“இதுவரை பேசாமலா அத்தை இருந்தீங்க? விடுங்க அத்தை எதாவது யோசிக்கலாம்.”
“இல்ல சபரி. கடைசியா ஒருமுறை பேசிடுறேன். ஒத்துக்க வைக்க முடியலைன்னா இனிமேல் பேசவேமாட்டேன்.”
அவரின் உள் எண்ணம் புரியாமல், “சாயங்காலம் எழுந்திருவா. நைட் நிதானமா பேசிப்பாருங்க. நான் போயி ரவியை வரச்சொல்றேன்” என்றவன் செல்லும் முன், “உதயா சடங்கப்ப அவளைத் தூக்கிருவோமா கேட்டியே இசக்கி. அப்பவே அதைச் செய்திருக்கலாம்” என்றான்.
“ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டடா மருமகனே. அன்னைக்கு மட்டும் ம்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா எல்லாத்தையும் நடத்தி முடிச்சிருப்பேன். நீதான் மது அது இதுன்னு உன் அம்மாவைக் கைகாட்டிட்ட. சரி நீ கிளம்பு” என்று அனுப்பினார்.
இரவு ஏழு மணிபோல் எழுந்த சூர்யா பாத்ரூம் சென்று முகம் கழுவி வர, கிச்சனில் இரவு சமையல் நடந்து கொண்டிருந்தது. ரவி லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தபடி தாயிடம் திரும்பி, “அம்மா காப்பி” என்று அமர்ந்தவளிடம் நீட்டப்பட்ட காஃபியைப் பார்த்தவள் கண்கள் விரிய, “ஐ கடுங்காப்பி. அப்படியே கடலை, சேவு இல்ல முறுக்கு இருந்தா போடுங்க” என்றாள் குதூகலமாய்.
“இந்தா பொறிகடலை” என்று உள்ளே போட…
“உங்க கை காப்பி மனமே தனிம்மா” என்று ருசிக்க ஆரம்பிக்க…
“யார் போட்டாலும் இந்த மனம்தான் இருக்கும். அப்புறமா புகழலாம். இப்பக் குடி” என்றார் அதட்டலாக.
“வர வர உங்க சேர்க்கை சரியில்லம்மா. இந்த இசக்கிம்மா பேச்சைக் கேட்டு கெட்டுப் போயிட்டீங்க” என குறைபட…
“உங்கம்மா என்னைப் பார்த்துக் கெட்டுப் போயிட்டாளா? அடேய் மகனே! உன் தங்கச்சி சொல்றது கேட்டுச்சா?”
[the_ad id=”6605″]
“விடுங்கம்மா. அவள் தெரியாம உண்மையைச் சொல்லிட்டா. அதனாலதான் நான் நடுவுல வரல” என்றவன் கவனமெல்லாம் லேப்டாப்பில் மட்டுமே!
“டேய்! உன்னை…” என்று வேகமாக அவனருகில் வர, அதற்கு எழுந்து ஓடியவனை விரட்ட என்று சில நிமிடங்கள் கலகலப்பாகச் சென்றது.
“இசக்கிம்மா ரவிண்ணாவுக்கு பொண்ணு பார்க்கலையா?”
“ஏன் பார்க்கலை? உங்க அழகுப்பாகிட்ட சொல்லி ஒரு வருஷமாகிருச்சி. அந்த அழகுல பார்த்திட்டிருக்காங்க.”
“ரவிண்ணா உங்களுக்கு எதாவது கன்டிஷன் இருக்கா?”
“ஏன் உன்கிட்ட கைவசம் எதாவது பொண்ணு இருக்கா?”
“அர்ச்சனா பார்க்கலாமா?” கொலைவெறியாய் தன்னைப் பார்த்த ரவியிடம் பல்லைக்காட்டி, “சும்மா வெறுப்பேத்த சொன்னேன்ணா. நீங்க சொல்லுங்க? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?”
“எனக்கு எந்த கன்டிஷனும் இல்லமா. நீங்கள்லாம் பார்த்து பிடிச்சிருக்கு சொன்னா ஓகே” என்றான்.
இரவு உணவு முடித்து இசக்கி ரவி இருவரும் ஹாலில் பாய் போட்டு பெட்ஷீட் விரித்துப் படுக்க… அறைக்குள் மகளிடம் வந்த பூவரசி, “உன்கிட்ட பேசணும்மா” என்றார்.
“காலையில பேசிக்கலாம்மா.”
“நான் ஊருக்குக் கிளம்பிருவேனே!”
“அதனாலென்ன போன்ல பேசிக்கலாம்மா.” தாய் எதைப்பற்றி பேச்செடுப்பார் என்று தெரிந்தே அந்தப் பேச்சைத் தவிர்க்கப் பார்த்தாள்.
“இதுக்கப்புறம் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியாது. இப்பவே பேசிருறேனே?”
மூச்சை இழுத்து விட்டவள், “ம்… பேசலாம்மா” என்று தாயின் மடியில் படுத்து அவர் கையிலுள்ள வளையலைத் தள்ளிவிட்டு விளையாடலானாள்.
“என்னை மன்னிச்சிரு சூர்யாமா?
சட்டென்று எழுந்தவள் திரும்பவும் படுத்து, “எதுக்குமா?” என்றாள்.
என்னவென்று சொல்வார் ஒட்டுமொத்தத் தவறும் தனதல்லவா! “அவசர அவசரமா உனக்கு நடத்தி வச்ச கல்யாணம் எவ்வளவு பெரிய தப்புன்னு உணர்றேன்மா. இப்ப நீ தனியா…”
தாயின் வாய்மூடி கண்ணீர் துடைத்து, “என்னால விக்னேஷோட வாழ முடியாதும்மா. ஏன்? எதனாலன்னு சொல்லத் தெரியலை. ஒருத்தராவது நல்லா இருக்கணும்னுதான்மா விலகிட்டேன். இது ஒருவகையில் நல்லதுதான்மா. இதோ எனக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சி நிம்மதியாயிருக்கேன். இப்படியே இருந்திடுறேனேமா” என்றாள் கெஞ்சலாய்.
“உன்னை இப்படிப் பார்க்கவா பெத்தேன்?” ஏனோ இப்பொழுது பெத்து வளர்த்தேன் என்று சொல்ல முடியவில்லை பூவரசியால். “நீ தனியாயிருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் சூர்யாமா.”
“ம்மா…” என்றாள் வேதனைக்குரலில்.
“நீ சபரியை கல்யாணம் பண்ணிக்க. சபரி வேண்டாம்னா வேற நல்ல பையனா பார்த்துக்கலாம். நீ குடும்பமா வாழணும். அதைப் பார்த்தால்தான் நிம்மதியா கண்மூடுவேன்.”
“சபரி மச்சானையே வேண்டாம் சொல்றேன். அப்படி இருக்கிறப்ப இன்னொருத்தனை எப்படிமா? அவங்களைவிட நல்லவரை எங்கன்னு தேடுவீங்க? பிரச்சனை அது இல்லம்மா. எனக்குக் கல்யாண வாழ்க்கையில இன்ட்ரெஸ்ட் கிடையாது. என்னால இன்னொருத்தர் லைஃப் பாதிக்கப்படக்கூடாது. காரணம் தெரியாவிட்டாலும் சபரி மச்சானும் முதல் மனைவியால பாதிக்கப்பட்டிருக்காங்க. என்னாலயும் அவங்க நிம்மதியா வாழலைன்னா, அதைவிடப் பெரிய தண்டனை அவங்களுக்குக் கிடையாதுமா.”
“இதெல்லாம் விட முக்கியமான விஷயம் இரண்டாம் திருமணம். அதை என்னால சகிச்சுக்கவே முடியாது. ஒழுக்கமா இருக்கணும்ன்றது எனக்கு நானே போட்டுக்கிட்ட வேலிமா. அதுல இரண்டாவது கல்யாணம்ன்றது அருவருப்பானதுன்னு மனசுல பதிஞ்சிருச்சி. என்னால அதை விட்டுட்டு வெளியில வரமுடியாது. வரவும் மாட்டேன்.”
“சூர்யாமா?”
“சபரி மச்சானுக்கு என்னை மாதிரி ஒருத்தி வேண்டாம்மா. கடைசிவரை என்னோட போராடியே வாழ்க்கையை ஓட்டணும்னு என்ன அவசியம் அவங்களுக்கு. நல்ல மனைவி அமையணும்னுதான் கடவுளை ஒவ்வொரு நிமிஷமும் வேண்டிட்டிருக்கேன்.”
“அந்த நல்ல மனைவியா நீ இருக்கலாம்மா. பாப்பாவுக்கு உன்னைவிட நல்ல அம்மா யார் கிடைப்பாங்க?”
“நல்லவளா? நானா? இல்லவே இல்லம்மா. நான் நல்லவளாயிருந்திருந்தா என் கல்யாணம் நிலைச்சிருக்கும். விக்னேஷ் அந்தளவு மோசமான ஆள் கிடையாது. சகிப்புத்தன்மையுள்ள ஆள்தான். சூழ்நிலை எல்லாத்தையும் மாத்திருச்சி. சூழ்நிலைன்றது நான்தான்மா. அவருக்குக் கல்யாணமானது என்னைப் பொருத்தவரை ரொம்பவே சந்தோஷமான விஷயம்.”
“அதுக்காகக் காலத்துக்கும் இப்படி…”
“அம்மா! என்னை என்ன நினைச்சிட்டிருக்கீங்க? உங்க பொண்ணு ரேஞ்சே வேற. நான் எனக்குப் பிடித்த வேலையில் முன்னேறி, என்னோட நேம் பிரபலமாகி, அப்படியே…” கண்களில் கனவு மிதக்க தன் லட்சியக் கனவுகள் பற்றித் தாயிடம் சொல்லி, “நீங்க இங்க என்னோடவே இருந்தா போதும்மா. அந்தத் எமதர்மராசா நமக்கு வேண்டாம்மா. அண்ணனுக்குச் சீக்கிரம் கல்யாணம் முடிச்சி வச்சிட்டு என்னோடவே வந்திருங்க.”
“அண்ணன்னதும்தான் ஞாபகம் வருது. உன் அண்ணன் ரெண்டு பேருக்கும் கல்யாணமாகிருச்சிமா. உனக்கு சொல்ல எவ்வளவோ முயற்சி செய்தும் முடியல.”
அதிர்வுதான் என்றாலும், “ஓ…” என முடித்தாள். ‘நானில்லாமல் எப்படி?’ என்ற கேள்வி எழாமலில்லை.
“நீயில்லாம பண்ணிட்டாங்களேன்னு கோபம் வருதா?” மகளின் தலையாட்டலில், “சென்னை வரலாம்னா அங்க அவன் வரவிடலை. அப்புறம் நீ எங்கயிருக்கன்னு தெரியாது. நல்ல சம்பந்தம் ஜாதகம்லாம் சரியாயிருந்தது. சீக்கிரம் முடிக்கணும்னு அவங்க சொன்னதால வச்சிட்டோம். பெரியண்ணன் மனைவி பெயர் பரிமளா. சின்னவன் சீலின்ற கிறிஸ்தவப் பொண்ணைக் காதலிக்கிறேன்னு கூட்டிட்டு வந்துட்டான். என்ன செய்ய வேற வழியில்லாமல் அவனுக்கும் முடிச்சாச்சி.”
“நல்லாயிருக்கட்டும்மா” என்று கண்மூடினாள்.
சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “சூர்யாமா அம்மாவுக்கு எதாவது ஆகிருச்சினா என்ன பண்ணவ?” எனக்கேட்க.
“ஏன்மா தப்பாவே பேசுறீங்க? எனக்கு இப்பதான் உங்க அன்பு முழுசா கிடைச்சிருக்கு. அதை அவ்வளவு சீக்கிரம் விட்ரமாட்டேன்.”
“உயிர் போகணும் நினைச்சா நம்மைக் கேட்டா போகும்?”
“ஏன்மா என்னை இம்சை பண்றீங்க? எதுக்காக இப்படிப் பேசிட்டிருக்கீங்க?” என்றாள் கோபமாக.
“எனக்காக கல்யாணம் செய்துக்கோ. உடனே இரண்டாவது மூணாவதுன்னு சொல்லாத. அது நம்ம மனசைப் பொருத்துதான் இருக்கு.”
“என்னால முடியாதும்மா.”
“அம்மாவோட கடைசி ஆசைன்னு சொன்னாலுமா?”
“யார் எப்படி ஆசைப்பட்டாலும் நான் இன்னொருத்தர் ஆசையைக் கெடுக்க முடியாதும்மா” என்றாள் பிடிவாதமாய்.
“ஓ… அப்ப சரி நீ தூங்கு.”
“அம்மா…”
“ஒண்ணுமில்லமா தூங்கு” என்றார் தலைவருடியபடி.
மறுநாள் கிளம்பும்போது தாயைத் தன்னிடம் இருக்கச் சொல்லி கெஞ்ச… “நீ கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லு. நான் உன்னோடவே இருக்கேன். என்ன பதிலைக் காணோம்? முடியாதுல்ல அப்ப நான் போறேன்” என்றவர் மகளை ஏக்கமாய் பார்த்தபடி சென்றார்.
தாய் கிளம்பியதும் கவலைகள் மனதை வாட்ட, வேறு வழியில்லாமல் வேலைக்கு வந்திருந்தாள்.
“என்ன சூர்யா ஒருநாள் எக்ஸ்ட்ரா லீவ் போட்டிருக்க?”
“அம்மா வந்திருந்தாங்க சார். இன்னைக்குக் காலையிலதான் கிளம்பினாங்க.”
“சரிமா. நீ வேலையைப் பாரு” என்று அவர் நகர, தாயுடன் பேசியதை நினைத்தபடி நின்றிருந்தவள், போன் சத்தத்தில் நினைவு கலைந்து யாரெனப் பார்க்க நம்பர் மட்டுமே இருந்தது யோசனையுடன் ஆன் செய்து, “ஹலோ” என்றாள்.
“ஹாய் சூர்யா! ஹவ் ஆர் யூ?” என்றது அந்த ஆண்குரல்.
“ஹ{ ஆர் யூ?” என்றாள் அழுத்தி.
“ப்பா! வார்த்தை பட்டுன்னு வருது. இங்கிலீஷ் கத்துட்டிருக்கபோல. நல்ல முன்னேற்றம்தான். முன்னேற்றம் இதுல மட்டும்தானா? இல்ல எதுக்காக உன்னை டைவர்ஸ் பண்ணினேனோ அதுலயுமா? எதையும் க்ளியரா தெரிஞ்சிக்கணும்ல. என்ன பேசமாட்டியா?”
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு? அதான் கல்யாணமாகிருச்சில்ல. அப்புறமும் ஏன் எனக்கு போன் பண்றீங்க? முதல்ல என்னோட நம்பர் எப்படிக் கிடைச்சது?”
“பார்றா! பேசுறதுக்கே யோசிக்கிறவள் நீ. இப்ப வார்த்தைகள் அருவியா கொட்டுது. உன் நம்பர் கண்டுபிடிக்கிறது அவ்வளவு பெரிய வேலையெல்லாம் கிடையாது.”
[the_ad id=”6605″]
“இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க? மும்பையில் அந்த முத்துகுமார் வச்சி ஆடின டிராமா போதாதா?”
“போதாதே சூர்யா. எப்படிப் போதும்னு சொல்லு? உன்னால நான் எவ்வளவு இழந்திருக்கேன் தெரியுமா? நீ ஹாயா பை சொல்லிட்டுப் போயிட்டா… எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லி வாழ்த்துவாங்களா?”
“ஏய்! வேண்டாம்.”
“எனக்கு வேணுமே. என்ன சொல்றான் உன் சபரி மச்சான். வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டானா? தெரியுமே” என கேலியாகச் சிரித்தான்.
“சபரி மச்சானைப் பற்றிப் பேசாத. அவங்க பெயரைச் சொல்லக்கூடத் தகுதியில்லாத ஆள் நீ.”
“ஹான் அப்புறம்? ஏய் அடங்கு. அவன் மட்டும் என்னவோ ஃப்ரஷ் பாய் மாதிரிப் பேசுற? கல்யாணம் முடிச்சி எல்லாத்தையும் பார்த்தவன்தான? என்ன பேசமாட்டியா? மேரேஜ் வேண்டாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன். என்ன செல்லம் என்னை மறக்க முடியலையா? என்மேல அவ்வளவு ஆசையா? கூட இருந்தப்ப சொல்லவேயில்லையே. வேணும்னா வரவா?” இன்னும் என்னென்ன பேசினானோ கட் செய்து, “ச்சீய்” என்ற வார்த்தையை உதிர்த்து அருவருப்பை முகத்தில் காண்பித்து கண்கலங்க அமர்ந்தாள்.
திரும்பத் திரும்ப அதே நம்பரிலிருந்து கால் வர, கடைசியா பேசி முடித்துவிட எண்ணி, “சொல்லுங்க விக்னேஷ். நான் என்ன செய்தா உங்களுக்கு நிம்மதியாயிருக்கும்?”
“மின்சார வளர்ச்சியில போயிட்டிருக்கியாம். உன்னை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது. வலுக்கட்டாயமாவது உன்னோட ஒருநாள் வாழ்ந்திருந்தா இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது. அட நீ கல்யாணம் பண்ணியிருந்தாலாவது அடுத்தவன் பொண்டாட்டின்னு போயிருப்பேன். நீ என்னையே நினைச்சிட்டு வேற கல்யாணம் முடிக்கலைன்றப்ப, நாம ஏன் அதைச் செய்திருக்கக்கூடாது தோணுது.”
“என்ன செய்திருக்கணும்?” என்றாள் அத்தனை கோபத்தையும் அடக்கி.
“எப்படியிருந்தாலும் நீ என் எக்ஸ். இப்ப உன்னையே எக்ஸ்ட்ராவா வச்சிருந்தா என்னன்ற எண்ணம்தான். இப்ப நான் சினிமாவுல நிறைய கேரக்டர் ரோல் பண்றேன். பணத்துக்குப் பஞ்சமில்லை. சோ, ரெண்டு சேனல்ஸ் என்னால மெய்ன்டெய்ன் பண்ணமுடியும். என்ன சொல்ற சூர்யா?”
கோபம் மீறிய ஆத்திரத்தை அடக்கி, “பண்ணலாம் விக்னேஷ். அதுக்கு முன்ன…” என நிறுத்தி அவனின் பிரஷரை ஏற்றிவிட்டாள்.
“அதுக்கு முன்ன?” அவன் குரலில் ஆர்வம்.
அவனின் ஆர்வக்குரலில் ஏளனமாய் உதடு சுளித்து, “அதுக்கு முன்ன நீ தாலிகட்டிய பொண்டாட்டியை, என் மச்சானுக்கு செகண்ட் சேனலா ஆட் பண்ணிவிடு. அது சரியா போச்சிதுன்னா நீ சொன்னதுக்கு சம்மதிக்கிறேன்” என்றாள் திமிராக! நிமிர்வாக!
“சூர்யாஆஆஆ…”
“ஹேய் என்னபா பிரஷர் ஹையாகிருச்சா? சட்டுன்னு டாக்டரைப் பார்த்து பட்டுன்னு பெட்ல படுத்திரு. பிபி குறைஞ்சிரும். அதோட சேர்த்து கொழுப்பும்.”
“என்ன நக்கலா?”
“ஹையோ! இல்ல சாமி. உன்கிட்டலாம் நக்கல் வேலைக்காகுமா? நிஜத்தைத்தான் சொல்றேன். என்ன சம்மதமா?”
“ஏய்… உன்ன…”
“என்ன? என்னடா சொல்லு? ஈஸியா கேட்கிற. எனக்குன்னு குடும்பம் இல்லன்னு நினைச்சியா? நான்தான் அவங்களை விட்டு விலகியிருக்கேன். அவங்க என்னை விலக்கல. ஒரு போன்ல உன் கதையை முடிக்க என்னால முடியும். பார்க்குறியா?”
“ஐயையோ பயந்துட்டேன்” என்று பயங்கரமாகச் சிரித்தவன், “நல்லா பேசுற சூர்யா. எனக்கென்னவோ முன்னைவிட இப்பதான் உன்னை ரொம்பப் பிடிக்குது. சீரியஸாவே கேட்குறேன் இங்க வந்திடுறியா? உன்னையும் நல்லா பார்த்துக்கறேன்.”
“நானும் சீரியஸாவே கேட்குறேன். உன் பொண்டாட்டியை இங்க அனுப்பி வைக்குறியா? என்னடா பேச்சைக் காணோம்? வலிக்குதா? அதே மாதிரிதான் எதிர்ல இருக்கிறவங்களுக்கும் வலிக்கும். அதுவும் கேட்கிறவனை விட, அதைக் கேட்டுட்டு இருக்கிறவங்களுக்கான வலி என்னன்னு உனக்கும் தெரிய வேண்டாமா? உன்னை மாதிரிக் கேட்கிறவன் வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்கன்றதை உணர்ந்து பேசணும். ஆனா எங்க… பரவாயில்ல அனுப்புறேன்னு சொன்னாலும் சொல்வீங்கடா?”
“ஹா… அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கலை. பண்ணியிருந்தா நான் ஏன் கேட்கப்போறேன். இப்ப நான். இன்னும் எத்தனை பேர் இந்தக் கேள்வியைக் கேட்பான்னு தெரியுமா? தனியாயிருந்தா எனக்கு அப்படித்தான் தோணும்.”
“திரும்பவும் முதல்ல இருந்தா. இங்க பார் விக்னேஷ் இது என் வாழ்க்கை. நீ அக்கறைப்படுற மாதிரி நடிச்சி காரியம் சாதிக்க நினைக்க வேண்டாம். குட் பை!”
“ஏய் சூர்யா! செகண்ட் சான்ஸ்காக வெய்ட்டிங். பை” என்றான்.
உட்கார்ந்தவாக்கில் போனைத் தலையில் தட்டியபடி விக்னேஷின் வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டிருந்தாள். ‘என்ன வேணும்டா உனக்கு? கூட இருந்தவரை முகம் பார்த்து நடந்த நீ, நான் எதுக்கும் சரிவரமாட்டேன்னதும் இன்னொரு முகத்தைக் காட்டுறியா? கல்யாணம் முடிஞ்சும் ஏன்டா அலையுறீங்க? எல்லா பெண்களிடத்தும் இருப்பது ஒன்றே. அதில் என்ன வித்தியாசத்தைக் காண நாயா அலையுறீங்க.’
‘உன்னால உன் பொண்டாட்டியை… சாரிமா. பேசணும்னு பேசலை. பதிலுக்குப் பதில் பேசுறேன்னு உன்னையும் அசிங்கப்படுத்திட்டேன். அதுக்காக மனசார மன்னிப்பும் கேட்டுக்கறேன்’ என்று விக்னேஷின் மனைவியிடம் மனதார மன்னிப்பு கேட்டாள்.
[the_ad id=”6605″]
மனதில் அழுத்தம் அதிகமாக ஸ்ரீகர் வரவும், “சார் மனசே சரியில்ல. கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன்” என்று அனுமதி கேட்டு அவர் சம்மதித்ததும், அலைபாய்ந்த மனதைக் கட்டியிழுத்து வரிசையாக உள்ள கடைகளில் செலுத்தியபடி நடந்தாள்.
அந்தக் கடையின் முன் பொம்மையில் இருந்த பச்சைக் கலர் ஆண், பெண், குழந்தை ஆடை மனதினை ஈர்க்க… ‘இது அன்னைக்கு ரெட் கலர்ல பார்த்தேனே. அதே கடைதானா?’ சற்றே பின் நகர்ந்து பார்த்தவள் கண்ணில் சபரி கலக்ஷன் பட, ‘என்ன சொல்லு சூர்யா இந்தப் பெயர் உன்னை விடாமல் தொடருது.’
‘தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்னு விளம்பரம் செய்வாங்களே, அப்படியிருக்கு சபரிக்கும் நமக்குமான ஒற்றுமை!’ மௌனப் புன்னகை மட்டுமே அவளிடம்!