21
அன்று சூர்யாவிடம் சண்டையிட்டு நிறைய யோசித்த விக்னேஷ், நேரே டாக்டரிடம் அழைத்து வந்திருந்தான்.
மனைவியை வெளியே காத்திருக்கச் சொல்லி தன்முன் அமர்ந்திருந்தவனை, சில நிமிடங்கள் எதுவும் கேட்காமல் பார்த்திருந்த சக்தி, அவன் வாய் திறப்பதுபோல் தெரியவில்லை என்றதும், “என்ன விக்னேஷ் ஏதோ பேசணும்னு நினைக்கிறீங்க. பேச வந்த பின்னே என்ன யோசனை?”
“டாக்டர் என் ஒய்ஃப்கிட்ட இப்பவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதுக்குன்னு ட்ரீட்மெண்ட் வர்றது ஒரு மாதிரியிருக்கு.”
“உங்க நிலை புரியுது விக்னேஷ். பட், சூர்யா இடத்திலிருந்தும் பார்க்கணுமே. அவளுக்கு மட்டும் இது பிடிக்குமா சொல்லுங்க? உங்களைவிட அவளுக்குதான் மனவுளைச்சல் அதிகமாயிருக்கும். அவளுக்கு உங்களைப் பிடிக்காமல் இல்லை விக்னேஷ்.”
“பிடிக்கிறதுக்கும் நேசிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு டாக்டர். என்னைக் கணவன் இடத்துல வச்சிப் பார்க்க முடியலைன்னா, அவளுக்குள்ள வேற எதோ பிரச்சனையிருக்கு. வலுக்கட்டாயமா வாழ்க்கையை ஆரம்பிச்சா அது கற்பழிப்புக்குச் சமம்னு நினைக்கிறவன் நான். அப்படி செய்தா கடைசி வரை இந்த நிலை மாறாது. என்ன பிரச்சனைன்னு தெரியணும் டாக்டர். சரிபடுத்த முடிஞ்சா பார்க்கலாம். இல்லைன்னா அவளுக்கு சரியானதைக் கொடுக்க முடியுதா பார்க்கணும்.”
“என்னதான் எங்க வீட்டுல உள்ளவங்க நல்லவங்கன்னாலும், மகன் இப்படி ஒரு வாழ்க்கை வாழுறான்னு தெரிஞ்சா முடிவு என்னவாயிருக்கும்னு உங்களுக்கேத் தெரியும். அது சூர்யா வாழ்க்கையைப் பாதிக்கும். நட்பைத் தாண்டி அவளாலும் வர முடியலை. நட்பை மட்டுமே தர்றேன்னு என்னாலயும் என் காதலை விட முடியலை. நீங்க அவளோட மனசுல இருக்கிறதை வெளியில கொண்டு வர்றதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுங்க டாக்டர். அதை வச்சிதான் எங்க வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கணும்.”
எப்படியும் தங்களின் வாழ்க்கை பற்றிய முடிவைத் தெரிந்து கொள்ளும் வேகத்தில் இருந்தான் விக்னேஷ்.
“இந்த டெஸ்ட்ல நல்லது கெட்டதுன்னு நிறைய இருக்கலாம். எல்லாத்தையும் சரியா புரிஞ்சிக்கிட்டு உங்க ஒய்ஃப்கு ஆதரவா இருக்கிறதா நீங்க வாக்குக் கொடுத்தா, நாங்க டெஸ்ட்கு அரேஞ்ச் பண்ணுவோம்.”
“நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்ணு டாக்டர். அவள் வாழ்க்கையில என்ன நடந்திருந்தாலும் அப்படியே விட்டுரமாட்டேன்.”
[the_ad id=”6605″]
“இந்தத் தெளிவு போதும். என் ஹஸ்பண்ட்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்று போன் செய்து விஷயத்தைச் சொல்ல… ஏற்கனவே சூர்யாவிற்கு ருத்ரன் ட்ரீட்மெண்ட் கொடுப்பதால் அடுத்த ஒருமணி நேரத்திற்கெல்லாம் அந்த மெல்லிய லைட் வெளிச்சமுள்ள அறையில் சூர்யோதயா படுத்திருக்க, அருகில் டாக்டருடன் விக்னேஷ் நின்றிருந்தான்.
“உங்க பெயர் என்னமா?”
“சூர்யோதயா!”
“பெயர் நல்லாயிருக்கே. யார் வச்சது?”
“நல்லாயிருக்குல்ல. எங்க இசக்கிம்மா வச்சாங்களாம். நான்னா அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அவங்களை ரொம்பப் பிடிக்கும்.”
“ஓ… சூப்பர். உங்க மூணாவது வயசுல என்ன நடந்ததுன்னு ஞாபகமிருக்கா?”
“நான் ரொம்பக் குட்டிப் பொண்ணாயிருப்பேன். எனக்கெப்படி ஞாபகமிருக்கும்?”
“நீங்க சொன்னது ரொம்பவே சரி. அப்ப ஐந்தாவது வயசுல?”
“ம்… கொஞ்சமா. எங்கப்பா அம்மாவை பயங்கரமா அடிப்பாங்க. அம்மா அழுதுட்டே வேலை பார்த்து சாப்பாடு தருவாங்க.”
“ம்… அப்புறம்?”
“நைட்ல என் பக்கத்துல படுத்திருந்த அம்மாவை பிடிச்சி இழுத்துட்டுப் போவாங்க. வரமாட்டேன் சொன்னா அடிப்பாங்க.”
“அவ்வளவுதானா?”
“ம்கூம். அந்த தாத்தால்ல ரொம்ப மொசம். சும்மா சும்மா மடியில தூக்கி வச்சி முத்தம் கொடுத்து அங்கங்க தொட்டுட்டேயிருப்பாங்க. அப்புறம் அந்த மாமாவும் அப்படிதான் செய்தார்.”
மூவரும் அதிர்ந்து அவளைக்காண… அந்த மனித லிஸ்டில் சேராதவர்கள் மேல் கொலைவெறிக் கோபம்தான் வந்தது.
“சரிமா அம்மாகிட்ட சொன்னீங்களா?”
“அம்மா! அம்மாகிட்ட சொன்னா என்னை அடிச்சிருவாங்கன்னு சொல்லி காசு இல்லைன்னா சாக்லேட் கொடுத்து சொல்லக்கூடாது சொல்லுவாங்க.”
“பொறுக்கிங்க” என்று பல்லைக் கடித்தாள் சக்தி.
“பிரம்மு கூல்.”
“குழந்தையைப் போய்… எப்படிங்க முடியுது. தொடுற அத்தனை பேருக்கும் குழந்தை இருக்கும்தானே? அதை ஏன் உணர்றதில்லை. இன்னைக்கு நாம செய்றதுதான் நம்ம பிள்ளைக்குன்னு நினைக்கத் தோணலையே அவனுங்களுக்கு.”
“உணர்ச்சிவசப்படாத. இது ஆரம்பம்தான். இன்னும் என்னென்னவோ!”
“சூர்யா உங்களோட பத்து வயசுல என்ன நடந்ததுன்னு ஞாபகமிருக்கா?”
“எங்கம்மா வேலைக்குப் போயிருவாங்க. இருட்டுற நேரம் வந்து சமையல் செய்து சாப்பிட வைப்பாங்க. காலையில எப்பவும் பழைய சாதம்தான். நாங்க ஸ்கூல் போற நேரம் தவிர நானும் என் தம்பியும்தான் சுத்துவோம். லீவ் நாள் வீட்லயே இருக்கிறதில்லை. எங்களைக் கண்டிக்க வேண்டிய அப்பாவும் கண்டுக்குறதில்லை. எங்க போனாலும் தம்பி கூடதான் போவேன். அப்பவும் சிலரோட தொடுகையை அவங்க பெரியவங்கன்றதால தட்டிவிட்டுப் போக முடியல.”
“பனிரெண்டு வயசப்ப ஒரு நாள் அம்மாவோட சித்தப்பா பையன் வந்திருந்தாங்க. அந்த மாமா கடற்கரைக்குப் போகலாம்னு தம்பியையும் என்னையும் கூட்டிட்டுப் போயி, கடல்ல கயிறு கட்டி மெல்ல அசைஞ்சிட்டிருந்த போட்ல ஏத்தி விடவா கேட்க… நாங்க போட்ல போனதில்லையா, ஆழம் அதிகம் இருக்கும்னு பயம் இருந்தாலும் ஆசையில போகலாம்னு சொல்லிட்டோம். தம்பியை தோள்ல வச்சி விட்டுட்டு வந்து, என்னைத் தூக்கிட்டுப் போய் அதுல ஏத்திவிட்டாங்க.”
“அப்ப தூக்கிட்டுப் போனப்ப ஒரு விஷயம் தோணிச்சிது. அதுக்கான விடை கல்யாணத்தன்னைக்கு ஹக்னா கட்டிப்பிடிக்கிறதுன்னு ரொம்ப இறுக்கமா பிடிச்சப்பதான் தெரிஞ்சது. என்னையறியாமலே பாலியல் ரீதியா யூஸ் பண்ணிருக்காங்கன்னு.”
ஒவ்வொருவர் மனநிலையும் வர்ணிக்க வார்த்தையில்லாமல் போக, தன் பங்கிற்கு அவளை வேறுவிதமாக டார்ச்சர் பண்ணியிருப்பதை எண்ணி விக்னேஷ் வெட்கப்பட்டான்.
“அதை விடுங்க சூர்யா. அப்புறம் என்னாச்சி?”
“திரும்பி வரும்போதும் அதே ஃபீல். நைட் இறுக்கமா கட்டிக்கிட்டாங்க. மறுநாள் ஊருக்குப் போயாச்சி.”
“உங்க அம்மா அதைப் பார்த்து கண்டிக்கலையா?”
“அம்மா எல்லாரும் ஹால்லதான் படுத்திருந்தோம். வேலை பார்த்த அலுப்புல அம்மா தூங்கினாலும், தம்பின்றதால தப்பா தோணலைபோல.”
[the_ad id=”6605″]
“சரிமா. சின்ன வயசுலதான் மிரட்டினாங்கன்னு சொல்லலை. இந்த வயசுல சொல்லியிருக்கலாமே?”
“அம்மா வீட்ல இருக்கமாட்டாங்க. அண்ணன்கள் அச்சாஃபீஸ்லயே இருப்பாங்க. நானும் தம்பியும்தான். யார்கிட்ட சொல்றது தெரியல. நீ மட்டும் எப்படி இவ்வளவு கலராயிருக்கன்னு கட்டிப்பிடிப்பாங்க. இதுல என்னயிருக்குன்னு நானும் விட்டுட்டேன். அதுலதான் எல்லாமே ஆரம்பிக்கும்னு அப்ப எனக்குத் தெரியாது” என்றவள் தன் அப்பா இன்னொரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடியதைச் சொன்னாள்.
“ஓ… பதினைந்து வயசுல என்ன நடந்தது?” என்று சூர்யாவிடம் ருத்ரனிடம் போதுமென சைகையில் சொன்னாள் சக்தி. அவளை மெல்ல தட்டிக்கொடுத்து அமைதிபடுத்தி சொல்வதைக் கேட்கச் சொன்னான் ருத்ரன்.
“அந்த முத்துகுமார் என்கிட்ட வந்து கண்டபடி பேசுவான். நான் அவளைத் தொட்டேன்… இவளைக் கட்டிப்பிடிச்சேன்னு. அது நிஜமான்னு கூடத் தெரியாது. ஏன்னா அவன் சொல்றவங்க எல்லாரும் பார்க்க அழகா நல்லா படிச்சவங்களா இருப்பாங்க.”
“நீங்க கூட அழகுதான் சூர்யா. அதை உணர்ந்திருக்கீங்களா?”
“நான் அழகான்னு தெரியாது. மத்தவங்க மாதிரிதான் நான்னு தோணும்.”
“ஒருவேளை உங்களுக்குத் தெரியாத அழகு மத்தவங்களுக்குத் தெரிஞ்சதால் உங்களை மிஸ் யூஸ் பண்ணியிருக்கலாமே?”
“அப்படி ஒண்ணு இருக்கா?” டாக்டரிடமே திருப்பிக் கேட்டாள்.
“ஆமா. அப்புறம் என்ன நடந்தது சொல்லுங்க?”
“நான் நிறைய படங்கள் பார்ப்பேன். அதுல உள்ள நல்லதை மூளையில் பதிய வச்சிருவேன். வயசுக்கு வந்த பிறகு பசங்களோட பேசினா குழந்தை பிறக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி அதனால வர்ற அவமானங்களைக் காட்டுவாங்க. அப்ப முடிவு செஞ்சேன் இந்த மாதிரி வர்றவங்களை எப்படியாவது விலக்கிறணும்னு. கல்யாணத்துக்குப் பிறகு என் கணவன் என் குழந்தைன்னு வாழ ஆசை. பதினாறு வயசுலதான் வயசுக்கு வந்தேன். அப்ப சடங்குக்கு வந்தப்பதான் சபரி மச்சானைப் பார்த்தேன்” எனும்போது முகத்தில் ஒரு தேஜஸ் அதுவரை இறுகிப்போயிருந்த உடலில் ஒருவித நெகிழ்வு.
“சபரி யாருமா?”
“அவங்களைத் தெரியாதா? இசக்கிம்மாவோட அண்ணன் மகன். அவங்களுக்குக் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருந்தாங்க.”
“ஓ… ரொம்பப் பிடிக்குமா?”
“புதுசா யார்கிட்டேயும் பேசமாட்டேன். சபரி மச்சானைப் பார்த்ததும் புதுசா பார்த்த மாதிரியில்ல. ஒருவித சொந்தம்! உறவு முறையில் சொந்தம்தான். ஆனா, ஏதோ ஒண்ணு… அவங்க பார்க்க அழகாயிருந்தாங்க. உறவுப் பொண்ணுன்றதால நல்லா பேசினாங்க. என் சடங்குல இருந்த மச்சான் போட்டோவை ஃப்ரண்ட்ஸ்கு காண்பிச்சி, எங்க வீட்லயும் ஒரு ஹீரோ இருக்காங்கன்னு சொல்வேன். சடங்குக்கு இசக்கிம்மா தெரியாம சபரி மச்சான் செயினைப் போட்டுட்டாங்க. அவங்க போட்ட செயின் இன்னும் என் கழுத்துலதான் இருக்கு. எதுக்காகவும் கழட்டத் தோணலை.”
“காதலா சூர்யா?”
“என்ன பேசுறீங்க? வயசுக்கு வந்து கொஞ்ச நாள்ல யாராவது காதலிப்பாங்களா? நான் படிச்சிட்டிருந்தேன். படிக்கிற பிள்ளைங்க காதலிச்சா அவங்க வாழ்க்கை சீரழிஞ்சி போகும்னு ஒரு படத்துல பார்த்திருக்கேன். அதுவுமில்லாமல் சபரி மச்சானோட கல்யாணப் பத்திரிக்கை வைக்கவும்தான் வந்திருந்தாங்க. அழகை ரசிக்கிறது தப்பில்லையே. சபரி மச்சான் மேல அப்படி ஒரு ரசனைதான். அதுவுமில்லாம கல்யாணத்துக்குப் பிறகான காதல்தான் நிரந்தரம்.”
“நீங்க சொன்னதை நானும் ஒத்துக்கறேன். இப்ப இருபது வயசுல என்ன நடந்தது?”
“எங்கம்மா பாவம் தெரியுமா. எனக்கு எங்கம்மான்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, அவங்ககிட்டச் சொன்னது கிடையாது. எங்கப்பா இன்னுமே திருந்தலை. அண்ணன் எதிர்த்ததால அடிக்க மட்டும் செய்யறதில்லை. சந்தர்ப்பம் கிடைச்சா அடிக்காமலும் இருக்கிறதில்லை. படிக்கணும்னு ஆசைப்பட்டேன் படிக்க முடியலை. அதனால தையல் கத்துக்கிட்டேன். செய்யுறதைத் திருந்தச் செய்யணும்ன்றதால தையல்தான் எல்லாமே!”
“உங்க கல்யாண வாழ்க்கை பற்றிச் சொல்லுங்களேன்?”
“கல்யாணம்! ஆமால்ல எனக்குக் கல்யாணமாகிருச்சில்ல. ஏன்னு தெரியல எனக்குக் கல்யாணமான ஃபீலே வரலை.”
விக்னேஷ் அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தான். இதைவிட ஒரு தண்டனை அவனுக்கு யாரால் தரமுடியும். தான் காதலித்த பெண்ணின் மனதில் தான் ஒனறுமேயில்லை என்பதான உண்மை உச்சியில் அறைந்தது.
“ஏன்மா கல்யாணமானதை உணரலை?”
“ஒருநாள் அந்த முத்துகுமார் என்னை வழிமறிச்சி பேசினதோட இடிச்சாப்ல போனதை ஒரு அக்கா பார்த்து அம்மாகிட்ட சொல்லி செம அடி. அடிச்சிட்டு அழுத அம்மாவை நினைச்சிதான் எனக்குக் கவலையாகிருச்சி. கோபத்துல என்கிட்டப் பேசுறதையே விட்டுட்டாங்க.”
“நான் செய்த தப்பு என்ன? இந்த மாதிரி ஒருத்தன் என்னை நெருங்க நீங்களும் ஒரு காரணம்னு சொல்ல முடியலை. கடவுள் படைக்கும் போதே நீ இப்படித்தான் இருக்கணும்னு படைச்சிட்டார். ஐந்து வயசுல நானா வந்து என்னைத் தொடுன்னு ஆண்களைக் கூப்பிட்டேன். என் கர்மா! என் அப்பன் செய்த பாவம். தெரிஞ்சி நான் எதுவும் செய்யலன்னாலும், விவரம் தெரிஞ்சப்ப சும்மாயிருந்தது என் தப்புதான். அந்தக் கடவுள் நினைச்சிருந்தா ஏதோ ஒரு வகையில் என்னைப் பாதுகாத்திருக்கலாம். எதையும் செய்யாது உன் கர்மாவை அனுபவின்னு விட்டுட்டார்.”
“அப்பதான் விக்னேஷ் என்னைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு வீட்ல பேசி கல்யாணம் ஏற்பாடாச்சிது. முதல் முறை பார்த்தப்ப, இதா மாப்பிள்ளைன்னு தோணினாலும் வீட்ல நமக்கு நல்லதுதான் செய்வாங்கன்னு அமைதியாகிட்டேன். பக்கத்து வீட்டு வாசவி அக்காள்லயிருந்து அக்கறையுள்ள எல்லாரும், அவன் உனக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லை. ஏன் சம்மதிச்ச கேட்டாங்க. குரங்கு மாலைன்னு டயலாக் வேற.”
“உங்களுக்கு கல்யாணத்தைப் பற்றி என்ன உணர்வு இருந்தது?”
[the_ad id=”6605″]
“எல்லாருக்கும் போல நமக்கும் நடக்குதுன்ற உணர்வுதான் எனக்கு. கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவு ஒரு கனவு. கனவுல விக்னேஷ் வரணும்னு எதிர்பார்த்தா, நிழல் மாதிரி ஒரு உருவம் நல்லா ஹைட்டா லுக்கா வந்து நிற்குது. ஆத்தாடின்னு அரண்டு எழுந்து கனவே வேண்டாம்டா சாமின்னு கண்ணை மூடிக்கிட்டேன். நிஜத்துல அந்த ஹீரோவை சமீபமா பார்த்தேன்.”
“யார் அந்த ஹீரோ?”
“வேணாமே! எனக்குக் கல்யாணமாகிருச்சி. அது தப்பு.”
“சரி சொல்லுங்க?”
“நிச்சயத்தப்பவும், கல்யாணத்தப்பவும் விக்னேஷ் கட்டிப்பிடிச்சது எனக்கு சுத்தமா பிடிக்கலை. அதை வெளியில சொல்லவும் முடியலை. உரிமைப்பட்டவன் தொடுறான் நான் உணர்வில்லாமல் நிற்கிறேன். கல்யாணத்தன்னைக்கு நைட் அரையிருட்டுல விக்னேஷைப் பார்த்து பயந்து தலை சுத்தி ஒரு மாதிரியாகிருச்சி. அந்த பயமே இன்னும் தெளியலை. அவர் என்னை நெருங்கினாலே வேண்டாம் போடான்னு அலறணும் தோணுது. என் கணவன்தானேன்னு மனசைப் பக்குவப்படுத்தினாலும் உடல் ஒத்துழைக்கணுமே!”
“விக்னேஷ் ரொம்ப நல்லவங்க. அவங்க மட்டும் ஃப்ரண்டா இருந்திருந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன். கல்யாணமாகியும் பிரம்மச்சாரியா… இதே வேற ஒருத்தனா இருந்திருந்தா என் அப்பா மாதிரி வலுக்கட்டாயமா…” முடிக்க முடியாமல் கண்ணில் நீர் வழிய, “ஜென்டில்மேன்தான் விக்னேஷ்! அந்தக் குற்றவுணர்ச்சி வேற கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது. எதுக்கும் உபயோகமில்லாம… அவங்க என்னைப் பார்க்காமலே இருந்திருக்கலாம். நான் எதுக்கும் உதவாத வேஸ்ட் பேப்பர். என்னை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பாங்க. இப்ப ஹாஸ்பிடல் அலைஞ்சிட்டு, என்னாலயே நான் செய்யுறதை சகிச்சிக்க முடியலை. ஆனா, அவங்க க்ரேட். என்னால அவங்களுக்கு நல்லது செய்ய முடிஞ்சா உயிரைக் கொடுத்துக்கூட செய்வேன்.”