“மச்சான் எப்ப வர்றீங்க? கிளம்பிட்டீங்களா இல்லையா?”
“கிஃப்ட் வாங்கிட்டிருக்கேன்மா. அரைமணி நேரத்துல வந்திருவேன்.”
“நாங்க கிளம்பி ரெடியாகியிருக்கோம் மச்சான். இன்னும் நீங்க வந்து ரெடியாகி… ஹ்ம்… போனை கட் செய்து கன்னத்தில் கைவைத்தபடி, “சொன்ன நேரத்துக்கு வர்றதில்லை எவ்வளவு முக்கியமான விசேஷம். அசால்ட்தனம் ஜாஸ்தியாகிருச்சிடி உன் அப்பாவுக்கு” என்று மகளிடம் புகாரளிக்க…
“அம்மா.. அப்பா” என்றாள் சபரியின் வரவைக் கண்டு.
“அதான் வர்றதுக்கு நேரமாகும்னு சொல்லிட்டாங்களே.”
“ஆனாலும் வந்துட்டாங்களே” என்று குதித்ததில் சட்டென்று நிமிர்ந்தவள் வாசல் பார்க்க மனைவியின் செல்லக் கோபத்தை ரசித்தபடி அருகில் வந்து, “இந்தக் கோபம் உனக்கு அழகாயிருக்கு வெள்ளச்சி. நான் ரெடியாகி வர்றேன்” என்று அவள் அடிக்க வரும் முன் ஓடிவிட்டான்.
புன்னகையுடன் கணவனைப் பார்த்திருக்க, “அப்பாவை நீங்க அடிப்பீங்க நினைச்சேன்மா” என்று சோகமாக முகத்தை வைத்த ஹரிணியிடம், “ஏன் இந்த விபரீத ஆசை. அப்பாவை அடிக்கிறது தப்புடா. கடவுள் நமக்காக… நம்மைப் பார்த்துக்கதான் அப்பாவை குடுத்திருக்காங்க. அவங்களை நாமதான் நல்லா பார்த்துக்கணும்” என்றாள் மகளிடம்.
அந்த பெரிய மண்டபத்தில் ப்ரித்விராஜ்-மோனிஷா ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. தன் பெண்ணுக்காகத் தானே மாடல் செய்த லைட் ப்ளு கலர் ட்ரஸ்ஸை ஹரிணி போட்டிருக்க. அதே ப்ளு கலர் லைட் சர்ட் டார்க் பேண்ட் கோட் சபரிக்கும், அதே லைட் கலர் சேலையில் பார்க்க பளிச்சென்று அழகாக வந்திருந்தாள் சூர்யோதயா!
அநேகம் பேர் கண்கள் இவர்களிடத்தே என்றால், ஒருவர் கண்கள் அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து நிம்மதி கொண்டது.
கணவனை சற்று நெருங்கி, “மச்சான் எல்லாரும் நம்மளையே பார்க்கிற மாதிரியிருக்கு?” என…
“நம்மைதான் பார்க்கிறாங்க. அதிலும் என்னை பொறாமையில் பொசுக்குறாங்கன்றது நல்லாவேத் தெரியுது.”
“மச்சான்!” என்றாள் பல்லைக்கடித்தபடி.
“பின்ன இரண்டு தேவதைப் பொண்ணுங்களோட வந்திருக்கேனே” என்றான் கெத்தாக பார்வை பார்த்து.
“ம்க்கும்… இந்த குசும்புக்கு மட்டும் குறைச்சலில்லை.”
[the_ad id=”6605″]
“மற்றதிலும் குறைச்சலில்லைன்னு காட்ட ஆசைதான். எங்க நீதான் நூற்றி நாற்பத்து நாலு தடை போட்டு வச்சிருக்கியே. ஹ்ம்…” என பெருமூச்சு விட…
“உங்களை என்னதான் செய்யுறது” என யாருமறியாமல் முழங்கையால் அவனை இடிக்க…
“அம்மா அங்கிள் கூப்பிடுறாங்க” என்று குழந்தை கைகாட்டிய திசை பார்க்க… மேடையிலிருந்து இறங்கிய ப்ரித்வி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“என்னங்க ப்ரித்வி இப்படிப் பண்றார். மத்தவங்க என்ன நினைப்பாங்க?”
“மத்தவங்களை நாம ஏன்மா நினைக்கணும். இது ப்ரித்வி உன் நட்புக்குக் கொடுக்கும் மரியாதை. மற்றதை யோசிக்காம வா” என்றான்.
“வாங்க சபரிநாதன்” என கைகொடுத்து, “இப்படி லேட்டா வந்தா எப்படி தோழியே? ரிசப்ஷன் ஆறு மணிக்கு ஆரம்பிச்சது. நீங்க ஏழு மணிக்கு வர்றீங்க?” என்று கோபம்போல் சொல்ல…
“சாரி நண்பா. நான் கிளம்பதான் நேரமாகிருச்சி. மச்சான் அப்பவே லேட்டாகுது வா சொன்னாங்க. என்னாலதான்…”
அவள் பொய் சொல்வது அவளின் தடுமாற்றத்தில் தெரிய, சபரி ப்ரித்வியிடம் தன்னால்தான் லேட் என்று சைகையில் சொல்லிவிட… “பரவாயில்லை சூர்யா. வந்ததே சந்தோஷம்தான். ஆனாலும், உங்ககிட்ட ஒரு வித்தியாசமிருக்கு தோழி” என்று பேசியபடியே மணமேடை நோக்கிச் செல்ல…
[the_ad id=”6605″]
“என்ன வித்தியாசம் நண்பா?” எனக்கேட்டாள்.
“அதான் யோசிக்கிறேன்” என்று அங்கு சுற்றி வைத்திருந்த டிவியைப் பாhத்தபடியே நடந்தவன் சடனாக நின்று “கண்டுபிடிச்சிட்டேன்” என்றான்.
“ஸப்பா… சொல்லிட்டு ப்ரேக் போடுறதில்லையா நண்பா? நீங்க ப்ரேக் போட்டதும் மனசுக்குள்ள திக்குன்னு ஆகிருச்சி” என்று கேலி செய்து சிரிக்க…
“ஏய் அவரை ரொம்ப கலாய்க்காத உதயா. அவர் எவ்வளவு பெரிய டாக்டர் தெரியுமா?”
“ஆமாங்க. ரௌடி டாக்டர்” என தன் கேலியைத் தொடர்ந்தாள்.
“ஹலோ! கல்யாணம் முடிஞ்சதும் முடிஞ்சவரை உட்கார்ந்து மானத்தை வாங்குங்க. இப்ப என்னை விட்டுருங்க” என அப்பாவியாய்க் கேட்க…
“நீங்க சொன்னதுக்காக விட்டுடுறேன் நண்பா” என்று மேடையேற, மணமகள் மோனிஷா ஏற்கனவே அறிமுகமானவள் என்பதால் தன் வாழ்த்துகளைச் சொல்லி தங்களின் கிஃப்டை இருவருக்கும் தனித்தனியாக ஒன்றும், சேர்ந்தாற்போல் ஒன்றும் கொடுத்தார்கள்.
மேடைவிட்டு கீழே இறங்கி வர, மணமக்களின் தாய்மார்கள் இருவரும் அவளைத் தங்களுடன் அழைக்க… அவளோ கணவனைக் காண… “நீ போ உதயா. நான் இங்கேயே இருக்கேன்” என்றதும் குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
இரைச்சலில்லாத இடம் தேடுகையில், “எக்ஸ்க்யூஸ்மி” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. “டாக்டர்.பிரம்மசக்தி! நீங்களா? நீங்க எப்படி இங்க?”
“இதையே நான் கேட்டா பொருத்தமா இருக்கும் மிஸ்டர்.சபரிநாதன். நீங்க எப்படி இங்க?”
“என் ஒய்ஃப் நண்பன்தான் ப்ரித்விராஜ். பேமிலி ஃப்ரண்ட் கூட.”
“சூர்யாவுக்கு ஆண் நண்பர்கள் கூட இருக்காங்களா? நல்ல முன்னேற்றம்தான்.”
“என் ஒய்ஃப் பெயர் சூர்யான்னு சொல்லலையே டாக்டர்? நாங்க வரும்போது பார்த்தீங்களா?”
“அப்படியும் சொல்லலாம்” என்றதே அதற்கு முன்பே இவர்கள் கல்யாண விஷயம் தெரியுமென்பதை உணர்த்தியது. ‘ஆனால், எப்படி?’ கேள்வி அவனுள்.
அவனின் மனநிலை உணர்ந்தாளோ பிரம்மசக்தி. “ப்ரித்விராஜ் மெடிக்கல் கான்பரன்ஸ்ல அறிமுகம். எங்க ஹாஸ்பிடல்லயும் ஒர்க் பண்ணியிருக்கார். அந்த நட்புதான் சென்னையிலிருந்து கேரளாவுக்கு இழுத்துட்டு வந்திருச்சி. சரி உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே சபரி?”
“நாலைக்குக் காலையில் பேசலாமா டாக்டர்?”
“நோ சபரி. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் கிளம்பிருவேன். ஒரு அரைமணி நேரம் ஃப்ரீனா பேசலாம்?”
“ஸ்யூர் டாக்டர்” என்றவன் சூர்யாவிற்கு போன் செய்து, அரை மணிநேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி போனை வைக்க…
“ஏன்? எதுக்குன்னு காரணம் சொல்லாம வச்சிட்டீங்க? சூர்யா கேட்கலையா?”
[the_ad id=”6605″]
“கேட்கமாட்டா டாக்டர். அந்தளவு நம்பிக்கை! அதைவிடக் காதல்!”
இருவரும் அமைதியான இடம் தேடி நடக்க, “என்கிட்ட ட்ரீட்மெண்ட் வந்தப்ப நெற்றிக் குங்குமம், கால்ல மெட்டின்னு எதுவும் கிடையாது. ஏன்னு கேட்டதுக்கு மெட்டி விரல்ல கடிக்குது டாக்டர். விரல் இடுக்குல புண்ணாகிருச்சி. அதான் புண் ஆறட்டும்னு அத்தை கழட்டச் சொல்லிட்டாங்க. குங்குமம் வைக்கவே பிடிக்கலை டாக்டர். நெற்றி வரை கொண்டு போய் கீழ வச்சிருறேன். ஏதோ மனசுக்கு ஒட்டாத உணர்வு வருது… ஏன்னு புரியலை. அத்தை கூட கல்யாணம் முடிஞ்ச பொண்ணு குங்குமம் வைக்கணும்னு சொன்னாங்க. வைத்தும் விட்டாங்க. ஏதோ ஒரு வகையில் சீக்கிரம் அழிஞ்சிரும்னு என்கிட்ட சொன்னா.”
“மூக்குத்தின்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாது. இப்ப டோட்டல் சேஞ்ச். உள்ளத்திலிருக்கிற சந்தோஷம் முகத்திலும் பிரதிபலிக்குது. அதுல தெரியுது அவள் உங்க மேல வச்சிருக்கிற காதல். தானே அறியாத காதலை உணர்ந்து ஏத்துக்கிட்டது ரொம்பவே சந்தோஷமாயிருக்கு. அவர் எதிர்பார்த்ததும் இதைத்தான் சபரி” என்றாள்.
“யார் டாக்டர்?”
மண்டபத்தின் வெளியே மண்டபத்தோடு சேர்ந்த குட்டி பார்க்கில் லைட் வெளிச்சத்துடன் உட்கார சேர்கள் போடப்பட்டிருக்க, சிலர் குழந்தைகளுடன் அங்கிருந்தனர். சிலர் அழும் குழந்தைகளை சமாதானப்படுத்த அழைத்து வந்திருந்தனர்.
“உங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் விளக்கேற்றியவர்னு சொல்லலாம்” என்று அங்கிருந்த சேரில் அமர்ந்து அவனையும் உட்காரச் சொல்ல…
“சுத்தமா புரியலை டாக்டர்? எங்க வாழ்க்கைக்கு விளக்கேத்தினவங்களா? பூவரசி அத்தை சாகப்போற நேரத்தில்தான் என்னைக் கல்யாணம் செய்ய சம்மதிச்சா. இதுல வேற யார் இருக்காங்க?”
“அவர் சம்மதிக்கலைன்னா உங்க பூவரசி அத்தையில்ல, வேறு யாராலும் சூர்யாவை உங்களுக்குக் கொடுத்திருக்க முடியாது” என்றாள் அழுத்தமாக. எதோ ஒரு பெரிய உண்மையைப் புரியவைக்கும் வேகம் அவளிடம்.
சக்தி சொல்ல வருவது புரிந்து, “டாக்டர்!” என்றான் அதிர்ந்து எழுந்தபடி.
“அவரேதான். உட்காருங்க சபரி. தெளிவா பேசலாம்.”
இருக்கையில் அமர்ந்து, “விக்னேஷா? விக்னேஷ் விட்டுக்கொடுத்தாரா? எதனால்?”
“இதை விட்டுக்கொடுத்தல்னு சொல்ல முடியாது சபரி. உங்களால் மட்டும்தான் சூர்யா சந்தோஷமா இருப்பாள்னு உணர்ந்து, அவர் காதலை மறந்து, அவள் நலனைக் கருதி உங்க மேல உள்ள நம்பிக்கையில் உங்ககிட்ட ஒப்படைச்சிருக்கார். சாட்சிக்கு இதோ” என்று வீடியோ ஒன்றை ப்ளே செய்து நீட்டினாள்.
“டாக்டர்!” என்றான் நடப்பதை நம்ப முடியாமல்.