17
“ஹாய் சபரி! ஹவ் ஆர் யூ?”
“பைன் அர்ச்சனா. நீங்க எப்படி?”
“டாக்டர் சாரை தற்செயலா பார்த்தேன். அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். உங்க ஒய்ஃப் சூப்பர் போங்க.”
“என் அக்கா எப்பவும் சூப்பர்தான்ங்க” என்று பரத் இடையிட…
“அவளைப் பார்த்தீங்களா?”
“பார்த்தீங்களாவா? மயங்கிட்டேன்னா பாருங்க சபரி. தன் மகளுக்கான பாதுகாப்பை இப்பவே மைண்ட்ல ஏத்துறாங்க” என்று பார்த்ததைச் சொல்ல… அவளின் நிலை உணர்ந்து மனம் கசந்தது விவரம் தெரிந்தவர்களுக்கு.
“அம்மா அர்ச்சனா ஆன்ட்டி முன்னாடி அவங்களை அம்மா கூப்பிடச் சொல்வாங்க. எனக்குதான் அம்மா நீங்க இருக்கீங்களே. பின்ன அவங்களை எப்படிக் கூப்பிடுறது? ஆன்ட்டி மட்டும்தான்னு சொல்லிட்டேன்.”
‘அம்மா சொல்லச் சொன்னாங்களா? சபரி மச்சான் மேல லவ்வா? இவங்களைக் கல்யாணம் செய்திருக்கலாமே?’ சூர்யாவிற்குள் பலவித யோசனைகள். “ஏன்டா பாப்பு அவங்க உனக்கு அம்மாவா இருந்தா நல்லாதான இருக்கும். ஆளும் அழகாயிருக்காங்க. கூப்பிட்டிருக்கலாம்தானே?”
“எனக்கு நீங்க மட்டும் போதும்” என்று முகத்தைத் திருப்பிக்கொள்ள…
“அம்மா உன்னோடவே இருக்க முடியாதுல்லடா. உன் கூடவேயிருக்க அம்மா வேண்டாமா?”
“வேண்டாம். வேண்டவே வேண்டாம்… எனக்கு நீங்க மட்டும்தான் அம்மா” என்று சத்தமாகக் கத்த…
பூவரசியும் இசக்கியும் என்னவென்று வர… ஹரிணி அவர்களிடம் தாய் சொன்னதைச் சொல்ல… அவர்கள் மகளைத் திட்டுகையில், சபரி உடல்நிலை மறந்து படிகளில் வேகமாக இறங்கி வந்தான்.
“மச்சான் மெதுவா” என்ற ரவியின் குரலில் சூர்யா பார்க்க, ஒரு படியில் கால் இடறி கீழே விழப்போகையில் வேகமாக வந்து பிடித்துக்கொண்டாள். ஆளாளுக்கு அவனைக் கவனிக்க “எனக்கு ஒண்ணுமில்லை. பாப்பா ஏன் கத்தினாள்னு பாருங்க” என்றான்.
“மச்சான் கால்ல பிராக்சர் இருக்கப்போகுது. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்ற ரவியை முறைத்து தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
“என்ன மச்சான் தலைவலிக்குதா?” பரத் தன் பங்கிற்கு கேட்க…
“உங்க அன்புக்கு அளவேயில்லையாடா? லைட்டாதான்டா ஸ்லிப்பாச்சி. காலே போன மாதிரி அலப்பறையைக் கொடுக்குறீங்க. போய்ப் பாப்பாவைப் பாருங்க.”
“நான் இங்கதான்பா இருக்கேன். கால் வலிக்குதா?”
“இல்லமா” என்று எழுந்திருக்க… படியில் அமர்ந்திருந்தவனைப் பிடித்தபடி ஷோபாவில் அமரவைத்தான் ரவி.
சபரியின் அருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த சூர்யா, “மச்சான் இவங்க உங்களை லவ் பண்றாங்க போல. பேசாம அவங்களைக் கல்யாணம் செய்துக்கோங்களேன்” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
அவளை முறைத்து, “இதை பாப்பாகிட்ட சொன்னியா?” என்று கோபமாகக் கேட்க…
“ம்…” என தலையசைத்தாள்.
“இன்னும் என்னென்ன சொன்ன?” கோபத்தில் பல்லைக் கடித்தபடி கேட்க… அதில் பயம் எழ, “அ..அது பாப்பாகிட்ட அம்மா சொல்லுன்னு சொன்னாங்களாம். அதான் அப்படியே செய்யலாமேனு…” தொண்டைக்குழிக்குள் எச்சில் விழுங்கப் பார்த்தபடி சொன்னாள்.
“ஏன் உதயா இப்படிப் பண்ணின? அவ குழந்தை. நீதான் அம்மான்னு குழந்தையிலிருந்து மனசுல பதிஞ்சதை எப்படி மாத்திப்பா?”
“மச்சான்!”
“பாப்பா எப்பயிருந்து உன்னை அம்மா சொல்ல ஆரம்பிச்சா தெரியுமா?”
[the_ad id=”6605″]
“எ..எப்ப?”
“அவள் பேச ஆரம்பிச்சதிலிருந்து உன்னைத்தான் அம்மான்னு நினைச்சிட்டிருக்கா. சென்னையில நீ இருக்கும் போது முதல் முறையா இசக்கி அத்தை கால் பண்ணினாங்களே அப்பதான் எனக்கே தெரியும். மேக்சிமம் அத்தைகிட்டதான் பாப்பா வளர்ந்தது. எப்பவும் உன்னைப் பற்றி பேசி உன் நினைவுகளை அவள்கிட்ட உண்டாக்கி, அம்மான்னா நீதான்னு மனசுல பதிச்சிட்டாங்க. அதுதான் அவள் முதல்முறை உன்னை பார்த்ததும் அம்மான்னு கூப்பிட்டது. இப்ப சொல்லு? நீ யாரையோ அம்மான்னு கூப்பிடச் சொன்னா அது அவளுக்கு அதிர்ச்சிதான?”
“சாரி மச்சான். நான் இப்படி ஒரு காரணம் எதிர்பார்க்கலை.”
“ப்ச்… விடு. இனிமேல் இப்படிப் பேசாத.”
சற்று தள்ளி நின்றிருந்த அர்ச்சனாவைப் பார்த்தபடி, “அவங்க வேலை பார்க்கிறாங்களா?” எனக்கேட்க…
“ஏன் கேட்கிற?” என்றான் சந்தேகமாய்.
“அ..அது நாம விரும்பறதை விட…”
“ஏய் நிறுத்து. என்ன சொல்ல வர்றன்னு புரியுது. நான் விரும்பினதும் கிடைச்சி என்னை விரும்புற நீ கிடைச்சா போதும். வேற எதுவும் வேண்டாம்” என்றான் அழுத்தமாக.
“நான் ஒண்ணும் உங்களை விரும்பல. நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க?”
“சின்னத்திரை நடிகை.”
“என்னது?” என அலறி அதிர்ந்து எழ…
“ஏய்! எதுக்கு அலர்ற?” என்றவனைக் கண்டுகொள்ளாது, “நீங்க நடிகையா?” என்றாள் அர்ச்சனாவைப் பார்த்து.
இருவரின் நெருக்கத்தைப் பார்த்திருந்த அர்ச்சனா சூர்யாவின் திடீர்க் கேள்வியில் சில வினாடிகள் புரியாது நின்று புரிந்ததும், “ஆமாங்க. ஏன் சபரி உங்ககிட்டச் சொல்லலையா?”
“இப்பதான் சொன்னாங்க. இனிமேல் எங்க பாப்பாகிட்ட அம்மான்னு கூப்பிடச் சொல்லாதீங்க. நீங்க அம்மா ஸ்தானத்திலிருந்து பார்த்துக்க முடியாது. கௌஸ் ஒய்ஃபா இருக்கிறவங்க கிடைச்சா பார்த்துக்கறோம்” என படபடவென்று பொரிய…
“வாட்?” என அர்ச்சனா குழம்பிப் பார்க்க…
“சாரி அர்ச்சனா. தப்பா எடுத்துக்காதீங்க. என்மேல சின்னதா கோபம். அதான் என்ன பேசுறோம்னு தெரியாம…”
“நான் தப்பா பேசல மச்சான். இவங்க சூட்டிங் அது இதுன்னு போனா என் பொண்ணு நிலை? அதான் வேண்டாம் சொன்னேன்.”
“ஐயோ! கொஞ்ச நேரம் பேசாமல் இரு உதயா. அர்ச்சனா நீங்க கிளம்புங்க. அப்புறமா பேசலாம்” என்று வாசல் வரை உடன் செல்ல…
“சபரி இப்பவும் சொல்றேன். உங்க ஒய்ஃப் என்ன பேசினாங்கன்னு புரியலை. எதாவது பிரச்சனையா? அதான் இத்தனை வருஷம் இங்க வரலையா?”
“ஸ்டாப் இட் அர்ச்சனா. அவள் என் மனைவி. நீங்க நல்ல ஃப்ரண்ட்தான். அதுக்காக என் பேமிலி விஷயத்துல தலையிடத் தேவையில்லை. இன்னொரு விஷயம்! ஒரு பெரிய கம்பெனிக்கு ட்ரெஸ் டிசைனராயிருக்கா. நீங்க கேட்ட மீனிங்ல உள்ள பொண்ணால இதைச் செய்ய முடியுமா?” என்றான் கோபமாக.
“ஐம் சாரி சபரி. வேற என்ன சொல்லன்னு தெரியல. என் சார்பா உங்க ஒய்ஃப்கிட்ட சாரி சொல்லிருங்க.”
சற்று அமைதியானவன், “பரவாயில்லைங்க. அவளுக்கு குழந்தையோடவே இருக்க முடியலைன்ற வருத்தம். அதான்… நீங்க எதையும் மைண்ட் பண்ணிக்காம போங்க” என்று அவளை அனுப்பி உள்ளே வர, இரு தாய்மார்களும் சகோதரர்களும் சூர்யாவிற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள். சூர்யா ஒருபுறம் ஹரிணி மறுபுறம் முகத்தைத் தூக்கிவைத்து உட்கார்ந்திருக்க, “என்னாச்சி?” என்றான் சபரி.
“நீ அந்தப்பக்கம் போனதும், அர்ச்சனா உனக்கு அம்மாவா வேண்டாம்னு பாப்பாகிட்ட சொல்றா. பாப்பா எனக்கு நீங்கதான் அம்மான்னு போய் உட்கார்ந்துட்டா” என்றார் இசக்கி.
“உதயா…”
“அம்மா நான் வீட்டுக்குப் போறேன். இவங்களுக்குதான் சரியாகிருச்சில்ல. பாப்பாவைப் பார்த்துப்பாங்க” என்றவள் முகம் எதோ போலிருக்க…
“ரவி உன் தங்கச்சியை போய் வீட்ல விட்டுட்ட வா” என்றான் சபரிநாதன்.
“மச்சான்” என தயங்கி நிற்க…
“மச்சான்தான் சொல்றேன். விட்டுட்டு வா” என்று சூர்யாவிடம் திரும்பி, “உதயா போனதும் நல்லா தூங்கி எழுந்திரு” என்றான்.
“இல்ல நான்…” கோபத்தில் இருக்கிறானோ என்று அவளும் தயங்க…
[the_ad id=”6605″]
“போ உதயா. அத்தைக்கு காலையிலதான பஸ். நான் சாயங்காலம் அவங்களைக் கூட்டிட்டு வர்றேன். அதுக்கு முன்ன சாப்பிட்டுக் கிளம்பு.”
“நான் வீட்ல போய்ப் பார்த்துக்கறேன்.”
“சொன்னா கேட்கமாட்ட” என்று அவளை டைனிங் டேபிள் உட்கார வைத்து இரண்டு பூரி எடுத்து வந்தவன் குருமா தொட்டு அவளுக்கு ஊட்டிவிட, ‘ம்கூம்’ என மறுத்து கலங்கிய கண்களை மறைக்கப் பார்த்தாள். ஒரு கையால் அவள் முகம் பிடித்து, மறு கையால் ஊட்டிவிட வர, வாய் திறக்காதிருந்தவளை “ம்… சாப்பிடு” என அதட்டலிட ஆவென வியப்பா! பயமா! ஏதோ ஒன்று வாய் திறக்க கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி முடித்து தண்ணீர் கொடுத்து, “ரவி” என்று குரல் கொடுத்தான்.
“கிளம்பிட்டேன் மச்சான்” என்று ரவி வர… அதற்குள் “இந்த காஃபி குடி உதயா” என்றான்.
“வயித்துல இடமில்லை” என்று சத்தமே வராமல் சொல்ல…
“பரவாயில்லை சின்னதா கேப் இருந்தாலும் ஊத்திவிடு.”
“வயிறு என்ன வாய்க்காலா? கேப்ல கட் பண்ணி தண்ணீரை மடைமாத்துறதுக்கு” என்றாள் கோபமாக.
“பார்றா! பஞ்ச் டயலாக்கு. என்ன டயலாக் அடிச்சாலும் குடிச்சிட்டுதான் கிளம்பற” என்ற பிடிவாதமாக நிற்க… முனகலுடன் அவனை முறைத்துக் குடித்தவள். “நான் கிளம்புறேன். பாப்பா எங்க?”
“அவளை அப்பவே பரத் மேல கூட்டிட்டுப் போயிட்டான். நீ கிளம்பும்போது பார்த்தா உன்னோட வரணும்னு அடம்பிடிப்பா.”
“ம்… சரி. அம்மாஸ் ரெண்டு பேரும் இங்கேயே டேரா போடாம வந்து சேருங்க. ஆமா மிஸ்டர்.எமதர்மராசனை எங்க?” என்றாள் நக்கலாக.
“அவருக்கு கை நிறையப் பணத்தைக் கொடுத்து பஸ் ஏத்தி விட்டாச்சிக்கா.”
“ஓ… அநியாயத்துக்கு தருமத்துக்கே ரோசனை விரட்டி விட்டுட்டீங்களே! உங்களுக்கே நல்லாயிருக்கா?” என்றவள் வார்த்தைகள் குழறியது.
“நீ வீட்டுக்கு வா” என காரிலேற்றி அவள் வீடு வர அதற்குள் நன்றாகவே தூங்கியிருந்தாள். ரவி வீட்டைத் திறந்து பெட்டை விரிக்கவும், சபரி சூர்யாவைத் தூக்கி வந்து கிடத்தி, ரவியை அனுப்பி பூவரசி இசக்கியை அழைத்து வரச்சொன்னான்.
பூவரசி, இசக்கி வருகையில் வாசலில் நின்றிருந்த சபரியிடம், “சூர்யாவுக்கு என்னாச்சி?” என்றார் பதற்றத்துடன்.
“உள்ள வாங்க அத்தை பேசிக்கலாம்” என்று ரவியை தன் வீட்டிற்கு அனுப்பிவைத்து ஹாலில் வந்தமர்ந்தவன், “அவளுக்கு மன அழுத்தம் அதிகமாகிருச்சி அத்தை. அதுக்காகதான் தூக்க மாத்திரை போட்டிருக்கேன்.”
“என்னாச்சி என் பொண்ணுக்கு? நல்லாத்தானே இருந்தா?”
“பூவு அமைதியாயிரு. சபரி என்ன சொல்றான்னு கேளு.”
“பெருசால்லாம் எதுவும் இல்லை அத்தை. நான் கல்யாணத்துக்குக் கேட்டதைக் கூட எப்படியாவது சமாளிச்சிரலாம்னு பெருசா எடுத்துக்கலை. ஆனா, பாப்பாவுக்கு அம்மா இல்லன்றதுதான் பெருசா தாக்கியிருக்கு. அம்மா இருந்துமே தனக்கு நிறைய பிரச்சனை வந்தது. தாயில்லாத குழந்தைன்னா? யார் யார் எப்படியெப்படியோன்னு தனக்குள் போட்டுக் குழப்பிட்டிருக்கா. எப்படியாவது பாப்பாவுக்கு கூடவேயிருந்து நல்லா பார்த்துக்குற அம்மா கொடுத்திரணும்ன்ற எண்ணம். அதான் அர்ச்சனா என்னை கல்யாணம் பண்ணிக்கக் கேட்டது தெரிஞ்சதும் ஒரு ஆசை. அவங்க நடிகைன்னதும், குழந்தையோட எப்பவும் இருக்க முடியாதுன்ற ஏமாற்றத்துல அப்படிப் பேசிட்டா. அவளால என்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் முடியலை. பாப்பாவை அப்படியே விடவும் முடியலை.”
“அப்ப கல்யாணம்?” சந்தேகமாகக் கேட்டார் பூவரசி.
“உதயா சம்மதத்தோட நடக்கணும்னா இந்த ஜென்மத்துல முடியாது அத்தை. அவளுக்கேத் தெரியாமல் பண்ணினா இன்னும் மன அழுத்தம் அதிகமாகும். அது அவளை இன்னும் மோசமான விளைவுக்குக் கொண்டு போகும்.”
“அப்ப வேற வழியே இல்லையா? என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையாதா? கடைசிவரை இப்படியேதான் இருப்பாளா? நான்தான் அவசரப்பட்டு அந்த விக்னேஷ்கு முடிச்சிட்டேன். எதையோ நினைச்சி…” அழுகை முட்ட கண்ணீர் துடைத்து, “என் அவசரம் என் பொண்ணை வாழவிடாம பண்ணிருச்சே. இப்படி ஒரு நிலையில என் பொண்ணை தவிக்க விட்டுட்டுப் போனா, செத்தாலும் என் கட்டை வேகாது இசக்கி.” வாய்மூடி அழுதவர் உடலெல்லாம் சுருசுருவென்று ஒரு வலி வலியுடன் பாய்ந்தது.
[the_ad id=”6605″]
“சும்மா எதையாவது புலம்பாத பூவு.”
“எனக்கென்னவோ நான் ரொம்பநாள் இருக்கமாட்டேன் தோணுது இசக்கி. என் பொண்ணை நீதான்டி பார்த்துக்கணும்.”
“அடிச்சேன்னா பாரு. பேசாம வாயை மூடிட்டு உட்காரு. எங்களுக்கெல்லாம் அவள்மேல அக்கறையில்லைன்னு நினைச்சியா? எனக்கும் அவள் பொண்ணுதான். பிறந்து முதல் முதலா அவள் பார்த்தது என்னைத்தான். இதோ இந்தக் கையாலதான்…” சட்டென்று உடைந்து அழ…
“அத்தை நீங்களும் ஏன்?” என்ற சபரிக்கும் கண்கலங்கியது.
“அவள் வாழ்க்கையில மேல மேல வரணும்னுதான் சூர்யோதயான்னு பெயர் வச்சேன். இப்ப எப்படிக் கிடக்கிறாள்னு பாரு. மனசே ஆறலைடா. ஏற்கனவே மனசளவுல நொந்திருந்தவளுக்குக் கல்யாணம் செய்து, இப்ப… எனக்கு என் பொண்ணு வேணும் சபரி. நீ என்ன செய்வியோ தெரியாது. எங்களுக்கு எங்க பொண்ணு புருஷன் பிள்ளைன்னு சந்தோஷமா வாழணும். அதுக்கு என்ன செய்யலாம் சொல்லு?” மகளுக்காக எதுவும் செய்யத் தயாராயிருந்தார் இசக்கி.
“ஒரு வழியிருக்கு அத்தை. அது சாத்தியப்படாத ஒண்ணு.”
“பரவாயில்லை. சொல்லு பார்க்கலாம்” எனவும் அவன் சொல்ல… “நான் பேசுறேன்பா” என்றார் பூவரசி.