சபரிக்குமே பூவரசி பற்றி இசக்கி சொல்லி நிறையவே தெரியும். செல்லமாக வளர்ந்த பெண்ணின் கல்யாண வாழ்வு கொடுத்த வலிகள் வேதனைகள், அதைத் தாண்டி பிள்ளைகளுக்கென்றே வாழ்ந்த பெண்மணி.
“அத்தையை யாராலும் குறை சொல்ல முடியாதுமா. அவங்களை சிங்கப்பெண் என்று சொன்னால் சரியாயிருக்கும். அவ்வளவு கொடுமையும் பொறுத்துத் தனியா பிள்ளைங்களை வளர்க்கவே எவ்வளவு தைரியமும் வைராக்கியமும் இருக்கணும். கடைசி காலத்துல உனக்கு ஒரு குடும்பம் இருக்கணும்னு நினைச்சாங்க. அதை உயிரைக் கொடுத்து நடத்தியும் வச்சிட்டாங்க. தெய்வமா இருந்து நம்மை எப்பவும் வாழ்த்துவாங்க உதயா. இப்ப சாப்பிடு” என்று அவளுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு பாத்திரங்களை வைத்துவிட்டு வர…
“அத்தை மாமால்லாம் சாப்பிட்டாச்சா? வீட்டு மருமகளா நான் அவங்களைக் கவனிக்கவேயில்லை மச்சான். அத்தை என்னைப்பற்றி என்ன நினைச்சிருப்பாங்க? தூங்கிட்டாங்களா?”
“இல்லமா. சாப்பிட்டு முடிச்சதும் இராமேஸ்வரம் அனுப்பிட்டேன்.”
“ஏ..ஏன் மச்சான் அப்படிப் பண்ணுனீங்க? இங்க நம்மளோடவே இருக்கச் சொல்லலாம்ல? அதுவும் என்கிட்ட சொல்லாம அனுப்பியிருக்கீங்க? இது தப்பு மச்சான். அவங்க உங்களோட அப்பா அம்மா. அவங்களுக்கில்லாத உரிமையா? நான் இன்னைக்கு வந்தவ.”
“இப்ப ஏன் சம்பந்தமில்லாம பேசுற?”
“சம்பந்தமிருக்கு மச்சான். வந்த அன்னைக்கே அவங்களை விரட்டின மாதிரி ஆகிறாதா? உங்ககிட்ட முதலுரிமை அவங்களுக்குதான். பிறகுதான் நானும் பாப்பாவும். முன்னாடியே எனக்குத் தெரிஞ்சிருந்தா போக விட்டிருக்கமாட்டேன். அம்மா இல்லாத எனக்கு இனி அத்தைதானங்க எல்லாம். போன் பண்ணுங்க நான் பேசணும்.”
“நீ பேசு அவங்க கேட்டுட்டுதான் இருக்காங்க” என்று போனைக் கொடுத்தான்.
பாத்திரத்தை வைத்துவிட்டு வருகையில் ரவி போனை கொடுத்து, “சரளா அத்தை” என்றான்.
‘இப்ப கொஞ்சம் முன்னதான கிளம்பினாங்க’ என்ற யோசனையுடன் “அம்மா” என்றான்.
“நிஜமாவே நான் உனக்கு வேண்டாமாடா?” தாயின் அழுகைக் குரல் கேட்க…
பதறிப்போய், “என்னம்மா?” என்றான்.
“நீ பாட்டுக்கு என்னென்னவோ பேசிட்ட. கோபத்துல கொஞ்சம் பேசிட்டேன்தான். அதுக்காக…”
“கொஞ்சமா?”
“ஹ்ம்.. கொஞ்சம் நிறையதான்னு தெரியுது. இந்த மனசுக்குப் புரியலையே. பிறவி குணம் இப்படி எடக்கு முடக்கா கேட்டுடுறேன். மன்னிச்சிக்கோடா.”
“ம்மா… பெத்த பிள்ளைகிட்டப் போய் மன்னிப்பு கேட்டுட்டிருக்கீங்க. இப்படி அவசரப்பட்டு சட்டுன்னு பேசாதீங்கன்னுதான் எப்பவும் சொல்றேன். அவள் இன்னொருத்தனோட வாழ்ந்தவள்னு நீங்க நினைச்சா அதுதான்மா தப்பு. அப்படியே இருந்தாலும் கல்யாணமான பெண் புருஷனோட வாழ்ந்தா அது தப்பில்லையே.”
“கிட்டத்தட்ட ஐந்து வருஷமா ஒரே ஒருமுறை பார்த்த என்னை மட்டுமே மனசுல நினைச்சிட்டு, கல்யாணம் முடிச்ச பையனோடவும் வாழ முடியாம வந்து நிற்கிறான்னா, என்னை எந்தளவு காதலிச்சிருக்கணும். அவளை நான் பார்த்துக்கிறதை விட, என்னை அவள் நல்லா பார்த்துப்பாள்மா. உங்க மகன் எப்பவும் தப்பான முடிவெடுக்கமாட்டான்னு புரிஞ்சிக்கோங்கம்மா.”
“இன்னும் அடுத்தவங்களைப் பார்க்காம உங்கள் மகன் மருமகள் பேத்தின்னு பாருங்க. நீ எப்படியிருக்க உதயான்னு ஒரு வார்த்தை பாசமா கேட்டாலே போதும்… உங்களை உள்ளங்கையில் வச்சித் தாங்குவாம்மா. சின்ன வயசிலிருந்து அன்புக்காக ஏங்கினவளை நீங்க எதாவது பேசிரக்கூடாதுன்னுதான் அனுப்பிட்டேன். சாரிமா” என்றான் வருத்தமாக.
“ம்ம்… புரியுதுடா. எழுந்திருச்சிட்டாளா?”
“இப்பதான்மா சாப்பிட வச்சேன். பேசுறீங்களா?”
“இல்ல. பகல்ல பார்த்துக்கலாம்.”
“அப்ப அவள் பேசுறதைக் கேட்குறீங்களாம்மா?”
“எதுக்குடா? வேண்டாம்.”
“அவளைப்பற்றி தெரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பம்மா. உள்ள போனதும் கண்டிப்பா உங்களைத்தான் விசாரிப்பா பாருங்க” என்று ஸ்பீக்கரில் போட்டு வந்திருந்தான்.
[the_ad id=”6605″]
“மன்னிச்சிருங்க அத்தை. எனக்குத் தெரிஞ்சிருந்தா அனுப்பியிருக்க மாட்டேன். அம்மா நினைப்புல எதையும் கவனிக்காம இருந்திருக்கேன். ஏன் விட்டுட்டுப் போறீங்க? நான் எதாவது தப்புப் பண்ணிட்டேனா?” என்றாள் வருத்தமாக.
‘உன் புருஷன்தான் விரட்டினான்’ என்பதை சொல்ல மனமில்லாமல் அவளின் பாசத்தில் கரைந்தவராக, ‘மகன் செலக்ஷன் சரியாகத்தானிருக்கு’ என நினைத்து, “நீ எந்தத் தப்பும் பண்ணலமா. நாங்க அவசரமா ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. உன்கிட்ட சொல்லலாம்னா நல்லா தூங்கிட்டிருந்த. அதான் டிஸ்டர்ப் பண்ணாம கிளம்பிட்டோம். பக்கத்துல பெரியவங்களா உங்களோட நாங்க இல்ல. நீதான் உன் புருஷனையும் பொண்ணையும் பார்த்துக்கணும். சரியா?”
“கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கறேன் அத்தை.”
“நல்லதுமா. அப்படியே படுத்து ரெஸ்ட் எடு. காலையிலிருந்து உன் வீடு! உன் பொறுப்பு! நல்ல அம்மாவா… உன் புருஷனுக்கு நல்ல தோழியாயிரு. சீக்கிரமே நல்ல மனைவியாகவும் மாறப்பாரு. புரியுதா?”
“ம்… புரியுது அத்தை” என்று தலையாட்ட…
“சரி செல்லை அவன்கிட்டக் கொடுத்துட்டுப் படுத்துத் தூங்குற. இது என்னோட கட்டளை.”
“இதோ தூங்கிட்டேன் அத்தை” என்று வேகமாக போனைக் கொடுத்து படுத்துக் கண்மூடினாள்.
“ஹேய்! வெள்ளச்சி பார்த்து” என்று புன்னகையுடன் கதவைச் சாத்தி வெளியே வந்தவன், “தேங்க்யூமா” என்றான் மனைவியைப் புரிந்ததற்காய்.
“என்ன பொண்ணுடா!” சரளா சந்தோஷமாகச் சொன்னார்.
“ஹா..ஹா அம்மா அது நான் சொல்ல வேண்டிய டயலாக்.”
“ஓய்! நாம நினைச்சதுக்கும் மேலான தகுதியில் ஒரு பொண்ணு இருந்தா மாமியாரும் சொல்லலாம்” என்று சத்தமாகச் சிரித்தபடி சொன்னார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. எங்க கடைசிவரை மாமியார் பிரச்சனை தீராதோன்னு நினைச்சிட்டிருந்தேன்.”
“அடேய்! அது மாமியார் மருமகள்னு சேர்த்து சொல்லணும். நீ என்னடான்னா சிங்கிளா சொல்ற?”
“நீங்க என்ன பேசினாலும் அவள் வாய் திறக்கமாட்டா. எதிரியில்லாத ஒருத்தியை எப்படி சிங்கிளோட சேர்க்கிறது. சிங்கிள் சிங்கமா கர்ஜனையோட சுத்தப்போறீங்களோ நினைச்சேன்” என தாயின் கால்வார…
“அப்படி சுத்தினா பைத்தியம்னு சொல்லுவாங்கடா. பாரு உங்கப்பா நிஜமாவான்னு ஆன்னு வாயைத் திறந்திட்டிருக்கிறதை. விட்டா போற வழியில காரை ஏர்வாடிக்குத் திருப்பி, அங்க தள்ளி விட்டுட்டுப் போகலாம்னு பெரிய ப்ளானே நடக்குது.”
“முதல்ல ஸ்பீக்கர்ல போடுங்கம்மா. நான் என்னன்னு கேட்கிறேன்” என்று வசனம் பேச…
“ஸ்பீக்கர்லதான்டா இருக்கு” என்றதும், “அப்பா ஏர்வாடி வேண்டாம்பா” என்றான் கவலையுடன்.
“ஏன்டா?” என்றார் என்ன வெடி வைத்திருக்கிறானோ என நினைத்தபடி.
“ஏர்வாடியில பைத்தியங்கள் மட்டும் கிடையாதேப்பா. பேயோட்டவும் செய்றாங்களே.”
“என்னடா சொல்ல வர்ற?” என்று சரளா பல்லைக்கடிக்க…
“உங்களைப் பார்த்ததும் அந்தப் பேயெல்லாம் ஓடிப்போயிரும்மா. பைமா! குட் நைட்மா. குட் நைட்பா” என்று வேகமாக போனை கட் செய்யப்போகையில்… “டேய்!” என அலறி, “மருமகளை நல்லா பார்த்துக்க” என்ற தாயின் குரல் கேட்டு கட் செய்து, மனம் நிறைவான புன்னகையுடன் ஹால் ஷோபாவில் அமர்ந்தான்.
“என்ன மருமகனே பிரச்சனையெல்லாம் சரியாகிருச்சி போல?” கேட்டபடி வந்த அழகர் சபரியின் அருகே உட்கார்ந்தார்.
[the_ad id=”6605″]
“அம்மா பற்றிதான் கவலை இருந்தது. இப்ப அதைத் தீர்த்து மாமியார் மருமகள் உறவு சுமூகமான சந்தோஷம். இப்படியே இருந்தாலே போதும் மாமா.”
“என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னா சும்மான்னு நினைச்சியா? தேவதைப் பொண்ணுடா அவள்! அதனால்தான் நிறைய சோதனையும் வந்திருச்சி. இனி உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் சந்தோஷம் மட்டும்தான் இருக்கும்.”
‘எல்லாரும் அவளை என்ன பொண்ணுடா! என் பொண்ணுடா! தேவதைப் பொண்ணுடான்னு கொஞ்சுங்க. என்னை மட்டும் என் பொண்டாட்டிடான்னு கொஞ்சவிடாதீங்க’ என மனதிற்குள் கடுகடுக்க…
“உன்னை யார் தடுத்தா? அதுக்கெல்லாம் திறமை வேணும்டா மருமகனே” என்று முதுகில் தட்ட…
“மனசுக்குள்ளதான மாமா நினைச்சேன். எப்படி உங்களுக்கு?”
“அது வார்த்தையா வெளில ஜம்பாகிருச்சி” என கிண்டலடித்துச் சிரிக்க… ராமன் மனைவியுடன் வர, அடுத்து இசக்கியும், சியாமளாவும் அவள் கணவனும் வர அவர்களின் பேச்சு வார்த்தைகளில் உறவுகளின் தெரிதல், புரிதல் தொடர்ந்தது. நேரம் பனிரெண்டைத் தாண்டவும் பேச்சை நிறுத்தி படுக்க அனுப்பினார் இசக்கி.
பூவரசி இறந்து முப்பது கழிக்க கோவில் சென்று அப்படியே ஆதரவற்றோருக்கு அன்னதானம் அளித்து வீடு வர மாலை ஐந்து மணியாகியது. இரவு உணவு முடிந்ததும் இசக்கி குடும்பத்தினர் வீடு செல்ல, பரத்தும் அவர்களுடன் ஹாஸ்டல் சென்றான்.
குழந்தை தூங்கியதும் பெட்ஷீட் போர்த்திவிட்டு, கணவன் மடியில் தலைசாய்க்க கண்கள் ஏனோ கலங்கியது.
“அம்மா ஞாபகம் வந்திருச்சா உதயா?”
“ம்… ரொம்ப. அழக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை. அம்மா இப்படி விட்டுட்டுப் போவாங்கன்னு நினைக்கலை மச்சான். தூரத்துல இருந்தாலும் அம்மா இருக்காங்கன்ற எண்ணமே தைரியத்தைக் கொடுத்துச்சி. இல்லவே இலலைன்றப்ப மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. ஏதோ ஒண்ணு அம்மாவை ஞாபகப்படுத்திட்டிருக்கு. வரவே முடியாத இடத்துக்குப் போயிட்டாங்கன்னு மூளைக்குத் தெரிஞ்சாலும், மனசு ஏத்துக்க மறுக்குது.”
அவளின் தலைவருடி, “அம்மாவை நினைக்காம யாரால இருக்க முடியும். என்னதான் மத்தவங்க நல்லா பார்த்துக்கிட்டாலும் அம்மான்ற உறவுக்கு இருக்கிற உரிமை எதுக்கும் இருக்காது. மறக்க வேண்டாம். அவங்க நினைவு வரும்போது நம்ம கூடவேயிருந்து நல்லா வாழவைக்கச் சொல்லி வேண்டிக்கோ.”
“ம்… சரிங்க மச்சான்.”
“தூங்குறியாமா?”
“வேலை இருக்குங்க. படிக்க வேற செய்யணும்” என்று சொல்லும்போதே தூக்கக் கலக்கத்திலிருக்க…
“இன்னைக்கு ரொம்ப அலைஞ்சிருக்க. பாரு ரொம்ப சோர்வாயிருக்க. படிக்கிறதை நாளைக்குப் பார்த்துக்கலாம். பாடத்துல சந்தேகம்னா நான் சொல்லித் தர்றேன். இப்ப எல்லாத்தையும் ஓரங்கட்டித் தூங்கு.”
“சரிங்க மச்சான்” எனும்போதே தூங்க ஆரம்பித்தாள்.
“இவ்வளவு தூக்கத்தை வச்சிக்கிட்டு படிக்கப் போறாளாம்.” அவளை சரியாகப் படுக்க வைத்து போர்வையால் மூடி, அவனும் படுக்க… காலையிலிருந்து சுத்தியதில் அடித்துப் போட்டாற்போல் ஒரு தூக்கம் மூவருக்கும்.
காலையில் அடித்த ஹாலிங் பெல்லில் வேகமாக எழுந்தவர்கள் நேரம் பார்க்க எட்டைத் தொட்டது.
“அச்சோ! இவ்வளவு நேரமாகிருச்சா? பாப்பாவுக்கு ஸ்கூல் இருக்கு மச்சான். எழுப்பி ரெடி பண்ணுங்க. நான் யார்னு பார்த்துட்டு டிபன் ரெடி செய்றேன்.”
“இதோமா” என்று அவனும் எழ… அதற்குள் பல் தேய்த்து முகம் கழுவி கீழே வந்தவள் கிச்சன் சென்று ஸ்டவ்வில் பாலை வைத்துவிட்டு வாசல் சென்று கதவைத் திறக்க… “ஹாய் சூர்யா!” என்று நின்றான் ப்ருத்விராஜ்.
“ப்ருத்வி! நீங்க எப்படி இங்க? அதுவும் இவ்வளவு காலையில?”
“நல்லா பாருங்க மிஸஸ்.சபரிநாதன் நேரம் எட்டு பத்தாகுது. நீங்க என்னவோ ஆறு மணிதான்ற மாதிரி கேட்குறீங்க?”
[the_ad id=”6605″]
“சாரி நண்பா. நேத்து அம்மாவுக்கு முப்பது கழிந்ததா. கோவிலுக்குப் போயிட்டு வந்தோம். அப்படியே அம்மா நினைவுல இருந்ததுல… தூங்க லேட்டாகிருச்சி. நீங்க பெல்லடிக்கவும்தான் எழுந்தேன். பாப்பாவை ஸ்கூல் வேற அனுப்பணும்.”
“சாரி சூர்யா. நான்தான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல.”
“நீங்க வந்ததாலதான் இந்நேரமாவது எழுந்திருச்சிருக்கேன். உங்களுக்கு அவசரம் இல்லன்னா ஒரு அரைமணி நேரம் காத்திருக்க முடியுமா? டாக்டர்ஸ் எப்பவும் அவசரத்துலதான் இருப்பாங்கன்னு தெரியும். இது என் பொண்ணுக்காக நண்பா” என்றாள்.
“உங்களுக்குப் படிக்கிற வயசுல பொண்ணு இருக்கா?”
“அதைத்தான சொல்லிட்டிருக்கேன். நாலு வயசாகுது. மேடம் யூகேஜி போறாங்க. அவங்களுக்கு டிபன் ரெடி செய்யதான் டைம் கேட்டது.”
“தாராளமா குழந்தைக்காகவும் தெய்வத்துக்காகவும் காத்திருக்கலாம்” என்று அவளை அனுப்பி சுற்றிலும் பார்க்க… கணவன் மனைவி நடுவே உதய ஹரிணி. சூர்யாவை அன்று பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் ஏதோ ஒரு நெருடல் மனதினுள்.
காஃபியுடன் வந்தவளிடம், “ரொம்பச் சின்ன வயசுலயே மேரேஜாகிருச்சா சூர்யா?”
“ம்… பதினாறு வயசுல நண்பா.”
“என்னது பதினாறு வயசுலயா? ஹேய்! அது சைல்ட் மேரேஜ். சட்டப்படி செல்லாது” என்றான் அலறலாய்.
“ஹா..ஹா ப்ரித்வி இப்ப எனக்கு இருபத்தோரு வயசு முடிஞ்சிருச்சி. நாலு வயசுல பொண்ணும் இருக்கா. சட்டம் எப்படி செல்லாமல் போகும். ரொம்பக் குழம்பாம ரிலாக்ஸா காஃபி குடிங்க. பத்து நிமிஷத்துல வர்றேன்.”
“இது என்னமா லாஜிக்” என்றபடி காஃபியுடன் அமர்ந்தான் ப்ரித்விராஜ்.
கிச்சனில் வேலை செய்தவளுக்கோ கழுத்திலிருந்த செயின் கண்ணில் பட, மலர்வான இதழ்ப்புன்னகை அவளிடம். அப்புன்னகையை முத்தமாக செயினில் பதித்து, “ஐ லவ் யூ மச்சான்” என்றாள்.