அறை வாயிலில் நின்றிருந்த சூர்யா பதறிப்போய் “அண்ணா உள்ள வரவா?” எனக்கேட்க… வேகமாக அவர்களை பக்கத்து அறைக்கு அழைத்து வந்தவன், “பீவர் அதிகமாயிருக்குடா. பாப்பாவை இங்கயே படுக்க வை. நான் டாக்டரை வரவச்சிப் பார்க்கிறேன்” என்று ஏசியை ஆன் செய்து போனை எடுத்து டாக்டரை அழைத்தபடி சபரியிடம் விரைந்தான்.
தூங்கும் குழந்தையின் அருகிலிருந்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. அவன் முகம் காண ‘அவனிடம் போ’ என்று மனம் அடித்துக்கொண்டது. குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதும், சபரியின் அறைக்குச் செல்ல, அங்கோ அவனுக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. சட்டென்று ஏதோ ஒன்று தொண்டையை அடைக்க அழக்கூட முடியாமல் அவனையே பார்த்திருந்தாள்.
இரண்டு நாள் தாடியுடன் முகமெல்லாம் களையிழந்து, அனைத்தையும் இழந்தவன் போலிருந்தது அவனது தோற்றம். ஓடிச்சென்று ஆறுதலாய் முகம் வருடி ‘சரியாகிரும் மச்சான்’ என்றுரைக்க மனம் தவித்தது. தன் தவிப்பும் துடிப்பும் ஏனென்று மனதிடம் கேட்க, ஏனோ அவள் மனம் அவளுக்குப் புரியவதாய்! அதை ஏற்றுக்கொள்ளதான் உயிர்வரை வலித்தது.
மெல்ல ரவியிடம் வந்தவள், “அண்ணா” என்றழைக்க குரல் வெளியில் வராததால் தொண்டையை அடைத்த துக்கத்தைச் சரி செய்து, “அ..அண்ணா டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக்கேட்டாள்.
“நேத்திலிருந்து இருக்குபோல. எங்ககிட்ட சொல்லவேயில்ல. நைட் மாத்திரை போட வச்சிட்டோம். காலையில நாங்க அங்க வந்துட்டதால கொஞ்சம் அசால்டா இருந்திருக்காங்க. மதியம் பிரெட் பால் சாப்பிட்டிருக்காங்க. இப்ப கொஞ்சம் ஆரஞ்ச் பழச்சாறு ஸ்பூன் வச்சிக் கொடுத்திருக்கேன். காலையில சரியாகிரும்னு டாக்டர் சொல்லியிருக்கார்.”
“என்னால்தான்ணா. என்னோட கோபம்தான் மச்சானை இப்படிப் படுக்க வச்சிருக்கு.”
“ஏய்! என்ன பேசுற நீ? வேணும்னேவா பண்ணின. நீ போய்ப் படு. எதுவானாலும் காலையில பேசிக்கலாம்.”
“நான் மச்சானைப் பார்த்துக்கறேன். நீங்க போய்ப் படுங்கண்ணா. இன்னைக்கு முழுக்க ட்ரைவ் பண்ணியிருக்கீங்க. நைட்டும் முழிச்சா உடம்புக்கு ஒத்துக்காது.”
“இல்லமா இருக்கட்டும்.”
“சொன்னா கேளுங்கண்ணா. பாப்பா தனியா படுத்திருக்கா. நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க. அதுக்கு முன்ன ட்ரிப்ஸ் முடியவும் எப்படி மாத்தணும்னு சொல்லிட்டுப் போங்க.”
சொன்னாலும் கேட்கமாட்டாள் என்பதை உணர்ந்தவன், “ட்ரிப்ஸ் மாத்த வேண்டாம். டாக்டர் காலையில வந்து பார்த்துக்கறாராம்” என்று அதை ரிமூவ் செய்வது எப்படியென்று கவனமாகக் கேட்டுக் கொண்டாள். மெல்ல அவனருகில் அமர்ந்து அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்து தனக்குள் நிறைத்துக் கொண்டாளோ!
மும்பையில் அவனிருந்த தோற்றம் கண்முன் வந்தது. முகம் வருடச் சென்ற கையை பின்னுக்கிழுக்கவும் அருகே கொண்டு செல்வதுமாக இருந்தவள் மனதை நிலைப்படுத்தி அவன் தலை கோதிவிட கண்களில் நீர்.
“காதல்! ஹ்ம்… எப்ப எப்படின்னு எதுவும் தெரியலை மச்சான். ஆனால், நான் உங்களுக்கு வேண்டாம். என்னால சராசரி மனைவியா உங்களோட வாழ முடியாது. விக்னேஷ் சொன்ன மாதிரி நான் உணர்ச்சியில்லாத பொம்மை மச்சான். அதிலும் இரண்டாவது கல்யாணம்ன்றது என்னால நினைச்சிப் பார்க்க முடியாத ஒண்ணு. ஒழுக்கம் ஒழுக்கம்னு சொல்லி ஒழுக்கமே இல்லாம வளர்ந்திருக்கேன். இப்ப சரியா இருந்தாலும் சின்ன வயசுலயிருந்து அவனவன்…” சட்டென்று வாய்மூடி அழுதவள், “என்னால என்னையும் ஏமாத்திட்டு உங்களையும் ஏமாத்த முடியாது.”
“ஆனா, நீங்க ஏன் என்னைக் கட்டிட்டு அழ நினைக்குறீங்க புரியல? நீங்க நினைக்கிற அளவு நான் நல்ல பொண்ணு கிடையாது. நான் வளர்ந்த விதத்தை நினைச்சா அருவருப்பா… அசிங்கமாயிருக்கு. தெரிஞ்சே உங்களைப் பாழுங்கிணத்துக்குள்ள இழுக்கத் தயாராயில்ல. நீங்க பேசினதை வச்சி உங்க முதல் திருமண வாழ்க்கை சரியில்ல தோணுது. அப்படியிருந்தும் சிக்கல் பிடிச்ச என்னை ஏன் மச்சான்? கடைசிவரை நிம்மதியில்லாத வாழ்க்கை வேணுமா? எப்பவும் அதை உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்.”
“உங்களுக்குக் கல்யாணமாகிட்டா பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலனாலும், தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷப்படுவேன். என் வாழ்க்கை முழுக்க உங்க சந்தோஷம் மட்டும் போதும்!”
[the_ad id=”6605″]
“நீங்க என்னோட ஹீரோ மச்சான். ஹீரோன்னா நட்சத்திரம்! ஹீரோவை ரசிக்கலாம். ஹீரோவோட வாழ முயற்சிக்கலாமா? என்னைக் கட்டினா வேதனைதான் மிஞ்சும்னு தெரிஞ்சும், என் ஹீரோவை வருத்தப்பட விடலாமா? என்னென்னைக்கும் நீங்க நல்லாயிருக்கணும் மச்சான். உங்களுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா. உங்க ஒய்ஃப் கூட சந்தோஷமா வாழ்வீங்க.”
“ஆனா, உங்களுக்கு ஒண்ணுன்னதும் என் உயிர் துடிக்குது மச்சான். இந்த வலியைத் தாங்க முடியலை. இருந்தும் காலத்துக்கும் இந்த வலி எனக்கு வேணும்னு மனசு தவிக்குது. இந்த வலியோடவே வாழவும் முடிவு பண்ணிட்டேன். எனக்கும் உணர்வு இருக்குன்னு இப்ப… இந்த நிமிஷம் முழுமையா உணர்றேன் மச்சான். அதுக்கு உங்களுக்கொரு பெரிய தேங்க்ஸ்” என்றாள் புன்னகையுடன்.
ட்ரிப்ஸ் முடியவும் அதை அகற்றி அவன் கையை எதுவும் தட்டிவிடாதவாறு தலையணை மேல் வைத்து பெட்ஷீட் மூடி, சத்தம் வராமல் அங்கிருந்த ஒற்றை ஷோபாவை எடுத்துப் போட்டு அவன் முகம் பார்க்க சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இனிமேல் இதுபோல் சந்தர்ப்பம் அமையாதென்று, அவனைக் கண்களுள் நிறைத்து உயிரினுள் கரைத்துக் கொண்டாளோ!
முதல் முதலாக ஒரு ஆண் அவளுள். அவன் தன்னுள் செய்யும் மாற்றங்கள் புரிந்தது. அந்த மாற்றங்களைத் தன்னுள்ளே புதைத்துக் கொண்டாள். ஏனோ அவளின் பார்வை சபரியின் முகத்தில் நிலைத்திருக்க, மோகனமாய் ஒரு புன்னகை அவள் உதட்டில் உறைந்திருக்க, அன்று முழுவதும் சுற்றிய அலுப்பில் அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.
விடியற்காலையில் கண்விழித்த சபரி பாத்ரூம் செல்ல எழும்பொழுது சூர்யாவைக் கண்ட ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே பார்த்திருந்தான். கையிலிருந்த ஊசியைக் கண்டுதான் தனக்கு ட்ரிப்ஸ் ஏற்றியிருப்பது புரிந்தது. பாத்ரூம் சென்று வந்தவன் அவளின் நீங்கா புன்னகையைக் கண்டு, அது என்றும் நிலைக்க கடவுளை வேண்டி, நெற்றி முடியை அகற்றி மென்மையாக முத்தமிட்டு, “வெல்கம் பொண்டாட்டி” என்றான்.
தூக்கத்திலும் மன்னவனைக் கண்டாளோ! புன்னகை மாறாது திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“மேடம் என்னைத்தேடி வந்திருக்காங்க. கொஞ்சம் முன்னேற்றம்தான். அப்படியே கண்டினியூ செய்து, கரெக்ட் பண்ணி கல்யாணம் முடிச்சிரலாம்டா சபரி.” மனம் குத்தாட்டம் போட உடல் ஒத்துழைக்க மறுத்தது.
‘என்ன கரெக்ட் பண்ணப்போறியா?’ இன்னொரு மனமோ அதிர்ந்து குதிக்க… ‘எஸ்’ என்ற பதில் அவனிடம்.
காலை அனைவரும் வந்துவிட சற்று முகம் தெளிந்து அமர்ந்திருந்தான் சபரி. டாக்டர் வந்து பார்த்து டெஸ்ட் செய்து மாத்திரைக்கு எழுதிக்கொடுத்து, “இப்ப பெட்டர்” என்றதும் ஒருவகை நிம்மதி அனைவரிடமும்.
பெரியவர்கள் கிச்சனிலிருக்க… ரவியும் பரத்தும் சபரியுடன் இருந்தனர்.
“பரத் காலேஜ் எப்பப் போகணும்?”
“இன்னும் நாலு நாள் லீவ் இருக்கு மச்சான். அதுக்குள்ள அம்மாவை ஊர்ல விட்டுட்டு வந்துருவேன்.”
சூர்யா ஹரிணியைக் குளிக்க வைத்து ஆடை மாற்றி தலைவாரிக் கொண்டிருக்க… அப்பொழுது வேகமாக வந்த அர்ச்சனா சூர்யாவைக் கண்டு வாசலிலேயே நின்றுவிட்டாள். உண்மை முகத்திலடித்ததோ! நடை தன்னால் வேகம் குறைந்தது.
“அம்மா முடி வலிக்குது” எனவும், “சாரிடா” என்று இழுத்துப் பிடித்த முடியைக் கண்டு சரி செய்து, “இன்னும் வலியிருக்காடா?” எனக்கேட்க… இல்லையென்று தலையசைத்தாள் ஹரிணி. “அம்மா கிச்சன் போயி ஆச்சி டிபன் முடிச்சிட்டாங்களா பார்த்து எடுத்துட்டு வர்றேன். நல்லபிள்ளையா சாபபிடணும் என்ன?”
“நீ வரவேண்டாம். இந்தா உன் மகளுக்கு ஊட்டிவிடு” என்று டிபன் தட்டையும் தண்ணீரையும் கொடுத்தார் இசக்கி.
மகளுடன் அமர்ந்தவள் இட்லி ஊட்டியபடி, “செல்லம் அம்மா சொல்றதைக் கேட்பதான?”
“அம்மா சொல்றதை மட்டும்தான் கேட்பேன்.”
“அப்படி சொல்லக்கூடாதுடா. அப்பா கூடதான எப்பவும் இருக்கீங்க? அப்ப அப்பா பேச்சைத்தான அதிகம் கேட்கணும். அப்பா அம்மா ரெண்டு பேர் சொல்றதையும் கேட்டுக்கணும். சரியா?”
“ம்… சரிம்மா.”
“அப்பா தவிர வேற எந்த ஆம்பளைங்க மடியிலும் உட்காரக்கூடாது. அவங்க தூக்கினாலும் கீழ இறக்கிவிடச் சொல்லணும்.”
“மாமாங்க மடியிலுமா?”
[the_ad id=”6605″]
“ஆமாம்” என்றாள் அழுத்தமாக. தன் சகோதரர்கள் மேல் சந்தேகப்பட்டில்லை. அப்படியிருந்தால் முந்தைய இரவு குழந்தைக்குத் துணையாக ரவியைத்தானே வைத்தாள். இருப்பினும் ஆண்களாயிற்றே! பெண்களுக்கான அறிவுரையில் அதுவும் முக்கியம் என்பதை உணர்ந்ததால் சொன்னாள்.
“யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது. இலவசமா ஒண்ணு தர்றாங்கன்னா நம்மகிட்டயிருந்து வேற எதோ எதிர்பார்க்கிறாங்க அர்த்தம். அப்புறம் யாரையும் தொட அனுமதிக்கக்கூடாது. பையன்ககிட்ட கொஞ்சம் தள்ளி நின்னுதான் பேசணும். தினமும் ஸ்கூல்ல நடந்த எல்லாத்தையும் வீட்ல சொல்லிரணும்.” அவளின் அவயங்கள் காண்பித்து, “இங்க யாராவது தொட்டா நேரே அப்பா அம்மாகிட்ட வந்து சொல்லிரணும். வீட்ல சொன்னா உன் அப்பா அம்மா உன்னை அடிப்பாங்கன்னு பயமுறுத்துவாங்க. அதுக்கெல்லாம் பயந்து சொல்லாம இருக்கக்கூடாது.”
“தப்பு செய்தவங்களைத்தான்டா செல்லம் அடிப்பாங்க. அப்ப பேட் டச் பண்ணின அவனைத்தான அப்பா அடிப்பாங்க. அதனால எதையும் மறைக்கக்கூடாது. தப்பா பிஹேவ் பண்றவங்களை முறைக்கிற வயசு உன்னோடது. வளர்ந்த பின்னால அவங்களை அடிக்கக்கூட செய்யலாம். அதில் தப்பில்லை. என்னடா அம்மா சொன்னது புரிஞ்சதா?
“புரிஞ்சதுமா. அப்பாவும் சொல்லியிருக்காங்க. டெய்லி நடந்ததை விட்ல சொல்லிருவேன்.”
“என் பொண்ணு எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிறாங்க” என்று உதய ஹரிணியைக் கொஞ்சினாள்.
எத்தனை குழந்தைகள் குறுக்கு விசாரணையில்லாமல் பெற்றோர் சொல்வதைக் கேட்கிறார்கள். பெற்றோரே திணறும் அளவு ஆயிரத்தெட்டு கேள்விகள் பாய்ந்து வரும். ‘அடப்போங்கடா! உங்களுக்குப் போய் அட்வைஸ் பண்ணினேனே’ என்று சலித்துப் போகும் பெற்றோரே அதிகம்.
அதைக் கேட்டிருந்த இசக்கிக்குக் கண் கலங்கியது. குழந்தைக்குச் சொன்னதெல்லாம் மகளுக்கு நடந்ததல்லவா!
சபரி சொன்னதை வைத்து சின்னதாக நினைத்திருந்தவருக்கு, இப்பொழுது பெரிதாகத் தெரிகிறது. இன்னும் இப்பெண் மனதிற்குள் வெளியில் கொட்ட முடியாத என்னென்ன மறைந்திருக்கிறதோ என்ற கவலை அவருக்கு.
“சூர்யா எவ்வளவு பொறுப்பாயிருக்கா பாரு. நான் இப்படி எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை இசக்கி. அவளோட படிப்பு அவளுக்கு நல்லது கெட்டது தெரிய வச்சிருக்கு” என்றார் சந்தோஷமாக.
“சொல்லிக் கொடுத்திருக்கணும் பூவு. சொல்லிக் கொடுத்திருக்கணும்” என்று கண்ணீரை அடக்க முடியாது வேலை செய்வதுபோல் திரும்பி நின்றுகொண்டார்.
அதைக் கேட்ட பூவரசிக்குதான் எதுவோ புரிவது போலிருந்தது. இத்தனை வருட அனுபவத்தில் இதைக்கூடவா புரிந்து கொள்ளாதிருப்பார். புரிந்த விஷயம் அவருள் அதிகபட்ச அதிர்வைக் கொடுத்தது. தோழியின் முன் நின்று, “நான் கேட்கிறதுக்குப் பதிலைச் சொல்லு இசக்கி. நீ ஏன் அப்படிச் சொன்ன? அதுக்கு என்ன அர்த்தம் சொல்லு?”
“ஒண்ணுமில்லை பூவு. டைமாகுது பார் வா சீக்கிரம் வேலையை முடிப்போம்.”
“முதல்ல எனக்குப் பதில் சொல்லு? அ..அப்ப சூர்யா சொன்ன எல்லாமே அவளுக்கு நடந்ததா?”
“ப்ச்.. நான் எப்ப அப்படிச் சொன்னேன்? சாதாரணமா கேட்டேன்.”
“பொய் சொல்லாம சொல்லு இசக்கி? எதையோ என்கிட்டயிருந்து மறைக்கிற? ஈரக்குலை படபடன்னு அடிச்சிக்குதுடி.”
“ஆமாம்னு சொன்னா என்ன செய்ய முடியும் உன்னால? நடந்ததை மாத்த முடியுமா? சும்மா எதையாவது பேசிட்டு…” இத்தனை ஆண்டுகளாக மகளைக் கண்டுகொள்ளாத கடுப்பில் மற்றவருக்குக் கேட்காத அளவில் கத்தியேவிட்டார்.
“அப்ப நிஜம்தான்ல? நான் வேலைக்குப் போனது என் பிள்ளைகளுக்காகத்தான். அந்தப் பிள்ளைங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க மறந்துட்டேனா? என் பொண்ணு வாழ்க்கை இப்படியானதக்குக் காரணம் நானேதானா? நான் இப்படி நினைச்சிக்கூடப் பார்க்கலையே இசக்கி.” அதீத அதிர்வில் நெஞ்சினுள் சுருக்கென்று ஒரு வலி வந்துபோனது.
“ஏய் பூவு! அப்படிலாம் இல்லமா. நாம வளர்ந்த விதம் வேற நம்மைச்சுற்றி எப்பவும் பெண்கள்தான் அதிகம். ஆண்களும் தப்பானவங்க கிடையாது. அதிலும் நம்ம அப்பாங்களை எல்லாருக்கும் தெரியும்ன்றதாலயே யாரும் வம்பு பண்ணமாட்டாங்க. நீ கல்யாணம் பண்ணிப்போன ஊர் அப்படிக் கிடையாது. புருஷனை வச்சிதான் பொண்டாட்டி பிள்ளைங்களைப் பார்ப்பாங்க. அவருக்கும் அவ்வளவு நல்ல பெயர் கிடையாதே. அவர் சம்பாதிச்சி நீ வீட்லயிருந்திருந்தா பிள்ளைக்கு அரணா இருந்திருப்ப. எந்த நாயும் பிள்ளைகிட்ட நெருங்கியிருக்காது. வேலைக்குப் போகாம வீட்லயிருந்தும் பிள்ளைகளைத் தவிக்க விட்டிருந்தால்தான் பூவு தப்பு. சொல்லிக் கொடுத்து வளர்க்க உனக்கு அனுபவமும் கிடையாது. அப்படியிருக்கிறப்ப யாரைக் குறை சொல்றது? அவளோட கர்மான்னு விடு பூவு.”
“அது அவளோட கர்மா இல்ல இசக்கி. அவள் அப்பன் செய்த பாவம். இதுகூடத் தெரியாம… அம்மான்ற உறவுக்கு நான் லாயக்கில்லாதவள் இசக்கி” என்று வாய்மூடி அழுதார்.
“ப்ச்… பூவு. எதுக்கெடுத்தாலும் அழுறதை விடு. அவள்கிட்ட இதைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. உனக்குத் தெரிஞ்சிருச்சின்னு வெள்ளச்சிக்குத் தெரிஞ்சா, அதைவிட அவளைக் கொல்ல எதுவும் தேவையில்லை.”
“இசக்கி!” இன்னுமின்னும் அதிர்வுதான் அவரிடம்.
“உண்மையைத்தான் சொல்றேன். உனக்கு எதுவும் தெரியக்கூடாது நினைக்கிறா. அது அப்படியே இருக்கட்டுமே. இப்படி அழுது அவள்கிட்டக் காட்டிக் கொடுத்திராத பூவு” என்று தோழியைச் சமாதானப்படுத்தினார்.
டிபன் முடியும் வேலையில் தற்செயலாய் திரும்பிய ஹரிணி அங்கு அhச்சனாவைக் கண்டதும், “அச்சு ஆன்ட்டி வாங்க” என… யாரென்பதாய் சூர்யா திரும்பிப் பார்த்தாள்.
“ஹாய்! நான் அர்ச்சனா” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
“நான் சூர்யோதயா!”
“தெரியும்ங்க. சபரி சொல்லி நான் பார்த்திருக்கேன்.” ‘எங்கே?’ எனக் கேட்பதற்குள் “சபரிக்கு உடம்பு சரியில்லன்னு டாக்டர் சொன்னாங்க. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு…” சூர்யாவின் ஆராய்ச்சி பார்வையில் தடுமாறி, “சந்தேகமா பார்க்காதீங்க சூர்யோதயா? நான் பக்கத்து வீடுதான். இங்க வந்ததிலிருந்து சபரியைத் தெரியும்.”
“நான் எதுவும் கேட்கலைங்க. மச்சான் மாடியிலதான் இருக்காங்க. போய்ப் பாருங்க” என்றவள், “அம்மா கெஸ்ட் வந்திருக்காங்க. ஒரு காஃபி” என்றாள்.
“ஐயோ வேண்டாம். நான் குடிச்சிட்டுதான் வர்றேன். சபரியைப் பார்த்ததும் கிளம்பிடுறேன்” என்றாள் வேகமாக.
“பரவாயில்ல பார்த்துட்டு வாங்க. காஃப் ரெடியாயிருக்கும்” என்று புன்னகையோடு சொல்ல…
‘பெர்பெக்ட் கபுள்தான்’ என்றாள் மனதினுள். அவளுக்கு தன் காதல் தோற்றது கூட பெரிதாய்த் தோன்றவில்லை. எத்தனை வசனங்கள் பேசி நடித்திருப்பாள். இதுதான் யதார்த்தம் என்பதை உணர்ந்த பெண் அர்ச்சனா.