23
மழைச்சாரல் சற்று பெரிதாகி ஊற்றிக் கொண்டிருக்க, மழை நீர் படாமல் இருக்க குழந்தையை அணைத்தாற்போல் காரிலிருந்து இறங்கி வீட்டினுள் வந்து, ஆடை மாற்றி பால் ஆற்றிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். கணவன் குழந்தையினருகில் இருந்ததால் நைட்டியை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றாள்.
ஜாக்கெட்டில் மாட்டிக்கொண்ட பின்னைக் கழட்ட முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய், “ப்ச்… இது வேற வம்பு பண்ணுது. மச்சான் எடுத்துக் கொடுத்த சேலை கிழியாம பார்த்துக்கணும்” என்றெண்ணி போராடிய பொழுது…
“ஓய்! வெள்ளச்சி! சேலைக்கு பின் கழட்ட ரொம்ப கஷ்டப்படுற மாதிரியிருக்கு. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?” என்று தன்னை நெருங்கிக் கேட்ட கணவனின் குரலில் சட்டென்று திரும்ப, “ஏய் சேலை கிழிஞ்சிரப் போகுது. உன் மச்சான் ஆசையா தந்தது வேற. லேசா கீறல் விழுந்தாலும் மனசு தாங்காது” என்று பின்னை எடுக்க முயற்சித்தான்.
கணவன் மூச்சுக்காற்றுடன் விரல்பட்ட இடங்கள் சில நுண்ணிய உணர்வினைத் தூண்டிவிட… பின்னாலிருந்த பின்னை லாவகமாக எடுத்து டேபிளில் வைத்தான். ஷோல்டரின் முன்னிருந்த பின்தான் சிக்கலில் இருந்தது. அதை எடுக்க வைத்த கையைப் பதறித் தடுத்தாள். ஏனென்பதாய் அவன் பார்வையிருக்க, வேண்டாமென தலையசைத்தவள் கண்கள் அவளின் நேசிப்பை, அதனால் உண்டான மயக்கத்தை வஞ்சனையில்லாமல் அப்பட்டமாகக் காட்டியதோ! இதோ அவன் எதிர்பார்த்த சம்மதம் அவள் கண்களில்.
“உன் புருஷன் நான் மட்டும்தான் உதயா செய்ய முடியும். தப்பில்லை” என்று சேலை கிழியாமல் எடுக்க ஜாக்கெட்டுக்கும் பின்னுக்குமாக ஒன்றிரெண்டு நூல்களே சிக்கியிருக்க, கட் பண்ணி எடுப்பது அவசியமென்பதால் மெல்ல அவளின் கழுத்தோரம் குனிந்து ஜாக்கெட்டுக்கும் சேலைக்குமான உறவை வெட்ட தன் பற்களைப் பயன்படுத்தி பின்னின் உறவை விடுவித்து, தன் உறவைப் புதுப்பிக்க அங்கேயே முகம் புதைத்து முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.
சபரிநாதன் மேலுள்ள அத்தனை வருடக்காதல் என்ன முயன்றும் அடங்காது ஆசை கொண்டு, உடலில் புதிதாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, தன் பிடிப்புக்காக அவன் கையைப் பற்ற… அப்பற்றல் கொடுத்த தைரியம் சபரியை இன்னுமின்னும் முன்னேற வைத்தது. முந்தானை நழுவி அவன் கைகளில் விழ… முந்தானைக்கு விடுதலை கொடுத்தவனால் தொடர்ந்த தன் முத்தத்திற்கோ, மனைவி மீதான தனது தேடலுக்கோ விடை கொடுக்க இயலாமல் போக… சூர்யப் பெண்ணவளை காமன் துணை கொண்டு வெற்றி கொண்டான் சபரிநாதன். ஏனோ வெளிச்சம் மட்டும் அனுமதிக்கவில்ல சூர்யோதயா!
“உதயா!”
“ம்… சொல்லுங்க மச்சான்?”
“ப்ரித்வி கல்யாணத்துக்குப் போகணும்.”
“ம்… போகலாம்.”
“விடிஞ்சிருச்சி” என்றதுதான் தாமதம் வேகமாக எழுந்து முழுதாகத் தூக்கம் கலைத்து மணி பார்க்க நேரம் ஆறுமணி. “அச்சோ! ஏழிலிருந்து எட்டுக்குள்ள கல்யாணம். நேத்தே ஏன் லேட்டுன்னு கோபப்பட்டாங்க. போங்க மச்சான் ஒரு பச்சைப் புள்ளையைக் கெடுத்துட்டீங்க” என ஏதோ சொல்ல வந்து எதையோ பட்டென்று சொல்லிவிட்டாள். அதன் வேகமே அவள் அறிந்து சொல்லவில்லை என்று தெரிந்தது.
“அது சரிதான்” என்றவன், ‘இவள் பார்வைதான என்னை மயக்கியது. ஏதோ நானே மயக்க மருந்து கொடுத்து கெடுத்துட்டதா சொல்றா’ என நினைத்தவனால் அதை சொல்ல முடியவில்லை. அவள் விளையாட்டுக்குச் சொன்னாலும், தான் நினைத்ததை அதுவும் அவர்களின் இந்த உறவு விஷயத்தில் பேசிவிடத் தயாராகயில்லை. எதாவது ஒரு வார்த்தை அவளுள் பழைய நினைவுகளைத் தட்டி காயப்பட்டுவிடக் கூடாதென்று ஜாக்கிரதையாக இருந்தான். மற்ற நேரத்தில் உரிமையாய் நினைத்ததைப் பேசிவிடுபவன், இதேபோல் நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேச சில நாட்களோ அல்லது மாதங்களோ பிடிக்கும் என்பதை உணர்ந்திருந்தான்.
“பாப்பா எழுந்திருக்கிறதுக்குள்ள குளிச்சிட்டு வா உதயா. நீ வந்ததும் நான் குளிக்கப் போறேன்.”
[the_ad id=”6605″]
“பாப்பா எழுந்துக்க நேரமிருக்கு மச்சான். நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வந்து ரெடியாகுங்க” என்று சூர்யா குளிக்கச் சென்று வர, அதற்குள் தான் ரெடியானதோடு குழந்தையையும் தயார்படுத்தி, பால் காய்ச்சிக் கொடுத்து குடிக்க வைத்து தங்கள் அறைக்கு வர… அன்றைய மூவரின் ட்ரெஸ் நிறம் ப்ரௌனாக இருந்தது.
நெற்றிப் பொட்டு வைத்து சரி செய்து கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்து, “போகலாமா?” எனக்கேட்க…
திரும்பிப் பார்க்காது கையை பின்னால் கொண்டு சென்று அவன் தலை கலைத்து, “போகலாமான்னு கேட்டுட்டு இப்படிக் கட்டிப்பிடிச்சிக்கிட்டா எப்படி மச்சான்? பாப்பா கீழ தனியாயிருக்கா” என்று கணவன்புறம் திரும்பி சீப்பை எடுத்து முடியை சரி செய்தாள்.
“இப்ப என் முடி கலைஞ்சிருக்கே மத்தவங்க தப்பா நினைக்கமாட்டாங்களா? அதான்மா நாம ரெண்டு பேரும் தப்பு செய்தோம்னு தப்பா…”
“ஆம்பளைங்க அவுத்துப் போட்டுட்டு நின்னாலும் ஒரு பய ஏன்னு கேட்கமாட்டான். பொண்ணுங்க ட்ரஸ் லேசா விலகினாலும் அவளை வேற மாதிரிதான் பார்ப்பாங்க.” கணவனின் முறைப்பை உணர்ந்து, “அதுக்காக உங்களை செய்து பார்க்கச் சொல்லலை” என்றாள் சிரிப்பை அடக்கி.
“ஏன் சொல்லித்தான் பாரேன்” என்று பதில் கொடுக்க, அதற்கு பதிலாய் அவளும் ஏதோ சொல்ல கிண்டலடித்தபடியே கீழே வந்தார்கள்.
முன் இரவே சொல்லிவிட்டாள், ‘இந்த உறவு இரவு மட்டுமே! பகலில் தன்னிடம் எதிர்பார்க்கக் கூடாதென்று. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகி ஏதோ ஒரு கட்டத்தில் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் இருவருக்குமே மனக்கஷ்டமாகிவிடும். அதுவே தொடர்ந்தால் பிரிவினைக்கு வழிவகுக்கும்’ என்றிருந்தாள்.
சின்னச்சின்ன விட்டுக்கொடுத்தல்தானே நிறைந்த இல்லறத்திற்கு அழகு. சபரி சாதாரண வாழ்விற்கே சம்மதித்தவன். இப்பொழுது சேர்ந்து வாழ ஆரம்பித்த பின் சொல்லவும் வேண்டுமா!
முகூர்த்ததிற்கு சரியாக வந்துவிட்டார்கள் சபரி குடும்பத்தினர். ‘இப்பவாவது வந்தீங்களே சாமிகளா!’ என்று ப்ரித்விராஜ் பார்ப்பது போலிருந்தது. ப்ரித்விராஜ் மேனிஷா திருமணமும் நல்லபடியாக முடிந்தது.
அடுத்த பத்து நாட்களில் பகலில் வேலையுடன் சின்னச்சின்ன சில்மிஷங்களுடனும், இரவில் இருவரின் கூடலுடனும் இனிமையாகச் சென்றன நாட்கள்.
உதயா உதயா உளறலில்லை
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்!
“என்ன ஓனர் செம ஜாலியா இருக்கீங்க போல?”
“நீ கூடயிருக்கும் போது என் ஜாலிக்கென்ன குறை வெள்ளச்சி.”
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
“எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும் மச்சான். சந்தோஷமா இருக்கீங்கதான?”
“அதையே நான் திருப்பிக் கேட்டா?”
கணவனவன் தலை கலைத்து, “உலகத்துலயே சந்தோஷமா இருக்கிற ஆள் யார்னு கேட்டா அது நான்தான்னு சொல்வேன். உங்களைப் பார்த்துட்டிருக்கிறதே சந்தோஷம்னு நினைக்கிறவள் நான். எனக்குப் பிடித்த என் மச்சானோட, உயிராலும் உடலாலும் சந்தோஷமா வாழ்ந்துட்டிருக்கேன். மகளா அழகா ஒரு குட்டிப்பொண்ணு வேற.”
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த ஜென்மம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அவளின் அளவில்லா காதலில் கரைந்தவன் சட்டென்று அவளை அணைத்து முகமெங்கும் முத்தமிட…
“ஷப்பா! ஏன் இந்த வேகம்?”
“தேங்க்ஸ் சொல்லக்கூடாதாம் வெள்ளச்சி. அதான் முத்தமா மொத்தமா தர்றேன்” என்று கண்சிமிட்ட…
“அது சரி. என்ன இந்நேரத்துல வந்திருக்கீங்க? எதாவது பேசணுமா?”
“ம்… நாம சென்னைக்குப் போகலாமா?”
“போகலாமான்னா? சும்மா போயிட்டு வரவா. இல்ல செட்டிலாகவா?”
‘சென்னையா? ஐயோ வேண்டாம்’ என்று அலறாமல் சாதாரணமாகக் கேட்ட மனைவியை ஆழப்பார்த்தான்.
“ம்… என்ன பார்வை” என்று ஒற்றைப்புருவம் உயர்த்திக் கேட்க…
“நான் நல்லவனா இருக்கணும் நினைச்சாலும் நீ விட்டுராதடி” என்று முத்தமிட ஆரம்பிக்க… முத்தங்கள் தூண்டிய மோகங்கள் யாவும் அவள் தேகமெங்கும் பரவியது. கணவனின் சீண்டல்கள் அளவில்லாமல் போக, நிமிடங்களில் சுதாரித்து அவனைத் தள்ளிவிட்டு கிச்சன் சென்று தண்ணீர் குடித்து கணவனுக்கும் கொண்டு வந்து கொடுத்தாள்.
“நல்லா பவர் ஆஃப் பண்ணக் கத்து வச்சிருக்க வெள்ளச்சி” என்று குடித்து முடித்து செம்பை அவளிடமே கொடுக்க…
“இல்லைனா உங்களை எப்படித் தடுக்குறதாம்? அதை விடுங்க. ஒருமணி நேரம் முன்னதான போனீங்க? அதுக்குள்ள என்ன சென்னைக்குப் போகலாமான்ற கேள்வியோட வந்திருக்கீங்க? நைட் வந்ததும் கேட்டிருக்கலாமே?”
[the_ad id=”6605″]
“அங்க ப்ராஞ்ச் ஆஃபீஸ் ரெடியாகிருச்சி.”
“அதுக்கு?”
“இங்க ரவி பார்த்துப்பான். அப்பப்ப வந்து நான் பார்த்துக்கறேன்.”
“அப்ப என் வேலை?”
“ஃபேஷன் வேர்ல்ட் சென்னையிலயும் இருக்கு. அங்க வந்து செய்றதுக்கு நான் பேசுறேன். டெய்லி போயிட்டு வர்ற மாதிரியிருந்தாலும் சரி. இல்ல இப்பபோல வீட்லயிருந்தே செய்தாலும் சரி. இப்படி உன்னைச் சந்திக்க அடிக்கடி சான்ஸ் கிடைக்கும். அதனால டபுள் ஓகே.”
“உங்களுக்கு உங்க பிரச்சனை? எவ்வளவு ரணகளம் நடந்தாலும் நாம குதூகலமா இருக்கணும்.”
“அஹான்பா!”
“அப்ப அம்மா?”
“உனக்குத் தோணுறப்ப வந்து பார்த்துக்கலாம். அத்தைக்குப் பார்க்கணும் எண்ணம் வந்தா அங்க வந்திரப்போறாங்க.”
“முடிவு பண்ணிட்டுதான் கேட்குறீங்கள்ல?” என சோகமாக முகத்தை வைக்க…
“என் வெள்ளச்சியைக் கேட்காம எதாவது செய்வேனா? நீ ம்னு சொன்னால் மட்டுமே எல்லாம் நடக்கும்.”
“அப்புறம்?”
“உனக்கோ பாப்பாவுக்கோ அங்க பிடிக்கலைன்னா நாம இங்கேயே வந்திரலாம்.”
“அப்ப பரத்தை என்ன செய்றதாம்?”
“இது முதல் வருஷம்தான உதயா. இப்பவும் ஹாஸ்டல்லதான் தங்கி படிக்கிறான். அதையே தொடரட்டும். லீவ்னா அத்தை வீடிருக்கு. இல்ல சாயல்குடி போகலாம். அதுவுமில்லன்னா சென்னையில அக்கா வீட்டுக்கு வரட்டும். இல்லையா நெக்ஸ்ட் இயர் சென்னைல காலேஜ் சேர்த்திரலாம்.”
“இல்லங்க. படிப்பை விடவேண்டாம். அவன் முடிச்சிட்டே வரட்டும்.”
“அப்பறம்?”
“ம்… சம்மதம்” என்றவள், “அங்க வீடு…” என ஆரம்பித்து ஸ்ஸ்.. என நாக்கைக் கடித்து, “சாரி” என்றாள்.
“சாரியை இப்படி சொல்லக்கூடாது. இச் கொடுத்து சொல்லணும்” என்று செய்து காண்பித்து, “வீடு ப்ளாட்…”
“ப்ளாட்லாம் வேண்டாம் மச்சான். தனி வீடா பாருங்க” என்றாள் வேகமாய்.
“ஏன்மா?”
“அ..அது அங்க நடந்த ஒரு கேஸ்ல ஒரு குழந்தையை நிறைய பேர்… ப்ளீஸ் வேண்டாம்ங்க” என்றதும் சட்டென எழுந்தமர்ந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
கணவனுக்குத் தன் சிறு வயது பற்றி தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறாள் சூர்யா. அதை அவன் பெரிதுபடுத்தாததும் தெரியும். ஆனாலும், அவனிடம் கேட்டதில்லை. கேட்கும் விஷயமுமில்லையே!
“ப்ளாட் வாங்கலடா. நமக்கு ப்ளாட் சரிவராதுன்னு தனி வீடு வாங்கிட்டேன். முழுக்க பாதுகாப்பான ஏரியா. நமக்கு எந்த பயமும் தேவையில்லை. இன்னும் ஒரு வாரத்துல பால் காய்ச்சிறோம். அதோட சேர்த்து இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு. என்னன்னு கேட்கமாட்டியா?”
“கேட்டாலும் சொல்லப் போறதில்லை. அப்புறம் ஏன் கேட்கணும்?”
“குட் அப்படியே மெய்ன்டெய்ண் பண்ணு” என்று செல்லமாய் கன்னத்தில் தட்டினான்.
[the_ad id=”6605″]
முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்கள் சபரிநாதன் குடும்பத்தார். மற்ற பொருட்கள் ஒரு வாரங்கழித்து லாரியில் வருவதாக ஏற்பாடு.
இசக்கியிடம் சொல்லிவரச் சென்றவள் அழுத அழுகையைப் பார்த்து ஹரிணி கண்ணீர் துடைக்க… “இன்னும் நாலு நாள்ல சென்னை வந்திருவேன். அதுக்கு ஏன் அழுற? என் பேத்திக்கு இருக்கிற தைரியம் உனக்கில்லையே. போ போயி புருஷன் பிள்ளையைப் பார்” என்றார் தன் கண்ணீரை அடக்கியபடி.
அப்படியே இராமேஸ்வரம் வந்து சில மணிநேரங்கள் ஓய்வெடுக்க, கணவன் மனைவி செயல்களே அவர்களின் சந்தோஷ வாழ்வுதனைச் சொல்ல பெற்றவர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.
“அம்மா நீங்க அத்தையும் மாமாவும் வர்றப்ப அவங்களோட வந்திருங்க.”
“அதுக்கு முன்ன வந்தா விரட்டிருவியாடா?”
“நான் ஏன் விரட்டணும்? பால்காய்ச்சுறது வரை உங்க மகள் வீட்லதான் இருக்கப்போறோம். அப்ப அவள்தான விரட்டணும்.”
“நீ அவள்கிட்ட சொன்னன்னு வை, செய்தாலும் செய்வாடா உன் தங்கச்சி.”
“சேச்சே நான் அவ்வளவு நல்லவனில்லையேம்மா “என்று தாயைக் கலாய்த்து சற்று நேரங்கழித்து திரும்பவும் சென்னை நோக்கிப் பயணமானார்கள்.
காலை அவ்வீட்டு வாசலில் ஹாலிங் பெல்லை அழுத்த… “யாரது? இதோ வர்றேன்” என்று கதவு திறந்தவரைப் பார்த்து, “வணக்கம்மா” என்று புன்னகைத்தான் சபரிநாதன்.
“வா..வாங்க தம்பி. என்ன இவ்வளவு காலையிலயே? தனியாவா வந்திருக்கீங்க?” என்று அவனைத் தாண்டி பின்னால் பார்த்தார். சூர்யாவைப் பார்க்கும் ஆவல் அவருக்கு.