25
மறுநாள் பதினோரு மணியளவில் வீராச்சாமி போலீஸ் மற்றும் வக்கீலுடன் சபரியின் வீட்டில் வந்திறங்கினார்.
எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவரின் வேகத்தை மெச்சியவனாய், பெண்களை அறைக்குள் இருக்கச் சொல்லி கீழே வந்தவன், “வாங்க மாமா. சீக்கிரம் மீட் பண்ணலாம்னு நேத்து மதியம் சொல்லிட்டு காலையிலேயே இப்படி திடுதிப்னு வந்து நிற்கறீங்க? ஒரு போன் பண்ணியிருக்கலாமே மாமா?”
“எதுக்குத் தப்பிச்சிப் போகவா?”
“தப்பு செய்றவன்தான் தப்பிச்சிப் போகணும். நான் என்ன தப்பு செய்தேன் மாமா?”
“எங்கடா என் பேத்தி?”
“சாரி மாமா. அவள் என் பொண்ணு.”
“இன்ஸ்பெக்டர் இவன் சொன்னதையேதான் சொல்வான். நீங்க விசாரிங்க” என்றார் கோபத்தை அடக்கி.
“சார் நீங்க அவர் பேத்தியை வச்சிட்டிருக்கீங்களாம். கேட்டதுக்கு தர முடியாதுன்னு சொன்னதால, அவர் பேத்தியை வாங்கித் தரச்சொல்லி கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார். எங்க விசாரணைக்கு கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க.”
“கண்டிப்பா இன்ஸ்பெக்டர். இவர் சொல்ற இடத்தில் குழந்தை எடுத்தது உண்மைதான். ஆ…”
“அப்பறம் கொடுக்கிறதுக்கென்ன?” என்று கோபமாக இடையிட்டார் வீராச்சாமி.
அவரை அமைதிப்படுத்திய இன்ஸ்பெக்டரிடம், “பேசுறதை முழுசா கேளுங்க மாமா” என்றவன், “சார் குழந்தை சத்தம் கேட்டு போய் எடுத்தது நிஜம். அப்ப அது ஆசிரமம்னு தெரியாது சார். யார் குழந்தைன்னு தெரியாததால எனக்கும் அவளைப் பிடிச்சிருந்ததால நாமளே வளர்க்கலாம்னு ஆசையில் இருந்தப்ப… ஆசிரமத்துல உள்ளவங்க வர, நான் என் குழந்தைன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.”
“கார்ல வந்துட்டிருக்கும் போதுதான் எங்க அத்தை சொன்னாங்க… இதுவும் ஒருவகை கடத்தல்தான் சபரி. குழந்தையோட அம்மா மனசு மாறி தேடினால் நஷ்டம் அவங்களுக்குதான். அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ யாருக்குத் தெரியும். ஒரு தாயோட வயிற்றெரிச்சல் வேண்டாம். போற வழியில் போலீஸ்ல ஒப்படைச்சிரலாம்னு சொல்லி அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷன்ல குழந்தையைக் கொடுத்துட்டோம். டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க சார்” என்றவன் தன் அறைக்குச் செல்ல…
என்ன ஏதென்று கேட்டவர்களுக்கு “வந்து சொல்றேன்” என்று பதிலளித்து ஒரு பைலை எடுத்துக் கீழே வந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து, “இதுதான் நாங்க குழந்தையை ஒப்படைத்ததற்கான சாட்சி. அதிலேயே போலீஸ் ஸ்டேஷன் நம்பர் இருக்கு. வேணும்னா அந்த எஸ்.ஐ பெர்சனல் நம்பரும் தர்றேன். அவர் இப்ப டிரான்ஸ்பராகி சென்னையிலதான் இருக்கார். நான் கொடுத்த குழந்தையோட நலன் அப்பப்ப விசாரிச்சிட்டிருக்கிறதால தெரியும்.”
“இப்ப கால் பண்ணச் சொல்லுங்க இன்ஸ்பெக்டர்” என்றார் வீராச்சாமி வீரமாக.
[the_ad id=”6605″]
அந்த நிமிடமே அவரை போனில் அழைத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க, சபரி சொல்வது உண்மையென்று தெரியவும்… “இல்ல சார். இவன் என்னை ஏமாத்துறான். அப்ப இவன் குழந்தைன்னு இருக்கிறது யார்?” எனக்கேட்க…
“என் குழந்தை சார். என் கல்யாணம் ஐந்து வருஷம் முன்ன நடந்தது. இதோ இவங்க நாலு பேரும் என்னோட மச்சினங்கதான். சந்தேகம்னா இவங்களையே கேட்டுக்கோங்க.”
“அப்ப என் பொண்ணை கல்யாணம் பண்ணினது?”
“என் முதல் கல்யாணம் யாருக்கும் தெரியாது சார். திடீர்னு நடந்தாலும் அவளைப் பிடிச்சிதான் கல்யாணம் செய்தேன். அப்ப அவளுக்குப் பதினாறு வயசுதான். எங்கம்மா சேர்த்துக்க மாட்டாங்கன்னு அவள் ஊரிலேயே படிக்கச் சொல்லிட்டு வந்துட்டேன். அப்பதான் இவர் எங்க அம்மாவை ப்ளாக்மெய்ல் பண்ணி யாரோட குழந்தைக்கோ அம்மாவான இவர் பொண்ணை கட்டி வச்சிட்டார். அம்மா செத்துருவேன்னு சொன்னதால, டைவர்ஸ் வாங்கிக்கலாம்னுதான் அந்தத் தப்பை செய்தேன்.”
“அப்ப ஏன் உன் மனைவியைப் பற்றிச் சொல்லலைன்னு கேட்கலாம்? இவர்கிட்ட பணபலம் இருக்கு சார். பதினாறு வயசுப் பொண்ணை முடிச்சிருக்கேன் சொன்னா யாரும் ஏத்துக்கவும் மாட்டாங்க. கோர்ட் போயி எங்க கல்யாணத்தை கேன்சல் பண்ணிடுவாங்கன்ற பயத்தினாலதான் சார், இவர் பொண்ணைக் கல்யாணம் பண்ணினேன்.”
“கல்யாணம் முடிந்த பதினைந்தாவது நாளே இவங்க பித்தலாட்டம் தெரிஞ்சது. நீங்க அந்த டாக்டரையே கேளுங்க” என்று அவரின் ஹாஸ்பிடல் பெயர் சொல்லி, இராமேஸ்வரத்தில் உள்ளவரை தொடர்பு கொண்டு பேச அவரின் வாக்குமூலமும், அன்றைய சபரி மதுமிதா பேச்சின் வீடியோ ஆதாரத்தையும் அவர் கொடுக்க… தேவைப்பட்டால் அழைப்பதாக சொல்லி போனை வைத்தார் இன்ஸ்பெக்டர்.
“உண்மை தெரிஞ்சவுடனே டைவர்ஸ் பண்ணிட்டேன் சார். அவளோட குழந்தையைத்தான் வளர்க்கணும்னா நான் டைவர்ஸ் பண்ணாமல் இருந்தாலே போதுமே. இது என் பொண்ணை ஸ்கூல்ல சேர்த்த சர்டிபிகேட். ஏன் குழந்தைக்கு உடல் சரியில்லைன்னு ஹாஸ்பிடல் போனா கூட அப்பா அம்மான்னு எங்க பெயர்தான் இருக்கும். மற்றதை விடுங்க சார். பெர்த் சர்டிபிகேட் பொய் சொல்லுமா?” அதையும் அவரிடம் கொடுத்தான் சபரி.
[the_ad id=”6605″]
வீராச்சாமி குழம்பியபடி நின்றார். ஆனாலும், ஏதோ இடித்தது.
குழந்தை கையில் கிடைத்ததிலிருந்து அனைத்திலும் தாய் இடத்தில் சூர்யோதயா என்ற பெயரைத்தான் கொடுத்தார் இசக்கி. ஏனோ அவ்விடத்தில் சபரிக்கு இணையாக அவள் பெயரைத்தான் வைக்கத் தோன்றியது. அதற்கு முதலடியாக அந்த டாக்டர் மூலமாக பிறப்புச் சான்றிதழ் வாங்கினார். குழந்தையின் தாயாக சூர்யோதயா இருப்பதாக உள்ள எதையும் சபரியிடம் காண்பித்ததில்லை இசக்கி. சூர்யோதயாவிற்கு வயது கம்மியென்று தெரியும். இருந்தும் மனம் சொன்னதை அவர் செய்திருந்தார்.
“அவங்க சைடு எல்லாம் பக்காவா இருக்கு வீராச்சாமி சார். அந்த எஸ்.ஐ சொன்ன குழந்தைதான் உங்க பொண்ணோடது. அவரைப் பார்த்து அவர் மூலமாவே குழந்தையைக் கூட்டிட்டு வரலாம்.”
“இல்ல இன்ஸ்பெக்டர். என்னோட சந்தேகம் இன்னும் தீரலை. பேசாம டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கலாம்” என்றவர் பார்வை ‘இதிலிருந்து எப்படி தப்பிக்கிற பார்க்கிறேன்’ என்றிருந்தது.
“உங்க சந்தேகத்துக்கு அளவேயில்லையா மாமா? அவள் குழந்தை. ப்ளட் எடுத்தா குழந்தைக்கு வலிக்கும். அதுவுமில்லாம எதுக்குப்பான்னு கேட்டா என்னன்னு சொல்வேன்?”
“பாருங்க இன்ஸ்பெக்டர். பிள்ளையை காரணம் காண்பித்து தப்பிக்கப் பார்க்கிறான்” என்றார் எதையோ நிரூபிக்கும் அவசரத்துடன்.
“என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க சார்?” என்று சபரியிடமே திருப்பினார் இன்ஸ்பெக்டர்.
“சார் யாரோ எதோ சொல்றாங்கன்றதுக்காக எங்க பேத்திக்கு டெஸ்ட் எடுக்க முடியாது. அப்படி எடுத்தா என் மருமகள் கஷ்டப்படுவா” என்றார் ராஜாங்கம். மச்சினன்களும் “எங்க மருமகளை எப்படி டெஸ்ட் செய்யலாம்?” என்ற கேள்வியில் இறங்க… சில நிமிட பரபரப்பு அங்கே.
அவர்களின் கோபம் நியாயம் என்றே பட்டது இன்ஸ்பெக்டருக்கு. தப்பு செய்யாதவனை தப்பு சொன்னால் வரும் கோபமென்று அமைதியாக நின்றிருந்தார்.
“கொஞ்சம் அமைதியா இருங்க” என்ற சபரிநாதன் சில நிமிட அமைதிக்குப் பின், “சரிங்க சார். இத்தனை ஆதாரம் கொடுத்தும் நம்பலைன்னா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் எல்லாத்தையும் சட்டப்படியே செய்திடலாம்” என்றான் முடிவாக.
அன்றே ப்ளட் சாம்பிள்கள் அனைவரிடமும் எடுக்கப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து டி.என்.ஏ ரிசல்ட் வர அத்தனையும் சபரிக்கே ஆதரவாய் இருந்தது.
ரிசல்ட் அன்று சபரிநாதன் மனைவி மகளுடன், மச்சினர்களும் வந்திருக்க, அவர்களுடன் அந்த இன்னொரு குழந்தையும் இருந்தது.
மதுமிதா தன் கணவனுடன் வந்திருந்தாள்.
சபரியுடனான பிரிவுக்குப் பின் குழந்தை பிறக்கும் வரை தாய் வீட்டிலிருந்த மதுமிதா திரும்பவும் சென்னை சென்றாள். அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டதென்ற தைரியத்தில் அவள் காதலனை வீட்டிற்கு வரவழைத்திருந்தனர் அவன் குடும்பத்தினர். எதிர்பாராத சந்திப்பில் அவள் காதலன், “என்னைவிட்டு ஏன் வேறொருவனை திருமணம் முடித்தாய்?” எனக்கேட்க…
[the_ad id=”6605″]
“உன் குழந்தைக்காகதான் அந்த பொம்மைக் கல்யாணம்” என்று தன் தாய் அழைத்துச் சென்றதிலிருந்து நிலையைச் சொல்லியவள், ஏனோ சபரியுடன் பதினைந்து நாள் வாழ்ந்ததைச் சொல்லவில்லை. தன்னையே நினைத்திருந்தாள் என்றதும் அவள்மேல் உண்மையான காதல் எழ திருமணம் செய்யக் கேட்டான். தாராளமாகவே முடித்து வைத்தார் வீராச்சாமி.
இதோ வருடங்கள் கடந்தும் குழந்தையில்லை அவர்களுக்கு. குழந்தை பிறக்காதென்று டாக்டர் சொல்ல, தூக்கிப்போட்ட குழந்தையைத் தேட ஆரம்பித்ததில் இங்கே வந்து நிற்கிறார்கள்.
“என்ன மச்சான் ஆள் நல்லா ஹேண்ட்சமாகிட்ட? சபரி கலக்ஷன்னா தெரியாதவங்களே இல்லைன்ற அளவு முன்னேறிட்ட போல? டிவியைப் போட்டாலே உன் கம்பெனி விளம்பரமாதான் இருக்கு” என்றவாறு அவனருகில் வந்தாள் மதுமிதா.
அவள் கேலியாகச் சொன்னாளோ, அல்லது சாதாரணமாகச் சொன்னாளோ! அது சபரிக்கு கேலி செய்வதாகப்பட, “யாரும் கடைசிவரை அப்படியே இருந்திடப் போறதில்லை மதுமிதா. அப்புறம் என்னை மச்சான்னு சொல்லாத?”
“என் அத்தை மகன்தான நீ? சொன்னால் என்ன தப்பு?”
“அப்படி ஒரு உறவு நமக்குள்ள இல்லைன்னு நினைக்கிறேன். உரிமையா கூப்பிடக்கூட தகுதி தராதரம் வேணும். குழந்தைக்காகதான வந்த அதை மட்டும் பார்த்துட்டுப் போ.”
‘ஹ்ம்…’ என தோள்குலுக்கி, “பழசை மறக்கலைன்னு நினைக்கிறேன். உனக்கும் கல்யாணமாகி குழந்தை இருக்கு. பாரு உன் ஒய்ஃப் எவ்வளவு அழகாயிருக்கா. வாழ்ற வரை வாழ்க்கையை சந்தோஷமா வாழணும் சபரி.”
“உனக்குக் கொஞ்சமும் குற்றவுணர்ச்சியே இல்லையா? எதுவுமே நடக்காத மாதிரி கேசுவலா பேசுற?”
“குற்றவுணர்ச்சியைத் தலையில தூக்கி சுமந்துட்டேயிருந்தா கடைசிவரை நிம்மதியில்லாமல்தான் வாழணும் சபரி. நான் எப்ப என் வாழ்க்கையை வாழ்றது? கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம இவளையாவது விட்டுட்டுப் போகவிடாம பிடிச்சிக்கோ” என்றவள் குரலில் ஒரு ஏளனம் வந்திருந்தது. அவன் பேசுவதை வைத்து இன்னும் அந்தப் பதினைந்து நாள் வாழ்வை மறக்கவில்லை என்ற கர்வம் போலும் மதுமிதாவிற்கு.