிகப்பெரிய அடி அவளோட கல்யாணம். அதை ஜீரணிக்கவே நிறைய டைம் எடுக்கும். இப்ப சபரியை அவள் வாழ்க்கையில நுழைச்சா ஏத்துக்கமாட்டா.”
“நான் அவசரப்பட்டுட்டேன் இசக்கி. அவள் கல்யாணத்துக்கு முன்ன உன்கிட்டப் பேசியிருக்கணும். அப்படிப் பேசியிருந்தா என் பொண்ணு என்ன நினைக்கிறாள்னு தெரிஞ்சிருக்கும். விரும்பிக் கேட்கிறவன் நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சேன். இப்படியாகும்னு கனவுல கூட நினைக்கலையே இசக்கி” என்று கண்ணீர் சிந்த…
“நீ என்கிட்டக் கேட்டிருந்தா சபரியைத்தான் சொல்லியிருப்பேன். அப்ப நீ சம்மதிச்சாலும் உங்க வீட்ல இரண்டாம் தாரம்னு ஒத்துட்டிருக்க மாட்டாங்க பூவு.”
“சூர்யாகிட்ட நான் பேசி ஒத்துக்க வைக்கிறேன் இசக்கி.”
“பிடிச்சிருந்தாலும் ஒத்துக்கிறது கஷ்டம்டி.”
“நான் சம்மதிக்க வைக்கிறேன்” என திடமாகச் சொல்ல.
“உன்னால முடியாது பூவு.”
“முடியும்! முடியணும் இசக்கி. நான் செத்தாவது என் பொண்ணை வாழவைப்பேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
“வாய்ல போட்டேன்னா பாரு. திரும்பத்திரும்ப சாவைப்பத்தி பேசுற. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம். அப்படியே விட்ருவோம் நினைச்சியா? இப்ப அமைதியா சமையலைப் பாரு. மத்ததை பிறகு பேசலாம்” என்றார்.
“பிறந்ததிலிருந்து பிறந்தநாள்னு ஒண்ணு நாங்க கொண்டாடினதே இல்ல மச்சான். மற்ற நாள் போலதான் அந்த நாளும் கடந்து போகும். முதல் முறையா கேக் கட் பண்ணி ரொம்ப சந்தோஷமாயிருக்கு. அதுவும் என் செல்லப் பொண்ணுக்கும் என் பிறந்த நாள்ன்றப்ப சொல்ல வார்த்தையேயில்ல.”
“இனிமேல் வருஷா வருஷம் கொண்டாடிரலாம் உதயா.”
“அதெல்லாம் அப்ப பார்க்கலாம். இப்ப சீக்கிரமா பாப்பாவுக்கு ஒரு அம்மா கொண்டு வாங்க மச்சான். அம்மா இல்லாம வாழ்றது கஷ்டம் தெரியுமா?”
“அவளுக்கு அம்மா இல்லன்னு யார் சொன்னா?”
‘எப்போ’ என்பதாய் அவனைப் பார்க்க…
“அவள் அம்மா மடியிலதான் உட்கார்ந்திருக்கா. வேற எந்த அம்மாவும் அவளுக்குத் தேவையில்லை. வேணும்னா அவள் அம்மாவை எனக்கு மனைவியா பிரமோட் செய்யலாம்.”
“அட அட என்ன ஒரு பிரபோசல் மச்சான்” என்று ரவி ராகமிழுக்க…
“அக்கா சரி சொல்லிறேன். எனக்கு சபரி மச்சான் டபுள் இல்ல நிறைய ஓகே” என்றான் பரத்.
“எனக்கு எந்த ஆண் துணையும் தேவையில்லை” என்று முகம் சுருக்கி தன் பிடித்தமின்மையைக் காண்பித்தாள்.
“உனக்கு யார் கேட்டது. நான் கேட்டது என்னோட துணைக்கு இணையா வர்றியான்னு.”
“என்னால முடியாது” என்றாள் கோபமாக.
“உன்னால மட்டும்தான் முடியும்” என்றான் பிடிவாதமாக.
“சொன்னா கேட்கமாட்டீங்களா? எனக்கு யாரும் வேண்டாம்.”
“ஆமா. உனக்கு என்னைத் தவிர யாரும் வேண்டாம்” என்று அவளை மடக்க…
கையில் சிக்கிய எதையோ எடுத்தவள் சபரியின் மேல் விசிறியடித்து திரும்பிப்பார்க்காது குழந்தையுடன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
அவள் விசிறிய கத்திரிக்கோல் சபரியின் நெற்றியில் குத்திக் கீழே விழ… “மச்சான்…” என்று இருவரும் அருகில் வந்தார்கள். ரவி கர்சீப் எடுத்து இரத்தம் வந்த இடத்தில் வைக்க…
[the_ad id=”6605″]
“சாரி மச்சான். அக்கா சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். கோபத்துல தெரியாம பண்ணிட்டா” என்று பரத் சபரியிடம் மன்னிப்பை வேண்டினான்.
“விடுடா என் பொண்டாட்டிதான? சம்சார வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம்” என்றான் இலகுவாகவே.
“பரத் பக்கத்துல ஐஸ் கட்டி கிடைச்சா வாங்கிட்டு வா. நெத்தியில நரம்பு கட்டாகியிருக்கும் போல. கையை எடுத்தா இரத்தம் சர்ருன்னு அடிக்குது.”
“நாம ஹாஸ்பிடல் போகலாம்ணா.”
“போகலாம்டா. அதுக்கு முன்ன ப்ளட் லாஸாகுது பாரு. கொஞ்சம் நிறுத்திக்கலாம்” எனவும் பரத் வேகமாக வெளியே சென்றான்.
கிச்சனிலிருந்து ஏதோ பிரச்சனையென்று வந்த இருவரும் சபரி நிலைகண்டு பதறி விசாரிக்க…
“கார் சாவி கையில வச்சி சுத்திட்டிருந்தேன். எப்படியோ கீ செயின் கிழிச்சிருச்சி அத்தை.”
“பொய் சொல்லாத சபரி. என்ன நடந்ததுன்னு சொல்லு?”
“வேணும்னா பாருங்க” என்று அவர்கள் அரவம் கேட்டதும் கீ செயினின் கம்பியை வளைத்திருந்ததைக் காண்பித்து, “பேச்சுவாக்குல இப்படி கையை வீசிட்டேன்” என்று செய்து காண்பித்தான்.
“நிறைய இரத்தம் போன மாதிரியிருக்கே. எங்க காயத்தைக் காண்பி?” என்று ரவியின் கரத்தை நகர்த்த வந்த இரத்தத்தைப் பார்த்து பயந்தவர், “என்னடா பைப் மாதிரி அடிக்குது” என்று அலற…
இசக்கியின் குரல் கேட்டு வெளியே வந்த சூர்யா சபரியின் நெற்றியிலிருந்து ஊற்றிய இரத்தம் கண்டு அதிர்ந்து நிற்க… தன் பின்னே வந்த குழந்தையைக் கண்டு ரூமிற்குள் அழைத்துச் சென்று, அவசரத்திற்கு வேறு வழியில்லாது செல்லில் கார்ட்டூன் ஓடவிட்டு, “பாப்பு அம்மா கூப்பிடுறப்ப வெளியில வரணும். இப்ப விளையாடு” என்று குழந்தையின் சம்மதம் வாங்கி வெளியே வந்தாள்.
ஏனோ உடலிலும் உள்ளத்திலும் ஏதோ ஒன்று பாரமான உணர்வு. மனதின் ஓசைகள் வேகமாகக் கேட்கிறது. இதயம் தாறுமாறாகத் தவிக்கிறது. இதுபோல் உணர்வுகள் சூர்யாவிற்கு இப்பொழுதுதான் அறிமுகம். அவன் இரத்தத்தைக் கண்டதில் இவள் உயிர் துடிக்கிறது. அதை உணரும் காலம் எப்பொழுது வருமோ!