18
கடைக்குள் நுழைகையில் அன்று வந்த அதே பெண் வேகமாக வந்து வரவேற்று, இன்னொரு பெண்ணிடம் கூல்ட்ரிங்ஸ் கொண்டு வரச்சொன்னாள்.
‘கொஞ்சம் அதிகக் கவனிப்பாயிருக்கே’ என தோன்றினாலும் சிறு புன்னகையுடன், “நோ தேங்க்ஸ். சும்மா நியூ கலக்ஷன்ஸ் பார்க்க வந்தேன்” என்றாள்.
“தாராளமா மேம். வாங்க கூட்டிட்டுப் போறேன்.”
“அச்சோ பரவாயில்லங்க நானே பார்த்துக்கறேன்” என்று நகர்ந்தாள்.
பின்னாலேயே சென்று, “மேம் நீங்க எப்ப வந்தாலும் உங்க கூடவே இருக்கணும்னு சார் சொல்லியிருக்கார்.” பணிப்பெண் சொல்ல…
“சாரா? யார் அது?”
“விளையாடாதீங்க மேம். உங்க ஹஸ்பண்ட்தான்” எனவும் சட்டென்று இருமல் வந்தது சூர்யாவுக்கு. ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவள், “இப்ப ஓகேவா மேம்” என்று கரிசனையாகக் கேட்க…
“யா” என்று அப்பெண்ணை ஒரு மார்க்கமாய் பார்த்து, சற்று நேரம் கடையைச் சுற்ற, “அம்மா” என்ற குரலில் வேகமாகத் திரும்பியவள் முகம் பளிச்சென்றாக, “பாப்பு! நீங்க எப்படி இங்க? யூனிபார்ம்ல வேற இருக்கீங்க. ஸ்கூல்லயிருந்து நேரே கடைக்கு வந்தீங்களா? என்ன வேணும் சொல்லுங்க அம்மா வாங்கித் தர்றேன்” என்றவள் முகத்தில் ஆயிரம் மின்னல்களின் சாரம்.
“உன்னோட கடையில் உன் பொண்ணுக்கு பணம் கொடுத்து வாங்கித் தர்றியா?” சூர்யாவிடம் கேட்டபடி சபரி வந்து நின்றான்.
“என்னோட கடையா? அப்படின்னா… சபரி கலக்ஷன் சபரி நீங்களா?”
“நானேதான் அந்த சபரி. அந்த சபரிதான் உன் சபரியும்” என்றான் அழுத்தமாக.
நொடி நேரத் தடுமாற்றம் வந்தபோதிலும், ‘இருந்துட்டுப் போங்க’ என்பதாய் பார்த்தவள் கண்ணில் நெற்றியிலிருந்த ப்ளாஸ்டர் பட குற்றவுணர்வு அவளுள்.
அவள் கண்ணில் தெரிந்த கலக்கம் புரிய, “ஸ்டிச்சஸ் எடுத்தாச்சி. சும்மா பேன்டேஜ் மட்டும்தான்.”
காயத்தில் மென்மையாக விரல் வைத்து வருடியபடி, “வலிக்குதா மச்சான்? சாரி. ஏன் இப்படி ஒரு கோபம்னு தெரியலை மச்சான்.”
“விடுமா. முதல்முதலா என் பொண்டாட்டி ஒரு பரிசு கொடுத்திருக்கா. அதுவும் ஆழமா! சோ நோ ப்ராப்ளம்.”
“பொண்டாட்டியை விடமாட்டீங்களா?” என்று முறைக்க…
“பொண்டாட்டின்னு நெஞ்சத்தில் பதிஞ்சிருச்சி. நானே நினைச்சாலும் மாத்திக்க முடியாது” என்று உருக்கமாகப் பேசி கண்சிமிட்ட…
“ஏன் இப்படிப் பேசுறீங்க? எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்று முகம் சுளித்தாள்.
“எனக்கும்தான் இப்படி பப்ளிக்ல நின்னு பேசப்பிடிக்கலை. பாப்பா ஹோட்டல் போகலாமா?” குழந்தையிடம் கேட்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த ஹோட்டலில் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு மூவரும் அமர்ந்திருந்தார்கள்.
“ஹாய் சபரி!” என்ற அர்ச்சனாவின் குரலில் திரும்பிய சபரி, “வாங்க அர்ச்சனா. இன்னைக்கு சூட்டிங் இல்லையா?” என்றான்.
“இருக்கு சபரி. என் சீன் எடுக்க ஒன் ஹவர் ஆகும். அதான் ஒரு காஃபி குடிக்க வந்தேன். ஹாய் சூர்யா! ஹேய் பாப்பு” என்று கன்னம் தொட்டு முத்தமிட்டு, அந்த நான்கு பேர் உட்கார வசதியுள்ள இடத்தில் தானும் அமர கேட்டு அமர்ந்தாள்.
தனக்குக் காஃபி வரவழைத்த அர்ச்சனா சபரியுடன் பேசியபடியிருக்க…
சில நிமிடங்களுக்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை சூர்யாவிற்கு. அர்ச்சனாவுடன் சபரியை சேர்த்து வைக்க நினைத்தவள்தான், தற்பொழுது அது இல்லையென்றானவுடன், ‘வயசுப் பொண்ணுகிட்ட என்ன பேச்சி வேண்டிக்கிடக்கு’ என்ற கோபம்தான் வந்தது. “பாப்பு அவங்க பேசட்டும் நீ அம்மாகூட வா” என்றழைத்து ஹோட்டலோடு சேர்ந்திருந்த சைல்ட்ஸ் பார்க்கில் விளையாட விட்டு கண்ணை அங்கு இங்கு என எங்கும் அலையவிடாது குழந்தையையே பார்த்திருந்தாள்.
திடீரென்று யாரோ குழந்தையைத் தூக்குவது தெரிய, “ஏய் குழந்தையைத் தொடாதே” என்று வேகமாகத் தன்புறம் இழுத்து தூக்கிக்கொண்டாள்.
“மேம் இதுல ஸ்க்ரூ லூஸாயிருக்கிறதா கம்ப்ளெய்ண்ட் வந்தது. திடீர்னு எதாவது அசம்பாவிதம் நடந்திரக்கூடாதுன்னு குழந்தையை நகர்த்தத் தூக்கினேன்” என்று குழந்தையை தூக்கிய காரணம் சொன்னான் அவன்.
[the_ad id=”6605″]
அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவளில்லை. குழந்தையை எந்த ஆணும் தொடக்கூடாது. அது மட்டுமே அவள் எண்ணமாக இருந்தது.
அர்ச்சனா சென்றதும் அவர்களைத் தேடி வந்த சபரி, “என்ன உதயா இங்க நிற்கிறீங்க?” என்றதுதான் தாமதம், “என்ன அப்பா நீங்க? குழந்தையோட அந்த அர்ச்சனாகிட்டப் பேசுறதுதான் முக்கியமா? அதான் பாப்பாவுக்கு அம்மாவா அவங்களை வேண்டாம் சொல்லியாச்சில்ல. அப்புறமும் ஏன் பல்லைக்காட்டி அந்தப் பொண்ணு மனசைக் கெடுக்கிறீங்க?”
“என்னது மனசைக் கெடுக்கிறேனே? தேவைதான் எனக்கு. அன்னைக்கு அந்தப் பொண்ணை கொஞ்சம் திட்டிட்டேன். பக்கத்து வீட்லயிருக்கிற பொண்ணு. இங்க வந்ததிலிருந்து அவங்க ஃபேமிலியைத் தெரியும். அதான் சாதாரணமா பேசினேன். அதுவுமில்லாம இன்னொருத்தி புருஷன்னு தெரிஞ்சும் காதல்னு உளற அவள் அன்மெச்சூர்ட் கேர்ள் கிடையாது.”
“ப்ச்… எதுவா வேணும்னா இருக்கட்டும். உங்க பொண்ணுக்கு எதுவும்னா கேட்பீங்களா தெரியாது. என் பொண்ணுக்கு ஒண்ணுன்னா நான் கேட்பேன்” என்றாள் கோபத்தில்.
“ஹேய்! இது அந்த டயலாக்ல… மலபார்! ஹா..ஹா அவளா நீ?” என்று கலாய்க்கவும் அவனை நன்றாகவே முறைக்க, காரை நோக்கி நடந்தவர்கள் நடுவில் குழந்தை இருவர் கையையும் பிடித்தபடி வர, “முறைச்சது போதும் என்ன பிரச்சனை?” என்றான்.
பிரச்சனை என்றதும்தான் விக்னேஷ் பேசியது நினைவில் வர முகம் வாடியது. அதற்குள் காரில் அமர்ந்து கார் நகர, “என்னமா? சொன்னால்தான தெரியும்?”
“அ..அது மச்சான். பிரச்சனையான்னு தெரியலை. மனசுக்கு சங்கடமா இருந்தது. அதான் பர்மிஷன் கேட்டு வந்தேன்.”
“யாரால?”
“வி..விக்னேஷ்!”
அப்பெயர் கேட்டதும் கார் பிரேக்கிட்டு நிற்க, “விக்னேஷ் எப்படி?” என்றான்.
“அவனுக்கு நான் இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கு மச்சான். போன் செஞ்சி அசிங்க அசிங்கமா பேசுறான்.”
“பதிலுக்கு நீ எதுவும் பேசலையா?”
“அவன் பேசினதுக்கு அதிகமாவே கொடுத்துட்டேன்.”
“அப்புறமென்ன மலபார். குரைக்கிற நாய் கடிக்காது. மீறி வாலாட்டினா உன் புருஷன் நான் எதுக்கு இருக்கேன். வாலை ஒட்ட நறுக்கிடுறேன்.”
“சபரி கலக்ஷன் டிசைனர் யார் மச்சான்?” என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?”
“தெரிஞ்சிக்கதான் கேட்டேன். மத்தவங்ககிட்ட சொல்ல கிடையாது.”
“என்ன பேச்சிது? நீ மத்தவங்ககிட்ட சொல்வன்னு நான் நினைப்பேனா? நானும், உன் அண்ணனும்தான் அந்த டிசைனர்ஸ். வெளி ஆட்கள் யாரையும் சேர்க்கிறதில்லை. ஆனா, வெளியாட்கள் செய்ற மாதிரி வெளியில ஒரு இமேஜ் கிரியேட் பண்ணி வச்சிருக்கோம்.”
“ஏன் மச்சான்?”
“தெரியலை உதயா. நேரம் வர்றப்ப பார்த்துக்கலாம். இப்ப வேலைக்குப் போறியா? வீட்டுக்கா?”
“என்னை ஃபேஷன் வேர்ல்ட்ல விட்ருங்க” என்றதும் அங்கேயே இறக்கிவிட்டுச் சென்றான்.
காலை வந்த போனை அட்டெண்ட் செய்ய, “அக்கா… அம்மா” என்று அழுத பரத்தின் குரலில் ஏகத்திற்கும் பயமேற, “பரத்! அம்மாவுக்கு என்னடா?” என்றாள்.
“அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்குக்கா. நீ சீக்கிரம் வாக்கா. எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு. அம்மாவுக்குப் பேச்சு மூச்சேயில்ல.”
“பேச்சு மூச்சில்லையா? என்னடா சொல்ற? நல்லாத்தான வந்தாங்க?” என தவிப்புடன் கேட்க…
“அது உனக்கு முன்ன அப்படிக் காண்பிச்சிருக்காங்க. ரெண்டு நாளா அப்பப்ப நெஞ்சில வலிச்சிட்டே இருந்திருக்கு. நம்மகிட்ட சொல்லவேயில்லை. பஸ் ஏறுனதிலிருந்து உன்னைப் பற்றிய புலம்பல்தான். என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் அப்படி இப்படின்னு ஓயாத பேச்சு. பேசாதீங்கம்மா சொன்னாலும் கேட்கலை. பஸ்லயிருந்து இறங்குறப்ப கீழ வேற விழுந்துட்டாங்க.”
“ஐயோ!”
“தூக்கிவிட்டதும் தண்ணியைக் குடிச்சிட்டு எழுந்து நடக்கதான் செய்தாங்க. வீட்டுக்கு வந்தா இந்த அப்பா வேற அங்க நடந்ததையெல்லாம் சேர்த்து வச்சி கேவலமா பேச, பதிலுக்கு அம்மாவும் பேசன்னு நைட் வரைக்கும் ஒரே சண்டை. துணைக்கு அவரோட அண்ணனையும் தம்பி பொண்டாட்டியையும் சேர்த்துக்கிட்டார். நைட்ல படுக்கப் போனவங்க நெஞ்சு வலிக்குது சொன்னாங்க. ஆம்புலன்ஸ் வரச்சொல்லி வர்றதுக்குள்ள, அக்காவை பார்த்துக்க பரத். கைவிட்ராதன்னு ஒரே அழுகை. இப்ப ஹாஸ்பிடல்லதான் இருக்கோம்.”
‘அம்மா’ என்று அலறிய மனதை அடக்கி, “என்னால்தானா?” கண்கள் கலங்கி கண்ணீர் வர அசையாது அமர்ந்திருந்தவள், “வெள்ளச்சி” என்ற அழைப்பில், “இசக்கிம்மா” என்று கத்தி இடுப்பைக் கட்டிக்கொண்டு, “நான் அம்மாவைப் பார்க்கணும். பேசணும். என்னோடவே கூட்டிட்டு வந்து ராணி மாதிரி பார்த்துக்கணும்மா. என்னை அங்க கூட்டிட்டுப் போங்க” என்று அழுதாள்.
அவளின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்து, “அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. உன் கல்யாணம்தான் அவள் கனவு. அது நிறைவேறாம எப்படிப் போவா?”
“அந்தக் கனவு நிறைவேறாதுன்னு சொன்னதால இப்படியாகிருச்சா?”
“இங்க பார் வெள்ளச்சி… காரணம் அதுவா இதுவான்னு யோசிக்கிறதை விட்டுட்டு முதல்ல கிளம்புற வழியைப் பாரு. உனக்கு லீவ் சொல்லியாச்சி. நீ கிளம்புறதுக்கான நேரம் இன்னும் பத்து நிமிஷம்தான்” என்று விரட்டி அடுத்த பத்து நிமிடங்களில் காரில் ஏற, “அம்மா” என்ற உதய ஹரிணியின் அழைப்பு தாயை நினைவுபடுத்த கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, குழந்தையை மடியில் வைத்து நெஞ்சோடு சாய்த்துக் கண்மூடினாள். வேறு யாரையும் கவனிக்கும் நிலையிலில்லை.
ஏர்போர்ட் வந்த பின்பே சுற்றுப்புறம் புரிய தன்னைச்சுற்றி ரவி தவிர அனைவரும் இருப்பது தெரிந்தது. மூன்று மணிக்கெல்லாம் மதுரை வந்து கார் பிடித்து வரும் வழியில் ஹாஸ்பிடல் எங்கேயென்று ராமனுக்கு போன் செய்ய, நேரே வீட்டிற்கு வரச்சொல்லி விட்டான்.
“அம்மாவுக்கு என்னாச்சிமா? ரொம்ப உடம்பு முடியலன்னு சொன்னாங்க. அப்புறம் எப்படி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க? அம்மா நல்லாயிருக்காங்கல்லமா?”
“நீ கற்பனை பண்ற மாதிரி எதுவுமில்லை. பூவு நல்லாதான் இருக்கா. வேணும்னா பேசுறியா?” என்று திரும்பவும் ராமனை அழைத்து பூவரசியிடம் கொடுக்கச் சொன்னார்.
“சூர்யாமா! அம்மாவுக்கு ஒண்ணமில்லமா. உன்னைப் பார்க்காம, உன் வாழ்வைச் சீர்படுத்தாம எனக்கு எதுவுமாகாது. உனக்காக காத்திருக்கேன்” என…
“இ..இதோ வந்துட்டிருக்கேன்மா.” தாயிடம் பேசியதும்தான் மனம் சற்று சாந்தமடைந்தது.
அணையப்போகும் விளக்கின் நிலையில் தோழி இருப்பதை எண்ணி அழக்கூட முடியாத நிலையிலிருந்தார் இசக்கி. தான் அழுதால் சூர்யாவிற்கு விபரீதம் புரிந்துவிடும் என்பதால் கண்ணீரையும் மனதையும் அடக்கி அமர்ந்திருந்தார்.
ஐந்து மணிக்கெல்லாம் வீட்டினுள் நுழைந்தவளுக்கு எதுவும் சரியாக இருப்பதாகத் தோன்றவில்லை. சில சொந்தங்கள் அங்கிருக்கக் கண்டவள், என்னவோ ஏதோவென்ற பயம் எழ வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
ஹால் கட்டிலில் படுத்திருந்த பூவரசிக்கு இத்தனை நேரம் மகளைத்தேடி அலைபாய்ந்த கண்கள், உள் நுழைந்தவளைக் கண்டு ஜொலித்தது.
முதல் முதலாக நாத்தனாரைக் கண்ட இரு அண்ணிகளின் கண்களும் வியப்பாய் பார்த்தது. ‘வா’ என்றழைக்கக் கூட முடியாத நிலையில் அவர்களிருக்க, அண்ணன்கள் அவளிடம் வர, “அக்கா” என்று ஓடிவந்தான் பரத்.
“என்னடா அம்மாவுக்கு ஒண்ணுமில்லன்னு சொன்னீங்க? அப்புறம் ஏன் கூட்டம்?”
“அம்மாவை ஹாஸ்பிடல்ல வச்சிருந்ததால பார்த்துட்டுப் போகலாம்னு வந்திருக்காங்க சூர்யா” என்றான் ராமன்.
“பொய் சொல்லாதண்ணா. எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்துறீங்களா? நீங்க கூட என்னை ஏமாத்திட்டீங்கள்ல மச்சான்?” சபரியிடமும் தன் கோபத்தைக் காட்ட…
“இங்க நின்னு பேசிட்டிருக்காம வந்து அத்தைகிட்டப் பேசு உதயா. உனக்காகத்தான் காத்திருக்காங்க.”
“எனக்காகவா? அப்படின்னா?”
“உனக்காக! உனக்காக மட்டும்தான்! தன் கடைசி கட்டத்துல உன்னைப் பார்த்துப் பேச உன்னையேப் பார்த்திருக்காங்க” என்றான் அழுத்தமாக.
‘கடைசி கட்டம்!’ மனம் சொல்ல கால்கள் நகர மறுக்க, முடியாதென்பதாய் தலையசைத்தவளை “வாக்கா” என்று பரத் இழுக்க… மாட்டேனென்னு நின்றவள் தோளை அழுத்திப்பிடித்து… நகர மறுத்தவளை நகர்த்தி, பூவரசியின் அருகில் சென்று நிறுத்தினான் சபரி.
[the_ad id=”6605″]
“அம்மா” என்ற அலறலுடன் தாயருகில் அமர்ந்து கட்டிக்கொள்ள… மகளின் தலை வருடியபடி சபரியைப் பார்த்தார்.
சூர்யாவின் அருகில் அமர்ந்து, “மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க அத்தை. நான் இருக்கேன். கடைசிவரை நான் பார்த்துக்கறேன்” என்று சூர்யாவைப் பார்த்தான். அவனுக்குள் சிறு குற்றவுணர்ச்சி. தான் ஏதோ சொல்லப்போக இங்கு அது நடந்து கொண்டிருப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. சூர்யாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்த அன்று பூவரசி இசக்கியிடம் பேசியது நினைவில் வந்து போனது.
“உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னா, இக்கட்டான ஒரு சூழ்நிலை இருக்கணும் அத்தை. அவளே வந்து என்னைக் கல்யாணம் செய்துக்கோங்கன்னு கேட்கணும். அப்ப அவளோட நல்லதுக்காக சில கண்டிஷன் போடுவேன். அதையும் மீறி நாம கல்யாணம் செய்துக்கலாம் சொல்லணும். அப்படிச் சொன்னா காலத்துக்கும் அவள் மாறமாட்டா. கல்யாணம் ஆகிட்டா அவளை சமாளிச்சி வாழ்க்கையைக் கொண்டு போற முழுப்பொறுப்பும் என்னோடது.”
“அவளே வந்துன்னா? பாப்பாவைக் காட்டிப் பேசலாமா?” என்று இசக்கி கேட்க…
“விளையாடாதீங்க அத்தை. உங்க பொண்ணு பாப்பா முன்னாடிதான அர்ச்சனாவை அம்மா சொல்லச் சொல்லிக் கேட்டா. திரும்பத்திரும்ப நீங்கதான் என் அம்மான்னு அவள் சொன்னாலும் விலக்கி விடதான் பார்க்கிறா. யாரையாவது கூட்டிட்டு வந்து தாலி கட்டுங்க மச்சான்னு சொன்னாலும் சொல்லிருவா. அந்த ரிஸ்க் வேண்டாம். அங்கயிங்க நகர முடியாதளவு லாக் பண்ணணும். அந்த மாதிரி ஹெவியான சூழ்நிலை அமைஞ்சா மட்டுமே எங்களோட கல்யாணம் சாத்தியம்” என…
“கண்டிப்பா நடக்கும்” என்றிருந்தார் பூவரசி.
விளைவு! இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை சபரிநாதன். ‘என்னை மன்னிச்சிருங்க அத்தை. நான் ஏதோ சொல்லப்போய்… இப்படி நினைக்கலை’ என்று பார்வையாலேயே மன்னிப்பை யாசித்தான்.
ஒரு புன்னகையை மட்டும் அவனுக்கு பதிலாகக் கொடுத்தவர் கண்மூடி அமைதிப்படுத்தினார்.
“அம்மா! ஏன்மா? இப்பதானம்மா… அதுக்குள்ள என்னை விட்டுட்டுப் போகப் போறீங்களா? அன்பைக்கூட முழுசாகத் தரமுடியலைல்ல? இதுக்கு என்கிட்ட உங்க பாசத்தைக் காட்டாமலே இருந்திருக்கலாம்மா. நீங்க இல்லன்னா…”
பூவரசி கண்களில் கண்ணீர் வழிய மகளைப் பார்த்திருந்தார். அவளின் கேள்விகள் எதற்கும் பதிலில்லையே.
“வெள்ளச்சி கடைசி நேரத்துல அவளை அழ வைக்காம சந்தோஷமா அனுப்பி வை.”
‘அப்ப என் சந்தோஷம்?’ கேட்க நினைத்ததைக் கேளாமல் தாயையே பார்த்திருக்க… அதை உணர்ந்தாரோ! அவரின் கண்கள் சபரியையும் அவளை ஒட்டி நின்றிருந்த குழந்தையையும் பார்க்க… மறுப்பான தலையசைப்பு அவளிடம்.
சூர்யாவின் கைபிடித்து, “என்னோட ஆசையை நிறைவேத்த மாட்டியா?” கண்கள் எதிர்பார்ப்பில் இருக்க வேறெதுவும் கேட்கவில்லை அவர்.
தாயின் எதிர்பார்ப்பு தவிப்பு புரிகிறது. அதற்காக சபரி வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராயில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாய் தத்தளித்தவள் அண்ணன்களின் முகம் பார்க்க… “சரின்னு சொல்லு” என்றார்கள். தம்பியின் எண்ணம் ஏற்கனவே தெரிந்ததுதான். இசக்கியின் கணவர் அழகரிடம் தன் பார்வையைத் திருப்ப… அவர் தன்னிடம் வரச்சொல்லி அழைத்தார்.
தாயை விட்டு நகர விருப்பமில்லாவிடினும் அவருக்காகச் சென்றவள், தாய் கண்ணுக்குத் தெரியும் இடத்தில் நின்று, “சொல்லுங்க அழகுப்பா?” என்றாள்.
“எதுக்குமா இத்தனைத் தயக்கம்?”
“அம்மா… அழகுப்பா.”
“நான் உன் கல்யாண முடிவு பற்றிக் கேட்டேன்.”
“மச்சான் பாவம் அழகுப்பா. அவங்களுக்கு நான் சரிவரமாட்டேன்.”
“அவன் சொன்னானா?” எனக் கேட்டதும், அவள் இல்லையென்று தலையசைக்க… “எதுவாயிருந்தாலும் உங்க கல்யாணம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம். இந்த வயசுல உன் அம்மாவை இழக்க முடியாம கதறுறியே அந்தச் சின்னப் பொண்ணைப் பாரு. தாய்ப்பால்னா என்னன்னு கூடத் தெரியாது வளர்ந்த குழந்தை அவள். உன்னை மட்டும்தான் அவள் தாயா எண்ணி வளர்றா. குழந்தைக்காகவாவது அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ.”
“குழந்தைக்காகன்னு கல்யாணம் செய்தா, அது சபரி மச்சானை ஏமாத்துற மாதிரி ஆகாதா? எத்தனை நாளைக்கு என்னை சகிச்சிப்பாங்க? விக்னேஷ் கூட பிடிச்சிதான் கல்யாணம் செய்தார். ஆனா, ஒரு மாசம் கூட ஆகலை. அதே நிலை சபரி மச்சானுக்கு வேண்டாம்பா. இப்ப பொண்ணுக்காகன்னு ஏத்துக்கிட்டாலும் ஒரு ஏமாற்றம் இருந்துட்டேயிருக்கும்.”
“ஏன்மா? உனக்காக! உன்னைப் பிடிச்சிக் கல்யாணம் செய்துக்கக்கூடாதா?”
“பிடிச்சிக் கல்யாணம் செய்துக்க என்கிட்ட எதுவும் இல்லப்பா.”
“தப்பா சொல்றமா. உன்னால சபரியோட வாழ்க்கையிலும், உன் வாழ்க்கையிலும் மாற்றம் வரும். அதை என்னால அழுத்திச் சொல்ல முடியும். பாப்பா வாழ்க்கை உன்னோட வரவால பிரகாசமாகும். எல்லாத்தையும் விட சாகக்கிடக்கிற உன் அம்மாவுக்கு ஆன்ம சாந்தி கிடைக்கும். இப்ப யாரையும் பார்க்காத. நீ! சபரி! பாப்பா! எல்லாரையும் வெளில நிறுத்தி, உன் அம்மாவை மட்டும் மனசுல நிறுத்திப் பாரு. இப்போதைக்கு அவங்க மட்டும்தான் முக்கியம்.”
“அழகுப்பா!”
“போ போய் அம்மா பக்கத்துல உட்கார்.”
[the_ad id=”6605″]
சில நொடிகள் கண்மூடி ஆழ்ந்த மூச்செடுத்து கண்திறந்து தாயின் முகம் பார்த்து, “சபரி மச்சானை கூப்பிடுங்க அழகுப்பா” என்றாள் முடிவுடன்.
அவளின் தெளிந்த முகமே அவருக்கு திருப்தியைக் கொடுக்க சபரியை அழைத்து அவர்களைப் பேசச் சொல்லி அவர் நகர்ந்தார்.
சில நிமிட அமைதி இருவருக்குள்ளும்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க மச்சான்” என்றாள் அந்த அமைதியை உடைத்து.
“முழு மனசோடதான் சொல்றியா உதயா?”
“ஆமா மச்சான்.”
“அப்ப நம்ம எதிர்காலத்தை முன்னிறுத்தி சில கண்டிஷன்ஸ் போடுவேன்.”
“எதுவாயிருந்தாலும் ஒத்துக்குறேன் மச்சான். அதுக்கு முன்ன நான் சில விஷயம் பேசணும்.”
‘சொல்’ என்பதாய் அவன் நிற்க… “நமக்குக் கல்யாணம் ஆன பிறகு நானும் பாப்பாவும் மட்டும்தான் உங்க உலகமாயிருக்கணும்” என்று ஆரம்பிக்க… சபரியின் முகத்திலோ ஆயிரம் வால்ட் மின்சாரம் மின்னலாய் வெட்டி பரவசப்படுத்திச் சென்றது.
“என்கிட்டயிருந்து எதுவும் கிடைக்கலன்னாலும், நீங்க வேற பெண்ணைத் தேடக்கூடாது. நல்ல மனைவியா முடிஞ்சளவு நானிருப்பேன். நல்ல அம்மாவா நூறு பெர்சன்ட் இருப்பேன். நல்ல கணவனா குழந்தைக்கு நல்ல அப்பாவா கடைசிவரை இருக்கணும். தண்ணி, சிகரெட் பழக்கம்னு எது இருந்தாலும் இத்தோட விட்டுரணும். சந்தேகம்! அப்படி ஒண்ணு நமக்கிடையில் வரவே கூடாது. அதுக்காக அடிமையா இருக்கச் சொல்லலை. கடைசிவரை அன்பாயிருக்கணும்.”
“ம்… வேற எதாவது?”
“நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதுக்கான மனப்பக்குவம் உங்ககிட்ட இருக்கான்னு கேட்கமாட்டேன். கண்டிப்பா இருக்கணும். இதுக்கெல்லாம் சம்மதம்னா உங்க கண்டிஷன் சொல்லுங்க?” என்று கைகட்டி சுவரில் சாய்ந்தபடி அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து நின்றாள்.
“குட். நான் சொல்ல நினைச்சதுல பாதிக்கும் மேல நீயே சொல்லிட்ட. எல்லாத்துக்கும் சம்மதம்தான். பாப்பா ஒரு அன்னியோன்யமான சூழ்நிலையில் வளரணும். நீ எப்படி வளர்ந்திருந்தா நல்லாயிருந்திருப்பன்னு ஃபீல் பண்றியோ அப்படி ஒரு வளர்ப்பைக் கொடு. உன் அப்பாவோட கேரக்டர் பார்த்து வளர்ந்தவள் நீ. நான் அப்படி இல்லைன்னு உனக்குத் தெரியும். இருந்தாலும் பெஸ்ட் ஹஸ்பண்ட் அன்ட் ஃபாதர்னு உன்கிட்ட நான் சர்டிபிகேட் வாங்குறது என்னோட சாமர்த்தியம். உனக்காக எதை வேணும்னாலும் விட்டுக்கொடுக்க நான் தயார்தான். உன்னைத் தவிர!”