அவள் கண்களில் தோன்றிய நொடி நேர பளிச்சிடலைக் கண்டு புன்னகைத்தவன், “அதைவிட மனசுல எதையும் போட்டுக் குழப்பாம வாழ்க்கையை யதார்த்தமா எடுத்துக்கோ. ஃப்ரீயா இரு. உன்னைக் கண்ட்ரோல் பண்ண ஆள் கிடையாதுன்னு சொல்லமாட்டேன். நீ தப்பு செய்தா நல்ல கணவனா கண்டிப்பா கண்டிப்பேன். வேற எதாவது கேட்க மறந்திருந்தா கேட்டுக்கலாம்” என்று அமைதியாக நின்றான்.
“வேற எதுவுமில்லையா மச்சான்?”
“நீ என் மனைவியா கிடைக்குறியே வெள்ளச்சி. அதைவிட எனக்கு வேறென்ன வேணும்?”
“அப்ப நாம கல்யாணம் பண்ணிக்க முழுச் சம்மதம் மச்சான்.”
வேறெதுவும் தேவையில்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்துக் காத்திருப்பேன்
என்னவானாலும்!
உன்னெதிரில் நானிருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்!
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திடச் சொல்லி
பாழும் மனம் ஏங்கும்!
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா!
பாடல் சபரியின் செல்போனில் வர, விளங்க முடியா பார்வை ஒன்றை அவன் மீது செலுத்தினாள் சூர்யோதயா!
“அத்தை உங்க பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டா. இனியென்ன எழுந்து ஓடியாட வேண்டியதுதான?”
மகளின் கன்னம் தொட்டு முத்தமிட்டு, “உனக்குக் கொடுக்க முடியாத பாசத்தை, உன் பிள்ளையா பிறந்து என் அன்பு மொத்தத்தையும் கொடுப்பேன்மா.”
“ஏன்மா இப்படிப் பேசுறீங்க? அதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன்ல. உங்க ஆசையை நான் நிறைவேத்துற மாதிரி, குணமாகி என்னோடவே வந்திருங்கம்மா.”
“எனக்கு சரியாகிருச்சிமா. கல்யாணமானதும் உன்னோடவே வர்றேன்.” மெல்ல எழுந்து சாய்ந்தமர்ந்து, “இசக்கி காலையில நேரம் பாரு” என்றார்.
“அதெல்லாம் பார்த்துட்டேன். ஆறரையிலிருந்து எட்டு மணிவரை நல்ல நேரம். வாழைக்கும், மாலைக்கும், மேளத்திற்கும் சொல்லியாச்சி. பட்டுப்புடவை எடுத்தா ஜாக்கெட் உடனே தைக்க ஆள் கிடைக்கணும்.”
“நான் தைச்சித் தர்றேன்ங்க. சூர்யா என்கிட்டதான் தையல் கத்துக்கிட்டா” என்று எழுந்து வந்தாள் வாசவி.
“நீதானாமா அது? ரொம்ப நல்லது செய்திருக்கமா. அந்தக் கலைதான் என் பொண்ணை பெரியாளாக்கியிருக்கு. அதுக்கே நாங்க நிறைய நன்றி சொல்லணும்.”
“அச்சோ! ஏன்மா நன்றில்லாம் சொல்றீங்க? தையல் சொல்லிக் கொடுக்கிறது என்னோட தொழில். நீங்க புடவை வாங்கிட்டு வாங்க. நான் நைட்டே தைச்சித் தந்திடுறேன்.”
“சந்தோஷம்மா” என்று பரத்தையும் அவர் கணவரையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
ராமன் தோளில் தூங்கிய குழந்தையை வாங்கி அங்கிருந்த அறையில் படுக்கப்போட… ராமனும் லட்சுமணனும் அவரவர் மனைவியை அறிமுகப்படுத்தி, அவளில்லாமல் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு வருத்தமும் தெரிவித்தார்கள்.
இருவரிடமும் கோபமிருந்தாலும் நடந்ததை மாற்ற முடியாதென்பதால் சகஜமாகப் பேசி, “குழந்தை எழுந்தா சொல்லுங்க” என்று அண்ணன் மனைவியிடம் சொல்லி தாயிடம் சென்றமர்ந்தாள்.
பூவரசியால் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும் தன் வீட்டின் லைட் வெளிச்சங்களும், இரவே வந்திறங்கி வாசலை அலங்கரித்த வாழைகளும், செயற்கைப் பூந்தோரணங்களும் திருமண வீடாய் மாற சந்தோஷத்தில் விழிகளும் பளபளத்தது.
அவசரத்திற்கு அருகிலிருந்த டாக்டரின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்திருக்க, இரவில் சிறுசிறு மூச்சுத் திணறல்கள் வந்த போதிலும் மகளைத் திருமண கோலத்தில் பார்த்தே தீருவேன் என்பதாய் உயிரைக் கையில் பிடித்துக் காத்திருந்தார்.
தர்மராஜன் அனைத்தையும் மூன்றாம் மனிதனாய் வேடிக்கை பார்த்திருந்தாரே தவிர எதிலும் தலையிடவில்லை.
சபரி தன் அப்பாவிற்கு தகவலளித்து சாயல்குடி வரச்சொல்லி தங்கைக்கு ப்ளைட் டைம் பார்த்து சென்னை டூ மதுரைக்கு புக் செய்து அவர்களையும் வரச்சொல்லி, பொறுப்பை மேனேஜரிடம் ஒப்படைத்து ரவியையும் வரச்சொல்லியிருந்தான்.
காலையில் மூச்சிறைப்பு அதிகமாக சீக்கிரமே திருமணத்தை முடிக்க இசக்கியும் அழகரும் ஏற்பாடு செய்தார்கள்.
பூவரசிக்குமே புதியதாக பட்டுப்புடவை கட்டிவிட… மணமகளாய்த் தன் முன் நின்ற மகளைக் கண்ணாரக் கண்டு ரசித்து, கையால் திருஷ்டி எடுத்து மணமேடையில் மணமகன் அருகில் அமரச்சொன்னார்.
அடுத்த சில நிமிடங்களில் பெரியவர்கள் முன்னிலையில் கெட்டிமேளம் கொட்ட தாலியை சூர்யோதயாவின் அருகில் கொண்டு சென்றவன் அப்படியே நிற்க… என்னவென்பதாய் அத்தனை பேரின் பார்வையுமிருந்தது.
சூர்யாவின் இதயம் ஏனென்பதாய் பல மடங்கு துடிக்க, திரும்பி தாயைப் பார்த்தாள். அவரின் கண்ணில் எதிர்பார்ப்புடன் கலந்த ஆர்வம் மட்டுமே!
சுற்றியுள்ளவர்கள் கேட்ட பொழுதும் அவன் அப்படியே இருக்க… சூர்யாவின் பொறுமை குறைய, “கட்டுறதுல என்ன பிரச்சனை மச்சான்? அதான் எல்லாம் பேசியாச்சில்ல?” என்று கேட்டேவிட்டாள்.
“ஸ்மைல் ப்ளீஸ்” என்றதும் புரிந்து அவனை முறைக்க… “ஸ்மைல் ப்ளீஸ்” என்றான் திரும்பவும்.
“ஈஈஈஈஈ… போதுமா. கட்டுங்க” என கடுப்பாகச் சொல்ல…
“ஸ்மைல் ப்ளீஸ் சூர்யா” என்று அனைவரும் சொல்ல… சட்டென்று ஒரு வெட்கம் எழ… புன்னகையுடன் அவளைக் கண்டவன், “இதுதான் அழகு என் வெள்ளச்சிக்கு” என்று தாலியைக் கட்ட… சுற்றியுள்ளவர்களின் வாழ்த்துகள் யாவும் நாலாபுறமிருந்தும் அட்சதைகளாய்த் தூவி அவர்களை ஆசீர்வதித்தது.
சூர்யப் பெண்ணவளின் சிறு இதழ்ப்புன்னகை பெரிதாக மலர்ந்ததோ! அந்நேரத்து நிகழ்வைக் கண்மூடி உள்வாங்கிக் கொண்டவள் புன்னகை மாறவில்லை.
[the_ad id=”6605″]
அதைக்கண்ட தாயின் மனதிலிருந்த பாரமிறங்கி நிம்மதி மூச்சுவிட மூச்சிறைப்பும் குறைந்தது.
இசக்கியும் பரத்தும் அவ்வப்பொழுது பூவரசியைப் பார்வையிட்டபடியேதான் நின்றிருந்தார்கள்.
அங்கு நடந்த அனைத்தையும் ஓரமாக நின்ற வேடிக்கை பார்த்திருந்தனர் விக்னேஷ்-காவ்யா தம்பதியர்.
சபரிநாதன்-சூர்யோதயா திருமணம் அத்தனை பேரின் சந்தோஷத்துடன் ஒருத்தரின் கோபமும் அதிலிருந்தது. சபரியின் தாய் சரளாவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை. மகனின் கோபத்திலும், கணவரின் சிறு மிரட்டலிலும் பயந்து வந்திருந்தார்.
அத்தோடு இரண்டாவது திருமணம் என்றதும் சில நரம்பில்லாத நாக்குகள் தங்களை வேலையைச் செவ்வனே செய்தது.
சபரியின் பெற்றோரிடமும் இசக்கி தம்பதியரிடமும் ஆசி வாங்கி பூவரசியிடம் செல்ல… எப்படியும் தன்னைக் கூப்பிட்டுதான் ஆகவேண்டுமென்ற தெனாவெட்டில் தர்மராஜன் நிற்க…
அவர் மகளோ அதே தெனாவெட்டுடன், “எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கம்மா” என்று தாயின் காலில் விழுந்தவள் அவரை கண்டுகொள்ளவே இல்லை.
இருவரையும் பல்லாண்டுகள் நலமாக வாழ உளமார வாழ்த்த… “ஆச்சி என்னையும்” என்று வந்த தன் மகளின் மகளை “நூறு வருஷம் எந்த நோய் நொடியுமில்லாம நல்லா வாழணும் செல்லம். ஆச்சி உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் செய்வியா?”
“சொல்லுங்க ஆச்சி செய்றேன்” என்ற குழந்தையின் வேகத்தில் புன்னகைத்த பூவரசி, “உன்னோட அம்மாவை அவளோட அம்மா இடத்திலிருந்து நல்லா பார்த்துக்கணும். பார்த்துக்குவியா?”
“ம்மா…” என சூர்யா வேதனையில் கலங்க…
“என்னோட அம்மாவுக்கு நான் அம்மாவா? அப்ப நான் பார்த்துக்கறேன் ஆச்சி.”
“நீ பார்த்துப்பேன்னு எனக்கு தெரியும் செல்லம். எப்பவும் அம்மாவை அழவிடக்கூடாது. சரியா?”
“சரிங்க ஆச்சி. அம்மா அழாதீங்க” என்று கட்டிலில் ஏறி கண்ணீர் துடைக்க மெல்லிய விசும்பலுடன் தாயைக் கட்டிக்கொண்டாள்.
பூவரசியின் கண்கள் யாரையோ தேடுவதுபோல் தோன்ற, “என்ன வேணும்மா?” எனக்கேட்க…
ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து திரும்பவும் தேட, தேடியவர்கள் கிடைத்ததும் அருகில் அழைத்தார்.
அவரின் அருகே வந்து, “எப்படி இருக்கீங்க அத்தை? எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று விக்னேஷ்-காவ்யா இருவரும் அவர் காலைத் தொட…
“காலத்துக்கும் சேர்ந்து குழந்தை குடும்பம்னு நல்லாயிருக்கணும்பா. என்னைக்கும் என்னோட ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு” என்று மனதார வாழ்த்தினார்.
அதிர்ந்து நின்றார்கள் அனைவரும்.
சூர்யாவிற்கு விக்னேஷை அடையாளம் கண்டுபிடிக்கவே சில நிமிடங்கள் ஆனது. பூவரசியின் இந்தத் தன்மையை சபரி, சூர்யா, இசக்கி என யாரும் எதிர்பார்க்கவில்லை.
விக்னேஷை மனைவியுடன் பார்த்ததில் சூர்யாவிற்குள் திருப்தியுடன் கூடிய நிறைவுதான் வந்தது. அவன் பேசியவை எதுவும் நினைவிலில்லை.
ஊராருக்கோ விக்னேஷ்-காவ்யா இருவரும் சினிமா நடிகர், நடிகை என்பதே பெரிதாகத் தெரிய, சூர்யாவின் முன்னால் கணவன் என்பது கணக்கிலில்லாமல் போனது. அவர்களைக் காணவே சிலர். அவர்களே அறியாமல் அவர்களை போட்டோ எடுத்தவர்கள் சிலர். அவர்கள் கிளம்புவதற்குள் செல்ஃபிகள் பலவாகியிருக்கும் என்பது நிஜம்.
தோழி செய்ததைப் பொறுக்க முடியாத இசக்கி, “பூவு…” என்று கேட்கப்போக, அழகர் அவரைத் தடுக்க… “என்னங்க அவ…”
“அமைதியாயிரு இசக்கி. இது அவங்க பிரச்சனை. அவளே அவங்களைத் தேடுறாள்னா எதாவது காரணம் இருக்கும்” என்றார்.
தாயின் இந்தச் செயல் ராமன் லட்சுமணனுக்குக் கூடப் பிடிக்கவில்லை. அவரின் கடைசிக்கட்டம் என்பதால் அமைதியாக நின்றார்கள்.
பூவரசியோ தன்னைக் கட்டிலிலிருந்து இறக்கிக் கீழே படுக்க வைக்கச் சொல்ல… எல்லோருக்கும் அழுகை வந்தது. மற்றவர்கள் கண்ணீர் பார்த்து புன்னகைத்து, “கட்டில்லயே செத்துட்டா, போற இடத்திலும் கட்டிலைச் சுமந்துட்டே இருக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க. நான் ஏற்கனவே இங்க நிறைய சுமந்துட்டேன். அங்கேயும் போய் முடியாதில்லையா. அதான் கீழ இறக்கிவிடச் சொல்றேன்” எனவும் அழுகைக் குரல்கள் அங்கே.
அவர் எண்ணப்படி கீழே இறக்கிப் படுக்க வைக்க… கடைசியாகத் தன் தோழியைக் கைநீட்டி அழைக்க… “பூவு” என்று தோழியின் கைபிடித்தார் இசக்கி.
“என் பிறப்பிலிருந்து இதோ என் இறப்பு வரை கூடவே இருக்கிறவள் நீதான் இசக்கி. என்னைப் பெத்தவங்களும் ஒரு கட்டத்துல விட்டுட்டுப் போயிட்டாங்க. உறவுகளும் விலகி நின்னுட்டாங்க. கடைசி வரை இருக்க வேண்டிய தாலி உறவும் இருந்தும் இல்லாததுதான். ஆனால், நீ… கடவுள் எனக்காக, என் மனக்குறை தீர்த்து நான் மடிசாய அனுப்பி வச்ச தேவதை.”
“பூவு” என்றவருக்கு அதற்கு மேல் பேச்சே எழவில்லை.
[the_ad id=”6605″]
“என் பொண்… இல்ல உன் பொண்ணை உனக்கு மட்டுமே பொண்ணா தர்றேன். அவளா நினைத்தால் தவிர அவளை யாரும் உரிமை கொண்டாட முடியாது. நீ பார்த்துக்கோ இசக்கி.”
“அவள் எப்பவும் என் பொண்ணுதான் பூவு.”
“பொண்ணுன்னு உரிமையா சொன்னாலும், முழு உரிமையா உனக்கு நான் தாரை வார்த்துத் தர்றேன்” என்று மகளின் கைபிடித்து இசக்கியின் கையில் வைத்து அழுத்தியவர் கை சிறிது சிறிதாகத் தளர, உயிர் பிரிந்து உடல் மட்டுமாய் விழ… “அம்மாஆஆ…” என்ற அலறல்கள் மட்டும் உச்சஸ்தாபியில் ஒலித்தது.
அழக்கூட முடியாமல் தொண்டையடைக்க அமர்ந்திருந்தார் இசக்கி. அழகர் மனைவியின் தோளைத் தொட்டதுமே அழுகை பீறிட தோழியின் மேலேயே விழுந்து கதறி, “பூ..பூவு எழுந்திருடி. என்னை விட்டுப்போயிட்டியே” என்று கதறியவர், விவரம் தெரிந்ததிலிருந்த நடந்த ஒவ்வொன்றையும் கூறி எழுந்திருக்கச் சொல்லி அழுதார்.
அழுதவர்கள் சிலர்! கண்கலங்கி நின்றோர் சிலர்! உச்சுக்கொட்டியோர் சிலர்! சாகுறதுக்கு முன்ன என்ன காரியம் பண்ணிட்டுப் போயிட்டா என அங்கலாய்த்தோர் சிலர்! இப்படி சிலர் சிலராய் பலராகக் குவிய, திருமணத்திற்கு வராதவர்களும் சாவிற்கு வர, மாலை எரியூட்ட நேரம் குறித்தார்கள்.
“அம்மா உங்களைக் கூடவே வச்சிப் பார்த்துக்கணும்னு நினைச்சதெல்லாம் கனவா போயிருச்சே. கல்யாணம் முடிச்சதும் உன்னோடவே வர்றேன் சொன்னீங்கள்ல? வாங்க என்கூட. ஏன் வரமாட்டேன்றீங்க? ஏன் என்கிட்ட பேசமாட்டேன்றீங்க? உங்க பையன்கள்தான் உங்களுக்கு உசத்தியில்ல. அம்மா! எனக்கு நீங்கன்னா உயிர்மா. நான் செய்யுற ஒவ்வொரு செயலும் உங்களை மனசுல நிறுத்திதான்மா. கடைசிவரை உங்க அன்பைக் குடுக்காமலேயே போயிட்டீங்கள்ல? போங்க எனக்கு யாரும் வேண்டாம்” என்று கதறியழுதாள்.
“அப்ப உன் அம்மா நான் வேண்டாமா?” என்ற இசக்கியின் தொடுகையில், “அம்மா” என்று கட்டிக்கொண்டு அழுதாள். மகளுக்காகவேணும் தன் துக்கத்தை மறந்து ஆறுதலாக இசக்கி நிற்க…
“அம்மா அழாதீங்க. ஆச்சி உங்களை அழவிடக்கூடாது சொல்லியிருக்காங்க” என்று கண்ணீர் துடைக்க இன்னொரு தாயாய் மகளே மாறினாள்.
தாயின் நிற்காத அழுகையில் குழந்தையும் அழ ஆரம்பிக்க, இசக்கி சபரியை அழைத்து குழந்தையைக் கொடுத்தார். மனைவியின் அருகிலிருந்து கண்ணீர் துடைத்துத் தோள்சாய்க்க எண்ணம்தான். சூழ்நிலை வேறாகிற்றே!
[the_ad id=”6605″]
அக்குடும்பத்து மருமகனாய் சபரிநாதனும்! மகளைத் தங்களுக்குத் தாரை வார்த்த மச்சினியின் மகளுக்கு அப்பாவாக மாறிய பொறுப்பில் அழகரும்! மூத்த மகனாய் ராமனும்! ரவியுடன் சேர்த்து, அவர்கள் அழைக்கவில்லை என்றாலும் அனைத்திலும் தன் பங்கிற்குத் தானுமாக நின்றிருந்தான் விக்னேஷ்.
பிறந்த வீட்டுக் கோடித்துணியில் நெற்றியில் ஒற்றை ரூபாய் காசுடன் நாடி கட்டப்பட்டு பாடையில் கிடந்த மனைவியைப் பார்த்த தர்மராஜன் செவிகளில் பூவரசியின் குரல். கேரளாவிலிருந்து வீடு வந்ததும், தான் ஆரம்பித்து வைத்துத் தொடர்ந்த சண்டையில், “சுமங்கலியா செத்துப் போகணும்னு எல்லாப் பெண்களும் நினைப்பாங்க. காரணம் கணவன் மேலுள்ள அன்பு. ஆனா, நான்…” இகழ்ச்சிச் சிரிப்பு பூவரசியின் இதழ்களில்.
“பூவும் பொட்டுமா செத்துப் போயிட்ட. நீ எதுக்குச் செத்தன்னு எனக்குத்தானே தெரியும். நீ இல்லன்னதும் நான் சாப்பிடக்கூட வழியில்லாம கஷ்டப்படணும்ன்ற கெட்ட எண்ணம் உனக்கு. ஐ டோண்ட் கேர். எனக்கா சோறுபோட ஆளில்லை. அப்போதும், இப்போதும், எப்போதும் ராஜா நான்.” திமிர் அடங்காது அப்போதும் பிணமாய் இருந்த மனைவியைத் துவேசமாகப் பார்த்தார்.
மனைவியில்லாத இடத்தில் கணவனுக்கு என்ன மதிப்பிருக்கும் என்பதை உணரவில்லை அவர். நல்லவர்களுக்கே மதிப்பு கிடையாதெனும் போது, தர்மராஜனுக்கு? காலம் அவருக்கான பாடங்களை கற்றுக் கொடுத்தாலும், அதை தன் பாவத்திற்கான பலனாக ஏற்றுக்கொள்வாரா? சந்தேகம்தான்.
ஆடம்பரமாகவே பூவரசியை எடுத்துச் சென்று எரியூட்டி, மகன்கள் மொட்டை போட்டு ஊர்க்கிணற்றில் ஆண்கள் அனைவரும் குளித்து வர, அதற்குள் வீட்டை தண்ணீர் விட்டுக் கழுவி பெண்கள் குளித்திருந்தார்கள். அனைவரும் வெளியூர் என்பதால் மூன்றாம் நாளே காரியம் செய்துவிடலாம் என முடிவு செய்யவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள்.
அவர்களுடன் விக்னேஷ் காவ்யாவும் அங்கிருக்க… பூவரசிக்காக விக்னேஷ் இருந்தானென்றால், கணவனுக்காக காவ்யா இருந்தாள். அவர்கள் இருவரையும் கவனிக்கும் பொறுப்பை ரவி, பரத்திடம் கொடுத்திருந்தார் அழகர். அவரவர் பிரச்சனைகளே அதிகமிருக்க, விக்னேஷின் வரவைப் பற்றி, பூவரசியின் ஆசீர்வாதம் பற்றிக் கேட்கும் நிலையில் யாருமில்லை.
பூவரசி இறந்த மறுநாள் விக்னேஷ்-காவ்யா இருவரும் பேசியதைக் கேட்டிருந்த சூர்யாவிற்கு, அதிர்ச்சியும் எல்லையில்லா கோபங்களும் ஆட்டிப்படைத்தது.