19
திருமணம் முடிந்து பூவரசியை நல்லபடியாக அனுப்பி வைத்து வீட்டில் ஏற்பட்ட சிற்சில சலசலப்புகளையும் அடக்கி, இராமேஸ்வரம் செல்லாது நேராக திருவனந்தபுரம் வந்தார்கள் மணமக்கள்.
முதல்முறை போலில்லாது தங்கை வாழப்போகும் வீட்டையும், அவளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ராமன் தன் மனைவியுடன் வந்திருந்தான். பரத்தின் படிப்பு திருவனந்தபுரம் காலேஜில் என்பதால், அவனைத் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக சூர்யா சொல்ல… அதை எதிர்த்தவர்களிடம் ‘என் அம்மாவோட கடைசி ஆசை’ என்று முடித்துவிட்டாள்.
சபரியின் தங்கை சியாமளா ஆரத்தி எடுத்து அண்ணனிடம் வம்பு செய்து பணம் வாங்கி வெளியே கொட்டி வர… “ஆமா ரெண்டு பேருக்கும் முதல் கல்யாணம். இதுல ஆரத்தி வேறயா?” என்று மகளிடம் தன் புலம்பலை ஆரம்பித்தார் சரளா.
“இதை அப்படியே அண்ணன்கிட்ட பாஸ் பண்ணிருங்கம்மா. எனக்கு பதில் சொல்லத் தெரியலை” என்று பதில் கொடுக்க…
“உனக்குத் தெரியாதுடி. உன் அண்ணனோட சேர்ந்து ஆடுறல்ல.”
“தப்பில்லம்மா. முதல்ல நீங்க அடம்பிடிச்சிப் பண்ணி வச்சதை நாங்க கல்யாணமாகவே ஒத்துக்கலை. நீங்கதான் உண்மை புரிந்தும் அடமா நிற்கிறீங்க. அப்பவே சொன்னேன் மது அண்ணனுக்கு செட்டாகமாட்டா. அவளோட குணம் வேறன்னு. எங்க கேட்டீங்க. இப்ப சூர்யா அண்ணிகிட்ட இதுமாதிரி எதாவது பேசி உங்களுக்கும் உங்க பையனுக்கும் இருக்கிற உறவை அழிச்சிக்காதீங்க. அப்புறம் கேரளாவில் உங்களுக்கொரு பையன் இருக்கிறதையே மறந்திர வேண்டியதுதான்.”
“ஏய்! நான் உன்கிட்ட மட்டும்தான சொன்னேன். அதுவும் என் பொண்ணுன்ற உரிமையில் சொன்னது.”
“உரிமை ஓவரா உராய்ஞ்சிக்கிட்டுப் போகுது. இப்படி எத்தனை பேர்கிட்ட உரிமையில் சொன்னீங்களோ யாருக்குத் தெரியும்? இனிமேல் யார்கிட்டயும் வாய் விடாதீங்க. எதாவதுனா அப்பாவுமே உங்க ஹெல்ப்கு வரமாட்டாங்க. எல்லாத்தையும் வாசலோட விட்டுட்டு மருமகளை மதிக்கிற மாமியாரா வாங்க. உங்களால முடியலையா, இங்க இருக்கப் போற இரண்டு நாளும் மௌனவிரதம் இருந்து, இராமேஸ்வரம் போனதும் கடல்ல குளிச்சி விரதத்தை முடிச்சிருங்க.”
“என்னால அவளை ஏத்துக்க முடியாது” என்றார் வீம்பாய்.
“அம்மா சூர்யாதான் உங்க மருமகள்ன்றது என்னைக்கும் மாறாது. அவங்களுக்கு என்ன குறை? என்னைக்காவது ஒருநாள் இவள் என் மருமகள்னு பெருமையா சொல்லத்தான் போறீங்க.”
“ஹான் அப்பப் பார்க்கலாம்” என்று உள்ளே சென்றார்.
பூவரசி இறந்து நான்கு நாட்களே ஆனதால் புகுந்த வீடு வந்து விளக்கேற்றவில்லை. அதுவும் ஒரு குறையாகிப் போனது சரளாவிற்கு. பால் பழம் சம்பிரதாயத்தையும் தடுத்த சபரி, “அவளுக்கு இப்ப ரெஸ்ட் தேவை. அத்தை இறந்த துக்கத்திலிருந்தே அவள் இன்னும் வெளியே வரலை” என்றவன் சூர்யாவைத் தொட்டு, “நீ பாப்பா கூட்டிட்டு ரூம்கு போ உதயா. நான் வெளில போயிட்டு வர்றேன்” என… அதைக் கவனிக்கும் நிலையில் அவளில்லை.
“வெளிய போறியா? இப்ப எதுக்கு?” என்றார் ராஜாங்கம்.
“ப்ராஞ்ச் ஆபீஸ்ல இன்டீரியர் வேலை நடந்திட்டிருக்குப்பா. முடியுற நேரத்துல எதாவது சேஞ்ச் பண்ண வேண்டியிருக்கான்னு கேட்டு வர்றேன்னு சொன்னார். பணம் விஷயமா இருக்கும்னு தோணிச்சி. அதான் நான் இங்க வரச்சொல்லியிருந்தேன்.”
“மச்சான் நீங்க இருங்க. நான் பார்த்துக்கறேன். வேணும்னா மாமாவைக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் ரவி.
“ஆமா சபரி. நானும் ரவியும் பார்த்துப் பேசுறோம். நீ இப்ப வெளிய போக வேண்டாம்.”
“பைனல் செக் மட்டும்தான் கொடுக்கலை. ஒருவேளை அதை வாங்கக்கூட வரலாம்.” ஒரு வழியாகச் சமாளித்து ராமனிடம் வந்தவன், “இரண்டு மணி நேரம்தான் ராம். தப்பா எடுத்துக்காதீங்க” என…
“ஒண்ணும் பிரச்சனையில்லை. நீங்க போயிட்டு வாங்க மச்சான்” என்றானவன்.
“வெள்ளச்சி உன் ரூம்கு போகலாம் வா. இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்காகும். எழுத்திரு” என்றழைக்க…
“அவளுக்குன்னு தனி ரூம் இருக்கா என்ன?”
[the_ad id=”6605″]
சரளாவின் நக்கலான பேச்சுகள் அறிந்தவர்தான் என்றாலும், “இனி இது அவளோட வீடுதான் மயினி. நீங்களே இங்க இரண்டாம்பட்சம்தான்” என அழுத்தமாக சொல்லி, ராமனிடம் தான் பார்த்துக் கொள்வதாக ஒரு அறையைக் காட்டி, “அங்க கூட்டிட்டுப் போ” என்று அவன் மனைவி, தங்கையுடன் குழந்தையையும் மாடிக்கு அனுப்பினார்.
“என்ன அவளை அனுப்புற? முதல்ல இது என் பையன் வீடு. வந்த அன்னைக்கே என்னை மூணாவது மனுஷியாக்கப் பார்க்குறாளா?”
“அவளை ஏன் இழுக்குறீங்க மயினி? இந்த நாலு நாளும் உங்களோடதான இருக்கா. எதாவது பேசி நீங்க பார்த்தீங்களா? பூவு செத்த துக்கத்திலிருந்தே இன்னும் வெளிவரலை. ஒழுங்கா சாப்பிடாம எந்நேரமும் அழுதுட்டிருக்கா. இந்த நேரம் நீங்கதான் ஆறுதலாயிருக்கணும். அவளோட இன்ப துன்பமெல்லாம் இனி உங்களைச் சேர்ந்ததுன்னு உங்களுக்குத் தெரியலையா?”
“துன்பம்னு சொல்லு. அவளால என்ன இன்பம் வரப்போகுது? படிப்பும் கிடையாது. ரெண்டாவது கல்யாணம் வேற…”
“மயினி அவள் என் பொண்ணு. பேசும்போது யோசிச்சிப் பேசுங்க” என்றார் கண்டிப்பாகவே.
“பெத்த பொண்ணு மாதிரி எப்பப்பாரு என் பொண்ணு, என் பொண்ணுன்னு பேசிட்டிருக்க” என்று அலட்சியமாகவேப் பேச…
“பெத்தெடுத்தாலும் தத்தெடுத்தாலும் அவள் என் மகள்தான். அவளைப் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என்னைப் பேசுற மாதிரிதான். அதோட குழந்தை இருக்கும்போது இப்படி அநாகரீகமா பேசக்கூடாது. குழந்தைங்க மனசு பால் மாதிரி. அதுல வார்த்தைன்ற விஷத்தைத் தூவாதீங்க.”
“எல்லாத்துக்கும் நான் பெத்துதான் காரணம். நான் சொல்ற எதையாவது கேட்கிறானா?”
“கேட்கிற எதையாவது அவன்கிட்ட சொல்லியிருக்கணும் மயினி.”
“உன்னாலதான் அவன் கெட்டுப்போறான் இசக்கி. இந்தக் குழந்தையையும் வேண்டாம் சொன்னேன். கேட்டானா அவன். இப்பவரை பிடிவாதமா இருக்கான்.”
“என்னால ஒருத்தன் கெட்டுப்போறான்னா கண்டிப்பா நல்லவனாதான் இருப்பான். உங்க பையன் நல்லவன்னு உங்களுக்கே நம்பிக்கையில்லைன்னா நான் ஒண்ணும் செய்ய முடியாது” என்று சூர்யா தூங்கிவிட்டாளா என பார்க்கச் சென்று திரும்ப, அண்ணனும் அண்ணன் மகளும் சரளாவை திட்டிக் கொண்டிருந்தார்கள்.
“சரளா நாம காலையில ஊருக்குப் போறோம். நீ இங்கயிருந்தா அவனை நிம்மதியாயிருக்கவும் விடமாட்ட… வாழவும் விடமாட்ட.”
“நான் வாழவிடாம பண்ணுறேனா? ஏன் இப்படி அபாண்டமா பேசுறீங்க?”
“நீ பேசுறதைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது. ஏற்கனவே அந்தப் பொண்ணு நிறைய கஷ்டத்துல இருக்கா. இதுல அவள் இஷ்டப்பட்டு திட்டம்போட்டுக் கல்யாணம் செய்த மாதிரி குறை சொல்ற? இதெல்லாம் சரிவராது. நீ எப்ப கிளம்புற பாப்பா?” என்று மனைவியைத் திட்டி மகளிடம் கேட்டார்.
“நாளைக்கு நைட்தான்பா ட்ரெய்ன். அதுக்கு மேல உங்க மருமகனையும் இங்க உட்கார வைக்க முடியாது. திடீர்னு கிளம்பினதால போட்டது போட்டபடி இருக்கு” என்றாள்.
வேலை முடித்து வந்த சபரி, “சாரிப்பா. இன்னைக்கு நைட் நீங்க ஊருக்குக் கிளம்புங்க. உங்களை கூடவே வச்சிப் பார்த்துக்கணும்னு நினைச்சேன். இப்ப இருக்கிற சூழ்நிலையில் எதுவும் சாத்தியமில்லை தோணுது. சாரிப்பா” என்றான் குற்றவுணர்வுடன்.
“எங்களை வெளில போகச் சொல்றியா? என்ன பையன்டா நீ?” என கோபமாகக் கத்த…
“ம்மா… எய்ட்ஸ் வந்த பையனைக் கல்யாணம் முடிக்கிறது எவ்வளவு பெரிய சாதனை. அதைப் பாராட்டாம சும்மா அவளைக் கத்தினா ஆச்சா. மாமியார் கெத்தை விட்டு இறங்கி வாங்க.”
“மனசு கேட்கலைடா” என்றார் கண்கலங்க.
“எனக்கும் ஒரு பொண்ணு இருக்கும்மா.”
“அதுதான் உன்…”
“ம்மா…” என அதட்டி, “ஹரிணி எங்க பொண்ணு. அப்பா நான்! அம்மா உதயா! இதுதான் உங்க பையன் குடும்பம். உங்க கேரக்டருக்கு ஏத்துக்கிறது கஷ்டம்னு எனக்குப் புரியுது. அதுக்காக வாய்க்கு வந்ததைப் பேசி அவளை நோகடிக்காதீங்க. அவள் என்னைத்தான் கட்டிப்பேன்னு என் பின்னாடி சுத்தலம்மா. உங்க பையன்தான் அவள் வேணும்னு பிடிவாதம் பிடிச்சிக் கல்யாணம் முடிச்சிருக்கேன்.”
“ஏற்கனவே பூவரசி அத்தை விஷயத்துல அவசரப்பட்டுட்டோமோன்னு கில்டியா இருக்கேன். இதுல நீங்க அவளைப் பேசி… நீங்க என்ன பேசுறீங்கன்னு உணர்ற நிலையில் கூட அவள் இல்லைமா. அவளைப்போய்… அப்பா நைட் ட்ராவல் ஓகேன்னா கார் புக் பண்றேன். நீங்களும் அம்மாவும் கிளம்புங்க. உதயா கொஞ்சம் நார்மலானதும் இராமேஸ்வரம் வர்றோம்.”
“அப்படியே செய்யலாம்டா. நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளை மறுநாள் கடையைத் திறந்தா சரியாயிருக்கும்” என்றார்.
ராஜாங்கம் சிறிய மளிகைக் கடையிலிருந்து இன்று மொத்தக்கடையாக்கி இரண்டு பையன்களை வேலைக்கு வைத்துப் பார்த்துக் கொள்கிறார். அதில்தான் மகளைப் படிக்கவைத்துத் திருமணம் செய்தது… மகனைப் படிக்க வைத்தது எல்லாம்.
சரளாவின் குடும்பமும் மிடில் க்ளாஸ் பேமிலிதான். பிறந்த வீட்டுப் பாசம் அதிகம் அவருக்கு. அவர் அண்ணன் வீராச்சாமியின் திருமணத்திற்குப் பின் எந்த வகையில் பணம் வருகிறதென்று தெரியாதளவு வசதியாகிப் போனார். நல்ல வசதியிருந்தும் மலையைப் புரட்ட மச்சினன் வரவில்லை ராஜாங்கத்திற்கு. ஆனால், மருமகன் சபரியின் வாழ்வை மொத்தமாகப் புரட்டிப் போட்டார் அந்தத் தாய்மாமன்.
[the_ad id=”6605″]
“நீங்களும் அவனோட சேர்ந்துட்டு பேசுறீங்க? அவன் நம்ம பையன்” என்றார் ஆதங்கமாக.
“நம்ம பையனாகவே கடைசிவரை இருக்கணும்னா போய்த் தயாராகு” என்று சத்தம் போட்டார்.
இரவு உணவுக்குப் பின் அப்பா அம்மாவை காரில் அனுப்பிவிட்டு, மனைவிக்கான உணவுடன் மாடி ஏறியவனுக்கு தாய் மகள் இருவரின் தூக்கமே கண்ணில்பட, மகளை அணைத்தபடி உறங்குவதை ஒருவித பாதுகாப்பாய் உணர்ந்தாள் போலும்.
“அம்மா பொண்ணு சென்டிமெண்ட் அதிகமானா புருஷன்காரன் என்னதான் செய்றதாம்.” செல்லக் கோபம் அவனுள் எழ, குழந்தை சாப்பிட்டுவிட்டதை இசக்கி சொல்லியனுப்பியதால், அவளை மெல்லத் தள்ளிப் படுக்க வைத்துத் தட்டிக்கொடுத்துத் தூங்க வைத்தான்.
மனைவியைத் தட்டியெழுப்ப… எழுப்பிய கையைத் தட்டிவிட்டு கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். “உதயா” என்றழைத்தும் அசைவில்லாமலிருக்க, அவளைத் தட்டி எழுப்பி உட்காரவைத்து, “சாப்பிட்டுப் படு உதயா” என்றான்.
“எனக்கு வேண்டாம் மச்சான். நீங்க சாப்பிட்டீங்களா?” என்றாள் தூக்கம் கலைந்து.
“உன்னோட சாப்பிடதான் காத்திருக்கேன்.”
“நீங்க சாப்பிடுங்க மச்சான். என்னால சாப்பிட முடியலை.”
“நீ சரியா சாப்பிட்டு எத்தனை நாளாகுது தெரியுமா?”
“அம்மா மச்சான்… அம்மா இல்லைன்றதை நம்பவே முடியலை. அம்மா என்கூடவே இருக்கணும்… அவங்களை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணும்னு நினைச்சது இப்படிக் கனவா போயிருச்சி. அம்மாவுக்கு சாகுற வயசா மச்சான். நான்தான், நான் மட்டும்தான் அவங்க உடம்பு கெட்டதுக்குக் காரணம். இங்க வந்தப்பவே கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருந்தா இப்ப உயிரோட இருந்திருப்பாங்கள்ல? எவ்வளவு வேதனையைச் சுமந்துட்டுப் போயிருந்தா உடனடி சாவு வந்திருக்கும். எல்லா கஷ்டத்துக்கும் நான்தான் மச்சான் காரணம். நானே இல்லாமல் போயிருக்கலாம்” என்று அழுது புலம்பினாள்.
சாவென்று பேசுபவளைத் திட்டக்கூட முடியாதவனாய், “உதயா அமைதியாயிரு. அழுதாலும் அத்தை திரும்பி வரப்போறதில்லை. இங்க என்னைப் பார்” என்று அவள் முகம் நிமிர்த்தி கண்ணீர் துடைத்து, “இப்படி அழுதுட்டேயிருந்தா எப்படிமா? எல்லாத்துக்கும் நீதான் காரணம்னு உன்மேலேயே ஏன் பழியைப் போட்டுக்குற? நீ தெரிஞ்சி எதையும் செய்யலையே. அத்தை நம்ம கல்யாணம் முடிஞ்ச திருப்தியில் கண்மூடிட்டாங்க. அவங்க ஆன்மா சாந்தியடைஞ்சிருக்கும் உதயாமா.”
“அழுது இன்னும் அவங்க ஆன்மாவை நோகடிப்பியா? அழுறதால உன் உடம்புக்கும் ஆகாது. நீ நல்லா வாழணும்ன்றதுதான் அத்தையோட ஆசையே. அதிலும் உனக்கே பிள்ளையா வந்து பிறப்பேன்னு சொல்லியிருக்காங்க. கொஞ்சம் சாப்பிட்டா வருத்தம் குறையுமே” என்றான் அவளை சாப்பிட வைக்கும் பொருட்டு.
“அம்மா என்கிட்ட திரும்பவும் வருவாங்களா மச்சான்?” என்றாள் எதிர்பார்ப்புடன்.
“சாகுற நேரத்தில் கொடுக்கிற வாக்கு பலிக்கும்டா. கண்டிப்பா நமக்குப் பொண்ணாவோ, பையனாவோ பிறப்பாங்க. பெயர் கூட செலக்ட் பண்ணிட்டேன் தெரியுமா?”
“நிஜமாவா?”
[the_ad id=”6605″]
“சத்தியமாடா” என்று அவள் கையிலடித்து, “பொண்ணுன்னா பூவழகி! பையன்னா பூவரசன்!”
“பூவழகி! பூவரசன்! நல்லாயிருக்கு மச்சான்.”
“இப்ப ஹேப்பியா? சாப்பிடலாமா?”
“சாப்பாடா?” எனக்கேட்டு ‘ம்…’ என முகம் சுருக்கினாள்.
“வா ஊட்டிவிடுறேன்” என்று அவளுக்குக் கொடுக்கவும் சூர்யாவின் கண்களில் கண்ணீர்.
“என்னமா? உரைப்பாயிருக்கா?”
“இல்ல. அம்மா இங்க வந்தப்ப ஊட்டிவிட்டது நினைவு வந்திருச்சி. எனக்கு விவரம் தெரிஞ்சி அம்மா எனக்கு ஊட்டின முதல் சாப்பாடு அதுதான் மச்சான். மனசுல அவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அம்மாவுக்கு என் சந்தோஷத்தைப் பார்த்து கஷ்டமாகிருச்சி. என்னை அன்பா வளர்க்காமல் போயிட்டோம்னு வருத்தப்பட்டாங்க. அவங்க சூழ்நிலை பாசத்தைக் கொடுக்க முடியலை.”
“அன்புன்றது என்ன மச்சான்? எங்க வயிறு வாடாம இருக்க விறகு சுமந்து கஷ்டப்பட்டது அம்மா. நான் அம்மாவோட கஷ்டத்தை உணருவேன் மச்சான். அவங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. அதெல்லாம் யாருக்காக? பெத்த பிள்ளைங்க நல்லாயிருக்கணும்னுதான. அது அன்பு இல்லன்னா… எது மச்சான் அன்பு?”