20
சூர்யோதயாவின் சடங்கின்போது இசக்கியுடன் சபரி ட்ராவல் செய்ய… வேண்டாமென்று மறுத்தபோதும் சரளா அவனின் செயினை எடுத்துக் கழுத்தில் போட்டுவிட்டு, “புதுமாப்பிள்ளை தோரணை வேண்டாமா” என்றிருந்தார்.
பஸ்ஸில் வரும்பொழுது வியர்வையில் கழத்துப் பகுதி எரிய, “அத்தை இந்தச் செயினை நீங்க வச்சிக்கோங்க. கழுத்தெல்லாம் ஒரே எரிச்சல்” என்று கொடுக்க…
“கையில எப்படிடா வச்சிட்டிருக்கிறது? பர்ஸ்ல எதாவது எடுக்குறேன்னு தவறவிட்டுத் தொலைச்சிட்டேன்னா?” என்று
“பரவாயில்லை. போட்டுக்கோங்க.”
“ஏற்கனவே தாலிச்செயினோட இன்னொரு செயினும் நெக்லசும் இருக்கு. இதை நீ அட்ஜஸ்ட் பண்ணிப் போட்டுக்கோடா.”
“பரவாயில்லை அத்தை. நாலாவதா போட்டுக்கோங்க” என்று அவரைப் போடவைத்து அவரின் முறைப்பையும் வாங்கியிருந்தான்.
சடங்கு வீடு வந்தும் செயினை வாங்காதிருக்க… சூர்யாவிற்கு செயின் போட கழுத்திலிருந்து தன் செயினுக்குப் பதில் சபரியின் செயினைக் கழட்டிவிட்டார். அவள் கழுத்தருகே கொண்டு செல்கையில்தான் செயினைப் பார்த்து தன் அவசரம் புரிய, வேகமாக சபரியைப் பார்த்தார்.
‘போடுங்க’ என்றான் பார்வையாலேயே.
என்ன நினைத்தாரோ இசக்கியும் மறுக்காமல் போட்டு, ‘எப்பவும் இந்த செயினை கழுத்திலிருந்து கழட்டக்கூடாது’ என்றிருந்தார்.
நீண்ட வருடங்கள் கழித்து இசக்கியைப் பார்த்ததே சந்தோஷமெனில், அந்தச் செயின் அவளே எதிர்பாராதது. ‘கண்டிப்பா கழட்டமாட்டேன்’ என்பது அவளின் மன உறுதியானது.
அவர்கள் கிளம்புமுன், “பூவு பிள்ளைக்கு சுத்திப்போடு” என்றார். பஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல ராமன் முன்னே நடக்க, சபரியும், இசக்கியும் அவனைத் தொடர்ந்து வாசல் தாண்டிச் சென்றார்கள்.
பூவரசி வேகமாக சூர்யாவை அழைத்து “இசக்கிக்குப் பலகாரம் குடுக்க மறந்துட்டேன். அவங்க போயிரப் போறாங்க சீக்கிரமா போய் கொடுத்திட்டு வந்திரு” என்றனுப்ப, அவர்கள் பின்னே சென்றவள் இசக்கியைத் தொடப்போகையில்…
“என்னோடதை எடுக்குறேன்னு உன் செயினைப் போட்டுட்டேன். அம்மா எதுவும் திட்டுவாங்களா சபரி? கல்யாண நேரம் வேற. நான் மாமாவை வேற வாங்கிட்டு வரச்சொல்றேன். அதுவரை கொஞ்சம் சமாளிக்கிறியா?”
“ஹையோ இசக்கி! எதுக்கு இவ்வளவு பயம்? பொண்ணுக்கு நானும் முறைப்பையன்தான? மாமன் சீரா நான் போட்டதாகவே இருக்கட்டும். அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன். அந்தச் செயின் போட்டப்ப உங்க வெள்ளச்சி முகத்துல இருந்த சந்தோஷத்துக்கு இதெல்லாம் ரொம்பவே கம்மிதான். பி கூல் இசக்கி” என்று தோளணைத்து சமாதானம் செய்தான்.
“இசக்கிம்மா” என்ற சூர்யாவின் அழைப்பில் வேகமாகத் திரும்பியவர், “நீ எங்கடா இங்க? வெளிய நிற்காத வீட்டுக்குப் போ” என்றார் அவசரமாக.
“அம்மா இதைக் குடுத்துட்டு வரச்சொன்னாங்க” என்று அவர் கையில் கொடுத்து, “நீங்க போட்ட செயின் நல்லாயிருக்கு இசக்கிம்மா. தேங்க்யூ. இதைச் சொல்லதான் அம்மா அனுப்பினதும் வந்தேன்” என்று திரும்பிச் சென்றாள்.
“குழந்தைதான் இந்த வெள்ளச்சி. கல்யாணத்துக்கு முன்ன பூவும் இப்படித்தான் இருப்பா. காலம்தான் எவ்வளவு மோசமானதுல்ல” என்றபடி நடந்தார்.
[the_ad id=”6605″]
பள்ளிக்குச் சென்று “எங்க மச்சான் போட்ட செயின்” என்று பெருமை பேச… “யார் அந்த மச்சான்?” என்ற கேள்விக்கு, “போட்டோ வந்ததும் காட்டுறேன்” என்றிருந்தாள். பள்ளியில் தங்கத்தில் போட அனுமதியில்லாததால் சுடிதாருக்குள் போட்டு சால் கொண்டு மூடி வெளியே தெரியாது பார்த்துக் கொண்டாள்.
போட்டோ ஆல்பம் வந்ததும் சபரியின் போட்டோவைக் காண்பிக்க… “ஏய் சூர்யா! உங்க மச்சான் நீ சொன்ன மாதிரி ஹீரோதான்” என்றனர். அடிக்கடி அவளின் ஹீரோவைப் பேசவே சூர்யாவிடம் வம்பு வளர்க்க, அவள் மனமும் மூளையும் அவன் பெயரை பதியவைத்து உடல் வேறொருவர் தொட்டால் கோபப்பட ஆரம்பித்தது.
விக்னேஷ் உடனான திருமணத்திற்கு முன்தினம் வந்த உருவம் ‘சபரி’ என்று திருமணத்திற்குப் பின் சூர்யாவைப் பார்க்க சென்னை வந்திருந்த அன்றுதான் கண்டுகொண்டாள். அதிர்ச்சிதான்! இருந்தாலும் அவனும் திருமணமானவன், தானும் திருமணமானவள் என்ற உண்மை உணர்ந்ததால் அது தப்பு என்று அத்துடன் மறந்துவிட்டாள்.
செயின் மட்டும் எக்காரணம் கொண்டும் கழட்டவில்லை. அவள் அண்ணனே சில முறை தொழில் பாக்கிக்காக அடமானம் வைக்கக் கேட்க, முடியவே முடியாதென்று மறுத்திருக்கிறாள்.
‘அச்செயின் தன் உடலோடு ஒட்டி உயிரோடும் கலந்திருந்ததோ! பெண்ணின் தேகம் விக்னேஷை எதிர்க்க இதுவும் ஒரு காரணமோ! இதோ இப்பொழுது புரிகிறது. அவளின் அனைத்தும் அவனென்று! அவனின்றி தன் உலகம் இயங்காதென்று! தன்னை முழுமையாக ஆட்டிப்படைப்பவன் சபரி மட்டுமேயென்று!’
“நான் மிஸஸ்.சூர்யோதயா சபரிநாதன்.” சொல்லும் பொழுதே ஒரு கர்வம் எழுந்தது.
என்னவோ மாற்றம் எனக்குள்
என்ன மந்திரமோ செய்கிறாய்!
வண்ணத்துப் பூச்சிகளின் சிறகை
என் மேனியெங்கும் கோர்க்கிறாய்!
ஓ இன்றுதான் காதல் பிறந்ததா?
நூறாண்டுகள் அதற்குள் கடந்ததா?
தன் மாற்றம் குறித்து தனக்கு மட்டுமே கேட்கும் படியான மெல்லிய பாடல் அவள் இதழ்களில். திரும்பவும் செயினுக்கு முத்தமிட்டு சேலைக்குள் மறைத்தாள்.
அனைத்தையும் பார்த்திருந்த சபரிக்கு அவளின் காதல் கொடுத்த போதை, அப்படியே தழுவி முத்தங்கள் வாரியிறைத்து தன்னுள் பொதித்துக் கொள்ளும் ஆசை வேகம்.
வேகம் மட்டுமே! அனைத்தையும் கற்பனையுடன் நிறுத்தி, “சூர்யா பாப்பா ரெடி. டிபன் ரெடியாகிருச்சா?” என்றான்.
இதுவரை கணவனின் நினைவுகளில் நின்றிருந்தவள், பின்னால் வந்ததைக் கண்டு நாணம் எழ, “இ..இதோ மச்சான். ஐந்தே நிமிஷம்தான்” என்று அடுத்த சில நிமிடங்களில் தோசை சட்னியுடன் ஹாலில் வந்தமர்ந்து, ப்ரித்வியை கணவனுக்கு அறிமுகப்படுத்தியபடி மகளுக்கும் ஊட்டிவிட்டாள்.
“சாரி ரொம்ப காக்க வச்சிட்டேனா?”
“பரவாயில்லை சூர்யா. குழந்தைக்காகத்தானே!”
“ஆமா சார். குழந்தை இருந்தா புருஷனைக்கூட மறந்திருவா” என்று சபரி விளையாட்டாக சொல்ல…
“மச்சான்” என முறைத்து, “எனக்கு எல்லாத்தையும் விட நீங்கதான் முதல்ல. பாப்பாவுக்கு நேரமாகுது. இன்னும் ஐந்து நிமிஷத்துல வேன் வந்திரும்.”
“சரிமா. சாரிமா. பேபிமா போகலாமா?”; குழந்தையிடம் கேட்க…
“நான் எப்பவோ ரெடிப்பா. அம்மா பை” என்றதும் அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி கிளம்ப யத்தனிக்கையில், “மச்சான்” என்றழைத்து ஏதோ சொல்ல வந்தாள்.
“ஜாக்கிரதையா பார்த்துக்கச் சொல்லி டிரைவர், ஆயாம்மாகிட்ட சொல்லிடுறேன்” என்றான் அவளை உணர்ந்தவனாய்.
“சூர்யா இவர் உங்க ஹஸ்பண்ட்னா, ஏன் அந்தச் சின்ன வீட்ல தனியா இருந்தீங்க?”
“அது பேமிலி விஷயம் நண்பா. இப்போதைக்குக் காரணம் சொல்ல முடியாது. நேரம் வர்றப்ப சொல்றேன்.” கடைசிவரை அவளும் சொல்லப் போவதில்லை… அவனும் கேட்கப் போவதில்லை என்பது இரு நட்புகளுமே அறிந்த உண்மை.
“உங்க ஹஸ்பண்ட் சூப்பர் சூர்யா. லவ் மேரேஜா?”
“பதினாறு வயசுலயா?” என புன்னகையுடன் கேட்டாள்.
“இப்பல்லாம் பிஞ்சிலேயே பழுத்திடுறாங்களாம். நியூஸ் சொல்லுது.”
“எனக்கு அந்தளவு தெளிவு கிடையாது நண்பா. ஆனா, அன்றும்! இன்றும்! என்றும்! என்றென்றும்! என் காதல் என் மச்சான்தான்.”
“இதுக்கு நான் லவ் மேரேஜான்னு கேட்டதுக்கு ஆமாம்னு ஒரே வார்த்தையில் முடிச்சிருக்கலாம்” என்றான் அவளின் விளக்கத்தில் கடுப்பாகி.
“ஹா..ஹா ஆமாம்ல. அப்படியும் சொல்லியிருக்கலாம்ல. சரி என்ன திடீர் வரவு? காரணமில்லாமல் நண்பனோட வரவிருக்காதே?”
[the_ad id=”6605″]
“இன்னும் பத்து நாள்ல என்னோட கல்யாணம். இப்பதான் ஃப்ரண்ட்ஸ்கு பத்திரிக்கை வைக்கவே ஆரம்பிச்சிருக்கேன். பழைய வீட்டிற்குப் போனா பூட்டியிருந்தது. சரின்னு நீங்க வேலை பார்க்கிற இடத்திற்குப் போனா உங்களைக் காணோம். விசாரிச்சதுல நீங்க வீட்லயிருந்து ஒர்க் பண்றதா சொன்னாங்க. அப்பதான் ஸ்ரீகர்னு ஒருத்தர் வந்து விசாரிச்சி அட்ரஸ் தந்தார்” எனும்போது சபரி வந்தான்.
“என்னங்க சொல்லிட்டீங்கள்ல?”
“அழுத்திச் சொல்லியிருக்கேன்மா. பாப்பாவை பத்திரமா பார்த்துப்பாங்க” என்றவன் ப்ரித்வியிடம், “சாரிங்க. உங்களை ரொம்ப காக்க வச்சிட்டோம்” என்றான்.
“பரவாயில்லை சார். ஃப்ரண்ட்காக இதுகூட செய்யமாட்டோமா. அப்புறம் எங்க நட்புக்கு என்ன மரியாதை” என்றவன் புன்னகையுடன் எழுந்து பத்திரிக்கை நீட்ட, அதே மரியாதையுடன் இருவரும் எழுந்து வாங்கிக் கொண்டார்கள். டிபன் சாப்பிடச் சொல்ல, “இன்னொரு நாள்… அதுவும் மனைவியுடன் வந்து விருந்தே சாப்பிடுகிறேன்” என்று விடைபெற…
பத்திரிக்கையை மனைவியிடம் கொடுத்துத் திரும்பியவன் கால் அருகிலிருந்த டீபாயில் இடிக்க ‘ஆ’ என்றலறினான்.
“மச்சான் என்னாச்சி?” என்று பத்திரிக்கையை ஷோபாவில் வைத்து அவனிடம் வர…
“கால்ல இடிச்சிருச்சி உதயா” என்றான்.
“நீங்க பார்க்கதான் மச்சான் போல்டா தெரியுறீங்க. உடம்புல கொஞ்சமும் பலம் கிடையாது. இருங்க மூவ் எடுத்துட்டு வந்து காலுக்குத் தேய்ச்சி விடுறேன்” என்று செல்ல…
சத்தம் கேட்டு வந்த ப்ரித்வியைக் கண்ட சபரி, ‘வராதே’ என தலையசைத்து ‘சும்மா’ என்று வாயசைக்க…
‘அடப்பாவி! புதுசா கல்யாணம் முடிச்ச எபக்ட் காட்டுறான். ஓவர் லவ்ஸாயிருக்கே’ என்று பதிலுக்கு தலையசைத்துச் சென்றான்.
“ஏன் உங்களுக்கு அடிக்கடி எதாவது ஆகுது? இந்த ஒரு மாசத்துக்குள்ள எத்தனை டைம் கையில, கால்ல, தலையிலன்னு அடிபட்டிருக்கு. ஜெனரல் செக்கப் ஒண்ணு பண்ணலாமா மச்சான்?”
‘எதாவது ஆனாதான கொஞ்சம் நெருங்கி வர்ற’ என நினைத்து, “சின்னதா ஸ்லிப்பானதுக்கு ஏன் ஜெனரல் செக்கப்?”
“சின்னதா இல்லங்க… சின்னச் சின்னதா அடிக்கடி ஸ்லிப்பாகுறீங்க. இந்த ஒரு வாரத்துல பத்துப் பதினைந்து முறை இதே மாதிரி ஆகிருக்கு” என்று மூவ் தேய்த்து விட்டாள்.
“பலகீனமாயிருந்தா ஹெல்தி ஃபுட் கொடுத்து உன் புருஷனைத் தேத்திவிடு. யார் வேண்டாம் சொன்னது?”
அவனை முறைத்து “நான் தர்றது எல்லாமே உடம்புக்கு கெடுதல் இல்லாத உணவுதான். உங்ககிட்ட ஏதோ சரியில்ல.”
“எல்லாம் சரியாதான் இருக்கு. வந்து உட்கார்” என்று அருகிலமர்த்தி அவள் இடக்கையுடன் தன் வலக்கையைக் கோர்த்து, விரல்களை இணைத்து அமைதியாக இருக்க… இரு கைகளின் இணைவு அவளுள் ஏதேதோ மாற்றங்கள் செய்ய மெல்ல கணவன் தோள் சாய்ந்து கண்மூடினாள்.
“உதயா!”
“ம்…”
“நீ சந்தோஷமா இருக்குறியா?”
“அதுல என்ன சந்தேகம்?”
“எப்பவும் நீ சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்.”
“நீங்க கூடவேயிருந்தா போதும் மச்சான். நல்லது மட்டுமே என்கிட்ட இருக்கும். எந்தத் துன்பமும் என்னை நெருங்காது.”
“தேங்க்ஸ்மா.”
“நீங்களே வச்சிக்கோங்க.”
“முறையா தாலி கட்டினவளை எப்படி வச்சிக்கிறதாம்? வேணும்னா நிறைய காதலிக்கிறேன்.”
சட்டென்று கண் திறந்தவள் கணவன் முகம் பார்க்க, நிறைவான புன்னகையுடன் அவன் கண்கள் சொன்ன காதலை இதயம் உணர, இமை மூடித்திறந்து கண்களில் ஒருவிதத் தவிப்புடன் அவன் முகம் காண…
“ம்… சொல்லு வெள்ளச்சி? உன்னை எப்படி வச்சிக்கிறது?” குறும்பாய்க் கேட்டு புருவம் உயர்த்த… அவள் உள்ளம் தனை வெட்கம் சூழ கணவன் தோளில் முகம் புதைத்தாள். மனைவியின் உச்சிதனில் அழுத்தமாக முத்தமிட்டு அணைத்துக் கொணடான்.
நிமிடங்கள் தாண்டியும் விரல்கள் பிரியாதிருக்க, “உதயா டைமாகுது. ஆபீஸ் போகணும”
“ம்… கிளம்புங்க” என்ற வார்த்தை ஹஸ்கியாக வர…
“நீ இப்படியிருந்தா எப்படிக் கிளம்புறது?”
‘ப்ச்…’ என சலித்தபடி நிமிர்ந்து, ‘கொஞ்ச நேரம் கழித்துப் போகலாமே. இப்படியே இருக்கணும் தோணுது மச்சான். இந்த ஃபீல் எனக்குப் பிடிச்சிருக்கு. சொல்ல நினைத்த வார்த்தைகளைக் கண் வழியேக் கடத்தி கையை அவனிடமிருந்து விடுவித்து எழப்போக…
அவளின் உள்ளம் புரிந்தவனாய், “பரவாயில்லை. இன்னும் பத்து நிமிஷம் இப்படியே இருக்கலாம்” என்று தோள் சாய்த்துத் தன்னுடன் அணைத்துக் கொள்ள, அளவிட முடியா நிம்மதி இருவருக்குள்ளும்.
[the_ad id=”6605”]
சூர்யோதயாவின் அத்தனை உணர்வுகளும் வெளிப்படுவது சபரிநாதனிடம் மட்டுமே! அவனுடன் இருக்கையில் இதுவரையிலுமே குற்றவுணர்வு போல் எதுவும் உணர்ந்தாளில்லை. இதுதான் தன் குடும்பம்! இதுதான் தன் வாழ்க்கை! என்பதான தெளிவு அவளிடத்தில்.
“வாவ்! வாட் எ ரொமாண்டிக் சீன். இதுதான் காதலா?” அர்ச்சனாவின் வாவிலேயே இருவரும் திகைத்து சரியாக அமர… “சினிமாவில் கூட இப்படியொரு சீன்… ம்கூம் சான்ஸேயில்ல.”
“அர்ச்சனா நீங்க எப்போ வந்தீங்க?”
கணவன் மனைவி இருவரின் கேள்வியில், “இதில் கூடவா ஒற்றுமை. என் கண்ணே பட்டுரும் போலிருக்கு. சுத்திப் போட்டுக்கோங்கபா” என்றாள்.
“அதெல்லாம் போட்டுக்கறோம். நீங்க எப்ப வந்தீங்க?”
“சூர்யா! உங்க ஹஸ்பண்ட்கிட்ட என்னை வாங்க போங்கன்னு கூப்பிட வேண்டாம்னு சொல்லுங்களேன். நானும் பலமுறை சொல்லிப் பார்த்துட்டேன். நோ யூஸ்” என சோகமாக முகம் வைத்துச் சொல்ல…
“ஒய்ஃப் தவிர மத்த பொண்ணுங்களை, வயசு கம்மினாலும் மரியாதையா கூப்பிடுறது நல்ல ஆண்மகனுக்கு அழகுங்க அர்ச்சனா. என் மச்சானோட இந்த அழகு எனக்கு ரொம்பவேப் பிடிச்சிருக்கு.”
“நல்ல ஜோடிங்கடா சாமி. ஓவர் லவ்ஸாயிருக்கே. எதுக்கும் நான் எஸ்கேப்பாகுறேன்.”
“என்ன விஷயமா வந்தீங்கன்னு சொல்லாமலே கிளம்பினா எப்படி?”
“எப்பவும்போல சும்மா ஒரு ஃப்ரண்ட்லி விசிட்தான் சூர்யா. நான் வர்றதுல எதாவது ப்ராப்ளமா?”
“சேச்சே நீங்க பேமிலி ஃப்ரண்ட். இங்க வர்றதுக்குத் தயக்கமே வேண்டாம்” என்றாள் புன்னகையுடன்.