16
கண்கள் கலங்க தயங்கி சபரியினருகே வந்தவள், “சா..ரி மச்சான். என்னாலதான் உங்களுக்கு… என்னை மன்னிச்சிருங்க” என்றாள்.
“நீ ஏன் சூர்யாமா மன்னிப்பு கேட்கிற?” பூவரசி கேட்க…
“நான்தா…”
“இவள் வீட்டுக்கு வந்த இடத்துல இப்பா ஆகிருச்சில்ல அத்தை. அந்த டென்ஷன்ல மன்னிப்பு கேட்கிறா” என்றவன் சூர்யாவிடம் ‘எதுவும் சொல்லாதே’ என்று கண்காண்பிக்க… அழுகைதான் வந்தது அவளுக்கு.
அவளின் அழுகையைக் காண சகிக்காது ஆறுதலாக எழுந்த கையோ கீழே இறங்க, “அழாத உதயா. சின்ன காயம்தான் சரியாகிரும்” எனும்போதே பரத் அருகிலிருந்த கடையில் வாங்கி வந்த ஐஸ் கட்டியை வைத்து அழுத்த… சபரியின் சுருங்கிய முகம் சூர்யாவின் அழுகையை இன்னும் அதிகப்படுத்தியது.
சில நிமிடங்களில் காயத்தில் இரத்தக்கசிவு மட்டுமே இருக்க அதையும் நிறுத்த முயற்சித்து டாக்டரிடம் செல்லக் கிளம்ப… காருக்குச் செல்லும் முன் சூர்யாவிடம் வந்த சபரி, “உன் பொண்ணு ரெண்டு நாள் உன்னோடவே இருக்கட்டும். அத்தை ஊருக்குக் கிளம்பும்போது கூப்பிட்டுக்கிறேன்” என்க.
“நீ..ங்க எங்க தங்குவீங்க?”
“என் வீட்லதான்.”
“உங்க வீடு இங்கேயா இருக்கு?”
“ஆமா. இசக்கி அத்தை குடும்பமும் இங்கதான் செட்டிலாகிருக்காங்க. இதைக்கூடவா நீ தெரிஞ்சிக்கலை?” அவளின் மறுப்பான தலையசைப்பில், “சரி விடு. எதையும் யோசிக்காம அமைதியா உன் பொண்ணோட நேரத்தை போக்கு” என்று நகர…
“மச்சான் சாரி” என்றாள் திரும்பவும்.
அவளருகில் வந்தவன் கையை அவள் முகத்திற்கு நேராய் கொண்டு போகவும், அவள் ஓரடி பின்னே செல்ல, புன்னகையுடன் அவளை நெருங்கி கண்ணீரைத் துடைத்து, “இது எனக்கான கண்ணீர். அதைத் தொட்டுத் துடைக்கிற உரிமை எனக்கு இருக்கு. சின்ன அடிக்கு இப்படி அழுகுறியே பொண்டாட்டி” என்று கண்சிமிட்ட… அவள் முறைக்க… அவன் சிரிக்க… மற்றவர்கள் அவர்களைக் கவனியாது போல் நின்றார்கள்.
“இரண்டு நாள் நீயும்! உன் பொண்ணும்! லீவு போடுவியோ இல்ல கூடவே கூட்டிட்டுப் போவியோ அது உன் இஷ்டம்.”
“தேங்க்ஸ் மச்சான்.”
“உன் பொண்ணை கூட வச்சிக்க தேங்க்ஸ் சொல்லுவியா? போமா போய் பொழைப்பைப்பாரு” என்று கேலிபோல் குழந்தையை விட…
“நீங்க போய் காயத்துக்கு மருந்து பாருங்க” என்று அதே தொணியில் சொல்லி புன்னகைத்தாள்.
அவள் தலையில் கைவைத்து, “ரெண்டு பேரும் பத்திரமாயிருங்க” என…
[the_ad id=”6605″]
“நாலு பேர் மச்சான்” என பட்டென்று சொல்ல… சிறு புன்னகையுடன் பின் சீட்டில் அமர்ந்து தலைசாய்த்து கண்மூடிக் கொண்டான். எப்படி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வது என்ற கவலை அதிகரிக்க, அவனின் முதல் மனைவி கண்முன் தோன்றி, ‘உன்னையெல்லாம் எவள் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவா. நானே உனக்குப் பெருசு. அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதை விட்டுட்டு பெருசா பேசுற’ என்று கேலி பேசுவது போலிருந்தது.
‘மது!’ மது என்ற பெயர் கேட்டாலே அவளின் துரோகம் நினைவு வந்து கோபம் அதிகரிக்கும். அந்நேரம் அவனின் தாய் சிக்கினால் ஒரு வழியாக்கிவிட்டே அடங்குவான். ‘அன்று தாயின் அவசரம் இல்லையென்றால், இன்று இருவருக்குமே வேறு வேறு வாழ்க்கை அமைந்து அது தோற்று, திரும்பவும் சேருவோமா? இல்லையா? என்று பூவா தலையா போட்டுக்கொண்டா இருப்பான். சூர்யாவிற்குத் திருமணம் பேசும் போதே மாமா உன் பொண்ணைக் கொடுன்னு தூக்கியிருக்க மாட்டானா!’
இன்றோ எல்லாம் தலைகீழ். மது, விக்னேஷ் இருவரின் சுயநலம் அவர்களுக்குத் துணையாக வந்த இருவரின் வாழ்க்கையை இன்னமும் பந்தாடிக் கொண்டிருக்கிறது.
“மச்சான்.”
ரவியின் அழைப்பில் கண்திறந்த சபரி ரவியைக் காண்கையில், தான் அவன் தங்கையின் மேல் கோபமாக இருக்கிறேனோ என்கிற தவிப்பு தெரிய, “ஏன்டா இப்படித் தவிக்கிறீங்க? இதுக்காகலாம் உன் தங்கச்சியை விட்டுருவேனா? எங்கள் பந்தம் யாராலும் பிரிக்க முடியாததுடா. பதிலுக்குப் பதில் பேசினதுல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டா. அவளை மாத்திக்க டைம் எடுக்கும். காத்திருப்பு ஒண்ணுதான் இப்ப இருக்கிற ஒரே வழி” என்று கண்மூடி சீட்டில் சாய்ந்தான்.
சீக்கிரமே சகோதரியின் மனம் மாற மனதார வேண்டினார்கள் சகோதரர்கள்.
ஹாஸ்பிடல் சென்று வீட்டினுள் நுழைய சபரியின் போன் இசைத்தது. போனை அட்டெண்ட் செய்து, “சொல்லுங்க அத்தை?” என்றான் இசக்கியிடம்.
“ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாச்சா?”
“உங்க பொண்ணு பக்கத்துல நின்னு பார்த்திட்டிருக்காளா?”
“ம்… உனக்கு எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம், துடிப்புன்னு அமைதியில்லாம நிற்கிறா.”
“அப்படியே ஸ்பீக்கர்ல போடுங்கத்தை. அவளோட பதற்றத்தை இன்க்ரீஸ் பண்ணிடலாம்.”
“ஏன்டா?” என்று கடிந்தார் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“நீ போடு இசக்கி. அப்புறம் நடக்கிறதைப் பாரு” என்றதும், ‘என்னவோ செய்’ என்பதாய் ஸ்பீக்கரில் மாத்தி, “என்னடா பதிலே சொல்லலை. டாக்டரைப் போய்ப் பார்த்தியா? இல்லையா?”
“பார்த்தாச்சி அத்தை. மூணு தையல் போட்டிருக்காங்க. இங்க உதவக்கூட ஆளில்லை. தலைவலி வேற பயங்கரமா பின்னி எடுக்குது அத்தை” என்றவன் குரலில் அத்தனை சோர்வு.
‘நான் உன்னைப் பின்னி எடுக்கப்போறேன்டா மருமகனே’ என மனதினுள் திட்டி, “ஏன் நம்ம பசங்களை எங்க?”
“அவங்க என்னை தூங்கி ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு தலயோட படம் பார்க்கப் போயிருக்காங்க” என்றதும் அருகிலிருந்த மச்சினன்கள் இருவரும் முறைக்க… அசட்டுச் சிரிப்பை அவர்களுக்கு அளித்தான்.
“நீ ஏன்டா விட்ட? இரு அவங்களுக்கு போன் செஞ்சி திட்டுறேன். சரி இப்ப உனக்குத் துணையா யாரிருக்கா?”
“துணையா? எனக்கு என் பொண்ணும்… என் பொண்ணுக்கு நானும்தான் அத்தை துணை. அந்தத் துணையையும் இப்ப அவள் அம்மாகிட்ட விட்டிருக்கேன். தனிமை பழகிப்போயிருச்சி அத்தை” என்றவன் குரல் வலுவிழந்து வந்தது. சூர்யாவை எமோஷனலாக்க நினைத்தவன், அதை மறந்து தான் பிதற்ற ஆரம்பித்தான்.
அவன் குரலிலிருந்த வருத்தமும் அளவில்லா வேதனையும் சூர்யாவைப் பாடாய்ப்படுத்தியது. ‘ஏன் இப்படியிருக்காங்க? அவங்க வாழ்க்கையில அப்படி என்னதான் நடந்திருக்கும்? ஏனிந்த விரக்தி?’ தெரிந்து கொள்ள வேண்டும்போல் மனதெல்லாம் தவிப்பு.
“நான் அம்மாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லட்டுமா சபரி?”
“அம்மாவா! வேண்டாம் அத்தை.”
“எது நடந்திருந்தாலும் அவங்க உன் அம்மாடா. உன் நலம் அவங்களுக்கு முக்கியம்.”
“கொன்னு புதைச்சிட்டு நல்லாயிருக்கியா ராசான்னு கேட்டா, நல்லாயிருந்திருவோமா அத்தை? எவ்வளவு மறுத்தேன். அதெல்லாம்… ப்ச்… விடுங்க. சொந்தம் விட்டுப் போகக்கூடாது. எனக்கும் நல்லது செய்றேன்னுதான அவசரப்பட்டாங்க. இதை அவங்களே எதிர்பார்த்திருக்க மாட்டாங்கள்ல.”
“சபரி! பழசை மறந்திருடா.”
“மறக்கத்தான் நினைக்கிறேன் அத்தை. என்னோட தனிமை எதையும் மறக்க விடமாட்டேன்னுது.”
அவனின் வேதனை தாளாது, “மச்சான் பாப்பாவைக் கூட்டிட்டுப் போங்க” என்றாள்.
அவள் குரல் கேட்டதும் தான் போன் செய்த காரணம் உரைக்க தன்னையே கடிந்து, “அத்தை ஸ்பீக்கர்லயா போட்டிருந்தீங்க? நான் பாட்டுக்கு என் சோகத்தைச் சொல்லிட்டிருக்கேன். ஏன் அத்தை?” என்றான் தேர்ந்த நடிகனாய்.
‘உன்னை நேர்ல கவனிச்சிக்கிறேன்டா’ என்று இசக்கி மனதினுள் திட்ட…
“நான்தான் மச்சான் போடச் சொன்னேன்” என்று பழியை தன் மீதே போட்டு, “என்கூட அம்மாங்க இருக்காங்க மச்சான். நீங்க தனியா இருக்க வேண்டாம். வந்து பாப்பாவை கூட்டிட்டுப் போங்க.”
“வேண்டாம் உதயா. தனிமை பழகிப்போனதுதான். பாப்பாவுக்கும் உன்னோட இருக்கிறது சேஞ்சா இருக்கும். என்னை மட்டுமே எத்தனை காலம் பார்த்துட்டிருப்பா. அம்மா உன்னோடவும் இருக்கட்டுமே! உனக்கும் மைண்ட் ரிலாக்ஸா இருக்கும்.”
“சரிடா அவளை இங்கேயே வச்சிக்கிறோம். மூணு பேரும் சாப்பிடாம போயிட்டீங்க. இங்க சமைச்சி வச்சதை யார் காலி பண்றதாம்?”
“இந்தத் தடியனுங்களை அனுப்புறேன் அத்தை.”
“அவனுங்கதான் படத்துக்குப் போயிட்டாங்களே. அதுவும் தல படத்துக்கு” என்று சபரியை சூர்யாவிடம் மாட்டிவிடப் பார்க்க…
‘ஐயோ! மாட்டிட்டேனா’ என்ற பதற்றம் சபரிக்கு. ‘அத்தைய்ய்…’ மனதினுள் கடிந்து, “டிக்கெட் கிடைக்கலன்னு திரும்பி வந்துட்டாங்க. இதோ அனுப்பி வைக்கிறேன்” என்று சமாளிக்க, சீக்கிரமே வரச்சொல்லி போனை வைத்தார்.
அன்று முழுவதும் இரு தாய்களின் அன்பில் நனைந்து, குழந்தைக்கும் அதைக் குறையாது கொடுத்தவளுக்கு இழந்துவிட்ட அனைத்தும் கிடைத்த திருப்தி.
தன் அருகாமை மகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை உணர்ந்து, இதுவரை இருந்த விலகலைக் குறைத்து மடியில் படுக்க வைத்தார். தாயின் செயலில் வியப்பின் உச்சியிலிருந்த சூர்யா அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டவள் கண்களிலிருந்து சிறு துளியாய் நீர். எத்தனை வருடத்து ஏக்கம்! தாயை இன்னுமின்னும் கட்டிக்கொண்டாள்.
மகளின் அன்பில், தன்னைத் தீண்டிய அக்கண்ணீர்த் துளிகளில் பூவரசி உருகித்தான் போனாரோ!
“என் பொண்ணை இந்தளவுக்கு ஏங்கவிட்டிருக்க பூவு. என்கிட்டக் கொடுத்திருந்தா தங்கமா தாங்கியிருப்பேன்” என அவளின் தலை வருடியபடி இசக்கி சொல்ல…
“அம்மாவை குறை சொல்லாதீங்கம்மா. அவங்க எந்தத் தப்பும் பண்ணல. எங்கப்பா சரியா இருந்திருந்தா அம்மா ஏன் வேலை வேலைன்னு ஓடியிருக்கப் போறாங்க? அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்மா. அதனாலதான் தன் பிள்ளைங்களுக்கு எதுவும் ஆகாம, நல்லவிதமா வளருவாங்கன்ற நம்பிக்கையில இருந்தாங்க. சூழ்நிலையைக் குறை சொல்லலாமே தவிர அம்மாவைக் குறை சொல்லக்கூடாது.”
தன் மீதான கணிப்பைக் கேட்ட பூவரசியின் மனம், ‘தன் வளர்ப்பு சோடை போகவில்லை’ என்ற நிம்மதியைத் தந்தது. மகளின் உள்ளேயுள்ள ரணங்கள் எதையும் அறிய வாய்ப்பில்லையே.
‘வளர்ப்பு சோடை போகவில்லையா? எங்கே வளர்த்தார்?’ காட்டுச்செடி போல்தானே வளர்ந்து, தன்னையும் வளர்த்து பக்குவப்பட்டு நிற்கிறாள்.
[the_ad id=”6605″]
இசக்கிக்கு சபரியின் மூலம் சூர்யாவின் சிறு வயது கஷ்டம் ஓரளவு தெரியும் இருப்பினும் தோழியைக் கேட்க முடியவில்லை. ‘அவளுமே ஆசைப்பட்டா இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாள். ஒவ்வொரு நிமிடமும் பிள்ளைகளுக்காகத்தானே வாழ்ந்தாள். இதில் யாரைக் குறை சொல்வது. இதை இவர்கள் அனுபவித்தாக வேண்டுமென்பது அவன் செயல்’ என்றே தோன்றும்.
இசக்கியின் திருமணம் சிறு வயதில் நடந்திருந்தாலும் வருடங்கள் செல்லச் செல்ல ஒருவித பக்குவம் வந்திருந்தது. அவரின் கணவர் அழகரின் துணையும் அதில் அடக்கம். சூர்யா பிறந்த புதிதில்தான் கேரளா சென்று சுயதொழில் செய்து முன்னேறினார்கள். ஏழாவது படித்த இசக்கியின் படிப்பார்வம் பேப்பரில் தொடங்கி புத்தகத்தில் நிலைத்து, நல்ல கருத்துகளை மனதில் பதிவேற்ற தன்னம்பிக்கை வளர்ந்திருந்தது. அந்தத் தன்னம்பிக்கைதான் தவறென்று தெரிந்தால் நேருக்கு நேர் கேட்கவும் வைத்தது.
சில நிமிடங்களில் தாயின் மடியில் படுத்திருந்த சூர்யா மேல் ஹரிணி வந்து படுக்க, அவளின் தலை வருடி, “இவளும் அம்மா அன்புக்காக நிறைய ஏங்கியிருப்பாள்லம்மா. எனக்காவது அம்மா நீங்க ரெண்டு பேர் இருக்கீங்க. இவளுக்கு..?”
“அவளுக்குதான் நீ இருக்கியேமா. உன்னை விட ஒரு நல்ல தாய் இவளுக்கு யார் கிடைப்பாங்க?”
“அம்மான்னு கூப்பிடுறதுக்கும், அம்மாவாவே வாழ்றதுக்கும் வித்தியாசம் இருக்கும்மா.”
“அதுக்குத்தானமா நாங்களும் ஆசைப்படுறோம்.”
“ஆசைப்படுறதெல்லாம் நடந்திராதும்மா. அதெல்லாம் சும்மா. நான் எதுக்கும் ஆசைப்படுறதில்லை. என்னை வச்சி நீங்க எந்தக் கனவும் காணாதீங்க.”
“வெள்ளச்சி…”
“குழந்தை இருக்கா இசக்கிம்மா. இப்ப எதுவும் பேசாதீங்க” என்று பேச்சை நிறுத்தி குழந்தையுடன் ஐக்கியமானாள்.
மறுநாள் முழுவதும் ரவி கார் கொண்டு வர, சபரி தவிர அனைவரும் கேரளாவின் முக்கிய இடங்களைப் பார்த்து, இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பினார்கள்.
ரவியும் பரத்தும் சபரி வீட்டிற்குச் செல்லத் தயாராக… அரைத் தூக்கத்திலிருந்த குழந்தை எழுந்து அப்பாவிடம் செல்ல அடம்பிடிக்க… பூவரசி, இசக்கி, சூர்யா மூவரும் எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேட்காமல் பிடிவாதமாக நின்றாள்.
“ரவிண்ணா பாப்பாவை அவள் அப்பாகிட்ட விட்டுருங்க.”
“ஏன்மா? இருக்கட்டுமே” என்றாலும் குழந்தையின் பிடிவாதம் அதிகமாகவும் சரியென்று காரை எடுக்க, பரத் குழந்தையைத் தூக்கப்போக, சூர்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “அம்மாவும் வரணும்” என்று அழ ஆரம்பித்தாள்.
“என்னம்மா இவ இப்படிப் பண்றா?” என்று பூவரசியைக் காண…
“ஹரிணிமா ஆச்சி சொன்னா கேட்பல்ல. நீ மாமாவோட போ. அம்மா காலையில உன்னைப் பார்க்க வருவாங்க.”
“பொய் சொல்றீங்க. காலையில அம்மா வரமாட்டாங்க. அம்மா வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம். அப்பா தனியாயிருந்தா பயந்திருவாங்க” என்று சபரி மகளுக்கு சொன்ன சில கட்டுக்கதைகளைக் கொண்டு சூர்யாவிடம் சொல்ல… ஏனோ முந்தைய நாள் அவன் சொன்ன தனிமைக் கதை ஒருவித தவிப்பைக் கொடுக்க, அந்தத் தவிப்புடன் தாயைக் கண்டாள்.
“நீயும் போமா. அதான் உன் அண்ணனும் தம்பியும் இருக்காங்கள்ல.”
“இல்லம்மா நீங்களும் வந்தா நல்லாயிருக்கும்.”
“எனக்கு என் பொண்ணு இருந்த வீட்டில் இருக்கத்தான் பிடிச்சிருக்கு” என்றவரின் உள்மனது சொல்ல முடியா உணர்வில் தவித்துக் கொண்டிருந்தது.
“அப்ப பரத் நீ அம்மாங்களோட இரு. நானும் ரவிண்ணாவும் போறோம்.”
“போயிட்டு வர்றோம்னு சொல்லு சூர்யாமா” என்று மகளை அதட்ட…
[the_ad id=”6605″]
“சரிமா வர்றேன்” என்று கிளம்பினாள்.
பத்து நிமிட பயணத்தில் சபரியின் வீடு வர, வீடு இருக்கும் இடத்தையும் வீட்டையும் பார்த்ததுமே தெரிந்தது வசதியானவன் என்று. ஏனோ அங்கு செல்ல மனம் ஒத்துழைக்க மறுக்க குழந்தைக்காக சென்றாள்.
“என்ன வீடு இருட்டாயிருக்கு? மச்சானை எங்க?” ரவி வாட்ச்மேனிடம் கேட்க…
“சார் வெளியில எங்கேயும் போகலைங்க. உள்ளதான் இருக்கார். எப்பவும்போல வெளிய லைட் நான் போட்டுட்டேன். உள்ள ஏன் லைட் போடலன்னு தெரியல.”
‘என்னவோ’ என்று வேகமாக சென்று ஹாலிங் பெல்லடித்தபடி கதவைத் திறக்க, மூடாத கதவு வாவென்று வழிவிட்டது. உள்ளே சென்று ஸ்விட்ஜ்களைத் தட்டி வீட்டிற்கு வெளிச்சமூட்டி, “மச்சான்” என்றழைக்க அதற்கும் பதிலில்லை.
குழப்பம் மேலிட, “நீ இங்க உட்காருமா. நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்” என…
“இல்லண்ணா. நானும் வர்றேன். எனக்குமே என்னாச்சோன்னு பயமாயிருக்கு. குழந்தை தூங்கத்தான் செய்றா. அங்கயே படுக்க வச்சிரலாம்.”
“சரி நான் போய் எழுப்புறேன். பின்னாடி வா” என்றழைத்து மாடியிலுள்ள சபரியின் அறைக்குள் நுழைய அங்கேயும் இருட்டு மட்டுமே! வேகமாக லைட்டைப் போட்டுப் பார்க்க ஏசி, ஃபேன் எதுவுமில்லாமல் பெட்ஷீட் கொண்டு மூடிப் படுத்திருந்தான் சபரிநாதன். ஏதோ வித்தியாசம் உணர்ந்து அருகில் சென்று பெட்ஷீட் எடுத்துப் பார்க்க அவன் உடலின் அனல் ரவியின் முகத்திலடித்தது.