2
“நாலாவது பொண்ணு பிறந்தா நாய்படாத பாடுன்னு சொல்வாங்க. மூணாவதா பொண்ணைப் பெத்துட்டு நாலாவதா பையனைப் பெத்திருக்கலாம். ஹ்ம்.. இது என்ன பாடு படப்போகுதோ” என்று பக்கத்து வீட்டு உறவினர் பெண் சொல்ல… தேவதைகளின் ததாத்சு குரல் கேட்டதோ!
“ஏன் சித்தி அப்படிச் சொல்றீங்க? என் பொண்ணு நல்லா வருவா.”
“வந்தா நல்லதுதான். நாலாவதா பிறந்த யாராவது நல்லாயிருக்காங்களா சொல்லு? நானும் நாலாவதுதான். உன்னோட சுத்துவாளே ஆதி அவள் உயிரோடவே இல்ல. நீயும் நாலாவதுதான்மா. என்னதான் மூடி மறைச்சாலும் நான்தான் பார்த்தேனே உன் புருஷனோட அலட்சியத்தை.”
“சித்தீ…”
“ப்ச்… பச்ச உடம்புக்காரி அடி வயித்திலிருந்து அலறாத. உடம்புக்கு எதாவது ஆகிரும்.”
அதுவரை ஒதுங்கியிருந்த இசக்கி, “சித்தி அம்மா வந்தாச்சி. நீங்க கிளம்புங்க” என்று அவரை அனுப்பி, “நீ ஏன் கவலைப்படுற பூவு? இந்த வெள்ளச்சி ஒருநாள் சாதிப்பாள் பாரு. நாய்படாத பாடு யார் படுறாங்கன்னு அப்பத் தெரியும்.”
“என் பொண்ணு சாதிக்கணும்னு கூட இல்ல இசக்கி. என்னை மாதிரி வாழ்க்கை அமையாம, அவளுக்கு அவளைக் கண்ணுக்குள்ள வச்சித் தாங்குற நல்ல புருஷனா கிடைச்சா போதும்.”
“அதுவும் நடக்கும். நான் சொன்னதும் நடக்கும். இவள் பெரியவளா வர்றதுவரை நான் இருப்பேனா தெரியாது. ஆனா, உன் பொண்ணு பெரியாளா வருவா.”
“ஏய் ஏன்டி அப்படிப் பேசுற? புருஷன் புள்ளைன்னு சந்தோஷமா இருக்கிற நீ இனி இப்படி ஒரு வார்த்தை சொல்லாத. நானே போயிட்டாலும் நீதான் என் மகளை உன் சொந்த மகளாகப் பார்த்துக்கணும்.”
“இப்ப நீதான் உளர்ற. சொன்னாலும் சொல்லலைன்னாலும் இவள்தான் எனக்கு மகள். அங்க பாரு என் பையன் அவளைக் கொஞ்சி விளையாடுறதை. நான் பார்த்துக்கத் தவறினாலும் அண்ணன் ஸ்தானத்துலயிருந்து ரவி அவளைப் பார்த்துப்பான்.”
“ரொம்ப நன்றி இசக்கி. இவ்வளவு கஷ்டத்திலும் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா? பாப்பாவுக்கு மூக்குக் குத்தணும் இசக்கி.”
“எதுக்கு பச்சைக் குழந்தைக்கு?”
“இவளுக்கு முந்தின குழந்தை இறந்ததால… அடுத்த குழந்தை ஆண் பெண் எது பிறந்தாலும் மூக்குல வளையம் போடுறதுதான?”
குழந்தையைக் கையிலெடுத்து வந்த இசக்கி, “குட்டி மூக்குடி. இதுல போய்… ஹப்பா என்ன கலராயிருக்கா! இவள் வயித்துல இருக்கும்போது அப்படி என்னதான் சாப்பிட்ட? இப்படித் தக்காளிப்பழம் மாதிரியிருக்கா?”
“நீ சொன்னியே அதுதான் சாப்பிட்டேன்.”
“புரியல?”
“தக்காளி சீசன் இசக்கி. தோட்டத்து வேலைக்குப் போயிட்டு வந்தவுடனே வயிறு காந்தும். பிள்ளைகளும் பசியில இருப்பாங்களே. வீட்டுக்குப் பின்னாடித் தக்காளி செடிகள் நிறைய போட்டிருந்தேன். அதைப் பறிச்சி சீனி போட்டு சாரு எடுத்து குடிக்கக் கொடுத்திருவேன். அதையே நானும் குடிச்சிக்குவேன். அதென்னவோ தக்காளியோட சுவை பிடிச்சிருச்சி. அநேக நாட்கள் அதுதான் வயித்தை நிறைச்சிருக்கு. அதனாலயே பாப்பாவும் தக்காளிப்பழம் மாதிரி வந்துட்டா போல.”
[the_ad id=”6605″]
தோழியின் வறுமைத் துயர் மனதை அழுத்தினாலும், “ஆமா பூவு. கொஞ்சம் அழுத்திப் பிடிச்சாலே ரெத்த ஓட்டம் தெரியுது” என்று மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட…
“பிள்ளையைக் கண்ணு வைக்காத இசக்கி.”
“பெத்தவ நீதான் கண்ணு வைக்கக்கூடாது. நான் வச்சா தப்பில்லை” என்று வியாக்ஞானம் பேசி, “ஏய் வெள்ளச்சி! உன் அம்மாவை நீதான் பாhத்துக்கணும். அவளை மாதிரி நல்லவளாக வளரு. ஆனா, அடிமையா வளர்ந்திராத.”
“இசக்கி ஏன்?” என்றாள் இயலாமையில்.
“ப்ச்… நீ சும்மாயிரு. ஒருநாள் இல்ல ஒருநாள் நான் சொன்னதை உன் பொண்ணு செய்வா.”
“அங்க இருந்தா எதுவுமே முடியாது இசக்கி. என்னைப்போலதான் என் பொண்ணையும் ஆக்கிருவாங்க.”
“அப்பனுக்குப் பாடம் சொல்லித்தர அவன் பிள்ளைகளால் மட்டுமே முடியும். நீயும் கொஞ்சம் பேசக் கத்துக்கோ.” பூவரசியின் அமைதி கண்டு, “பிள்ளைய பத்திரமா பார்த்துக்க பூவு. இனி எப்ப உன்னைப் பார்க்க முடியுமோ?” தோழியின் கேள்வியான பார்வையில், “நாங்க வேற ஊருக்குப் போறோம். திரும்பி இங்க வருவோமா, இல்ல அங்கேயே இருப்போமா தெரியாது. போனதும் அம்மாவுக்கு லெட்டர் போடுறேன். நீ அடுத்த முறை வரும்போது அம்மாகிட்ட அட்ரஸ் வாங்கி எனக்கு லெட்டர் போடு.”
“ம்…” என்று பூவரசி தலையாட்ட…
“பார்த்து பத்திரமா இரு பூவு. எனக்கு உன்னை விட்டுப்போக மனசேயில்ல. ராமநாதபுரத்தில் இருந்திருந்தாலாவது (ராமேஸ்வரம் இவர்கள் பிறந்த வீடு. ராமநாதபுரம் இசக்கியின் புகுந்த வீடு) அடிக்கடி இல்லன்னாலும் வருஷத்துல ஒரு முறையாவது பார்த்துக்கலாம். என்னதான் நீ வேலை பார்த்தாலும் இன்னும் கொஞ்சம் பொறுப்பாயிரு. நான் வர்றேன்” என்று குழந்தையின் விரலில் மோதிரம் ஒன்றை மாட்டி முத்தமிட்டுக் கிளம்பினாள்.
குழந்தைக்கு மூன்று மாதம் இருக்கையில் புகுந்த வீடு செல்ல ராமேஸ்வரத்திலிருந்து பஸ் ஏறி சாயல்குடி வருவதற்கு இடைப்பட்ட சிக்கல் என்ற ஊரின் நிறுத்தத்தில் பூவரசியின் கணவன் அவனின் முறைப்பெண்ணும் பழைய காதலியுமான வடிவை, கைக்குழந்தையுடன் கைத்தாங்கலாகப் பஸ்ஸில் ஏற்றினான்.
சுரீரென்ற வலி பூவரசிக்குள். ‘இவளைவிட எந்த வகையில் நாம் குறைந்துவிட்டோம். பிடித்திருந்தால் அவளையே திருமணம் செய்திருக்கலாமே. விசாரித்தால் ஜாதகம் சரியில்லாததால் முடிக்கவில்லையாம். ஹ்ம்… இப்படி வாழ்ந்தால் மட்டும் ஜாதகம் இவர்களைப் போன்றவர்களுக்குச் சாதகமாக இருக்கும் போல. இவளைக் கல்யாணம் செய்திருந்தால், நான் எங்கோயோ நல்லாயிருந்திருப்பேன்.’ இதுதான் அவளுக்கு விதித்தது என்பதை மூளை அறிவுறுத்தினாலும், மனம் கேட்பதில்லையே!
வடிவிற்கு திருமணமாகி இரண்டு பெண்களும் ஒரு பையனும் உண்டு. அவள் கையிலிருக்கும் குழந்தைக்கு இரண்டு மாதங்களே இருக்கும். தன் மகளுக்கும் வடிவின் மகளுக்கும் ஒரு மாதமே வித்தியாசம்.
பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டதாக எண்ணிக் கொள்ளுமாம். அதே போல்தான் அவர்களின் உறவு தனக்குத் தெரியாதென்ற எண்ணத்தில், தன்னைக் கண்டு அதிர்ந்தாலும் அதையும் சமாளித்து, தன்னருகில் வருபவர்கள் மேல் தன் அருவருப்பைக் காட்டாது மனதிற்குள்ளேயே அழுத்தினாள்.
“பூவரசி நீயா? இப்பதான் குழந்தை பிறந்து வர்றியா? குழந்தை உன்னை மாதிரி கலராயிருக்கா. என்ன மச்சான் குழந்தையைப் போய்ப் பார்த்தீங்களா? பாருங்க எவ்வளவு அழகாயிருக்கா” என்றாள்.
[the_ad id=”6605″]
“இல்ல. நான் பார்க்கப் போகல” என்று ஒற்றை வார்த்தையில் முடித்ததோடு குழந்தையைக் கூடப் பார்க்காதது பூவரசியின் மனதைக் கசக்கியது. பஸ்ஸில் அழப்பிடிக்காது குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல் குனிந்து கொண்டாள்.
பின் சீட்டில் அவர்களிருவரும் அமர, “பூவரசி சிக்கல் எதுக்கு வந்தோம்னு கேட்கமாட்டியா? என வம்பிழுத்தாள் வடிவு.
சில பெண்கள் இப்படிதான். இன்றைய காலகட்டத்தில் சில என்பது போய் பல பெண்கள் என்றாகியதுதான் காலக்கொடுமையே. ஒழுக்கம் என்பதன் முழு அர்த்தம் உணராதவர்கள். தாங்கள் செய்வது தவறே கிடையாது என்பதை மனதில் ஆழப்பதிந்திருப்பார்களோ! அடுத்தவர்களின் கேலிப்பேச்சு, அசிங்கம், மான அவமானம் என்ற எல்லா உணர்வுகளையும் துடைத்துவிட்டு நடமாடுகிறார்கள்.
‘அதான் சிக்கல்னு நீயே சொல்லிட்டியே. கடவுளே இவள் என்னை நிம்மதியாக விடமாட்டாளா? என் வயித்தெரிச்சலை வேற இதுங்க கொட்டிக்கணுமா?’
“நீ ஏதோ சோர்வுல இருக்கிறன்னு தோணுது. நானே சொல்றேன். நெஞ்சுல பால் கட்டிக்கிருச்சி. எங்க வீட்டுல அவரைக் கூப்பிட்டேன் வரலன்னுட்டார். அதான் மச்சானைக் கூட்டிட்டு வந்துட்டேன். காலையில வந்து இதோ மதியத்துக்குள்ள கிளம்பியாச்சி.”
‘பெற்ற பிள்ளையைவிட எவளோ ஒருத்தி பெருசா போயிட்டாளா? சாயல்குடியில் இல்லாத ஆஸ்பத்திரியா? அங்கேயென்றால் உறவினர்கள் பார்த்து காரித்துப்புவார்கள் என்பதால் இங்கு வந்திருக்கிறார்களோ!’ கண்களால் எதிரிலிருந்த சீட்டை வெப்பமாக்கினாள்.
பின்னாலிருந்து தன்னிடம் சலசலத்துக்கொண்டு வந்த வடிவிடமிருந்து விலக, தூக்கத்தில் இருப்பதுபோல் பாவனை செய்தாள்.
‘கொஞ்சம் கூட கூச்சமென்பதே கிடையாதா இவளுக்கு. எப்படி எந்த உறுத்தலுமில்லாமல் அப்பாவி போல் பேசுகிறாள். இதோ எனக்குத் தாலி கட்டியவன் வேறு ஒரு பெண்ணுடன் எந்த சங்கோஜமுமில்லாமல் அமர்ந்திருக்கிறான். குறை தன்புறம் இருக்கையில் வடிவைக் குறை சொல்லி என்னாகப்போகிறது. தன்னைக் கண்டாலே புழுவைப்போல் பார்ப்பவன், படுக்கைக்கு வரவில்லையெனில் அடி உதையில் ஆள்பவன், எவளோ ஒருத்தியை தன் முன்னே கொஞ்சிக் குலாவுகிறான். அடிகளுக்குப் பயந்து தட்டிக்கேட்கவும் முடியவில்லை. வாயிருந்தும் வாயில்லா பூச்சியாய் நான்!’
அடுத்த மூன்று ஆண்டுகளில் இளையவன் பரத் பிறக்க, அதுவரை வருமானத்திற்காகக் கடலுக்குப் போகிறேன் பேர்வழி என்று சம்பாதிக்கும் பணத்தை வடிவிடம் கொடுத்து அவளிடமே அநேக நேரங்கள் தங்க தூங்க இருந்தான். தட்டிக்கேட்காத தாய் தகப்பன்! சொல்லவும் வேண்டுமா என்ன? வடிவின் கணவனாவது தட்டிக்கேட்டானா என்றால் அதுவும் கிடையாது. அவனை எந்த வகையில் சேர்ப்பதென்று யாருக்கும் தெரியவில்லை.
தர்மராஜன் தன்னுடன் படித்த நண்பர்கள் உதவியில் ஒரு அச்சாபீஸ் (பத்திரிக்கை ப்ரிண்ட் அடிப்பது) ஆரம்பித்து கணிசமாக சம்பாதித்தாலும் அதையும் மனைவி பிள்ளைகளுக்கு செலவழிக்காமல் ஊதாரித்தனமாக செலவழித்தது நண்பர்களுக்குப் பிடிக்காமல் போக… “தர்மா நாங்க உன் மனைவியும் பிள்ளைகளும் கஷ்டப்படுறாங்களேன்னுதான் தொழில் செய்யப் பணம் கொடுத்தது. அதையும் இப்படி ஊதாரித்தனமா செலவழிச்சா எப்படி? முதல்ல பொண்டாட்டி பிள்ளைகளைப் பார்” என்று அறிவுரை சொன்னார்கள்.
அது பொறுக்குமா அவனுக்கு. “எல்லாவனும் உனக்கு ஆதரவா பேசுறான். அப்படி என்னடி செஞ்ச” என்று அதற்கும் மனைவியவளைக் காரணகர்த்தாவாக்கி தன் கை அரிப்பைத் தீர்த்துக் கொண்டான்.
இடையில் மாமியார் படுத்த படுக்கையாகி பரமக்குடியில் இருக்கும் பெரிய மகன் சண்முகராஜனும் பெரிய மருமகளும் எட்டிக்கூட பார்க்காததால் பூவரசியே அனைத்தையும் பார்க்க… தான் திட்டி அடித்த மருமகளிடமே உதவி பெறுவதற்கு கோபம் வர, வசவு வார்த்தைகளாகத் திட்ட ஆரம்பித்தார். இன்னொரு காரணம் அவள் விட்ட சாபம்தான் தன்னைப் படுக்கையில் சாய்த்ததோ! என்ற எண்ணமே. தொடர்ந்து தன் உடலில் புழு… நினைக்கையிலேயே அருவருத்தாலும் தன் தவறை உணர்ந்தாரா என்றால் கடவுளுக்கே வெளிச்சம்.
அதே நேரம் அண்ணன் மகனுக்கு மொட்டை போட அழைக்க வேறு வழியில்லாமல் ராமேஸ்வரம் சென்றிருந்தாள் பூவரசி. அவள் சென்ற இரண்டு மணிநேரத்தில் எல்லாம் பூவரசியின் மாமியார் இறந்துவிட, தந்தி கிடைத்து அவள் ஊர் திரும்புகையில் அடக்கம் முடிந்து அனைவரும் வீடு வந்திருந்தனர்.
“பத்தினி சாபம் பலித்ததோ!”
சூர்யோதயா! ஜொலிப்புதான் அவளின் அழகு. தகப்பன் சரியில்லாததால் தாய் வேலை வேலையென்று, சேவியரின் அம்மா சவரியாயியிடம் பொறுப்பைக் கொடுத்து பிள்ளைகளுக்காக ஓட, இருந்ததை உண்டு கிடைத்ததைத் தின்று (மண் உட்பட) இரண்டு விரல்களை வாயில் வைத்துக்கொண்டு வளர ஆரம்பித்தாள் சூர்யோதயா. அவளுடன் எப்பொழுதும் அவள் தம்பி பரத்.
பாதுகாப்பில்லாத குழந்தைகள்தான் அதிக பாலியலுக்கு ஆளாகிறார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படித்தான் ஆனது சூர்யோதயாவின் வளர் பருவமும். உயர் ஜாதியில் பிறந்தது தவிர, உயர்வு என்பதைப் பார்த்திராத குடும்பம். வேலியில்லாப் பயிர்கள்தான் வேட்டையாடப்படுகின்றன. தன்னை எந்த எண்ணத்தில் தொடுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத குழந்தைப் பருவம். கண்டிக்க ஆளின்றி அவ்வூரின் மூலை முடுக்கெல்லாம் சுற்றும் வண்ணத்துப் பூச்சியாய் அவள்!
தன் மகள்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியாத தொந்தரவுகள் அக்குழந்தைக்கு மட்டுமல்ல, கடைசிவரைத் பெற்றவர்களுக்கும் தெரியாததுதான் விதி. விவரம் அறிந்தபின் பிள்ளைகளுமே அதைத் தெரிவிப்பதில்லை. பாதுகாப்பளிக்க வேண்டிய உறவுகளும், பாதுகாப்பான் என்றெண்ணும் ஆண்களும்தான் இதைச் செய்கிறார்கள்.
பூவரசி வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்பட்ட பெண் என்பதால், சில ஆண்களின் வக்கிர எண்ணங்கள் தெரியாது. உலக அறிவும் கம்மி. ஆதலால் குழந்தைதானே எதுவும் பாதிப்பில்லை என்ற அலட்சியமாகக்கூட இருந்திருக்கலாம். சமூகத்தின் மறுபக்கத்தை சந்திக்கவேயில்லாத பெண் பூவரசி. அதை தன் மகள் சந்தித்துத் துன்பப்படுவாள் என்பதை அறிந்திருந்தால் தன்னுடனேயே வைத்திருந்திருப்பாளோ!
சேவியர் வீட்டினர் நல்லவர்கள் என்பதால் “கொஞ்சம் பிள்ளைகளைப் பார்த்துக்கோங்கம்மா” என்று வேலைக்குக் கிளம்பிவிடுவாள். அவர்களும் எவ்வளவு நேரம்தான் பார்க்க முடியும். முடிந்தளவு பூவரசியின் பிள்ளைகளைப் பார்த்தார்கள் என்பது நிஜம்.
தகப்பன் அடுத்த வீட்டுப் பெண்களிடம் தன் லீலைகளைத் தொடர, அதன் பாதிப்பு அவன் பெற்றப் பெண்ணிடம் போனதோ! அறியவில்லை யாரும்.
‘பழமொழி ஒன்று சொல்வார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமென்று. பெற்றவன் செய்து கொண்டிருக்கும் பாவம் மகளின் மேல். கடவுள் நினைத்தால் இதெல்லாம் நடவாமல் பார்த்திருந்திருக்கலாமோ!’ இன்றும் கூட சூர்யோதயாவின் எண்ணம், ‘இப்படித்தான்னு என்னைப் படைச்சிட்ட. அதனால், என்னுடையத் தவறென்று எதுவும் இதில் கிடையாது. உன் ஆட்டுவிப்பில் ஆடும் பொம்மை நான் என்பதே!’
[the_ad id=”6605″]
(இவ்விடத்தில் ஜாதி பற்றி இருக்கும். அது கதைக்காக அமைத்ததல்ல. நிஜத்தில் நடந்த நிகழ்வை அப்படியே சொல்லத் தேவைப்படுகிறது.)
“பாப்பா கொஞ்சம் தண்ணி குடுமா” என்று வாசல் திண்ணையில் அமர்ந்த அம்பட்டையனுக்கு (முடி வெட்டுபவர்) தண்ணீர் கொடுத்தாள் ஐந்து வயது சூர்யோதயா.
“அம்மா இல்லையா பாப்பா?”
“அம்மா வேலைக்குப் போயிட்டாங்க.”
“அப்படியா? இங்க வா” எனத் தன்னருகில் அழைத்து மடியில் அமர்த்தி, “அழகாயிருக்கியே பாப்பா” என்று கன்னத்தில் முத்தமிட்டான். ஏதேதோ கேள்விகள் கேட்டபடி அவளை அணைத்துக்கொள்ள, அவன் மடியில் அமர்ந்திருப்பது குழந்தைக்கு அசௌகரியத்தைக் கொடுக்க, “என்னை இறக்கி விடுங்க” என இறங்க முயற்சித்தாள்.
அதே நேரம் பூவரசி சற்றுத் தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டவன் வேகமாக மடியிலிருந்து இறக்கி. “நான் உனக்கு முத்தம் குடுத்ததை அம்மாகிட்டச் சொல்லாதே” என்றான் வேகமாக.
அதைவிட வேகமாக “எதுக்கு?” எனக்கேட்டாள் சூர்யா.
“சொன்னா அம்மா உன்னைத்தான் அடிப்பாங்க.”
“ஏன்?”
“ஸ்.. அம்மா வர்றாங்க” எனவும் தலையிலிருந்த விறகுக்கட்டை சுவரோரமாய் போட்டுவிட்டு, சும்மாடு கட்டிய துணியை உதறி அதில் தன் வியர்வையைத் துடைத்து, “என்ன மயில்சாமி இங்க நிற்கிற?” என்றாள் பூவரசி.